Friday, September 30, 2011

வார்த்தை...

வார்த்தை..
-------------

           சில நாட்களுக்கு முன் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி
சானலில்,திரு.கோபினாத் நடத்திய “நீயா, நானா” நிகழ்ச்சி
பார்க்க நேர்ந்தது. பேசுவதற்கு எடுத்துக்கொண்ட தலைப்பு
வார்த்தை. நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது பலரும் பல
விதமாக வார்த்தைகளைப் பற்றிய தங்கள் கருத்துக்களை
தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

          பிடித்த வார்த்தை ,பிடிக்காத வார்த்தை, அடிக்கடி கேட்கும்
வார்த்தை, வெறுக்கும் வார்த்தை பாதிக்கும் வார்த்தை எனறு
பலரும் பலவிதமாகச் சொல்லிக் கொண்டு வந்தனர்.

         வெறும் வார்த்தை என்று நாம் எண்ணும் சில ,உள வெளிப்
பாடுகள் , எவ்வளவு சக்தி வாய்ந்தது என்று புரிய வைத்தது.
இதைப் பற்றிய சிந்தனைகள் நூற்றாண்டுகளுக்கு முன்பே
இருந்திருக்க வேண்டும். “ தீயினால் சுட்ட புண் உள்ளாறும்,
ஆறாதே நாவினால் சுட்ட வடு.” “ இனிட உளவாக இன்னாத
கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.” என்பன போன்றும்,
உதிர்க்கப்பட்ட வார்த்தைகளை அள்ள முடியாது என்பன
போன்றும், சொல்லப்படாத வார்த்தைகளுக்கு நாமே எஜமானர்
என்பன போன்றும் பல எண்ணங்கள் மனசில் வந்து மோதியது.

         சில நேரங்களில் உணர்ச்சிப் பெருக்கால் உமிழப்படும்
வார்த்தைகள் எவ்வளவு தீவிரமாகக் காயப்படுத்துகிறது
என்பதையும் சிந்திக்க வைத்தது.

         நான் என் மகனிடம் சின்ன வயதில் நடந்ததில் அவன்
நினைவுக்கு திடீரென்று வருவது என்ன என்று கேட்டபோது.
அவன் சொன்ன பதில் என்னை ஆட வைத்து விட்டது. எனக்கு
நன்கு படிக்கும் பிள்ளைகள் கணிதத்தில் ஈடுபாடு கொண்டவர்
களாக இருப்பார்கள் என்றும் கணிதத்தில் ஈடுபாடு உள்ளவர்
புத்திசாலிகள் என்றும் எண்ணம் இருந்திருக்கிறது. அதை நான்
நியாயப் படுத்த வில்லை. அவன் கணிதத்தில் குறைவான
மதிப்பெண்கள் எடுக்கும்போது நான் அவனைக் கடிந்து கொண்டு
வாழ்வில் அவன் உருப்படுவது கஷ்டம் என்ற முறையில்
கூறியிருக்கிறேன் சாதாரணமாகப் பெற்றோர்களின் நிலையில்
இருந்து நான் அவனைக் கடிந்து கொண்டது அவனுக்கு மனசில்
ஆழமாக வலி ஏற்படுத்தி இருக்கிறது. என் எண்ணம் தவறு
என்று எனக்குணர்த்த அவன் பின் ரசாயனப் பிரிவில் பட்டப்
படிப்பு முடித்து பிறகு எம். பி. ஏ தேறி இன்று ஒரு உன்னத
நிலையில் இருக்கிறான். அவனை அந்தக் காலத்தில் கடிந்து
கொண்டதால் தான் ஒரு வெறியுடன் முன்னுக்கு வந்ததாய்
என்னை சமாதானப் படுத்துகிறான். இதுவே நேர் மாறான
விளைவுகளை ஏற்படுத்தி இருந்தால் என் ஆயுசுக்கும் நான்
வருத்தப்பட்டுக் கொண்டுதான் இருந்திருப்பேன். என் நண்பன்
ஒருவன் அவனது மகனைக் கணினி கற்றுக்கொள்ள கம்ப்யூட்டர்
பாயிண்ட் என்ற நிறுவனத்தில் விசாரித்திருக்கிறான். அங்கு என்
மகன் பணியாற்றிக் கொண்டிருந்தது தெரியாத அவன் என்னிடம்
அதன் மார்க்கெடிங் அதிகாரி எஸ்கிமோக்களிடமே
ரெஃப்ரிஜிரேட்டர் விற்றுவிடும் திறமை படைத்தவராக
இருக்கிறார் என்று கூறிய போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு
ஈடே இருக்கவில்லை.

         எனக்குத் தெரிந்த ஒருவர் கடற்படையில் பயிற்சியில்
சேர்ந்திருந்த காலம். விடுமுறை முடிந்து பயிற்சிக்குத்
திரும்பியவர், வீட்டு நினைவில் சற்றே கவனக் குறைவாக
இருந்திருக்கிறார். பயிற்சி அளிப்பவர் இந்தியில் அவரை அம்மா
பெயருக்குக் களங்கம் விளைக்கும் ஏதோ ஒரு வார்த்தையை
உபயோகித்திருக்கிறார். ஆத்திரமடைந்த என் நண்பர், கையில்
இருந்த ரைஃபிளால் பயிற்சியாளரை ஓங்கி அடித்திருக்கிறார்.
பிறகு அதன் பலனாக தண்டனையாக மருத்துவமனையில் மன
நோயாளிகள் பிரிவில் சில நாட்கள் காலங் கழிக்க வேண்டி
இருந்தது.

          சில வருடங்களுக்கு முன்னால் இந்திய கிரிக்கட் அணி
ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது நமது ஆட்டக்காரர் ஹர்பஜன்
சிங் இந்தியில் “ மாகி “ என்று ஏதோ சொல்லப்போக அது ஆண்ட்ரூ
சைமண்ட்ஸ் காதில் “மங்கி” என்று கேட்கப்போக அது ஒரு பெரிய
இனப் பிரச்சனையை இரு அணிகளுக்கும் இடையில் தோற்று
வித்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

          சில வார்த்தைகள் உச்சரிக்கப்படும் விதத்திலும்
தொனியிலும் மாத்திரையிலும் வேறு வேறு பொருள் கொடுக்கும் உதாரணத்துக்கு இந்த ஓரெழுத்து வார்த்தை “ ஓ “
என்னவெல்லாம் பொருள் கொடுக்க முடியும் என்று முயற்சித்துப்
பார்த்தால் தெரியும்.

        ஒரு வார்த்தை ஒரு லட்சம் என்னும் நிகழ்ச்சியில் கொடுக்கப்
படும் “ க்ளூக்கள் “ உதவி கொண்டு வார்த்தை கண்டு பிடிக்கப்பட
வேண்டும். சுவாரசியமான விளையாட்டு. விஜய் தொலைக்
காட்சியில் காணலாம்.

        என்னைப் பொறுத்தவரை இரண்டு வார்த்தைகள் என்
வாழ்க்கையின் பெரும்பகுதியை ஆக்ரமித்திருக்கின்றன. ஒன்று
அன்பு, மற்றது ஏமாற்றம். நான் யார் யாரிடம் அன்பு செலுத்தி
மகிழ்ந்தேனோ அவர்களில் பலரும் ,அதில் ஒரு பங்காவது
திருப்பிச் செலுத்தாதது என்னை மிகவும் ஏமாற்றத்துக்கு
உள்ளாக்கியிருக்கிறது.
------------------------------------------------------------------- 

Tuesday, September 27, 2011

பாவைக்கு ஒரு பாமாலை...

பாவைக்கு ஒரு பாமாலை...
------------------------------------

அன்றொரு நாள் மாலை அந்திசாயும் வேளை,
இரட்டைக் குழலுடன், பூரித்தெழும் அழகுடன்,
பதினாறின் பொலிவுடன், பரிமளித்த பாவை உன் முகம்
கண்டதும் கொண்டேன் காதல். 


காதலுணர்ந்தது கண் வழி புகுந்து, கருத்தினில்
கலந்து வித்தை செய்த விந்தை கண்டோ.?
அருகில் இருந்தவன் யாரந்த அழகி எனக்
கேட்டதும் கொண்ட கோபம் உணர்ந்தோ.?


உணர்ந்தவன் அப்போது அறிந்திலேன்;
ஆடிவரும் தேரை யாரும்
காணாதிருக்கச் செய்தல் கூடுமோ,?அயலவன்
உன்னை ஆராதிப்பதைத் தடுக்கவும் இயலுமோ.?


        இயன்றதென்று ஒன்றும் இருக்கவில்லை,
        நாலாறு வயசுநிரம்பா நிலையில்
        மெய் விதிர்க்க,வாய் உலர, தட்டுத் தடுமாறிய
        நெஞ்சைக் கட்டுப்படுத்த என் எண்ணத்தில்.


எண்ணத்தறியில் பின்னிப் பிணைந்திழையோடும்
நினைவுகளூடே உடல் பொருள் ஆவி அனைத்திலும்
நிலைத்து நின்ற உன் நீங்கா நினைவுகளை
உனக்குணர்த்த தேர்ந்தெடுத்தேன் உன் புகைப்படம். 


        படத்தின் பின்னே எழுதிக் காட்டினேன்.
        மாறுபட்ட சாதி வேறுபட்ட மொழி
        என்றே இருப்பினும் ஒன்றுபட்ட உள்ளம்
        கொண்டிணைய கைத்தலம் பற்றும் கனவினை. 


கனவுகளூடே காலங் கழித்தேன் -அதில்
நிலவைப் பழிக்கும் முகம், நினைவைப் பதிக்கும் கண்கள்,
கைத்தலம் பற்றுமுன்னே என்னை உன் பால் ஈர்த்த
நடை,குரல், அதரங் கண்டு மிடுக்கோடு உலாவினேன். 


        உலவினவன் உயிர்த்துடிப்பும் உள்ளத் திமிரும்
        தினாவெட்டும் மட்டுமே காணும்பலர் என்
        நெளிவும் சுளிவும் அறியாதார் என் குறைபாடு
        கூறியே நம்மைப் பிரிக்க முயலலாம். 


முயல்பவர் முனைப்பு முளைக்கும் முன்னே
முறியடித்தல் அவசிய முணர்ந்து என்னை நான்
நானாக உனக்குணர்த்த அறிமுகப்படுத்தினேன்
என்னையே நம்பியிருந்த என் உறவுகளை. 


        உறவுகள் பலமா பாரமா என்றறியாத
       அறியாப்பருவப் பாவை நீ ,எனை நம்பி என்
        பின்னெ நிற்கும் தலைகளின் எண்ணிக்கைஅறிந்தும்
        ஏதும் அறியாமல் என் பின்னே வந்தனை மணமகளாய். 


மணமகளாய் வந்த நீ மாசிலா மணியே,
மனமகிழ்ந்து அமைதி காத்து, அறம் காத்து, என்
அகம் காத்து,சுமை தாங்கி,என் உலகின் துயரங்கள்
துடைத்தவளே, கண் காக்கும் இமைபோல் எனைக் காப்பவளே


       காக்கும் உன் கண்கள் என் வாழ்வின் கலங்கரை
       ஒளிவிளக்கு;துயிலாத கண்களும் தூங்காத மனமும்
       கொண்டே சுந்தரி, உனை நாடினேன் -அக்கணமே
       தொலைந்ததென் துயரங்களே, சஞ்சலங்கள் தீர்ந்தனவே

தீராத குறை எனை ஈன்றெடுத்த அன்னை முகம்
அறியாததென்றால், இருக்கும் ஒன்றை மறுத்து மறந்து
தாயாய்த் தாதியாய் ,என் இல்லக் கிழத்தியாய் இருப்பவள்
உன்னை என்னவென்று கூறி நிறையென்பேன். 


        நிறையென்று உனைக்கூற நீ நீயாக இருந்து
        நாளெல்லாம் பரிவுடன் பாங்குடன் ஏழையென்னை
        ஏற்றுக்கொண்ட ஏந்திழையே, இருக்கின்ற ஒரு
        மருந்தை அறியாமல் இன்னலுற்று ஏன் இடர்பட வேண்டும்


வேண்டுதல் வேண்டாமையெல்லாம் அறிந்து என்
அகக் கண்ணுள் அமர்ந்திருக்கும் அகல் விளக்கே
நிதியே, என் நெஞ்சமெல்லாம் நீங்காத நீரூற்றே
உள்ளமெலாம் நிரம்பி வரும் நிரந்தர நினைவலையே.


       நினைவெல்லாம் நீயாய் நினைப்பினும் நினையாதிருப்பினும்
       என்னுள் நிகழும் ரசாயன மாற்றம் அன்றைக்கின்று
       குறைந்திலை;உணர்ந்ததை அளவில் ஒடுக்க நானென்ன
       அறிவில்லாதவனா அறிவில் ஆதவனா.?

ஆதவன் உதித்தெழ இருள் நீங்கி பொழுது புலரும்,
மாதவம் செய்துன்னைக் கரம் பிடித்த நான்
மருள் நீங்கி என்னருகே நீயிருக்கும் துணிவில்
காலனை மறுமுறைக் காலால் உதைக்கக் காத்திருக்கிறேன். 


      காத்திருக்கும் காலமெல்லாம் கண்ணிரண்டே போதாமல்
      உணர்வோடும் உயிர்ப்போடும் உனைப் பிரியாமல் நான்
      எழுதும் புதுப் பாடலும் புகழாரமும் புனிதமே,
      பாயிரமாய் புவியெங்கும் ஒலிக்கட்டுமே, உலவட்டுமே.
----------------------------------------------------------------------------
( என் எல்லாத் துயரங்களிலும் இருந்து எப்போதும் எனை மீட்டெடுக்கும் 
என் அன்பு மனைவிக்கு நான் செய்யும் கைம்மாறு இதுவே. )
     


Thursday, September 22, 2011

வீழ்வேனென்று நினைத்தாயோ. ?

வீழ்வேனென்று நினைத்தாயோ.?
----------------------------------------------

பதினாறாம் தேதி மதியம் உணவருந்திக் கொண்டிருந்தேன்.
தொலைக் காட்சிப் பெட்டி எதிரே சோபாவில் அமர்ந்து
இருந்தேன். இடுப்பு வேதனையால் எழுந்து நடமாட முடியாமல்
இருந்ததால் மனைவியே சாதம் பிசைந்து கொடுப்பாள். குழம்பு
சாதம் சாப்பிட்டு தயிர் சாதத்துக்காக சாப்பாட்டுத் தட்டை
மனைவியிடம் கொடுத்தேன்.திடீரென்று தலைக் குப்புற
வீழ்ந்து இருக்கிறேன். ஏதும் புரியாத மனைவி அழுது அலறத்
துவங்கி இருக்கிறாள். கண்களில் கண்ணீர் கரகரவென வழிய,
"ஐயோ ,என்ன ஆயிற்று" என்று கதறிக் கொண்டிருந்தாள்.சில
வினாடிகளில் எழுந்திருந்த நான் “என்னம்மா அழுகிறாய்;
என்ன ஆயிற்று.?”என்று விசாரிக்கவும், அழுது கொண்டே
நடந்ததை விவரித்தாள். அப்போதுதான் நான் சோபாவின் கீழே
இருப்பதும், என் கண்ணாடி கீழே விழுந்து கிடந்ததும்,பார்த்தேன்
அந்த அவசரத்திலும் நான் இடுப்புக்கு அணிந்திருந்த பெல்ட்
பேடை என் மனைவி அவிழ்த்திருந்தாள். என் இடது கண்ணின்
மேல் புருவ பாகம் நேராகத் தரையில் மோதியதும் என் மூக்குக்
கண்ணாடி என் இடக்கண்ணின் பக்க வாட்டில் குத்தி மெட்டல்
ஃப்ரேம் கோணலாகிப் போனதும் தெரிந்தது என் மனதில்
தோன்றியதை உடனே என் மனைவியிடம் கூறினேன். “நீ
அழாதே. நான் தான் அவனை எட்டி உதைத்துவிட்டேனே. I HAVE
JUST KICKED HIM " என்றேன்.

உடனே என் மக்களுக்கு செய்தி பறந்தது. பெரியவன் வெளியூரில்
இருந்தான். சின்னவன் அடுத்த நாள் டெல்லி செல்ல திட்டமிட்டு
இருந்தான். அதை கேன்சல் செய்து உடனே ஓடி வந்தான். என்னை
அவன் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான்.

எந்தஒருமுன் அறிவிப்புமின்றிதிடீரென்று நான் குப்புறவீழ்ந்திருக்
கிறேன். எனக்கு இடுப்பு வலி தவிரவேறு உபாதைகள் இருக்க
வில்லை. ரத்த அழுத்தம் சர்க்கரை, கொழுப்புஎன்று எதுவும்
கிடையாது. தலைசுற்றல் மயக்கம் எதுவும் இருக்கவில்லை.
சுருங்கச் சொல்லப்போனாலெந்த மாதிரி முடிவு எனக்கு வர
வேண்டுமென்று நான் வேண்டிக் கொண்டிருந்தேனோஅது அடுத்து
வந்து எகிறி விட்டது. நான் “ காலா, என்னருகே வாடா, ;உன்னை
சற்றேமிதிக்கிறேன் என் காலால்” என்று அடிக்கடி நினைப்பதும்
கூறுவதும் எழுதுவதும் உண்டு. எனக்கே தெரியாமல் என்னை
அழைக்க வந்தவனை நிஜமாகவே நான் உதைத்து விட்டேனா.?
என் மனைவியைப் பார்த்தபோது நான் உணர்ந்தது இதுதான்.
நான் போய்விட்டேன் என்றே நினைத்துக் கதறி இருக்கிறாள்.
நான் உண்மையில் போனால் எப்படிக் கதறுவாள் என்றும்
கண்டு கொண்டேன்.

முண்டாசுக் கவிஞனின் கவிதை வரிகளில் உள்ளதுபோல்தேடிச்
சோறு நிதம் தின்று,கவலைகளில் உழன்று, ( ஆனால் நான்
அறிந்து யாரையும் கவலையில் உழலச் செய்ய வில்லை )நரை
கூடிக் கிழப் பருவமெய்தி வேடிக்கை மனிதர் போல் வீழ்வே
னென்றுநினைத் தாயோஎ ன்று கேள்வி கேட்பது அபத்தம் போல் தோன்றுகிறது.

நம்மால் வீழாமல் இருக்க முடியுமா.?அவனே வீழ்ந்தவன் தானே.
 காலனை காலால் என்றும் எப்போதும் உதைக்க முடியுமா? (இப்
போது நான் உதைத்து விட்டாலும் )தவிர்க்கப்பட முடியாதது
தானே மரணம்.?அனுபவிக்கப்பட வேண்டியதுதானே என்று
கூறும்போது  அனுபவம் பகிர்ந்து கொள்ள்க் கூடியதா?வீழ்ந்தவன்
நான எழாமல் போயிருந்தால் நான் பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து
 கொண்டிருக்க முடியாதே. இந்த அனுபவம் ஒன்று தெரிவிக்கிறது.
மரணம் நிகழ்வது நொடி நேரத்துக்குள். வலி என்று ஏதும் கிடை
யாது.அப்படி  இருந்தாலும் யாரிடமும் தெரிவிக்க இயலாது.
நினைத்து ஏற்படும் பீதியும் பயமும்தான் அதிகம்.
மரணிப்பவனால் அவனுக்கு எந்த பாதகமும் இல்லை. இருப்பவர்
களுக்கே எல்லா கஷ்டங்களும் நஷ்டங்களும். அதுவும் சிறிது காலத்துக்குத்தான் பிறகு எல்லாம் மறந்து விடும். என்னைப்போல்
இருப்பவர் போவதால் எந்த பாதகமும் யாருக்கும் இருக்கப்
போவதில்லை. நான் எனக்கிடப்பட்ட எல்லா கடமைகளை
முடித்துவிட்டேனே.!இனி நான் இருப்பதால் எந்த பலனும் இல்லை.
போவதால் எந்த நஷ்டமும் இல்லை.

இன்று நான் என் இல்லத்துக்கு போவதாக இருக்கிறேன். என்னை
மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள். தலையில் எம்.ஆர். ஐ.
எடுத்தார்கள். எந்த பாதிப்போ பிரச்சனையோ இல்லை.கண்கள்
மட்டும் பாக்சிங்கில் குத்து வாங்கியவன் கண்கள் போல ப்ளாக்
ஐயுடன் இரத்த சிவப்பாக இருந்தது. இப்போது அதுவும் தேவலை.

என் இடுப்பும் நிதானமாகத் தேறி வருகிறது. ஆங்கிலத்தில் சொல்
வது போல ALL IS WELL THAT ENDS WELL. உட்காரவும் எழுந்து
நிற்கும்போதும் சிறிது சிரமமாக இருக்கிறது. மற்றபடி 90%
நலமாகி விட்டேன்.

ஒரு கொசுறு செய்தி. -என் மனைவி பாத் ரூம் சென்றிருந்தபோது
யாரோ அழைப்பு மணியை விடாது அழுத்த நிதானமாக எழுந்து
நான் கதவைத் திறக்கச் சென்றிருந்தேன். பாத்ரூமிலிருந்து
வந்த என் மனைவி என்னைக் கட்டிலில் காணாமல் கீழே
தேடியிருக்கிறாள்.!

ஒரு கற்பனை.- நான் மட்டும் நானாக இல்லாமல் என் நினைவாக
மாறியிருந்தால் என்ன மாதிரி சம்பாஷ்ணைகளும் பேச்சுகளும்
நடந்து கொண்டிருக்கும். !

விடாமல் தொடர்ந்து நான் வலைக்கு வர இன்னும் சிறிது காலம்
பிடிக்கலாம். வித்தியாசமான பதிவுகள் இட எண்ணிக் கொண்டு
இருக்கிறேன். என் முந்தைய பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள்
பெரும்பாலும் என் உடல் நலம் வேண்டியே இருந்தன. எல்லோ
ருக்கும் என் மனமார்ந்த நன்றி.
--------------------------------------------------------------------------



.






Monday, September 12, 2011

காலத்தின் கோலம்...

காலத்தின் கோலம்....
---------------------------

ஆடவும் பாடவும் ஓடவும் ஒன்றாய்க்
கூடவும் ஆசை இருந்தென்ன லாபம் 
உள்ளத்தின் ஆவல் உடலு ணர்ந்து 
செயல்பட்டி ருந்ததந்தக் காலம்.  

நேற்றைய நாளில் நினைவைக் கடத்தியும் 
கூற்றுவன் எண்ணமென் நெஞ்சினில் நீங்கா 
திருக்கவே அறிந்தேன்நான் காலனின் வரவை 
தவிர்த்தல் இயலா தெனவே. 

பல்வேறு எண்ணங்கள் சிந்தையி லழுத்த 
சொல்லொணாத் துன்பங்கள் ஆட்டிப் படைப்பினு 
மெல்லாம் மறக்கவே செய்ததென் பேரன் 
செல்லம் அவன்சொன்ன சொல். 

படிக்கவோ எழுதவோ பாடமேது முனக்கில்லை
அடிக்கவோ கடிந்துரைக்கவோ ஆசிரியருமில்லை
தேடிப்பிடித்துக் குறைகாணத் தாயில்லை தந்தையில்லை 
பிடித்தபோது தொலைக்காட்சி காணத் தடை 
ஏதுமிருந்ததில்லை. தாத்தா உன் பாடு ஜாலிதான்
மகிழ்வோடு உன்னைப்போல் நானிருப்பதெந்தக் காலம்

( எதுவும் கடந்து போகும் என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதில் நான் நலமாக 
இருக்கிறேன் என்று எண்ணும்போது என் உபாதையில் முக்கிய பங்கேற்ற இடுப்பு 
வலி “ நான் எங்கும் போகவில்லை” என்று கூறும் வகையில் அவ்வப்போது 
வந்து வருகையை பதிவிட்டுச் செல்லும் என்று எழுதியிருந்தேன். அவர் இந்த 
முறை வந்து உன்னை விடுவேனா என்று வந்து பாடாய்ப் படுத்துகிறார் வலி 
காரணமாக வலைப் பக்கமே வர முடிய வில்லை. இதையும் மிகவும் சிரமத்
துடன் எழுதுகிறேன். பதிவு முன்பே எழுதியிருந்தது. இப்போது பிரசுரிக்கிறேன். 
முற்றும் நலமான பிறகு ரெகுலராக வருவேன். அதுவரை மற்ற பதிவர்களின் 
பதிவுகளுக்கு பின்னூட்ட மிடாதது பற்றி தவறாக எண்ணவேண்டாம் என்று 
கேட்டுக் கொள்கிறேன். நன்றி.) 
 .  





.    

Monday, September 5, 2011

தனிமைப் பறவை.

(  மாதங்கி மாலி அவர்கள் ஃபேஸ் புக்கில் ஆங்கிலத்தில் The Lonely Bird 
என்று ஒரு பத்தி எழுதியிருந்தார். அக்கருத்தை எடுத்தாண்டு நானும் 
தமிழில் “தனிமைப் பறவை “ என்றொரு பத்தி ஃபேஸ் புக்கில் எழுதியிருந்தேன். 
அதனை இங்கே பதிவாக இடுகிறேன். மாதங்கிக்கு நன்றி )  


                                                 தனிமைப் பறவை
                                   ----------------------------
மஞ்சள் வெயில் மாலை மதி மயங்கும் வேளை
ஆதவன் மேற்கே மறைய மறைய
செக்கர் வானச் சிவப்பினூடே கருமேகம்
களைகட்ட ,இருட்டு கோலோச்சத் துவங்க
மென்காற்று வீச மெய் குளிரத் துவங்கியது.

அகண்ட வானில் புள்ளினங்கள் அழகாக ஓர்
ஒழுங்கில் சீராகப் பறந்து தத்தம் கூடுகள் நாட,
எல்லாம் சென்றதைக் கண்ட நான்
தூரத்தே தன்னந்தனியே ஒரு சிறு பறவை
ஆயாசத்துடன் பறந்து வருதல் கண்டேன்.

“புள்ளே நீ ஏன் பின் தங்கி விட்டாய்.?
சிறகில் வலிமை குறைந்ததோ ?
உன் குஞ்சுகளுக்கு இரை கிடைக்க நீ
வெகுவாகப் பாடுபட்டாயோ.?
தானியங்கள் சிதறிக் கிடக்க வில்லையோ.?
புழுக்கள் மண்ணுக்கடியில் பதுங்கி விட்டனவோ?
இரையின்றி நீ சென்றால் அவற்றின்
ஏமாற்றம் தாங்க முடியாததோ.?

இருந்தாலும் சின்னப் பறவையே
உன் கூட்டம் விட்டு நீ பின் தங்கிச் செல்வது
எனக்கு என்னவோ போல் தோன்றுகிறது
இருட்டி விட்டால் உனக்குப் பாதை தெரியுமா.?
விரைவாய் சிறகசைத்துச் செல் சின்னப் பறவையே
தனியே இருத்தல் இவ்வுலகில் கொடிது.

நான் கண்களை மூடிக் கொள்கிறேன்.
நீ உன் சிறகசைப்பை விரைவாக்குகிறாய்
இருட்டினூடே நீ மறைந்து விடுகிறாய்.
உன் கூட்டிற்குள் சேர்ந்து விடுகிறாய்.
உன் குஞ்சுகள் ஆர்பரிக்க உன் அலகால்
அவற்றுக்கு ஆகாரம் ஊட்டுகிறாய்.

நன்றாயிரு பறவையே .நீ நலமாயிரு.
உன் நலம் நாடி கண்களை விழிக்கிறேன்.
சென்று வா என் சின்னப் பறவையே.”
-------------------------------------------------