Tuesday, June 6, 2017

பசு வதைச் சட்டங்களும் தொடர் சிந்தனைகளும்


          பசுவதைச் சட்டங்களும்   தொடர் சிந்தனைகளும்
          ------------------------------------------------------------------------------
திரு காஷ்யபனின்  சிந்தனை ஓட்டங்கள் அறிவு பூர்வமாக இருக்கும்   எனக்குப் பிடிக்கும்  அவருடைய  பதிவு ஒன்றை ஜான்  செல்லதுரை எழுதி அவர் வெளியிட்டது  அதை இங்கு மறுபதிவு செய்கிறேன்   

இது மறு பதிவு. இன்றைய கால கட்டத்தில் அவசியமானது என்று நினைக்கிறேன்  நான் என்  கருத்துகளைப் பதிவிடுவதை விட 2012ல் வெளியாகி இருந்த இந்த இடுகை நன்கு கூறு கிறது வாசித்துக் கருத்து கூற அழைக்கிறேன் 

ஐயா வணக்கம் . நான்  ஜி.எம் பாலசுப்பிரமணியம் . என் தளத்தில்  உங்கள் பழைய இடுகை ஒன்றை பதிவிட விரும்புகிறேன்   உங்கள் அனுமதியுடன் இடுகையின் சுட்டி கீழே
http://kashyapan.blogspot.in/2012/01/blog-post_16.html
அனுமதி கிடைத்தால் மகிழ்வேன்  உங்கள் பதிலை எதிர்நோக்கி 

Kashyapan Syamalan <kashyapan1936@gmail.com>
10/28/15
Turn off for: Tamil
ஐயா ! நீங்கள் எப்போது வேண்டுமானாலும், என்னுடைய இடுகைகளை பயன்படுத்தி
கொள்ளலாம் . அனுமதி என்பது போன்ற வார்த்தைகள் வேண்டாமே என்று தோன்றுகிறது.வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்.

27 அக்டோபர், 2015 ’அன்று’ 12:10 பிற்பகல் அன்று, Balasubramaniam G.M <gmbat1649@gmail.com> எழுதியது:

பசு வதை தடையா, தடையால் வதையா?
கடந்த சில வருடங்களாக தேர்தல் களத்தில் அரசியல்வாதிகள் ஆடத் தேர்ந்தெடுத்திருக்கும் புதிய பகடை 'பசு'.

'பசு பாதுகாப்பு சாம்பியன் நானே' என சுயபிரகடனப் போட்டியை இராஜஸ்தானிலும், பசு சென்டிமெண்ட் கண்ணீர் வடிக்கும் ஒரு கூட்டத்தை குஜராத்திலும் பார்க்கிறோம். மத்திய பிரதேச அரசு ஒரு படி மேலே சென்று, பீஃப் வைத்திருந்தாலே 7வருடம் சிறைத்தண்டனை என சட்டமியற்றி தனது 'பசு'மையை காட்டியுள்ளது. காந்திய வாதிகள், குறிப்பாக வினோபா பக்தர்கள் தம் பங்கிற்கு, 'பசு பாதுகாப்பு' இயக்கத்தை நிர்மாணத்திட்டமாக்கி 'லாபி' (lobby) செய்கின்றனர்.

இவ்வாறு பசு பாலிடிக்ஸ் ஆகிவிட்ட நிலையில் அதன் கெமிஸ்ட்ரி, எகனாமிக்ஸ், சமயம், கலாசாரம் என மற்ற அம்சங்களையும் பார்த்து விட்டால் என்ன என்று தோன்றுகிறது.

தாய்மை: பால் என்பது உயிரோட்டமான சரி விகித உணவு. விளையாட்டுப்பருவமுதல், வீர விளையாட்டுப்பருவம் வரை உகந்த போஷாக்கு. அரிய தனிமங்கள்( rare elements), தலையாய விட்டமின்கள், நோய் எதிர்ப்பு சக்தி என சகல மருத்துவ குணமும் கொண்டது. பசு நெய்யில் லேகியம் செய்வதும், வெண்ணெய் பூசிக்குளிப்பதும் இந்திய பாரம்பரியம். சாண எரிவாயு, தொழு உரம் என சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்தவையும் அதிலுண்டு.

இப்படி எல்லா விகிதத்திலும் வாழ்விற்கு பக்கபலமாக, பலனை சற்றும் எதிர்பாராமல் வாழும் ஓர் சக ஜீவனை அன்பின் வடிவமாக்கி பாதுகாத்தல் ஒரு கைமாறு மட்டுமல்ல, நம்மில் மனிதத்தை வளர்ப்பதற்கு ஓர் ஒப்பற்ற வழியும் கூட என 'கோ ரக்-ஷன்' பிரசாரகர்கள் வைக்கும் வாதத்தில் ஆன்மீக நியாயம் உண்டு.

விபரீதம்: ஆழமான தத்துவ பின்னணி கொண்ட இந்த தாய்மையின் வடிவைக் காப்பாற்ற 'எத்தனை தலை வாங்கவும் (தரவும் அல்ல) தயார்' என ஒரு சாரார் குரல் எழுப்பும் போதுதான் விஷயம் விபரீதமாகிறது.

மறுபக்கம்: இதுவெல்லாம் ஒருபுறமிருக்க, அமுக்கமாக மாட்டிறச்சியை உண்டு களிக்கும் ஒரு பெருங்கூட்டம், மாட்டிறைச்சிக்கு ஆதரவாக ஏகப்பட்ட வாதங்களை வாளாக்கி களத்தில் குதிக்கத் தயாராகி இருக்கிறது.

அண்மையில் டெல்ஹியில் நடந்த ஒரு மாநாட்டின் உணவு வேளை விவாதமாக வந்து சேர்ந்தது 'பசுவதை'. மேசையில் நால்வர்: ஒரு கேரளம், ஒரு நாகலாந்து பெண்மணி, ஒரு ஜார்கண்ட் மனித உரிமை ஆக்டிவிஸ்ட். நான்-வெஜியாக இருந்து வெஜிடேரியனாக மாறியுள்ள நான் அம்மேசையில் 1/4 மைனாரிடி. பரிமாறப்பட்ட மட்டனை (மட்டன்?) கடித்துக் கொண்டு அவர்கள் சுவையாக பரிமாறிய வாதம்:

'நம் நாட்டின் புரதத் தேவையில் நாற்பது சதவிகிதத்தை பூர்த்தி செய்யும் உணவாக அசைவம் உள்ளது.

அதில் நான்கில் ஒருபகுதி பீஃப் (beaf). பசுவதை என மாட்டிறைச்சியை தடை செய்துவிட்டு நாட்டின் 10 சதவிகித புரதத் தேவையை இவர்கள் எவ்வாறு சமன் செய்யப் போகிறார்கள்' என ஜார்கண்ட் வாதத்தை துவக்கிவைத்தார்.

'பசு வதைத் தடை என்பதைல்லாம் 'கறி'க்குதவாத வாதம். அப்படி வாதம் செய்கிறவர் யாராவது மாட்டை வைத்து பொழப்பு ஓட்டுகிறார்களா? பால் மாடு வைத்திருக்கும் விவசாயிட்ட போய் கேளுங்க; அவனுக்கு அது ஒரு பொருளாதாரம். பால் கறந்தா கறவை மாடு, மறுத்தா அடிமாடு. ஐயோ பாவம்! நம்மைக் காப்பாற்றிய மாடு, அதனை நாமும் காப்பாற்றணும் என்பது அபப் பொருளாதார ( uneconomic)வாதம். ஐம்பது ரூபாய்க்கு தீவனம் போட்டால் எண்பது ரூபாய்க்கு பால் தருவதே பெரும்பாடா இருக்கு. இதுல மலட்டையும் கிழட்டையும் சேர்த்துக்க யாரால் முடியும்.'

'இந்தியாவைப் பொருத்தவரை 'பீஃப்' ஆனது பால் பொருளாதாரத்தின் ஒரு உபப் பொருள் ( Byproduct). இறைச்சிக்காக மாட்டுப் பண்ணை என்பது இங்கே கேள்விப்படாத ஒன்று. பால் உற்பத்தியானது ஏழை மற்றும் கீழ் நடுத்தர வகுப்பு (லொயர் மிடில் க்ளாஸ்) மக்களின் தொழில். அவங்க யாரும் பால் மாட்டையோ திடகாத்திரமான காளைமாட்டையோ அடிமாடாக சந்தைக்கு அனுப்புவதில்லை. பல்லு போனதையும், சினைபிடிக்காததையும் வைத்து அவன் என்ன செய்வான்? கோடை வறட்சியில, உள்ள மாட்டுக்கே புல்ல காணோம்ங்கிர நிலையில வெத்துமாட்டுக்கும் சேர்த்துப் போடுவது அவனால் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒன்று.' என கேரளக்காரர் பொரிந்து தள்ளினார் தனது மலையாளம் கலந்த ஆங்கிலத்துல.


இப்படி (விவசாயியின் பொருளாதாரத்தால்) ஒதுக்கப்பட்ட மாடுகளே 'மாட்டிறைச்சி' என்பதால் இது பால் பொருளாதாரத்தின் உபப் பொருள். உபப் பொருள்25% முதலீட்டில் நமக்குக் கிடைக்கும் லாபகரமான பொருள். இதனால் விவசாயிக்கு லாபமோ இல்லையோ, இது (இந்த ரீ-சைக்ளிங்க் வருமானம்) இல்லாமல் அவன் பால் தொழில் செய்யவே முடியாது என தனது இரண்டாங்கட்ட வாதத்தையும் வைத்து விட்டு தட்டில் இருந்ததை ஒரு கடி கடித்தார்.

'ஆட்டுக்கறி 350-400ரூபான்னு விற்கும் நேரத்துல, உபப் பொருளாக சந்தைக்கு வர்ரதனாலேதான் ஏழைகளுக்கு சௌரியமா ரூபாய் 80 - 100ன்னு மாட்டிறைச்சி மலிவா கிடக்குது. இப்ப அதுல மண்ணை அள்ளிப் போட முனைராங்க.'

அடி மாட்ட 'புனிதமாய்க்' கருதி மேய விட்டோம்னா பால் மாட்டுக்குத் தீனி பத்தாம (புல்வெளி இல்லாத நிலையில், குறைந்த அளவே வைக்கோல் தீவனம் உள்ள நிலையில்) பால் உற்பத்தி 20-30 சதவிகிதம் நசிவடைய சாத்தியம் இருக்கு" என மலையாள நண்பருக்கு ஓரிரு இணையங்கம் வாசித்துவிட்டு "உங்களுக்குத் தெரியுமா?" என சுவாரசியமாக் ஆரம்பித்தார் ஜார்கண்ட். "மும்பையில் ஐந்து பெரிய அபடாய்ர் (மாடு அடி நிலையம்) இருக்கு. மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யறாங்க. அதுல முதல் மூன்றுக்கு சொந்தக்காரர் ஜைனர்கள் (Jains). விஷயம் எங்க நிக்குது பார்? விற்கலைன்னா பொழப்பு போயிரும் என்று சந்தைக்கு வரும் விவசாயிகிட்ட தத்துவம் பேசிட்டு, அங்க போய் அதுலேயே பில்லியன் பிஸினஸ் பண்ணுவதுதான் சாமர்த்தியம்."

'விவசாயி பசுவை கறவைக்கும், காளையை உழவுக்கும் வைத்திருந்தான். நாம கலப்பின பசுன்னு விளம்பரம் பண்ணி காளையையும் கலப்பினமாக்கிட்டோம். அது நடக்கவே குடை கேட்குது. வெயில்ல வந்தாலே வீஸிங்க் ஆகுது. தெண்டத்த வைத்து என்ன செய்யறது? காளையை கலப்பினமாக்கியது விவசாயியா? அவன விக்கக்கூடாதுன்னு சொல்ல நமக்கென்ன உரிமை இருக்கு?'

'எப்படியோ இந்த மாடுகள வச்சு உழலாம்னு போனா, தெருவுக்கு இரண்டு டிராக்டர் இறக்கி விட்டிருக்காங்க, வண்டி மாட்ட ஓரம் கட்டணும்னே ட்ரக்குகளை ஓட விட்டிருக்காங்க. இதுல அகிம்சை தத்துவம் வேற. எவ்வளவுதான் விவசாயிய இம்ச பண்றது?" இது என்னங்க நியாயம்?' என மனித உரிமைக் குரல் கொடுத்தார் ஜார்கண்ட்.

எனது தட்டு காலியாகி கை காய்ந்து கொண்டிருக்க, எழும்ப எத்தனித்த நான் அதுவரை அசைவத்தோடு ஐக்கியமாயிருந்த அம்மணி ஆரம்பித்தவுடன் அமர்ந்துவிட்டேன். "பீஃப் எங்களது (நாகலாந்து) இஷ்ட உணவு" என தொடங்கினார்.


'மாட்டிறைச்சி உணவு எங்களது பாரம்பரிய கலாச்சாரம். ஒரு கலாச்சாரத்தைக் கேள்விக்குறியாக்கும் அதிகாரம் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது? அப்படிச் செய்வது எங்களை அவமானப்படுத்தும் செயல்' என உணர்வு மேலோங்கக் கூறியவர், சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு, 'பசுவை பூஜிப்பவர்கள் இருக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரிவதற்கு முந்தய காலத்திலிருந்தே பீஃப் எந்தளது கலாசார உணவாக இருந்துவந்துள்ளது. ஒரு சாராரின் பக்தியை அவமானப்படுத்துவது எங்களது நோக்கமாகவோ, உள்நோக்கமாகவோ இருந்ததில்லை எனும்போது, இதனை வாதப்பொருளாக்குவது எப்படி நியாயமாகும்?' தர்க்க ரீதியாக யோசிக்க வைத்தவர் அதனை வலுவாக்கும் விதமாக மேலும் ஒரு கேள்விய போட்டார், "ஏங்க, எங்க கலாச்சாரத்தில ஒன்றிய ஒரு உணவை தடை செய்யணும்னு பேசறாங்களே, நாங்களும் ஒரு சொல்லுக்கு சொல்லுறோம், எங்க கலாசாரத்துக்கு சற்றும் பொருந்தாத இட்டிலி தோசையை தடை செய்ன்னு, (டாக்டர்கூட சொல்ரார், தோசையும் தாளித்த சட்னியும் கார்சினோஜீனிக் என்று) நல்லதுக்காகவே இருந்தாலும் உங்களால அத விட முடியுமா? அது இல்லாத உணவுக் கலாச்சாரத்த உங்களால கற்பனை பண்ணிப் பார்க்க முடியுமா? அப்படித்தான் மாட்டிறைச்சி எங்களுக்கும்" அப்படின்னு சொல்லிட்டு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாங்க. "இப்படி பல்வேறு விஷயங்களிலும் எங்கள அற்பமா எண்ணி, எங்க உணர்வுகள உதாசீனப்படுத்துவதாலதான், நாகலாந்து, மணிப்பூர் போன்ற மாநிலங்கள்ல நாங்க தனி நாடு கேட்டு போராடுறோம்கிறத நீங்க புரிஞ்சிக்கணும்."


ஆட்ட கடிச்சி, மாட்ட கடிச்சி, இந்த அம்மா நம்ம இட்டிலி சட்டினியிலிருந்து எல்லைவரைக்கும் ஒட்டு மொத்தமா 'வேட்டு' வைக்குதே! நான் கிளம்பி விட்டேன் 'கை கழுவ'.

பொருளியல் பார்வை: மூலப் பொருளிலிருந்து அதிகப்பட்ச உற்பத்திப் பொருளை வெளியெடுப்பதே நல்ல உற்பத்தியாளருக்கு அழகு என்கிறது பொருளாதார தத்துவம். நிலக்கடலை விவசாயமே எண்ணெய் உற்பத்திக்காகத்தான் என்றாலும், அதன் காய்ந்த செடி கால்நடை தீவனமாகவும், சண்டு (shells) எரிபொருளாகவும், சக்கை (oil cake) புரத உணவாகவும் மாற்றப் படுவதில்லையா. அதனாலேதான் கடலை எண்ணெய் விலை ரூபாய் 100க்குள் நிற்கிறது. உபபொருள் உற்பத்தி சாத்தியம் இல்லையெனில் பால் கூட லிட்டர் 30ரூபாய்க்கு கிடைக்காது.

டிமாண்ட் சப்ளை உறவு பொருளியலில் ஒரு விசேஷமான சம்பந்தம். டிமாண்ட் இல்லை எனில் உற்பத்தி சாத்தியமே இல்லை. பால் நுகர்ச்சிதான் பால் உற்பத்திக்கான தலையாய உந்துதல் என்கிற பார்வையில், பால் நுகர்வோரே மாடுகள் 'அடிமாடா'க முதல் காரணம் (பால் உற்பத்தியில் உபப்பொருள் உற்பத்தி தவிர்க்கமுடியாத ஒன்று என்கிற நிலையில்). பாலை நான் குடித்துவிட்டு, அதனால் ஏற்படும் விழைவை நீ கட்டி அழு என விவசாயியை கூறுவது தேசிய பார்வையற்ற வாதம்.

கருணை: ஒரு வாதத்திற்கு எடுத்துக்கொள்வோம்: இரண்டுகோடி பசுமாடுகள் உள்ள நம் நாட்டில் மாட்டிறைச்சித் தொழிலை நிறுத்தி விட்டால், (பிறப்பதில் ஒன்றுக்குப்பாதி ஆண் மாடு, மீதியில் கால்வாசி மலடு மற்றும் கிழட்டு மாடு என்கிற நிலையில்) ஏறக்குறைய ஒண்ணேகால்-ஒண்ணரை கோடி வெற்று மாடுகளை என்ன செய்வது? கட்டி வைத்து தீனி போட முடியாத நிலையில், விவசாயி அவற்றை அவிழ்த்துவிடுவதைத் தவிர்த்து வேறு என்ன செய்ய முடியும்? அனாதையாக தெருத்தெருவாக அலைய விடுவது எந்த வகையில் கண்ணியமான செயலாக இருக்கும்? பசு வதை தடுப்பு வாதம் செய்வோரும், பால் நுகர்ச்சியாளரும் அதற்கு நாங்கள் பொருப்பு இல்லை என வாதம் செய்யப் போகிறார்களா?

பசுவின் மீது பாசம் எல்லோருக்கும் உண்டு. ஏழை விவசாயி அவன் மாட்டை பெயர் வைத்துத்தான் அழைக்கிறான். மாட்டுப்பொங்கலில் பார்த்திருபீர்கள், 'அவளை' மிளிரச்செய்து உச்சி முகர்வான். மழையானால் பசுவை வீட்டிற்குள் கட்டி, திண்ணையில் ஒதுங்குகிறான். அதற்கு வெட்கையானாலும், வேட்கையானாலும் அதனை தணிக்க அழைத்துக்கொண்டு பல மைல் தூரம் நடந்து செல்வான். பசுவை பாசத்துடன் வைத்துக்கொள் என அவனுக்கு சொல்வது பட்டதாரிக்கு பால பாடம் எடுத்த கதை.'


துவைதம் (Dilamma): பாசம் உண்டு. ஆனால் பால் தராத மாடு அவனுக்கு 'பேரிடி'. யதார்த்தத்திற்கு வருவோம். நடுத்தர, கீழ் நடுத்தர வர்க்கத்தில், பென்ஷன் இல்லாத கையில் சொத்தே இல்லாத முதியவர்களை நம்குடும்பங்களில் எப்படிப் பார்க்கின்றனர்? பிள்ளைகளுக்குப் போக, வந்தவர்களுக்குப் போக, உழைப்பவர்க்குப் போக மிஞ்சியதே 'பெருசுக்கு' என்கிற அவலம் நம் வீடுகளில் இல்லையா? பிள்ளைக்கு முடியலைன்னா அன்றைக்கும், கட்டியவளுக்குன்னா அடுத்த நாளும் மருத்துவரிடம் போகும் ஏழை, தனக்குன்னா 'அதுவா சுகமாகட்டும்'னு நாலு நாள் இழுத்துப்பார்த்து, வீட்ல எல்லோரும் விரட்டின பிறகுதான் டாக்டரிடம் செல்கிறான். ஏழை பெற்றோர் முடியாம போனால், இத்தோடு 'முடிஞ்சிருமா' ('முடிஞ்சுடாதா)ன்னு எட்டிப்பார்க்கும் அவலம்தான் அங்கு இருக்கு. அன்பு இல்லை என்றில்லை, ஏழையின் பட்ஜட்ல பாசம் எப்பொழுதுமே ஒரு டெஃபிசிட் ஐடம் தான். ஏழ்மைக்கும் பாசத்திற்கும் நடக்கும் போராட்டத்தில், ஏழ்மையை இறக்கி வைக்க முடியாத நிலையில் பாசத்தின் எல்லையை சுருக்கி தன் தெம்புக்குள் போராடும் அவன் சம்யோசிதனாகவே திகழ்கிறான். கம்யூன் வாழ் நாளில் எங்களுக்குக் கிடைத்த பாடம்*; ஏழையாகிப்பாருங்கள் யதார்த்த வலி புரியும்..

நடைமுறை மாற்றுவழி: அதையும்மீறி பசு பாதுகாப்பு உணர்வு நம்மில் மேலோங்கினால், நாம் வெரும் நுகர்வோராக, பார்வையாளராக இருந்து பேசுவது போலித்தனமாகிவிடும். நாம் நுகரும் பாலுக்கான மாட்டை நாமே வளர்க்கணும், அதன் எதிர்காலத்திற்கு உகந்த காப்பீட்டுத்திட்டத்தை துவங்கி எட்டுவருடம் பால் தந்த மாட்டை மேலும் பத்துவருடம் பாதுகாத்து வரலாம். இயலாத பசுவை பேணுவதுன்னா என்னங்கிர ஞானம் நமக்கும் கிடைக்கும், கஸ்தூரிபா அம்மையாருக்குக் கிடைத்தமாதிரி.

அது சாத்தியமில்லை என்று தோணினால் பால் நுகர்ச்சியை விட்டுவிடணும். பால் நுகர்ச்சி 'மானிட' உணர்வுக்கு எதிரான செயல். பிள்ளையின் முதல் எட்டு பத்து மாதங்களே தாய்ப்பால் உணவு என்கிற இயற்கை நியதியை மீறி ஆயுளுக்கும் அவள் முலைப்பாலுக்கு ஏங்கி, 'நாசுக்கா'க செய்த ஏற்பாடே மாட்டுப்பால். சுதந்திரமான ஜீவன்களை டொமஸ்டிகேட் செய்வது எந்த வகையில் நியாயமான செயல்? வாழும் ஜீவராசிகளில் யாரும் செய்யத்துணியாத, மிருகத்தனத்தைவிட கேவலமான செயல் ஆயுளுக்கும் பால் அருந்துவது என வாதம் செய்யும் மேனகா காந்தியின் அகிம்சை எவ்வளவோ போற்றதக்கது. அதுவே யதார்த்ததிற்கு உகந்த 'பசு' பாதுகாப்பு வாதம்.


ஒத்திசைவு(complementarity): பல்வேறு மொழி, இனம், மதம், நடை, உடை, பாவனை என வேறுபாடுகளை சரளமாகத் தனதகம் கொண்ட பாரதத்தாய், தனது பெருங்குடும்பத்திற்கு அழகு சேர்க்கும் அணி அலங்காரமாகவே அவற்றைப் பார்க்கிறாள்.

வேஷ்டி கட்டினால் அழகு, குர்தா பைஜாமாவும் அழகு; அங்கவஸ்திரமும் 'டை'யும் இங்கே ஒரு சேர வேலை செய்யும்; தேனினும் இனிய தமிழ் மொழி தாண்டவமாடும் அதற்கு கன்னடமும் தெலுங்கும் பின்னிசைக்கும். சாமிக்கு நேர்ந்து சடாமுடி வளர்ப்பது மனநிறைவென்றால், அதே சாமிக்கு மொட்டை அடிப்பது முழுநிறைவு; சாமி சிலையை பின்னொருவர் காயப்படுத்தினால் மதக்கலவரம், அதே சாமியை அலங்கரித்து மேளதாளத்துடன் நீர் நிலையில் ஊர்கூடி போட்டுடைத்தால் இறைவிழா. முரணாகத் தெரியவில்லை?

தெரியவில்லையே! இவையெல்லாம் பல்வேறுபட்ட வழிமுறைகள் என உணரும் மனபக்குவம் உள்ளதால் நமக்கு முரணாகத்தெரியவில்லை.

இப்படித்தான் வாழ்வின் ஒவொவொரு அம்சமும் எதிரும் புதிருமானதாக உள்ளது. விவசாயி இராப்பகல் கண்விழித்து ஆடு மாடு மேயாமல் பயிரை பாதுகாப்பான், கடன் வாங்கியாவது உரமிட்டு வளர்ப்பான் பின்னர் அவனே நாள் குறித்து ஆள் கூட்டி மொத்த பயிரையும் அறுதெடுப்பான். குஞ்சு பொரிக்க பழுதற்ற முட்டைகளை அடைவைப்போம்; உடையாத முட்டை இருபத்தியோராம் நாள் உடைந்தால்தான் குஞ்சு உடையாவிட்டால் அது கூமுட்டை. இருபது நாள் உடைந்துவிடக்கூடாதே என ஏங்குவதும், இருபத்தியோராம் நாள் உடையணும் உடையணும் என வேண்டுவதும் நமக்கு முரண்பாடாகத் தெரிவதில்லை. சூரியன் இன்றி வாழ்வில்லை; எட்டு மணி நேர வேலைக்குப்பிறகு எப்பண்டா அவன் அடைவான் என ஏங்குவோம்; மழைவேண்டி வர்ணஜெபம், கழுதை கல்யாணம் நடத்துவோம், கொட்டுமழை நிற்கட்டும் சாமி என வேண்டுதல்ஜெபமும் நடத்துவோம். வேண்டப்பட்டவரை பார்க்கத் துடிப்போம், அவரே கண்ணை மூடிட்டால் 'சவத்த எப்ப தூக்கப் போரீங்க' ம்போம்.

எதிரும் புதிரும் என்பது ஒன்றுக்கொன்று விரோதமானது என நாம் தப்புக்கணக்கு போடுகிறோம். உடலியலால் ஆணும் பெண்ணும் எதிரும் புதிருமே. இந்த இனம் நீடிக்க அவர்கள் எதிரும் புதிருமாயிருப்பதே அடிப்படை. அவை முரண் அல்ல, ஒன்றுக்கொன்று ஒத்தாசையானவை (complementary), நீ விட்டதை நான் முடிப்பேன் என ஓடும் ரிலே ரேஸ் போல.

இரவும் பகலும் போல; வளர்ப்பதும் போற்றுவதும் பின்னர் வீழ்த்துவதும் விவசாயத்திலிருந்து விநாயகர் சதுர்த்தி வரை ஒன்றுக்கொன்று இணக்கம் (compatible) கொண்டதே என்பதை நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது. பொருளாதாரம் சார்ந்த உணவியல் ஒன்றும் விதிவிலக்கல்ல.

ஒன்றுக்கொன்று இடம்கொடுத்து வாழ்ந்தால் பசு வதையும் இல்லை, அதனால் சமூக வதையும் இல்லை.
---- -----












74 comments:

  1. தமிழ்நாட்டில் 1976 ஆம் ஆண்டிலிருந்தே பசுவதைத் தடுப்புச் சட்டம் அமலில் இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். :)

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி மேம் ஒன்றுமில்லாதவிஷயத்துக்காகவா இத்தனை விவாதம் வருகைக்கு நன்றி

      Delete
    2. ஆமாம், இதை ஒத்துக் கொண்டு விட்டால் அப்புறமா மத்திய அரசைக் குற்றம் சொல்லப் புதுக்காரணம் தேட வேண்டி இருக்குமே! இப்போப் பாருங்க! எவ்வளவு எளிதாக மாட்டுக்கறி சாப்பிடக் கூடாதுனு மத்திய அரசு சட்டம் போட்டிருக்குனு கூவிட்டு இருக்கலாமே! அது முடியுமா? இந்தச் செய்தியை சமீபத்திய விடுதலை இதழில் கூடப் போட்டிருக்காங்க! http://viduthalai.in/previousyear/other-news/97-essay/112070-2015-11-15-12-56-51.html ""தமிழ் நாட்டில் விலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் (1959)படி பசு, கன்று, காளை,எருமை போன்றவற்றை தகுந்த சான்றுகள் பெற்று இறைச்சிக்காக வெட்டலாம் என்ற விதி இருந்தது. இந்த நிலையில் 1976ஆம் ஆண்டு பசுவதை தடுப்புச் சட்டம் தமிழகத்தில் இயற்றப்பட்டது. இருப்பினும் தமிழகத்தில் மாட்டிறைச்சி எவ்வித தடையுமின்றி தாராளமாக்க் கிடைக்கிறது."" இது அந்தப் பத்திரிகைச் செய்தி. ஆகவே இது புதிதாக இப்போதைய மத்திய அரசால் போடப் பட்ட சட்டம் அல்ல! :)))))

      Delete
  2. பிரமிப்பாக இருக்கிறது எவ்வளவு விசயங்கள் சரியான அலசல்.

    ReplyDelete
    Replies
    1. நமக்குத் தெரியும் என்று நினைப்பதை விட தெரியாததே அதிகம் ஜீ சரிதானே

      Delete
  3. Replies
    1. இந்த காலகட்டத்தில் திரு காஸ்யபன் தளத்தில் வெளியிட்டிருந்த பதிவு நினைவுக்கு வந்தது அவரே திரு ஜான் செல்லதுரையின் இடுகையைப் பதிவாக்கி இருக்கிறார் எல்லாப் புகழும் செல்ல துரைக்கே

      Delete
  4. அற்புதம்! அற்புதம்!! அற்புதம்!!! காஷ்யபன் போன்ற இறையியலாளர் ஒருவரிடமிருந்து இப்படி ஒரு யதார்த்தமான கட்டுரையை நான் எதிர்பார்க்கவில்லை. அட்டகாசம்! இதைப் படிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி ஜி.எம்.பி ஐயா!

    ReplyDelete
    Replies
    1. இது திரு காஸ்யபன் தளத்தில் வெளியான கட்டுரை அதையும் அவர் ஜான் செல்லதுரையின் பதிவு என்றே கூறி இருக்கிறார் வருகைக்கு நன்றி சார்

      Delete
  5. ஆனால், ஒரே ஒரு மாற்றுக் கருத்து. ஐயா அவர்கள் மேனகா காந்தியின் பாலை விடச் சொல்லும் அறிவுரையை போற்றத்தக்கதாகப் பார்க்கிறார். ஆனால், அதன் பின் இருப்பது பொருளியல் பேராவலே என்கிறார்கள் விதயம் அறிந்தவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. கட்டுரையே ஒரு அலசல்தானே வெவேறு கருத்துகளும் இடம் பெற்றிருக்கிறது வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி சார்

      Delete
  6. //ஒன்றுக்கொன்று இடம்கொடுத்து வாழ்ந்தால் பசு வதையும் இல்லை, அதனால் சமூக வதையும் இல்லை.//

    விளக்கமான தெளிவான கட்டுரை .பகிர்வுக்கு நன்றி சார்

    ReplyDelete
    Replies
    1. நாணயத்தின் இரு பக்கங்களும் கூறப்பட்டிருக்கிறது யாரும் யாருடைய கருத்தையும் திணிக்கக் கூடாது வருகைக்கு நன்றி மேம்

      Delete
  7. Replies
    1. ஒரு வெளிப்படையான அலசல் வருகைக்கு நன்றி ஸ்ரீ

      Delete
  8. அருமையான பகிர்வு.
    பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி மேம்

      Delete
  9. # 'சவத்த எப்ப தூக்கப் போரீங்க' #
    இதான் வாழ்வியல் எதார்த்தம் :)

    ReplyDelete
    Replies
    1. வாழ்வியலில் இருக்கும் முரண்களைத் தெளிவு படக் கூறி இருக்கும் பதிவு வருகைக்கு நன்றி ஜி

      Delete
  10. காஷ்யபன் எனது மரியாதைக்குரிய இடதுசாரி சிந்தனையாளர். பசுவதை பற்றிய இக்கட்டுரை மிகவும் நடுநிலையானது என்றே கொள்ளவேண்டும்.

    -இராய செல்லப்பா சென்னையில் இருந்து.

    ReplyDelete
    Replies
    1. இந்தக் கட்டுரை மூலம் திரு காஸ்யபனின் நடுநிலை விளங்குகிறது வருகைக்கு நன்றி சார்

      Delete
  11. கொஞ்சம் பொறுங்கள்... விரைவில் இரு பதிவுகள் வரும்...

    ReplyDelete
    Replies
    1. பொறுத்திருப்போம் பதிவுகள் வரும்போது வரட்டும் நன்றி டிடி

      Delete
  12. நிறைய விசயங்கள் தெரிந்துகொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. அதைச் சொலதுதானே நோக்கம் மேம்

      Delete
  13. அருமையானஅலசல் ஐயா
    பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு கருத்துப்பதிவுக்கும் நன்றி சார்

      Delete
  14. பொதுவாக மாடு பிரையோசப்படலைனா, அதை நம் மக்கள் விற்றுவிடுவார்கள். அல்லது கோயிலுக்கு நேர்ந்து விட்டுடுவாங்க. விற்கப்பட்ட தன் மாடு என்ன ஆகுதுனு ஆராய்ச்சி செய்யாமல் அறியாமையில் தன்னை மூழ்கிக்கொள்வார்கள். விற்கப் பட்ட மாடு கொல்லப்பட்டு பலருக்கு உணவாகுதுனு தெரியாமலே வாழ்வதால் தான் விற்றதே பாவம் என்பது இவர்களுக்குப் புரிவதில்லை. மாடு சாப்பிடுறது தப்புனா ஆடு கோழி சாப்பிடுறதும் தப்புத்தான். தன் கன்றுக்காக மாடு சுரக்கும் பாலை மாட்டை ஏமாற்றி பறித்து பசும்பால் குடிப்பதும் தப்புதான். இல்லையா? இதில் மாடு சாப்பிடுறவன் ரொம்ப மோசம், ஆடு சாப்பிடறவன் பரவாயில்லை, கோழி சாப்பிடுறவன் அதைவிட பரவாயில்லை. பால் குடிக்கிறவன் செய்வது தப்பே இல்லை என்தெல்லாம் நாமே நம்க்கு வகுத்துக் கொண்ட நியாயப்படுத்தல்தான். புரிந்துகொண்ட புத்தர் போதிமரத்தடி போயிட்டார். புரிந்த ஜீசஸ் நாம் அனைவருமே பாவம் செய்தவர்கள், அல்லது பாவிகள் தான் என்றார். அவரை மட்டும் அதில் தனிப்படுத்திக் கொண்டது எப்படினு தெரியலை. சிகரெட், அல்கஹால் ப்ராஸ்ட்டிடுஷன், போர்னோகிராஃபி எல்லாம் உடல்/மனத்தை கெடுப்பதுதான். ஆனால் இவைகளை அரசாங்க அனுமதியுடன் (அவர்களுக்கு கொடுக்க (வரியை) வேண்டியதை கொடுத்துவிட்டு) "தப்புத்தான்"னு அறிவித்துவிட்டு செய்தால் தப்பில்லை. மனிதன் சட்டதிட்டங்கள், மனிதன் வாழ்க்கை நெறிமுறைகள் எல்லாம் யோசித்துப் பார்த்தால் அர்த்த மற்றவைகள்தான், சார். எப்படியோ ஒரு வகையில் நாம் நம்மை "நல்லவர்களாக" முக்கியமாக "மற்றவர்களைவிட" நல்லவர்களாக, கொஞ்சம் பாவம் செய்தவராக ஒரு பொய்க் கணக்கு உருவாக்கி நம்மை நாமே ஏமாற்றி வாழ்வதுதான் வாழ்க்கை னு நினைக்கிறேன், சார். :)

    ReplyDelete
    Replies
    1. pala murankaL nirainthathae wam vaazviyal tamil fonts do not work here Thats why this

      Delete
    2. pala murankal nirainthathae nam vaazviyal Tamil fonts do not work. Thats why this sir

      Delete
  15. கிராமப் பொருளாதாரமாக இருந்த
    நமது பொருளாதாராம் சந்தைப் பொருளாதாரமாக
    மாறிய பின்பு இது போனற முரண்பட்ட
    வாதங்கள் உண்டாவது சகஜமே

    ஆயினும் அவைஉணர்வினைத் தூண்டும்
    மத விவகாரமாக மாற்றப்படுகையில்தான்
    விஷயங்கள் வேறு ரூபம் கொள்கின்றன

    விரக்தியின் உச்சத்தில் அண்ணன் என்னடா
    தம்பி என்னடா அவசரமான உலகத்திலே
    என்பது மாதிரிதான், ஆடு என்னடா
    மாடு என்னடா பொருளே யாவுமான
    உலகத்திலே என சொல்லத் தோன்றுகிறது

    ReplyDelete
    Replies
    1. வாதங்களும்விவாத க்களும் தெளிவை நோக்கிச் செல்ல வேண்டும் எல்லாவிஷயத்த்கிலும் மதத்தை புகுத்த செய்யும் முயற்சிதானோ என்னும் சந்தேகம் வருகிறது. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்

      Delete
  16. விவாசாயிகள் தனக்கு உதவாத மாட்டை அடிமாடுகளாக விற்கிறார்கள். அப்படி செய்வது தவறு என்று சொல்பவர்கள் அந்த மாட்டை வாங்கி அதற்கு உணவு அளித்து சாகும் வரை காப்பாற்றலாமே அது மிக புண்ணியம்தானே? மாட்டை தெய்வமாக கருதுபவர்கள் இப்படி செய்யலாம்தானே? சாமிக்கு படையல் செய்கிறோம் என்று சொல்லிவிட்டு கடைசியில் அதை நாமே சாப்பிடுவதற்கு பதில் வாழும் தெய்வமாகிய மாட்டிற்கு உணவு கொடுத்து பாதுகாத்தால் புண்ணியம் பெருகும்தானே ஆனால் அப்படி எல்லாம் செய்யமாட்டர்கள் இந்த புண்ணியவாங்கள்

    ReplyDelete
    Replies
    1. @Avargal Unmaigal, பல மாடுகளும் காப்பாற்றப்பட்டு கோசாலைகளில் வளர்க்கப்படுகின்றன. என்றாலும் மாடுகள் கேரளாவுக்குச் செல்வதை முழுதுமாக நிறுத்த முடியவில்லை. மாட்டுக்கு உணவு கொடுத்துப் பாதுகாத்து வருவதில் பல ஆசிரமங்கள், மடங்கள் முன்னணியில் இருக்கின்றன. தனியார்களில் வசதி உள்ளவர்களும் பராமரிக்கிறார்கள். அப்படியான கோசாலைகளுக்கு நாங்களும் பண உதவி செய்திருக்கிறோம். என் பழைய நண்பர் ஒருவர் சீமாச்சு என்பவர் மாயவரத்துக்காரர் தன் அம்மா பெயரால் மாயவரத்தில் கோசாலை நிர்மாணித்துப் பராமரிப்புச் செலவுகளை ஏற்றுக் கொண்டிருக்கிறார். அந்த கோசாலை எனக்குத் தெரிந்து கிட்டத்தட்டப் பத்து வருடங்களாக நடக்கிறது. மாட்டை தெய்வமாகக் கருதுபவர்கள் இப்படித் தான் செய்து வருகிறார்கள். எப்போதுமே! :)))))

      Delete
    2. @ அவர்கள் உண்மைகள்
      செந்ய்வதும் சொல்வதும் முரண்களகவே இருக்கின்றன. மனித உயிர்களை விட கோமாதாவின் உயிரே முக்கியம் போலச் செயல்கள் வருகைக்கு நன்றி சார்

      Delete
    3. @கீதா சாம்பசிவம் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இருக்கிறது ஒரு சிலர் செய்வதாகக் கூறும் செயல்கள் உண்மை அது அல்லவே

      Delete
    4. நமக்குத் தேவையான விஷயத்தில் ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்போம். தேவையில்லா விஷயத்தில் ஒரு சிலர் செய்வதாகக் கூறும் என்று சொல்வோம். இந்த கோசாலைகள் குறித்துப் பல பத்திரிகைகளிலும் விளம்பரங்கள் வருகின்றன. அம்பத்தூரில் நாங்கள் குடி இருந்த பகுதியில் குடி இருந்தோர் அனைவருமாகச் சேர்ந்து கோசலை அமைத்துள்ளோம். இன்றளவும் செயல்பட்டு வருகிறது. அதே போல் பல இடங்களிலும் சொல்ல முடியும். முக்கியமாகச் சங்கர மடம் இருக்கும் ஊர்கள் தோறும் இம்மாதிரி அநாதையான மாடுகளுக்கென கோசலை அமைத்திருக்கின்றனர். நம்பவேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது! கோமாதாவின் உயிர் ஏன் முக்கியம் என்பதற்கு விஞ்ஞான ரீதியான விளக்கங்கள் கூட வருகின்றனவே! சுற்றுச் சூழல் பாதிப்படையாமல் இருப்பதற்குப் பசுவின் இருப்பு மிக முக்கியம் என்கிறார்கள். நாம் தான் முரணாகப் பேசுகிறோம் ஜல்லிக்கட்டுத் தடை என்ற போது ஜல்லிக்கட்டுக்காளைகள் அனைத்தும் நாட்டு மாடுகள் அவற்றை அழிக்க மத்திய அரசு செய்யும் சதி எனச் சென்னை மெரினாவில் போராட்டம். இப்போது அதே மாடுகளைக் காப்பாற்ற ஏற்கெனவே காங்கிரஸ் அரசு இருந்த போதே சுப்ரீம் கோர்ட் காட்டிய வழிகாட்டுதலின் படி அரசு சட்டமியற்றினால் மாட்டுக்கறி தின்ன அரசு தடை விதிக்கிறது என்கிறோம். ஜல்லிக்கட்டுக்காக மாடுகளை வளர்ப்பது சரி என்னும்போது அதே நாட்டுமாடுகளைத் தானே வலிந்து கொல்லவேண்டாம் என இங்கே அரசும் சொல்கிறது. ஏன் இந்த முரண்பாடு?

      Delete
    5. மதுரை சகோ கோசாலைகள் நிறைய இருக்கின்றனவே. அவர்கள் பாதுகாக்கிறார்கள். நான் நிறைய கோசாலைகளுக்குச் சென்றிருக்கிறேன். அதற்கென்று கால்நடை மருத்துவர் எல்லாம் வைத்து நன்றாகப் பராமரிக்கிறார்கள்.கோசாலைகளில் காசு வாங்காமல் மருத்துவம் பார்க்கும் கால்நடை மருத்துவர்களும் இருக்கிறார்கள்.

      கீதா

      Delete
    6. கோசாலைகள் அல்ல பிரச்சனை மாட்டு மாமிசம் சாப்பிடத்தடையில்ல்சை ஆனால் மாடுகளைக் கொல்ல ஏகப்பட்ட வழிமுறைகள் மாடுகளை ஏற்றிச்செல்லுபவர்களை இந்த பசு ரக்‌ஷகர்கள் கொல்லலாம் மனித உயிரை விட மாட்டின் உயிர் மேலானதாகி விட்டது சட்டன்ங்களை அவரவருக்கு அனுகூலமாய்ப் புரிந்து கொள்ளலாம் முரண்பாடுகளே அதிகம் நம்வாழ்வில்

      Delete
    7. மாடுகளைக் கொல்லத் தடை விதிக்கவில்லை. மாட்டை மாமிசத்திற்காக விற்பதற்குத் தான் சில நிபந்தனைகள். அதையும் ஏற்கெனவே காங்கிரஸ் அரசால் போடப்பட்டு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் ஏற்படுத்தப்பட்டவை. இங்கே அனைவரும் அதை எளிதாக மறந்துவிட்டு மாட்டுக்கறி தின்னத் தடை என்ற ஒரே ஒரு வார்த்தையைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள். எந்த இடத்தில் மாட்டுக்கறி தின்னக் கூடாது என்றே சொல்லவில்லை.

      Delete
  17. வணக்கம்
    ஐயா
    யாவரும் படிக்க வேண்டிய விடயம் நன்றாக சொல்லியுள்ளீர்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நான் எங்கே சொன்னேன் ஐயா காஸ்யபன் தளத்தில் வந்த கட்டுரை இதுநடுநிலை அலசல் . வருகைக்கு நன்றி சார்

      Delete
  18. விரிவான கட்டுரை. நீங்கள் உங்கள் கருத்துக்களைக் கூறவில்லை எனினும் காஷ்யபன் அய்யாவின் கட்டுரையை பதிவிட்டதின் மூலம் இக்கருத்துக்களை ஆமோதிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    கேரளத்தில் இறைச்சி என்றாலே மாடு தான். சில நம்பூதிரி ப்ராமணர்கள் கூட சாப்பிட்டதை பார்த்திருக்கிறேன். தமிழ் நாட்டில் இருந்து கோழி வரவு கூடியபின் இறைச்சி உபயோகம் குறைந்து பரோட்டா இறைச்சி என்பதில் இருந்து சப்பாத்தி கோழி என்றாகியது. அதுவும் கோழியில் பலவகை சமையல். தற்போது சவர்மா என்பது பிரபலம்.

    இந்த beef பிரச்சினை வந்தபின் எல்லோரும் திரும்பவும் பீப்புக்கு மாறுகிறார்கள். அதே போன்று மீன் உபயோகவும் கூடியுள்ளது.
    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இக்கட்டுரையில் கண்ட செய்திகள் உடன்பாடாக இருந்தது பீஃப் என்று சொல்லும் போது மனித உயிரை விட மாட்டின் உயிரை முக்கியமாகக் கருதி அதைச் செயல்படுத்த பசு ரக்‌ஷகர்கள் முயல்வது வருத்தம் தருகிறது

      Delete
  19. காலத்துக்கேற்ற அலசல்

    ReplyDelete
    Replies
    1. கருத்துப் பதிவுக்கு நன்றி மேம்

      Delete
  20. உலத்திலேயே மிக பெரிய முட்டாள்

    திருவள்ளுவன் தான்...!

    நான் என்ன உணவு உண்ண வேண்டும் நான் தான் தீர்மானிக்க வேண்டும் எனக்கு இந்திய அரசியல் சட்டம் அளித்துள்ள உரிமையாகும்

    அப்படியானால் திருவள்ளுவர் புலால் மறுத்தல் என்று பத்து திருக்குறள்கள் எழுதுகிறாறே அவர் முட்டாள் தானே பிஜேபி சொன்னால் இந்துத்துவா அப்ப திருவள்ளுவர் சொன்னால் என்னத்துவா?

    மாமிச உணவை ஏன் தவிர்க்க வேண்டும் திருவள்ளுவர் சொல்வதையாவது கேளுங்கடா மானங்கெட்டவனுகளா, திருக்குறளையும் மதிக்க மாட்டேன் என்று சொல்பவர்கள் தங்களை தமிழர் என்று பெருமை பேச வேண்டாம்

    தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
    எங்ஙனம் ஆளும் அருள். 251

    தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்.

    பொருளாட்சி போற்றாதார்க்(கு) இல்லை அருளாட்சி
    ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. 252

    பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.

    படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன்
    உடல்சுவை உண்டார் மனம். 253

    ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது.

    அருளல்ல(து) யாதெனில் கொல்லாமை கோறல்
    பொருளல்ல(து) அவ்வூன் தினல். 254

    அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.

    உண்ணாமை உள்ள(து) உயிர்நிலை ஊன்உண்ண
    அண்ணாத்தல் செய்யா(து) அளறு. 255

    உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.

    தினற்பொருட்டால் கொல்லா(து) உலகெனின் 
    யாரும்
    விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். 256

    புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.

    உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
    புண்ணது உணர்வார்ப் பெறின். 257

    புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.

    செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
    உயிரின் தலைப்பிரிந்த ஊன். 258

    குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.

    அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
    உயிர்செகுத்து உண்ணாமை நன்று. 259

    நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.

    கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
    எல்லா உயிருந் தொழும். 260

    ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

    கடவுளின் கட்டளையை கடைபிடிக்கவில்லையானால், உங்கள் அன்பு எங்கே! கிருஸ்தவர்கள் மட்டுமல்ல, ஹிந்துக்களும், முஸ்லிம்களும் இந்த தவறை செய்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. // திருக்குறள்கள் எழுதுகிறாறே அவர் முட்டாள் தானே //

      வாங்க நண்பரே வாங்க...

      ஆப்பு வாங்க விரைவில் வாங்க நண்பரே வாங்க...

      Delete
    2. // கடவுளின் கட்டளையை கடைபிடிக்கவில்லையானால், உங்கள் அன்பு எங்கே! //

      கடவுளா...? யார் அது...?

      அப்புறம் கட்டளையா...? என்ன அது...?

      // அன்பு //

      அன்பு எல்லாம் இருக்கட்டும்... பாசம் என்றால் என்ன...?

      Delete
    3. குறள் சித்தர் இருக்கையில் குறளைக் கூறி தப்பமுடியுமா கொல்லாமை என்பது உணவுக்காக மட்டும்தானா பொருந்தும்

      Delete
  21. ***மாமிச உணவை ஏன் தவிர்க்க வேண்டும் திருவள்ளுவர் சொல்வதையாவது கேளுங்கடா மானங்கெட்டவனுகளா, திருக்குறளையும் மதிக்க மாட்டேன் என்று சொல்பவர்கள் தங்களை தமிழர் என்று பெருமை பேச வேண்டாம்***

    ஐயா சுந்தர ராமன் மாமிசம் சாப்பிடாதனால புலால் உண்ணாமை அத்தியாயத்தை மட்டும் பூதக்கண்ணாடியில் பார்க்கிறார்.

    ஏன் இந்த புண்ணியபூமிய விட்டுவிட்டு துபாய் எல்லாம் போயிட்டு இருக்கார்னு தெரியலை. ஒருவேளை புலால் உண்ணாமை பற்றி போதிக்கவா? இல்லைனா வயிற்றுப் பிழைப்புக்காக இந்தப் பாவத்தை செய்றாரானு தெரியலை.

    எப்படியோ தன்னை மற்றவர்களைவிட உயர்வாக நினைத்துக் கொள்ளணும்னு சிறுபுத்தி பெற்றவர் நான்ன், இன்னும் மானம்கெடாதவர்னு பெருமையாக சொல்லாமல் சொல்கிறார். :)

    புலால் உண்ணாமை மட்டுமன்றி, திருவள்ளுவர் எழுதிய அத்தனை குறளையும் அப்படியே வாழ்க்கையில் தொடர்பவர் நம்ம ஐயா சுந்தர ராமன் தான்!!! அதனால்தான் அவரிடம் இத்தனை திமிர்!அதான் இன்னும் மானத்தோட வாழ்கிறார். வாழ்வதாக நினைத்துக் கொள்கிறார்.

    "நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை"

    போன வருடம் சென்னையில் பெய்த பெருமழை/வெள்ளம் எல்லாம் ஐயா சுந்தர ராமன் மட்டும் ரொம்ப நல்லவராக இருப்பதால் ஏற்பட்ட விளைவு.

    மனிதர்களில்தான் எத்தனை இதுபோல் எதையாவது "செலெக்டிவ்" ஆக, தன்க்கு சாதகமாக தோண்டி எடுத்து வந்து நான் உன்னைவிட் உயர்ந்தவன்னு சொல்லிக்கொண்டு அறியாமையில் வாழும் மானக்கெட்ட ஜென்மன்ங்கள்!

    இவர் குடிக்கிற மோர்ல எத்தனை பாக்டீரியாக்கள் (உயிரிகள்) இருக்குனு அறியாமல் அறியாமையில் வாழ்ந்து சாகும் இன்ன்னொரு உயிர்தான் நம்ம ஐயா!! :)

    ReplyDelete
    Replies
    1. // அறியாமையில் வாழ்ந்து சாகும் இன்னொரு உயிர்தான் நாம் //

      100% உண்மை...

      Delete
    2. பல சந்தர்ப்பங்களில் கருத்து கூற முற்படும் போது அறியாமை வெளிப்பட்டு விடுகிறது

      Delete
  22. திருவள்ளுவர் சொன்ன கருத்தில் எனக்கு உடன்பாடு ...ஆனால் அந்த செய்தியில் உள்ள மொழி என்னுடையதல்ல .... ( whatsapp message ).

    இப்படி போட்டு தாக்குவதால் .... எனக்கு பாதிப்பு ஏதும் இல்லை . இது நம்மாழ்வார் சொன்னனது தான், UN சொல்வது தான் , இன்னும் பல scientific studies சொல்வது தான் , இந்த மாட்டுக்கறி நமக்கு நல்லதல்ல ....அதேபோல் , ஒன்றுக்கும் உபயோகம் இல்லாத மாடுகளை பராமரிப்பது - விவசாயிக்கும் முடியாதது . உண்மை எங்கோ இரண்டுக்கும் நடுவில் . ...

    மோர்ல பாக்டீரியா , பழைய சோறில் பாக்டீரியா ..இது வாதத்திற்கு மட்டுமே உதவும்.

    தனபாலன் சார் , ஆப்பு பரவாயில்லை ... ஆனால் எனக்கு சூப்பு வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. இதில் ஆப்பு எது சூப்பு எது புரியலியே

      Delete
  23. அருமையான பகிர்வு. பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஐயா

      Delete
  24. ***மோர்ல பாக்டீரியா , பழைய சோறில் பாக்டீரியா ..இது வாதத்திற்கு மட்டுமே உதவும். ***

    இங்கே யாரும் யாரிடமும் வாதிடவில்லை. இரண்டு பேர் வாதிட வேண்டுமென்றால் உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் பெரிய் மனது இருவருக்கும் இருக்க வேண்டும்.

    ஒருவருக்கு ஆறறிவு இன்னொன்ணுக்கு 51/2 அறிவே இருக்கும் பட்சத்தில் எந்த வாதமும் அர்த்தமற்றது என்பதை ஆறறிவு உள்ள்வன் புரிந்து கொள்ளுவான். 5 1/2 அறிவே பெற்றவனையும் அவன் அறியாமையையும் புரிந்து மன்னித்து விட்டுவிடுவான்.

    மற்றபடி..மனிதன் அன்றும் இன்றும் என்றுமே அறியாமையில் வாழ்ந்து சாகிறான். கி மு வில் வாழ்ந்த மனிதனுக்கு மோரில் பாக்டீரியா இருந்ததோ அல்லது அதுவும் ஒரு உயிர் தான் என்றோ தெரியாமலே வாழ்ந்து செத்தான். அறிவியல் அறிவு வளர்ச்சியால் இன்றைய மனிதன் அதைப் புரிந்துகொண்டு, அது தான் வாழத் தேவையானது என்பதால் அதை தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்து நாம் "கேவ்லமான மனித இனம்" என்பதை ஏற்றுக்கொண்டு தன் பாவங்களை தொடர்கிறான் ஆவன் வாழும் வரை. ஐந்தரை அறிவு பெற்ற மனிதன் தான் அறியாமையால் அது "உயிர் இல்லை" "வாதம்" என்கிறான் அல்லது, அது சிற்றுயிர்தானே?, அது வாழ்ந்தால் என்ன செத்தால் என்ன? அதுக்கு வலி தெரியாது என்று விளக்கெண்ணை வியாக்யாணம் பேசி, தன்னை "நல்லவானாக்கி"க் கொள்ளும் மனநோயாளியாக வாழ்ந்து சாகிறான்.

    5 1/2 அறிவுள்ள இல்லாத கடவுளை தன் வசதிக்கு உருவாக்கி, தன்னை பாதிக்கும் உண்மைகளை அல்லது தான் "தொடாராத, தொடார முடியாத" திருக்குறள்களை "கண்டு கொள்ளாமல்" தனக்கும் தன் அறியாமைக்கும் பெருமை சேர்க்கும் குறளை மட்டும் "ஊது ஊது"னு ஊதுகிறான்.

    ஏன்?? அவனுக்கு 5 1/2 அறிவே என்பது ஒருபுறமிருக்கட்டும். இதில் 5 1/2 அறிவே பெற்ற அற்ப மனிதனுக்கு ஒரு அற்ப சந்தோஷம்! இப்படி அவனை அவனே ஏமாற்றி வாழ்ந்து சாவதுதான் மனித இனம் என்பதெல்லாம் புரிந்துவிட்டால் அவன் அறியாமை பெரிதாகத் தெரியாது. அவன் பேசும் விளக்கெண்ணை வியாகயாணத்தைப் பார்த்து கோபம் வராது! 5 1/2 அறிவே பெற்தால் அவன் மூளையின் செயல்திறன் குறைவால் அவன் இப்படி உளறுகிறான் என்று புரிந்து அவனைப் பார்த்து பரிதாபமாக இருக்கும்.

    மனிதனை விடக் கேவலமான இனம் எதுவும் இல்லை எனது ஆறறிவு பெற்ற மனிதர்களுக்குத் தெரியும். இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு சில ஐந்தரை அறிவே பெற்ற மனிதர்கள், தன் வசதிக்கு, பாக்டீரியாவுக்கு உயிர் இருந்தால் என்ன? ந்மக்குத் தீங்கு விளைவிக்கும் கரப்பான் பூச்சியை, கொசுவை, எலியை எல்லாம் மருந்துவச்சுக் கொன்னால் என்ன தப்பு? தேணிக்கள் சேகரித்த தேனைத் திருடி சாப்பிட்ட்டால் தப்பில்லை, மாடை ஏமாற்றி அதன் பாலைக் குடித்தால் தப்பில்லை, வாலியை மறைந்ந்திருந்து கொன்னால் தப்பில்லை, கர்ணனை வஞ்சித்து கொன்னால் தப்பில்லை என்று பல உண்மைகளை ஏற்க மறுத்து, "வாதம்" என்று சொல்லி தன்னைத் தானே ஏமாற்றி அறியாமையில் வாழ்ந்து சாகிறான் என்பதற்கு "நிதர்சனம்" இங்கு இருக்கிறது. :)

    ReplyDelete
    Replies
    1. When you want to learn something you will have to unlearn something இல்லையென்றால் வாதத்தில் வெற்றி என்று பலரையும் பகைத்துக்ஜ் கொள்ள நேரலாம்

      Delete
    2. வாதத்தில் வெற்றி தோல்வி என்பதெல்லாம் இல்லை சார். வாதிடும்போது பல உண்ம்மைகளை எடுத்துரைக்க ஒரு சூழல் உருவாகுது. பல உண்மைகளை சொல்ல முடிகிறது. அப்படி சொல்வது பொதுவாக எதிர்வாதம் செய்பவனைத் திருத்த என்று தவறாக எண்ணவேண்டாம். வாதத்தின் போது வெளிவரும் உண்மைகள் "சிந்திக்கத் தெரிந்த பொதுஜனங்களுக்கு மட்டுமே. எதிர்வாதம் செய்பவர் சிந்தனைத் திறன் பொதுவாக அவரின் "அகம்பாவத்தால்" செயலிழந்து விடுவது இயற்கை. தூங்குறவனைத்தான் எழுப்ப முடியும்? நெத்துப் போனவனை (முக்கியமாக மூளை)எப்படி எழுப்புகிறது?

      நட்பு பகையெல்லாம் அர்த்தமற்றவை. அது வரூம் போகும். உண்மைகள் மட்டுமே என்றும் நிலையானது. அதைத்தான் நாம் முன்வைக்க வேண்டும்னு நினைக்கிறேன, சார்.

      Delete
  25. //ஆட்ட கடிச்சி, மாட்ட கடிச்சி, இந்த அம்மா நம்ம இட்டிலி சட்டினியிலிருந்து எல்லைவரைக்கும் ஒட்டு மொத்தமா 'வேட்டு' வைக்குதே!

    ஆ! அதானே? சரியாச் சொன்னீங்க :-)

    சாதாரணமான எனினும் சிக்கலான விவகாரம். கும்மியடிக்க எதுவுமில்லையென்றால் பசுவையும் அயோத்தியையும் பிடித்துக்கொள்ளும் கண்மூடிகள் ராஜ்ஜியத்துக்கு குருடர் தலைமை ஒருவகையில் பொருத்தம் தான்.

    பசுவில் உணவைப் பார்ப்பவருக்கும் உணவில் பசுவைப் பார்ப்பவருக்கும் வேறுபாடு இருக்காதா? பிள்ளைக்கறி சாப்பிட்ட "தெய்வீகத்தின்" ஒளியில் மாட்டுக்கறியின் "பாவம்" வெளிச்சம் போடப்படுவது வேடிக்கை.

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதிரி கருத்துப் பதியாமல் இத்தனை நாள் எங்கே சார் ஹைபர்நேஷனில் இருந்தீர்கள்

      Delete
  26. நான் சைவம் தான். ஆனால் இந்த சட்டத்தை எதிர்க்கிறேன். காஸ்யபன் போன்ற சிந்தனைவாதிகள் ஒரு அரசுக்கே ஆலோசனை சொல்லி வழிநடத்தும் வல்லமை பெற்றவர்கள்.
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. இந்த சட்டம்பற்றிக் கருத்து சொல்ல சைவம் அசைவம் என்றிருக்கிறதா சிவகுமாரா

      Delete
  27. நல்ல நடுனிலைமையான கட்டுரை சார்! இரு தரப்பு வாதங்களையும் முன் வைத்த அருமையான கட்டுரை. இது அரசியலாக்கப்படுவதுதான் ஹைலைட். இங்கு எல்லாமே அரசியலாக்கப்படுவதுதானே வழக்கம்.

    ஆனால் ஒன்று முரணாகிறது ஜல்லிக்கட்டுக்குப் போராட்டம் அப்புறம் ஏன் அந்தக் கூட்டம் வேறு எதற்கும் போராடவில்லை என்பது வியப்புதான். அப்புறம் நாட்டில் பிரச்சனைகளே எழவில்லையா? அப்போ அதுவும் அரசியல்தானே??!!!

    அடுத்த சட்டம் வரும் பசுவதை அரசியல் அரைபடும்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அரசியலே இல்லாத நிலை எங்கு இருக்கிறது ஃபார் அண்ட் அகைன்ஸ்ட் வாதங்கள் புரிந்து கொள்ளப் பட வேண்டும் பசுவுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் வேறு விளங்குகளுக்கு இல்லையே அது ஏன் என்றால் பசுவை தெய்வமாக்கி விடுவார்கள் இதையும் அரசியல் ஆக்கி விடுகிறார்கள் இடத்துக்கு இட ம் கலாச்சாரம் மாறு கிறது வித்தியாசமான மக்கள் வித்தியாசமான எண்ணங்கள் இவற்றை மதிக்கத் தெரிய வேண்டும் அதையே மத வாதமாக மாற்றக் கூடாது என்பதுதான் சாராம்சம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
    2. சுவையான பதிவு, அதைவிட சுவையான பின்னூட்டங்கள். நான் சொல்ல நினைப்பதை கீதா அக்கா கூறி விட்டார். ஆகவே ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள நினைக்கிறேன். ஆமை புகுந்த வீடும்,அமீனா புகுந்த வீடும்,அரசியல் புகுந்த பிரச்சனைகளும் ஒன்றுதான்.

      Delete
    3. மாடுகளை "மதித்து" அவைகளை சாகும்வரை அன்பாகப் பார்த்து பராமறிப்பதெல்லாம், நாம் வாழும் வழமையான சூழலில் மட்டுமே சாத்தியம். வயதான ஏழை மக்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள்? சாப்பாடு இல்லை? மருந்து வாங்க வழியில்லை. ஏன் பிச்சைகூட எடுக்கிறார்கள். அப்படி மக்கள் வாழும் சூழலில் மாட்டுக்கு கோசாலை முக்கியமா? இல்லை அந்த ஏழைக் கிழவன் கிழவிக்கு ஒரு மருந்துக்கு, சாப்பாட்டுக்கு அப்பணத்தை செலவிடாலாமா? என்று ஒரு கேள்வியை முன் வைத்தால் பல உண்மைகள் விளங்கும்.

      நாட்டில் பஞ்சம் வரும்போது மனிதன் எவ்வுயிருக்கு முக்கியத்துவும் கொடுப்பது? இருக்கும் கொஞ்ச காசில் மாட்டுத் தீவனம் வாங்குவானா? இல்லை தன் குழந்தைகளுக்கு, வயதான தந்தையர் தாய்க்கு ஒரு வேளை சோற்றுக்கு அதை பயன்படுத்துவானா? என்றெல்லாம் பலர் யோசிப்பதில்லை. மற்றவர் நிலையில் தன்னை வைத்து பார்ப்பதைவிட பகவானை திரூப்த்திப் படுத்துவதில்லேயே பலர் காலத்த்தை ஓட்டுகிறார்கள். பெங்காளி ப்ராமணர்கள் மாமிசம், மீன் எல்லாம் சாப்பிடக் காரணம் அங்கே வந்த பஞ்சத்தால் உயிர் வாழ தன் சாப்பாட்டு முறைகளை மாற்றி நாளடைவில் அது அவர்கள் கலாச்சாரம் ஆகிவிட்டதாக சொல்கிறார்கள்.

      மனிதன் தன் சந்தர்ப்ப சூழ்நிலைக்காக யார் முக்கியம் என்று ஓன்றை "ச்சூஸ்" பண்ண வேண்டுமென்றால் தன் இனத்தைத்தான் தேர்ந்தெடுக்கிறான்.. பசியில் வாடும்போது செத்த மாட்டையும் உயிர் வாழ சாப்பிடுகிறான். வாழை இலையில் 28 கூட்டு வச்சு வாழும் வசதியில்லாத சூழலில் தன் வாழ்க்கை முறையை சர்வைவைல்க்காக மாற்றுகிறான்.
      அதே பின்னால் அவன் கலாச்சாரமாகிவிடுகிறது. தன் பெற்றோர்கள் செய்ததுபோல் தான் வாழ்கிறான். இது தொடர்கிறது.

      இதையெல்லாம் புரிந்து கொள்ளணும்னா கொஞ்சம் உக்காந்து மூளையைக் கசக்கி யோசிக்கணும். தன் சிந்தனைகளை தன் நிலைக்கேற்ப, தன் வசதிக்காக மட்டும் சுயநலமாகப் பயன்படுத்துவதாலும். மற்றவர் சூழலை பத்தி யோசிக்க மறுப்பதாலும் ஏற்படும் விளைவே இங்கு பலரின் கருத்தில் தெரிகிறது.

      Delete
    4. இந்தப்பதிவு 2012ல் வெளியானது அப்போதுஅது கருத்துப் பறிமாறாலாஅக இருந்தது அதன் பின் நிறையவே நிகழ்வுகள் நடந்தேறி இருக்கிறதுமனிதனை விட மாடே முக்கியமாக நினைக்கப்பட்டு செயல்களும் உள்ளன. பொருளாதார விஷயங்களும் கலாச்சார உரிமைகளும் இருக்கிறது அதையே அரசியல் ஆதாயத்துக்கு பயன் படுத்துவதே வேதனை தரும் விஷயம் பலரும் இவற்றுக்கு வக்காலத்துவாங்குவதும் வேதனையைக் கூட்டுகிறது வருகைக்கும் கருத்துப்பதிவுகளுக்கும் நன்றி வருண்

      Delete
  28. @ பானுமதி வெங்கடேஸ்வரன் எந்த கீதா அக்கா மேம் பெரும்பாலான கருத்துகள் பதிவை ஒட்டி இருப்பதாய்த் தெரியவில்லை. அவரருக்கு மனசில் பட்டது கருத்தாகிறது வருகைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. பானுமதி என்னைத் தான் "கீதா அக்கா" என்று அழைப்பார். சொல்லி இருக்கார். மாடுகள் மனிதர்களின் ஜனத்தொகைக்கேற்ற விகிதாசாரத்தில் இருக்கவேண்டும் என்பது சுற்றுச் சூழல் நியதி! இப்போது அதற்கேற்ற தொகையில் மாடுகள் இல்லை. மேலும் மாட்டின் பாலை முழுவதும் கன்றுக்கு விடக் கூடாது. விடவும் மாட்டார்கள். கன்று குடித்தது போக மீதிப்பாலைக் கறப்பவர்கள் இருக்கின்றார்கள். எங்க வீட்டில் (புக்ககம்) மாட்டின் ஒரு காம்புப் பாலை முழுவதும் கன்றுக்கே விடுவார்கள். அதுக்கே கன்றுக்குட்டிக்கு வயிறு நிரம்பி மூச்சு வாங்கும். அதன் வயிறு கொள்ளும் அளவுக்குத் தான் குடிக்க முடியும்.தேனை எடுப்பதென்றாலும் தேனீக்களை விரட்டி விட்டுத் தான் எடுப்போம். அவற்றைக் கொன்று எடுப்பதில்லை. வாலியை மறைந்திருந்து கொல்லவும் இல்லை; கர்ணனை வஞ்சித்துக் கொல்லவும் இல்லை! :) இதைப் பற்றி எழுதினால் போய்க் கொண்டே இருக்கும். இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

      Delete
    2. மீண்டும் மீண்டும் வந்து உங்கள்கருத்துகளுக்கு வலு சேர்க முயல்வது தெரிகிறதுபெர்செப்ஷன் மற்றும் உண்மை என்பதில் வேறுபாடுகள் உணரப்படுகின்றன. சில விவாதங்கள் முற்றுப் பெறுவதில்லை முன்பே ஒரு முறை கூறி இருக்கிறேன் அவரவரையே பென்ச் மார்க்காகஎடுப்பதில் செய்திகள் உணரப்படாமல் போகிறது மீண்டும் நன்றி மேம்

      Delete
    3. ஆஹா!!!மனிதனின் நியாயப்படுத்தல் தொடர்கிறது! ஒரு பக்கம் அறியாமை! இன்னொரு பக்கம் தான் அறிந்தவற்றை வைத்து நியாயப்படுத்தல்கள்!!

      ஒரு பக்கம், வாய்மை, பொய்சொல்லாமை!னு குறள்கள். இன்னொரு பக்கம் ..பொய்மையும் வாய்மையிடத்து புரைதீர்ந்த நன்மை பயக்குமெனில்..
      இதெல்லாம் நியாயப்படுத்தலுக்கு திருவள்ளுவன் செய்த பேருதவி!


      We also dont know whether thiruvaLLuvar followed what he preached others? Or he just preached and failed to follow what he preached as he was another human being!

      நியாயப் படுத்தல்களை பார்ப்போம்..

      கன்று குடித்தபிறகு மிச்சப் பாலைத்தான் நாங்க கறக்கிறோம்!

      ஏன் மாட்டை ஏமாற்றி பாலை கறந்து குடிக்களைனா உயிர் வாழ முடியாதா? எதுக்கு இதெல்லாம் ஐந்தறிவு உள்ள ஜீவராசிட்ட இருந்து பறிச்சு??
      ----------
      தேனீக்களை நாங்க கொல்லவில்லை. கவனமாக விரட்டிவிட்டு தேனை எடுக்கிறோம். தேன் அடையில் ஒரு சில "குஞ்சுத் தேனிக்கள்" இருந்தாலும் அவைகளும் சாகாமல் வாழ வழிசெய்வோம்.

      ஏன் நீங்க தேனீக்களிடன் இருந்து அதன் தேனைப் பறித்து தேன் சாப்பிடலைனா உயிரோடு வாழமுடியாதா? என்கிற கேள்வியை வைக்கிறேன்.

      கரும்பிலிருக்கிறது தேவையான "சுகர்". பேசாமல் கரும்போட நிறுத்திக்கலாமே?

      எதுக்கு பாவம் வாயில்லா ஜீவன் தேனீட்ட போயி இப்படி நடந்துக்குறீங்க???

      இதற்கும் பதில் வரும்!!

      தேனிக்கள் தேவைக்கு அதிகமாக வைத்து இருக்கிறது. அதனால நாங்க அதனிடம் இருந்து திருடுகிறோம்.

      நியாயப்படுத்தல் தொடரும்.

      வாலியை இராமர் மறைந்திருந்து கொல்லவில்லை! வாலிக்கு ராமர் செய்த உபதேசத்தில் மனம் வருந்திய வாலி தன்னைத்தானே நொந்துகொண்டு தற்கொலை பண்ணிட்டு செத்துட்டாரு! ஆமா என்ன ராமாயணம் படிச்சீங்க நீங்க? தப்புத் தப்பா சொல்லிக்கிட்டு. வால்மிகியின் ஒரிஜினல் வேர்ஷன் எங்காத்துல இருக்கு! :) எனக்குத்தான் தெரியும் அவர் சமச்கிரதத்தில் என்ன சொல்லியிருக்கார்னு!:)

      கர்ணன் சாகவே இல்லை!போர்களத்தில் இருந்து ஓடியே போயிட்டாரு. கிருஷ்ணன் போதனைனு பேரில் அறுத்த அருவை தாங்க முடியாமல்!யார் சொன்னா உங்களுக்கு அவரை கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனுக்கு வழிகாட்டி கொன்னாருனு? உண்மை என்னனா வில்லு அம்பே அர்ஜுனன் போருக்கு எடுத்துட்டு போருக்கு போகவில்லை!

      நான் ஒரு ஆளுதான் வால்மீகி, வியாசர் ரெண்டு பேரும் எழுதிய ஒரிஜினல் சமஸ்கிரத வேர்ஷன் படிச்சேனாக்கும்! நீர் எதையோ எப்படியோ புரிந்து கொண்டு "கதை விடுகிறீர்" நான் வேணா அந்த ஒரிஜினல் சான்ஸ்க்ரிட் வேர்ஷன் தர்ரேன் படித்துப் பாரும்!

      இப்படியும் நியாயப்படுத்தலைத் தொடரலாம். அது தொடர்ந்துகொண்டேதான் போகும்.

      Delete
  29. இப்பதிவுக்கு வந்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி இருந்தாலும் ஒன்று கூறாமழ்ல் இருக்க முடியவில்லை. பதிவில் மிகத்தெளிவாக வாத விவாதங்கள் கையாளப்பட்டிருக்கின்றன. ஆனால் கருத்திடுவோர் பலரும் அவரவர் கண்ணோட்டதிலேயே எழுதுவது பதிவில் சொல்லி இருக்கும் கருத்துகளை சரியாக உள்வாங்கவில்லையோ என்னும் ஐயத்தை எழுப்புகிறது இது பதிவுலகில் சாதாரணமாகக் காணப்படுகிறது மீண்டும் நன்றியுடன்

    ReplyDelete