திங்கள், 20 ஜூன், 2011

பதி சொல் தட்டா பத்தினி.

பதி  சொல்  தட்டா  பத்தினி
-------------------------------------

ஆண்டாண்டு  காலம்  பாடுபட்டு  உழைத்துச்
சேர்த்த  பணத்தை மரித்த பின்னும்  கூடவே 
எடுத்துச்  செல்ல விரும்பினான், உலோபி  ஒருவன்.

வாழ்நாளில் பெரும்பகுதி அவன் கூடவே
இருந்து குப்பை கொட்டிய மனைவியிடம் 
அவனை அடைக்கும் சவப் பெட்டியில் 
அவன் கூடவே அவன் சேர்த்த பணமும் 
அவனுடன் தொடரப்  புதைக்கப் பட 
வாக்களிக்க  வேண்டிக்  கேட்டுக் கொண்டான். 
பார  புகழும்  பத்தினியவள்  பதிக்கு 
நிச்சயம் செய்வதாய் சத்தியம் செய்தாள். 

அவன் மூச்சுப் பிரிந்த நாளில் 
சொன்ன சொல்லைக் காக்க சவப் பெட்டியில்
கூட  வைத்தாள் ஒரு பேழையை.

இதை கண்ட அவள் சகி,
இவளுக்கென்ன  புத்தி மட்டா, 
சவத்துடன் பணப்பேழை வைப்பது
சரியான செயலா - சந்தேகம்
தீர்க்கவே  சிநேகிதியைக் கேட்டாள்
புவியில் யாரும் செய்யும் செயலோ இது.. 
புத்தி மழுங்கி விட்டதா உனக்கு என்றாள். 

சத்தியம் அல்லவா செய்து விட்டேன். 
சவப் பெட்டியில் பணம் எடுத்துச் செல்லல் 
அவனுக்கு இடர்கள் பல அளிக்கும் --ஆகவே 
அவன் பணமனைத்தும் வங்கியில் இட்டு 
காசோலையாக்கி அவனுடன் அனுப்புகிறேன்
அவன் செல்லுமிடத்தில்  பணமாக்கிக் கொள்ளட்டும்
என்றே புன்னகை புரிந்தாள்  பதி சொல் தட்டா பத்தினி. 
--------------------------------------------------------------







சனி, 18 ஜூன், 2011

யாதுமாகி நின்றாய்...

யாதுமாகி   நின்றாய்     (இது  என் நூறாவது  பதிவு.)
-    --------------------------

ஆண்டவனைக் கண் கொண்டு யாரும் கண்டதில்லை.
காண்ப தெல்லாம் அவரவர்   கற்பனைத் திருவுருவே. 
தூணிலும் துரும்பிலும்  அண்டம்  பேரண்டம்  என 
எங்கும் நீக்கமற   நிறைந்திருக்கும்  அவனுக்கு ஓர் 
உருவம்  தருதல் முறையோ. .?

ஆத்தல்   காத்தல்  அழித்தல் என  எல்லா 
செயல்களும் ,யாரும்   அறியாமல்   புரியாமல் 
நித்தம்  நிகழ்தல் கண் கூடன்றோ..!
படைத்தவனே அவனைக் காண்பிக்க  இயலாத 
நிலையில் , பத்துமாதம் பாரம் சுமந்து,  பாரினில் 
பெற்றுப் போடும் அன்னையே   மண் மீது 
அவன்  மறு  உருவம் என்பாரே..!

அன்னையே, என் உயிரீந்து ,உடல் தந்த 
அமுதமே, அம்மணியே , உன்னைக் கண்டுன் 
அன்பில் திளைக்க எனக்கேன் தரவில்லை  வரமே..

இருந்தாலென்...?

இல்லாத ஒன்றை  இருப்பதாக பாவித்து, 
இருக்கும் அனைத்தையும்  மறுத்தலும்               
மறத்தலும்  சரியோ..?

பொன்காட்டும்  நிறங்காட்டி, 
மொழி பேசும் விழி காட்டி, 
மின் காட்டும் இடை காட்டி, 
முகில் காட்டும் குழல் காட்டி, 
இசை காட்டும் மொழி காட்டி, 
இணையவே  என்னுடனே, 
ஈன்றெடுத்த  உன்னிலும்  மேலாக, 
நாளெல்லாம் பரிவுடன்  பாங்குடன் 
ஏழை  எனை ஏற்றுக்கொண்ட 
ஏந்திழையும் தாயுளம்  கொண்டவளே. 

இருக்கின்ற  ஒரு மருந்தை அறியாமல் 
இன்னலுற்றேன்  இடர் படவேண்டும்..?

அருமருந்தே  அன்னை  என்றால் 
அவதி போக்க வந்த  இவளை  என் 
அன்னை எனக் கொளல்  தவறோ. ?

அன்னை உனைத் தேடி நான் அலைந்தபோது, 
சுந்தரி  இவளைக் கண்டேன் என் சிந்தையுள்ளே ,
நிறுத்தினேன்  இவளை என் அகத்தினுள்ளே.,
தொலைந்ததே என் துயரங்கள் என்னை விட்டே.
!
யாதுமாகி  நின்ற உன்னைத  தாயுமாகக் 
காணாது   தாரமாக  வந்தவளை நெஞ்சமெலாம் 
நிரப்பி , என்  சஞ்சலங்கள் நீக்கிய  சேய்  நான்.
பிள்ளையாய்ப்  பிறந்து ,பாலனாய் வளர்ந்து, 
காளையாய்க்  காமுற்று, எனதவளைக் கைப்பிடித்து, 
இளமை ஒழிந்து  மூப்புறும்  நிலையில்
 எல்லாம் செத்து, நாளை  எண்ணுகையில் 
எனக்கு நானே  அழாதிருக்க, 

காக்கின்ற  கண்களால்  கருணை வெள்ளம்
கரைபுரள, பூக்கின்ற  புன்னகையால் ,
ஆறாத  மனப் புண்ணின்  அசைவலைகள் 
அடங்கவே  அளித்தருளி அன்னையே,என்னை ஆட்கொள்ள 
வேண்டும் தாயே ,எனை ஆளும் சமய புரத்தாளே. .
---------------------------------------------------------- 

புதன், 15 ஜூன், 2011

செல்லி....எங்கள் செல்லம்.

செல்லி.....எங்கள் செல்லம்
--------------------------------------
              என் மனைவியின் பாட்டியின் காரியத்துக்கு 
திருச்சியிலிருந்து பெங்களூர் வந்து திரும்பிய என் மனைவியும் 
என் மூத்த மகனும்,எனக்கு ஒரு எதிர்பாராத பரிசு என்று ஒரு 
கூடையைக் கொடுத்தனர். அதைத் திறந்து பார்த்தபோது, உண்மை
யிலேயே,நான் எதிர்பார்க்காததுதான்.ஒரு கறுப்பு நாய்க் குட்டி.
பிறந்து நான்கு வாரங்களாம். வால் இல்லை. காக்கர் ஸ்பானியல் 
ஜாதியின் கலப்பு நாய். பெண் குட்டி. என்னைவிட என் இளைய 
மகன் அதிக சந்தோஷமும் ஆச்சரியமும் அடைந்தான். எப்படி என் 
மனைவி  இதற்கு சம்மதித்து கொண்டு வந்தாளோ என்பதே ஒரு
புதிர். 

              வீட்டிற்கு வந்ததும் அது (அவள் )வீட்டின் சுவரோரமாக 
எல்லா இடங்களையும் சுற்றி வந்து, முகர்ந்து பார்த்துப் பின் ,முன் 
கால்கள்முன்னேயும், பின் கால்கள் பின்னேயுமாக நீட்ட்ட்ட்ட்டிப்
படுத்தது. பெண்கள் இல்லாத வீட்டுக்கு வந்த பெண் குட்டிக்குப்
பெயர் என்ன வைக்கலாமென்று ஒரு பெரிய சர்ச்சையே நடந்தது
என் பிள்ளைகளுக்குத் தங்கை என்ற பொருளில் செல்லி என்று 
( தெலுங்கில் தங்கை ) பெயர் வைத்தோம். என் பிள்ளைகள் அதை 
ஸ்டைலாக  ஷெல்லி என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். முதல் சில 
நாட்கள் என் மனைவிக்கு அதை கவனிப்பதே ஒரு பெரிய வேலை
ஆகிவிட்டது. முதலில் அது அசுத்தம் செய்யும் இடங்களை சுத்தம்
செய்வது தொடங்கி, அதற்கு உணவு கொடுத்துப் பார்த்துப் பார்த்து
வளர்ப்பதே முக்கிய அலுவலாகிவிட்டது. எல்லா வேலைகளை
யும்  அதைப் பற்றிய பயத்திலேயே செய்து வந்தாள். எங்கள் 
வீட்டில் நாங்கள் சைவம். நாயையும் சைவமாகவே வளர்த்தோம்.
செல்லிக்கு காரட் ,பீன்ஸ் , காபேஜ், என்றால் மிகவும் பிடிக்கும்.
காய்கறி நறுக்கும்போது அருகில் வந்து வாயில் எச்சில் ஊறக் 
காத்திருக்கும். காய்கறிகளில் முதல் பங்கு அதற்கே.காரட் என்ற 
பெயர் கேட்டாலேயே, சொன்னவரைப் பிடித்திழுத்து,  ஃபிரிட்ஜ்
பக்கம் நிறுத்தி எடுத்துக் கொடுக்கக் கேட்கும். ஆகவே நாங்கள் 
காரட் என்ற வார்த்தையை ஸ்பெல்லிங் ஆகத்தான் சொல்வோம்.
           நான் அதை மாடிக்குக் கூட்டிச் சென்று, சொன்ன பேச்சைக் 
கேட்கப் பழக்கினேன். நில், உட்கார், நட , ஷேக் ஹாண்ட், என்று 
சொன்னதைச் செய்யும். ஏதாவது ஆகாரப் பொருளைத் தின்னாதே
என்றால் சாப்பிடாது. பர்மிஷனுக்காகக் காத்திருக்கும். அதற்கு 
வீட்டில் எஜமானன் நான் என்று நன்றாகத் தெரியும்..ஒருசமயம் 
எங்கள் வீட்டு ரேஷன் கார்டை கடித்துக் கிழித்திருந்தது. இதை 
யார் கிழித்தது என்று நான் கேட்டவுடன் ,அடங்கி ஒடுங்கி சோஃபா
அடியில் போய்ப் படுத்துக் கொண்டது. அது ஏதாவது தவறு 
செய்தாலோ, அதற்கு விருப்பமில்லாததை செய்யச் சொன்னாலோ
( உதாரணத்துக்கு-குளிர் கலத்தில் குளிக்க )சோஃபாவின் அடியில் 
போய்விடும். கட்டாயப் படுத்தினால் உறுமித் தன் எதிர்ப்பைத் 
தெரிவிக்கும். 

           என் பிள்ளைகள்  எங்காவது வெளியே போகும்போது, அவர்
களுடன்  கூடப் போக முயற்சிக்கும். அவர்கள் அதை அதட்டிக்
கதவைச் சாத்திக் கொண்டு வெளியே போய் விட்டால், யார் 
போனார்களோ அவர்களது  ஏதாவது  உடையை ( ஜட்டி, பனியன்)
தேடி எடுத்து, அதை அங்கும் இங்கும் போட்டுப் புரட்டித் தன் 
ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ளும். ஆடைகளை கிழிக்காது. 
வீட்டிற்கு வரும் பாத் ரூம் சுத்த்ம் செய்ய வருபவரை அதற்கு 
பிடிக்கவே பிடிக்காது. அவர் வருவது கண்டு குரைக்க ஆரம்பிக்கும்.
நாங்கள் அதை ஒரு அறையில் விட்டு கதவை சாத்துவோம். 
பாத்ரூம் சுத்தம் செய்பவர் போன பின் கதவைத் திறப்போம்.
இருக்கும் ஆத்திரத்தோடு கதவைத் திறந்ததும் வெகு வேகமாகப் 
பாய்ந்து  வந்து வெளியே பார்த்துக் குரைக்கும்.

            நான் அலுவலகத்திலிருந்து மாலை திரும்பும்போது, என் 
காரின் சத்தத்தை தூரத்தில் வரும்போதே அறிந்து என்னை 
வரவேற்கத் தயாராகிவிடும். நான் வந்த உடனே, என் மேல் 
தாவி , என் கையை நக்கித் தன் சந்தோஷத்தைத் தெரிவிக்கும். 
நான் குளித்து உடை மாற்றி ஈஸி சேரில் உட்கார்ந்து அன்றைய 
பத்திரிகையை வாசிக்கத் தொடங்குவேன். சற்று நேரம் பொறுமை
யாய்க் காத்திருக்கும். பின் என்னைப் பிறாண்ட ஆரம்பிக்கும். 
மாலை அதை வாக்கிங் கூட்டிச் செல்லவேண்டும். கழுத்தில் 
செயினை மாட்டி வாக் போக படி இறங்க போனால் அது வராது. 
திரும்பி திரும்பி வீட்டைப் பார்க்கும். என் மனைவியும் வந்தால்
தான் படியிறங்கும். வாக்கிங் போகும்போது அதன் காலில் 
ஏதாவது கல்லோ, முள்ளோ குத்திவிட்டால் அந்தக் காலை 
தூக்கிக்கொண்டு அப்படியே நின்றுவிடும். நாம் அதனை எடுத்து
எறிய வேண்டும். அதேபோல அது சைவ நாயாதலால்  பீன்ஸ்
போன்ற காய்களைத் தின்று  அது மலம் கழிக்கும் போது அதன் 
ஆசன வாயில் ஏதாவது நார்  போன்றிருந்தால் அது நகராது. 
அதை சுத்தம்செய்து எடுத்தால்தான் மேலே நகரும். அதற்காக 
நாங்கள் நடக்கும்போது கையில் கொஞ்சம் வேஸ்ட் பேப்பர் 
எடுத்துச் செல்வோம்.

           அதன் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கவும் அதற்கு
வேண்டிய ஊசிகளைப் போடவும், ஒரு மிருக வைத்தியரை
நாடுவோம். அவரை வீட்டிற்கு அழைத்து வந்து, பிறகு கொண்டு
விடவேண்டும். ஒரு வருகைக்கு ரூபாய் ஐம்பது கொடுப்போம். .
அவருக்கு செல்லியைப் பார்த்து பயம். செல்லிக்கு அவரைப்
பார்த்து பயம். ஊசி போட அதை சன்னலின் ஒரு பக்கம் சேர்த்து
அழுத்திப் பிடிப்போம். மறுபக்கம் இருந்து டாக்டர் ஊசி போடுவார்.
ஊசி வேண்டாத நாட்களில், அவர் தூர நின்று பார்த்து நாய் நல
மாக இருப்பதாகக்  கூறி பீஸ் வாங்கிக்கொண்டு போய்விடுவார்.

            அசைவ நாய்க்கு சைவ உணவு கொடுத்து வருகிறோமே,
பாவம், என்று ஒரு முறை மட்டன் வாங்கி வந்து, வேக வைத்துக்
கொடுத்தோம். பழக்க மில்லாமல் சாப்பிட்ட அதற்கு, எலும்பு
ஒன்று அதன் மேலண்ணம் கீழண்ணமாக நேராக மாட்டிக்
கொண்டது. அது எவ்வளவோ முயன்றும் எடுக்க முடிய வில்லை.
என் மகன் அதன் வாயுக்குள் கை விட்டு அதை எடுக்க முயற்சி
செய்தான். நாய் எதிர்பாராமல் அவன் கையைக் கடித்து விட்டது.
பிறகு அது அவனையே , மன்னிப்பு கேட்பதுபோல் சுற்றி சுற்றி
வந்தது. அதை மிருக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்று, எலும்பை
எடுக்க வேண்டினோம்.அதை ஒரு கேட்டில் நகர முடியாமல்
கட்டி, ஒரு நீள கம்பியை வளைத்து, வாயில் இட்டு இழுத்து
எலும்பை எடுத்தனர். அது சரியாகி வர என் மனைவி, வேளாங
கண்ணி மாதா கோவிலுக்கு பிரார்த்தனை செய்ய , அங்கு சென்று
நிறைவேற்றி வந்தோம்.

            எல். டி சி. மூலம், ஒரு டாக்சி ஏற்பாடு செய்து, திருச்சி,
கோவை, ஊட்டி, முதுமலை, மைசூர், பேளுர்ஹலேபேட் ,
சரவண பெலகுளா, பெங்களூர், என்று டூர் போனோம். முதுமலை
பண்டிபூர் வழியே மைசூர் செல்லும்போது, ஒற்றை காட்டு யானை
ஒன்று குறுக்காக பாதையில் நிற்க, நாங்கள் மிகவும் பயந்து
விட்டோம். செல்லி எங்கள் காலடியில் தூங்கிக் கொண்டிருந்தது.

              ஒரு முறை செல்லியின் மூக்கில் ஒரு தேனி கொட்டிவிட,
அது மயங்கி விழ, நாங்கள் முதலில் மிகவும் பயந்து போனோம்.
சற்று நேரத்தில் தட்டுத் தடுமாறி  எழுந்து நின்று, மாடிக்கு ஓடியது,

             ஏழே வருடங்கள் எங்களுடன் இருந்த செல்லி, பாத்ரூம்
சுத்தம் செய்பவர் வந்து போக, ஒரு முறை பாய்ந்து வெளியே
வர, எங்கோ மூலையில் இடித்து, அதற்கு கண் பார்வை குறையத்
தொடங்கியது. என் மனைவி அடிக்கடி கூறுவாள், பக்கத்தில்
மாமியார் இல்லாத குறையை செல்லி போக்குகிறது என்று.
அப்படி பார்த்துப் பார்த்து கவனித்துக் கொள்வாள். செல்லி இறந்த
இரண்டு நாட்களுக்கு என் இளைய மகன் உண்ணவே இல்லை.

             செல்லிக்குப் பிறகு நாங்கள் வேறு செல்ல நாய் வாங்கவே
இல்லை. நாய்களுக்கு வளர்ப்போரிடமும், பூனைக்கு வளரும்
இடத்திலும் விசுவாசம் அதிகம். செல்லி கதை கேட்க என் பேர
குழந்தைகளுக்கு ஆர்வம் அதிகம். எத்தனை முறை கேட்டாலும்
சலிக்காது.
-------------------------------------------------------------------------------.

 









.

சனி, 11 ஜூன், 2011

சாதாரணன் இராமாயணம்

சாதாரணன்   இராமாயணம்.
---------------------------------------

                        பால   காண்டம்.
                        ----------------------
      பூதேவி ஸ்ரீதேவி  இருபுறம் இருக்க,
      அனைத்துலகாளும்  ஆபத்பாந்தவன், 
      அனாதரட்சகன், பாம்பணையில் துயிலும்
      பரந்தாமன , அமரர் ம்ற்றேனையோர் துயர் 
      துடைக்க, தீவிலங்கை அரக்கர்கோனை
      வேருடன் அழிக்க, தயரதன்தன் வேள்விக்குப் 
      பலனாய், ரவிகுலத் திலகமாய் கோசலை மகனாய்
      பரத இலக்குவன் சத்துருகனன் எனும் 
      மூவருக்கும்  மூத்தவனாய் இராமனாய்
      அயோத்தியில் அவதாரம் செய்து 
       சகலகலாவல்லவனாய்த் தேறி வரும் வேளை,
       காட்டில் செய்யும் வேள்விக்கு 
        ஊறு விளைக்கும் அரக்கரை அழிக்க
        இராமனைத் தன்னுடன் அனுப்பப் பணித்த 
       விசுவாமித்திரன்  சொல் தடுக்க இயலாது, 
        வசிட்டனும் கூற , இளவல் இலக்குமனன் 
        கூடச்செல்ல தயரதன் வழியனுப்பக் காடேகி
         வேள்விக்கிடையூறு  ஈந்த சுபாகு உயிரெடுத்து, 
        அவன் தம்பி மாரீசனைத்  தன் அம்பால் கடலில் வீசி
         தாய் அரக்கி  தாடகையை வதம் செய்து, 
         மறைமுனியின்  வேள்வி காத்து ,அவன் 
         பின் செல்லக்  கானகத்தில் கால் இடர
         கல்லும் பெண்ணாக மாற,  பின் மிதிலை
         மாட வீதியில் அண்ணலும் நோக்க அவன் 
         மணக்க இருந்த அவளும் நோக்க
         சுயம்வரப் பந்தலில் சனகனின் சிலையறுத்து
         மைதிலியை மணம் புரிந்து, அயோத்தி 
         மீள்கையில் மூவேழு தலைமுறை  மன்னரை 
         அழிக்கச் சூளுரைத்த அந்தணன் பரசுராமன் 
         வில் இறுத்து , அவன் தவம் முற்றும் பெற்று
         அரசாள அயோத்தியில் அவன் தந்தை நாள் குறிக்க, 

                       அயோத்தியா    காண்டம்
                        ----------------------------------

           தாதி கூனி சொல்கேட்டுத் தரணி தன்னைத்
          தன் மகன் பரதன் ஆளக் குலக் குமரன் காடேக
           முன் பெற்ற வரம் கொண்டு கைகேயி வேண்டக்  
          கேட்ட தயரதன் மனம் மயங்கிச் சாய,
          கோசலை மைந்தன் இளவல் இலக்குவன் கூடவர
          வைதேகி பின் தொடர அனைத்தும் துறந்து
           மரவடி அணிந்து கானகம் சென்று, குகன் உதவிட
          கங்கைகடந்து, சித்திர கூடத்தில் இருக்க,
           அயோத்தியில் மயங்கி சாய்ந்த மன்னனும் வானேற
          தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி நீத்து
           குவலயமாள  பணிந்து  வேண்டிய  பரதனும்
           மன்னன் மரவடி பணயம் பெற்றுத் தானும் மீள,
          வனவாசம் துவங்க தண்டகாருண்யம்  புகுந்து,

                               ஆரணிய  காண்டம்.
                               ---------------------------

           ஆரணியத்தில்  அனைவருக்கும் அஞ்சேலென
           அருள் கொடுத்து, அகத்தியன் கை வில் பெற்றவன்
            பால், சீதைக்குத் தான் நிகரென்று காமத்தால் 
            முன் வந்த சூர்ப்பனையின் காதிரண்டும் கொடி மூக்கும்
            இலக்குவன் வாளால் அறுபட, அவள் துணை வந்த
            கரனொடு தூடணன் உயிரெடுக்க அவள் கதறி
            இலங்கையர் கோன் இராவணனிடம் முறையிட
             சீதையை அகல்விக்க மாயமான் உருக்கொண்ட
            மாரீசனால் அலைக்கழிக்கப்பட தவமுனிவேடம் பூண்ட
            அரக்கர்கோன் வஞ்சனையால் சீதையைக் 
            கடத்திக் கடல் சூழ்  இலங்கையில்  கடிகாவில் 
            சிறை வைக்க, மாயமானைச் செற்று வந்தவன் ,
            காதல் மனையாளைக் காணாது வருந்திக் கானகத்தில் 
            தேடியலைய, கோமகளைக் காக்க இயலாத 
            சடாயுவுக்குக் கிரியை செய்து மோட்சமளித்து
            கணையொன்றினால்  கவந்தனை மடித்து,
            சபரி ஈந்த கனி உவந்து உண்டு, 

                           கிஷ்கிந்தா  காண்டம்.
                            ------------------------------

             வைதேகிதனைத்தேட கானகக்  கவியரசன் 
             நட்பு நாட, மராமரம் ஏழு எய்து, தன் திறன் காட்டி
             அவனண்ணன் வாலியைக் கணையொன்றால்   
              முடித்து,தம்பிக்கு முடி சூட்ட,அவன் அமைச்சன்
             திறன் விளங்கு மாருதியும்  மாயோன் தூதுரைத்தல் செப்ப,

                            சுந்தர  காண்டம். 
                            ----------------------

             கடலேறி மும்மதில் சூழ்  இலங்கை புகுந்து,
             கடிகாவில் சிறையிருந்த சீதைதனைக் கண்டு 
             அண்ணல் இராமன் அனுப்பிய தூதன் ,அவன் 
             சொல் கேட்க, அன்னையிடம் விண்ணப்பித்து ,
             அடையாளம் தெளிவிக்க, கைகேசி வரம் கேட்க
             தந்தை சொல் தட்டாது இலக்குவன் சீதையோடு
             இராகவன் கானகம் சென்றதும் ,நால்வரோடு
             ஐவராகிய குகன் கங்கை கடத்தியதும், சித்திர 
             கூடத்தில் பரத நம்பிக்கு மரவடி பணயம் வைத்ததும்
             ஒரு நாள் அண்ணல் மடியில் தலை வைத்திருக்க, 
             ஒரு காக்கை துயர் கொடுக்க அதனை அத்திரம் 
              துரத்த வானெங்கும் பறந்தோடி, அபயம் தேடிக்
             கண் இழந்ததும், பெம்மான் பொன்மானைத்தேடி 
             சிலைபிடித்தேக, ஆங்கே இலக்குவனைப் பிரிந்ததும் 
              கூறி, அயோத்தியர்கோன் அடையாளம்  என அவன்
              கை மோதிரம் காட்ட, அடையாளம் ஒக்கும் 
              என்று உச்சி மேல் வைத்து  உகக்க,மாருதியும் 
             அரக்கர்கோன் மாக்கடிகாவை அழித்து, 
             ஆங்கிருந்த அனைவரையும் கொன்று இலங்கைதனை
             தீக்கிரையாக்கி, அரக்கர்கோன் சினமெழுப்பி, மீண்டு
              அன்பினால் அயோத்தியர்கோன் அடியினைப் பணிய,

                            யுத்த  காண்டம்
                            ----------------------

               அண்ணலும் இளவலும் வானரக் கோனுடன்
               அனுமன் மற்றனைவரோடும் இலங்கை புகல் வேண்டி, 
                கடற்கரையில் வீற்றிருக்க, இராவணன் தம்பி 
                வீடணன் அடைக்கலம் நாட,நல்லாசி புரிந்து
                நுரைகடலைத் தன் அம்பால்  விலக வைத்து
                விலங்குகள்  பணி செய்ய,  கல்லால் அணை கட்டி, 
                மறுகரை ஏறி, இலங்கைப்  பொடியாக்க 
                செஞ்சரங்கள் பல எய்யக் கும்பனொடு நிகும்பனும்
                மாள, இந்திரஜித்தும் அழிய ,கும்பகர்ணன் பட, 
                அரக்கர் அனைவரும் புறங்காட்டி  ஓட
                இலங்கை மன்னன் அத்திரமும் சத்திரமும் அழிந்து
                நிற்க,அன்று சென்று மறுநாள் வர அண்ணலும் கூற,
                பின் வந்தவன் தலை ஒரு பத்தும்,தோள் இருபதும்
                இராமன் விடுத்த சரம் உதிர்க்க,
                வெற்றி கண்ட களத்தில் வானோர் பூமாரி பொழிய, 
                மணிமுடி  தானேற்க ,வீடணன் வானரக் கோனுடன்
                அழகு தேர் ஏறி அனைவரும்  பின் தொடர 
                அயோத்தி எய்தி, நன்னீராடி, மாலைகள் சூடி,
                 திருமுடி தரித்து , மலர்க் குழலாள் சீதையுடன்
                 பரதனும் தம்பி சத்துருக்குனனும் இலக்குமனும்
                அனுமனோடு   அடியேனும்  அடிபணிய 
                 சீரிய சிம்மாசனம் அமர்ந்து , அனைத்துலகும் 
                 அவர் கோல் செலுத்த வாழ்வித்தருளினார்
            ===========================================


          (   இராமாயண காவியம் ஒரு கடல் .எத்தனையோ மகான்கள்
             இராகவனின் அருள் வேண்டி, அவன் கதையை யாத்திருக்கிறார்கள்
             நானும் ஆவலால் உந்தப்பட்டு  ஒரே வாக்கியத்தில்  இந்த 
             சாதாரணனின் இராமாயணம் எளிய கவிதை வடிவில் 
             எழுதி உள்ளேன். படித்துக் கருத்து கூறுங்கள் )
 


             .
 


 


 


 

                            
 

 
 

          


 

வியாழன், 9 ஜூன், 2011

நான் போட்ட நாடகங்கள். ....

நான் போட்ட நாடகங்கள்.
-----------------------------------
      நான் அந்தக் காலத்திலேயே சுமாராக எழுதுபவன் என்று
எண்ணிக்கொண்டிருந்தவன். சிறுகதை, கவிதை, கட்டுரை
என்று எல்லாவற்றிலும்  முயற்சி செய்திருக்கிறேன். நான்
எழுதியது  எல்லாம்  என் ஆத்ம  திருப்திக்கு  மட்டுமே.
எழுதியவற்றை சில நாட்கள் கழித்துப் படித்துப் பார்த்தால்
நம்மை நாமே விமரிசிக்க முடியும். நாடகம் எழுதி, நடித்து,
அரங்கேற்ற வேண்டும் என்ற ஆவல் எனக்கிருந்தது. 1962-ம்
வருடக் கடைசி என்று நினைக்கிறேன்.மைசூர் இண்டஸ்டிரிஸ்
ஸ்போர்ட்ஸ் அண்ட் ஃபைன் ஆர்ட்ஸ் அசோசியேஷன் ஒரு
நாடகப் போட்டி நடத்துவதாக அறிவித்திருந்தார்கள்.HAL AERO
ENGINES சார்பில் நான் ஒரு நாடகம் எழுதி போட்டியில் பங்கு
பெற அனுமதி பெற்றேன்.நாடகம் ஒன்றரை மணி நேரத்துக்குள்
இருக்க வேண்டும்.பல மொழிகளில் போட்டியில் பங்கு பெற
நாடகங்கள் வந்திருந்தன. என் நாடகம் தமிழில் “ வாழ்ந்தே
தீருவேன்” என்ற தலைப்பில் இருந்தது.

      நாடகம் போட ஆர்வம் இருந்தால் மட்டும் போதுமா.?நடிக்க
ஏற்ற நண்பர்கள் கிடைக்க வேண்டும்;பெண் கதாபாத்திரத்தில்
நடிக்க, தொழில் முறை நடிகைகளை கொண்டு வர வேண்டும்.
கதை வசனம் ஆளுக்கொரு காப்பி கொடுக்க வேண்டும்.ரிகர்சல்
நடத்த வேண்டும். அதற்கு இடம் தேட வேண்டும். செலவுக்குப்
பணம் வேண்டும்.இவற்றை எல்லாம் சுமாராகப்  ப்ளான்  செய்து
நடிகர் தேர்வில் இறங்கினேன். ஒருவனுக்கு  நடிக்க வருமா
என்று எப்படி கணிப்பது.? வசனங்களை ஏற்ற  இறக்கத்துடன்
சரியான உச்சரிப்பில் பேசினாலேயே பாதி நடிப்பு வந்த மாதிரி.
இதை சோதிக்க நான் ஒரு உத்தி  வைத்திருந்தேன். கலைஞ்ர்
கருணாநிதியின்  “வீரத்தாய்” என்ற ஓரங்க நாடகம் எனக்குத்
தெரியும்.அதனை எழுதி, நடிக்க விருப்பம் உள்ளவர்களிடம்
படித்துக் காட்டச்சொல்லுவேன். நன்றாகப் படித்தவன் கதா
நாயகன் வேஷத்துக்கும், சுமாராகப் படித்தவர்கள் பிற பாத்திர  
வேஷங்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சரியாக படிக்க 
முடியாதவர்கள்  நிராகரிக்கப்பட்டனர். 
            நானே முதன்முதலில்  எழுதி நடித்து இயக்க இருந்தேன். 
நிறைய கதாபாத்திரங்கள் இருந்தால் சமாளிப்பது கஷ்டம். 
தொழிற்சாலைகளுக்குள்ளான  போட்டி என்பதால்  முதலாளி, 
மேனேஜர், தொழிற்சங்கத்  தலைவன் , முதலாளி மகன், மகள் 
என்ற முக்கிய கதாபாத்திரங்களுடன்  கதை எழுதி இருந்தேன். 
எதிர்பாராத  திருப்பமுடன்  மேடைக்கதை  அமைத்திருந்தேன். 
எனக்கு நான் ஒரு பாலசந்தர் என்ற நினைப்பு. நடிக்க வந்தவர்
மனதில்  சிவாஜி, ஜெமினி என்ற நினைப்பு.தொழில்முறை  
நடிகை  இரண்டு மூன்று ரிகர்சலுக்குத்தான்  வருவார். அவர்
மனதில் சாவித்திரி ,பத்மினி என்ற எண்ணம்.அவர் இல்லாத
போது  டம்மி  கதாநாயகியாக  யாராவது இருக்கவேண்டும். 
எல்லோரும் தொழிற்சாலையில்  பணி புரிபவர்கள்.பணி 
முடிந்து வீட்டிற்கு திரும்பி  ரிகர்சலுக்கு குறித்த நேரத்தில் வர 
பல  தொந்தரவுகள் இருக்கும். எல்லாவற்றையும் மீறி நடிக்க 
வந்தபிறகுதான் வசன தாள்களையே பார்ப்பார்கள். அவற்றை 
மனப்பாடம் செய்து ஒப்பிப்பதற்கு முன், சுற்றி இருந்துகொண்டு
நடிக்காமல் வசனங்களை வெறுமே படிக்க வேண்டும். ஒருவர்
முடித்து அடுத்தவர் வசனம் எங்கு துவங்குகிறது என்று புரிந்து
கொள்ள இந்த முறையைப் பயன்படுத்தினேன். எழுதும்போது 
நல்ல தமிழில் எழுதி இருந்தேன். பேசும்போது அப்படியே 
பேசினால் சமூக நாடகத்துக்கு ஒத்துவரவில்லை. பேச்சுத்
தமிழ் என்று கூறினால் மிகவும் கொச்சையாக வந்தது. 

       எப்படியோ ஓரளவு தயாரான நிலையில் கதாநாயகியுடன் 
சேர்ந்த ரிகர்சல். அப்போதுதான் பின்னணி இசை இல்லாமல் 
என்ன நாடகம் என்று தோன்றியது. அருகில் இருந்த ஒரு 
ஆர்கெஸ்ட்ரா குழுவுடன்  விவாதித்தோம். அவர்கள்  ஒரு 
வேளை ரிகர்சலுக்கு டிபன் காப்பி  செலவுடன் ரூபாய் 80/-
கேட்டார்கள்.நாடகத்தன்று ரூபாய் 100/- தர வேண்டும்  என்றும் 
கூறினார்கள்.வேறு வழியில்லாமல்  ஒப்புக்கொண்டு  
சிசுவேஷனை அவர்களுக்கு விளக்கினோம். என் வீட்டில்தான் 
எல்லா ரிகர்சலும். இசையுடன் கூடிய ரிகர்சலிலேயே ஒரு 
நாடகம் பார்க்க வரும் கூட்டமிருந்தது. 

       நடிப்பு சொல்லிக் கொடுக்கும்போது நான் பட்ட கஷ்டம் 
அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும். வசனம் முடிந்தவுடன் 
எந்த ஒரு முகபாவமும் இல்லாமல் கட்டைபோல் நின்று 
விடுவார்கள். கைகால்கள் இயல்பாக இயங்காது. எல்லோரும் 
ஆர்வத்தில் நடிக்க வந்தவர்கள்  நாட்பட  நாட்பட கொஞசம்
கொஞ்சமாக மெருகேற்றி வந்தோம்.

       செலவு கைக்கு மீறிப் போகவே, நாடகம் பார்க்க வரும்படி
அழைப்புக்  கொடுக்கும்போதே, அறிந்தவர்கள் எல்லோரிடமும்
நன்கொடையாக ரூ.1/-, ரூ.2/-, ரூ. 5/- என்று  பெற்றுக்கொண்டோம்.
      ஒரு வழியாக 1963-ம் வருடம் பெப்ரவரி மாதம் 13-ம் நாள் 
என்று நினைக்கிறேன். பெங்களூர் டவுன் ஹாலில் அடி
யேனின் நாடகம் அரங்கேறியது. போட்டியில் பங்கெடுத்தும் 
பரிசு ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் நல்ல விமரிசனங்கள் 
வந்தன. நான் எழுதியிருந்த ஒரு வசனம் சிறப்பாகப் பேசப் 
பட்டது.அதில் நான்  “ ஒருகாலத்தில் நாட்டை அரசன் ஆண்டான்;
பின் அந்தணன் ஆண்டான், பிறகு பெருந்தனக்காரன் ஆண்டான்
இன்னும் ஆள்வதாகவும் மனப்பால் குடிக்கிறான். வேதம் கூறும் 
நான்கு சாதியினரில் மூவரின் காலம் தழைத்திருந்தாகி விட்டது. 
இதுவரை. இப்போது, இது, எங்கள் காலம், ஏழைத்தொழிலாளரின் 
காலம்,நிறம் மாறும் பச்சோந்திப் பணமூட்டைகளுக்கு சாவு மணி 
அடிக்கும் எங்கள் காலம். பாட்டாளிகளின் பொற்காலம். மாறி 
வரும் காலத்தின் மதிப்பு மாற்றங்களை புரிந்து கொள்ளாமல் 
கொடுப்பவன் நான் என்று மமதையில் கொக்கரிக்காதே. ONE HAS 
TO GIVE FIRST TO TAKE.!" என்று எழுதியிருந்தேன். 

      அதற்குப் பிறகு அலசூரில் முத்தமிழ் மன்ற சார்பாக பெங்களூர்
குப்பி தியேட்டரில்  முரசொலி சொர்ணத்தின்,”விடை கொடு 
தாயே” ,என்ற நாடகத்தை அரங்கேற்றினேன். அதன் பிறகு 
கண்ணன் எழுதிய “முப்பது நாள் “ என்ற நாடகத்தையும் 
அரங்கேற்றினேன். நீளமான வசனங்களை எங்களுக்கு ஏற்ற
படி மாற்றிக்கொண்டோம். விடை கொடு தாயே நாடகம் 
அந்நாள்  கர்னாடக கல்வி அமைச்சர்  திருமதி.கிரேஸ்  டக்கர் 
தலைமையில் நடந்தது.

    நாட்கள் பல சென்றபிறகு, நான் பி.எச்.இ..எல் --ல் பணி
யாற்றிக் கொண்டிருந்தபோது, “வாழ்ந்தே தீருவேன் “
நாடகத்தை மறுமுறை  கம்யூனிடி செண்டரில் 1971-ல்
நாடகப் போட்டியில் நடத்தி  இரண்டாம் பரிசாக ஒரு
ஷீல்ட் வாங்கினேன். குடியிருப்பில் இயங்கி வந்த  கிருஷ்ண
கான  சபாவுக்காக, “ஆராமுது அசடா” என்ற நாடகத்தை  இயக்கி
நடித்துக் கொடுத்தேன். அவர்களுக்காக அதையே ஸ்ரீ ரங்கத்திலும்
நடத்திக் கொடுத்தேன். பிறகு “ மனசாட்சி” என்ற நாடகம் சில
புது உத்திகளுடன் கம்யூனிடி செண்டரில் அரங்கேற்றப் பட்டது.
அந்த நாடகத்தின்  கரு கொண்ட ஒரு சிறுகதையை  என்
வலைப்பூவில் பதிவாக வெளியிட்டிருக்கிறேன்.

  ஒவ்வொரு நாடகம் போடும்போதும் நடந்த நிகழ்ச்சிகளை
நினைத்து அசை போடுவது மனசுக்கு இதமாக இருக்கிறது.
நல்ல் வேளை நான் சினிமாப் பக்கம் போகவில்லை. போய்
இருந்தால் போட்டி தாங்காமல் பலரும் ஓடிப்போயிருப்பார்கள
===============================================
             (  "உலகமே  நாடக  மேடை  என்றால் 
                        ஒப்பனை அறை  எங்குள்ளது ?" )

 



 

 









 
 



















.








திங்கள், 6 ஜூன், 2011

அவதாரக் கதை...பாகம் ....5.....வாமனனாக...

அவதாரக் கதை...பாகம்.....5.....வாமனனாக.
-----------------------------------------------------------

         ஆதிசிவனால் மூவுலகாள  வரம் பெற்ற, 
         திரி தூண்டி விளக்கணையாது காத்த கோயில் எலி,
         இரணியன் மகன், பிரஹலாதன் மகன், விரோசனன் 
         மகன் மகா பலியாகப் பிறந்தான்.( தது )

பெற்றவரம்  பலிக்க, வானவரையும் ஏனையவரையும் 
வென்று, மூவுலகாளும் பலி சக்கரவர்த்தி ஆனான். 

          வானவர்களின் தாய் அதிதி, அது கண்டு
          தன் மக்கள் நிலை கண்டு வருந்தி, 
          கச்சியப்ப  முனிவரிடம்  முறையீடு செய்ய,
          அவர் நோன்பு நோற்று, திருமாலை வழிபடு, 
          வழி ஒன்று பிறக்கும் என்றார்.அவளும் வழிபட,

திருநீலகண்டன்  அருள் பெற்று, மூவுலகாளும் பலி,
ஆணவத்தில் திளைக்கும்போது, அவனை நான்
அடக்குவேன், அதற்கென நாள் வரும்போதுன்
வயிற்றில் நான் வந்துதிப்பேன், என்றுரைத்த திருமால்,
அதிதி மகனாக வாமனாவதாரம் எடுத்தார்.

           வரம் மூலம் பெற்ற ஆட்சி நிலைக்க,
           அசுவமேத  யாகம் நடத்தி, யார்
           எதைக் கேட்பினும் நான் அதனைத் தருவேன்,
           என்று கூறி ,அதனைச் செய்தும் வந்தான்  பலி.

தக்க தருணம் வேண்டி நின்ற வாமனரூப
மகாவிஷ்ணு மகாபலியின் யாகசாலை வர,
வணங்கி வரவேற்கப்பட்டு , வேண்டியது
கேட்டுப்பெற, , வேண்டிக்கொள்ளப் பட்டான்.

           தான் ஒரு பிரம்மசாரிப்  பார்ப்பனன்,
           அவன் வாழ மூன்றடி நிலம் தந்தால்
           அதுவே போதும் நலமாயிருக்க என்ற,
           வாமனனுக்கு அது அளிக்க வேண்டாம்
           வந்திருப்பவன் பெருமாள் , அவனுன்னை
           அழிப்பான் என்று அறிவுரை  வழங்கினார்
           குல குரு சுக்கிராச்சாரியார்.

சொன்ன சொல் தவறேன், திருமாலுக்கே என்
தானம் என்றால் எனக்கது பெருமை, என்
குலம் தழைக்கும் என்றே  கூறிய  மகாபலி,
தானம் தர, நீர் வார்த்துத் தர  தயாராக
கிண்டி நீரை எடுக்க, வண்டாக மாறி,
அதன் துவார மறைத்தார், சுக்கிராச்சாரி .

            கிண்டி அடைப்பை நீக்க, எல்லாம்
            அறிந்த மாலும் தருப்பையால்  அதன்
            துவாரம் குத்த ,கண்ணொன்று  குருடாகி
            அலறியடித்து வெளியே வந்தது வண்டு.

மூன்றடி நிலம் பெற,
வரம் பெற்ற வாமனன்
நெடிதுயர்ந்து  ஓரடியாய்
வான மளந்து ,மறு அடியாய்
பூமி அளந்து ,மூன்றாம் அடிக்குக்,
கால் எங்கே வைக்க என்று
மகாபலியிடம்  வினவினான்.

           கைகூப்பித் தலை வணங்கி
           சொன்ன சொல் தவற மாட்டேன்
           தங்கள் மூன்றாம் அடி  என் தலை மேல்
           வைக்க , யான் பெருமை கொள்வேன்
           என்று கூறிய பலிச்சக்கரவர்த்தி
           பாதாளம் ஆள வரம் ஈந்து அவன்
          தலை மேல் கால் வைத்தான் பெருமான்.
           =================================
   ( அங்கும் இங்கும் கேட்டதையும், படித்ததையும் பகிரும் வண்ணம் 
        அவதாரக் கதைகள் எழுதுகிறேன். எழுதும்போது யாராவது  ஏதாவது 
      கேட்டால் என்னால் பதில் கூற இயலாது. என்பதையும் உணர்ந்து 
       இருக்கிறேன். எனக்கே உள்ள சந்தேகம் :--ஜெயன், விஜயன் இருவரும், 
       இரணியாட்சகன், இரணியன் என்ற இரட்டைப் பிறவிகளாக, கச்சியப்ப 
       முனிவருக்குப  பிறந்தனர். இரணியகசிபுவின் மகன் பிரகலாதன் 
       பிரகலாதனின் பேரன் மகாபலி சக்கரவர்த்தி. வானவர்களின் தாயான 
       அதிதியின் கணவர் கச்சியப்ப முனிவர். இந்த அதிதியின் மகனாக 
       பிறந்தவர் வாமனர். சிந்தித்துப் பார்த்தால் தலைமுறை  சார்ந்த 
       உறவுகள் நெருடலாகத்  தெரிகிறது. 
       இதற்கு  விளக்கம்  கிடைத்தால் கடமை பட்டிருப்பேன். ) .          








 

வியாழன், 2 ஜூன், 2011

கவிச்சோலைக் கவிதைப் போட்டி.

கவிச்சோலைக் கவிதைப் போட்டி
-----------------------------------------------
          வலைப் பூ கவிச்சோலையில், நண்பர் எல். கே.
அவர்கள்  ஒரு கவிதைப் போட்டி அறிவித்திருக்கிறார்.
முத்தொள்ளாயிரத்து  பாடல்  ஒன்றை புதுக்கவிதை
வடிவில் எழுத வேண்டும். என் ஆத்ம திருப்திக்காக
எழுதுகிறேன்.
       
                          
                             பாடல்

                            -----------
வீறுசால்  மன்னர் விருதாம் வெண்குடையை
பாற்  எறிந்த பரிச்சயத்தால் -தேறாது
செங்கண்மாக  கோதை  சின வெங்களி  யானை
திங்கள் மேல் நீட்டுந்தன்  கை.

                 என் கவிதை.
                  ----------------

சேர மன்னன் வீர மறியாது,
வெற்றி கொள்ளும்  ஆவலில்,
செருக்கோடு  செருக்களம்  புகுந்த
வீரர்தம் தேர்க் குடைகளை
சென்றங்கு  செருமுனையில்  இழுத்து,
மிதித்துப் பழகிய  வெங்கரியின்  ஏறோன்று
 நீல வானில்  ஒளி வீசும்
முழு வெண்ணிலவை மாற்றானின் தேர்க்
குடை என்றெண்ணித தன துதிக்கை
கொண்டிழுக்க முயன்றது (  தாம். )  ,
========================================

            இது  சும்மா டமாசுக்கு.  எப்பூடி கீது.?
                                 ----------------------

      சேர  ராசாவ  சண்டைல  சுளுவா
      கெலிக்க  லாம்னு  தேரோட வர
      சிப்பாய்ங்க  தேர்மேல கீற கொடைங்கள
      சும்மா இசுத்து மெதிச்சு காலி பண்ணிப் பளகின
      சேரனோட  யானே ,வட்ட நெலாவப் பாத்து,
      தேர்க் கொடேன்னு நெனச்சு இசுக்க
      அதோட தும்பிக்கைய  நீட்டிச்சாம்.