Saturday, November 17, 2012

அமர காதலா...?.


                                     அமர காதலா......?.
                                     ----------------------


அவனுக்கு அவள்மேல் காதல்,
அவளுக்கு அவன்மேல் காதல்
காதலுக்குக் காரணம் என்ன.?
அழகு, அறிவு, படிப்பு, அந்தஸ்து.?
எல்லாவற்றுக்கும் மேம்பட்டது
எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது,
காதல் இருப்பது உண்மைதானா.?
அவனுக்கு வந்தது திடீர் சந்தேகம்.
உயிரினும் மேலான காதலுக்கு அவள்
உயிரையே தருவாளா. ? சோதித்துப்
பார்க்க அவன் துணிந்து விட்டான்.

அவன் இறந்தால் அவளும் அவன் பின் தொடர்வாளா.?
அவன் இறந்து அறிவது ஆகாதது..ஆனால் அறிந்து
கொள்ளவோஆவல் அதிகம். சிந்தனைச் சிற்பி,
சிந்தித்துப் பார்த்து வழி ஒன்று கண்டான் சோதித்துப் பார்க்க.

காதலின் பிரதிபிம்பமே அவர்கள்-இதை வெட்டென விளங்கச்
செய்ய அவர்கள் அமர காதலர்களாவது.. முடிவு தெரியாக்க்
காதலைவிட முடிவு தெரிந்த சாதல் சிறந்தது உண்மைக் காதல்
என்றால் இருவரும் சேர்ந்தே உயிர் விட்ல் வேண்டும்.
இல்லையெனில் ஒருவரை ஒருவர் மறக்க வேண்டும்.
என்னென்னவோ சொல்லிக் குழப்பினான் .கட்டிளங்குமரியவள்
குழம்பித் தெளிந்தாள்.ஒரு நாள் அவகாசம் கேட்டாள்.
இருவரும் சேர்ந்திருந்து மறு நாள் ஊர்ப்புறத்தே இருந்த
ரயில் தண்டவாளத்தில் கையுடன் கையும் மெய்யுடன் மெய்யும்
இணைந்து இருவரும் சேர்ந்தே தலை கொடுக்க முடிவாயிற்று.

அவனுக்குள் எழுந்ததோர் தர்ம சங்கடம். காதலை
சோதித்துப்பார்க்கத்தான் அவன் எண்ணினான்
கடைசி நிமிடம் இது ஒரு சோதனையே என்று கூறி
உயிர் பிழைப்பதுதான் இவன் திட்டம் . ஆனால்
அமர காதலைச் சாதலில்தான் நிரூபிக்க நேருமோ.
பார்ப்போம் என்னதான் நடக்கிறது என்று.

ஆண் பெண் ஒருவரை ஒருவர் நாடி ,கண்டு மகிழ்ந்து
அளவிலா அன்பு கொண்டு , மட்டற்ற காதல் ஊற்றாய் ஊறி
ஆறாய்ப் பெருக்கெடுத்து பின் சங்கமிப்பதே குடும்ப சாகரம்.
அதில் அமைதியும் இருக்கும் கொந்தளிப்பும் இருக்கும்
அனுபவித்து அறிவதே மனிதகுலக் கடமை. .அவள் அவனது
மனச் சுவற்றில் எழுதிய சித்திரமா இல்லை கடைத்தெரு
கத்தரிக்காயா. ? இவன் வருமுன் காப்பவனா வாழப் பயந்தவனா.
வரும்முன் காப்பது அழித்துக் கொள்வதில்தான் இருக்குமா.?
வாழப்பயந்தவனாகத்தானிருக்க வேண்டும். அணு அணுவாய் பயந்து
சாகும் கோழையுடன் வாழ்வதை விட ....அட வாழ்வாவது ஒன்றாவது.
அதைத்தான் முடித்துக் கொள்ளலாம் என்கிறானே.-மங்கையவள்
மருகினாள் மாய்ந்து மாய்ந்து உருகினாள்.  

 இந்த குரங்கு மனம்தான் வாளாயிருப்பதில்லை. பழைய சம்பவக் கிளைகளில் தொத்திக் கொள்கிறதே. அன்றொரு நாள் .முழு நிலா இரவு..அவனும் அவளும் உல்லாச சல்லாபங்களில் ஈடுபட்டிருக்க, அவன் அவளிடம் , பொற்சரிகை விளிம்பு  கோர்த்து, மிளிரும் நிலப் பட்டாடைஉடுத்து,பல வண்ண முழுமணிகள் அழுத்தி முற்றிய நல்லணிகலன் பல அணிந்து,நறு மணங்கமழும் கூந்தலுடன்,உறுப்புத் திருத்தி ஒய்யாரங்காட்டி,உவகை பொருத்தி உரிய அன்பின் சில்லுரை இன்புற மொழிந்து,ஒரு ஆண்மகனை வயப் படுத்தும் நங்கையினும், இயற்கை நலம் பெற்றாள்,கருகி நீண்ட விரிகுழற் கற்றையுடையாள் மொய்க்கும் வண்டென விரைந்தாடும் விழியுடையாள், கொவ்வைப் ப்ழத்தைப் பழிக்கும் செவ்விய இதழாள்,கடைந்துருட்டியதன்ன பச்சிளந்தோளுடன்,பூங்கொம்பின் ஒசிவுடையள்,கிள்ளை மொழியாள் மயிலென உலவி, அவள்மேல் முதிர்ந்த அன்பு கொண்ட அவனுடன்,ஒருமித்து உள்ளம் உருகி,அவனை அவள் வயப் படுத்தும் மங்கை நல்லாள் அவளே சிறந்தவள் என்றபோது,மெய் மறந்த அவள் அவன் மேல் சாய அவன் இரு கைகளாலும் இருகி அணைத்து..........வெட்கத்தால் நினைக்கவே முடியவில்லை. .நினைத்து மகிழாமல் இருக்கவும் முடியவில்லை.


ஆனால் ஆதிகண்ட அந்தமறியாத இல்வாழ்வில் அவனுக்கு நாட்டமில்லையே. அவனை அவள் மனமுவந்து நேசிக்கும் பட்சத்தில் அவனுடைய விருப்பத்தை நிறை வேற்றியே ஆகவேண்டும்.

ஒரு நாள் அவகாசம் கேட்டவள் என்னதான் திட்டம் வைத்திருக்கிறாளோ தெரியவில்லையே. உடலின்பத்தில் நாட்டமேற்படுத்தி  திசை திருப்ப முனைவாளோ. அதற்கெல்லாம் இடங்கொடுக்கக் கூடாது. உயிர் விடத் துணிந்தவளுக்கு சோதனையில் வெற்றி பெறுபவளுக்கு வாழ்நாளெல்லாம் இன்பம் தரலாமே. சோதனைதான் என்று தெளிவிக்க இன்னும் சில மணித் துளிகளே உள்ளன. அதோ அவளும் வருகிறாள். ஊருக்கு வெளியே ஒன்றாய் போக வேண்டும் கடைசி நொடியில் தெரிவித்தால் வாழ்வில் பற்று இன்னும் கூடக் கூடும்.

மனதில் தோன்றும் உணர்ச்சிகளை மனதின் அடித்தளத்தில் அழுத்திப் புதைத்தால் அவ்வுணர்ச்சிகள் வடி வதங்கி இறந்து விடுகின்றன. உணர்ச்சிகளுக்கு அதனால் ஏற்படும் எண்ணங்களுக்கு வார்த்தைகளால் உயிர் கொடுத்து தெளிவிக்காவிட்டால் உணர்ச்சிகளின் உண்மைத்தன்மை மறைந்து எதிர்பாராத விபரீதங்கள் விளையலாம்.

ஊரின் வெளிப்புறப் பிரதேசம். அமைதியைக் கிழித்துக் கொண்டு தூரத்தில் புகை வண்டி அசுர வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு வினாடிகளில் தண்ட வாளத்தை அடையலாம் அருகில் புஸ்ஸென்ற சப்தம் கேட்டு அவனும் அவளும் திடுக்கிட்டனர். சாகும் தருவாயிலும் ஏனோ அந்த பயம். அவனுக்கு திக் திக்கென்று அடித்துக் கொண்டது. அவள் சமாளித்துக் கொள்கிறாள். .பிறகு என்னதான் தோன்றியதோ சீறிவரும் பாம்பிடம் கை கொடுக்கிறாள். அதற்கென்ன. .?கொட்டிவிட்டு ஆத்திரம் தீரச் சென்றுவிட்டது. அவன் அலறுகிறான்,புரளுகிறான்,பிதற்றுகிறான்.புலம்புகிறான். அவள் அவனது விருப்பத்தை நிறைவேற்றி விட்டாள். விபரீதம் விளைந்து விட்டது.!
( பல ஆண்டுகளுக்கு முன் ,1950-களின் கடைசி வருடங்களில்   சிறுகதை எனக் கிறுக்கி வைத்தது அதிகம்.எடிட் ஏதும் செய்யாமல் பதிவிடுகிறேன்..எழுத்தில் நடையில் வித்தியாசம் தெரிகிறதா.?)
-------------------------------------------------------------------------
 .        






  






4 comments:

  1. விபரீதம் 'திக்' என்று இருந்தது...

    மனித பாம்பிற்கு நல்ல தண்டனை...

    ReplyDelete
  2. அமர காதலைச் சாதலில்தான் நிரூபிக்க நேருமோ.

    எழுத்துநடை வித்தியாசம் ரசிக்கவைத்தது..

    ReplyDelete
  3. ஏனோ அந்த பயம். அவனுக்கு திக் திக்கென்று அடித்துக் கொண்டது. அவள் சமாளித்துக் கொள்கிறாள். .பிறகு என்னதான் தோன்றியதோ சீறிவரும் பாம்பிடம் கை கொடுக்கிறாள். அதற்கென்ன. .?கொட்டிவிட்டு ஆத்திரம் தீரச் சென்றுவிட்டது.

    கடைசியில் இப்படிதான் நிகழும் என்று எதிர்பார்க்கவில்லை. என்ன கொடுமை சார் இது, இப்படிலாமா சோதித்து பார்ப்பார்கள்.

    அருமை அந்த வயதிலேயே உங்களுக்கு இப்படி எழுதத்தூண்டியதற்கு என்ன காரணாமாக இருக்குமோ? :-)))))))))))))

    சும்மாதான் கேட்டேன்.

    ReplyDelete

  4. @ திண்டுக்கல் தனபாலன்
    @ இராஜராஜேஸ்வரி
    @ செம்மலை ஆகாஷ்
    வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி. அம்பிகாபதி அமராவதி, லைலா மஜ்னு
    ஆகியோர் காதலில் வெற்றி கொள்ள முடியாமல் அமரர் ஆனார்கள். அமரர்கள் ஆனதால்தான் அந்தக் காதல் இன்னும் பேசப் படுகிறது. இந்த சிந்தனையில் அமரத்துவம் பெறத்தக்க காதலா என நம் கதாநாயகன் சோதனை செய்ய விரும்பினான் . இதெல்லாம் அந்தக் காலத்திய கற்பனை. ஒரு மாற்றத்துக்காக பதிவிட்டேன். மீண்டும் நன்றி.

    ReplyDelete