Wednesday, February 29, 2012

இன்னும் ஒரு காதல் கதை.


                                    இன்னும் ஒரு காதல் கதை
                                    -------------------------------------
                           (. எனக்கு மின் அஞ்சலில் ஒரு கதை வந்தது. இதை
                             தமிழாக்கி பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.)

                                      Description:
                    cid:7FE152C4A67F4A4285EE6F0C3D08AE11@yourf78bf48ce2                                   

       அது ஒரு சுறுசுறுப்பான காலை வேளை.மணி 8.30- அளவில்
இருக்கலாம்.அப்போது ஒரு எண்பது வயது பிராயமுள்ள ஒரு
முதியவர், அவர் கையில் தையல் பிரிப்பதற்காக வந்தார்.
அவருக்கு ஒன்பது மணியளவில் ஒரு appointment இருப்பதாகவும்
அவசரத்தில் இருப்பதாகவும் கூறினார். ஆரம்பப் பரிசோதனை
முடித்து நான் அவரை அமரச் சொன்னேன்.அவர் தன் கைக்கடி
காரத்தைப் பார்த்துக் கொண்டு இருப்பது கண்டு நான் அவருடைய
காயத்தைப் பரிசோதித்தேன்.நன்றாக ஆறியிருந்ததால் ,தையலை
பிரிக்கத் தேவையான பொருட்களைக் கொண்டுவர நர்ஸிடம்
பணித்தேன்.காயத்தைப் பரிசோதிக்கும்போது, அந்த முதியவரிடம்
பேச்சுக் கொடுத்தேன்.

     அவர் அவருடைய மனைவியுடன் காலை உணவு கழிக்க வேறு
ஒரு ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டும் என்றார்.அவர் மனைவி
உடல் நலம் பற்றி விசாரித்தேன்.

 Description:
                    cid:4B7E1CC62DDF40CCB5395F61E645F748@yourf78bf48ce2


       அவர் மனைவி சில காலமாக ஆஸ்பத்திரியில் இருப்பதாகக்
கூறி அவர் மறதி நோயினால் (ALZHEIMER DISEASE)பாதிக்கப்பட்டு
இருப்பதாகக் கூறினார் பேசிக் கொண்டு இருக்கும்போது ,நேரம்
தாமதமானால் மனைவி கோபித்துக் கொள்வாளா என்று
கேட்டேன் அவளுக்கு அவர் யாரென்று அடையாளம் மறந்து
போய் ஐந்து வருடங்கள் ஆகிறது என்றார்.

   
உங்களை யாரென்று தெரியாதிருந்தும் நீங்கள் தினமும் காலை
உணவை அவருடன் கழிக்கிறீர்களா என்றேன்.அவர் என் கை
மேல் கை வைத்து முறுவலுடன் சொன்னார்.” அவளுக்கு நான்
யாரென்று தெரியாவிட்டாலும் எனக்கு அவளைத் தெரியுமே”.
Description:
                    cid:24D1EA3D693143EBB417BFCBCCC5EF9A@yourf78bf48ce2


  என் கண்களில் நீரைக் கட்டுப் படுத்த நான் சிரமப் பட்டேன்..
என் தொண்டையில் ஏதோ அடைத்தது.

     இந்த மாதிரிக் காதல்தான் வாழ்வில் வேண்டும். உண்மைக்
காதல் உடல் சம்பந்தப் பட்டது மட்டும் அல்ல. உண்மைக் காதல்
இருப்பது. இருக்கப் போவது, இல்லாமல் இருக்கப் போவது என
எல்லாமே அடங்கியது
Description:
                    cid:A6DFC76C5E4E40A6B06F5041D0A94B6C@yourf78bf48ce2

        வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பவர்கள்,  எல்லாம்
அடைந்தவர்கள் அல்ல.இருப்பதில் எல்லா மகிழ்ச்சியும்
காண்பவர்களே.

       வாழ்க்கை என்பது புயலில் இருந்து தப்பிப்பது மட்டும் அல்ல.
மழையில் நடனமாடவும் தெரிய வேண்டும்.

      நாம் எல்லோரும் முதுமை அடைகிறோம்.
      நாளை நீங்களும் அடையலாம். 

( நான் முன்பொரு பதிவு :" நினைவுகள் தவறி விட்டால் "
  என்று எழுதி இருந்தேன்..விழிப்புணர்ச்சி வேண்டும்
 என்று. .அதைத் தொடர்ந்து இதை வாழ்வியல் கதையாகக்
 கருதலாம் ) .




 
                                                                                                             







Monday, February 27, 2012

காதலுக்கு வயதில்லை


                   காதலுக்கு வயதில்லை
                   ---------------------------------

    காதல் கவிதை ஒன்று எழுத எண்ண மனதில்

  வந்துதித்த கற்பனைக் கண் கண்ட கன்னி

  என்றோ நான் கண்டெடுத்துக் கைத்தலம்

  பற்றிய சுந்தரி, என் துணைவி யன்றோ.

  இவளா என் பாட்டில் அடங்குவாள்.?


         
     என் துயர் துடைக்க வந்த

  என் நலம் காணும் நாயகி

  நான் நாளும் மதிக்கும் நல்லாள்,

  என் இமையுள் உறைகின்ற மங்கை

  ஒளிர்கின்ற கோணங்களில் எல்லாம்

  மிளிர்கின்ற மாணிக்கம் நான்

  வாழப் பிடியாய் இருப்பவள்

  தஞ்சம் பிறிதில்லை, நெஞ்சம் நினைக்கவே

  அஞ்சும் இவளின்றி நானில்லை.

  மொழிக்குள் அடங்காது என் விழிக்குள்

  அடங்கும் இச்செங்கமலத் திரு உரு பற்றி

  அன்றிசைத்த பாடலில் உடலழகு முன் நிற்கும்.

  நிலவைப் பழிக்கும் முகம்

  அதில் நினைவைப் பதிக்கும் கண்கள்

  படர்கொடி வெல்லும் துடியிடை

  இடர் சேர்க்க இடையிடையாட

  என்றெல்லாம் எழுதிக் குவித்தேன்.

  இன்றும் அவளெழில் குறைந்தாளில்லை

  கூறப் போனால் அக அழகு

  மாற்றேற்ற மெருகு கூடியே உள்ளது.

  காதலுக்குக் கண் இல்லை என்பர். நான்

  ஓங்கி உரைப்பேன், காதலுக்கு வயதுமில்லை.
--------------------------------------------             .                                  .                                    
  

Saturday, February 25, 2012

நினைவில் நீ ( அத்தியாயம்-பத்து )


                            நினைவில் நீ ( நாவல் தொடராக)
                             -------------------------------------------

                                           ------- 10  -------

           கல்யாணி அம்மாவுக்குக் கண்ணனின் கல்யாணத்துக்கு அழைப்பிருக்கவில்லை .பாபுவும் வற்புறுத்திக் கூப்பிடவில்லை. வரவேற்பில்லாத இடத்துக்கு வலுவில் சென்று ஒதுக்கப் படுவதை விட போகாமலிருப்பதே மேல் என்று பாபு எண்ணினான். தம்பிகளை அழைத்துப் போக விரும்பினான். மூத்தவர்கள் ராஜு, விசு இவர்களுக்குப் போக விருப்பம் இருக்கவில்லை. தன் தாய்க்கு எதிரிகள் தங்களுக்கும் எதிரிகள் என்றே எண்ணினார்கள். ஆனால் பாபுவிடம் அப்படிச் சொல்ல முடியாது.. ஆகவே ஏதோ சாக்குப்போக்குச் சொல்லி தப்பித்துக் கொண்டார்கள்..இளையவர்கள் போக விரும்பினாலும் கல்யாணி அம்மா தடுத்துவிட்டார். இதில் பாபுவுக்குக் கொஞ்சம் வருத்தம்தான். மனிதர்களுடைய குரோத, விரோத மனப் பான்மைகளுக்கு ஒனறுமே தெரியாத அந்தக் குழந்தைகளும் இலக்காவதை எண்ணி வருந்தினான். பிரிந்த குடும்பம் ஒன்றாக சேர்ந்து வாழாவிட்டாலும் ஒரே குடும்பம் என்ற அன்பாவது விளையுமேயானால் அதுவே போதும் என்று எண்ண ஆரம்பித்தவன், நடந்த நிகழ்ச்சிகளைத் தன்னாலும் தவிர்த்து நல்லுறவு ஏற்படச் செய்ய முடிய வில்லையே என்று ஏங்கினான்.

     இதனால் கண்ணனுக்கும் அவன் செய்கைதான் சரியென்று எண்ண ஏதுவாகும் என்று நினைத்தவன், கண்ணனும் மாலதியும் வந்ததைக் கண்டபோது தன் கண்களையே நம்ப முடியாமல் திகைத்தான். யாருமே எதிர்பார்க்காத வரவு. பாபுவுக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. “ வா அண்ணா, வாங்க அண்ணி; அம்மா, யார் வந்திருக்கான்னு பாரேன்..ஆச்சரியப்பட்டுப் போவாய். ராஜு,விசு, சந்துரு, ரவி  இது யார் தெரியுமாடா. நம்ம அண்ணா கண்ணன்;ஞாபகமிருக்கா.?இது அண்ணி. “

     சொந்த அண்ணனையே சொந்தத் தம்பிகளுக்கு, அறிமுகப் படுத்தவும் ஞாபகப் படுத்தவும்வேண்டிய நிலையை எண்ணி பாபுவின் கண்கள் குளமாயின. சமாளித்துக் கொண்டே,அண்ணா ! எனக்கு எவ்வளவு சந்தோஷ்மா இருக்குத் தெரியுமா? தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் அல்லவா... அண்ணாவைக் கூட்டி வந்ததுக்கு அண்ணியையா, இல்லை அண்ணியைக் கூட்டி வந்ததுக்கு அண்ணாவையா ..யாரைப் புகழறதுன்னு தெரியலை. அம்மா ! கண்ணன் கிட்ட க்ஷேமலாபங்களை கேளம்மா.?

      கண்ணனை எதிர்பார்க்காத கல்யாணி அம்மாவுக்கு இவ்வளவு நாட்கள் கழித்து அவனைக் கண்டதும் ,இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் இன்னதுதான் பேச வேண்டும் என்று ஒன்றுமே தெரியவில்லை. அவளுக்கு அடக்க முடியாத அழுகைதான் வந்தது. கணவனின் நினைவும் இந்த பிள்ளைகளால் அவர் பட்ட மனக் கஷ்டங்களும் நினைவுக்கு வந்தது. இவனிடம் அன்பாக என்ன பேச முடியும். என் கையால் சோறு தின்று வளர்ந்த இவன் என்னைப் பார்த்து அம்மா என்று கூப்பிடக் கூடத் தயங்குகிறானே. நான் ஏதாவது கேட்கப் போய், அவன் அசம்பாவிதமாகப் பேசிவிட்டால்.... என்றெல்லாம் எண்ணிக் குழம்பிக் கொண்டிருந்தவளுக்கு பாபுவின் கெஞ்சாத குறையாகக் கேட்கப் பட்ட வேண்டுகோள் தடு மாற்றத்தை அளித்தது.

      “ நான் விசாரித்துத்தான் தெரிந்து கொள்ளணுமா...கண்ணா எங்களை எல்லாம் நீ மறக்கலியே அதுவே எனக்குத் திருப்தி.வாம்மா, மாலதி ,உள்ளே வா. “

     வந்தவர்களை முதலில் வாவென்று கூட வரவேற்க வில்லையே என்று தடுமாறிக் கொண்டிருந்த மாலதிக்கு கல்யாணி அம்மாவின் அன்பான வாஞ்சையான வரவேற்பு  மிகவும் இதமாக இருந்தது. உள்ளே போகலாமா என்று உத்தரவு கேட்பது போல் கண்ணனை நோக்கினாள். கண்ணனின் சரியென்ற தலை அசைவு கிடைக்கப் பெற்ற பின் உள்ளே சென்றாள்.

     ராஜுவுக்கும் விசுவுக்கும் கண்ணனை நன்றாக ஞாபகம் இருந்தது. சந்துருவுக்கும் ரவிக்கும்தான் தெரிய வில்லை. தெரியப் படுத்தப் பட்டவுடன் இருவரும் கொஞ்சம் சங்கோசத்துடன் கண்ணன் அருகில் சென்றனர். அவர்கள் இருவரையும் ஒரு முறை நோக்கிய கண்ணனுக்கு ஒரு கணம் ஒன்றுமே தோன்ற வில்லை. ஆனால் மறுகணமே  இருவரையும் வாரி அணைத்து முத்தமாரி பொழிந்தான். கண்ணன் அண்ணா ரொம்பக் கெட்டவன் என்று எண்ணிக் கொண்டிருந்த ராஜுவும் விசுவும் இதைப் பார்த்ததும் அவன் மீது ஒரு தனி அன்பு வளருவதை உணர்ந்தனர். தாங்கள் இதுவரை எண்ணி வந்தது தவறு என்று தெரிந்து வெட்கப் பட்டனர்.

     நீ எத்தனையாவது படிக்கிறாய் ராஜா என்று கண்ணன் கேட்டதும் டெந்த், என்று ராஜு பதில் சொன்னான்..விசு நீ?’     “நானும் டெந்த்” என்றான்.

    “ ஏண்டாபாபு இரண்டு பேரும் ஒரே க்ளாஸ் படிக்கிறார்கள்.?

    ஆமாண்ணா.. ராஜுவுக்கு உடல் நலம் சரியில்லாமல் ஒரு வருடம் போயிடுத்து. அதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான். ரெண்டு பேரும் ஒரே சமயத்தில் வேலைக்குப் போகத் தயாராயிருப்பார்கள். அதே சமயத்தில் நம்ம கஷ்டமும் ஒரேயடியாக் கொறஞ்சிடும்”.

   “ அது சரியில்லை பாபு. நாமதான் மேல் படிப்பு படிக்க முடியாம திண்டாடினோம்னா, இவர்களும் அப்படியே இருக்கணுமா. இவர்களையாவது நன்றாகப் படிக்க வைக்க வேண்டும்.

     கண்ணன் கூறிவந்ததைக் கேட்டவுடன் விசுவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அவன் வகுப்பில் முதலாவதாக வருபவன். எப்படியும் மேல் படிப்பு படிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தான்.ஆனால் பாபு அண்ணாவால் முடியாதே என்ற கவலை இருந்தது. அது இப்போது கண்ணன் பேச்சைக் கேட்டதும் ஓடி மறைந்து
விட்டது. பாபுவுக்கு ஒன்றுமே புரியவில்லை. .

   என்ன அண்ணா, சொல்கிறீர்கள்.... எனக்கு மட்டும் இவர்களை படிக்க வைக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில்லையா.? நம் நிலைமை இருப்பதைப் பார்த்துதான், வீணாக இவர்களுக்கு ஆசையூட்ட விரும்பவில்லை.

   ” போடா... ரொம்பத் தெரிந்தவன் மாதிரி பேசாதே. நம்ம நிலைக்கு என்ன குறைச்சல்.? நீ சம்பாதிக்கிறாய். நானும் சம்பாதிக்கிறேன். எல்லோரும் ஒன்றாக இருந்தால் கஷ்டமே இருக்காது. அதைச் சொல்லத்தான் நானும் மாலதியும் வந்தோம் இல்லையா மாலதி.?உட்புறம் மாலதி இருந்த திக்கை நோக்கிக் கேட்டான். கல்யாணி அம்மாவும் எல்லாப் பேச்சுவார்த்தைகளையும் கேட்டுக் கொண்டு தானிருந்தாள். அவளுக்கு இந்த திடீர் வரவும் கொண்டு வரப்பட்ட செய்தியும் ஏதோ ஒரு சந்தேகத்தை எழச் செய்தது. பாபுவுக்கும் இந்தச் செய்தி கண்ணன் எதிர்பார்த்த அளவுக்கு மகிழ்ச்சி தரவில்லை.

  “ அண்ணா நீங்க தனியா இருந்தவரை நம்ம குடும்பத்தோட சேர்ந்திருந்து ,பிறகு கல்யாணம் பண்ணியும் கூட அப்படித் தொடர்ந்திருந்தா, எல்லாம் சரியாயிருந்திருக்கும். ஆனால் இப்போ நிலைமை வேற. எதையும் ஆலோசித்துத்தான் செய்ய வேண்டும். “பட்டும் படாமலும் பாபு கூறியதைக் கேட்கவும் கண்ணனுக்குக் கோபம் வந்தது. இருந்தாலும் இப்போது கோபப்பட்டுப் பிரயோசனம் இல்லை. வந்த காரியம் சரியாக முடியாவிட்டால், அதனால் பாதிக்கப் படப் போவது தான் தான் என்று உணர்ந்து, மிகவும் சாதுரியமாகப் பேச்சை மாற்ற் முயன்றான்.

  ” பாபு நீ அன்னிக்கி கூப்பிட்டபோதே நான் வரலைன்னு தானே உனக்குக் கோபம்..இதப் பாரு. அப்போ எனக்கு பாட்டியாலே எவ்வளவோ காரியங்கள் ஆக வேண்டி இருந்தது. அந்த நேரத்தில் நான் அவர்களைப் பழித்துக்கொள்ள விரும்ப வில்லை. இப்போ நான் ஒரு தனிக் காட்டு ராஜா. யாரையும் லட்சியம் செய்ய வேண்டியதில்லை. நானும் மாலதியும் நன்றாக யோசித்துத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம். .உனக்கும் இப்போது உதவி தேவைப் படாதா என்ன..அதுக்கு மேலெ எனக்குன்னு சில கடமைகள் வேறே இருக்கு. பிராம்மண குலத்தில பிறந்து இன்னும் பூணூல் போடாத சூத்திரன் போல இருக்கிறது பார்க்க நல்லாவா இருக்கு.?அப்பாவுக்கும் அம்மாவுக்கும் செய்ய வேண்டிய பித்ரு கடன்களை செய்யவும் முடியாது.அதெல்லாம் ரொம்ப அவசியம் பாபு.நீண்ட பிரசங்கம் செய்வது போல் கண்ணன் பேசினான் .உள்ளிருந்து வந்த மாலதி ,பாபுவுக்கு மட்டும் இதெல்லாம் செய்யணும்னு ஆசையில்லையா என்ன.இருந்தாலும் இருக்கிற இடத்துலே அதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னுதான் இப்படியே....

          ”  நிறுத்துங்க அண்ணி. இது எங்கள் குடும்ப விவகாரம். இதுலே உங்க ஆராய்ச்சிக்கெல்லாம் இடமில்லை. “ என்று யாரும் சற்றும் எதிர்பாராத வகையில் மாலதியை அடக்கினான் பாபு. “ அண்ணா நீங்க சொல்ற பாயிண்டுக்கு வரேன். பிராம்மண குலத்திலே பிறந்ததுக்கு வேண்டி ஒரு பூணூல் மாட்டிக்கோடா பாபுன்னுதானே சொல்ல வறீ.ங்க.. நான் பிராம்மண குலத்திலே பிறந்தவன் மற்றவரிடம் இருந்து வேறுபட்டு நிற்பவன் என்பதைக் காட்டிக் கொள்ள விரும்பலை. வர்ண பேதங்கள் எல்லாம் இந்தக் காலத்துக்கு ஒத்து வராது அண்ணா... பிராம்மணனுடைய கடமையே அந்த காலத்து முறைப்படி, பரமனுக்கும் பாமரனுக்கும் பாலமாய் இருக்க வேண்டும் என்பதுதான். அந்தக் காலத்துப் பிராம்மணன் ஈசுவர விசாரத்திலேயே ஈடு பட்டிருப்பான். அவனுக்கென்று பொருள் ஈட்ட மாட்டான். மற்ற வர்ணத்தவர்கள் அவர்களுக்கு என்று  ஏற்படுத்தப் பட்ட தொழில் முறையைக் கடை பிடித்து வந்தார்கள். ஆனால் இந்தக் காலத்தில் குல ஆசாரம் என்ற முறைப்படி பார்க்கப் போனால் எல்லோரும் வைசியர்களும்  சூத்திரர்களும் தான். அதன்படி நீயும் ஒரு சூத்திரன், நானும் ஒரு சூத்திரன்.இப்படி இருக்கும்போது குலம் ஆசாரம் என்ற பேச்சுக்கு அர்த்தமேயில்லை. மேலும் நீங்க சொல்ற பித்ரு கர்மாக்களை, அம்மாவுக்கும் அப்பாவுக்கும் செய்ய வேண்டியதை தாராளமாக நானும் செய்து கொண்டு தானிருக்கேன். ஆனால் நீங்க சொல்லும் முறையில் அல்ல. அப்பா இருந்திருந்தா என்ன செய்ய நினைத்திருப்பாரோ அதைச் செய்வதே அவருக்கு நான் செய்யும் நினைவு வழிபாடு. அம்மாவுக்கு என்னும் பேச்சுக்கே இடமில்லை. உன்னையும் என்னையும் பெற்றெடுத்த புண்ணியவதி,நமக்கு நினைவு தெரியும் முன்பே போய் சேர்ந்துட்டா. ஆனால் நமக்கு நினைவு தெரிந்த பிறகு அம்மா என்று கூப்பிடும் ஸ்தானத்தில் இருக்கும் நம்மை வளர்த்திய இந்த அம்மாவை மனம் வாடாதபடி பார்த்துக் கொள்வதுதான் இறந்து போன அம்மாவுக்கு நாம் செய்யும் நினைவு தின வணக்கங்கள்.

    பாபு இவ்வளவு தூரம் பேசுவான் என்று கண்ணன் எதிர் பார்க்க வில்லை. அவனைப் பொருத்த வரையில் யார் என்ன செய்தாலும் அது அவர்கள் மற்றவரிடம் கொண்டுள்ள அபிப்பிராய பேதத்தை தெரியப் படுத்தவே என்று எண்ணிக் கொண்டிருந்தான். அதற்குப் பின்னால் , ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு எழுந்த ஒரு கொள்கை வெறி இருக்கும் என்று நினைக்க வில்லை. இருந்தாலும் பாபு பிராம்மண குலத்தையே பழிக்கிறான் என்ற தவறான எண்ணம் கண்ணனை ஆத்திரப் படுத்தியது.

  ” பாபு நீ மேடை ஏறி பிரசங்கம் பண்ணுவதில் கை தேர்ந்தவன் என்று எனக்குத் தெரியும். அதை இங்கே ஸ்தாபிக்க வேண்டாம். மேடையிலே பெசினா நாலு பேர் பொழுது போச்சேன்னு கை தட்டுவா. அதுதான் பெருமைன்னு தவறா நெனச்சிட்டு இருக்கே. பேசற பேச்செல்லாம் வாழ்க்கை நடைமுறைக்கு ஒத்து வராதுனு உனக்குப் புரியலை. புரியவும் புரியாது. இந்த பிள்ளைகளுக்குப் பதிலா பெண்களாப் பிறந்திருந்தால் அப்பா செய்த தவறின் தன்மை உனக்குத் தெரிஞ்சிருக்கும்.அந்த விதத்திலே நீ லக்கி. எல்லோரும் பிரிஞ்சிருக்கோமென்னு நீ அவதிப் படறது உண்மை என்று நம்பி, அந்தக் குறையைத் தீர்க்கலாம்னு வந்தேன். நீ என்னடான்னா செயல்ல மட்டுமில்லாம வாக்கிலயும் சூத்திரனா மாறிட்டே. எனக்கு அப்படி வாழ முடியாது. நம்ம முன்னொர்கள் வகுத்த வழிமுறைகளெல்லாம்  சுத்த்ச் ஹம்பக் என்று நீ சொல்ற மாதிரி என்னால் நினக்க முடியாது. அப்படியானா நமக்கு முன்னாலே பிறந்து இந்த நாட்டிலே வளர்ந்த எல்லோரும் ஒண்ணுமே தெரியாத முட்டாள்களா.?நீ ஒருத்தன் மட்டும்தான் எல்லாம் தெரிஞ்ச புத்திசாலியா.? இல்லை எனக்குத் தெரியாமல் தான் கேட்கிறேன். “

   ” அண்ணா நான் சொல்றத நீங்க சரியாப் புரிஞ்சுக்கலை வாழ்க்கையிலே குலம் கோத்திரம் எல்லாம் மனசைப் பொறுத்தவரை சரியா இருந்தா நல்லதண்ணா. ஆனால் அதுவே ஒரு சில வகுப்பாளுங்க தரமில்லாமலேயே உயர்த்தப் படறதும், மத்தவங்க நசுக்கப் படற்துக்கு ஒரு கருவியா, எண்ணமா சமுதாயத்துலே ஒரு நிலை அடைஞ்சிருக்கிறது தப்புன்னுதான் நான் சொல்ல வரேன். நீங்க வணங்கற தெய்வத்தைதான் நானும் வணங்குகிறேன்.மற்ற சாதிக்காரங்களும்--.ஹிந்துக்களைவணங்கறாங்க. இதுலே உயர்வு தாழ்வுக்கு இடம் எங்கேன்னுதான் புரியலை. இதையெல்லாம்தான் விவேகாநந்தர் முதல் பாரதி வரை சொல்லி இருக்காங்க. அவங்க சொன்னதைக் கேட்டு அந்த சமயம் கைதட்டிப் பொழுது போக்கின கூட்டம் இருக்கலாம். ஆனால் எனக்கு அதுதான் சரின்னு ஒரு உறுதி பிறந்திருக்கு. என்னைப் போல எவ்வளவோ பேருக்கும் பிறந்திருக்கலாம். அது நன்மையாய்தான் முடியும். என்னைப் பொறுத்தவரை வாழ்ந்து காட்ட ஒரு சந்தர்ப்பமும் கிடைச்சிருக்கு.இதையெல்லாம்தான் நான் முக்கியமா நினைக்கிறேன். பிரிஞ்ச குடும்பம் ஒன்றாயிருக்கணும்னு நான் விரும்பறத செயல் படுத்த வந்ததாகச் சொன்னீர்கள். அதைக் கேட்டதும் உண்மையிலேயே சந்தோஷப் பட்டேன். ஆனால் நீங்க கொண்டிருக்கிற எண்ணங்களை இந்த இடத்தில் நிறை வேற்ற முயன்றால் வீணா மனஸ்தாபமும் வேற்றுமையும்தான் வளரும். அதுதான் வேண்டாம் என்கிறேன்.

        ”  பாபு நீ ரொம்ப சாமர்த்திய சாலின்னு உனக்கு நினைப்பு. உன்னைப் போல் மற்றவர்களும் சாமர்த்தியசாலிகளாய் இருக்கலாம் என்ற சந்தேகமே உனக்கு இல்லை. என்னுடைய உதவி தேவை ஆனால் என் எண்ணப்படி செயலாற்ற எனக்குத் தடை. நீ சம்பாதிக்கறத எங்கிட்டக் கொடுத்துட்டு நான் சொல்றபடி நடடான்னு எங்கிட்ட மறைமுகமாக் கேட்கறே. இதுக்கு காதுலே பூ வெச்சவன் யாராவது இருப்பான். போய்ப்பாரு. உன் குணம் எனக்கு நல்லாத் தெரிஞ்சு போச்சு. நீ ஒரு சுய நலப் புல்லுருவி. உன் கூடவும் இவர்கள் கூடவும் வாழ எனக்கென்ன பைத்தியமா.! மாலதி வாடீ.. இங்கே ஒரு நிமிஷங்கூட இருக்கக் கூடாது. வீட்டுக்குப் போனதும் குளிச்சு  இந்த உறவுக்கே முழுக்குப் போட்டுடணும்.

    வந்த காரியம் கை கூடவில்லை என்ற ஆத்திரத்தில் இன்னதுதான் பேசுகிறோம் என்று கூட உணராமல் கண்ணன் மாலதியைக் கூட்டிக் கொண்டு வெளியேறி விட்டான்.

   கொஞ்ச நேரம் தலை சுற்றுவதுபோல் இருந்தது பாபுவுக்கு. அவனுக்கு சற்று முன் நடந்த நிகழ்ச்சிகள் கனவோ என்று கூட சந்தேகம் ஏற்பட்டது. அவன் உள்ளம் புழுவாய்த் துடித்துக் கொண்டிருந்தது.கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டோமோ என்று அடிக்கடி தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். இருந்தாலும் கண்ணன் அந்த அளவுக்குப் பேசிப் போகும் படி தான் எதுவும் சொல்லவில்லை என்று நம்பினான்.

   அமைதியைக் கலைத்தவன் ராஜுதான்.இங்கே வரும்பொது இவர்களுக்கு எண்ணம் வேறெதோவாக இருந்திருக்கும். ஆனால் பேச்சு போன விதத்திலே வந்த எண்ணத்தை சரியா வெளிப்படுத்த முடியலை.ன்னு எனக்குத் தோணுது .டேய் விசு, பெரிசாப் படிக்கலாம்னு கொஞ்ச நேரத்திலெ நெனச்சியே. .பாபு அண்ணா மனசு வெச்சாத்தான் உனக்கு மேல் படிப்பு. “ என்றான்.

        ” எனக்கு இந்த திடீர் வரவும் அக்கறையும் சந்தேக மாக இருந்தது. நாளைக்கே எங்களை இந்த சித்தி வீட்டை விட்டுப் போகச் சொன்னா என்று கதை மாறினாலும் மாறலாம். ஹூம்.! ராஜு சொல்றாப்போல வந்த நோக்கமே இதாயிருந்திருக்காது. சண்டை போடறதுக்குன்னு வந்த மாதிரி அல்லவா இருந்தது. அந்தப் பெண் நல்ல பெண்ணாத் தெரியறா. இப்போ அவளும் மாற்யிருப்பா. இதையெல்லாம் பெரிசா நெனச்சா முடிவே கிடையாது. இதைவிட பெரிய மனஸ்தாபங்களையும் சண்டைகளையும் உங்க அப்பா காலத்திலேயே பார்த்தாச்சு.  நீ எதுக்கடா பாபு எண்ணி எண்ணி மாயறே. சாப்பிட வா நேரமாச்சு. நல்ல வேளை உங்க போர் ஆரம்பிக்கறதுக்கு  முன்னாடியே வந்தவர்களுக்கு காப்பியெல்லாம் கொடுத்தேன். இல்லைன்னா அந்தப் பழி வேற எனக் கிருந்திருக்கும். “ என்று சொல்லிக் கொண்டு போன கல்யாணி அ,ம்மாவை பாபுவின் கூச்சல் அடக்கிற்று.

  “உனக்குப் பழி வரக் கூடாதுன்னு நீ ரொம்பத்தான் அலட்டிக்கிறே. வரதென்னவோ வரத்தான் செய்யுது. கொஞ்ச நேரம் பேசாமத்தான் இருங்களேன். “

   பாபுவுக்கு சாப்பாடு செல்லவில்லை.உறக்கம் கொள்ள வில்லை. நடு ராத்திரியில் திடீரென்று விளக்கை பொருத்தி  ஒரு தாளையெடுத்துப் பட பட வென எழுதினான்.


   ”அண்ணா,இன்று நடந்த சம்பவங்கள் நமக்குள்ள அபிப்பிராய பேதத்தைத் தெரியப் படுத்துவதாக மட்டும் இருக்கட்டும். உறவுக்கும் அன்புக்கும் முழுக்குப் போட்டதாக நீங்கள் சொல்லிச் சென்றது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. வருகிற ஞாயிறு மாலை நான் உங்களை வந்து பார்க்கிறேன்.”----ஏதோ மனப் பளு கொஞ்சம் குறைந்த மாதிரி இருந்தது.. விடிந்ததும் எழுதிய கடிதத்தைத் தபாலில் சேர்த்தான். நேரிலேயே சென்று விளக்கி இருக்கலாம். ஆனால் புகைச்சல் ஏற்பட்ட மனம் நிதானத்துக்கு வருவது நல்லது. அதுவரை சும்மா இருக்கலாம் என்று எண்ணியவன் தான் செல்லும் நேரத்தில் கண்ணன் அங்கிருக்க வேண்டுமே என்பதற்காக அந்தக் கடிதத்தை அனுப்பினான். மறு தபாலில் வந்த பதில் பாபுவின் உள்ளத்தை இன்னும் வருந்தச் செய்வதாக இருந்தது.
“வருவதாயிருந்தால் தனியாக வா. நீ என் உடன் பிறந்த பிராமணன் என்பதற்காக இந்தத் தனிச் சலுகை..-----கண்ணன்.
-------------------------------------------------------------------

                                                   ( தொடரும்.) 

                 
         
              
         


   
   





     

    

Thursday, February 23, 2012

பேரனின் தங்கிலீஷ் கவிதை.?


                                     தங்கிலீஷில் பேரன் எழுதியது 
                                     ------------------------------------------
Iruvaraiyum  paarththaal kamal sridevi poola irukku.natippil alla.
Aaanaal avvalavu kaathal poruththam theriyuthu;
Avvalavu praem,ishtam,kaathal,love, pyaar
Ellaamae orae arththamthaanae. !
Ivarkal kaathal patri solla naan patikkanum Phd;
Iruvar kaathalilum unmai irukkirathu. 
Aqua guard thanni poola pyuraa irukkum.
Ivarkalaip paarththaal enakku poraamai. 
Aen enraal ennaip paarththu en paeran ippati ellaam solvaanaa. ?
Chansae illai.aen enraal naan innum kaathalikkavae illaiyae.!
Ivarkal santaiyaip paarththaal orae borethaan.no entertainment.
Angkaeyum love thaan therikirathu.
singkham poonaiyaaka mutiyumaa. ?oru unmai theriyumaa.?
Engka veettu singkaththai kutti paappaa 
Maathiriyaakkiya  perumai engka paattikkuththaan saerum.
Ivarkal chemistry paarththaal world physics aachchariyam illai.

Ippo naan T.R u 
ivangka rendu paerum sema pair -u
Enakkuth tharaangka  too much care u
Athaip petraal kitaikkum kick u
appuram ethukkadaa bar u
Hai tantanakkaa  tanakkunakka...!  

தங்கிலீஷ் படிக்கக் கஷ்டமாக இருந்தால் அதுவே தமிழில்
--------------------------------------------------------------------------------
இருவரையும் பார்த்தால் கமல் ஸ்ரீதேவி போல இருக்கு
நடிப்பில் அல்ல. .
ஆனால் அவ்வளவு காதல் பொருத்தம் தெரியுது.
அவ்வளவு ப்ரேம், இஷ்டம், காதல், லவ், ப்யார்
எல்லாமே ஒரே அர்த்தம்தானே. 
இவர்கள் காதல் பற்றிச் சொல்ல நான் படிக்கணும் Phd; 
இருவர் காதலிலும் உண்மை இருக்கிறது
அக்குவா கார்ட் தண்ணி போல ப்யூரா இருக்கும்.
இவர்களைப் பார்த்தால் எனக்குப் பொறாமை
ஏன் என்றால் என்னைப் பார்த்து என் பேரன் இப்படிச் சொல்வானா?
சான்ஸே இல்லை, ஏன் என்றால் நான் இன்னும் காதலிக்வே
இல்லையே.!
இவர்கள் சண்டையைப் பார்த்தால் ஒரே போர்தான்.
நோ எண்டர்டைன்மெண்ட். அங்கேயும் லவ் தான் தெரிகிறது. 
சிங்கம் பூனையாக முடியுமா?ஒரு உண்மை தெரியுமா.?
எங்க வீட்டு சிங்கத்தை குட்டிப் பாப்பா 
மாதிரியாக்கிய பெருமை எங்க பாட்டிக்குத்தான் சேரும்.
இவர்கள் கெமிஸ்ட்ரி பார்த்தால் வேர்ல்ட் ஃபிஸிக்ஸ்
ஆச்சரியம் இல்லை.
                       இப்போ நான் டீயாரு

இவங்க ரெண்டு பேரும் செம பெயரு
எனக்குத் தராங்க டூ மச் கேரு
அதைப் பெற்றால் கிடைக்கும் கிக்கு 
அப்புறம் எதுக்கடா பாரு?
ஹாய் ட ண்டணக்கா டணக்குணக்கா.
டண்டணக்கா, டணக்குணக்கா. !
---------------------------------------------
 . 

Tuesday, February 21, 2012

நினைவில் நீ...(அத்தியாயம் ஒன்பது )

   
                       நினைவில் நீ....( நாவல் தொடராக )
                      ------------------------------------------------

                                -              --  9----

     கண்ணனுக்குக் கல்யாணம்..! உறவில் பிணக்கோலம் கண்டவன் மணக்கோலம் பூண விரும்பினான். ஒட்டு பற்றற்ற  தன் வாழ்வின் விளை நிலத்தில் மனசின் அடிதளத்தில் சுரந்த அன்பின் ஊற்று நீரால் மணங்கமழும் மலர்வனத்தைத் தோற்றுவிக்க மணக்கோலமே சிறந்த வித்து என்று கண்ணன் எண்ணினான் .எண்ணியவனின் எண்ணத்துக்குச் சிறந்த உரமாக நின்றான் அருள். அந்த வரைக்கும் அருளுக்கு அவன் என்றென்றைக்கும் கடமைப் பட்டுள்ளதாக அடிக்கடி அவனிடம் தெரிவித்து தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டான் கண்ணன்.

     கல்யாணம் எளிய முறையில் சிறப்பாக நடந்தது. சிறப்பாக எனும்போது, மனத்தாங்கல்கள் தவிர்க்கப் பட்ட ஒரு சுப காரியமாக நடந்தது என்று பாபு நினைத்தான். அன்பு நண்பன் இன்ப இல்லற வாழ்வு தொடங்கும் சடங்கு என்பதால் சிறப்பானது என்று அருள் எண்ணினான். உடன் பிறந்தவனின் ஒரே சகோதரி, தன் ஒருத்தியால் சோபித்த சுபகாரியம் என்பதனால் சிறந்தது என்று கமலம் கருதினாள்.இழவுக்குப் பின் நடக்கும் இனிய வினை என்று எண்ணித் தன்னையே தேற்றி கொண்டாள் பாட்டி. ஒளிமயமான வாழ்வின் விடிவெள்ளி என்று மகிழ்ந்தாள் மணப் பெண் மாலதி.

     யார் யார் எப்படி எப்படி எண்ணினாலும் நடந்த்ததென்னவோ ஆயிரக் கணக்கில் நிகழும் திருமணங்களில் ஒன்று என்றாலும் , இந்த மணம் கண்ணனை ஒரு புதிய பிறவி எடுக்கச் செய்தது. கண்ணனுக்கு இறைவனிடம் அதிக பற்றுதல் ஏற்படச் செய்தது. ஏற்பட்ட பற்றுதலை உணர்த்த உள்ளம் தன் மதத்திலும் குலத்திலும் தோய்ந்து நின்றது.

     திருமண நாளின் முதலிரவு. எண்ணற்ற கற்பனைகளில் மனம் லயித்து, இன்ப நினைவுகளில் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த மாலதிக்கு இன்பம் இதுதான், இது இப்படித்தான் இருக்கும் என்று உணர்ந்து மகிழும் நேரத்தையும் சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றமே மேலிட்டது,.பூமணங்கமழும் புது மண மக்களுக்கே உரித்தான முதலிரவு. என்று இருந்தும் அந்த இரவில் அந்த இன்பம் மாலதிக்கு இல்லாமலேயே போய்விட்டது. ஒரு சமயம் இல்லாத ஒன்றை இருப்பதாக எல்லோரும் ஸ்தாபிக்கிறார்களோ என்ற சந்தேகமும் ஏற்பட்டது. உள்ளத்து ஆதங்கத்தை உணர்த்தித் தெரியப் படுத்த முடியாதபடி, ஒருவரை ஒருவர் உணர்ந்திருந்த குறுகிய காலம் தடையாக இருந்தது.

      மாலதியின் எண்ணங்களைப் பற்றி கண்ணன் ஒரு கணமேனும் சிந்தித்துக் கூடப் பார்க்கவில்லை. சற்றே அவளை உற்று நோக்கியவன் முகம் சற்றே கடுத்து மறைந்தது.
“ மாலதி, இன்று முதல் என் வாழ்க்கையில் ஒரு திருப்பம் செய்து கொள்ள விரும்புகிறேன். இதுவரைக்கும் எனக்கு எதிலும், யார் மீதும் அக்கறை இருக்கவில்லை. எல்லோரும் என்னை ஒதுக்கித் தள்ளினார்கள். தட்டிக் கேட்க ஆளில்லாத நான் தட்டுத் தடுமாறி நிலை கெட்டுப் போயிருந்தேன்.இதுவரையில். உனக்கு இது முதலிரவு .ஆனால் எனக்கோ......சொல்லிக் கொண்டே வந்தவன் மாலதியின் உதடுகள் துடித்து அழுகை வெடித்து விடும் என்று உணர்ந்ததும் நிறுத்தினான்

    ” உன்னைப் புண் படுத்த எதுவும் சொல்லவில்லை, மாலதி.என்னை நீ நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன் இந்த நேரத்தில் ,இன்றைக்கு என்னை நானே அடக்கிக் கொள்வதாகத் தீர்மானித்திருக்கிறேன்..அது உன்னை ஏமாற்றத்துக்கு ஆளாக்கக் கூடாதே என்று சொல்ல வந்தால், ......சரி, சரி. எனக்கு இதெல்லாம் பிடிக்காது. விளக்கை அணைத்துப்படுத்துத் தூங்கு. “

       ஆதரவாகப் பேசிகொண்டே போனவனின் உள்ளத்தில் , திடீரென ஆதரவை முதலிலேயேக் காட்டினால், நாளைக்கே தன் மனைவி தன் ஆதிக்கத்துக்கும் அதிகாரத்துக்கும் ஒரு சமயம் கட்டுப் படாமல் போகலாம் என்ற சந்தேகம் எழுந்தது.அன்பினால் கட்டுப் படுத்த முடியும் என்பது அறியாததால் கண்ணன் கடுப்பாக முடித்தான்.

       மாலதிக்கு ஒன்றுமே புரியவில்லை. வாழப் போகும் வாழ்க்கை தான் எண்ணாத முறையில் அமைந்து விடுமோ என்ற அச்சம் காரணமாக அவளுக்கு உறக்கமே வரவில்லை. நித்திரை இல்லாமல் காலம் கடந்து செல்லச் செல்ல இமைகள் கனத்து கண்கள் அவளை அறியாமலேயே செருகிக் கொண்டன.

    விடியற்காலையில் விழித்துப் பார்த்த கண்ணனுக்கு மாலதி இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாள் என்னும் நினைவு கோபத்தைக் கிளப்பியது. இருந்தாலும் தன்னை அடக்கிக் கொண்டு, காலைக் கடன்களை முடித்துக் குளித்து, நெற்றியில் பட்டை பட்டையாக விபூதியை தீற்றிக் கொண்டு, அவன் திரும்பவும் , மாலதி எழுப்பப் பட்டு விட்டாள். எழுப்பிய கமலம், “ நன்னாயிருக்குடி, இப்படித் தூங்கினால்;..புருஷன் எழுந்துக்கறதுக்கு முன்னாலே பொம்மனாட்டி எழுந்திருந்து காரியங்களை சட்டுப்புட்டுன்னு கவனிக் கறதைத் தான் நான் பார்த்திருக்கேன். நாங்கள்ளாம் இப்படியா இருந்தோம்.?என்று நீட்டி முழக்கி சுப்பிரபாதம் பாடினாள்.  மாலதிக்கு தன் பேரிலேயே கோபம் வந்தது. “சே.! ராப்பூராவும் வராத உறக்கம் விடியற்காலை வந்து பெயரை கெடுக்கிறதே “ என்று மனதுக்குள் தன்னையே வைது கொண்டாள்.உடம்பு அசதியாலே ... “ என்று மெல்லச் சமாதானம் சொல்லிக் கொண்டே குளியலறைக்குள் புகுந்தாள். அன்றைக்கே மாலதி இப்படி இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கண்ணன் கண்டிப்பாக வரையறுத்துச் சொன்னான்.

   ” கார்த்தாலெ எழுந்ததும் குளித்து , பூஜைக்கு வெண்டியதை எடுத்துவைத்து, சமையலுக்கு வேண்டியதைச் செய். பூஜை முடிந்த பிறகுதான் தண்ணீர் குடிப்பது கூட. ..ஆம்மா. .. இன்னொண்ணு மாலதி. நீ இந்த ஆறு கஜப் புடவை எல்லாம் ஒதுக்கி வைத்து, மடிசார் வைத்துக் கட்டிக் கொள்ள வெண்டும். அப்போதுதான் லட்சுமீகரமாக இருக்கும்.

      மாலதிக்கு இந்த கட்டுப் பாடுகளை எல்லாம் கேட்கவே பயமாக இருந்தது. பழையன கழிந்து புதியன புகுதலென்று உலகமே மாறிக்கொண்டிருக்கும்போது .இவர் என்னடா என்றால்...... இருந்தாலும் அவர் விருப்பப்ப்டி, நடக்க வேண்டியதுதானே முறை. இந்த மாதிரி நடந்தால் அவர் அன்பின் அரவணைப்புக்குப் பாத்திர மாகலாம்
என்றால் அப்படி நடப்பதுதான் நல்லது. உள்ளவரையில் இருப்பதைக் கொண்டு கணவன் விரும்பியபடி வாழ்வது தானே ஒரு இந்தியப் பெண்ணுக்குச் சிறந்தது என்றெல்லாம் எண்ணி ,எடுத்த முடிவை செயலிலும் காட்டத் துவங்கினாள். ஒரு சில நாட்களில் கண்ணன் எதிர்பார்க்காத அளவுக்கு மாலதி தன்னை மாற்றிக் கொண்டாள்.

       கண்ணன் தனியாக இருந்தவரை அவனுக்குக் கிடைத்த சம்பளம் போதுமானதாக இருந்தது. திருமணம் முடிந்து தனிக் குடித்தனம் என்று துவங்கியதும் கொண்டுவந்து போடுவதைக் கொண்டு குடும்பம் நடத்தத் தெரிய வில்லை என்று மாலதியைக் கண்டிக்க ஆரம்பித்தான். இருந்தாலும் மாலதி கூடியவரை பொறுத்துக் கொண்டு இனிய முகத்துடன் வசவுகளையும் வரவு வைத்துக் கொண்டாள். தனக்கு இல்லையென்றாலும் கணவனுக்கு ஒரு குறையும் வைக்க வில்லை. அதனால் கண்ணனுக்கு இருப்பது இல்லாதது தெரியாமல் போயிற்று.

    ஒரு நாளிரவு உணவை முடித்துக் கொண்டு, இளைப்பாறிக் கொண்டிருந்த கண்ணன் திடீரென்று எழுந்த ஏதோ ஒரு சந்தேகத்தை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள சமையல் அறைக்கு மாலதியைத் தேடி நுழைந்தான். அவன் வந்ததை அவள் கவனிக்க வில்லை. சாப்பிட்டுக் கொண்டிருப்பாள் என்று எண்ணி வந்தவன், மாலதி வடித்த கஞ்சியில் உப்பு போட்டுக் கலக்கிக் குடிபபதைக் கண்டான்.

      என்ன மாலதி இது.?ஏன் ..சாப்பாடு இல்லையா.?எதற்கு கஞ்சி குடிக்கிறாய்என்று கேட்டான்.

       வந்தவன் வரவைக் கவனிக்காத மாலதி, ஏதோ குற்றம் செய்து விட்டவள் போல விழித்தாள். அவளையும் துலக்கி வைத்திருந்த பாத்திரங்களையும் கண்ட கண்ணன் , “ எவ்வளவு நாளாக இது மாதிரி நடக்கிறது.?நானும் ,என்னடாப்பா இவள் இப்படி மெலிந்து கொண்டே வருகிறாளே என்று கவலைப் பட்டுக் கொண்டு இருக்கிறேன். இதுதான் கரணமா “ என்று கேட்டவன் தன்னுடைய கடந்த காலத்தை நினைத்துக் கொண்டான்.

               இப்ப்டி வாழ்க்கை நடத்துவதில் எவ்வளவு மனக்கசப்பு இருக்கும் என்று உணர்ந்தவன் கண்களில் அவனறியாமலேயே நீர் பெருகியது.

     ” மாலதி உன்னை இந்த நிலையிலா வைத்துக் கொண்டிருக்கிறேன் என்னிடம் சொல்லாமல் இவ்வளவு நாள் ஏன் மறைத்து வைத்தாய்.என்று ஆதரவுடன் அணைத்துப் பிடித்துக் கேட்டான். உண்மையான உள்ளன்பை முதன் முதலாக உணரப் பெற்ற மாலதி, அடக்க முடியாமல் தேம்பித் தேம்பி அழுதாள். ”அத்தான் உங்களுக்குத் தெரிஞ்சா மனசு கஷ்டப்படுமேன்னுதான்,இவ்வளவு நாள் மறைச்சேன். இதற்கு மேல் சிறப்பாக வாழ இந்த வருமானம் போதாது அத்தான்என்று கஷ்டப் பட்டுக் கூறினாள். எது எதிர்பார்க்கவில்லையோ அது கண்ணனுக்குத் தெரியப்படுத்தப் பட்டதும், அவன் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தான்.அவனுக்கு எந்த வித முடிவும் தோன்றவில்லை.இருக்கும் வேலையை விட்டு வேறு வேலை தேடலாம் என்றால், வேறு வேலை கிடைப்பது எவ்வளவு கஷ்டம் என்று அனுபவத்தால் உணர்ந்தவன். வேறு வேலை கிடைக்கும்வரை இப்படியேதான் இருக்க வேண்டுமா என்று குழம்பினான்.

    ”அத்தான் ஒன்று செய்தால் என்ன.? நாம இப்படி தனியா இருக்கிறதால படர கஷ்டங்களை ஒன்றாய் சேர்ந்து இருந்தால் தவிர்க்கலாமே “என்றாள் மாலதி.

      “ என்ன சொன்னே.?கேட்கும்போதே உஷ்ணம் பொங்கியது கண்ணன் குரலில். .தெளிவாக எதுவுமே தெரிந்து கொண்டிராத மாலதி தெளிவாகவேக் கூற்னாள். “ இப்படித் தனிக்குடித்தனம் வைத்துக் கஷ்டப் படுவதை விட , உங்க தம்பி பாபுவோட , உங்க குடும்பத்தோட சேர்ந்திருந்தால் பார்க்கவும் நன்றாயிருக்கும், கஷ்டத்தையும் தவிர்க்கலாமே என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. “

       ‘ ‘ அந்தக் கோத்திரங் கெட்டவ கூடப் போய் இருக்கலாம்னு சொல்றியா.? பிராம்மண குலத்துக்கே இழுக்கில்லையாடி அது.? “ கேட்டவனின் வார்த்தைகளில் விருப்பம் இருக்காவிட்டாலும் குரலில் சற்றே மாற்றம் தெரிந்தது.

       “ என்ன இருந்தாலும் நீங்க சின்ன வயசில வளர்ந்த இடம்தானே. குலம் கோத்திரம் என்றெல்லாம் எண்ணி நம்மை நாமே கஷ்டப் படுத்திக் கொள்வதைவிட, சேர்ந்திருந்தா அதைத் தவிர்க்கலாம். அப்படி சேர்ந்திருக்கறதுனால நீங்க ஒண்ணும் நம்ம ஆசார முறையை விட்டுக் கொடுக்கணும்னு நான் சொல்லலியே. உங்களுக்கும் ஒரு மதிப்பு கிடைக்கும் . நமக்கும் இதுல லாபம் தான் இருக்கும். “ இடம் கிடைத்தவுடன் சொல்ல வேண்டியதை முறைப்படி கண்ணனுக்கு  உறைக்கும்படி கூறினாள். கண்ணனின் அடிப்படைக் குணம்தான் தெரிந்ததாயிற்றே. வளைக்கும் விதத்தில் வளைக்கப் பட்டதால் விட்டுக் கொடுத்தான்.

    அதுவும் சரிதான். பாபுவும் அன்னைக்கே சொன்னான். பாட்டி வேண்டாம்னு சொன்னதால நானும் கேட்கலை. இப்ப போறதுலயும் பாபு சந்தோஷ்மடைவான். போனதும் அவனைப் பூணூல் போட்டுக்கச் சொல்லணும். அம்மாவும்அதான் எங்க சித்தியும் கூட சந்தோஷப் படுவாள். மாலதிக் கண்ணு, உன்னைப் பத்தி என்னவோ நினைத்திருந்தேன். இப்போதான் தெரியுது. அடேயப்பா.! உங்கிட்ட எவ்வளவு சரக்கு இருக்கு. “ என்று அவளை இறுக்கிப் பிடித்து அணைத்து  அன்புடன் கூறி மகிழ்ந்தான். கல்யாணி அம்மாவை நினைக்கும்போது அம்மா என்றுதான் கூற வருகிறதே அல்லாமல் சித்தி என்று கூறப் பழக்கிக் கொள்ள வேண்டி இருப்பதைக் கண்ணன் உணர்ந்தான். இதை மாலதியும் கவனிக்காமல் இல்லை. இருந்தாலும் தன் கணவன் வேண்டுமென்றேதான் வஞ்சம் பாராட்டுகிறான் என்று நினைக்கத் தோன்றினாலும் , அப்படி தான் நினைப்பது தவறு என்ற எண்ணத்தால் அதை அடக்கிக் கொண்டாள். 
-------------------------------------------------------------------------

                                                       ( தொடரும் ) 
    


        







Friday, February 17, 2012

இலக்கிய இன்பம்.


                                    கம்பனின் சில காட்சிகள்
                                   -----------------------------------

         நான் எழுதிய சாதாரணன் ராமாயணத்தில் அங்கதன் பற்றிய குறிப்பு ஏதும் இருக்கவில்லை..இதனை திரு. அப்பாதுரை குறிப்பிட்டிருந்தார். அங்கதனைப் பற்றிய கம்ப ராமாயணப் பாடல்களைத் தேடிப் படித்தபோது, வாலி பற்றிய சில பாடல்களும் என்னை ஈர்த்தது. அங்கதன் பற்றியும் குறிப்பாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. இதல்லாமல் சில குறிப்பிட்ட பாடல்கள் கம்பனைப் பற்றிய ஒரு எண்ணம் எழக் காரணமாக இருந்தது..


                முதலில் வாலியின் பெருமைகள்..
                   --------------------------

இராமனுக்கு வாலியைப் பற்றி அனுமன் கூறுவதாக வரும் பாடல்களில் வாலியின்
பெருமைகள் புலனாகின்றன.

நாலு வேதம் ஆம் நவை இல் ஆர்கலி
வேலி அன்னவன் மலையின் மேலுளான்
சூலிதன் அருள் துறையின் முற்றினான்
வாலி என்று உளான்வரம்பு இல் ஆற்றலான்.

( நான்கு வேதமாகிய பயிர்கள் வளர்வதற்கு வேலி போன்றவன். சூலப்படையுடைய சிவபெருமான் மீது.அளவற்ற பக்தி உடையவன்.அப்பெருமானின் இன்னருள் பெற்றவன்.எல்லை இல்லா ஆற்றல் பெற்றவன்.)


கழறு தேவரோடுஅவுணர் கண்ணின் நின்று
உழலும் மந்தரத்து உருவு தேய முன்
அழலும் கோள் அரா அகடு தீ விட
சுழலும் வேலையைக் கடையும் தோளினான்.

( வாலியின் ஆற்றலுக்கு எல்லை எது என்றால், அது அவன் கடலைக் கடைந்ததே ஆகும். தேவரும் அவுணரும் பாற்கடலைக் கடைந்து களைத்த போது, இவன் ஒருவனே மந்தார மலை என்னும் மத்தின் அகடு தேயக் கடைந்து காட்டினான் )
இந்தக் குறிப்பு அதிகம் அறியப் படாததோ, இல்லை கூறப் படாததோ ஆகும்.


கிட்டுவார் பொரக் கிடைக்கின் அன்னவர்
பட்ட நல் வலம் பாகம் எய்துவான்
எட்டு மாதிரத்து இறுதி நாளும் உற்று
அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான்
.
( அவன் போரில் தன்னை எதிர்ப்பவர் வந்தால் அவர்களின் வலிமையில் பாதி அடையும் வரம் பெற்றவன்.எட்டு திக்குகளின் எல்லை வரை சென்று அட்டமூர்த்தி எனப்படும் சிவனின் திருவடிகளை வணங்கும் அன்பை உடையவன். )


கால் செலாது அவன் முன்னர் கந்த வேள்
வேல் செலாது அவன் மார்பில் வென்றியான்
வால் செலாத வாய் அலது இராவணன்
கோல் செலாது அவன் குடை செலாதுஅரொ.

(வாலியின் வேகத்துக்கு முன் காற்றும் செல்லாது.அவன் மார்பில் முருகனின் வேலும் நுழையாது,வெற்றியுடைய வாலியின் வால் செல்லாத இடத்தில் அன்றி, வால் சென்ற இடத்தில் , இராவணனின் ஆட்சியும் வெற்றியும் செல்லாது.)
என் மனதை கவர்ந்த பாடல் இது.
-------------------------------

தன் உயிர் போகும் தருவாயில் வாலி இராமனிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டது.
“ என் தம்பி சுக்கிரீவன் மலர்களில் உண்டான மதுவைக் குடித்து அறிவு  மாறுபடும் போது அவன் மீது சினம் கொண்டு இப்போது என் மீது செலுத்திய அம்பாகிய யமனை செலுத்தாதிருக்க வேண்டும்எனும் பொருள் படும் இப்பாடலும் என்னைக் கவர்ந்தது.
.
ஓவிய உருவ நாயேன் உளது ஒன்று பெறுவது உன்பால்
பூ இயல் நறவம் மாந்தி புந்தி வேறு உற்ற போழ்தில்
தீவினை இயற்றுமேனும் எம்பிமேல் சீறி என் மேல்
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான்.

அங்கதன் பற்றி.
----------------
வாலி இறக்கும் தருவாயில் தன் மகன் அங்கதனை அழைத்து வரக் கூறுகிறான்.சந்திர மண்டலம் வானிலிருந்து கீழே விழுந்து கிடக்க , அச்சந்திரன் மீது விண்ணிலிருந்து ஒரு விண் மீன் விழுந்தது போல தரையின் மீது விழுந்து கிடக்கும் வாலியின் மேல் அவன் விழுந்தான்.எட்டு திக்கு யானைகளுக்கும் தோல்வியை உண்டாக்கியவன் இராவணன்.அவன் உள்ளம் உன் வாலின் தன்மையை நினைக்கும் போதெல்லாம்பட படவென அடிக்கும் அச்சம் ,இன்று நீ இறப்பதால் நீங்கி விடும் அல்லவா... என்றெல்லாம் கூறிக் கலங்க,அதற்கு வாலி, இராவணனை வென்ற தன்னை வென்றதால் அது ராமன் செய்த நல்வினை என்று கூறி , ராமனிடம் அடைக்கலம் என்று அங்கதனை சேர்க்கிறான்.


கார்காலம் முடிந்தும் சுக்கிரீவனிடமிருந்து எந்த முனைப்பும் இல்லாதது கண்டு வெகுண்டு வரும் இலக்குவனை முதலில் எதிர்கொண்டு, அங்கதன் தன் சிறிய தந்தை மதுவருந்தி மயக்கத்தில் இருப்பது கண்டு அனுமனுடன் தன் தாய் தாரையை அழைத்து வர அவள் இலக்குவனிடம் இதமாகப் பேசி அவன் சினம் தணிக்கிறாள். நடந்ததை சுக்கிரீவனிடம் கூறி விளக்க அவன் இலக்குவனிடம் மன்னிப்பு வேண்டுகிறான்.

இலங்கையின் மீது படை யெடுத்துச் செல்லும் முன் இராவணனிடம் அங்கதனைத் தூது அனுப்புகிறான் ராமன்..வாயுவின் மகனான அனுமன் இராவணனிடம் தூதனாகச் சென்றால்,அனுமன் அல்லாது இலங்கைக்குள் வந்து திரும்பும் வல்லமை உடையவர் வேறொருவர் இங்கில்லை என்று ராவணன் நினைக்கலாம் அல்லவா. அங்கதனே தக்கவன் என்று தேர்ந்தெடுக்கப் படுகிறான். தூது சொல்லாக சீதையை விடுவித்து உயிர் பிழைப்பதா இல்லை ராமன் அம்புகளால் பத்து தலைகளும் துண்டாவதா இதில் ஒன்றை ஏற்கக் கூறுமாறு இராவணனிடம் அங்கதன் கேட்க வேண்டும்..

இராவணன் முன் தூதுவனாக வந்த அங்கதனைப் பார்த்து “இன்று இப்போது இங்கு வந்த நீ யார்.?வந்த காரணம் யாது. ?என் ஏவலாட்கள் கொன்று தின்பதன் முன் நானறியத் தெரிவிப்பாயாக,என்று வினவ அங்கதனும் பற்கள் வெளியே விளங்கச் சிரித்தான்.

நின்றவன் தன்னை யன்னான் நெருப்பு எழ நிமிரப் பார்த்து இங்கு
இன்று இவண் வந்த நீ யார் எய்திய கருமம் என்னை
கொன்று இவர் தின்னா முன்னம் கூறுதி தெரிய என்றான்.
வன் திறல் வாலி சேயும் வாள் எயிறு இலங்க நக்கான்.

இந்திரனின் மகனும்,முன் காலத்தில் ஒப்பிலா இராவணன் என்பவனை,அவனது தோள்களுடனே வாலில் தொங்குமாறு கட்டி எல்லா திசைகளிலும் பாய்ந்து திரிந்தவனும் ,தேவர்கள் உண்ண மந்தார மலையாலே பாற்கடலைக் கடைந்தவனுமான வாலியின் மைந்தன் நான் என்று அறிமுகப் படுத்திக் கொண்டான்
.
இந்திரன் செம்மல் பண்டு ஓர் இராவணன் என்பான் தன்னை
சுந்தரத் தோள்களோடும் வாலிடைத் தூங்கச் சுற்றி,
சிந்துரக் கிரிகள் தாவித் திரிந்தனன்.தேவருண்ண
மந்தாரப் பொருப்பால் வேலைக் கலக்கினான் மைந்தன் என்றான்.

நின் தந்தை என் நண்பன் நீ ஒரு சாதாரண மனிதனுக்கு தூதனாக வருவது இழுக்கு. உன் தந்தையைக் கொன்றவனின் பின்னே முகத்தைத் தொங்க விட்டு இருப்பது கண்டால் உன்னை அறிவிலி எனக் கூறுவர். உனக்கு குரங்கு இனத் தலைவனாகும் பதவி தருகிறேன் என்றெல்லாம் கூறி அங்கதனை வசப் படுத்தப் பார்த்தான் இராவணன். நீ வானரத் தலைமை தர நானா கொள்வேன்? அப்படிச் செய்தால் நாயானது தரச் சிங்கம் பெற்றுக் கொள்வது போலாகும்என்று கூறி நகைத்தான்
.
வாய் தரத் தக்க சொல்லி என்னையுன் வசஞ்செய்வாயேல்
ஆய்தரத் தக்கது அன்றோ தூது வந்து அரசது ஆள்கை
நீ தரக் கொள்வேன் யானே இதற்கு இனி நிகர் வேறு எண்ணின்
நாய் தரக் கொள்ளும் சீயம் நல் அரசு என்று நக்கான்.

சினம் கொண்ட இராவணன் அங்கதனைத் தாக்கிக் கொல்ல பணிக்க, வந்தவரை அழித்து மீண்டான் அங்கதன்.

பின்னர் போர் நடந்து ராமன் வென்று சீதையை மீட்டு, அயோத்தி மீண்டு மகுடம் சூடினான்.

அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெம் குடை கவிக்க இருவரும் கவரி பற்ற
விரை செறி கமலத்தாள் சேர் வெண்ணையூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி.


கம்பனின் ராமாயணப் பாடல்களைப் படித்துக் கொண்டிருந்த போது என்னுள்
ஒரு விஷயம் என்னைக் கவனித்தாயா என்று கேட்பது போல் இருந்தது. கம்ப நாட்டாழ்வாருக்கு நாய் என்றால் மிகவும் அலட்சியமான விலங்கு என்றே தோன்றி இருக்க வேண்டும். தன்னைப் பற்றி மதிப்புக் குறைவாக எண்ணும் இடங்களில் கதாமாந்தர்கள் அவர்களை நாயுடன் ஒப்பிட்டு கூறுவதைக் கண்டேன். நான் கண்ட மட்டில்

      1.)      இராமன் காட்டில் இருக்கும்போது பரதன் முதலானோர் வந்தது கண்டு குகன் கோபமாக

அஞ்சன வண்ணன் என் ஆருயிர் நாயகன் ஆளாமே
வஞ்சனையால் அரசு எய்திய மன்னரும் வந்தாரே
செஞ்சரம் என்பன தீ உமிழ்கின்றன செல்லாவோ
உஞ்சு இவர் போய்விடின் நாய்க்குகன் என்றெனை ஏசாரோ.

   2.)கிட்கிந்தா காண்டத்தில் மராமரப் படலத்தில் இராமனிடம் சுக்கிரிவன்

வையம் நீ வானும் நீமற்றும் நீ மலரின் மேல்
ஐயன் நீ ஆழி மேல் ஆழி வாழ் கையன் நீ
செய்ய நீ அனைய அத்தேவும் நீ நாயினேன்
உய்ய வந்து உதவினாய் உலகம் முந்து உதவினாய்.
 
   3.)கிட்கிந்தா காண்டம் வாலி வதை படலத்தில் வாலி

தாய் என உயிர்க்கு நல்கிதருமமும் தகவும் சால்பும்
நீ என நின்ற நம்பி நெறியினும் நோக்கும் நேர்மை
நாய் என் நின்ற எம்பால்நவை அற உணரலாமே
தீயன பொறுத்தி என்றான் சிறியன சிந்தியாதான்.

இரந்தனன் பின்னும் எந்தை யாவதும் எண்ணல் தேற்றாக்
குரங்கு எனக் கருதி நாயேன் கூறிய மனத்துக் கொள்ளேல்
அரந்தை வெம் பிறவி நோய்க்கும் அரு மருந்து அனைய ஐயா
வரம் தரும் வள்ளல் ஒன்று கேள் என மறித்தும் சொல்வான்.

ஏவு கூர் வாளியால் எய்து நாய் அடியனேன்
ஆவிபோம் வேலைவாயறிவு தந்து அருளினாய்
மூலம் நீ முதல்வன் நீ முற்றும் நீ மற்றும் நீ
பாவம் நீ தருமம் நீ பகையும் நீ உறவும் நீ

ஓவிய உருவ நாயேன் உளது ஒன்று பெறுவது உன்பால்
பூ இயல் நறவம் மாந்தி புந்தி வேறு உற்றபோழ்தில்
தீவினை இயற்றுமேனும் எம்பி மேல் சீறி என்மேல்
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான்.

   4.)சுந்தர காண்டம் பிணி வீட்டு படலம்.ஜானகி அக்னியை வேண்டல்

தாயேஅனைய கருணையான் துணையை ஏதும் தகைவு இல்லா
நாயே அனையவல் அரக்கர் நலியக் கண்டால் நல்காயோ
நீயே ஒரு உலகுக்கு ஒரு சான்று நிற்கே தெரியும் கற்பு அதனில்
தூயேன் என்னின் தொழுகின்றேன் எரியே அவனைச் சுடல் என்றாள்.

    5.)யுத்த காண்டம் வருணனை வழி வேண்டு படலம். வருணன் கூற்று

அன்னை நீ அத்தன் நீயே அல்லவை எல்லாம் நீயே
பின்னும் நீ முன்னும் நீயே பேறும் நீ இழவும் நீயே
என்னை நீ இகழ்ந்தது என்றது எங்ஙனே ஈசனாய்
உன்னை நீ உணராய் நாயேன் எங்ஙனம் உணர்வேன் உன்னை.

   6.)யுத்த காண்டம்  ஒற்று கேள்வி படலம் ராவணனிடம் ஒற்றர் கூற்று.

ஆயிரம் வெள்ளமான அரக்கர்தம் தானை ஐய
தேயினும் ஊழி நூறு வேண்டுமால் சிறுமை என்னோ
நாய் இனம் சீயம் கண்டதாம் என நடப்பது அல்லால்
நீ உருத்து எழுந்தபோது குரங்கு எதிர் நிற்பது உண்டோ.

   7.) அங்கதன் தூது படலம். யுத்த காண்டம்

வாய் தரத்தக்க சொல்லி என்னையுன் வசஞ் செய்வாயேல்
ஆய்தரத் தக்கது அன்றோ தூது வந்து அரசது ஆள்கை
நீ தரக் கொள்வென் யானே இதற்கு இனி நிகர் வேறு எண்ணின்
நாய் தரக் கொள்ளும் சீயம் நல் அரசு என்று நக்கான்.


சிறிது காலம் இலக்கிய இன்பத்தில் திளைக்கக் காரண மான திரு. அப்பாதுரைக்கு என் நன்றிகள்.
------------------------------------------------------------------------------------------------------------
-   

ஸ்ரீராமநவமியை முன்னிட்டு இந்தப் பதிவை மீண்டும் இடுகிறேன்












   
     




Wednesday, February 15, 2012

நினைவில் நீ...(அத்தியாயம் எட்டு )


                 
               நினைவில் நீ ( நாவல் தொடராக )
                ---------------------------------------------

                                    ------- 8  -----

                ஆஷா,உலகத்து இன்பங்களை எல்லாம் நீயும் நானும் இப்படி சேர்ந்து இருக்கும்போது அனுபவிப்பது போன்ற ஒரு உணர்ச்சி.அழகுக்கு இலக்கணம்  வகுத்தவள் நீ.உன் பார்வை ,செயல், நடை,  ஹூம்.! எல்லாம் என்னைப் பித்தனாக்குகிறது.”- குடிபோதையில் குமாரின் பிதற்றல்.

     அதுதானே என் லட்சியம். அந்த அளவுக்கு உங்களை நினைக்கச் செய்கிறேன் என்பதே பெருமையல்லவா அருகில் இருப்பவனை ஆட்கொண்டுவிட்ட ஆஷாவின் மதர்ப்பு.

      “ எனக்கு புகழ்ந்து பேசத்தெரியாது ஆஷா.ஆனால் ஒன்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது.உன் இதழொடு என் இதழைச் சேர்க்கும்போது இந்த உலக நினைவே இல்லை. இன்னும் ஒரு முறை என்னை சொர்கத்துக்கு அழைத்துச் செல் ஆஷாகிடைத்ததை மேலும் பெற புகழ் பேசத் தெரியாத ராஜனும் பேசுகிறான்.

    “ என் ராஜனுக்குக் காரியத்திலேயே கண்:- செல்லமாகக் கடிந்து கொண்டாலும் கேட்டவனுக்கு இல்லை என்று சொல்லவில்லை ஆஷா.

       “ மருத்துவம் படிக்கிறேன் டார்லிங், ஆனால் எனக்குள்ள வியாதிக்குத்தான் மருந்து தெரியவில்லை. நீ அருகிலிருக்கும்போது, உனது மென் கரம் என் மேனியில் படும்போது குளிருகிறது, ஜுரமடிக்கிறது. இருந்தாலும் அதிலும் ஒரு இன்பம். எனக்கு என்ன மருந்து ப்ரிஸ்க்ரைப் செய்கிறாய் ஆஷா?மருத்துவ மாணவன் மோஹனுக்கு ஆஷா தரும் மருந்து.வள்ளுவரின் காமத்துப்பாலில் ஒரு டோஸ், லேடீ சாட்டர்லீஸிலிருந்து  ஒரு அத்தியாயம். இதிலும் குணமாகவில்லை என்றால், அதிக ஃபீஸுக்கு இன்னொரு மருந்து இருக்கிறது. அது...

       கல்லூரி மாணவர்கள் முதல் கில்லாடி ரங்கன்கள் வரை எல்லோரும் ஆஷாவுக்கு பாய் ஃப்ரெண்ட்ஸ் அசிங்கமானதை அழகாகச் சொல்வதென்றால் பல வகை வண்டுகளுக்கும் தேன் சொரிந்து கொடுக்கும் வண்ண மலர் ஆஷா. உள்ளபடி சொல்லப் போனால் பேதமின்றி தங்கிச் செல்லும் ருபாய் நோட்டு ஆஷா.

      ஆஷாவுக்கு அவளுக்கு இருக்கும் பெயரிலேயே தனிப் பெருமை. நாகரிகமான பெயர் கொண்ட நங்கை. தான் இந்த நாகரிக உலகின் தனிப் பிரதிநிதி என்ற எண்ணம் அவளுக்கு. அடிக்கடி எழும். எண்ணத்தின்படி செயலாற்ற , நாகரிக கேளிக்கைகளில் மூழ்கி விளையாடி இன்புற வேண்டும் என்னும் ஏக்கம் அவளை வாட்டும். ஆனால் கட்டுப்பாடு மிகுந்த குடும்பத்தில் பிறந்த அவளுக்கு நினைத்தபடி வாழ முடியவில்லை. பருவத்தின் கவர்ச்சி , தன் அழகின் மேலுள்ள பெருமை, அதை அனுபவிக்கத் துணை தேடித் தவிக்கும் நிலைமை எல்லாம் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பது போல் அவளுக்குத் தோன்றியது.

      அன்று கண்ணன் எத்தனை ஆர்வத்துடன் ஐ லவ் யூ என்று கூறினான். அந்த வார்த்தைகளை கேட்டதும் எவ்வளவு இன்பம் அடைந்தாள். இந்தப் பாழாய்ப் போன அம்மா மட்டும் வந்திருக்கா விட்டால்....கண்ணனாவது வீட்டிலிருந்தவன். அன்று வரை அவளிடம் மனம் விட்டுப் பேசக் கூடத் தயங்கியவன். காலேஜ் வாசலிலே தன் வருகைக்காகக் காத்திருக்கும் இள வட்டங்களின் முகங்களில் ஏற்படும் ஏக்கங்கலந்த பார்வைகள்.; தன் ஒரு கண் அசைவுக்காகக் காத்திருக்கும் அத்தனை பேர்களும், இசைவினை அறிந்தால் எத்தனை மகிழ்ச்சி அடைவார்கள். அனைவரும் தன் காலடியிலே வந்து விழ மாட்டார்களா/! ச்சே..! என்ன வாழ்க்கை இது. ! கற்பனையில் காலத்தை ஓட்டுவதைவிட உண்மை வாழ்க்கையை உணர வேண்டும்.. பாட்டியாவது தாத்தாவாவது...!அம்மா அப்பா யாராயிருந்தால் என்ன.?என் உரிமையை விட்டுக் கொடுத்துக் கட்டுப் பட்டு வாழ முடியாது. ---- நளினமான நினைவுகள் தோன்ற வேண்டிய இடத்தில் புரட்சிகரமான எண்ணங்கள் எழுந்தன. பலன்.? கட்டப் பட்ட தளைகள்த் தகர்த்து எறிந்து தாந்தோன்றித் தனமாக நடக்க ஆரம்பித்தாள். . முதலில் பயமாக இருக்கத்தான் செய்தது. நாளா வட்டத்தில் பயம் போய் உறுதி வளர்ந்தது. பாரதியின் புதுமைப் பெண்ணைப் பற்றிப் படித்திருந்தவள். தவறுதலாக தன்னை ஒரு புதுமை பெண்ணாகக் கற்பனை செய்து கொண்டாள். எவ்வளவு விரைவில் மன மாற்றமடைந்தாளோ அவ்வளவு விரைவில் , சுருங்கச் சொன்னால், கெட்டுப் போனாள். பெண்மையைப் பறி கொடுத்தாள். நிலைமை மோசமாகிக் கொண்டே போக மறைக்க முடியாத அளவுக்கு அவளின் செயலின் தவறு வெளிப்பட்டது.

      சரஸ்வதி சுந்தர ராமன் இருவரும் எல்லாவிதமான யுக்திகளையும் உபயோகித்து ஆஷாவை இந்த நிலைக்கு ஆளாக்கியவன் யார் என்று  அறிய முயன்றனர்,யாரென்று தெரிவித்தால் அவனையே அவளுக்கு மணமுடித்து வைப்பதாகக் கெஞ்சினர். ஆஷாவுக்குப் பதிலே சொல்ல முடியவில்லை. அவளுக்குத் தெரிந்தவரை இன்னவன்  தான் என்று இனங்கண்டு கொள்ளக் கூட முடியாத அளவுக்குத் தவறி யிருந்தாள். ஆனால் மனசிலே எங்கோ ஊர்ஜிதப் படுத்த முடியாத ஒரு சந்தேகம்.

       “ அவர் ஒரு ஆங்கிலோ இந்தியர் என்று நினைக்கிறேன் . ஏற்கனவே திருமணமானவர்தட்டுத் தடுமாறி திக்கித் திணறி சொல்லி முடிக்கும் முன்பே மின்னல் பாய்வது போன்ற ஒரு உணர்ச்சி.,இடி இடித்து உலகமே இருண்டது போன்ற ஒரு அதிர்ச்சி.! பீறிட்டு எழுந்த ஆத்திரத்தில் அடித்த அடி தாங்காமல் விழுந்து கிடந்த ஆஷாவின் கழுத்தை , அடங்காத கோபத்தில் நெரித்துக் கொன்றே போட்டார் அவள் தந்தை சுந்தர ராமன். கணவனை விலக்க முடியாத சரஸ்வதிக்கு உயிர் பிரிந்த பெண்ணின் உடலே கிடைத்தது. பெற்ற பெண் களங்க மடைந்து விட்டாள் , அதுவும் துணிந்து கெட்டுப் போனாள் என்ற எண்ணத்தில் எழுந்த வெறியின் விளைவு சுந்தர ராமனின் செயல்.அது சரியா தவறா என்பது சட்டம் என்னும் கழுதையின் பொறுப்பு. அதுவும் வாளாவிருக்க வில்லை. சுந்தர ராமனை நன்றாக உதைத்து விட்டது.

      உலகில் ஒருவரது செயல் அவரை மட்டும் பாதிக்கிறது என்று இருந்து விட்டால் அது நாடக மேடை என்றே அழைக்கப் பட்டிராது.அழைக்கப் படுகிறது என்பதே மற்ற கதா பாத்திரங்களும் அதனால் பாதிக்கப் படுகிறார்கள் என்பதைச் சொல்லாமல் சொல்லும்.

     பாட்டிக்கு இடி விழுந்த மாதிரி ஆகிவிட்டது.கிளை விட்டுப் படர்ந்திருந்த ஒரு பெரிய கௌரவமான குடும்பத்தின்  நிகரற்ற  தலைவி தான் என்று அவள் கொண்டிருந்த இறுமாப்புக்குக் கிடைத்த சவுக்கடி போல ,அடுத்தடுத்து நிகழும் நிகழ்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சம் தன் உள்ளத்தை அலசி அழுக்கிருக்கிறதா என்று நோக்கச் செய்தது.

     அவளைப் பொறுத்தவரை அவள் இதுவரை மன சாட்சிக்கு விரோதமாய் நடந்ததில்லை என்றே நம்பினாள். கொள்கைகளின்-அது சரியா தவறா என்று நினைத்துக்கூட பார்த்திராதவள்காரணமாக எழும் செயல்களே மன சாட்சியின் பிரதி பலிப்பு என்ற அளவுக்கு ஏதோ நினைக்கத் தெரிந்தவள், தனது செயல்களே சரியானது  அதனால் தனது மனசாட்சிக்கு விரோதமாக நடந்தது கிடையாது என்றே எண்ணினாள். அந்த எண்ணத்தின் அஸ்திவாரத்துக்கே ஆட்டம் கொடுக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சிகள் அவளைப் பெரிதும் சிந்திக்க வைத்தது. மேலும் அன்று பாபு “ அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் “என்று கூறியதை நினைக்கும் போதெல்லாம் அவளுக்கு உள்ளம் நடுங்கியது. மூட நம்பிக்கைகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரட்டு கௌரவம் காரணமாக தான் ஒரு குடும்பத்தை தகர்த்து எறியக் காரணமானவள் என்று கூட அவளால் நினைக்க முடிய வில்லை. நினைத்து வருத்தப்படத் தெரிந்திருந்தாலாவது ஒரு சமயம் நடந்த நிகழ்ச்சிகள் தவிர்க்கப் பட்டிருக்கும்ஆண்டவனின் மன்னிப்பால்.!

     காலங்கடந்து ,நடந்த காரியங்களுக்குக் காரணம் காண நினைத்த பாட்டி, தன் வினை தன்னைச் சுடுகிறதோ என்று ஐயப்படத் துவங்கியதும் அரைப்பைத்திய நிலைக்கே தன்னை ஆளாக்கிக் கொண்டாள்.வரைந்து முடித்துவிட்ட வட்டத்தின் ஆரம்பப் புள்ளியை நிர்ணயம் செய்ய முயலும் அறியாமையின் விளைவே தன் நிலைக்குக் காரணம் என்று அவளுக்குப் புரியவில்லை.
---------------------------------------------------------------------
-                                                       (-தொடரும் )