Tuesday, May 28, 2013

AAADD என்றால் தெரியுமா.?



                                AAADD- என்றால் தெரியுமா. ?
                               ---------------------------------------


பொழுது விடிகிறது, இன்னொரு
நாளைக் காண உயிர்க்கிறேன்.
இன்று நான்  திட்டமிட்டுச்செய்ய
வேண்டிய பணிகளின் பட்டியல்
என் மனக்கண்முன் விரிகிறது.



என் சிறு தோட்டம் நீரின்றி காய்கிறது
பூவாளியில் நீரை ஏற்றி இரைக்கப்
போகும்போது அழுக்கடைந்த கார் காண
அதை முதலில் கழுவலாம் என்று தோன்ற
அருகில் செல்லும் போது தென் படுகிறது
வீட்டின் முன் மாட்டியிருக்கும் தபால் பெட்டி.
காரைக் கழுவும் முன் தபாலை எடுத்துப்  
ஹாலில் மேசை மேல் கார் சாவியை வைத்து
ஃப்ரிட்ஜிலிருந்து ஃபான்டா பாட்டிலைத் திறந்து
ஒரு வாய் அருந்தி அதை அருகில் வைத்து
கடிதங்களைப் பிரித்துப் பார்க்க அவை
குப்பைத் கூடையில் போக வேண்டியது என்று
அதைப் பார்க்க அதுவும் நிரம்பி இருக்க அதைக்
காலி செய்து குப்பைத் தொட்டியில் போட
வெளியே போக வேண்டும் போகிறபோதே
அருகில் இருக்கும் கியோஸ்கில் மின் கட்டண்ம்
செலுத்தினால் ஒரு வேலை முடியும். அதற்கு முன்
அட்டைப் படத்தில் கவர்ச்சியுடன் சிரிக்கும் அழகியைத்
தாங்கி வந்திருக்கும் வாராந்திரி கண்ணில் பட அதை
எடுத்துப் படிக்கக் கண்ணாடி தேவை அதை வைத்த
இடம் மறந்து தேட மேசை அறையில் கார் சாவி கண்டதும்
காரைக் கழுவ நினைத்ததும் நினைவுக்கு வர
அங்கே போனால் பூவாளி நீரும் குப்பைக் கூடையும்
என் முன்னே இளிக்க ஆயாசத்துடன் ஃபாண்டா பருக்
எண்ணி எடுத்தால் அதுவும் குளிர் விட்டுப் போய் ச்சே!
எந்தவேலையும் திட்டமிட்டபடி நடப்பதில்லையே
என நான் சிந்திக்கும் போது மனசு குரல் கொடுக்கிறது
டேய்.! உனக்கு இருப்பது AAADD யின் அறிகுறிகள்
( AAADD  என்றால் AGE ACTIVATED ATTENTION DEFICIT  DISORDER.)
.

.   
  ..

Sunday, May 26, 2013

SKY DIVE.... !!!!


                                        SKY  DIVE....!!!! (செய்வது எங்கள் பேத்தி.)
                                       -------------------------------------------------------



வெலியச்சா, எனக்கு இந்த இடம் பிடிக்கலை
ஏம்மா... அப்படிச் சொல்றே..?
“ பின்ன என்ன வெலியச்சா. இது ஒரு ஹாஸ்டெல் போல இருக்கு.
ஒரு எட்டு வயது சிறுமி. தவிர்க்க முடியாத காரணங்களால் இவன் வீட்டில் விடப் பட்டிருந்தாள். இவன் மனைவியின் தம்பி மகள் அவள். இவன் மனைவியின் தம்பி இவர்கள் மகன் போல் இவர்களிடம்  வளர்ந்தவன். அவன் படிப்பு முடிந்த நேரம் இவனுக்கு திருச்சியிலிருந்து விஜயவாடா மாற்றலாகி இருந்தது. விஜயவாடாவில் அனல் மின் நிலைய நிர்மாணப் பணிகள் துவங்கி இருந்த வேளை.டிப்லொமோ இன் மெகானிகல் இஞ்சினீரிங் முடித்திருந்தவனுக்கு ஒரு வேலை தேடித்தர வேண்டும் என்று எண்ணியிருந்த இவனுக்கே அவனை நிர்மாணப் பணியில் ஏதாவது வேலையில் அமர்த்த முடியும் என்றாலும் உறவினனுக்கு வேலை என்றால் ஏதாவது பேச்சு எழலாம் என்பதால் ஏதும் செய்யாதிருந்தான். இந்த நேரத்தில் இவனை  விஜயவாடாவுக்கு வரவழைத்த இவனது மேலதிகாரிக்கு  பர்லி என்னும் இடத்துக்கு மாற்றல் ஆக, அதற்கு முன் இவர்கள் வீட்டிற்கு வந்திருந்தார்.இவனது  மச்சினனைப் பார்த்து யாரென்று விசாரிக்க விவரங்கள் தெரிந்ததும் இவனைக் கடிந்து கொண்டு அவனைத் தன்னுடன் பர்லிக்கு அழைத்துச் சென்று வேலையிலும் அமர்த்தினார். இன்று அவன் ஓரிரு ஆண்டுகளில் தனது ஓய்வுக்காகக் காத்திருக்கிறான்.
அன்று வந்த மின் அஞ்சல் ஒன்று பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது.இவனது மச்சினனின் அந்தப் பெண்தான் இவன் வீடு ஹாஸ்டெல் போல் இருக்கிறது என்று சொன்னவள். அவனது திருமணத்துக்குப் பெண் பார்த்திருந்தார்கள்.உறவிலேயே ; அவனது மாமா பெண். இந்தத் திருமணம் இவனது ஒப்புதலுக்காகக் காத்திருந்தது.மாமாவின்  ஒப்புதல் இல்லாவிட்டால் நடக்காது என்று அவன் சொல்லியிருந்தான்.,மாமாவுக்கு உறவுகளில் திருமணம் கூடாது என்னும் கொள்கை இருப்பது அவனுக்குத் தெரியும். ஆனால் இவனது மாமியாருக்கோ தன் மகனை தன் அண்ணா பெண்ணுக்குக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று ஊரறிந்த ஆசை. தந்தையில்லாப் பெண் என்று ஒரு கூடுதல் காரணம். இவனுக்கு ஒரு இக்கட்டான நிலை. மச்சினனுக்கும் தன் அம்மாவின் ஆசையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று விருப்பம். ஆனால் தன்னை வளர்த்துப் படிக்க வைக்கும் மாமாவின் கொள்கையும் தெரியும். இருதலைக் கொள்ளி எறும்பானான். இவனுக்கு உற்றார் எல்லோரது அபிலாக்ஷைகளையும் மதிக்காது திருமணத்துக்கு தடைபோடவும் எண்ணமில்லை. மருத்துவர்களின் எண்ணம் குடும்பத்தில் மணமுடித்தால் சந்ததிகளுக்கு நல்லதல்ல என்பதாலும் வீணே எதற்கு சான்ஸ் எடுக்க வேண்டும் என்பதாலும்தான். கடைசியில் மச்சினனிடமே அந்தப் பெண்மேல் அவனுக்கு ஆசையா என்று கேட்டான். அவனும் ஆம் என்று சொல்லவே இவனும் திருமணத்துக்கு ஒப்புதல் கூறினான்.
என்ன காரணமோ மச்சினனுக்குப் பிறந்த குழந்தைகள் எதுவுமே தக்கவில்லை. அப்படி யிருந்த வேளையில் பிறந்த பெண்தான்.இவனிடம் இவன் வீடு ஹாஸ்டெல் போல இருக்கிறது என்று குறைபட்டுக் கொண்டிருந்தாள் எந்தக் காரணம் கொண்டும் குழந்தைக்குப் படிப்பில் பிடிப்பு விட்டுப் போகக் கூடாது என்ற காரணத்துக்காகவே  ஸ்ட்ரிக்டாக டைம் டேபிள் போட்டு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான் இவன்.சின்னக் குழந்தைதானே .மனதில் தோன்றியதைச் சொல்லிவிட்டாள். அந்தப் பெண் இப்போது வளர்ந்து பெரியவளாகி இஞ்சினீரிங் முடித்து நல்ல பணியில் அமர்ந்து  கம்பெனி வேலையாக அவளை இங்கிலாந்துக்கு அனுப்பி இருக்கிறது. அவளிடம் இருந்து வந்த மின் அஞ்சல் தான் நினைவுகளை கிளறிவிட்டது தாய் தந்தையருக்குப் பிறந்து உயிருடன் இருக்கும் ஒரே பெண், இவன் மச்சினன் கூறுவதுபோல் ஆணின் தைரியமும் திறமைகளும் கொண்டு அதே நேரத்தில் ஒரு நல்ல பெண்ணின் குணங்கள் எல்லாம் கொண்டு வளர்ந்தவள் இங்கிலாந்தில் தான் SKY DIVING  செய்ததை மின் அஞ்சலில் வீடியோவாக அனுப்பியிருந்தாள். அந்த வீடியோவை இவன் பதிவில் இணைத்து வெளியிட இவன் செய்த முயற்சிகள் வெற்றி பெற வில்லை. இருந்தாலும் விடாக்கண்டனாக அதை GOOGLE-ல் SHARE செய்து வெளியிட்டிருக்கிறான். இந்தப் பதிவுக்கு முன்னேயே அதை ஷேர் செய்து இருப்பதால் கூகிளில் நண்பர்கள் அதனைக் காணக் கூடும். கண்டவர்கள் இவனுக்குத் தெரிவித்தால் மகிழ்ச்சியடைவான்..
எங்களுக்குப் பிறக்காத  நாங்கள் வளர்த்து ஆளாக்கியவன் மகள் எங்கள் பேத்திதான் என்று எண்ணினாலும் பதிவை எழுதும்போது என்னை மூன்றாவது ஆளாக எண்ணியே இப்பதிவை எழுதி இருக்கிறேன்,     



.   

Thursday, May 23, 2013

கேசாதி பாதம் - கண்ணன் - காதலி


                            வர்ணனைகள் --ஒரு ஒப்பீடு
                           -----------------------------------------



அண்மையில் குருவாயூர்க் கண்ணனைக் கேசாதி பாதம் வரை வர்ணித்து எழுதினேன். அப்படியே என் காதலியை வர்ணித்து எழுதினால் எப்படி இருக்கும் என்று தோன்ற எழுதியது கீழே.என் இருபதுகளில் எழுதியதும் அடியில் . எழுத்தில் நடையில் வித்தியாசங்கள் தெரிகிறது அல்லவா.?ஏன்.?  




வெங்காய சருகு சேலை
தலைப்பு காற்றில் படபடக்க
வெண்சங்குக் கழுத்தில் கருமணியில்
ஒற்றை டாலர் ஒளிவீச பவனிவரும்
நீ நடந்து வரும் அழகில் மதி மயங்கி
உன்னை நான் எதிரே கடந்து செல்கையில்
படபடக்கும் உன் கண் இமைகள் என்ன
பட்டாம் பூச்சிகளா பாவையே சொல் நீயே.
சிறிதே செம்பட்டையான கூந்தல் காற்றில்
புரள, எடுப்பான நாசி, இரு ஓரங்களில்
பெரிய வளையங்களுடன் காதுகள்
 புண்ணியம் செய்தவை; சிகையின் முத்தச்
சுருள்கள்(Kiss Curls)இனிதே வருடக் கொடுத்து வைத்தவை.
 உச்சந்தலை தொடங்கி உன் அழகை
ரசிக்க என் கண்கள் உன் உடல் மேய
அநிச்சையாயுன் கைகள் மாராப்பை நாட



எனக்கோ மறைக்க முயல்வதைக் காணத் துடிப்பு
சாயாத கொம்பு இரண்டு தலை நிமிர்ந்து பாயாது
என்றாலும் மங்கை உன் மென்
நடையின் சிறு அதிர்வில் குலுங்கும்
இரு கொங்கைகள் கீழ் இருக்கும் இடுப்பின்
அழகைக் கூட்டிக் காண்பிக்கிறதோ?
துகில் மறைக்கா அந்த இடைப் பகுதியின்
வழுக்கலில் விட்டு விட்டுக் காணும்
தொப்புள் கொடியும் சுண்டி இழுக்குதே மனசை.
அடியொன்று எடுத்து வைக்க பிடியானையின்
மதர்ப்பு, இருந்தாலும் பாதம் நோகுமோ
அந்தப் பூமிக்குத்தான் வலிக்குமோ
என்னவாயிருந்தாலும் பாதசரம் கிணு கிணுக்கையில்
உன் கேசாதி பாதக் காட்சியில் திளைக்கிறேன்
பாவையே எனை நான் மறக்கிறேன்.
( என்னுடைய இருபதுகளில் அன்று நான் காதலில் எழுதியது இதோ)

வெண்ணிற மேனியாள் எனக்கு



மிளிரும் நீலவானம் சரிதுகில்
பன்னிறம் தெரியப் பதித்த மணிகள்
மின்னும் தாரகை நல்லணிகலன்
எனக்கு நிகர் யாரே இப்புவிமீதே எனவே
உன்னாது இயம்பும் மதியும்--கிளியே
கறை துடைத்த மதிவதனம் அவள்
மேனிக்கணியும் பட்டோ மற்றோ பொலிவுறும்
பேருண்மை- ஆங்கு
இதழிலோடும் புன்னகையும் நன்னகையாம்
வண்டென விரைந்தாடும் மலர் விழிகளும்
கண்டதும் கவி பாடத் தூண்டும்என்
காதல் ஜோதி.!கன்னல் மொழியினள்அவள்
காண்பார் கண் கூசும் பேரெழில்கண்டும்
செறுக்கொழிந்தாளில்லைஏன்.?
சிந்தை கவர்ந்த என் பூங்கொடியாள் தன்
நடை,குரல், அதரம் கண்டும்-ஈண்டு
தோகை மயிலின் களிநடம் குறைந்திலை
கானக் குயிலின் இன்னிசைக் குறைந்திலை
கொவ்வைக் கனியதன் செம்மையும் குறைந்திலை-ஏன்?
கட்டழகன் எந்தன் கொட்டமடக்க
வட்டமிடும் கழுகன்ன சுற்றிவரும்
நான்முகன் திட்டமெலாம் தரைமட்டம்
இயற்கையின் படைப்பினில் எனதவள் சிறந்தவள்
கண்கூடு .தேவையில்லை அத்தாட்சி இதற்கு
யாரும் செறுக்கொழியற்க.! யானும் ஒழிகிலேனே.!




Tuesday, May 21, 2013

துக்கடாக்கள்.


                                             துக்கடாக்கள்.
                                            --------------------



போன வருடம் வாசமில்லா மலரிது என்று என் வீட்டுத்தோட்டத்தில் இருக்கும் சில பூக்கள் குறித்து எழுதி இருந்தேன். பெயர் தெரியாத பூவின் பெயரை கீதமஞ்சரி எப்படியோ தேடிக் கண்டு பிடித்து அதை blood lilly அல்லது football lilly என்று  தெரிவித்தார். அதில் விசேஷம் என்னவென்றால் சொல்லி வைத்தாற்போல் மே மாதம் செடி துளிர் விட்டு வந்து ஒரே ஒரு பூ பூக்கும். சுமார் பத்து நாட்கள்வரை இருக்கும் .அதன் பின் செடியும் பூவும் காணாமல் போய்விடும். இந்த வருடம் மே மாதம் ஒருவாரம் கழிந்தும் செடியைக் காணவில்லையே என்றிருந்தோம். குருவாயூர் பயணம் முன்பு சிறிதாய் துளிர் கண்டோம். மே 11-ம் தேதி செடி நன்றாகத் தெரிந்தது. என்ன ஆச்சரியம் ஒரு வாரத்தில் ஒரு செடி இருந்த இடத்தில் நான்கு செடிகள் வந்தன. செடிக்கு ஒன்றாக இப்போது நான்கு பூக்கள் இருக்கின்றன. நேரம் காலம் என்று ஒரு ஒழுங்குடன் செடி வளர்ந்து பூ பூப்பதைக் காணும் போது இயற்கையின் சக்தியில் பெருமையும் ஆச்சரியமும் தோன்றுகிறது.இந்தச் செடிகள் எப்படி இனப் பெருக்கம் செய்கின்றனவோ?

போன வருடம் பூத்த BLOOD LILLY                                                                                                                                          
இந்த வருடம் பூத்த நான்கு மலர்கள்.  











திருட்டு மெஷின்
----------------



திருடனைக் கண்டு பிடிக்கும் மெஷின் ஒன்று கண்டு பிடிக்கப் பட்டதாம். அதனை demonstrate  செய்ய பல நாடுகளுக்கும் எடுத்துச் செல்லப் பட்டதாம். அமெரிக்காவில் அது 30 நிமிடங்களில் 20 திருடர்களைக் கண்டு பிடித்ததாம்.இங்கிலாந்தில் 30 நிமிடங்களில் 50 திருடர்களைக் கண்டு பிடித்ததாம். ஸ்பெயினில் 30 நிமிடங்களில் 65 திருடர்களை கண்டு பிடித்ததாம். கானாவில் 30 நிமிடங்களில் 600திருடர்களைக் கண்டு பிடித்ததாம்.இந்தியாவில் 15 நிமிடங்களில் அந்த மெஷினே திருட்டுப் போய் விட்டதாம். !

நான் ஒரு இந்தியன்
------------------



பாட்டிலில் ஷாம்பூ காலியான பிறகு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கலக்கி இன்னும் ஒரு குளியலுக்கு அதை உபயோகிப்பேன்.
பற்பசை காலியானாலும் அதைத் தட்டி தகடாக்கி சுருட்டி எல்லாப் பேஸ்ட்டையும் வெளியில் எடுப்பேன்.
இருநூறு ரூபாய்க்குக் காய்கறிகள் வாங்கினாலும் கொஞ்சம் கொத்துமல்லித் தழை கொசுராக வாங்குவேன்.
கிடைத்த பரிசுப் பொருட்களையே மீண்டும் பரிசாகக் கொடுக்க அது பொதிந்து வந்த வண்ணத் தாளையே உபயோகிப்பேன்.



என் வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த bone chjna கோப்பை, தட்டுகளை விருந்தினர் வரும்போதுமட்டும் வெளியில் எடுப்பேன்.
ஒரு பொட்டுத் தங்கம் வாங்கும் எண்ணம் இல்லாவிட்டாலும் கூட அதன் விலை ஏற்றம் பற்றிக் கவலை கொள்வேன்.
TV ரிமோட்டைத் தட்டித் தட்டி அதன் உயிர் எடுப்பேன். புது பாட்டரி வாங்காமல் காலம் கழிப்பேன்.
விருந்துக்குப் போகுமுன் பட்டினி கிடந்து வயிற்றைக் காலியாக வைத்துக் கொள்வேன்
என்னுடைய T ஷர்ட் பழையதானால் அதை இரவில் உடுத்துவேன். இன்னும் பழையதானால் ஹோலி அன்றைக்கு உடுத்துவேன். இன்னும் பழையதானால் வீடு துடைக்க உபயோகிப்பேன்.

நாம் இந்தியர்கள்.
----------------



ஆண்குழந்தைக்காக வேண்டுவோம். பெண்சிசுக்களை வேண்டோம்.முடிந்தால் கருவிலேயே அழிப்போம். பெரியோர்களின் ஆசியும் ஆண்மகவுக்கே பெண்ணுக்கல்ல.
ஆனால்
செல்வம் வேண்டுமென்றால் மஹாலக்ஷ்மியை வேண்டுவோம்.
கல்வி வேண்டுமென்றால் சரஸ்வதியை வேண்டுவோம்.
துக்கங்களில் இருந்து நிவாரணம் கிடைக்க  தாய் சக்தியை நாடுவோம்
பேய் பிசாசுகளில் இருந்து பயம் அகல காளிமாதாவை தரிசிப்போம்.
நாம் இந்தியர்கள். WE ARE HYPOCRITES.!

குருவாயூர் நாராயணீய பாராயணம் செய்தபோது எடுத்த சில படங்கள். இப்போதுதான் கிடைத்தது. 



  

 



    














































Sunday, May 19, 2013

அதீத அன்பு ( தொடர்ச்சி )



                          அதீத அன்பு ( தொடர்ச்சி.)
                          ----------------------------------




 சில ஆதங்கங்கள் என்னதான் சொல்லிப் போனாலும் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து முழுதுமாகச் சொல்ல வில்லை என்று குறை கூறுகிறது
இந்தமுறை என் அவஸ்தைகள் முன்பே கூறியவைதான் என்றாலும் கூடிக்கொண்டே போகிறது. செய்யாத குற்றத்துக்காக அனுபவிக்கும் தண்டனை என்று சொன்ன நான் , முதுமையை வரமாக எண்ணி எழுதி என்னைத் தேற்றிக் கொண்டேன். நான் நினைத்ததைச் செய்ய யாரையும் கேட்க வேண்டாம் என்று சொன்னால், அது சரியில்லை என்று உடனே நிரூபணமாகிறது. நான் தனியே எங்கும் செல்ல அனுமதியில்லை. ஏனென்று கேட்டால் எதிர்பார்க்காமல் ஏதாவது நிகழ்ந்து விட்டால் ... என்று எதிர்க் கேள்வி. அப்படி என்னவோ எதிர்பார்க்காமல் நடந்து விட்டால் யாராலாவது அதைத் தடுக்க இயலுமா.? எதிர்பார்க்காதது நிகழுமோ ,நிகழுமோ என்று எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறார்களா.? நான் என் சிறுகதை (வாழ்வின் விளிம்பில்) ஒன்றில் உடல் நலமின்றி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்ட ஒருவனை அவன் உற்றார் வந்து பார்க்கும் போது அவர்கள் , மன நிலையை ரயிலேற்றிவிட வந்தவர்களின் மனநிலையோடு ஒப்பிட்டு எழுதி இருந்தேன். “ ரயில் புறப்பட இன்னும் சில நிமிடங்கள் ....என்பதுபோல். எதிர்பார்க்காதது நிகழுமோ என்று அஞ்சி அஞ்சி இருப்பதைவிட அந்த நிகழ்வு நடந்து முடிவதே மேல் என்று தோன்றுகிறது.




எங்காவது பஸ்ஸில் பயணிக்க எனக்கும் என் மனைவிக்கும் ஒரே இடத்தில் இருக்கைகள் கிடைப்பது அரிது. அவள் முன்னால் மகளிர் இருக்கையில். நான் பின்னால் ஆடவர் இருக்கையில் . என்னை திரும்பிப் பார்த்து திரும்பிப் பார்த்தே அவள் கழுத்து சுளுக்கும். இருக்கையில் நான் சற்றே கண் அயர்ந்தால் அவள் மனம் இல்லாததை எல்லாம் நினைத்து அல்லல்படும். அதற்காகவே நான் மிகவும் முயன்று என் கண்களை அகலத் திற்ந்து வைத்திருப்பேன். என் மக்களோ பஸ் பயணத்தை அறவே தடுக்கச் சொல்கிறார்கள். எனக்கானால் என் உடலுக்கு நானே தலைவன் எனக்கு அதை என் கட்டுப்பாட்டுக்குள் வைக்க ஆசை. In fact I like to flog my body. இதைப் பதிவிடுவதே இந்த அவஸ்தைகள் எனக்கு மட்டும்தானா இல்லை என் போன்றோர் அனைவருக்கும் உண்டா என்று அறியவே.




 அதீத அன்பால் நான் படும் அவஸ்தைகளை முன்பே ஒருமுறை எழுதி இருக்கிறேன். அதை இங்கே சொடுக்கினால் படிக்கலாம். 

 இந்த ஒரு பதிவைப் படிக்க மூன்று பதிவுகளின் தொடர்பும் தெரிவது நலம். 
-------------------------------------------------------------
 

 

Friday, May 17, 2013

நீ எங்கே இருக்கிறாய் அம்மா.?


                             நீ எங்கே இருக்கிறாய் அம்மா. ?
                             ----------------------------------------



(அண்மையில் பத்திரிக்கையில் படித்தேன்.இன்றைய அம்மாக்களைப் பற்றியோ இது? பகிர்ந்து கொள்கிறேன் )
இங்கிருந்து நான் உன்னைக் கேட்கிறேன்
எங்கோ இருந்ததனைக் கேட்கிறாயா அம்மா.! 




நானோ உடல் நலிவுற்று
நாதியின்றி இருக்கிறேன்-ஆனால் நீ
மருத்துவ மனையில் நாடி பார்த்து
நாக்கு நீட்டச் சொல்லி சோதிக்கிறாய்.




நான் உடல் சோர்வுடன் தவிக்கிறேன்.
நீயோ ஊக்க பானங்களுக்கு பரிந்துரைக்கிறாய்.

நான் பசியால் வாடுகிறேன் நீ
நட்சத்திர ஓட்டலில் பரிமாறுகிறாய்.

கடினமான கணக்குப் புரியாமல் முழிக்கிறேன்.
நீயோ பள்ளியில் மாணவர்க்குப் பாடம் நடத்துகிறாய்.




நான் மணலில் கோட்டை கட்ட முயல்கிறேன்.
நீயோ அடுக்குமாடி பற்றி விவாதிக்கிறாய்.

நான் மனம் வாடி என்னுள் ஒடுங்குகையில்
நீயோ எங்கோ மனநலப் பாடம் எடுக்கிறாய்.

என் கணினி என் மூளையைக் கசக்குகையில்
நீ யாருக்கோ கணினி மூலம் ஆலோசனை கூறுகிறாய்.





காயப்பட்ட எனக்கு உன் அணைப்பு தேவை
நீ கூட்டத்தில் அனைவரையும் அரவணைக்கிறாய்.

தனிமையில் நான் வாடும்போது-நீ
கூட்ட ஆரவாரக் கைதட்டல் பெறுகிறாய்.

நான் எங்கே எப்படித் துவங்குவது என்று எண்ணுகையில்
நீ வாழ்க்கை ஏணியின் உச்சத்தில் இருக்கிறாய்.

என் அம்மாவாக  நீ எங்கே இருக்கிறாய் அம்மா.?  
-------------------------------------------- 

  ..
 

 

 

 

Tuesday, May 14, 2013

நாராயணீய பாராயணம் - குருவாயூர் பயணம்.





நாராயணீயம் பாராயணம்குருவாயூர் பயணம்.
( சிலாட்காகப் பிவுலுக்கு வுடியில்லை. அில் ஒரு காரம் நான் ஊரில் இல்லு. மற்றொரு காரம் என் கினியில் ups  செயிழந்து விட்டு சிசெய்ு இோ மீண்டும்)


கண்டேன் நான் கண்ணனை
கார்மேக வண்ணனைக்
குருவாயூர் கோவில் நடையில்
 
கருநிறம் சுருட்டைமுடி
ரத்தினம் பதித்த தலையணி
மயில் பீலி செருக
வெண்ணிறப் பிறை நெற்றி ,
மேல்நோக்கி இடப் பெற்ற
குறியுடன் முடியும்
நெற்றியும் கண்ணாரக்
( கண்டேன் நான் கண்ணனை )

விபுவே.!அசைகின்ற புருவங்கள்
அடியில் அருள்தரும் உன் கண்கள்
ஒளிவீசி என் அகம் குளிர்விக்கக்
( கண்டேன் நான் கண்ணனை )

எடுப்பான நாசி கண்ணாடிக் கன்னங்கள்
சுடரிடும் மகர குண்டலங்கள்  அசைந்தாட,
ஒளிவீசும் முத்துப் பற்கள் செவ்விதழ்களின்
நடுவே பளீரிடப் புன்னகைக்கும் உன் முகம்
( கண்டேன் நான் கண்ணனை )

இரத்தினம் பதித்தக் கை வளைக் குலுங்க
செந்தளிர் விரல்கள் மீட்ட
வேணுகானம் காற்றில் தவழ
நாத கீதந்தனில் எனை மறந்து
( கண்டேன் நான் கண்ணனை )

மென் கழுத்தில் மணிமாலைகள்
மலர்மாலைகள் தொங்க
நிற மாலைகளில் வண்டினம் வந்தாடக்
( கண்டேன் நான் கண்ணனை )

சந்தண மணம் பரப்பும் உன்
திருமேனியில் உலகமே  ஒன்றியிருந்தும்
மெல்லிடையோய் பொன்னிறப் பட்டாடையுடன்
கதிர் பரப்பும் மணி அரைஞாணின்
சலங்கைகள் சல சலக்கக் கண்டு
நீலவண்ணக் கண்ணா எனை மறந்து
( கண்டேன் நான் கண்ணனை )


அழகு தொடை இரண்டும் பருத்தவை
அழகுடன் உறுதியும் கலந்தவை
மனம் மயக்கும் கலங்கடிக்கும்
எனவே பட்டாடை மறைத்தனவோ
காணும் கணுக்கால்பிடித்து வணங்கக்
( கண்டேன் நான் கண்ணனை )

உன் கழலடி தொழலே இன்பம்
அறியாமையில் மூழ்கியவர்களை
மந்தார மலையை உயர்த்தும் ஆமைக்கு
ஒப்பாக உள்ளது உன் நுனிக்கால்
அடைக்கல மடைந்த  என் அறியாமை
துன்பங்கள் களைய வேண்டியே
( கண்டேன் நான் கண்ணனை )

குருவாயூரின் தலைவனே அருட்கடலே
கிருஷ்ணா.! உன் உறுப்புகளில் திருவடிகளே
சிறந்தவை மோட்சம் தருபவை தலைவைத்து
பற்றவே வந்த எனைக் காத்தருளக்
( கண்டேன் நான் கண்ணனை.)


பாகவதசாரம்என்றும் அழைக்கப்படும் நாராயணீயம் எனும் நூல் 1560-ம் ஆண்டு மேலப்பத்தூர் எனும் ஊரில் பிறந்த நாராயண பட்டத்திரி என்பவரால் பாடப் பட்டது. வாத நோயால் உழன்றவர் நாராயணீயம் பாடி நலம் பெற்றார் என்றும் தெரிகிறது. நூறு தசகங்கள் கொண்ட நூல் நாராயணீயம் ஒவ்வொரு தசகத்திலும் பத்துக்குக் குறையாத பாட்டுக்கள், மொத்தம் 1034 கொண்டது.

பிரும்மம் உண்மையானது. முழுமையான ஆநந்தம் அளிப்பது.அறிவைத் தருவது.ஒப்பற்றது. காலங்கடந்தது. அறம், பொருள் இன்பம் வீடு அளிக்கவல்லது. மாயையின் செயல்களில் இருந்து விடுபட்டது. அதுவே குருவாயூரில் கண்களுக்குப் புலனாகும்படி விளங்குகிறது என்று

பகவானின் இயல்பிலும் பெருமையிலும் தொடங்கி கேசாதி பாதம் வரை போற்றி வணங்கி முடிக்கும் வண்ணம் அமைந்துள்ளன நாராயணீயம் பாடல்கள். நாராயணனின் பெருமைகளைப் பாடுவதாலும் நாராயண பட்டத்திரியால் இயற்றப்பட்டதாலும் நாராயணீயம் என்ற பெயரோ.?

இந்த நாராயணீயம் பாராயணம் செய்தால் நலமுண்டாகும் என்னும் நம்பிக்கை பக்தர்களிடையே காணப் படுகிறது. இந்த நாராயணீயம் பற்றிய எந்த விஷயமும் தெரியாமலேயே என் மனைவி 40 ஆண்டுகளுக்கு முன் இந்த நூலை வாங்கிப் படிக்க ஆரம்பித்தார். சம்ஸ்கிருதத்தில் உள்ள இதனை உச்சரிப்புப் பிறழாமல் படிக்க வடமொழி அறியாதவர்களுக்கு பயிற்சி மிகவும் தேவை.


இங்கு நாங்கள் இருக்கும் பகுதியில் “ அகில இந்திய விஷ்ணு சகஸ்ரநாம மண்டலியில்அங்கம் வகிக்கும் ஐயப்பன் விஷ்ணு சகஸ்ர நாம மண்டலியின் குழுவினர், வாரம் ஒரு முறை குழுவாக இதனைக் கோயிலில் பாராயணம் செய்கின்றனர். இதே பாராயணம் அந்த குருவாயூரப்பன் முன்னிலையிலும் செய்ய விழைந்தனர். பல நாட்கள் முன்பாகவே திட்டமிட்டு அதற்காகப் பாடுபட்டு பாராயணம் செய்தும் முடித்தனர்.

நாராயணீயம் பாராயணம் பற்றிக் கூறும்போது நான் இரண்டு விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் மூத்த பேரனுக்கு பெயர் சூட்டலின் போது தேர்ந்தெடுத்த பெயர் “விபு”.என்பதாகும். நாராயணீயத்தில் ஆங்காங்கே ஆண்டவனைக் கூப்பிடும் முறையாக இது வருகிறது. இரண்டாவதாக அவதாரக் கதைகள் பற்றிப் பதிவிட்டுக் கொண்டிருந்த நான் கிருஷ்ணாவதாரக் கதையை “ கிருஷ்ணாயணம்என்று எழுதி இருந்தேன். கண்ணனின் அவதாரத்தில் நிகழ்ந்த  பல சம்பவங்களின் நிகழ்வுகளைக் கோர்வையாகக் கூற எனக்கு நாராயணீயமே வழிகாட்டியாக இருந்தது.


குருவாயூரில் அண்மையில் ‘சம்பூர்ண நாராயணீய நித்ய பாராயண மண்டபம்என்று நிறுவி இருக்கிறார்கள். கிழக்கு நடையின் எதிரே சற்று வலப் பக்கத்தில் அமைந்திருக்கிறது. அங்குதான் இந்தப் பாராயணம் நடைபெற்றது.

பெங்களூரில் இருந்து சுமார் 40 பெண்கள் ( அனைவரும் நாற்பது வயதைத் தாண்டியவர்கள் ) ட்னமிழ் மலையாள கன்னட மொழியினர் சேர்ந்து ஒருங்கிணைந்து பாராயணம் செய்தனர். மேடையில் கிருஷ்ணனின் உருவப் பொம்மைகள் சுமார் 20 க்கு மேல் வரிசையாக வைக்கப் பட்டிருந்தன. கன்னட வழக்கப்படி பஞ்சு மாலைகளும் சார்த்தப் பட்டன. கண்ணனுக்குப் படைக்க என்று பலவகை இனிப்பு வகைகளுடன், சீடை முறுக்கு போன்ற பல்வேறு உணவு வகைகளும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன. பூவையர்கள் பாராயணம் செய்பவர்கள் என்று ( வாயனக் காரர்கள் என்று மலையாளத்தில் கூறுகின்றனர் )அடையாளப் படுத்திக் கொள்ளப் ப்ரௌன் நீற சேலை உடுத்தி இருந்தனர். காலை சுமார் 6 மணிக்குத் துவங்கி இடைவிடாப் பாராயணம் முடிய மதியம் 12 மணி ஆகிவிட்டது. 


குருவாயூருக்குப் பல முறைப் பயணம் செய்துள்ள நாங்கள் ஒவ்வொரு முறையும் ஏதாவது மாற்றத்தைக் காண்கிறோம். முன்பு போல் கோயிலுக்குச் சென்று மனம் ஒன்றி தரிசனம் செய்வது மிகவும் கடினமாக உள்ளது. தரிசனத்துக்கு வருபவர் எண்ணிக்கை எண்ணிலடங்காமல் போகிறது. அதுவும் உதயாஸ்தமனப் பூசை என்று இருந்து விட்டால் கோயிலின் நடையை அடிக்கடி மூடி விடுகிறார்கள். மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டி உள்ளது. 


குருவாயூரில் சடங்குகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். இந்த வெயில் காலத்தில் ஆண்கள் மேலாடையின்றி ஒருவரை ஒருவர் நெருக்கி . அப்பப்ப்ப்பா  ஒவ்வொரு முறையும் சலிப்பே அதிகம் உண்டாகிறது. கூட்ட நெரிசலில் பெண்கள் மேல் இடிக்கக் கூடாது என்று எண்ணினால் , அவர்களுக்கோ அந்தக் கவலை ஏதுமின்றி நம்மையே நெருக்கி யடித்து முன்னேறுகிறார்கள். அண்மைக் காலமாக வயதில் மூத்தவர்களுக்கென்று மாலையில் 4.30 முதல் 5.30 வரை தனி வரிசை இருக்கிறது. அதனால் கண்ணனின் தரிசனம் கிடைத்தது. குருவாயூரப்பனின் விக்கிரகம் சிறியது. சுமார் 30 அடி முன்னால் இருந்துதான் ஓரிரண்டு வினாடிகள் தரிசனம் செய்யலாம். இந்த முறை தரிசனம் செய்யும்போது எங்கும் நிறைந்த உருவம் இல்லாதவனை படங்களில் காணும் உருவத்தை நினைத்து வழிபட்டேன்.

கோயிலுக்கு கிழக்கு மேற்கு என்று இரண்டு வாசல்கள் உள்ளன. இந்த முறை என் மாமியார் கூறி இருந்தபடி மேற்கு வாயிலில் இருந்து ஸ்ரீகோயிலின் கர்ப்பக்கிருக விதானத்தையும் கொடி மரத்தின் உச்சியையும் ஒரே இடத்தில் காண முடிந்தது. இது இதுவரை நான் அறியாதது.

பெங்களூரில் இருந்து திருச்சூர் வந்தோம். அங்கிருந்து குருவாயூருக்கு பஸ் பயணம் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம். ரயில் நிலையத்திலிருந்து 100 மீட்டர் தூரத்தில் குருவாயூர் செல்லும் பஸ் ஸ்டாப். பஸ் கண்டக்டர் ‘ கெயறூ, கெயறூஎன்று கூவியபடி பயணிகளை ஏற்றுகிறார். பஸ் கட்டணம் வாங்கிக் கொள்கிறார். டிக்கட் ஏதும் தரவில்லை. முன்பெல்லாம் ஒரு ஸ்டாம்ப் சைசில் டிக்கட் பெற்றது நினைவு. பயணிகள் ஏறியதும் “ப்ப்ப்ப்போஎன்று சப்தமிடுகிறார். சுமார் ஒரு மணி நேரப் பயணம். குருவாயூரில் எல்லாத் தங்கு மிடங்களிலும் செக் இன் டைம் மதியம்தான். தேவஸ்தான தங்குமிடங்களில் மதியம் மூன்று மணிக்கு செக் இன் டைம். இது ஒரு வியாபார உத்தியோ என்னவோ.!குருவாயூரில் மம்மியூர் சிவன் கோயில் , திருப்பதி வேங்கடாசலபதிகோயில்  பார்த்தசாரதி கோயில் என்று அருகே இருக்கின்றன, மம்மியூர் சிவ தரிசனம் செய்தால்தான் குருவாயூர் பயணம் முடிவடைவதாக ஒரு ஐதீகம். மம்மியூரில் சிவா விஷ்ணு சன்னிதானங்கள் உள்ளன. பார்த்த சாரதிக் கோயில் ஒரு தேரின் வடிவில் இருக்கிறது. தேரை குதிரைகள் இழுத்துச் செல்வதுபோல் இருக்கிறது..பெங்களூரில் இருந்து சென்றவர்கள் பலரும் சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ள ‘திருப்ரையார் ராமர் கோயிலுக்கும் மூன்று நான்கு கி.மீ. தொலைவில் உள்ள யானைக் கொட்டடிக்கும் சென்று வந்தனர். 


பிருகஸ்பதியும்( குரு ) வாயுவும் சேர்ந்து கட்டியதால் குருவாயூர் என்று பெயர் வந்ததாகச் சொல்வார்கள். 1970-ம் ஆண்டு குருவாயூர் கோயிலில் பயங்கரத் தீ விபத்து நடந்தது ஸ்ரீ கோயிலை சுற்றி இருந்த விளக்கு மாடம் முழுவதும் தீயால் சேதப் பட்ட போதும் ஸ்ரீகோயிலும் ஐயப்பன் வினாயகர் சன்னதிகளுக்கு எந்த சேதமும் நிகழவில்லையாம்.

கர்மயோகம் பக்தியோகம் ஞான யோகம் என்று ஆண்டவனை அடைய மூன்று மார்க்கங்களில் சாதாரணமானவர் அவரவர் கடமைகளைச் செய்து பலனை அவனிடம் விட வேண்டும் என்றே நினைக்கின்றனர். ஞான யோகம் சாதாரணர்களுக்குப் புரிவது கடினம். எது நடந்தாலும் அவனே சரணாகதி என்று அவன் தாள் பற்றுவதும் எளிது போல் தோன்றுகிறது. இருந்தாலும் ஒரு பதிவின் பின்னூட்டமாக நான் எழுதி இருந்தது இங்கும் தெரிவிக்கலாம் என்று தோன்றுகிறது. 


When trying to create new ideas ,and thoughts we always get into the trap of what we have learnt and known. To chart new territories and new ideas the most important thing is to unlearn what we have known.Otherwise we will never be able to chart new path. Staying focused and being conscious of unlearning things is essential Realising and working hard on that--very difficult though.
-----------------------------------------------------------
 


 


 


 





















.