நினைவலைகள் தடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவலைகள் தடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 டிசம்பர், 2017

மறதியா நோயா


                         மறதியா நோயா
                        ------------------------------

 நண்பனின்  மகன்  திருமணத்துக்குச் சென்றிருந்தோம்  அங்கே ஒருவர் அங்கும்  இங்குமாக நடந்து கொண்டிருந்தார் முகத்தில் ஒரு சிநேக பாவமான புன் சிரிப்பு. என்  நண்பனிடம் என்னை யார் என்று கேட்டார் என்னைத் தன்நண்பன் என்று அறிமுகப்படுத்திய நண்பன்  மெல்ல அவரிடம் பேசி அழைத்துச் சென்று விட்டான்   சிறிது நெரத்தில் மீண்டும்  அந்தப் பெரியவர் என்  நண்பனிடம் என்னைப்பற்றிக் கேட்டார் மீண்டும்  அறிமுகம் செய்து வைத்தான்  அதே சிரிப்புடன் அவரும் சென்று விட்டார்   நண்பனிடம்  கேட்டேன்  அவரது மாமனார் என்று தெரிவித்தான். சற்று நேரத்தில் அந்தமனிதர் மீண்டும் வந்தார் வரும்போது தனது வேட்டி அவிழ்ந்து    இருப்பதும்  தெரியாமல் அதே சிரிப்புடன் வந்தவர் வேட்டி தடுக்கிக் கீழே விழுந்து விட்டார் விழுந்ததில் கொஞ்சம் காயம் ஏற்பட்டது  அதைச்  சட்டை செய்யாமல் சிரித்து வந்தவரை ஆசுவாசப் படுத்தி நான் பேச்சுக் கொடுத்தேன்  அவர் அந்த வீட்டைக் காண்பித்து அது அவர் கட்டியது என்றும்  அதன் பெயர் ----------என்றும் சரியாகக் கூறினார்  என்  நண்பன்  அவருக்கு டெமென்ஷியா நோய் என்றும்  அதன்  அறிகுறிகளே அவர் செயல்களில் என்றும்  கூறினான் 

வட இந்தியப் பயணமாக நான் என்மனைவி அண்ணா   அண்ணியுடன்  காசி ஹரித்வார் எல்லாம் சென்றிருந்தோம் ஹரித்வாரில் மாலை கங்கா ஆரத்தி நடக்கும்  நல்ல கூட்டம்  கங்கா மாதாவின் கோவில் சிறியது தரிசனம் செய்ய நன்  என் மனைவி முதலில் சென்றோம்  மற்ற இருவரும்  செருப்புகளுக்குக் காவலாக ஒருஇடத்தில் இருந்தனர்  நாங்கள் தரிசனம் முடித்து வந்தபின்  அண்ணா அண்ணி சென்றனர்  கூட்டத்தில் அண்ணா தனியே அண்ணி தனியே என்று பிரிந்துவிட்டனர்  முதலில் அண்ணா வந்தார்  சிறிது நேரம் கழிந்தும் அண்ணி வரவில்லை இடம்தெரியாமல் எங்கோ தேடுகிறாரோ என்று நினைத்தோம்   இன்னும் சிறிது நேரம்கழிந்தும்வராததால் அவரைத் தேடி  நானும் அண்ணவும் சென்றோம்  சிறிது தேடலுக்குப்பின்  கொஞ்ச தூரத்தில் அண்ணி தனியே எங்கோ சென்று கொண்டிருப்பதைப் பார்த்து அவரை அழைத்து வந்தோம் 
ஹரித்துவாரில் ஒரு ஹோட்டலில் உணவு அருந்தி அறைக்குத் திரும்பினோம்   அப்போதுதான் அண்ணா அவருடைய பர்ஸ் மற்று அறைச்சாவியை ஒரு டெலெபோன் பூத்தில் அண்ணி வைத்ததை நினைவு கூர்ந்தார்  மறுபடியுமந்த பூத்துக்குச் சென்றால் நல்ல வேளை வைத்த பொருட்கள் கிடைத்தன அண்ணா அண்ணியிடம்கோபித்துக் கொண்டார்  அண்ணி அண்ணாவிடம் கோபித்துக் கொண்டார் பிறகு அவரவர் அறைக்குச் சென்றோம்  சிறி து நேரத்தில் அண்ணி வந்து கால் செருப்பை எங்கள் அறையில்விட்டு விட்டதாக கூறினார்  அங்கிருக்கவில்லை  அவர்களது அறையிலேயே இருந்தது( இந்த நோயினால் பீடிக்கப்பட்டு  மருத்துவம் ஏதும் குணமளிக்காமல்  இரண்டு ஆண்டுகள் படுக்கையில் இருந்து என் அண்ணி உயிர் நீத்தார்)  

 சில நேரங்களில்  நாம்  எதையோ செய்ய நினைத்து அதைச் செய்யாமல் மறந்து போகும்  சந்தர்[ப்ப்பங்களும்  உண்டு அதை நான் ஒரு பதிவாக எழுதி இருந்தேன்
  என் சிறு தோட்டம் நீரின்றி காய்கிறது
பூவாளியில் நீரை ஏற்றி இரைக்கப்
போகும்போது அழுக்கடைந்த கார் காண 
அதை முதலில் கழுவலாம் என்று தோன்ற 
அருகில் செல்லும் போது தென் படுகிறது
வீட்டின் முன் மாட்டியிருக்கும் தபால் பெட்டி.
காரைக் கழுவும் முன் தபாலை எடுத்துப்  
ஹாலில் மேசை மேல் கார் சாவியை வைத்து
ஃப்ரிட்ஜிலிருந்து ஃபான்டா பாட்டிலைத் திறந்து
ஒரு வாய் அருந்தி அதை அருகில் வைத்து
கடிதங்களைப் பிரித்துப் பார்க்க அவை 
குப்பைத் கூடையில் போக வேண்டியது என்று 
அதைப் பார்க்க அதுவும் நிரம்பி இருக்க அதைக் 
காலி செய்து குப்பைத் தொட்டியில் போட 
வெளியே போக வேண்டும் போகிறபோதே 
அருகில் இருக்கும் கியோஸ்கில் மின் கட்டண்ம்
செலுத்தினால் ஒரு வேலை முடியும். அதற்கு முன்
அட்டைப் படத்தில் கவர்ச்சியுடன் சிரிக்கும் அழகியைத் 
தாங்கி வந்திருக்கும் வாராந்திரி கண்ணில் பட அதை 
எடுத்துப் படிக்கக் கண்ணாடி தேவை அதை வைத்த
இடம் மறந்து தேட மேசை அறையில் கார் சாவி கண்டதும் 
காரைக் கழுவ நினைத்ததும் நினைவுக்கு வர 
அங்கே போனால் பூவாளி நீரும் குப்பைக் கூடையும் 
என் முன்னே இளிக்க ஆயாசத்துடன் ஃபாண்டா பருக்
எண்ணி எடுத்தால் அதுவும் குளிர் விட்டுப் போய் ச்சே!
எந்தவேலையும் திட்டமிட்டபடி நடப்பதில்லையே 
என நான் சிந்திக்கும் போது மனசு குரல் கொடுக்கிறது
டேய்.! உனக்கு இருப்பது AAADD யின் அறிகுறிகள்
( AAADD  என்றால் AGE ACTIVATED ATTENTION DEFICIT  DISORDER.)

இந்த AAADDக்கும்  மேலே குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கும் வித்தியாசமுண்டு  வயது காரணமாக வரும் பிரச்சனைகளே இவை  முதலில் கூறியவை டெமென்ஷியா அல்லது அல்ஜிமெர்  என்னும்  நோயின்  அறி குறிகள்  பின்னது ஏறத்தாழ வயதானோர் எல்லோருக்கும் நிகழ்வது டெமென்ஷியா அல்லது மறதிஒருநோயாகப் பரிமளிப்பது முதலில் சொன்ன நிகழ்வுகளில் அண்மைய கால நிகழ்வுகள் மறந்து போகும்  நோய் முற்றும் போது தனித்தியங்க இயலாது பிறரது கவனிப்பு மிக அவசியம்  நான்  காரணகாரியங்களைப் பற்றி அலசப்போவதில்லை   ஆனால் நோய் வாய்ப்பட்டவர்கள் மிகவும்  அனுதாபத்தோடு அணுகப் பட வேண்டியவர்கள்
  
 டெமென்ஷியா மூளையின் செயல்பாட்டின் குறைவால் ஏற்படும்
மனநோய். அல்ஜீமர் நோய் அவற்றில் ஒன்று. அது நாள்பட நாள்
பட தீவிரமடையக் கூடியது. நியூரான்ஸ் எனும் நரம்பு செல்கள்
அழியும்போது நரம்பு மண்டலத்துக்குசெய்திகள் அனுப்பும்
ரசாயனக் குறைவால் மூளையும் நரம்பு மண்டலமும் ஒன்றாக
இணைந்து செயல்படுவது குறைகிறது. இதுவே இந்நோய்க்கான
காரணமாக இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.

ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது அல்ஜீமர் நோயால்தானா, இல்லை
இந்தமாதிரி நிகழ்வுகள் மூளையில் ஏற்படும் பழுதால்,அல்லது
கட்டி போன்றவற்றால் ஏற்படுகிறதா என்று முதலில் சோதித்துத்
தெரிந்துகொள்கிறார்கள். அல்ஜீமர் நோய்க்கு இதுவரை மருந்து
கண்டு பிடிக்கப் படவில்லை. நோயின் தீவிரத் தன்மையை தள்ளிப்
போட மருந்து மாத்திரைகள் கொடுக்கிறார்கள். இந்த நோயால்
பாதிக்கப் படுபவரைவிட ,அடுத்துள்ளவர்க்குத்தான் கஷ்டங்கள்
கூடும். வயதான காலத்தில் புரிதலும் அனுசரணையுமே முக்கிய
தேவை.

ஏற்கெனவே இந்த காலத்தில் வயதானவர்களைப் பராமரிப்பது
கஷ்டமான காரியமாகக் கருதப் படுகிறது. இம்மாதிரி நோய்
இருப்பவரின் நடவடிக்கைகள் அவரால் கட்டுப்படுத்த முடியாதது
மற்றவர்களால் புரிந்து கொள்ளப்படாவிட்டால் எரிச்சல் ஊட்டக்
கூடியதாய் இருக்கும். சின்னச் சின்ன விஷயங்கள் கூட தொல்லை
கொடுத்து மன உளைச்சலை அதிகரிக்கச் செய்யும்.

எனக்குத் தெரிந்து , இந்த நோயின் தீவிரம் உணர்ந்து, இப்படிப்
பட்டவர்களுக்குக் காப்பகம் போன்ற அமைப்பு தேவை ,என்று
உணர்ந்து, தான் தீவிரமாக ஈடு பட்ட  என் நண்பரை  அவருடைய
மனைவி, நாற்பது ஆண்டுகளுக்கு மேல் குடித்தனம் நடத்தியவர்
விவாகரத்து செய்து கொண்டு ,அவருடைய சொத்தின் பெரும்
பகுதியை சுயார்ஜிதப் படுத்திக் கொண்டுவிட்டார்.
நண்பர் நடத்தும் காருண்யா இல்லத்தில் முதியோர் காலை உணவு 
இந்நோய் குறித்த விவரங்கள் அறியப்பட வேண்டும். இன்னும்
விவரமாக எழுதினால் அனாவசிய பீதி ஏற்படுத்தக்கூடும்.
என்பதால் இத்துடன் முடிக்கிறேன்.

முடித்தபின் தோன்றியது மறதி என்பதுஒரு வரம் யோசித்துப் பாருங்கள் நடந்த நிகழ்வுகள் எல்லாமே நினைவில் நின்றால் தலை வெடித்து விடாதா? இன்னொன்று நாம் முக்கியமாய் நினைப்பவைகளை  மறப்பதில்லை உ-ம் மனைவி நாம் ஆஃபீசுக்குப்  போகும்போது  gas புக் செய்யச்சொன்னால் மறக்க முடியுமா ?