எண்ணத்தறி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எண்ணத்தறி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

எண்ண எண்ண..................


                                              எண்ண எண்ண ......
                                              -----------------------
 நான் 1960 களின்  முன்பாதியில் பெங்களூரில் இருந்த ஹிந்துஸ்தான்  ஏர்க்ராஃப்ட்  தொழிற்சாலையில் பயிற்சி முடிந்து பணியில் இருந்தேன் எட்டுமணிநேர வேளையில் மனம் சும்மா இருக்குமா. அது ஒரு குரங்காயிற்றே  பல்வேறு திசைகளில் எண்ணங்கள் ஓடும் அவற்றை அப்போது RANDOM THOUGHTS IN EIGHT HOURS  என்று எழுதி வைத்திருந்தேன் தமிழில்  மொழி  மாற்றம்  செய்து  எழுதியது.ஆங்கிலப்பதிவுக்கு  இங்கே சொடுக்கவும் ( 1)  ( 2 )

             மனித இயந்திரங்களை இயங்க வைக்கும் ஆலைச் சங்கு ஊதுகிறது. ஒ...! சங்கோசையால்  கட்டுப்படுத்தப்படும் வாழ்க்கையும்  ஒன்றா.? விரக்தி ஏற்படுவதால்  என்ன பயன். .?வேலையைத் துவங்க வேண்டியதுதான்....நடக்கட்டும்.  மெஷினை   ஆன் செய். கருவிகளை  சுத்தம்  செய். திருத்தப்பட  வேண்டிய  பாகம்  மெஷினில்   பொருத்தப்படட்டும். ஹூம்..!  " ட்ரேசர் "  ஊடுருவும்  வழியில் பாகமும்   கடையப்படும் .

            மாற்றங்கள் இல்லாத, கட்டாயப்  படுத்தப்படும்  சங்கோசையால் கட்டுப்படுத்தப்படும் , இயந்திர வாழ்க்கை. அப்படி இல்லையென்றால் யாருமே வேலை  செய்ய மாட்டார்கள். காலையில் "பஞ்ச" செய்வதற்கு ஓடிவரும் ஆட்களைப் பார்க்கிறாய். அந்தக் கட்டாயமும் கட்டுப்பாடும் இல்லையென்றால் நேரத்துக்கு வேலைக்கு வருவார்களா.?"பஞ்ச்" செய்ய வேண்டாத சூப்பர்வைசர்களும்   அதிகாரிகளும் எத்தனை முறை எவ்வளவு நிதானமாக வருகிறார்கள். நீள்பாதை  போட வேண்டியவர்களே  கிட்டப்  பார்வையினராகிறார்கள் . போதாக்குறைக்கு  "டிசிப்ளின்"  பற்றி  எல்லோரும் பாடம்  நடத்துகிறார்கள்
            மெஷினில் வேகம் கூடுதலாக உள்ளது. சரிசெய். ஹூம் ! என்ன நினைத்துக் கொண்டிருந்தாய். டிசிப்ளின், ஒழுங்கீனம் அல்லது கட்டுப்பாடின்மை இதற்கு என்ன காரணம். ஒன்று தோன்றுகிறது. வேலைக்கு மூன்று நிலைகளில் ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.தொழிலாளி, மேற்பார்வையாளர், அதிகாரி.-- இவர்களெல்லாம் எப்படிப் பட்டவர்கள் .கிட்டத்தட்ட ஒரே நிலையில்  இருப்பவர்கள். மொழி, இனம், கலாச்சாரம், பின்னணி, வயசு  போன்றவற்றில்  மெத்த  மாறுதல்  இல்லாதவர்கள்.  வித்தியாசம்தான்  என்ன.? சிலபல  ஆண்டு  படிப்பறிவு. .-- இது  எவ்வளவு  பெரிய  மாற்றத்தை  ஏற்படுத்துகிறது.  புத்திசாலியான, சூட்டிகையான
கடினமாக  உழைக்கும்   இளைஞர்கள்  கீழ்  மட்டத்தில்  நிறைந்த  அளவிலும், .- எல்லா விதத்திலும்   சாதாரணமான  அல்லது  அதற்குச்  சற்றே  குறைவான, ஆனால்  கொடுத்து  வைத்த  இளைஞர்கள் உயர்  மட்டத்தில் நிறைந்த  அளவிலும் .-- இரண்டு   குழுவிலும்  அனுபவம்  இல்லாத, சூடான  இரத்தமுள்ள, மன  முதிர்ச்சியடையாத   இளைஞர்கள் .  இங்கு ஒழுக்கமும்  கட்டுப்பாடும்  எப்படி  காயப்படுத்தப்  படுகிறது.? தொழிலாளிக்கு  உள்ள  பிரச்சனைக்குத்  தீர்வு  கொடுக்க  வேண்டியது  மேற்பார்வை  யாளரின்  கடமை. அவருக்கு  ஏற்படும் தொல்லைகளுக்கு  தீர்வு  காண்பது  அதிகாரிகளின்   கடமை . ஆனால்  தொழிற்சாலைகளில்  மூன்றாண்டு , ஐந்தாண்டு  தொழிற்கல்வி  பட்டப்படிப்பு  வெறும்  ஏட்டுச்சுரைகக்காயதானே.?.
பிரச்சனைக்குத் தீர்வு காணும் அனுபவம் எங்கே அனுபவம்  ஏற்படும்  முன்னே உயர் பதவி --படிப்பின்  அடிப்படையில் அமர்த்தப் படுகிறார்களே. வேண்டுமானால்  பிரச்சினையை  எடுத்துச்  சொல்லும்  முறையில்  மாறுதல்  இருக்கலாம். தொழிலாளி  தமிழில்  சொன்னால்   அதிகாரி  ஆங்கிலத்தில்  சொல்லுவார். கீழ்மட்டத்  தொழிலாளிகளால்  சொல்லப்படும்  பிரச்சினைகள்  அநேகமாக  தொழில்  ரீதியில்  தீர்க்கப்  படாமலேயே  இருக்கும் . தேவைகள்   மாற்றி  அமைத்துக்  கொள்ளப்படும் . காம்ப்ரமைஸ்  செய்யப்படும் .தொழிலாளிக்கு  இது  புரிந்தாலும்  காட்டிக்கொள்ள  மாட்டான். அவனுக்கு  மேலதிகாரிகளின்  தயவு தேவை..தாமதமாக  வர, சீக்கிரம்  போக, ஓவர்டைம்   வேலை  கிடைக்க..- சலுகைகள் தேவை. தனிப்பட்ட  முறையில் அதிகாரிகளும்  ஆட்களை  இந்தச சில்லரைப் பிச்சைகள்  மூலம்  அடக்கி  வைக்கின்றனர். அதிகாரிகளிடம்  மதிப்பு, மரியாதை, விசுவாசம்  தேய்கிறது. அதிகாரி,  குறி, இலக்கு இவற்றுக்கு  கொண்டு  செல்பவனாக  இல்லாமல்  உத்தரவு  பிறப்பிப்பவனாக  இருக்கிறான். எங்கிருந்து  ஒழுங்கு  வரும், எங்கிருந்து  கட்டுப்பாடு  வரும் . மேலிருப்பவன்  முன்  மாதிரியாக  இருக்கவேண்டும். எல்லோரும்  ஏனோதானோ  என்று  இருக்கிறோமே  தவிர, கட்டுக்கோப்பாக  சரியான  முறையில்  சிந்தித்து  செயல்படுவதில்லை.

          இவையெல்லாம்  விவாதத்துக்கு  உட்பட்டவையாக  இருக்கலாம். சில  நேரங்களில்  விவாதங்களினால்  நல்ல  தீர்வுகள்  கிடைக்கிறதோ  இல்லையோ , ஆற்றாமையை  வெளிப்படுத்திய  திருப்தியாவது  கிடைக்கும். இன்னுமொரு எண்ணம்.பதவி உயர்வு...! எங்கிருந்துதான்
 இவர்களுக்கு   இப்படி ஒரு கொள்கை கிடைத்ததோ.  இன்ன பதவியில்   இவ்வளவு  வருடங்கள்  கழித்தால்  பதவி உயர்வு. அதுவும்  எப்படி?.
உயர்  மட்டத்தில்  மூன்று  நான்கு  ஆண்டுகளில்  பதவி உயர்வும்  ஒரு தொழிலாளிக்கு  எட்டு  பத்து  ஆண்டுகளுக்குப் பிறகுமாம்  ஒரு தொழிலாளி  வேலை செய்து  குறைந்தது  நான்கு ஐந்து  பதவிகள்  பெற  முடிந்தால்தான்  ஒரு மேற்பார்வையாளராக   வர முடியும்.. இதற்குள்  அவன் தலை  நரைத்து, பல்  போய் படு கிழவனாகி  விடுவான். இதற்கெல்லாம்  அடிப்படை  காரணம்  என்ன. ? மூன்று, ஐந்து  ஆண்டுகள்  படிப்பா.? என்ன இது. ? என்னதான்  வேலை செய்தாலும்  முன்னேற  முடியாத  முட்டுக்கட்டை.

             மெஷினில்   பொருத்தப்பட்ட   பாகம் முடிவடைந்து விட்டது.  அதை   எடுத்து   கருவிகளை   சுத்தம் செய். இன்னுமொரு  திருத்தப்பட  வேண்டிய   பாகம்   பொருத்தப்  படட்டும். " ட்ரேசர்"  ஊடுருவட்டும். கவனமாகப்   பார்த்துக்கொள்.  கொஞ்சம் இரு.  ஒரு  சிகரெட் புகைத்து  விட்டு  வரலாம்.  யாராவது   நண்பன்  கிடைப்பான். எவ்வளவோ   சங்கதிகளை   விவாதிக்கலாம்

             கோவிலில் சிலைகளை கும்பிடுவது  பற்றி என்ன   எண்ணுகிறாய்.. விசேஷமாக   எதுவுமில்லை.  இது  விவாதிக்கக் கூடிய  விஷயமல்ல.  முடிவு  ஏற்பட  முடியாத  விவாதங்களும்   பிரயோசனமில்லை. ஆனால் தனிப்பட்ட  முறையில்   சிலைகள் வணங்கப்  படுவது  குறித்து  எனக்கு ஆட்சேபணை இல்லை . வணங்குதல்  அல்லது  தொழுதல்  அல்லது   வேண்டுதல்  என்றால்  என்ன.? யார்  யாரை  வேண்டுகிறார்கள்.? சுலபமானது. கோவிலில்  வேண்டுபவன்  அவன் ஆத்மா  விடுதலைக்காகவும்,  மன நிம்மதிக்காகவும்  தொழுகிறான். அவன் ஆத்ம  விடுதலை   யார் செய்ய  முடியும்.? அவனேதான். அவன் அவனைத்தான் அவன் விடுதலைக்காக   வணங்க  வேண்டும் .! குதர்க்கமாகத்  தோன்றலாம். ஆனால் அதுதான்   வேதங்களும்   ஞானிகளும்  கூறுவதாகத்  தோன்றுகிறது. ஒரு சிலையோ  படமோ  ஒருவனின்  பிரதிபலிப்பைத்தான் தோற்றுகிறது. உண்மையில்  ஒரு பூவோ பழமோ    நிவேதனமாக   வைத்து   ஆராதிக்கையில்   வேண்டுபவனும் வேண்டப்படுபவனும்  ஒரே  நிலையில் நிறுத்தப்படுகிறார்கள். சிலையோ படமோ தன் உள்ளத்தின்  மெல்லிய திரையிடப்பட்ட பிரதிபலிப்பேயாகும் . அந்நிலையில்  எண்ணத்தின்  வாயிலாக  அகமும் புறமும்  ஒன்றோடோன்று  கலந்து  தேடுபவனும்  தேடப்படுபவனும்  ஒன்றாகிறது. இந்நிலையில்  ஒரு  கண்ணாடி  முன் அமர்ந்து , " நீதான்  அது, " என்று   தன பிரதிபிம்பத்தைப்  பார்த்து  சொல்லமுடிந்தால் , படம் ,சிலை , பிம்பம்  எல்லாம்   ஒன்றுதான்.. ஒ...! இதெல்லாம்  சற்று  கூடுதலோ. .நமக்கு  ஒத்து  வராது. சிலையை   வணங்குபவர்  வணங்கட்டும்.  மற்றவர்  வேண்டாம்.
            சிகரெட்   புகைப்பதில் நேரம் செலவாகி  விட்டது. வேலை தொடரவேண்டும். இரண்டாவது   பாகம் முடிந்ததா..? இன்று செய்து முடிக்க  வேண்டியது  ஏழு  பாகங்களா. ? முடிக்கலாம்.

            ஏன் சிகரெட் புகைக்கிறாய். ? உன்னையே  தெரிந்தவன்  படித்தவன்  பகுத்தறிவு   உள்ளவன்  என்று பீற்றிக்கொள்பவன் உடலுக்குக்  கெடுதல்  என்று   தெரிந்தும்  ஏன்   புகைக்கிறாய்.? புகைத்துச்  சாகிறாய்.?  புகை பிடிப்பவர்கள்  அனைவரும்  அதனால்  சாகிறார்களா.? ஆனாலும்  ஏன் புகைக்கிறாய் ? பழக்கத்துக்கு   அடிமை  ஆகிவிட்டாயா.? இல்லை.. ஏதோ  ஒரு சிறிய  இன்பம். நரம்புகளை கிளுகிளுக்கச் செய்து புத்துணர்வு  ஊட்டுகிறது. என்றைக்கானாலும் சாகத்தானே வேண்டும். இந்த சில்லறை   இன்பங்களையாவது   அனுபவிக்கக்கூடாதா.? ஒ.... எவ்வளவு   விந்தையான அடி முட்டாள்தனமான   எண்ணங்கள்.  உன்னை எப்படித்  திருத்துவது.  உன்னை நம்பி  எத்தனை  பேர்  இருக்கிறார்கள். நீ  ஒரேயடியாக   சாகாமல் நொடி நொடியாகச் செத்தால்  யார்  அவதிப்படப்  போவது..? உனக்கு  மன  உறுதியில்லை. வெறும்  பேச்சுத்தான்.  கட்டுப்பாடு  கிடையாது. உன்னை  நீயே  ஏமாற்றிக் கொள்கிறாய். இல்லை.  என்னால்  புகை  பிடிப்பதை  நிறுத்த முடியும். இது  சவால்.! பார்க்கலாம்.
             மெஷினில்  பொருத்தப்பட்ட  பாகம் முடிந்ததா, சரியாகப் போகிறதா என்று   பார்ப்பதுதான்  வேலை. எல்லாம்  இயந்திரத்தனமானது. வாழ்க்கையே   மாற்றமில்லாத   இயந்திர கதியில் ஓடுகிறது. இல்லை. ..வாழ்க்கை இயந்திரமானது   அல்ல.  அப்படி  ஒரு எண்ணம்  ஏற்பட சூழ்நிலையும்   அணுகுமுறையும்தான்   காரணம். வேலை  செய்பவன்  மாற்றமில்லை  என்று  ஏங்குகிறான். இல்லாதவன் வேலையே  இல்லை  என்று மறுகுகிறான். " கும்பி கூழுக்கு  அழுகிறது, குடுமி  பூவுக்கு   அழுகிறது."  பொருத்திய  பாகம்  முடிந்தது. மாற்று.

             பஞ்சசீலம்  பாண்டுங்  மாநாட்டில்  பிரஸ்தாபிக்கப்பட்டது  என்பார்கள். இங்குள்ள  பஞ்சசீலம்  என்ன தெரியுமா.. காலையில்  பஞ்ச இன் ,காபி  இடைவேளை, உணவு  இடைவேளை, தேநீர்  இடைவேளை, மாலையில்  பஞ்ச அவுட். இந்த முக்கியமான  ஐந்து குணங்கள் வழிமுறைகளாக   அப்பழுக்கற்று   கடை பிடிக்கப்படுகிறது. 

             இதோ வருகிறார் குட்டி  அதிகாரி. ஏதாவது   கேட்பாரோ. ...இல்லை. .அவருக்கு  வேண்டியது  ஒரு வணக்கம். அதுவும்  கூழைக்  கும்பிடாக  இருநதால்  இன்னும்  நல்லது.  இவர் அதற்குத்  தகுதி  உள்ளவரா.? மரியாதையும்  மதிப்பும்  கடைப்பொருளா   வாங்குவதற்கு. ? கொடுத்துப்  பெற  வேண்டியது  அல்லவா..?  மேலதிகாரி  என்ற  ஒரே  தகுதி  போறுமா. ? அடடா.. .. நீ கேள்வி  கேட்காத  இடமே  இல்லையா.? அவருக்கு  வேண்டிய  வணக்கத்தைக்  கொடுத்து  ஆளை  விடுவாயா.. அதில்லாமல்... .. மேலதிகாரிகள்  என்று  சொல்லும்போது  எத்தனை பேர். எத்தனை  வகை   இவர்களுக்கெல்லாம்  உண்மையிலேயே  என்ன  வேலை.. உற்பத்தி  ஏன்      பெருகவில்லை  என்று எல்லோரும்  கேட்கிறார்களே  தவிர  உண்மையான  காரண   காரியங்களை  ஆராய்ச்சி  செய்து  மாற்று  நடவடிக்கைகள்  எடுப்பதில்லை. எந்த   நேரத்திலும்  அவர்களைத்  தவிர   மற்றவர்கள்தான்  தவறுகளுக்குப்  பொறுப்பு.

            உண்மையிலேயே   உற்பத்தி  ஏன்  பெருகவில்லை.. அதிகாரிகள்   கூறும்   காரணங்கள் பணமுடக்கம், கச்சாப் பொருட்கள்  இல்லாமை,  ஊழியர்களிடம்   ஒழுங்கின்மை  இத்தியாதி   இத்தியாதி . ஆனால்  நடைமுறையில்  நாம்  பார்ப்பது  ஒரு  வருடத்தில்  ஐம்பது  சதவீதத்துக்கும்  மேல் கடைசி  இரண்டு  மூன்று  மாதங்களில்தான்   உற்பத்தியாகிறது. கடைசி  இரண்டு  மூன்று  மாதங்களில் மட்டும் மூலதனமும்,  கச்சாப்பொருள்   தட்டுப்பாடும்   ஊழியர்களின்   ஒழுங்கீனமும்   மாயமாய்   மறைகிறதா.
யார் காதில்  பூசசூடுகிறார்கள் ? இந்த அவசர  அடிவேலையில்  பாதிக்கப்  படுவது   உற்பத்திப்  பொருளின்  முக்கிய  அம்சமான  தரமல்லவா

             இந்த நிலையில் நாம் பீற்றிக்கொள்வதில்  மட்டும் எந்தக் குறையும்  இல்லை.  தொழில் நுட்ப தேர்வு  பெற்ற, உயர் கல்வி  பயின்ற  வல்லுனர்களை  மூலாதாரமாக   உபயோகித்து  முன்னேறுகிறோம்  என்று முழங்குகிறோம். ஆனால் நாம்  காணும்  தொழில் நிலையும் ஒழுக்க  நிலையும்,  உற்பத்தி   நிலையும் நமக்குச்  சொல்லும்  செய்தியே  வித்தியாசமாக  அல்லவா  இருக்கிறது.  இங்கு  வெடிக்கும்  உண்மைதான்  எது. ? ஆராயலாமா.?

              எங்குதான்  பிரச்சினை. ?  அரசாங்க  நிலையிலா,  நிர்வாக நிலையிலா,  ஊழியர்கள் நிலையிலா, .?யார்தான்  இதற்குப்  பொறுப்பு.?  எங்குதான்  பாட்டில்நேக்
(BOTTLE  NECK ).? ஆம். . கேள்வியிலேயே   பதில் தெரிவதுபோல்  தோன்றுகிறதே. .சீசாவின்   கழுத்து  மேல்   பாகத்தில்தானே.. . புரிந்ததா..?  விவாதிக்கலாமா..?

              இதுவரை நான் என்ன செய்தேன்  என்று கேள்வி கேட்கிறார்   என்  மேற்பார்வையாளர . எண்ணிப்  பார்க்கிறேன் . ஏழு  செய்ய  வேண்டிய  இடத்தில்  எட்டு.  ஷொட்டு கொடுப்பாரா. ? ஊஹூம் ..! வீண்  எதிர்பார்ப்பு.. அனைவரையும்  இயக்கும்  ஆலைச் சங்கு  இனிமையாக  ஒலிக்கிறது.  ஆஹா .. வீடு  நோக்கி  ஓடு