Sunday, August 23, 2015

ஓ அந்தக் கால அனுபவங்கள்


                 ஓ அந்தக் கால அனுபவங்கள்
                  -----------------------------------------
அண்மையில்  FROM ADOLESCENSE TO ADULTHOOD  என்று எழுதி இருந்தேன் அதைப் படிக்க இங்கே சுட்டவும் . இம்மாதிரி சொந்த அனுபவங்களைப் பதிவிடுவதில் என்ன லாபம் என்று முதலில் தோன்றினாலும்  இந்த அனுபவங்களைக் கதை போல் படித்துச் செல்லலாம். மேலும் சொல்லப் பட்டிருக்கும் செய்திகள் அந்தக் கால வாழ்க்கையை முன்னிறுத்தும் முதியவர்களின் அனுபவங்களை சரித்திர நிகழ்ச்சிகள் போல் கொள்ளலாம் . அந்தக் காலத்தில் கோவையில் எனக்கேற்பட்ட அனுபவங்களை இதில் பகிர்கிறேன்



      கோயமுத்தூரில் எங்கு தங்குவது, எப்படி வேலை தேடுவது, யாரைப் பார்ப்பது, என்று எதுவுமே யோசிக்க்ச்வில்லை. அப்போது கோயமுத்தூரில் சில சத்திரங்கள் இருந்தன. அங்கு ஒரு இரவு தங்க, ஒரு கட்டில் தருவார்கள். வாடகை எட்டணா. பல் விளக்க, குளிக்க எந்த வசதியும் கிடையாது. சாலையோரத்தில் உள்ள குழாய்களில்காலையில் பல் விளக்கி முகம் கழுவுவேன்.பிறகு கோயமுத்தூரில் நிறைய மில்கள் இருப்பது கேள்விப் பட்டிருந்ததால், ஏதாவது மில்லில் ஏதாவது வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், காலையில் நடக்கத் தொடங்குவேன். ஒவ்வொரு மில் வாசல் முன்பு செல்லும்போதே, அங்குள்ள காவல்காரர்கள் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். மீறி ஒன்றிரண்டு மில் உள்ளே சென்று வேலை கேட்டால், உன் படிப்பு என்ன, டைப்பிங் தெரியுமா, ஷார்ட் ஹேண்ட் தெரியுமா, சான்றிதழ்கள் எங்கே, என்று கேட்டுத் துரத்தி விடுவார்கள். வெயிலில் அங்கங்கே சுற்றும்போது, சோடாவும் கலரும் வாங்கிக் குடிப்பேன். மிகவும் பசித்தால் ஏதாவது ஓட்டலில், எதையாவது வாங்கிச் சாப்பிடுவேன். இந்த நிலையில் கோவையில் நான் படித்தபோது ,என்னுடன் படித்த, பி. டி. ஆல்ஃப்ரெட். என்ற ஆலியின் நினைவு வந்து, அவனைப் பார்க்கப் போனேன். மிகவும் மகிழ்வுடன் என்னை வரவேற்ற அவன் என் கதையைக் கேட்டதும் மிகவும் கடிந்து கொண்டான். முடிந்தவரை எனக்கு உதவுவதாகவும் கூறினான். அவன் எஸ். எஸ். எல். சி.  ஃபெயில். ஏதோ ஒரு மில்லில் அட்டெண்டராக வேலை பார்த்து வந்தான். என்னை அந்த மில்லுக்கு அழைத்துச் சென்று அவனுடைய மேலாளரிடம், எனக்கு ஏதாவது வேலை தரும்படிக் கேட்டான். அங்கும் அதே கதைதான். அட்டெண்டர் வேலை எதுவும் காலி இல்லை என்றும்,வேறு எந்த வேலைக்கும் எனக்குத் தகுதி இல்லை, என்றும் கூறி அனுப்பிவிட்டார்கள். உடற்சோர்வு, மனச் சோர்வு என்று சேர்ந்து வாட்டியது. கையில் இருந்த காசும் கரைந்து கொண்டு வந்தது..என்ன செய்வது என்று தெரியாத நிலையில், டெல்கோ கம்பெனி மார்க்கெட்டிங்  மேனேஜரின் நினைவு வந்தது.அவருடைய அலுவலக விலாசம் தெரிந்து, அவரைத் தேடிப் போனேன். என்னைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியுடனும், மரியாதையுடனும், என்னை வர வேற்ற அவர், “ஓட்டல் மேனேஜருக்கு மசால் தோசையும் காப்பியும் கொண்டு “ வரப் பணித்தார். என்னை அவர் மேனேஜர் என்றுதான் அழைப்பார். அந்த வரவேற்பையும் மரியாதையையும் பார்த்த பிறகு, அவரிடம் என் நிலையைக் கூறி, வேலை கேட்க என் “ஈகோஇடந்தரவில்லை. சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அவரிடம் விடை பெற்று வந்து விட்டேன். அப்பாவுக்கோ, அல்லது வீட்டில் யாருக்கோவாவது, நான் இப்படி அவதிப் படுவதும் ஊர் சுற்றி வேலை தேடுவதோ தெரியாது. அவர்கள் என்னை ஞாயிற்றுக்கிழமை எதிர் பார்த்துக் கொண்டிருப்பார்கள். கையிலும் காசில்லை ,வேலையும் கிடைத்த பாடில்லை. மிகவும் வருத்தப் பட்டுக்கொண்டிருந்தபோது, ஆலி என்னை ஓரிடத்துக்கு அழைத்துப் போவதாகக் கூறி வரச் சொன்னான். அவன் என்னை அழைத்துச் சென்ற இடம் கோயமுத்தூர் ரெயில் நிலையம். எனக்கு வெல்லிங்டனுக்கு ஒரு டிக்கெட் வாங்கிரயிலில் ஏற்றி அனுப்பிவிட்டான். நானும் வேறு வழியின்றி வெல்லிங்டன் சென்று வீட்டிற்குப் போனேன். சனிக்கிழமையே நான் வந்து விட்டதாக நினைத்து, எனக்கு உடல் நலம் சரியில்லையோ என்று நினைத்துப் பதறி விட்டார். நான் ஏதும் கூறாமல் சாதாரணமாக இருப்பதுபோல்ஞாயிற்றுக்கிழமை மாலை வரை இருந்து விட்டேன். நான் ஓட்டலுக்குத் திரும்பிச் செல்லாதது ஏன் என்று கேட்ட போது நான் வேலை பிடிக்கவில்லை என்று கூறினேன்.கோயமுத்தூரில் அலைந்ததையோ, ஏமாற்றமடைந்ததையோ சொல்லவில்லை. அப்பாவும் என்னை வற்புறுத்தவில்லை.இந்த சின்ன வயதில் உன்னை வேலைக்குப் போகச் சொன்னதே என் கையாலாகாத்தனம் “என்று கூறி மிகவும் வருத்தப் பட்டுக் கொண்டார். நான் குந்தா ப்ராஜெக்டுக்குப் போய் அந்த எஞ்சினீயரின் சிபாரிசுக் கடிதத்துடன் வேலைக்குப் போவேன் என்று அப்பாவுக்கு தைரியம் கூறினேன். நான் மைசூர் லாட்ஜில் இருந்தபோது பல இடங்களுக்கு வேலைக்கு மனு போட்டிருந்தேன். அந்த நேரத்தில் எச்.ஏ.எல். ல் இருந்து ட்ரேட் அப்ப்ரெண்டிஸ்  ட்ரெயினிங்கில் சேர தேர்வுக்கு மெட்ராஸ் வரச் சொல்லி கடிதம் வந்திருந்தது. அதன் முடிவு தெரிந்த பிறகு குந்தாவில் முயற்சிக்கலாம் என்றிருந்தேன். ஆனால் மெட்ராசுக்கு தேர்வுக்குச் செல்லப் பணம் வேண்டுமே.வழக்கம்போல் அப்பாவிடம் பணம் இருக்கவில்லை. ரூபாய் பத்தோ பன்னிரண்டோதான் அவரால் சமாளிக்க முடிந்தது. அப்போது வெல்லிங்டனிலிருந்து மெட்ராசுக்கு ரெயில்வே கட்டணம் மூன்றாம் வகுப்புக்கு ரூபாய் பத்து என்று நினைவு. போக வரவும் அங்கு ஓரிரு நாட்கள் இருக்கவும் குறந்தது ரூபாய் முப்பது தேவைப் பட்டது. பணமில்லாததால் நேர்முகத் தேர்வுக்குப் போக முடியாத நிலை. அந்த நேரத்தில் மைசூர் லாட்ஜுக்கு அடிக்கடி வந்து செல்பவரும் என் மீது மிகவும் அன்பு வைத்திருந்தவரும் “ குழந்தே “என்று கூப்பிடுபவருமான பர்மா ஷெல் இன்ஸ்பெக்டர் திரு. சுப்பிரமணியம் நினைவு வந்து, அவரை அவர் வீட்டில் சந்தித்தேன். என் நிலைமை எடுத்துக் கூறினேன். அவர் என்னை ஆறுதலாகத் தட்டிக் கொடுத்துநான் இண்டர்வியூவுக்கு மெட்ராஸ் செல்ல உதவுவதாகவும் கூறினார். ஈரோடில் அவருக்கு ஒரு வேலை நிமித்தம் செல்ல வேண்டி இருப்பதாகவும் என்னை அவருடைய காரிலேயே ஈரோடு வரைக் கூட்டிச் சென்று, அங்கிருந்து மெட்ராஸுக்குரெயிலில் டிக்கெட் வாங்கி ஏற்றி விடுவதாகவும் கூறினார். எனக்கு மனதில் கொஞ்சம் தெம்பும் உற்சாகமும் வந்தது. அவர் கேட்டுக் கொண்டபடி அவருடைய வீட்டுக்கு காலை பதினொரு மணி அளவில் சென்றேன். அவருடன் அவருடைய காரில் ஈரோடு வரை பயணித்தேன். போகும் வழியெல்லாம் அவர் என்னை எப்படி நேர்முகத் தேர்வை சந்திக்க வேண்டும் என்று பயிற்சி அளித்தார். என்னை கேள்விகள் கேட்டு, நான் பதில் சொல்வதுகேட்டு, என்னை ஊக்கப் படுத்தி, எனக்கு அந்த தேர்வில் வெற்றி கிடைக்கும் என்றும் வாழ்த்தினார். ஈரோடில் என்னை ரயில் ஏற்றியும் விட்டார். ஆக காலணா செலவில்லாமல் தேர்வுக்கு மெட்ராஸ் வந்து விட்டேன். ரயிலில் இருந்து இறங்கி ராயப்பேட்டா பைக்ராஃப்ட்ஸ் ரோட் க்ராசில் இருந்த என் சித்தப்பா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வீட்டுக்குச் சென்று குளித்து உடையணிந்து, வேப்பேரியில் குறிப்பிட்ட இடத்துக்கு நேர்முகத் தேர்வுக்குச் சென்றேன். அந்த தூரங்களையெல்லாம் நடந்தே சென்றேன் என்பதை இப்போது நினைத்தாலும் வியப்பாயிருக்கிறது. என்னிடம் இருந்த ஒரு நல்ல பேண்ட்டோடு, ஷ்ர்ட்டும் அணிந்து, ஒரு டையும் கட்டிக் கொண்டு( உபயம். திரு. சுப்பிரமணியம்.)நான் நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்களையெல்லாம் கவனித்தபோது, அந்த இண்டர்வியூவுக்கு டை அணிந்து சென்றது நான் மட்டுமே என்று உணர்ந்தபோது, கொஞ்சம் கூச்சமாகவும் வெளிக்குப் பெருமையாகவும் இருந்தது. அதுதான் என் வாழ்க்கையில் பங்கு பெற்ற முதல் இண்டர்வியூ. நன்றாகவே நினைவுக்கு வருகிறது. என்னுடைய முறை வந்து என்னை கூப்பிட்டபோது,மிடுக்காகவே சென்று, வணங்கி இருக்கையில் அமர்ந்தேன். என் பெயர், தகுதி குடும்பம் போன்ற விஷயங்களைப் பற்றிக் கேட்டார்கள்.நானும் தைரியமாகவே பதில் சொன்னேன். படிப்பில் நான் காம்பொசிட் மாத்ஸெடுத்திருப்பதாகக் கூறி அதில் என்ன கற்றுக் கொடுத்தார்கள் என்பதையும் கூறினேன். அப்போது தேர்வுக் குழுவின் தலைவர் எனக்கு பித்தாகோரஸ் தீரம் தெரியுமா என்று கேட்டார்கள். நானும் பித்தாகோரஸ் தீரமை தமிழில்சொன்னபோதுதான் அவர்களுக்கு நான் தமிழ் வழிக் கல்வி பயின்றது தெரிந்தது. என்னுடைய ஆங்கில பதில்களை கேட்டுக் கொண்டிருந்த அவர்களுக்கு நான் தமிழில் கற்றவன் என்ற செய்தி வியப்பளித்தது. அந்த தேற்றத்தை என்னால் ஆங்கிலத்தில் கூற முடியுமா என்று கேட்க, நானும் அதை அப்படியே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறினேன். அது அவர்களுக்கு திருப்தி அளித்திருக்க வேண்டும். தேர்வு முடிந்து என்னைப் போகச் சொல்லி, மற்றவர்களைக் கூப்பிட ஆரம்பித்தனர். வெளியே வந்தவன் தேர்வின் முடிவு தெரியாததால் காத்திருந்தேன். உணவு இடைவேளைக்கு வெளியே வந்த தேர்வுக் குழு தலைவரிடம்முடிவு பற்றிக் கேட்டேன். மிகவும் விறைப்பாக தேர்வானால் தபாலில் தெரிவிப்பதாகக் கூறினார். முடிவு தெரியாத நிலையில் சற்றே மனபாரத்தோடு, வீடு வந்து , அன்று மாலையே ரயிலில் வெல்லிங்டன் செல்லப் பயணப் பட்டேன். இவ்வளவு விலாவாரியாக நான் இங்கு இதை விவரிப்பது, என் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு இவையெல்லாம் அஸ்திவாரமாக இருந்ததாலும், என் வாழ்க்கையின் பாதையை எனக்குக் காட்டிய நிகழ்ச்சிகள் என்பதாலும் தான் 

நான் வேலையில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டபின்  ஒரு முறை கோவை சென்றிருந்தேன். என் அந்தக் கால நண்பன் ஆலியைத் தேடி அவன் வீட்டுக்குச் சென்றேன்  மிகுந்த சிரமங்களுக்கு இடையில் அந்த வீட்டைக் கண்டுபிடித்தேன் BEES cottage  என்பது அவன் வீட்டின் பெயர் என்பது மட்டும் நினைவில் இருந்தது. கஷ்டப்பட்டுக்கண்டு பிடித்துப் போனபோது அவனது உறவினர் என்னை விசாரித்தார். ஆலியின் பால்ய கால நண்பன் என்று கூறிக் கொண்ட என்னை வியப்புடன் பார்த்தார். பிறகு அவர் சொன்ன செய்தி ஆலி எங்கோ காணாமல் போய் விட்டான். அவன் இருக்குமிடமே யாருக்கும் தெரியாது என்பதுமாகும் 

சென்னையில் எச் ஏ எல் லில் நேர்காணலுக்குச் சென்ற நான் தேர்வாகி இருப்பதாகவும் மே மாதம் முதல் தேது 1955-ல் பெங்களூரில் வேலைப் பயிற்சிக்குச் சேருமாறும் உத்தரவு வந்திருந்தது.

32 comments:

  1. அந்தக் கால அனுபவங்கள்"வியக்கவைத்தன..

    ReplyDelete
  2. பத்து ரூபாய் தான் எனத் தோன்றினாலும் அந்தக் கால கட்டத்தில் அதன் மதிப்பே அதிகமாக இருந்திருக்கும் இல்லையா? இது எந்த வருடம்? எழுபதுகள் வரையிலும் வேலையில் சேருவதும், வேலை தேடி அலைவதும் கஷ்டமான ஒன்றாகத் தான் இருந்தது. எண்பதுகளுக்குப் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்து விட்டது.

    ReplyDelete
  3. நெஞ்சில் பசுமையாக இருப்பதனால் தானே - இத்தனை ரசனையுடன் பதிவிட முடிந்தது..

    வாழ்க என்றென்றும் நினைவுகள்!..

    ReplyDelete
  4. 1970களின் இறுதியில் கோவைக்கு வேலைக்குச் சென்றபோது நான் பட்ட சிரமங்கள் நினைவிற்கு வந்தன.தங்களது பதிவுகள் எங்களை அக்காலகட்டத்திற்கு அழைத்துச் செல்கின்றன. பல நாள் கழித்துத்தேடிச் சென்று உங்கள் நண்பரைப்பார்க்க முடியவில்லை என்பதையறிந்தபோது மனம் கனத்தது.

    ReplyDelete
  5. ஆலி காணாமல் போனது மனசுக்குக் கஷ்டமாப் போச்சு:-(

    அந்தக் காலத்தில் நிறைய நடைதான். களைப்பும் தெரியாமல்தான் இருக்கும். இப்பப் பாருங்க ... ஒரு கிலோ மீட்டர் என்றாலும் ஆட்டோவைத் தேடுகிறது கால்!

    காசுக்கு அப்போ சிரமம்தான். அதையெல்லாம் கடந்து வந்தபின் திரும்பிப்பார்த்தால் வியப்பே!

    ReplyDelete
  6. திரும்பிப்பார்க்கும்போது வரும் நினைவுகள் பலவற்றை நம்மாலேயே நம்ப முடியாது. முந்நூறு ரூபாய், அல்லது முந்நூற்றைம்பது ரூபாய்க்கு ஒரு வேலை கிடைத்தால் சௌக்யமாக இருக்கலாம் என்று என் இளமையில் நினைத்தி்ருக்கிறேன்!!

    ReplyDelete
  7. அன்றைய கால கட்டத்தில் பட்ட கஷ்டத்தை இன்றைக்கு அசை போடும் போது நெருடலாகத்தான் இருக்கிறது. அதிலும் அன்று காசின்றி அலைந்த நீங்கள் இன்றைய வாழ்வோடு ஒப்பிடுகையில் ஒருவித பிரமிப்பாக்கவே உள்ளது. அன்றைக்கு நடந்த நடைபோல் இன்று நடக்க ஆசைப்பட்டாலும் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது.

    ReplyDelete

  8. மலரும் நினைவுகள் 10 ரூபாயின் மதிப்பு இவ்வளவு தூரம் 80தை நினைக்கும் பொழுது பெருமையாக இருக்கிறது ஐயா.

    கூனூரில் மைசூர் லாட்ஜில் வேலை செய்த அனுபவத்தை படித்தேன் ஐயா

    ReplyDelete
  9. தங்களது அந்த கால அனுபவங்களைப் படிக்கும்போது Henry Wadsworth Longfellow சொன்ன ‘’The heights by great men reached and kept were not attained by sudden flight, but they, while their companions slept, were toiling upward in the night.’’ அருமையான சொற்றொடர் நினைவுக்கு வருகிறது. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. நினைவுகள் என்றுமே இனிமையானவைதான் ஐயா
    ஆனாலும் தங்களின் இளமைக் கால தோழரைக் காணவில்லை என்பது
    வருத்துதற்கு உரியது ஐயா

    ReplyDelete
  11. அந்தக்கால நினைவுகள் எங்களுக்கு ஓர் பாடமாக அமைகிறது! நன்றி!

    ReplyDelete
  12. மிகவும் கஷ்டங்களைத் தாங்கி வந்திருக்கிறீர்கள்.அதுவே தங்களின் இன்றைய மனத் துணிச்சலுக்குக் காரணம்.

    ReplyDelete
  13. அதே கோவையில் ,1980களில் ...தடாகத்தில் நான் வேலையில் சேர்ந்து கஷ்டப்பட்டதும்,அப்போது ,ஓடி வந்த ஒரு ஜோடியின் திருமணம் நடந்ததும் நினைவுக்கு வந்தது !

    ReplyDelete

  14. @ இராஜராஜேஸ்வரி
    /அந்தக்கால அனுபவங்கள் வியக்க வைக்கின்றன/ ஆம் மேடம். எனக்கா அந்த அனுபவங்கள் என்று நினைக்கும்போது நானே வியப்படைகிறேன். வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  15. @ கீதா சாம்பசிவம்

    அப்போதெல்லாம் பத்து ரூபாய் பெரிய தொகை. இந்த என் அனுபவங்கள் 1956 களின் முதல் பாதியில் நடந்தவை. நடந்தவை எல்லாம் ஒரு கனவுபோல் இருக்கிறது.

    ReplyDelete

  16. @ துரை செல்வராஜு
    அந்த விதத்தில் நான் பாக்கியசாலி. என் நினைவுகள் துல்லியமாகவே இருக்கிறது. திரும்பிப் பார்ப்பதும் சுவையாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete

  17. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    நாம் கடந்து வந்த பாதையை நினைத்துப்பார்க்கும் போது ஒரு மலைப்பு இப்போதுதான் தோன்றுகிறது. வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  18. @ துளசி கோபால்
    ஆலி என் வாழ்க்கை நாடகத்தின் முன் பகுதியில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஆம். திரும்பிப்பார்ப்பது வியப்பளிக்கிறது வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  19. @ ஸ்ரீராம்
    திரும்பிப்பார்த்து நான் என்னையே செம்மைப் படுத்திக் கொள்கிறேன் மூன்று நான்கு தலைமுறையினரின் வாழ்க்கைகளைப் பார்த்தாகி விட்டது.

    ReplyDelete

  20. @ திதமிழ் இளங்கோ
    காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் நானும் மாறி விட்டேனா என்பதை
    அசைபோட்டுப்பார்ப்பது நெருடல் இல்லை. சாதித்துவிட்ட ஒரு திருப்தி அவ்வளவே. வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete

  21. @ கில்லர் ஜி
    அன்று பணத்துக்கு மதிப்பு இருந்தது. வரவும் மிகக் குறைவு.கூனூர் வேலைதான் சம்பளம் வாங்கிய முதல் வேலை. அனுபவங்களின் முதல் ஆசான் வருகைக்கு நன்றி ஜி.

    ReplyDelete

  22. @ வே.நடன சபாபதி.
    வாழ்க்கை ஏணியின் படிக்கட்டுகளில் இன்னும் மேலே போக வேண்டியவன் என்னையும் மீறிய சக்திகளால் ஓரள்வே முன்னேற முடிந்தது. வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  23. @ கரந்தை ஜெயக்குமார்
    நினைவுகள் இனிமை மட்டுமல்ல படிப்பினை கூட. வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  24. @ தளிர் சுரேஷ்
    வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete

  25. @ டாக்டர் கந்தசாமி
    அந்தக்காலத்தில் அவை கஷ்டங்களாகவே தோன்றவில்லை. இப்போது நினைத்தால்தான் மலைப்பாக இருக்கிறது வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  26. @ பகவான் ஜி
    ஓடி வந்த ஜோடியின் திருமணம் என்று கூறி ஆவலை அதிகரிக்கச் செய்கிறீர்கள். என்னென்னவோ கற்பனை செய்யத் தூண்டுகிறது.வருகைக்கு ந்ன்றி ஜி

    ReplyDelete
  27. அந்த வயதில் உங்களுக்கு இருந்த பொறுப்புணர்வு அந்த தலைமுறைக்கே பெருமை சேர்த்த ஒன்று.

    உங்களது மனம் தளராத தேடலும் நம்பிக்கையும் ஆச்சரியமூட்டும் வகையில் உள்ளது. இவைகள் இந்தத் தலைமுறையினர் கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடங்கள்.

    நல்ல பகிர்வு.

    GoD bless You

    ReplyDelete

  28. @ வெட்டிப்பேச்சு
    தலைமுறையினரின் பொறுப்புணர்ச்சி பற்றி உடன்பாடு இல்லை. எல்லாத்தலை முறையிலும் பொறுப்பு மிக்கவர்களும் இல்லாதவர்களும் உண்டு. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  29. அவ்வப்போது நெகிழ வைத்த விவரங்கள். எல்லார் வாழ்விலும் சுப்பிரமணியம் இருந்தால் நன்றாக இருக்கும். என் வாழ்வில் சில சுப்பீரமணியர்கள் உண்டு. மறக்கவே முடியாது.

    வேலை கிடைத்ததும் ஆலியை.. வேலையிலிருந்து ஓய்வு பெறும் வரை.. சந்திக்க முற்படவில்லையா? சற்று வியப்பாக இருக்கிறது.

    ReplyDelete
  30. வாழ்க்கைப் பாதை நிறைய முட்கள் நிறைந்தவை நீங்கள் அந்தப் பாதையைக் கடந்து வந்திருக்கின்றீர்கள் என்பதால்தான் உங்கள் எழுத்துகளில் அந்த அனுபவங்களினால் விளைந்த வாழ்க்கைப் புரிதல் தெரிகின்றது. வித்தியாசமாக எண்ணவும் வந்திருக்கின்றது. சார்.

    தங்கள் பால்ய நண்பர் ஆலி காணாமல் போனது வாசிக்கும் போது எப்படி ஏன் என்ற கேள்விகள் எழாமல் இல்லை சார்...

    ReplyDelete

  31. @ அப்பாதுரை
    என் வாழ்வில் சந்தித்த அந்த சுப்பிரமணியம் அவர்களைப் பிற்காலத்தில் சந்திக்க முடியவில்லை. உண்மையைச் சொல்லப் போனால் ஒய்வு பெற்றபின் தான் பாதையைப் பின்னோக்கிப் பார்க்கும்போது சுப்பிரமணியம் ஆலி போன்றவர்களின் நினைப்பே வந்தது. அதற்குப் பின் கூனூர் சென்றபோது சுப்பிரமணியம் அவர்களின் வீட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆண்டுகள் கடந்து விட்டதால் அடையாளங்க்ள் ஏதும் புலப்படவில்லை. ஆலியை கோவை செல்லக் கிடைத்த முதல் வாய்ப்பில் முனைந்ததுதான் எழுதி இருக்கிறேன்

    ReplyDelete

  32. @ துளசிதரன் தில்லையகத்து
    அந்தக் காலத்தில் அவை முட்கள் போலவே தெரியவில்லை. வருகைக்கு நன்றி.

    ReplyDelete