Thursday, December 30, 2010

எண்ணத் தறியில் எட்டு மணி நேரம்.

எண்ணத் தறியில் எட்டு  மணி நேரம்
--------------------------------------------------------
  என்னுடைய  ஆங்கிலப்  பதிவான  RANDOM  THOUGHTS  IN  EIGHT HOURS -
தமிழில்  மொழி  மாற்றம்  செய்து  எழுதியது.

             மனித இயந்திரங்களை இயங்க வைக்கும் ஆலைச் சங்கு ஊதுகிறது. ஒ...! சங்கோசையால்  கட்டுப்படுத்தப்படும் வாழ்க்கையும்  ஒன்றா.? விரக்தி ஏற்படுவதால்  என்ன பயன். .?வேலையைத் துவங்க வேண்டியதுதான்....நடக்கட்டும்.  மெஷினை   ஆன் செய். கருவிகளை  சுத்தம்  செய். திருத்தப்பட  வேண்டிய  பாகம்  மெஷினில்   பொருத்தப்படட்டும். ஹூம்..!  " ட்ரேசர் "  ஊடுருவும்  வழியில் பாகமும்   கடையப்படும் .

            மாற்றங்கள் இல்லாத, கட்டாயப்  படுத்தப்படும்  சங்கோசையால் கட்டுப்படுத்தப்படும் , இயந்திர வாழ்க்கை. அப்படி இல்லையென்றால்  யாருமே  வேலை
செய்ய மாட்டார்கள். காலையில் "பஞ்ச" செய்வதற்கு ஓடிவரும் ஆட்களைப் பார்க்கிறாய். அந்தக் கட்டாயமும் கட்டுப்பாடும் இல்லையென்றால் நேரத்துக்கு வேலைக்கு வருவார்களா.?"பஞ்ச" செய்ய வேண்டாத சூப்பர்வைசர்களும்   அதிகாரிகளும் எத்தனை முறை எவ்வளவு நிதானமாக வருகிறார்கள். நீள்பாதை  போட வேண்டியவர்களே  கிட்டப்  பார்வையினராகிறார்கள் . போதாக்குறைக்கு  "டிசிப்ளின்"  பற்றி  எல்லோரும் பாடம்  நடத்துகிறார்கள்.

            மெஷினில் வேகம் கூடுதலாக உள்ளது. சரிசெய். ஹூம் ! என்ன நினைத்துக் கொண்டிருந்தாய். டிசிப்ளின், ஒழுங்கீனம் அல்லது கட்டுப்பாடின்மை இதற்கு என்ன காரணம். ஒன்று தோன்றுகிறது. வேலைக்கு மூன்று நிலைகளில் ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.தொழிலாளி, மேற்பார்வையாளர், அதிகாரி.-- இவர்களெல்லாம் எப்படிப்பட்டவர்கள்.கிட்டத்தட்ட ஒரே நிலையில்  இருப்பவர்கள். மொழி, இனம், கலாச்சாரம், பின்னணி, வயசு  போன்றவற்றில்  மெத்த  மாறுதல்  இல்லாதவர்கள்.  வித்தியாசம்தான்  என்ன.? சிலபல  ஆண்டு  படிப்பறிவு. .-- இது  எவ்வளவு  பெரிய  மாற்றத்தை  ஏற்படுத்துகிறது.  புத்திசாலியான, சூட்டிகையான
கடினமாக  உழைக்கும்   இளைஞர்கள்  கீழ்  மட்டத்தில்  நிறைந்த  அளவிலும், .- எல்லா
விதத்திலும்   சாதாரணமான  அல்லது  அதற்குச்  சற்றே  குறைவான, ஆனால்  கொடுத்து  வைத்த  இளைஞர்கள் உயர்  மட்டத்தில் நிறைந்த  அளவிலும் .-- இரண்டு   குழுவிலும்  அனுபவம்  இல்லாத, சூடான  இரத்தமுள்ள, மன  முதிர்ச்சியடையாத   இளைஞர்கள் .  இங்கு ஒழுக்கமும்  கட்டுப்பாடும்  எப்படி  காயப்படுத்தப்  படுகிறது.? தொழிலாளிக்கு  உள்ள  பிரச்சனைக்குத்  தீர்வு  கொடுக்க  வேண்டியது  மேற்பார்வை  யாளரின்  கடமை. அவருக்கு  ஏற்படும் தொல்லைகளுக்கு  தீர்வு  காண்பது  அதிகாரிகளின்   கடமை . ஆனால்  தொழிற்சாலைகளில்  மூன்றாண்டு , ஐந்தாண்டு  தொழிற்கல்வி  பட்டப்படிப்பு  வெறும்  ஏட்டுச்சுரைகக்காயதானே.? பிரச்சினைகளுக்கு  தீர்வு  காணும்  அனுபவம்  எங்கே.? அனுபவம்  ஏற்படும்  முன்னே உயர் பதவி --படிப்பின்  அடிப்படையில் அமர்த்தப் படுகிறார்களே. வேண்டுமானால்  பிரச்சினையை  எடுத்துச்  சொல்லும்  முறையில்  மாறுதல்  இருக்கலாம். தொழிலாளி  தமிழில்  சொன்னால்   அதிகாரி  ஆங்கிலத்தில்  சொல்லுவார். கீழ்மட்டத்  தொழிலாளிகளால்  சொல்லப்படும்  பிரச்சினைகள்  அநேகமாக  தொழில்  ரீதியில்  தீர்க்கப்  படாமலேயே  இருக்கும் . தேவைகள்   மாற்றி  அமைத்துக்  கொள்ளப்படும் . காம்ப்ரமைஸ்  செய்யப்படும் .தொழிலாளிக்கு  இது  புரிந்தாலும்  காட்டிக்கொள்ள  மாட்டான். அவனுக்கு  மேலதிகாரிகளின்  தயவு தேவை..தாமதமாக  வர, சீக்கிரம்  போக, ஓவர்டைம்   வேலை  கிடைக்க..- சலுகைகள் தேவை. தனிப்பட்ட  முறையில் அதிகாரிகளும்  ஆட்களை  இந்தச சில்லரைப் பிச்சைகள்  மூலம்  அடக்கி  வைக்கின்றனர். அதிகாரிகளிடம்  மதிப்பு, மரியாதை, விசுவாசம்  தேய்கிறது. அதிகாரி,  குறி, இலக்கு இவற்றுக்கு  கொண்டு  செல்பவனாக  இல்லாமல்  உத்தரவு  பிறப்பிப்பவனாக  இருக்கிறான். எங்கிருந்து  ஒழுங்கு  வரும், எங்கிருந்து  கட்டுப்பாடு  வரும் . மேலிருப்பவன்  முன்  மாதிரியாக  இருக்கவேண்டும். எல்லோரும்  ஏனோதானோ  என்று  இருக்கிறோமே  தவிர, கட்டுக்கோப்பாக  சரியான  முறையில்  சிந்தித்து  செயல்படுவதில்லை.

          இவையெல்லாம்  விவாதத்துக்கு  உட்பட்டவையாக  இருக்கலாம். சில  நேரங்களில்  விவாதங்களினால்  நல்ல  தீர்வுகள்  கிடைக்கிறதோ  இல்லையோ , ஆற்றாமையை  வெளிப்படுத்திய  திருப்தியாவது  கிடைக்கும். இன்னுமொரு எண்ணம்.
பதவி உயர்வு..! எங்கிருந்துதான்   இவர்களுக்கு   இப்படி ஒரு கொள்கை கிடைத்ததோ.  இன்ன   பதவியில்  இவ்வளவு  வருடங்கள்  கழித்தால்  பதவி உயர்வு. அதுவும்  எப்படி?.
உயர்  மட்டத்தில்  மூன்று  நான்கு  ஆண்டுகளில்  பதவி உயர்வும், தொழிலாளிகளுக்கு  எட்டு  பத்து  ஆண்டுகளுக்குப் பிறக்குமாம்.  ஒரு தொழிலாளி  வேலை செய்து  குறைந்தது  நான்கு ஐந்து  பதவிகள்  பெற  முடிந்தால்தான்  ஒரு மேற்பார்வையாளராக   வர முடியும்.. இதற்குள்  அவன் தலை  நரைத்து, பல்  போய  படு கிழவனாகி  விடுவான். இதற்கெல்லாம்  அடிப்படை  காரணம்  என்ன. ? மூன்று, ஐந்து  ஆண்டுகள்  படிப்பா.? என்ன இது. ? என்னதான்  வேலை செய்தாலும்  முன்னேற  முடியாத  முட்டுக்கட்டை.

             மெஷினில்   பொருத்தப்பட்ட   பாகம் முடிவடைந்து விட்டது.  அதை   எடுத்து   கருவிகளை   சுத்தம் செய். இன்னுமொரு  திருத்தப்பட  வேண்டிய   பாகம்   பொருத்தப்  படட்டும். " ட்ரேசர்"  ஊடுருவட்டும். கவனமாகப்   பார்த்துக்கொள்.  கொஞ்சம் இரு.  ஒரு  சிகரெட் புகைத்து  விட்டு  வரலாம்.  யாராவது   நண்பன்  கிடைப்பான். எவ்வளவோ   சங்கதிகளை   விவாதிக்கலாம்.

             கோவிலில் சிலைகளை கும்பிடுவது  பற்றி என்ன   எண்ணுகிறாய்.. விசேஷமாக   எதுவுமில்லை.  இது  விவாதிக்கக் கூடிய  விஷயமல்ல.  முடிவு  ஏற்பட  முடியாத  விவாதங்களும்   பிரயோசனமில்லை. ஆனால் தனிப்பட்ட  முறையில்   சிலைகள் வணங்கப்  படுவது  குறித்து  எனக்கு  ஆட்சேபனையில்லை. வணங்குதல்  அல்லது  தொழுதல்  அல்லது   வேண்டுதல்  என்றால்  என்ன.? யார்  யாரை  வேண்டுகிறார்கள்.? சுலபமானது. கோவிலில்  வேண்டுபவன்  அவன் ஆத்மா  விடுதலைக்காகவும்,  மன நிம்மதிக்காகவும்  தொழுகிறான். அவன் ஆத்ம  விடுதலை   யார் செய்ய  முடியும்.? அவனேதான். அவன் அவனைத்தான் அவன் விடுதலைக்காக   வணங்க  வேண்டும் .! குதர்க்கமாகத்  தோன்றலாம். ஆனால் அதுதான்   வேதங்களும்   ஞானிகளும்  கூறுவதாகத்  தோன்றுகிறது. ஒரு சிலையோ  படமோ  ஒருவனின்  பிரதிபலிப்பைத்தான் தோற்றுகிறது. உண்மையில்  ஒரு பூவோ பழமோ  நிவேதனமாக   வைத்து   ஆராதிக்கையில்   வேண்டுபவனும்  வேண்டப்படுபவனும் ஒரே  நிலையில் நிறுத்தப்படுகிறார்கள். சிலையோ படமோ தன  உள்ளத்தின்  மெல்லிய திரையிடப்பட்ட  பிரதிபலிப்பேயாகும். அந்நிலையில்  எண்ணத்தின்  வாயிலாக  அகமும் புறமும்  ஒன்றோடோன்று  கலந்து  தேடுபவனும்  தேடப்படுபவனும்  ஒன்றாகிறது. இந்நிலையில்  ஒரு  கண்ணாடி  முன் அமர்ந்து , " நீதான்  அது, " என்று   தன பிரதிபிம்பத்தைப்  பார்த்து  சொல்லமுடிந்தால் , படம் ,சிலை , பிம்பம்  எல்லாம்   ஒன்றுதான்.. ஒ...! இதெல்லாம்  சற்று  கூடுதலோ. .நமக்கு  ஒத்து  வராது. சிலையை   வணங்குபவர்  வணங்கட்டும்.  மற்றவர்  வேண்டாம்.

            சிகரெட்   புகைப்பதில் நேரம் செலவாகி  விட்டது. வேலை தொடரவேண்டும். இரண்டாவது   பாகம் முடிந்ததா..? இன்று செய்து முடிக்க  வேண்டியது  ஏழு  பாகங்களா. ? முடிக்கலாம்.

            ஏன் சிகரெட் புகைக்கிறாய். ? உன்னையே  தெரிந்தவன்  படித்தவன்  பகுத்தறிவு   உள்ளவன்  என்று பீற்றிக்கொள்பவன் உடலுக்குக்  கெடுதல்  என்று   தெரிந்தும்  ஏன்   புகைக்கிறாய்.? புகைத்துச்  சாகிறாய்.?  புகை பிடிப்பவர்கள்  அனைவரும்  அதனால்  சாகிறார்களா.? ஆனாலும்  ஏன் புகைக்கிறாய் ? பழக்கத்துக்கு   அடிமை  ஆகிவிட்டாயா.? இல்லை.. ஏதோ  ஒரு சிறிய  இன்பம். நரம்புகளை கிளுகிளுக்கச் செய்து புத்துணர்வு  ஊட்டுகிறது. என்றைக்கானாலும் சாகத்தானே வேண்டும். இந்த சில்லறை   இன்பங்களையாவது   அனுபவிக்கக்கூடாதா.? ஒ.... எவ்வளவு   விந்தையான அடி முட்டாள்தனமான   எண்ணங்கள்.  உன்னை எப்படித்  திருத்துவது.  உன்னை நம்பி  எத்தனை  பேர்  இருக்கிறார்கள். நீ  ஒரேயடியாக   சாகாமல் நொடி நொடியாகச் செத்தால்  யார்  அவதிப்படப்  போவது..? உனக்கு  மன  உறுதியில்லை. வெறும்  பேச்சுத்தான்.  கட்டுப்பாடு  கிடையாது. உன்னை  நீயே  ஏமாற்றிக் கொள்கிறாய். இல்லை.  என்னால்  புகை  பிடிப்பதை  நிறுத்த முடியும். இது  சவால்.! பார்க்கலாம்.

             மெஷினில்  பொருத்தப்பட்ட  பாகம் முடிந்ததா, சரியாகப் போகிறதா என்று   பார்ப்பதுதான்  வேலை. எல்லாம்  இயந்திரத்தனமானது. வாழ்க்கையே   மாற்றமில்லாத   இயந்திர கதியில் ஓடுகிறது. இல்லை. ..வாழ்க்கை இயந்திரமானது   அல்ல.  அப்படி  ஒரு எண்ணம்  ஏற்பட சூழ்நிலையும்   அணுகுமுறையும்தான்   காரணம். வேலை  செய்பவன்  மாற்றமில்லை  என்று  ஏங்குகிறான். இல்லாதவன் வேலையே  இல்லை  என்று மறுகுகிறான். " கும்பி கூழுக்கு  அழுகிறது, குடுமி  பூவுக்கு   அழுகிறது."  பொருத்திய  பாகம்  முடிந்தது. மாற்று.

             பஞ்சசீலம்  பாண்டுங்  மாநாட்டில்  பிரஸ்தாபிக்கப்பட்டது  என்பார்கள். இங்குள்ள  பஞ்சசீலம்  என்ன தெரியுமா.. காலையில்  பஞ்ச இன் ,காபி  இடைவேளை, உணவு  இடைவேளை, தேநீர்  இடைவேளை, மாலையில்  பஞ்ச அவுட். இந்த முக்கியமான  ஐந்து குணங்கள் வழிமுறைகளாக   அப்பழுக்கற்று   கடை பிடிக்கப்படுகிறது.

             இதோ வருகிறார் குட்டி  அதிகாரி. ஏதாவது   கேட்பாரோ. ...இல்லை. .அவருக்கு  வேண்டியது  ஒரு வணக்கம். அதுவும்  கூழைக்  கும்பிடாக  இருநதால்  இன்னும்  நல்லது.  இவர் அதற்குத்  தகுதி  உள்ளவரா.? மரியாதையும்  மதிப்பும்  கடைப்பொருளா   வாங்குவதற்கு. ? கொடுத்துப்  பெற  வேண்டியது  அல்லவா..?  மேலதிகாரி  என்ற  ஒரே  தகுதி  போறுமா. ? அடடா.. .. நீ கேள்வி  கேட்காத  இடமே  இல்லையா.? அவருக்கு  வேண்டிய  வணக்கத்தைக்  கொடுத்து  ஆளை  விடுவாயா.. அதில்லாமல்... .. மேலதிகாரிகள்  என்று  சொல்லும்போது  எத்தனை பேர். எத்தனை  வகை   இவர்களுக்கெல்லாம்  உண்மையிலேயே  என்ன  வேலை.. உற்பத்தி  ஏன்      பெருகவில்லை  என்று எல்லோரும்  கேட்கிறார்களே  தவிர  உண்மையான  காரண   காரியங்களை  ஆராய்ச்சி  செய்து  மாற்று  நடவடிக்கைகள்  எடுப்பதில்லை. எந்த   நேரத்திலும்  அவர்களைத்  தவிர   மற்றவர்கள்தான்  தவறுகளுக்குப்  பொறுப்பு.

            உண்மையிலேயே   உற்பத்தி  ஏன்  பெருகவில்லை.. அதிகாரிகள்   கூறும்   காரணங்கள் பணமுடக்கம், கச்சாப் பொருட்கள்  இல்லாமை,  ஊழியர்களிடம்   ஒழுங்கின்மை  இத்தியாதி   இத்தியாதி . ஆனால்  நடைமுறையில்  நாம்  பார்ப்பது  ஒரு  வருடத்தில்  ஐம்பது  சதவீதத்துக்கும்  மேல் கடைசி  இரண்டு  மூன்று  மாதங்களில்தான்   உற்பத்தியாகிறது. கடைசி  இரண்டு  மூன்று  மாதங்களில் மட்டும் மூலதனமும்,  கச்சாப்பொருள்   தட்டுப்பாடும்   ஊழியர்களின்   ஒழுங்கீனமும்   மாயமாய்   மறைகிறதா.
யார் காதில்  பூசசூடுகிறார்கள் ? இந்த அவசர  அடிவேலையில்  பாதிக்கப்  படுவது   உற்பத்திப்  பொருளின்  முக்கிய  அம்சமான  தரமல்லவா,?

             இந்த நிலையில் நாம் பீற்றிக்கொள்வதில்  மட்டும் எந்தக் குறையும்  இல்லை.  தொழில் நுட்ப தேர்வு  பெற்ற, உயர் கல்வி  பயின்ற  வல்லுனர்களை  மூலாதாரமாக   உபயோகித்து  முன்னேறுகிறோம்  என்று முழங்குகிறோம். ஆனால் நாம்  காணும்  தொழில் நிலையும் ஒழுக்க  நிலையும்,  உற்பத்தி   நிலையும் நமக்குச்  சொல்லும்  செய்தியே  வித்தியாசமாக  அல்லவா  இருக்கிறது.  இங்கு  வெடிக்கும்  உண்மைதான்  எது. ? ஆராயலாமா.?

              எங்குதான்  பிரச்சினை. ?  அரசாங்க  நிலையிலா,  நிர்வாக நிலையிலா,  ஊழியர்கள் நிலையிலா, .?யார்தான்  இதற்குப்  பொறுப்பு.?  எங்குதான்  பாட்டில்நேக்
(BOTTLE  NECK ).? ஆம். . கேள்வியிலேயே   பதில் தெரிவதுபோல்  தோன்றுகிறதே. .சீசாவின்   கழுத்து  மேல்   பாகத்தில்தானே.. . புரிந்ததா..?  விவாதிக்கலாமா..?

              இதுவரை நான் என்ன செய்தேன்  என்று கேள்வி கேட்கிறார்   என்  மேற்பார்வையாளர . எண்ணிப்  பார்க்கிறேன் . ஏழு  செய்ய  வேண்டிய  இடத்தில்  எட்டு.  ஷொட்டு கொடுப்பாரா. ? ஊஹூம் ..! வீண்  எதிர்பார்ப்பு.. அனைவரையும்  இயக்கும்  ஆலைச் சங்கு  இனிமையாக  ஒலிக்கிறது.  ஆஹா .. வீடு  நோக்கி  ஓடு. .!    
===========================================















         .          .






.






 .     .   .






  .      .








 .
  


 .

Saturday, December 25, 2010

தகப்பன்சாமி அல்ல --- தாத்தா சாமி

தகப்பன்சாமி  அல்ல ---  தாத்தா சாமி
-==================================

        பாட்டெழுதுவதென்ன  பெரும்
        பாடா , என்  பாட்டா
        என்றென்னைக்  கேட்டான் என்
        பெயர் சொல்ல  வந்த பேரன்.

நான் அவனிடம் பாட்டெழுத
மொழி அறிவு அனுபவம் இன்னும்
என்னவெல்லாமோ   வேண்டும்  என்றேன்.

          ஒ...அது  அந்தக்காலம்  என்று
           என்னைப் பற்றி நீ எழுதிய  பாட்டை
           பிறர் படிக்க   நான் கேட்டேன்.
           எனக்கு தமிழ்  எழுதத் தெரியாது
           அதனால் உன்னைப்பற்றி   நான் சொல்ல
           எனக்காக நீ  எழுது  என்றான்.

"என் தாத்தாவை  நான் அப்பா  என்றழைப்பேன்
என் அப்பாவுக்கப்பா   எனக்கும் அப்பாதானே.
அவர் சொல் எனக்குப் பாடம்போல,
அர்த்தமும்   இருக்கும்,  உண்மையும் இருக்கும்.
அவர் பேச்சு எனக்கு ஊக்கம் தரும்
அவருக்கென்மேல் இருப்பது  அன்பல்ல,
அதற்கும்  மேலே.
அவர் ஒரு பால்கோவா  போல,
சர்க்கரையும்  பாலும்  சேர்ந்த  கலவை.

          நான் இதை ஒரு கவிதை என்று
          தங்கலீஷில்  எழுதினேன் என்றால்
          அதற்கும்   அவரே  காரணம்.
          நன்றி  அப்பா."

அவன் கூற  நான் எழுத
ஒரு உண்மை  புரிந்தது.
எண்ணுவதைச்  சொல்ல
வெறும்  மொழியும்
வார்த்தைகளும்  வேண்டா.
உணர்வினால்  உந்தப்பட்டு
எழுதினால்  அதில் உயிரிருக்கும்
என்றெனக்கு  உணர்த்தினான்  என்
பேரன், தகப்பன் சாமி  அல்ல, தாத்தா  சாமி. !
-------------------------------------------------- 









     

Friday, December 24, 2010

அறிந்த அளவு

அறிந்த  அளவு.
-----------------------
                 என்னதான் எழுதுவது.?
                 எதைத்தான் எழுதுவது ?
                 ஏன் இந்த மயக்கம்,?
                 எழுதவா இல்லை சேதிகள்.

ஓடும் நதி, ஒளிரும்  நிலவு,
வீசு  தென்றல், விளையும் பயிர்,
முத்துச்சிப்பி, மோகனப் புன்னகை,
எழுதலாம்  அல்லவா,
ஏன் இன்னும்  தயக்கம்.?

                அறிந்த மொழி  அழகு தமிழில்,
                 எழுத எண்ணும்  எண்ணங்களை
                அலங்காரம் செய்யவும்,
                ஆங்காங்கே  இட்டு நிரப்பவும்,
                இல்லையா வார்த்தைகள்..
                கூவும்  குயிலே,   தோகை மயிலே,
                கண்ணே, மானே, தேனே,
                என்றொரு பாட்டில்  வருவது போல.

எண்ணங்களுக்கு   வடிவம் கொடுத்து,
என்னதான்   தயார் செய்து
எழுதத்   துவங்கினாலும்,
எழுத  முடிவதென்னவோ
என் நினைவுகளில் நீக்கமற
நிறைந்தென்னை ஆட்டுவிக்கும், 
என்  ஆதங்கங்களும்  வாழ்வின்  அவலங்களுமே.

                 நானென்ன  செய்ய   நானும் ஒரு
                 பசுமாட்டுக்  கதை   சொல்லும்  பாலகனன்றோ

பசுமாட்டுக்கதை   அறியாதவர்களுக்கு
--------------------------------------------------------
பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பரீட்சைக்கு வரும் கட்டுரை எழுத நிறையத் தலைப்புக்கள் கொடுத்து தயார் படுத்தி இருந்தார் ஆசிரியர்,கட்டுரைகள்  பல  தலைப்பிலிருந்தாலும் சிறுவன்  ஒருவன்  படித்து  அறிந்தது  பசுமாடு  பற்றிய  கட்டுரை மட்டுமே. பரீட்சையில்  தென்னை மரம் பற்றி  எழுத வேண்டி  வினா வந்தது. சிறுவனும்  அழகாக எழுதினான். " ஒரு வீட்டில்  ஒரு தென்னை  மரம்   இருந்தது. அதில் ஒரு பசுமாடு கட்டப்  பட்டிருந்தது."-என்று எழுதத் துவங்கி  பசுமாட்டைப்  பற்றிய கட்டுரை எழுதி  முடித்தான்.
===================================================



.






       
       

Thursday, December 23, 2010

எது கல்வி. மறுபக்கம்.

எது கல்வி. மறுபக்கம்.
---------------------------------
            எது கல்வி என்று திரு.சுந்தர்ஜி அவர்களுடைய கைகள் அள்ளிய  நீரில் விரிவாக விவாதித்திருக்கிறார். நம் கண் முன்னே விரியும், நடக்கும், நமக்கும், ஏன்  சமுதாயத்துக்கும் ஒவ்வாத ஒவ்வொரு நிகழ்வும் மிகப்பெரிய தாக்கத்தை  ஏற்படுத்துகிறது. முடிந்தால்  இந்த  உலகத்தையே  புரட்டிப் போட்டு  மாற்ற வேண்டும்  என்ற வேகமும்  எழுகிறது. நியாயமானதுதானே. நியாயத்துக்கும்  தர்மத்துக்கும்  கட்டுப் பட்டு நடக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும்  ஏற்படும்    எண்ணக்குவியலே    அவை. இருந்தாலும் நடப்பவைகள்  எல்லாமே  தவறானவை  அல்ல. வேண்டத்தகாதவைகள்  அல்ல.  இன்னும்  சிறப்பாக இருக்கலாமே, நன்றாக  இருக்குமே என்ற ஆதங்கமும், விருப்பமும்தான் மனதில் தோன்றுவது .அவர் எண்ணமும் வேகமும் என்னால் புரிந்து கொள்ள  முடிகிறது. ஏனென்றால் அவரில், நான் என்னைக் காண்கிறேன். இருந்தாலும் இந்த வேகம்  மட்டும்  போதாது..இன்னும் சிறப்பாக  இருக்க என்ன  செய்யலாம், என்று எண்ணும்போது, கூடவே இருப்பதில்  எதெல்லாம்  நல்லது ,நன்மை  பயப்பது என்றும் நாம் சிந்திக்கவேண்டும்.

             நூறு சதவீதக் கல்விதான் இலக்கு. ஆனால் அது இன்னும் எட்டப்படவில்லை. ஆனால் அது செயல்படுவதற்கு ஆங்காங்கே விதைகள் தூவப் பட்டுள்ளன.,என்பதை  மறுக்க  முடியாது. நூற்றாண்டுகாலமாக  இன்னாருக்குத்தான்  படிப்பு, இன்னாருக்கு  அது கூடாது, என்ற ஆதிக்க  மனப்பான்மையில்  பெரும்பாலோருக்கு  எழுத்தறிவே  செல்ல  இயலாத  நிலை  இருந்தது. எல்லோரும்  படித்து  முன்னுக்கு  வந்துவிட்டால், சிலருடைய  ஆதிக்கத்துக்கு  முற்றுப்  புள்ளி  வந்துவிடும் என்ற நிலையில்  ஒடுக்கி  வைக்கப்பட்ட  மக்கள்  தொகை மிகவும்  அதிகமாக  இருந்தது. ஆயிரங்காரணங்களை
கூறி  அடிமைப் படுத்தப்பட்டிருந்தனர் .காரணங்களை நான் விவரிக்க  விரும்பவில்லை. ஆனால் எல்லோரும்  படிப்பறிவு  பெற்றால் சுயமாக  சிந்திக்க  துவங்குவார்கள்  என்ற பயம்  ஆண்டைகளிடம்  இருந்தது. அடிமைத்தளை  இறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு அஸ்திவாரம் பலப்பட,
அவர்களது  அலுவலகப்  பணிகளுக்கு  குமாஸ்தாக்கள்  தேவைப்பட மெகாலே  கல்வி  நடைமுறைப்  படுத்தப்பட்டது. இதெல்லாம் சரித்திரம்.

              நாம் இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது சிந்திக்கத் தூண்டும்  கல்வி மறுக்கப் பட்டதே. கல்வி கற்றவர்கள் சிந்திக்கத் துவங்கி நாடு அடிமைத் தளையிலிருந்து விடுபட்டதும் வரலாறு.

              நம்மை  நாமே  ஆளும்போது ,நாம் எல்லோரும்  சமம்  எனும்போது , வாய்ப்புகளும்  சமமாக  இருக்க வேண்டும். வாய்ப்பு  வேண்டிப்  போராட  கல்வி அறிவு  அவசியம். அதுவும் பரவலான  நூறு   சதவீதக்   கல்வி அவசியம்.  நாம் படித்தவற்றை
பகுத்தறிந்து   உணர்ந்தால் அறிவுள்ளவர்களாக  ஆவோம். படித்தவர்கள்  எல்லோரும்    அறிவுள்ளவர்கள்  அல்ல. படிக்காதவர்கள்  அனைவரும்  அறிவில்லாதவர்களும் அல்ல.
ஆனால் ஒருவனை  அறிவாளியாகக படிப்பறிவு மிகவும் உதவும்.

              தற்சமயம்  நிலவி வரும் சூழ்நிலையில் கேக்   ஊட்டப்பட்டு   ஊக்கப்படுத்தப்   படுபவர்கள்  முகவரி  தெரியாமல்  போய்விடுகிறார்கள்  என்ற அச்சமும்  கல்வியறிவே  காசு கொண்டு  வாங்கப்பட  வேண்டிய  அவல நிலையில் நாம் உள்ளோம்  என்ற கவலையும்  இருப்பது சகஜம்

               மேலே குறிப்பிடப் பட்டுள்ள பிரிவில் படாமல் எந்த ஒரு உந்து   சக்தியும் இல்லாமல்  படித்துயர்ந்து  வந்தவர்களும்  ஏராளம்  உண்டு. நகரங்களில்  வசிக்கும்  நம் கண் முன்னே படுவது  கான்வென்ட்  படிப்பும்  கூடவே வரும் அதிக  செலவினங்களும்தான் .இல்லாதவன் தன  தலைமுறைக்குப்  பிறகு  தன பிள்ளைகள்  நன்றாக   இருக்கவேண்டும்  என்று பாடுபடுவதையும்  பார்க்கிறோம்.  இயற்கைதானே.  ஆனால் கான்வென்ட் படிப்பும் ஆங்கிலப்  படிப்பும்தான்  மேலானது  என்ற ஒரு மாயத் தோற்றத்துக்கு  அடிமையாகும்போதுதான்  சந்திக்கும்  இன்னல்கள்  ஏராளம்

               எழுத்தறிவும் கல்வியறிவும்   பரவலாக்கப்பட்டால் சுயமாக சிந்திக்கும்   திறனை அவர்கள் வளர்த்துக்கொள்வார்கள்.  முனிசிபல், கார்ப்பரேஷன்  பள்ளிகளில்  படித்துப்  பெயர் வாங்கும்  சிறார்  சிறுமிகளும்  இருக்கிறார்கள்.,என்பது நமக்குத்  தெரிந்ததே. நாம் எந்த   ஒரு விஷயத்தையும்  விவாதிக்கும்போது  மிடில்  கிளாஸ்  மேன்டாலிடியைத்தான் அளவு கோலாகப்  பயன்படுத்துகிறோம். ஏழை பாழைகளின்  கருத்தைக்  கேட்கவோ  எடுத்துச் சொல்லவோ  நம்மில் பலரும்  முன்  வருவதில்லை   இந்நிலையில் நூறு சதவீத எழுத்தறிவும்  படிப்பறிவும்  இருநதால்  அவர்களை  அவர்களே  மேம்படுத்திக்  கொள்வார்கள்

               நான் ஒரு முறை லலிதாம்பிகா   கோவிலுக்குச் செல்ல  திருமீயச்சூர்  சென்றிருந்தேன்  அங்கு  பள்ளிக்கு  சென்று வர  சீருடை  அணிந்த  சிறுவர்  சிறுமிகள்  சைக்கிளில்  செல்வதைக் கண்டபோது மனசுக்கு  கொஞ்சம்  உற்சாகமாக  இருந்தது.  பசியாற  மதிய  உணவு, சீருடை, மற்றும்  சென்றுவர  இலவச  சைக்கிள்  இவை எல்லாம்  கல்வியறிவு  பரவலாகச்  செய்யும்  உந்து  சக்திகள்தானே. மேலும்   தற்போது
கல்வி உரிமைச்  சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள் . இதன்படி  எல்லாப்  பள்ளிகளிலும் ( தனியார் உட்பட ) 25% இடங்கள்  ஏழைகளுக்கு  ஒதுக்கப்படவேண்டும் .
கல்வி போதிக்கும்  முறையில் ஏற்ற  தாழ்வு  குறைந்து  சம வாய்ப்பு   கிடைக்கும்  ஒரு திட்டம் .ஆனால் இதை  நடைமுறைப்படுத்த  ஏகப்பட்ட  எதிர்ப்புகள்.  இந்த எதிர்ப்புகளுக்கு  எதிராக  குரல்  கொடுப்போம்.

             சாதாரணமாகவே  இந்தியக்  குடிமகன்  லேசுப்பட்டவன்   அல்ல. அவனை  இன்னும் சக்தி   உள்ளவன் ஆக்க பரவலான கல்வியறிவு   அடிப்படை  அவசியம்.

             கல்வியை  வியாபாரமாக்கும் கும்பலுக்கு  நாம்தான்   துணை போகிறோம். அரசு  பள்ளிகளை  ஆதரித்து ,அதன்  தரம்  உயர  நாம் ஏன்  பாடுபடக்கூடாது. ?செல்வி. மாதங்கி  மாலி  சொல்லியதுபோல, There is a breed of race  horses.and I add  there  is a rat race.
========================================= .







    .  .      .  







 












 .     

Wednesday, December 22, 2010

திருந்தச்செய். திருந்துவதற்குச் செய்.

 திருந்தச்   செய்      திருந்துவதற்குச்  செய்.
------------------------------------- ------------------- --            சாதாரணமாகவே   எழுதுபவர்கள்  கொஞ்சம்   சென்சிடிவ்   டைப்   ஆனவர்களே.  மனதளவில்  சுற்றிலும்  நடக்கும்  விஷயங்களால்   பாதிக்கப்  படுபவர்கள். ஏதோ  செய்ய  வேண்டும், எப்படியாவது  செய்ய வேண்டும் என்ற  உத்வேகத்தால்  உந்தப்   படுபவர்கள். ஆனால்  எதையும்  செய்ய முடியாதபோது  எழுத்தில்  தங்கள்  உள்ளக்கிடக்கைகளை  வெளிக்  கொணர்கிறார்கள்.  பொழுது  போக்குக்காகவும்,  தங்கள்   திறமைகளை   வெளியுலகிற்குத  தெரியப்  படுத்துவதற்காகவும்  எழுதுபவர்களும்  உண்டு. அதை  அவர்கள்  எழுதுவதைப்  பார்த்தாலே  தெரிந்து  விடும்.

             நானும்   நம்மைச்சுற்றி  நடக்கும்  அவலங்களைக் கண்டு,           ஆற்றாமையாலும்  கையாலாகாத்தனத்தாலும்   சில வரிகள் எழுதியிருந்தேன்.  இத்தகைய   பாதிப்பில்   இருந்து   வெளிப்படவே நமக்கு  மறதி என்னும்  வரத்தை ( வரமா அது. ?) ஆண்டவன்   கொடுத்துள்ளான்.  அதுவே  மறதி   போற்றுவோம்  என்ற கவிதை  ஆனது.

             நாளொரு  போராட்டமும் பொழுதொரு  தர்ணாவும் நாடு முழுவதும் நடக்கிறது.. இவற்றில் பெரும்பாலானவை சொந்த மற்றும் அரசியல் ஆதாயத்துக்காக நடத்தப்படுபவை  போராட்டத்தில்  கலந்து  கொள்பவர்கள்  அனைவரும்  பாதிக்கப்பட்டவர்கள் அல்ல.  தூண்டுதலின்  பேரிலும்  சுயநலத்துக்காகவும்  ஈடுபடுபவர்களும்  உண்டு. ஆனால் உண்மையாகப்   போராட்டத்தில்   ஈடுபடுபவனின் எண்ணம்  மட்டும் ஏற்ற  தாழ்வுகள்  குறித்தும், கிடைப்பவனுக்கும்  கிடைக்காதவனுக்கும் , இருப்பவனுக்கும்  இல்லாதவனுக்கும்  இருக்கும்  மேடு  பள்ளங்களை  சரி  செய்ய  முடியாத, இயலாத  நிலையின்  வெளிப்பாடே.  வாய்ப்புக்காகவும்  நீதிக்காகவும்  போராட  நினைப்பவனை,  அரசியல் வாதிகளும், சந்தர்ப்ப  வாதிகளும்  தங்கள்   நலனுக்காக  உபயோகிக்கின்றனர் . போராட்டங்களில்   தீக்குளித்து  உயிர்  விடும்  அப்பாவிகளைப்  பற்றி  நாம்  சிந்திக்க  வேண்டும்.

          நாம் ஏதாவது  செய்யவேண்டும்  என்ற சிந்தனையால்  உந்தப்பட்டு, உண்மையாகவே ஏதாவது  செய்ய   விரும்பினால், எந்த முயற்சியும்  செய்யும்  முன்பே மிகத்தெளிவாக  இருத்தல்  அவசியம். நம்முடைய   இலக்கு  என்ன.? நான்  எனக்கு  வேண்டப்பட்டவர்களிடம்   கூறுவது, "Aim at the stars;at least you can reach the tree top."
இலக்குகளை  நிர்ணயிக்கும்   முன்பாக கடந்தகால   நிகழ்கால நிகழ்வுகள்  பற்றி  சீரிய   சிந்தனை  வேண்டும். நாம் எங்கிருந்தோம்,  எப்படி இருந்தோம், இப்போது எங்குள்ளோம்   எப்படி இருக்கிறோம் என்ற ஒரு  அலசல்  அவசியம். நாம் என்று  நான்  சொல்லும்போது, அது   தனிப்பட்ட நம்மைப்பற்றி  மட்டுமல்லாது , நாம் இருக்கும்   சமூகம்  பற்றியும்  இருக்கவேண்டும். நாம் எப்படியெல்லாம்  இருந்தோம் என்பது  கேள்வி ஞானத்தாலும்  படித்தறிவதாலும் நம்  சொந்த அனுபவங்களினாலும்  தெரிய  வருபவை. அடைய  வேண்டிய  இலக்கை  நிர்ணயிக்க இது  அவசியம்.

           இந்தியா   சுதந்திரம்  அடைந்தபோது   நாமிருந்த   நிலையென்ன.?இப்போது  நாம்  இருக்கும்  நிலையென்ன. ? மாற்றங்கள்  நிகழ்ந்திருக்கிறதா.? மாற்றங்கள்  நல்லவையாக இருந்திருக்கிறதா.? எதிர்பார்த்தபடி  நிகழ்ந்துள்ளதா.? எதிர்பார்ப்பு   என்றால்   யாருடைய  எதிர்பார்ப்பு.? சென்ற  தலைமுறையின்   எதிர்பார்ப்பா.? இப்போது   உள்ளவர்களின்  எதிர்பார்ப்பா.? கேள்விகளைக்   கேட்டுக்கொண்டே   போகிறேன். காரணம் கேள்விக்கு  பதில்  கிடைக்கும்போது, சிந்தனையில்  தெளிவேற்பட வாய்ப்பு அதிகரிக்கும்.

           சுமார்   30 கோடி மக்கள் இன்று சுமார்  110 கோடியாகி உள்ளனர். இந்த  மாற்றம்  நல்ல  மாற்றமா, முன்னேற்றமா.? சுமார்  37 வருடங்கள்  சராசரி  வயது  என்றிருந்தது
இன்று சுமார் 65  வருடங்கள்  என்றாகியிருப்பது முன்னேற்றமா, நல்ல மாற்றமா.? 30 % -க்கும் குறைவாக  படிப்பறிவு  இருந்த  இடத்தில்  சுமார் 50% -க்கு  மேல்  உயர்ந்துள்ளது  எத்தகைய  மாற்றம்.?

           என்  இள  வயதில்  எங்கள்  ஊரில் தாழ்த்தப்   பட்டவர்கள்  கிராம  வீதிகளில்  நடந்து  வருவதே நினைத்துப்   பார்க்க  முடியாத ஒன்று. வீடுகளில்  மலஜலம்  அள்ள   வருபவர்கள், தெருக்களின்  பின் வழியே  வந்து, அவர்கள் வருகையை  உரக்கக்கூறி   அறிவித்த  பிறகே  அந்தப்  பணியைச்  செய்ய  முடியும். இன்று அதைக்  கற்பனையில்தான்   காணமுடியும். ஆனால்  இன்றும்  Manual  Savenging  சில இடங்களில்  இருப்பதைப  படித்துத்  தெரிந்துகொண்டேன்.

           பிறப்பொக்கும்   என்று கூறி  வாய்  கிழியப்  பேசும்  நாம்  ஏற்ற  தாழ்வுகள்  விலக,  வாய்ப்பு  வேண்டி  உள்ளவர்களுக்கு  சரியான  பாதை  போட்டுக்  கொடுத்திருக்கிறோமா
கடந்த  சில நாட்களில்  நான் ஒரு  செய்தி  படித்தேன்.  குக்கி  சுப்பிரமணியா  என்ற   கோயில்  உள்ள  ஊரில் தலித்  மக்கள்   உருளு  சேவை  ( அங்கப்பிரதட்சிணம் )  செய்தார்களாம். இதில்  என்ன  விசேஷம்  என்றால், அவர்கள் மேல்  சாதியினர்  உண்டு  எழுந்த  காலி  எச்சில்  இலைகளின்  மேல் அங்கப்  பிரதட்சிணம்  செய்ய  வேண்டும்.  அப்படிச்  செய்தால்  நலமுண்டாகுமாம். இந்த 21 -ம  நூற்றாண்டில்  இத்தகைய  நிகழ்வுகளும்  நம்மைச்  சுற்றி  நடக்கின்றன.

           இதையெல்லாம்  நான்  கூறுவதன்   காரணம், விஷயங்கள்  உள்ளது  உள்ள படிஎல்லோரும்  உணரும்படி அனைவருக்கும்  தெரிய வேண்டும்.  நம்மிடம்  உள்ள பிளஸ்   அன்ட்  மைனஸ்  பாயிண்டுகள்  நமக்குத்  தெரிய  வரவேண்டும்.

           நான் சிக்ஸ்த்   பாரம்  என்ற S.S.L.C. படிக்கும்  வரை  பௌண்டன்  பேனா   உபயோகித்தது   கிடையாது. இங்க  பாட்டிலும்   கட்டைப்  பேனாவும்தான் படித்து முடித்து முதல்   வேலைக்குப் போகும்வரை காலணியே அணியாதவன். படிக்கும் போது ஒவ்வொரு   பாடத்துக்கும்  தனி  நோட்டுப்  புத்தகம்  கிடையாது. எல்லாப்  பாடங்களும்  தடிமனான  ஒரே  நோட்டுப் புத்தகத்தில்தான்  இத்தனைக்கும்  எங்கள்   குடும்பம்  ஏழைக்  குடும்பம்  என்று  ஏற்றுக்  கொள்ளப்பட்டதல்ல.  என்  தந்தையின்  ஊதியம்  எட்டு, பத்து  பேர்களுக்குப்  பசியாற்ற  வேண்டும்,  எல்லாவற்றுக்கும்  பதில்   சொல்ல வேண்டும்.

           நாங்கள் வளர்ந்து   பெரியவர்களாகி எங்கள்  குடும்பங்களைப் பராமரிக்கும்   நிலை  வந்தபோது அறிந்து  செய்தது  அளவான குடும்பம்  அமைத்துக்  கொண்டதே.
இதன் சூட்சும  நிலை பெரும்பாலோரால்   உணரப்பட்டு இப்போது நாம் காணும் Nucleus Families. இதற்குத்  தேவைப்பட்டது கொஞ்சம்  அனுபவமும், கல்வி  அறிவும்.
சென்ற  தலைமுறையை  விட இந்தத்  தலைமுறையும் வரும்  தலைமுறைகளும்   சிறப்பாக  இருப்பார்கள். அவர்களுக்குத் தேவை சரியான வழிகாட்டல்களே.

          இப்போது  இந்த  எதிர்பார்ப்புக்கு  விடிவெள்ளியாக  நான்  காண்பது, நமது  அரசால்  நிறைவேற்ற  நினைக்கப்படும்  சில திட்டங்கள்தான். சில  உரிமைகளை  சட்ட  பூர்வமாக அமல்படுத்தத்   துவங்கியிருக்கும்  சில செய்கைகளே . இவற்றில்  முக்கியமாக   Right to information,  Right to education, Right to food, Right to work, போன்றவையே.
எல்லாவற்றையும்  பட்டியலிடவில்லை. நோக்கம்  சரியாக  உள்ளது  என்பதைத்   தெரியப் படுத்தவே  கூறினேன்.

         ஆனால்  இந்த  நோக்கங்களை  செயல் படுத்தும்போது  அதன்  முழுப்  பலனையும்   பெறவிடாமல்  தடுப்பது  இந்த ஊழல்  நடைமுறைதான். ஒதுக்கப்பட்டிருக்கும்  அளவில்
கால்  பங்கு  அளவு  கூட  இலக்குகளை  சென்றடையாமல்  ஊழலர்களால்  முழுங்கப்  படுகிறது.  இந்த  ஊழலைச்  செய்பவர்களே  நாம்தானே. அரசில்  பங்கு வகிப்பவர்தானே.
பொதுவாக  இப்படிக்  கூறுவது  சரியாகப்படாது. என்ன செய்யலாம்  என்று  கூறுகிறேன்.

        ஏதாவது  செய்ய வேண்டும்; போர் முரசு கொட்டவேண்டும்;   போராடவேண்டும் என்றேல்லாம்    கூறும்போதே   கவனமாக  செய்ய வேண்டும், பலனளிக்கும்  முறையில்  செய்யவேண்டும், சாத்வீகமாக  செயல்பட வேண்டும் என்ற விவேகமும் கூடவே  இருப்பது  நல்ல அறிகுறியே.

          1). Proximity is important. ஆனால்அது நமக்கில்லை. வலைப்பதிவாளர்கள்  நாம் பலஇடங்களில்  சிதறிக்  கிடக்கிறோம். எண்ணப் பகிர்தலில்தான்  ஒன்று சேர முடியும்.   பலரது  வலைத்தளங்களில்  பரவலாக எழுதப்படும  கருத்துகளை, பல பதிவர்கள்  ஒரே   தளத்தில் ( இந்த நோக்கத்திற்காக  எழுதும்போது ) தெரிவிக்கலாம். முதலில்  ஏதாவது  செய்ய வேண்டும்  என்ற உத்வேகம் பரவலாகப் பரவவேண்டும் இந்தவலைத்தளத்துக்கு  உறுப்பினர்கள் சேர்வதைக்கண்டு எந்த அளவுக்கு  சிதறிக் கிடப்பவர்கள்  செயல்பட முடியும் என்று  தீர்மானிக்கலாம்.

         2) ஊழலும்  அக்கிரமங்களும் எங்கு  நடக்கிறதோ அதனைக் குறிப்பிட்டு  தட்டிக்   கேட்கலாம். வலைத்தளம்  ஒரு ஊடகமாகச்  செயல்படலாம். மற்ற   ஊடகங்களின்   உதவியையும்  நாடலாம்.

          3) தகவல்  அறியும்  சட்டத்தை உபயோகித்து தட்டிக் கேட்கலாம். அதற்கு எந்த  இடத்தில்  யாரால்  ஊழல் நடைபெறுகிறது என்று ஓரளவுக்கு  உண்மை  விவரங்கள்   வேண்டும். பிறகு  அதனை வெளிச்சம்  போட்டுக்  காண்பிக்கலாம்.

          4) இந்த வலைத்தளத்தில் பங்கு  பெறுபவர்கள் அப்பழுக்கற்றவர்களாக     இருக்க வேண்டும் . அரசு  ஊழியர்களாக  இருந்தாலும் சரி.

          5) சார்பு  சேரா  அமைப்புகள் நிறையவே நல்ல பல  சேவைகள்  செய்து  கொண்டிருக்கின்றன. உதாரணத்துக்கு  அகரம்  கல்வி அமைப்பு, உதவும்  கரங்கள்  போன்றவை   நிறையவே உள்ளன. இந்தமாதிரி  தொண்டு  நிறுவனங்களுக்கு  ஆதரவு தரலாம்.

          6) சுத்தம்  சுகாதாரம்  சுற்றுப்புற  சூழல்  போன்றவற்றில் தனிப்பட்ட  முறையில்    என்னவெல்லாம்  செய்ய முடியுமோ அதெல்லாம் செய்வது. அயல்  நாடுகளில்  எச்சில்துப்பக்கூடாது,  குப்பை  போடக்கூடாது  என்ற சட்டங்களை  மதித்து  நடக்கும்   நம்  மக்கள் நம் ஊரில் அதை  ஏன்  கடைப் பிடிக்கக் கூடாது.?இங்கிருந்து  அங்கு  செல்பவர்கள்  அந்த  நாட்டின்  சட்டத்தை   மதிக்கிறார்கள். அங்கிருந்து  இங்கே  திரும்பி வந்தவுடன்  இங்குள்ளவர்களிடம்  ஐக்கியமாகி  விடுகிறார்கள்.  நான் முன்பே  கூறியபடி   முதலில்   நம்மை நாமே  திருத்துவோம்.  Because  charity begins at home.
----------------- ------------------------------------ ----------------------       










        



     



 







 .










        






 
            

Sunday, December 19, 2010

மனசே ரிலாக்ஸ், உடலே ரிலாக்ஸ்

மனசே   ரிலாக்ஸ், உடலே  ரிலாக்ஸ்
------------------------------------------------------
        தற்போது   நிலவி  வரும்  வாழ்க்கை  முறையில்  உடலும்  உள்ளமும் இறுக்கமாக    (Tension) இருப்பது அனைவராலும்  உணரப்படுவதே.  அது உடலுக்கும்  உள்ளத்திற்கும்  நல்லதல்ல..சரி. இதை  ஓரளவேனும்  தவிர்க்க  வேண்டாமா.? இதோ  என்னுடைய  டிப்ஸ் .உபயோகித்துப்  பலன்  பெற்றது. யான் பெற்ற  பேறு  பெருக  இவ்வையகம் ,என்றபடி  உங்களிடம்  பகிர்ந்து  கொள்ளுகிறேன்.
 
        இந்தப் பயிற்சியை  செய்ய  நேரம்  காலம் எதுவும்  பார்க்கத்  தேவையில்லை   எப்போதெல்லாம் இறுக்கத்தைத்   தளர்த்த  வேண்டுமோ அப்போதெல்லாம் செய்யலாம் .

      முதலில்   மனசின்   டென்ஷனைக் குறைக்க:  - நாம்  மன இறுக்கமாக   இருப்பது  நமக்கு  நன்றாகத்  தெரியும். அப்போது  நாம்  செய்ய  வேண்டிய  பயிற்சி.:- பயிற்சி   என்று  ஒன்றுமில்லை.  நாம் மூச்சு  விடுவதை  உணர  வேண்டும். சுவாசிக்கும்போது  காற்றை  உள்ளிழுத்து  வெளிவிடுவது  நாம் உணராமல்  அணிச்சையாக  நிகழ்வது. இந்தப் பயிற்சிப்படி , நாம் சுவாசிப்பதை  நாம் உணர வேண்டும்.  நாம் மூச்சுக்  காற்றை  உள்ளே  இழுக்கிறோம்   மூச்சுக் காற்றை  வெள்யே  விடுகிறோம்  என்னும் அனிச்சைச் செயலாக  இல்லாமல்  நம் கவனம்  அதில்  பதியவேண்டும்.. வேறு  எதைப் பற்றியும்  சிந்திக்காதீர்கள். இப்படித்  தொடர்ந்து  மூன்று, நான்கு  நிமிடங்களுக்கு
செய்தால் டென்ஷன்  குறைவதை  நாமே  உணர முடியும். அனிச்சையாக  சுவாசிப்பதை   உணர்ந்து சுவாசியுங்கள்.

       இதையே   கொஞ்சம்  தீவிரமாகச்  செய்தால்  அதன் பெயர்  தியானம்.  தியானம்  செய்யும்போது  " ஏதோ ஒரு பொருளின்  மீது  நம் கவனத்தைச்  செலுத்தி, அந்தப்  பொருளை  நம் புருவங்களுக்கு   மத்தியில் அமரச் செய்ய முயலுங்கள்; அது  ஒரு விளக்கின்  ஒளியாக  இருக்கலாம், உடலின் உயிர்ச் சக்தியாக  இருக்கலாம், இல்லை  நாம்  வழிபடும்  கடவுளர்களின்  உருவமாக  இருக்கலாம்" என்றெல்லாம்  கூறுவார்கள்.
ஆனால்  இதையெல்லாம்  செய்யும்போது  கவனச் சிதறல்கள்  ஏற்பட்டு  தொடர்ந்து   செய்வது  தடையாக   இருக்கும்.. நான் கூறும்  பயிற்சியில்  இது ஏதும் இல்லை. நான்   சுவாசிக்கிறேன் ,நான் சுவாசிக்கிறேன் என்று உணர்ந்து செய்யுங்கள் என்றே
கூறுகிறேன்.. சுவாசத்தை  உணர  நேரம் காலம் தேவை இல்லை.

     அடுத்து  உடலின்  டென்ஷனைக் குறைக்க:- உடல் இறுக்கம்  மன இறுக்கத்தால்  வருவது. மன இறுக்கம்  குறைக்க மேலே வழி கூறி உள்ளேன். உடல்  சோர்வுற்று   இருக்கும்போது  அதனை சற்றே  தளரச் செய்தால் புத்துணர்வு  கிடைக்கும்.  அதற்கும்   ஒரு பயிற்சி  கூறுகிறேன்.

        ஒரு நாற்காலியில்  சௌகரியமாக  உட்கார்ந்து கொள்ளுங்கள். இல்லையென்றால்
மலர்ந்து  படுத்துக்கொள்ளுங்கள். கண்களை  மூடிக் கொள்ளுங்கள். கண்களை  மூடச்  சொல்வது  கவனச் சிதறல்களைக்  குறைக்க. இப்போது  உங்கள்  கவனம்   உங்கள்   பாதங்களில்  இருக்கட்டும்.  என் கவனம் என்  பாதங்களில்   உள்ளது  என்று உங்களையே  தயார்ப் படுத்திக்கொள்ளுங்கள் . என் பாதங்கள்  இறுக்கம்   குறைந்து   தளர்வாக  உள்ளது என்று உங்களுக்கு நீங்களே  கூறிக் கொண்டு   ( Auto suggestion  )
பாதங்கள்  தளர்வாவதை  உணருங்கள்.  பாதங்கள் தளர்வாகிவிட்ட நிலையில்  அடுத்து
உங்கள் கால் முட்டிப் பகுதிக்கு  உங்கள் கவனத்தை  செலுத்துங்கள் .அதே  முறையில்
உங்கள் கால்முட்டி தளர்வாக உள்ளது. இறுக்கம்  குறைகிறது என்று மறுபடியும்  உங்களுக்கு  நீங்களே   உறுதி படுத்திக்கொள்ளுங்கள். பாதங்கள், கால்முட்டி, முடிந்து
உங்கள்  தொடைப்பகுதி, இடுப்பு , வயிறு, மார்பு, கைகள், தோள், கழுத்து  என்று ஒவ்வொரு  உறுப்பாக, அதில்  கவனம் செலுத்தி இறுக்கம்  குறைக்க  எண்ணி,  உங்களை  நீங்களே  ஆட்டோ  சஜெச்சன்  முறையில்  டென்ஷனைக்  குறைக்கலாம்.   இந்தப்  பயிற்சியின்  தொடக்கத்தில்  டென்ஷன்  குறைய  பதினைந்து   நிமிடங்கள்   ஆகலாம்.  தேர்ச்சி  பெற்று  விட்டால்  ஐந்து  முதல்  எட்டு  நிமிடங்களுக்குள்  உடல்   ரிலாக்ஸ்  ஆவதை  உணர்வீர்கள்.

         இதன்  கூடவே   நான் பகிர்ந்து  கொள்ள  விரும்புவது, நம்  உணவைப்  பற்றி.  உணவைப்  பற்றி என்றால்  ஏதோ  சமச்சீர்  உணவு  பற்றியல்ல.  எந்த  உணவு  சாப்பிடுவதாயிருந்தாலும் , நாம்  இன்னும்  கொஞ்சம்  சாப்பிடலாம்  என்ற  எண்ணம்  வரும்போதே  நாம் சாப்பிடுவதை  நிறுத்திவிட  வேண்டும். அதாவது  நாம்  உண்ட  பிறகு  நம்  வயிற்றில்   70%  உணவும் 20% நீரும்  மீதி  காற்றாகவும்  இருக்கவேண்டும்.
         அன்பு  மனைவியோ  உறவினர்களோ   உங்கள்  மீது  அதிக  அக்கறை  கொண்டு   உணவு   பரிமாற வரும்போது, நீங்கள்  செய்ய  வேண்டிய  பயிற்சி , ஒரு முறை  மேலும்  கீழும்  தலையை  ஆட்டினால்  மூன்று  அல்லது  நான்கு  முறை தலையை   இடமும்   வலமுமாக  ஆட்டவும். இந்தப்   பயிற்சி  மிக  முக்கியமானது. யாரோ  பெரியவர்கள்   கூறியதாக  நினைவு. " உண்டி  சுருங்கு ' என்று.  அதற்கு  இது  உதவும்.
--------------------------------------------------------------------------------





     .






    .  






   



.

Friday, December 17, 2010

வாசகர் பரிந்துரை.

வாசகர்   பரிந்துரை.
-----------------------------
           தமிழ்மணம்   விருதுகளுக்காக   இடுகைகள்   சமர்ப்பிக்கப்பட்டு, வாசகர்   பரிந்துரை
துவங்கியுள்ள  இந்நேரத்தில், வலைப்பூ  பதிவர்களுக்கு   என் தாழ்மையான  ஒரு   வேண்டுகோள்.  பல்லாண்டு  காலமாகப  பதிவர்களாக  இருக்கும்  எழுத்தாளர்களுக்கு , அவர்களுக்கு  என்றே  ஒரு வாசகர் வட்டம், அதுவும் ஒரு பெரிய  வட்டம் இருக்க   வாய்ப்புள்ளது. பதிவுலகில்  புதிதாகக்  கால்  பதித்திருக்கும்   என் போன்றோருக்கு  அந்த  அளவு  வாசகர் வட்டம்  அமைய  நாளாகும். புதிதாக  வந்திருக்கிறோம்  என்ற ஒரே   காரணத்துக்காக   இத்தகையோரது  பதிவுகள் நிறைய  பேரிடம்  சென்றடைவதில்லை.

           விருதுகளுக்காக  பதிவர்கள்  பரிந்துரையும்போது,  இந்தப்  பின்தங்கல்   ( Handicap )  அதிகமாகவே  உணரப்படும். எழுத்துக்களின்   தரம், எடுத்தாளும் விதம்  போன்றவை  வெளிச்சத்துக்கு  வராமலே  போக  வாய்ப்புண்டு.  மேலும்  சிறுகதைகளையும்   கவிதைகளையும்   படைப்பிலக்கியத்தில்   ஒன்று  சேர்த்திருப்பது  மேலும்  பின்னடைவுக்கு   வழி வகுக்கும் . இரண்டின்  இலக்கணங்களே  வேறு.  இருந்தாலும்  இப்போது  அது பற்றிக்  கூறுவதில்  பயனில்லை.

           இந்த  இடுகையின்  நோக்கமே, யாராலும்  படிக்கப் படாமலேயே  பின்  தள்ளப்பட  உள்ள நிலைமையை   ஓரளவு  உணர்ந்து , அதை  ஓரளவு  சரி  செய்ய பரிந்துரைக்கும்
 பதிவாளர்களுக்கு  ஒரு  வேண்டுகோள்.  பின்பற்றப்படாத   பதிவாளர்களின்  பதிவுகளையும்  படியுங்கள். .சிறந்தது  என்று  தோன்றுவதை  பரிந்துரை   செய்யுங்கள்..
நல்ல  விளைவே  உண்டாகும்  என்று  நம்புவோம்.     
----------------------------------------------------------------------------------


   

Tuesday, December 14, 2010

விடாக் கொண்டன்

விடாக்கொண்டன்
----------------------------
பலரும்   படிப்பதற்கென்றே  படைத்த
படைப்பு , படிக்கப்படாமலேயே  போக
காரணம்  காணத்  துணிந்தேன் - ஒருவேளை ,
படித்தும்  ஏதொரு  பாதிப்பும்  ஏற்படுத்த
தகுதி  இழந்ததோ  நான்  மருகி  எழுதிய  எழுத்து .?

       இரட்டைப்  பிறவிகளாகப்    பிரசுரிக்க
       நான்  வேண்டியதில்  ஒன்றே  வந்து
       மற்றது  மறைந்தே  போனது
      வலைத்திரட்டியில்   அதுவும்  காரணமோ, ?

நானும்  விடாக்கொண்டன்   கொடாக்கொண்டன்
என மீண்டும்  எழுதுவேன். --வேண்டாமே ,
எழுதியதே  உளதே  நான் ஏன் பிறந்தேன் என்று.
படித்துதான்  பாருங்களேன்.

      

Saturday, December 11, 2010

காந்தஹார் நடந்ததும் நடந்திருக்க வேண்டியதும்

காந்தஹார்  நடந்ததும்  நடந்திருக்க வேண்டியதும்.
--------------------------------------------------------------------------
      இன்று மாலை எதிர்பாராதவிதமாக திரு.மேஜர் ரவி இயக்கி வெளியாக இருக்கும்"காந்தஹார்"  திரைப்படத்தின்  முன்னோட்டம்   காண அழைப்பு வந்தது.  மோகன்லாலுடன்  அமிதாப் பச்சனும்   கவுரவ நடிகராக நடித்துள்ள  படம்.  தீவிரவாதக்திகளாய் அடைக்கப் பட்டிருந்தவர்களை விடுவிக்கக் கோரி, கடத்தப்பட்ட  விமானம்  காந்தஹாரில் இறக்கப்பட்டு , இங்கிருந்த  கைதிகள்  மத்திய  மந்திரிகளின் துணையுடன்  காந்தஹாரில்   சேர்க்கப்பட்டு , விமானமும்  பயணிகளும்  மீட்கப்பட்டது இந்திய   வரலாற்றின்  ஒரு கருப்புப்பக்கம்
      அந்தக் கதையை  மாற்றி ,கடத்தப்பட்ட  விமானமும், பயணிகளும்  நம்  ராணுவ கமாண்டோக்களால்   மீட்கப்பட்டது  மாதிரி  காண்பித்திருக்கும்  திரைக்கதை , இப்படி  அல்லவா    நடந்திருக்க  வேண்டும்  என்ற  ஆதங்கத்தை  ஏற்படுத்துகிறது.
      ஜிஹாத்  என்ற பெயரில் ஏமாந்து உயிர்  துறக்கும்  அப்பாவியின்  கதையும் , அவன்தாயின்  மனப்போராட்டமும்  ஊடே  கூறப்பட்டுள்ளது. .கமாண்டோக்களின்  பயிற்சி  தீவிரவாதிகளின்  பயிற்சி மாற்றி மாற்றி காண்பிக்கப்படுகிறது.  நாட்டிற்கு  தன்னை அற்பணித்துவிட்ட ராணுவ  வீரர்களின்  நிலை   அழகாக   கூறப்பட்டுள்ளது      
இருக்கும்போது  அதிகம்  மதிக்கப்படாத  ராணுவ வீரனுக்கு, நாட்டின்  பணியில்  இறக்கும் போது கிடைக்கும்   மதிப்பும்  மரியாதையும் , இருப்பவனுக்குத்  தெரியும்போது  நாட்டிற்கு  சேவை செய்யும்  எண்ணம்  உயருகிறது, என்று  அழகாக கூறப்பட்டுள்ளது.
      நடிப்பில்  மோகன்லாலும்  மேஜர் ரவியும்  கொடிகட்டிப் பறக்கிறார்கள். ஆங்கிலமும்  இந்தியும்   மலையாளமுமாக கலந்து  உள்ள  திரைப்படம்  சப் டைடில்களுடனும், டப்பிங்கும்   சேர்ந்து  மெருகு  சேர்க்க  உள்ளதாக  இயக்குனர்  மேஜர் ரவி  கூறினார்.
     மொத்தத்தில்  படம்  பார்த்து  வந்த  பிறகு, நடந்த நிகழ்ச்சி   நடைபெற்ற மாதிரி  நடக்காமல் திரையில்  காட்டப்பட்ட  மாதிரி  நடந்திருந்தால் , மிகவும் மகிழ்ச்சியாக 
இருந்திருக்குமே,  என்ற எண்ணமே  மேலோங்கி  நிற்கிறது. .என்ன செய்ய .? நடந்ததை  மாற்ற  முடியுமா.?
------------------------------------------------------------------------------------------

 

 






 

நான் ஏன் பிறந்தேன்..?

நான்  ஏன்  பிறந்தேன் .?
------------------------
கலாநேசன்   பதிவில்   அழைப்பொன்று ,
கவிதைப் போட்டி  காட்டுங்கள்  திறனென்று,
நான்  ஏன்  பிறந்தேன்,
மூன்று  வார்த்தைகள்  மூன்று வரிகளில்
வருதல்  வேண்டும், அதுவே  விதி.

      சிறுவயது  முதலே  என்  தேடலின்  வரிகள்;
      நானும்   எழுதினேன்
      "நான்  நானாக   இருக்கையில்
       நீ   மட்டும்  வேறாக
       பிறந்தேன் (பிறந்து  ஏன் ) பழி தீர்க்கிறாய் "

"நான்" நானாகவும் "நீ" என் மனமாகவும்
நான் படும்  பாட்டை  பகிரவே
வந்து விழுந்த  வரிகள்
நாமெங்கு  பிறந்தோம் , நம் வரவே
ஒரு விபத்தின்  விளைவன்றோ ?
(பார்க்க  என் பிறிதொரு  பதிவை)

       நிலையிலா  வாழ்வில்  நான்  எங்குள்ளேன்.?
        என்  எண்ணில் "நான்" போனால்
        நலம்  பல விளையலாம்.

நன்கு  பழகிய  நண்பரொருவர்
நலமெலாம்  விசாரித்து  பிரிய  மனமின்றி
பிரியா  விடை  பெற்றுச்  சென்றார்.
மறுநாள்  காலை  வந்தது  சேதி ,
தூங்கச்  சென்றவர்  துயிலெழ வில்லை
நேற்றிருந்தவர்   இன்றில்லை
நிலையிலா   வாழ்வில்  என்றுமவர்   இனி
வெறும்  நினைவாகவே  திகழ்வார்.
பெயர் ஒன்று  கொண்டு  புவியில்   திரிந்தவர்
போகையிலே  வெறும்   பிணமே  வெறும் சவமே
கையில்  கடிகாரம்  கட்டினால்
காலத்தை  வென்றவர்  ஆவோமா ?
பிறப்பும்  இறப்பும்  நம் கையில்  இல்லை
இன்றிப்போது  காண்பதே  இறுதிக்  காட்சியாகலாம் .
இருக்கையில்  வேண்டுமா  காழ்ப்பும்  கசப்பும்.?

       ஏனென்று  கேள்வி  கேள்
       உன்னை  நீ அறியலாம்,
       உரைத்தவன்  சாக்ரடீஸ்

        உண்மை  உணர்வதே
       வாழ்வின்  நோக்கம்,
        கூறினான்  காந்தி.

      அயலவனை  நேசி
       உன்னிலும்  மேலாக
       என்றவன்  ஏசு.

உண்மையும்  நேசமும்  ஒன்றாக  இணைந்தால்
பிறந்த  காரணம்  புரியலாம்  ஒருவேளை .
-----------------------------------------------------    

Thursday, December 9, 2010

இயலாமை

இயலாமை
-----------------
பிறப்பொக்கும்   உயிர்க்கு,  வாய்  கிழியக்  கூறுகிறோம்
ஏனிந்த   ஏற்றத்தாழ்வு   என்றறிவோமா..?
என்ன   பிழை  செய்தான்   ஏழையாய்ப்   பிறந்தவன் ,
ஏனில்லை   வாழ்வு, வாய்ப்பு , உரிமையில்  சமத்துவம் .?
இருப்பவன்   வளமுடன்  உயர்கிறான் ,
அற்றவன்   என்றும்  அடியில்  தேய்கிறான் .
மேலே  செல்வது  கீழே  வரும்,  புவி  ஈர்ப்பின்  நியதி.
கீழே  உள்ளது  மேலே  செல்ல  யாரென்ன  செய்ய.?
காலச்  சக்கரச்  சுழற்சியில்  தானே  நடக்கும் . --நம்புவோமா ..!
---------------------------------------------------------------------------,

Sunday, December 5, 2010

செய்யாத குற்றம்

செய்யாத   குற்றம்.
-----------------------------
தொலைகாட்சி   நிகழ்ச்சிகள்
நிறையவே   பார்த்து  விட்டு,
நித்திரை  செல்லப் போகுமுன்,
அன்றைய   நிகழ்வுகள் 
நினைவினில்  நிழலாடும்.

        என்னென்னவோ   செய்ய  எண்ணியவை
        செய்தே   முடிக்காமல்   மறக்கப்பட்டிருக்கும்.
        மறந்தாலும்   பாதகமில்லை
        முக்கியமானதாய்   இல்லாதவரை.

கண்ணயர  சில நேரம்   பிடிக்கும்
பின் கண்   மூடி உறங்கிவிட்டால்
கலர்கலராய்க்  கனவுகள், அலை அலையாய்
கதை போல  விரிந்து  பரவும்.

        எழுத்தில்   கொண்டு வந்தால்
        இனிதே   ரசிக்கலாம்,
        இடுகையில்   பதிக்கலாம்
        என்றெல்லாம்   கனவினூடே  
        நினைவுகளும்   கூடவே   வரும்,

விடியலில்   எழுந்து  இனிய   கனவுகளை
அசை   போட  முயன்றால், மசமசவெனத்
தெளிவின்றித்  தோன்றுவதை  எழுத்தில்
வடிக்க  வார்த்தைகளும்  வராது,
கற்பனையும்   கை  கொடுக்காது.
     
         அதிகாலை   நடை பயிலுகையில்
         எழுதுவதற்கு   விஷயங்கள்  யோசிக்க
         நடையினூடே   வார்த்தைகளும்
         அழகாக  வந்து   வீழும்.

சற்றே  மலர்ந்து  வீடு  வந்து,
பேனா   பிடித்தால்   என்னதான் 
எழுதுவது,  ஒன்றும்   தோன்றாது
நினைப்பது   ஏன்  மறக்க  வேண்டும்..?

         பார்த்த   முகம்  பரிச்சயமானது , பேர்மட்டும்
         வேண்டும்போது   நினைவுக்கு   வராது.
         ஆடும்   சிறார்  கண்டு  மனம்  மகிழும்
         கூடவே   ஓடியாட  உடல்   மறுக்கும்.
         எண்ணங்களில்   இளமை  என்றுமிருக்கும்
         உடல் உபாதைகள்  முதுமையை  நினைவூட்டும்.
         வேண்டியதை  விரும்பிச்  செய்ய  விழையும் மனமே,
        உன்னால்  முடியாது  என்று  கூடவே   கூறும்.

உலகோரே   உங்களிடம்   கேட்கிறேன்
வயோதிகம்   என்பது  செய்யாத   குற்றத்துக்கு
விதிக்கப்பட்ட   தண்டனையா..?
------------------------------------------------------------------






      






   

 





  

Saturday, December 4, 2010

கவிதைத் தாகம்

கவிதைத்   தாகம்
--------------------------
நண்பரின்   கவிதை  ஒன்று   படித்தேன்.
நிலத்தடி   நீர்  வேருக்குக்   கீழே
வெகு  ஆழம்  போனது ,
கடல் நீர் கன தூரம்  கசிஞ்சு
ஊருக்குள்   வந்தது,
என்றெல்லாம்  அங்கலாய்த்து
என்று  தணியும்  என்  தாகம் என்று
ஏக்கத்தில்  எழுதியிருந்தார்.
         வானம்  பொய்ப்பதும்,  நிலம்
         வறண்டு  வெடிப்பதும் ,
         பயிர்கள்  வாடுவதும்,
         கடல்  சீறுவதும்,
         இயற்கையின்  நியதி,
         நாமென்ன   செய்ய
நம்மால்  தவிர்க்கப்பட   முடியாதவை,
அனுபவிக்கப்பட்டே   ஆகவேண்டும்,
என்றேன்   நான்.
நாம் ஒருமுகப்பட்டு   செயலாற்றினால்,
வானத்தையும்   வளைக்கலாம்
என்றார்  அவர்.
         அவரது   எழுத்தின்   தாக்கமோ,
         என்   எண்ணத்தின்  குறையோ,
         வானம்   பொத்துக்கொண்டு,
         தமிழ்  நாடே வெள்ளக் காடாக உள்ளது.
உணர்ந்ததை   இன்னும்  விளக்க
என்னால்  இயலவில்லை,
எண்ணியதனைத்தையும்   கவிதைக்குள்
முக்கியெடுக்கும் ஆற்றலுமில்லை.
         நானென்ன,
வார்த்தைகளால் தவமியற்றி
வரங்கேட்கும்   கவிச்சித்தனா....
பார்த்தவற்றை   கவிதைக்குள்
பதுக்கி  வைக்கும்   பகல்திருடனா...
பாட்டை   ஆளும்   பாட்டாளியா..சிவகுமாரனா..!
ஊர்க்குருவி   நானும்  பறக்கிறேன் ,
ஏதோ  என்னால்   முடிந்தது  இவ்வளவே.
------------------------------------------------------------  








 















 

Wednesday, December 1, 2010

வலைப்பூவில் பதிவுகள் ( ஒரு விமரிசனம் )

வலைப்பூவில்   பதிவுகள்  ( ஒரு  விமரிசனம்  )
--------------------------------------------------------------------
         மனதில்   பூட்டப்பட்டிருக்கும்   எண்ணங்களுக்கு   வடிகால்   தேட   நாம்   எழுதுகிறோம்.  சில  விஷயங்கள்  மனதை  வெகுவாகப்   பாதித்திருக்கும்.  இல்லை   சில   விஷயங்கள்   சொன்னால்   படிப்பவர்களுக்குத்  தெரிந்து  கொள்ள   வாய்ப்பாயிருக்கும்.   பாடியவன்   பாட்டைக்  கெடுத்தான், எழுதியவன்  ஏட்டைக்  கெடுத்தான்  என்பது  போல்  இல்லாமல் , எழுதப்படுவதால்  எழுதுபவனும்,  வாசிப்பவனும்   சிறிதேனும்  பாதிப்படைய   வேண்டும்.,பலனடைய   வேண்டும்.  சிலரது  எழுத்துக்களைப்   படிக்கும்போது , மூன்று   வயதுக்  குழந்தைகள்  மனசில்  தோன்றும்  ஏகப்பட்ட  எண்ணங்களைக   கோர்வையாகக்   கூற  முடியாமல் , அவசரமாகவும்  தொடர்பு   அறுந்தும்   பேசுவது  போல்  இருக்கிறது.

             மொழியின்  மேல்  இருக்கும்  ஆளுமையை   வெளிப்படுத்தும்   விதத்தில்  சிலரது  எழுத்துக்கள்   இருக்கின்றன. என்னதான்   சொல்ல  வருகிறார்கள்  என்று  சில சமயம்  புரியாமல்  இருக்கிறது ( Abstract  writings ) எழுதுபவர்கள்  எல்லோருக்கும்  அவரவர்கள்   எழுத்து , "காக்கைக்குத்  தன  குஞ்சு   பொன்   குஞ்சு "  என்பதுபோல்   இருக்கும்,  மறுக்க   முடியாது.
 
          வலைப்பூக்களில்  எழுதப்படும்  தலைப்புக்கள் , எடுத்துக்கொள்ளப்படும்   விஷயங்களின்    "வெரைட்டியை"   காண்பிக்கின்றன . எத்தனை  விஷயங்களைத்தான்
பகிர்ந்து  கொள்ள  எழுதுபவர்கள்  துடிக்கிறார்கள் என்றும்   புரிகிறது. வெவ்வேறு  விஷயங்களில்  எல்லாப்  பதிவுகளுக்கும்  அதற்குரிய  வாசகர்  வட்டம்  இருக்கும்.  போகப் போக   வளரவோ  குறையவோ  செய்யலாம். அது  எழுத்துக்களின்  தன்மையைப்  பொருத்தும்  இருக்கலாம் .

          பதிவுகளைப்  பலர்  படிக்கிறார்கள்  என்பதைப்  புரிந்து  கொள்ள  அப்பதிவுகளுக்கு  வரும்  காமெண்ட்ஸ்  மூலம்  அறிந்து  கொள்ளலாம்.   ஆனால்  படித்துவிட்டு   எந்த   ஒரு   பின்னூட்டமும்   எழுதாமல்   செல்பவர்களும்   இருக்கத்தான்   செய்கிறார்கள்.  பெரும்பாலான  பின்னூட்டங்கள்   உற்சாகப்   படுத்தியும்   புகழ்ந்துமே   எழுதப்படுகிறது.    சில  பதிவர்கள்  பின்னூட்டங்களைப்   பார்த்து   தணிக்கை   செய்து    விருப்பப்பட்டால்   பிரசுரிக்கலாம்   என்பது   போல்   வலைப்பூவில்   வசதிகள்   வைத்திருக்கிறார்கள். எழுதப்  படும்  பின்னூட்டங்கள்   பிரசுரமாகாமல்   இருக்க  என்ன   காரணங்கள்   இருக்கலாம்.?   மேலெழுந்தவாரியாகப்  பார்க்கப்போனால், எழுதியவற்றை  விவாதிக்கக்கூடாது   என்ற  மனப்பான்மையாக   இருக்குமோ  என்று  தோன்றுகிறது. எழுதுபவன்  விமரிசனத்துக்குப்  பயப்படலாமா.?யார்  என்ன  விமரிசனம்  செய்தாலும்  காக்கைக்குத்  தன  குஞ்சு பொன்  குஞ்சுதானே. எழுத்தின்  தரத்தை  உயர்த்திக்  கொள்ள  வேண்டுமென்றால்   விமரிசனத்துக்கு   உட்படத்   தயக்கம்  கூடாது. எழுதிய  பின்னூட்டங்களை  பதிவர்கள்  எப்படி  எடுத்துக்கொள்கிறார்கள்  என்பதை  அறிய மறுபடியும்  அவர்கள்  வலைக்குள்  புகுந்து  பிறகுதான்  தெரிந்து  கொள்ள   வேண்டி  இருக்கிறது.

          சாதாரணமாக  எழுதுபவற்றை  கதை,  கவிதை,  கட்டுரை  என்று  மூன்று  தலைப்புகளில்  அடக்கி  விடலாம். மொழியின்  மீதிருக்கும்   ஆளுமையைக்  காண்பிக்க   கவிதைகளும் , புனைவுத்  திறமையை  வெளிப்படுத்த  கதைகளும்  நிகழ்வுகளில்  அக்கறையை  தெரியப்படுத்த   கட்டுரைகளும்  எழுதப்  படுகின்றன. ஒவ்வொருவருக்கும்   ஒவ்வொருவிதமான  நடை , மொழியினை  கையாளும்  லாகவம் , ஆளுமை  எல்லாம்   தெரியவருகிறது. கவிதைகளில்  மனதைப்  பாதிக்கும்  சிறு  விஷயங்களும்  எழுதப்   படுகின்றன . அப்படி  எழுதுவோர்  நிச்சயமாக  ஏதோ  ஒரு  பாதிப்பில்தான்  எழுதுகிறார்கள்.  அவர்கள் சொல்லவருவது   படிப்பவருக்குப்  போய்ச்  சேர்ந்தால்  மிகவும்  நல்லது.

          சில  சமயம்  மனசால்  மிகவும்  பாதிக்கப்பட்டு  எழுதப்படும்  பதிவுகள்  யாராலும்  படிக்கப்படாமலேயே  போக  வாய்ப்பிருக்கிறது. குறைந்த  பட்ச வாசகர்களாக  பதிவின்   தொடர்பாளர்களைக்  கூறலாம். நம்  எழுத்தைப  பிறர்  படிக்கவேண்டும்  என்று  நாம்   நினைப்பது  போலத்தானே  எல்லாப் பதிவர்களும்  நினைப்பார்கள். பிறருடைய  பதிவுகளைப  படித்து  பின்னூட்டங்கள்  நாம்  எழுதினால்  அவர்களும்  நம்  பதிவுகளைப்  படிக்க   வாய்ப்புண்டு.

          சிலரது  இடுகைகளின்  எண்ணிக்கை  கண்டு  பிரமிப்பாய்  இருக்கிறது. ஒரே  நாளில்  இரண்டு, மூன்று, நான்கு  இடுகைகள்  கூட  இருக்கின்றன. எழுதுவதில்  அவர்களுடைய  உற்சாகம்  தெரிகிறது.  தமிழ்மணத்தில்  ஒரு நாளில்  முன்னூறுக்கும்  மேற்பட்ட  இடுகைகள்  பதிவாகின்றன. அவற்றை  மேலோட்டமாகப்  பார்க்கவே  நிறைய  நேரம்  தேவைப்படுகிறது. அதில்  சிலவற்றையாவது  தேர்ந்தெடுத்துப்  படித்து  உள்வாங்கிக்கொள்ள  படிப்பவர்களுக்கு   ஆர்வமும்  பொறுமையும்  வேண்டும்.

          பதிவர்களைப்  பற்றியும்  அவர்களது  எழுத்துக்களைப்   பற்றியும்  அறிந்துகொள்ள   அவர்களுடைய  பழைய  இடுகைகளையும்  படித்தால்தான்  ஓரளவுக்கு  அவர்களைப்  பற்றிக்  கணிக்க  முடியும்.  யாருக்கு  எந்த  மாதிரி  எழுத்து  கைவருகிறது, அது  நமக்குள்  ஏதாவது  பாதிப்பை  ஏற்படுத்துகிறதா , எழுதுவது  அரசியலா,  அறிவியலா,  திரையியலா,  ஆன்மீகமா,  விஞ்ஞானமா , இவற்றில்  எதில்  வெகுஜன  நாட்டமிருக்கிறது   என்பதை  எல்லாம்  தெரிந்து  கொள்ள  முடியும்.

          தரத்தைப்  பற்றிய  என்னுடைய  பதிவொன்றில்  நான்  கூறியிருந்ததை  மீண்டும்  நினைவு   கூர்கிறேன். எழுதுபவர்களை  உற்பத்தியாளர்களாகவும்   வாசிப்பவர்களை   வாடிக்கையாளர்களாகவும்   கருத வேண்டும். வாடிக்கையாளரின்  திருப்தியே   தரம்.  வாசகனின்  திருப்தியே  எழுத்தின்  தரம்.
--------------------------------------------------------------------------------------------    
 


  .   




 

Monday, November 29, 2010

தொடரும் தேடல்கள்

      தொடரும்   தேடல்கள்   ( ஒரு  கட்டுரை  )
--------------------------------------------------------------------
       " கடவுள்   மனிதனாகப்   பிறக்கவேண்டும் "-- திடீரென்று   கண்ணதாசன்   பாடல்   வரிகள்  நினைவுக்கு  வருகிறது.  பாட்டில்  மனம்   லயிக்கவில்லை..  மனிதனே    கடவுளைப்   படைத்துவிட்டு   அவன்  மனிதனாகப்   பிறக்க   வேண்டுவது   சற்றே   முரணோ   என்று   தோன்றுகிறது.  மறுபடியும்  மனம்,  காண   இயலாத   அல்லது  உணர   இயலாத  ஒரு   பரப்பிரம்மத்தைத்   தேடத்   துவங்குகிறதோ ? சரி,  இல்லாத  ஒன்றைத்  தேடுகிறோமா ?  அல்லது  எங்கும்   இருப்பதை  உணர  முடியாமல்  தவிககிறோமா.?  ஒன்று   மட்டும்  புரிகிறது. இந்தத்  தேடலுக்கு  விடை  கண்டவர்கள்  இருக்கிறார்களா , இல்லையா.? கண்டு  விட்டவர்கள்  என்று  நாம்  நம்பும்  சிலர்  என்னதான்  கூறுகிறார்கள்?
எதற்காக   நாம்  இந்த  தேடலைத்  துவங்குகிறோம்.? நம்  கட்டுப்பாட்டுக்குள்  இல்லாத   சில    நிகழ்வுகள்  ஆதியையும்  அந்தத்தையும்   தேட  வைக்கின்றன.

         ஆதியும்   இல்லாதது   அந்தமும்  இல்லாதது  என்றுதான்   நாம்   கடவுளை   உணர்த்தப்படுகிறோம்.  நம்  உள்ளத்தை , மனசை  நம்  கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு   வந்தால்,  ஆண்டவனை   உணர்வதில்   ஓரளவு   வெற்றி  பெறலாம்  என்று  பெரியவர்களும்   ஞானிகளும்   கூறுவது  ஓரளவு  புரிகிறது. உள்ளத்தை  உணர  எத்தனிக்கும்  முன் உடலை  நம்  கட்டுப்பாட்டுக்குள்   கொண்டு  வரவேண்டும்  என்றும்  கூறுகிறார்கள். உடலையும்  மனசையும்   நாமே  இயக்க  தியானம்  உதவும்  என்று   கண்டதும்  கேட்டதும்  வாயிலாகத்  தெரியவருகிறது. தியானத்தைப்  பற்றிப்  பேசும்போது  கூடவே   யோகா  பற்றியும்   நிறையவே   பேசப்படுகிறது. யோகா  உடலைக் கட்டுக்குள்    கொண்டு    வரவும்,  தியானம்    மனசைக்    கட்டுக்குள்   கொண்டு   வரவும்   உதவும்   என்றும்   அறிவுறுத்தப்படுகிறோம்.

          இந்தத்  தேடலும்  உணர்வுகளும்  எனக்கு  என்னுடைய   பதினைந்து   வயது  முதலே  தொடங்கியது. நாங்கள்  அப்போது  நீலகிரி  வெலிங்கடனில்  இருந்தோம்.  நீலகிரி   குளிர்ப்  பிரதேசம்  என்பது  எல்லோருக்கும்  தெரியும். அந்தக்  குளிரிலும்   விடியற்காலை   ஐந்து  மணிக்கு  எழுந்து, குழாயைத்  திறந்துவிட்டு, குளிர்  நீரில்  வெடவெடத்துக்  குளித்து, ஒரு  தனி  அறையில்  பத்மாசனத்தில்  அமர்ந்து, ஓம்,...ஓம்.. என்று  ஓங்காரத்தை  சுமார்  அரை  மணியிலிருந்து  ஒரு  மணிநேரம்  உறக்கக்   கூறுவேன் .பிறகு  விவேகானந்தரையும்   பரமஹம்சரையும்  நாராயண  குருவையும்   (அவர்கள்  எழுதியதை ) படிப்பேன். என்  செய்கைகளைக்  கண்டு  என்  பெற்றோர்  பயந்து   என்னைக்  கண்டிக்கத்  துவங்கினார்கள்.  எனக்கு  என்னுள்  எந்த  ஒரு  மாற்றமும்   என்னிடம்  நிகழாததால்  அந்த  முயற்சிகளை  கைவிட்டேன். அன்று  துவங்கிய  தேடல்   இன்று வரை   முற்றுப்பெறவில்லை.  இதற்குள்  வாழ்வின்  பல  நிலைகளையும்  கடந்து   இப்போது  எல்லைக்  கோட்டிற்கு  வந்து  விட்டதாக  நினைக்கிறேன்.

         வாழ்க்கையில்   கண்ட,  கேட்ட, அனுபவித்த  அனுபவங்கள்   எதையும்  எளிதில்  ஏற்றுக்கொள்ளும்  மனநிலையைத்  தரவில்லை. மாறாகக்  கேள்விகளே  அதிகம்  எழுகின்றது. சில  சமயம்  நாம்  ஏன்  இப்படி மற்றவரிடமிருந்து   மாறுபட்டு  நிற்கிறோம்   என்றும்   தோன்றும். எல்லோரையும்போல்  (  எல்லோரையும்   என்றால்   எல்லோரையும்   அல்ல ) ஏன்   எதையும்   கண்மூடித்தனமாக  நம்பிக்கையுடன்  ஏற்றுக்  கொள்ள  முடிவதில்லை.?

         நம்பிக்கைகள்  என்று  பார்க்கும்போது , பெரும்பாலானவை  பகுத்தறிவோடு   பார்க்கப்படாததாகவே  தோன்றுகிறது. நான்  கூறும்  பகுத்தறிவு  கடவுள்  மறுப்பு   சம்பந்தப்  பட்டதல்ல.. உண்மையிலேயே  ஆழ்ந்து  சிந்தித்து  உரசப்பட  வேண்டியவை.. நம்பிக்கைகளுக்கும்   மூட  நம்பிக்கைகளுக்கும்  நிறையவே  வித்தியாசம்  உண்டு. நேரம், காலம், ஜாதகம், தோஷம், பரிகாரம் என்பன   போன்றவற்றில்  அதிக  நம்பிக்கை  வைத்து  அறிவை  எங்கோ  அடகு  வைக்கிறோமோ  என்று  தோன்றுகிறது.  ,  

         பக்குவப்படாத  வயதில்  பரிசோதனைகள்   மேற்கொண்டு   பலனளிக்காததால் , உற்றவர்களிடம்  கற்றுத்  தெரிந்து   கொள்ளலாம்  என்றால்  அதற்கு  பெரிய  விலையே  கொடுக்க  வேண்டியுள்ளது. யோகா  கற்பதோ , தியானம்  கற்பதோ  உரிய  முறையில்   மேற்கொள்ள  நிறையச்  செலவு  செய்ய  வேண்டியிருக்கிறது..  இவை   எல்லாமே   இப்போது    வியாபாரமாகிவிட்டது. வாழும்   கலை,   ஈஷா   மையம், அமிர்தானந்த   ஆஸ்ரமம்   போன்றவை   மக்களுக்காக   எவ்வளவோ   நல்ல   காரியங்கள்   செய்திருக்கலாம்.  ஆனால்   அவர்கள்   போதிக்கும்   யோகா, தியானம்  போன்றவை  பணம்   மிகுந்தவர்களுக்குத்தான்   உபயோகமாகும். வாழும்  கலையினர்  அடிப்படை  போதனையாக  ஐந்து  நாட்கள்  தினம்  ஒரு  மணி  நேரம்  பயிற்சி  தருகிறார்கள். அதற்கு   தலைக்கு   ரூபாய்  நூறுக்கும்  மேல்   வசூலிக்கிறார்கள் .மேற்படி  கற்க  வேண்டுமானால்  ஆஸ்ரமத்தில்   தங்க  வேண்டும். சாதாரணமானவர்களுக்கு  அது  சாத்தியமானதாக  இருக்காது. இதுவே  மற்ற  இடங்களிலும்  நடக்கிறது. எனக்குத்  தெரிந்த  ஒரு  பயிற்சியாளர்  இதுவே  தொழிலாகக்  கொண்டிருக்கிறார்.

           பணம்  இல்லாமல்  எங்கும்  எதுவும்  நடைபெறுவதில்லை. கோவில்களுக்குச்  சென்று  வருவது, வழிபாடு  நடத்துவது  போன்றவை  நம்  கையில்  இருக்கும்  பணத்தைப்  பொறுத்தே  அமைகிறது. அதுவும்  நம்  தென்னிந்தியக்  கோயில்கள்   வழிபாட்டுத்தலமாக  இல்லாமல்  வியாபாரத்தலமாகவே  இருக்கின்றன. திருப்பதி , பழனி , குருவாயூர்,  ராமேஸ்வரம்  போன்ற  இடங்களில்  பணம்  பறிக்கப்படுகிறது.  இதுவே  வட  இந்தியக்  கோயில்களான  காசி, மதுரா, ஹரித்துவார்  போன்ற  இடங்களில்  பணம்  படைத்தவர்களும்   இல்லாதவர்களும்   ஒன்று போலவே  நடத்தப்  படுகிறார்கள். கடவுளை  தரிசனம்  செய்யப்  பணம்  கொடுக்கவேண்டியதில்லை. அங்குள்ள  பண்டாக்கள்  பணம்  பண்ணும்  முறையே  வேறு. அது அங்கு  வரும்  மனிதர்களின்  நம்பிக்கைகளின்  மேல்  அவர்கள்  வைத்திருக்கும்  நம்பிக்கையைப்   பொறுத்திருக்கிறது.

          என்னுடைய  இளவயதில்  ஷீரடி  சத்திய  பாபா  பற்றிய  விவரங்கள்  அறிந்தவர்கள்  குறைவு. சமீபத்தில்  நாங்கள்  ஷீரடி  சென்றிருந்தோம்.. அந்த இடமே    ஒரு பொருட்காட்சிசாலை   போலவும், ஒரு  சுற்றுலாத்தலம்  போலவும்  காட்சியளிக்கிறது. ஷீரடி  பாபாவை  ஒரு  மார்கெட்டிங்   பொருளாகவே  மாற்றியிருக்கிறார்கள்.

          என்னை  நானே  அறியவும், எனக்குள்  இருந்த  சில  சந்தேகங்களையும்  நான்  செய்த  முயற்சிகளையும்  பதிவு செய்ய  முற்பட்ட  இந்தப் பதிவு,  என்னுடைய  சில  ஆதங்கங்களின்  வெளிப்பாடாகவே  அமைந்து  விட்டதுபோல்  தோன்றுகிறது. என்ன  செய்வது.? நான் எழுதும்போது  என்னுடைய  மனத்தாங்கல்கள்  என்னையும்  அறியாமல்  வெளிப்படுகிறது. சரியா  தவறா  தெரியவில்லை.
------------------------------------------------------------------------------------------------- 
 





 







   




 









 






..          .
       

Thursday, November 25, 2010

காக்கக் காக்க

           காக்கக்   காக்க     ( ஒரு சிறு   கவிதை.)
--________________________________________________          
பட்டாம்   பூச்சிப்   பிடிக்கப்
பதுங்கிப்   பதுங்கி  முன்னேறும்
பத்து   வயசுச்  சிறுமி.
  
அவளிடமிருந்து   அதைக்  காக்க
எம்பி  எம்பித்  துரத்தும்
ஐந்தே   வயசுப்  பாலகன்.

எப்படியும்   பிடிக்க   வேண்டும்
என்ற  முனைப்பில்
தடுக்க   வந்த   தம்பியை
அடித்து   விடுகிறாள்   அக்கா.

அவனும்   ஆற்றாமையால்   கூவுகிறான்,  
அன்று   தும்பியைக்  கல்  தூக்க  வைத்தாள்
இன்று   இதன்  இறகைப் பிய்ப்பாளோ.?
பாவம்  பட்டாம் பூச்சி !
கடவுளே, நீ  அதைக் காப்பாற்று.     

பிறிதொரு நாள், குறும்பு  செய்த  பிள்ளையை
கூடத்தின்   ஓரத்தில்  நிற்க  வைக்க,
நில்லாமல்   ஓடிப்போனவனைப்   பிடித்து
ஓரடி  அடித்தாள்   அவன்  தாய்.

சிறிது   நேரம்   அழுது   ஓய்ந்தவன்
மாடியின்  மேலேறி வானம்  பார்த்து
வேண்டிக்கொண்டான்,
" பட்டாம் பூச்சியைக்   காத்த   கடவுளே,
என்னையும்   இவர்களிடமிருந்து   காப்பாற்று.!"
_________________________________________________



 









 
  
   
       
   

Sunday, November 21, 2010

வாழ்வின் விளிம்பில் ஒரு சிறுகதை

வாழ்வின்  விளிம்பில்
---------------------------------
            மயக்கத்தில்  இருந்தான்  அவன். யாரோ  கூப்பிடுவதுபோல்  தோன்றியது. அரை  விழிப்புடன்   உணர   முயற்சித்தான். சற்றே  பிராண்டியது  போலவும், பூனை  கத்துவது  போலவும்  தோன்றியது. திடீரென்று  நன்றாக  விழித்துக்கொண்டு  விட்டான். அருகில்  யாரும்  இருக்கவில்லை. நிச்சலனமாக  இருந்தது. பூனை  கத்துவதுபோல்  ஓசை  அவனிடமிருந்துதான்  வந்து  கொண்டிருந்தது., மூச்சு  விட்டு  இழுக்கையில்...ஒ ..இழுப்புச்  சத்தமா..? இல்லை ...எங்குதான்  அடைப்போ...? அடக்கடவுளே...இது  மட்டும்   தான்   பாக்கி  இருந்தது. மனிதனுக்குத்தான்  என்னென்ன   குறைகள். மூச்சுவிடுவதே பிரயாசமாகப்  பட்டது. சிறிது  நேரத்தில்  நல்ல  விழிப்பு  வந்துவிட்டது.
            ரங்கசாமிக்கு  தன்னிலை  தெரிய , முழுப்   பிரமாணத்திலும்  விளங்க , கொஞ்ச நேரம்   அவகாசம்  தேவைப்பட்டது. சுற்றும்  முற்றும்   பார்த்தான். தான்  திடீரென்று    மயக்கமடைந்து   விழுந்ததும்,   தன்னை   யார  யாரோ   எடுக்க   முயற்சி   செய்ததும்   கொஞ்சம்   கொஞ்சமாக   நினைவுக்கு   வந்தது. இப்போது   ஏதோ   ஆஸ்பத்திரியில்   இருக்கிறோம்  என்ற  நினைவு  வந்ததும்  பளீரென்று  பய  உணர்ச்சி  உடல்  முழுவதும்   பரவ  ஆரம்பித்தது. தனக்கு  ஏதோ  பெரிதாக  நேர்ந்திருக்க  வேண்டும்; அதனால்தான்   இங்கிருக்கிறோம் ; மனைவியும்  மக்களும் எங்கே.? அவர்களுக்குத்  தெரியுமா.? இல்லை...தனக்கு  ஏதாவது  நேர்ந்தால், அவர்களுக்குத்  தெரியாமலேயே  நம்  உயிர்  பிரிந்து  விடுமோ.? அடக்கடவுளே... .பாரம்பரியம்   எனப்படுவது  இறப்பிலும்  இருக்க  முடியுமா..? என்ன .. இறப்பைப்பற்றிய  எண்ணமெல்லாம்  அவ்வளவு  சீக்கிரம்  வருகிறதே...அங்குமிங்கும்  நகர  முடியவில்லை. மிகச் சோர்வாக  இருந்தது. யாரையாவது  பார்க்க  வேண்டும்.... யாரையாவது  கேட்க  வேண்டும்....தனக்கு  என்னதான்   நேர்ந்துவிட்டது..? .   

           "டக், டக்," என்ற சீரான ஓசை  சற்று  தூரத்தில்  கேட்க,  தலையைத்  திருப்பி, "நர்ஸ்,  சிஸ்டர், "  என்று  உரக்கக்  கூப்பிடுகிறான். நர்ஸ்  அருகில்  வருவதற்குள்  வேதனை   தாங்காமல்  மயக்கமுற்று   சாய்கிறான். ஆக, அங்கு  டாக்டர்களும்   நர்சுகளும்  இன்னொரு   அவசர  சிகிச்சைக்குத  தயாரானார்கள்.


            வாழ்க்கையின்    நிகழ்ச்சி    நிரலாக   மாறி  வரும்  மாற்றங்களில்    அவனுக்குப்    பிடித்தது    ஏதுமில்லையானாலும்   அவனைப்   பிடித்தது    ஏமாற்றமே   என்று (கொஞ்சம்  பெருமையுடன்)  கூறிக்கொள்பவன்  இந்த  ரங்கசாமி. இருந்தாலும்  நடக்கும்   காரண  காரியங்களுக்கெல்லாம்  அவனவனே  பொறுப்பு  என்று  அடித்துப்  பேசும்  ரங்கசாமி , அவனைப்பிடிக்கும்   ஏமாற்றங்களையே  வெற்றி  கண்டு , முன்னுக்கு  வந்தவன்  தான்  என்று  பெருமை  அடித்துககொள்பவன். எதிர்பார்ப்புகள்  அதிகமாகி   வாய்ப்புகள்  குறையும்போது  கிடைக்கும்  பலனின்  மறு  பெயரே  ஏமாற்றம்  என்று  அதற்குப்  பொருள்  கூறி  அதன்  முழு  வீச்சை  அடக்குவான்.

            பெரும்பான்மையானவர்களிடம்  அவர்கள்  தற்போது  இருக்கும்  நிலைக்கு  ஒரு  பொறுப்புப்  படம் (Responsibility  Diagram)  வரையச் சொன்னால்  அவர்களில்  பலரும்  பல்வேறு  மனிதர்களையும்  சூழ்நிலைகளையும்  கூறுவார்கள். தலைவிதி, தாய், தந்தை,  ஆசான், உற்றம்,  சுற்றம், உடல்நலம், என்று  ஏதேதோ  தலைப்பின் கீழ்  அவர்களின்   தற்போதைய  நிலைக்குக்  காரணங்களையும்   காரண  கர்த்தாக்களையும்  பங்கு  போடுவார்கள். ஆனால்  அவர்களின்  பங்கு  10 முதல் 15 சதவீதம்  கூட  இருக்காது. ஏதோ  இவர்களின்  நிலைக்கு  இவர்கள்  பொறுப்பேயல்ல  என்பது  போலிருக்கும். ஆனால்   ரங்கசாமி  அடித்துக்  கூறுவான், அவனுடைய  நிலைக்கு  அவன்தான்,  அவன்  மட்டும்   தான்  பொறுப்பு  என்று. பலன்களுக்கு  யாரையும்  எதையும்  குறை கூறமாட்டான்.

           இந்த  ரங்கசாமியின்  அடிமனசில்  ஒரு  குறை  உண்டு. அவன்  தந்தையின்  இறப்புக்கு  அவனே  காரணமாகி  விட்டதாக  உணர்வதுண்டு. இவன்  கொள்கைப்படி  எந்த  ஒரு முடிவுக்கோ  பலனுக்கோ  அவரவர்தான்  பொறுப்பு  என்றாலும், தந்தையின்   முடிவில் இவன் பங்கு  பெரிதளவு  இருந்ததாக  எண்ணுவான். அவன் தந்தைக்கு  உடல்  நலம்  சரியில்லாமல்  அவரை  ஆஸ்பத்திரியில்  சேர்த்தபோது, ரங்கசாமி  ஹாஸ்டலில்  தங்கிப்  படித்துக்கொண்டிருந்தான்.  ஆஸ்பத்திரியிலிருந்து  ஒரு   கார்டு   இவன்   தந்தை
DI லிஸ்டில்  இருப்பதாகத்  தெரிவித்து  வந்தது. இவனோ  எந்த  DI  லிஸ்டைக் கண்டான் . ஆஸ்பத்திரியில்   பல லிஸ்டுகளில்  இவன்  தந்தையும்  ஒரு  லிஸ்டில்  இருக்கிறார்  என்று   வாளாவிருந்துவிட்டான்.  தந்தையோ   ஒரு  சில  நாட்களில்  இறந்து  விட்டார்.
"அப்பாவுக்கு  வாழ்வதற்கு  ஆசையில்லை. ஐந்தாறு   பிள்ளைகளைப்  பெற்றெடுத்தவர். அவர்களை  கரை  சேர்க்க  தடுமாறி  இருக்கிறார். இந்த  நிலையில்  உடல் நலமில்லாமல்  இருந்திருக்கிறது. பொறுப்புகளின்  சுமை  தாங்க  முடியவில்லை. விட்டால்  போதும   என்று  சாவை   வேண்டிக்கொண்டே  இறந்திருப்பார். நான்  வாழ்ந்தே  தீருவேன்   என்ற
மனவுறுதி ( Will Power ) இருந்திருந்தால்  சாவு  எப்படி  நெருங்கியிருக்கும் , என்று             பலவாறு  எண்ணி சமாதானப் படுத்திக் கொண்டிருக்கிறான்.  ஏனென்றால்  அவருடைய   பொறுப்புகளை  அவன்  சுமக்க  வேண்டியதாயிற்று. ஆனால்  பல  நாட்களுக்குப்பிறகு , அந்த  DI list  என்று  அறிவித்த  கார்டைப்  படித்தபோது, அதன்  முழு  அர்த்தத்தையும்  உணர்ந்தபோது,  அவன்  அழுத  அழுகைக்கும்  அடைந்த  வேதனைக்கும்   எல்லையே  இருக்கவில்லை.

         " கொஞ்சம்  படித்திருந்தும் , பாமரனாகிவிட்ட  பாவி  நான், கவனமாக  இருந்திருந்தால்  என் தந்தை  இறந்திருக்க  மாட்டாரோ....வேறெங்காவது   வைத்தியம்   பார்த்திருந்தால்  பிழைத்திருப்பாரோ ..மடமையினாலும்  கவனக்  குறைவாலும் அவரைகொன்றுவிட்ட   பாவி   நான் , " என்று  எண்ணியெண்ணிக  குமுறியிருக்கிறான்.  

          இளவயதில்  பெரிய   பொறுப்புகளை -- ஐந்தாறு  பேர்  கொண்ட  குடும்பத்தை  நடத்திச்  செல்வது  என்ன  சும்மாவா..?ஏற்க  நேர்ந்த  ரங்கசாமி  அதற்கு  யாரையும்   குறை  கூறினதில்லை.  தலைவிதி  என்று நொந்து  கொண்டதுமில்லை.

        "DI  List ' ல்  உள்ளவர்  என்றால்  நோயின்  அபாய  நிலையில்  இருப்பவர்  "Dangerously  ill "என்று  நான்  அறிந்திராததால்  என் தந்தை  இறக்க  வேண்டியதாயிற்று. ஆகவே  அதற்கு  நானே  காரணம். அவர்  இறந்ததால்  அவர்  பொறுப்பு  என்  பொறுப்பாகிறது. என்று  தானே  பொறுப்பேற்றான்.

          ரங்கசாமிக்கு  மனஉறுதி  கொடுப்பவர்கள்  நிறைய பேர்  உண்டு. அதில்  முதன்மை  யானவர்   பாரதி.,விவேகானந்தர்  முதலானோர்.
         "தேடிச் சோறு   நிதம்   தின்று --பல
           சின்னஞ்ச்சிறு   கதைகள்  பேசி --மனம்
           வாடித்  துன்ப  மிக  வுழன்று --பிறர்
           வாடப்  பல  செயல்கள்  செய்து --நரை
           கூடிக்  கிழப்  பருவமெய்தி --கொடுங்
           கூற்றுக்கிரை   எனப்பின்   மாயும் --பல
          வேடிக்கை   மனிதரைப்  போல் -- நான்
           வீழ்வேனென்று   நினைத்தாயோ..? "
என்று  பாரதியின்  பாடலை  அடிக்கடிப்  பாடி  மன   வலிமை   ஏற்றிககொள்வான். தான்   வாழ்வதே  எதையோ  சாதிக்கத்தான்  என்று  தனக்குத்தானே  உரமேற்றிககொள்வான் .
"  உன் குறி  எட்டும்  வரை  தளராதே. விழி, ஏழு, நட " என்றெல்லாம்  தனக்குத்தானே   உற்சாகமூட்டிக்கொள்வான், "மனசாஹ் , வாசாஹ்,கர்மணாஹ், நல்லதை  நினை,  நல்லதைக்  கூறு, நல்லதைச்செய்.  ஏனென்றால்  எண்ணங்களால்  ஆகாதது ஏதுமில்லை.  எண்ணமே   அனைத்துக்கும்  மூலமாகும்.;இயற்கையே  எண்ணத்தில்  அடங்கும் ;எண்ணமே  செயற்கைக்  கருவிகளனைத்தினோடு  இயற்கை  கருவிகளை  எல்லாம்  இயக்கும்  சக்தி --என்றெல்லாம்  எல்லோருக்கும்  எடுத்துக்கூறி  மற்றவர்  இவனைக்  கண்டால்  காத  தூரம்  ஓடுமளவிற்கு  நல்ல  பெயர்  வாங்கி  இருக்கிறான்.

          இந்த   ரங்கசாமிதான்   ஆஸ்பத்திரியில்   சேர்க்கப்பட்டு   டாக்டர்களுக்கும்   நர்சுகளுக்கும்   சவாலாக   வாழ்வா   சாவா   என்ற  போராட்ட  நிலையில்  இருக்கிறான்.  ரங்கசாமி  பிழைப்பானா ,  மாட்டானா..?  பிழைத்து   எழுந்தால்  அதற்கு   அவன்   யாரைப்   பொறுப்பாக்குவான் ,? இறந்து  விட்டால்.....ரங்கசாமிக்கு  ஆராயவே  சந்தர்ப்பம்  இருக்காது.


          ரங்கசாமிக்கு சாவைக்கண்டு  பயம்  கிடையாது. சாவது  என்பது  என்ன..?நிரந்தரத     தூக்கம்.....அவ்வளவுதானே . ஆனால், ஆனால், சாவின்  முழு  வீச்சையும்  அதை  எதிர்  கொள்பவன் எப்படித்  தாங்குகிறான். ..யாருக்குத்  தெரியும்.? செத்தவர்  அனுபவங்களைச்  சொல்ல  முடியுமா..? ஆனால்  சாவு   நெருங்கும்போது  அதன்  விளைவுகளை  எதிர்  நோக்க  முடியாமல்  பயப்பிராந்தியால்  பாதிக்கப்பட்ட  ஒரு நண்பனின்  சாவைக் கண்கூடப்   பார்த்திருக்கிறான்.  அதிலிருந்து  சாவதை  எவரும்  விரும்புவதில்லை  என்று  நன்றாக  உணர்ந்தவன்தான். சாகும்  நிலையில்  நண்பனுக்கு  ஆத்ம  திருப்தியும் ,  மனோபலமும்  சுகசாவும்  கிடைக்க  வேண்டி பிரார்த்தனை  செய்து  தந்த விபூதியை  அவன்  நெற்றியில்  இட்டான். அடித்துச்  செல்லும்  வெள்ளத்தில்  கிடைத்த  துரும்பாக  எண்ணி  நாத்திகனான  நண்பனும்  திருநூறு  அணிய  சம்மதிக்கிறான். .சாவு  என்ன  திருநூறுக்குப   பயப்படுமா..? எந்த ஒரு  முன்னேற்றமும்  ஏற்படாத  நிலையில்  நண்பன்  இவனிடம்  சாவதற்கு  முன்  சாடியது  இவனை  என்றும்  சங்கடப்படுத்தும் ." உன்  விபூதிப்  பட்டையும்  நீயும் ..நீயே  வெச்சுக்கோ ...போ..  .." சாவை நேரில்  பார்த்தாகி  விட்டது. இன்னும்  அனுபவிக்கத்தான்  இல்லை.   .   

          மனித  வாழ்க்கையே  விசித்திரமானது.  அடுத்த  வேளை   சோற்றுக்கில்லாமல் , வியாதியால்   நலிவுற்று ,யாரும்  உதவ   இல்லாமல்   அனாதையாய்   ஆறுதலற்றுக்   கிடக்கும்   ஜீவன்களும்   வாழத்தான்   ஆசைப்படுகின்றன. ...இல்லை..  சாவைக்கண்டு    பயப்படுகின்றன. இந்த   பயம்தான் காரணமோ  என்னவோ ...வாழ்க்கை  முடிவதில்லை.  யாரும்  முடிய  விடுவதில்லை. தன  வாரிசில்  தன்னைக்  காண  விழைகிறது. உலகம்  ஒருவர்  இருவராவது  பல்கிப் பெருகிப்  பலராவதுமான   நிலை  முடிவதில்லை. வெட்ட  வெட்ட  துளிர்  விடுவதும் , வெள்ளம் ஒரே  குறியை  நோக்கி   ஓடிக்கொண்டிருப்பதும்   இயற்கையின்   நியதியல்லவா. ...ஆனால்  இயற்கை  நிகழ்ச்சிகள்  சிந்தித்து  நடப்பதில்லையே .  மனிதன்தானே   சிந்திக்கிறான்.  சாவு  உண்டு   என்று  தெரிந்தும்  அழியாமைக்கு  உத்தரவாதம்  உள்ளது  போல்   அல்லவா  அவனுடைய   செய்கைகள்   இருக்கின்றன.

          ரங்கசாமி  ஆஸ்பத்திரியில்  சேர்க்கப்பட்ட  செய்தி  அறிந்து  ஓடி  வந்தனர்  அவனுடைய  மனைவியும்  மக்களும்  உற்றவரும்  சுற்றவரும். " அவருக்கு  இரண்டு  முறை  மாசிவ்  ஹார்ட்  அட்டாக்  ஆகியிருக்கிறது.  யாரும்  பார்க்க  முடியாது. தொந்தரவு  செய்யக்கூடாது." --- டாக்டர்  சொல்லிவிட்டார். ..

          ஒருவன்  உயிருடன்  பிழைக்கவோ , நலமாகத்  திரும்பவோ,  பிரார்த்தனை  உதவும் . அதன்  சக்தி  எல்லையற்றது., என்ற   நம்பிக்கையில்    அனைவரும்   பிரார்த்தனை   செய்கின்றனர்.   பிரார்த்தனையில்    சுயநலம்    உண்டா.?   இருக்கலாம். இல்லாமலும்   இருக்கலாம்.  ரங்கசாமிதான்   அவனுடைய    கடமைகளை    நிறைவேற்றி   விட்டானே.   அவன்   இருநதால்  என்ன,  போனால்  என்ன.? இருக்கவேண்டும்  என்பதற்குப  பிரத்தியேக  காரணம்  உண்டா  என்ன.? காலையில்  மலர்ந்து  மாலையில்  வாட்டும்  மலர்  போன்ற   நிலையாத  வாழ்க்கையில்  ஒவ்வொருவரும்  போய்த்தானே  தீரவேண்டும் . போகும்  பாதை  கரடு  முரடாக  இல்லாமல், போகும்  உயிர்  "பொசுக்"  என்று  போனால்  பிழைத்துக்கொள்வார். ! அதாவது  சாவின் பயம்  தெரியாமல்  சாக  வேண்டும் . அவ்வளவுதான்.

           ரங்கசாமிக்கு  நினைவு  திரும்புகிறது.  கண்ணாடி  சன்னல்  வழியே  மனைவியும்  மக்களும்  கூடி  நிற்பது  தெரிகிறது. " என்ன  ஆயிற்று  எனக்கு.?" பேசவோ  நகரவோ  முடியாவிட்டாலும்  எண்ணத்தில்  தெளிவு  இருந்தது. " நெஞ்சு  வலி  வந்ததே...ஒ .ஹார்ட்  அட்டாகோ--அதுதான்  இந்த  வயர்களும் , குழல்களும், ஆக்சிஜன்  மாச்குமா.? நான்  செத்துப்போயவிடுவேனோ.?"

          எந்த  எண்ணம்  வரக்கூடாதோ  அந்த  எண்ணம்தானே  வரும்  அதுதான்  மனித  மனசு. ரங்கசாமி ஒரு  சில  நொடிகளில்  தன  வாழ்க்கையின்  மொத்த அத்தியாயங்களையும்  ஒரு  முறை  புரட்டிப்  பார்த்து  விட்டான். மனம்  எனும்  கணினி  எண்ணத்தின்  வேகத்துக்கு  ஈடு  கொடுத்துவிட்டது. சில  பல  முக்கிய  நிகழ்ச்சிகளை  மனதில்  மீண்டும்  கொண்டு  வந்து  சற்றே  அசை  போட்டான்.

          தந்தை  செய்த  பிழையை  தனயன்  செய்திருக்கவில்லை. ஆசைக்கொன்றும்    ஆஸ்திக்கு  ஒன்றும்  மட்டும்தான்.  அவர்களும்   இப்போது  தானாகவே  வேரூன்றி  நிற்கிறார்கள். அன்பு  மனைவி ,கொஞ்சம்   தவித்தாலும்  சமாளித்துக்கொள்வாள். எல்லோரும்  பக்குவமாக  ஏற்றுக்கொள்வார்கள்.--" அவனுடைய  பொறுப்புகளை  முடித்து  விட்டான். யாருக்கும்  கஷ்டம்  கொடுக்காமல்  மகராசனாய்ப் போய்விட்டான்."

          அது  சரி, ரங்கசாமிக்குத்   தான்   தயாரா   என்று   தெரிய வில்லை. உடல்   சோர்வு  கண்களை  மயக்கியது. உள்ளம்   விழித்துக்கொண்டுதான்   இருக்கிறது. சில   காட்சிகள்   கண் முன்னே   விரிகின்றன.  கனவா   நனவா   என்று   தெரியவில்லை. ரங்கசாமி   அனாதையாக  ஒரு   மலை   அடிவாரத்தில்   கிடக்கிறான். எழ   முடியவில்லை. தாகமோ  தாகம்.  தொண்டை   வறண்டு   போகிறது. தண்ணீர்   தண்ணீர்   என்று   உதடசைகிறது.   சாரி  சாரியாக  மக்கள்  மலை   ஏறிக்  கொண்டு  இருக்கிறார்கள்.ரங்கசாமியை  யாரும்  கண்டுகொள்வதே  இல்லை. தாகத்திற்கு  நீர்  கிடைக்காவிட்டால், ஏற்படும்  அவஸ்தையைப  புரிந்து  கொள்பவர்  மிகக் குறைவே. தாகம்  எடுத்தவுடன்  சற்றே  நீர்  கிடைத்து  விடுகிறதே.  நாக்கு  வறண்டு,  மேலண்ணத்தில்  ஒட்டி, மனம்  நொந்து, பேச  முடியாமல்  " ஐயோ , இனிமேல்  தாங்க  முடியாது", என்று எண்ணி விட்டால்  முடியுமா   தாங்கித்தானக வேண்டும...கஷ்டப்படு......வேண்டும்...யார்  யாருக்கு  நீ  என்னவெல்லாம்   செய்தாயோ ......பலனை  அனுபவி.----"ஆற்றாமையைப்  போக்கிக் கொள்ள  காரண  காரியங்களைத்  தேடுவதுதான்  மனிதனின்  இயல்பு.     .  

          எல்லோர்  கையிலும்  நீர்  இருக்கிறதே. கொஞ்சம்  தரக்கூடாதா...தொண்டை  நனைந்தால்  போதுமே. சற்று  தூரத்தில்  வருவது  யார்.? யாரது..அப்பாவா...? இவ்வளவு  வயதாகிவிட்டதா  இவருக்கு....நமக்கே  இவ்வளவு  வயசாகி  இருக்கும்போது   அப்பா  இன்னும்  வயோதிகமாகி   தெரிவதில்  ஆச்சரியம்  இல்லையே.. அவர்  கையில்  தண்ணீர்  குவளை  இருக்கிறது. இவர்   இவர்   தாகத்துக்கு  நீர்  தருவார். என்ன  இருந்தாலும்   அப்பா  அல்லவா...

           " அப்பா,  அப்பா ..."  வாயசைகிறது .சத்தம்  எழவில்லையே.. கேட்காமல்  போய  விடுவாரோ..?முழு  சக்தியையும்  உபயோகித்துத  தன  கையையும்  காலையும்  ஆட்டுகிறான். அவருக்கு  இவனை  அடையாளம்  தெரியவில்லை.  சற்றே  நின்று  பார்க்கிறார்.  "ஐயோ   பாவம்  சிறிது  தண்ணீர்  கொடுப்போம்.' என்று அவன்  வாயில்  நீர்  ஊற்றுகிறார். நீரா அது.. அமிர்தம்  ! உயிர்  கொடுக்கும்  நன்னீர்.

          " அப்பா , நாக்கு  வறட்சியைத்  தாங்க  முடியவில்லை. தண்ணீர்  தந்து   காப்பாற்றினீர்கள் ." அவனை  இப்போது  உற்று  நோக்குகிறார் . அடையாளம்  தெரியத்  தெரிய  அவர்  கண்களில்  ஒரு  வெறுப்பு  நன்றாக  விரிகிறது. " என்னைக்  கொன்றவன்  அல்லவா   நீ..? தெரிந்திருந்தால்  தண்ணீர்  கொடுத்திருக்க  மாட்டேன் " என்று  தீக்கங்குகளை   உமிழ்ந்துவிட்டு   விடு விடுவேனச்  சென்று  விடுகிறார்.


           ரங்கசாமி  திடீரென  விழித்துக்  கொள்கிறான். அப்பாவும்  இல்லை , யாரும்  இல்லை .நர்ஸ்தான்  அவனுக்குப்  பஞ்சில்  சிறிது  நீரை  நனைத்து  அவன்  வாயில்   வைத்துக்  கொண்டிருந்தாள்
 
          அப்பா   வாழப் பிரியப்படவில்லை.. தீவிரமாக  வாழ  நினைத்திருந்தால்  அவரையும் மீறி   சாவு  எப்படி  வரும்..? எனது  அறியாமை  காரணமாக  அவர்  இறந்திருக்க  முடியாது....என்றெல்லாம்  தன்னை  சமாதானப்  படுத்திக் கொண்ட  ரங்கசாமிக்கு  குற்ற  உணர்ச்சிகளின்  தீவிரத்  தாக்கம்  குறையவில்லை. " அப்பாவுக்கு  வாழ்க்கையில்  செய்ய  வேண்டிய  கடமைகள்  நிறையவே   மீதமிருந்தது...மலை போலிருந்தது. செய்வதற்குச  சக்தியில்லை. தெம்பில்லை.  கோழை  போல்  பயந்திருக்கிறார். பொதிகளைச்  சுமக்க  புத்திரன்  இருக்கிறான்  என்ற  எண்ணத்தில்  சாவை  விரும்பி  அழைத்திருக்கிறார்.. போராட வில்லை   மனசிருக்கவில்லை. "

            இந்த  எண்ணம் சுத்தத்தவறு . உடல் நலமின்மை  அவராக  வருத்திக்  கொண்டது    அல்ல. வாழ்வின்  கடமைக்குப்   பயப்படுபவராக   இருந்திருந்தால்  தற்கொலை  முயற்சிக்கல்லவா   போயிருப்பார்.. இல்லை  எங்காவது  ஓடிப்போயிருக்க   வேண்டும்.
உடல்  நலம்  சரியில்லாதபோது  மனோபலமும்  குறைந்திருக்கிறது.. பட்ட  கஷ்டங்கள்  போதும், விடுதலை  கிடைக்காதா, என்று  உள்மனம்  ஏங்கி  இருக்கிறது.. எண்ணப்படியே
உடலும்  ஒத்துழைத்திருக்கிறது. கடமைகளில்  இருந்து  தப்பி ஓட  ஒரு வடிகாலாக  சாவை  வரவேற்றிருக்கிறார். He was an escapist  அவருடைய  சாவுக்கு  நான்  எப்படி  முழுப்  பொறுப்பாக  முடியும். வேண்டுமானால்  என்னை  அறியாமலேயே  அவருக்கு  நான்   உதவி  இருக்கலாம். அதற்குத்தான்  பிராயச்சித்தமாக  அவருடைய  கடமைகளை  நான்  கட்டிக்  காத்தேனே.  அவருடைய  சாவுக்கு  நான்  எப்படி  காரணமாக  முடியும்.

           " ரங்கசாமி,  அவர்   நிலையில்   நீ   இருக்கிறாய்  இப்போது. . நீ   பிழைக்க  வேண்டும்   என்று   உறுதியாய்  இரேன். "  என்று  அவனது  மனம்   அவனை  உசுப்பியது .
அவரை   விடு.  உன்னிலை   என்ன..? நீ  உன்  கடமைகளை  முடித்து  விட்டாய்  அல்லவா. நீ  ஏன்  சாக  வேண்டும் . வாழ்க்கையை   அனுபவியேன். சாவை  விரட்டு.  எமனை  விரட்டு. காலனைக்  கூப்பிடு. " காலா.. உனை   நான்  சிறு  புல்லென  மதிக்கிறேன் . என்றன்   காலருகே   வாடா.. . சற்றே  உனை  மிதிக்கிறேன்  என்  காலால் "


           ரங்கசாமி  சற்று  சிந்தித்துப்பார்.. உன்  தந்தைக்கு  கடமைகள்  இருந்திருக்கின்றன   முடிந்திருக்கவில்லை . அவர்  வாழ்ந்திருக்க  வேண்டும். உனக்கென்ன..?  நீ  வந்த  வேலைதான்   முடிந்து  விட்டதே. நீ  இருப்பதே  இந்த  பூமிக்கும்  மற்றவருக்கும்  பாரம்   அல்லவா,  உன்  உபயோகம்  தீர்ந்து  விட்டது. நீ  சாவதால்  ஒரு  குறையுமில்லை.. ஏன் ..
சாக  பயமாய்  இருக்கிறதா.?

          பயமா.. நிச்சயமாகத்  தெரியவில்லை.  இறந்து போனால்  மறுபடியும்  என் மனைவி  மக்கள்  உற்றார்  சுற்றார்  இவர்களை  எல்லாம்  பார்க்க  முடியாதே  அவர்கள்   அன்பினைக்  கொடுத்து  அன்பினைப்  பெற  முடியாதே....அட ..நீ  இருநதால்  அல்லவா   கொடுக்கவோ  பெறவோ  முடியும் ... நீயே  இல்லாவிட்டால்  என்னாகும் ..இருந்து  என்ன சாதிக்கப்  போகிறாய்.?

         நான்  இல்லாவிட்டால்  என்னாகும்.? நானே  என்  நினைவாக  மாறி  விடுவேன்.  அதுவும்  சில  நாட்களுக்குத்தான்.. இருநதால்  என்ன   சாதிப்பேன் .? யாருக்குத்  தெரியும்   ஒரு வேளை  மற்றவருக்குப்  பாரமாக  இருப்பேனோ  என்னவோ.. அப்படியானால்  பிற்காலத்தில்  நானோ  என்  நினைவுகளோ  சுகமாக  இருக்காது.

         என்னதான்  எண்ணமாக  வருகிறது..? வாழ்வா  இல்லை  சாவா.? நான்  வாழ  வேண்டும்  என்றால்  சரியான  காரணம்  இருக்க  வேண்டும்  அல்லவா. நான்  போய  விடுவேன்  என்று  எண்ணி, ரயிலடிக்கு  வண்டியேற்ற  வந்திருப்பவர்கள்  போலல்லவா   தெரிகிறார்கள்  இங்கு  கூடியுள்ளவர்கள் .

         " ரயில்  புறப்பட  இன்னும்  இரண்டு  நிமிஷங்கள்  தானிருக்கிறது."

          ரங்கசாமியின்  நேரம்  முடிந்து  விட்டதா.? அவன்  உயிருடன்  வீட்டுக்குத்  திரும்புவானா.  அவன்  நினைப்பதுபோல்  எண்ணத்தின்  சக்தியால்  சாவைத் துரத்துவானா. எண்ணத்துக்கு  சக்தி  கொடுக்க  கடமைச்  சுமைகள்  இல்லாததால்  வலு     இழந்து   மடிவானா...

         அவன்  ஏன்  சாக வேண்டும்..? ஏன்  சாகக்கூடாது.? கேள்விகளுக்கு  விடை  கிடைக்குமா.? கிடைக்காதே.! கிடைக்குமானால்  புத்தன்  வெற்றி  கண்டதாகாதா. ? வெற்றி  கண்டிருந்தால்..... எல்லாம்  வீண்  கேள்விகள்...

         ஒன்று  மட்டும்  புரிந்து  கொள்ள  வேண்டும். வினை  விதைத்தவன்  வினை  அறுப்பான் . தினை  விதைத்தவன்  தினை  அறுப்பான். மரண  பயம்  இல்லாமல்  சாக  வேண்டும் . ரங்கசாமியின்  கொடுப்பினை  என்ன..?    
 ---------------------------------------------------------------------------


  .     
 




      .
. .      

          .




 

..
 


  
 


..
 







 













       

 



.
 
 





  .   
 




         



.   .    .