Tuesday, May 31, 2011

அறியாமை ..இருள்.

அறியாமை  இருள்.

              என்னுடைய விடியலுக்காகக் காத்திருக்கிறேன் என்ற
பதிவில்,விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும், விளங்கா நிலையில்,
என்றோ, எவனோ, வரைந்து முடித்துவிட்ட வட்டத்தின்
தொடக்கப் புள்ளி தேடி,நாம் ஏன் சோர்வுற வேண்டும்,
அறியாமை இருளில் இருப்பதே சுகம் என்று எழுதி இருந்தேன்..
அண்ட  வெளியின்  இருட்டின் வியாபிப்பும், அதில் ஒளி தருவதே
ஞாயிறின் ஜொலிப்பு என்றும், அறியாமையும் ,அவலங்களுமாய்
இருண்டிருக்கும் வாழ்வியலில், நம்பிக்கையே ஞாயிறின்  ஒளி
என்றும், அந்த ஞாயிறின் விடியலுக்காகக்  காத்திருக்கிறேன்
என்று ம் எழுதியிருந்தேன்.

           அப்படியே நான் எழுதி விட்டாலும், நம்பிக்கை என்று வரும்
போது, அது அறிவு சார்ந்த்ததாக இருக்க வேண்டும் என்பதில்
குறியாய் இருக்கிறேன்..அணு, அண்டம் அறிவியல் என்று ஒரு
பக்கம் எழுதியதைப் படிக்கும்போதும், ஒரு பக்கம் உருவமே
இல்லாத ஒன்றுக்கு ஆயிரம் உருவங்களும் ,நாமங்களும்
கொடுத்து, “ ஐயனே ,உம்முடைய அழகான பாதத்தை அர்ச்சித்து
இருப்பதும் நான் எப்போ.?”என்று  உள்ளத்தாலும், உதடுகளாலும்,
எழுத்துக்களாலும், ஏங்கிக் கொண்டிருப்பவனைப் பார்க்கும்போது,
இரண்டுக்கும்  பாலமாகப் பதிலாக, சாதாரணன் பகுத்தறிவின்படி,
ஒப்புக்கொள்ளும் படியான விளக்கங்கள் கிடைப்பதில்லை.
இல்லையென்றால் கிடைத்தவற்றைப் புரிந்து கொள்ளும் அறிவு
இருப்பதில்லை. நான் என்னைக் குறித்தே குறைபடுகிறேன்.

          அறியாத ஒன்றைப் பூரணமாக அறிந்து கொள்ள வேண்டும்
என்ற ஆர்வம், அதே சமயம் எல்லாம் அறிந்துவிட்டதாகச் சிலர்
நம்பி உண்மையில் அந்த அறிவைத்தேடி, விளக்கில் மாயும்
விட்டில் பூச்சிகள் போல், ஏதும் அறியாமல் புரியாமல் சாதிக்காமல்
செத்து மடிவதைக் காணும்போது மனம் ஆயாசப்படுகிறது

            யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே, ஐயன் புகழ்
பாடு, என்று அறியாத ஒருவனுக்குள்ள ஆயிரம் நாமங்களில்,
சிலவற்றைப் பாடி, அவனுக்காக கற்பிக்கப்பட்ட ஆயிரம் கதை
களையும் அப்படியே உண்மை என்று நம்பி, நான் முன்பு கூறியபடி
அறியாமை இருளில் மூழ்கிக் கிடப்பதே சுகம் என்று காலம் கடத்த
வேண்டும்..ஆனால் என் செய்ய.? என் பாழும் மனம் ஒப்புவதில்லை.

           நான் முன்பே ஒருமுறை எழுதியிருக்கிறேன்.கடவுள்களும்
அவர்களுக்கான உருவங்களும், கதைகளும் ,ஏதோ ஒரு
நம்பிக்கையை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட புனைவுகளே.ஆனால்
ஆச்சரியம் என்னவென்றால், இந்தப் புனைவுகள் இந்தியத் துணை
கண்டத்தின் எல்லாப் பகுதிகளிலும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக
உலவுவதுதான்.ஆதியிலிருந்தே மனிதன், தன்னைக் காத்துக்
கொள்ள, தன்னிலும் மேலான சக்தியிடம், தன்னை ஒப்படைத்து
இனி அவன் பாடு, என்று பொறுப்பை, விட்டுக்கொடுத்துவிட்டான்.
தன்னில் அடங்காத, தன் சக்திக்கும் மேலான, அதே சமயம் தன்
வாழ்வுக்கு இன்றியமையாத, பொருள்களுக்கு உருவகம் கொடுத்து,
அதையே வழிபட்டு நம்பிக்கையை வளர்த்து வருகிறான்.நீர், நிலம்
நெருப்பு, அண்டம் ,காற்று, என்பவற்றைக் கடவுளாக பாவிக்கத்
தொடங்கினான். விஞ்ஞானம் வளர வளர, அவையே மனிதனின்
உடலில் இருப்பவை என்று உணரத்துவங்கி, அதையே கடவுள்
உன்னில் உள்ளான் என்று மெய்ஞ்ஞானம்கூறுவதாக
எண்ணினால், ஏதோ புரிகிறது போல் தெரிகிறது.

        இதையே ஸ்ரீ நாராயணகுரு அவர்கள்கூறியது ,நான் படித்துப்
புரிந்து கொண்டபடிஆத்ம விடுதலைக்காக ஆண்டவனை                                            வேண்டும ஒருவன், அவனையே ஆராதிக்கலாம்  என்றும், ஒரு                 கடவுள்  சிலையோ ,ஆண்டவன் உருவப்படமோ உண்மையில்        அவனுடைய பிரதிபலிப்பே என்றும், நிலைககண்ணாடி முன்                         நின்று, அவனையே அர்ச்சித்துக் கொள்வதற்கு ஒப்பாகும் என்றும்                தேடுப வனும், தேடப்படுபவனும், ஒன்றாகிறான் என்றும்,         வேண்டுபவனும்  வேண்டப்படுபனும் ஐக்கிய
மாக வேண்டும் என்றும்  கூறுவார்.இதையே “அஹம்
ப்ரம்ஹாஸ்மி”என்று கூறுகிறார்கள் போலும்.

             ஆனால் இப்படி வழிபடுவது சாதாரணனுக்கு சாத்தியம்
இல்லையே. அவனுக்கு உருவம் வேண்டும், உருவகம்
வேண்டும், கதை வேண்டும் ,அதில் ஒன்றிக் கலக்க வேண்டும்.
ஆனால் கடைசி வரையில் பெரும்பாலும் உண்மை உணரப்
படாமலேயே போய் விடுகிறது.
        
              நம் முன்னோர்கள் கூறிவிட்டுச் சென்ற  கதைகள்
பொய்யா.?கதையை நடந்தவையாகப் பாவித்தால்தான்
நம்பிக்கை வரலாம். கதைகளின் நிகழ்ச்சிகளால் மனிதனின்,
வாழ்வியலுக்குத் தேவையான அனேக விஷயங்கள்
அறிவுறுத்தப் படுகின்றன.ஆனால் உண்மை நிலை என்ன.?
நாம் அந்த சக்தி வாய்ந்த கதாபாத்திரத்திடம் மயங்கி, அதனால்
சொல்லப்படும் கருத்துகளை மறந்து விடுகிறோம்.நமது
பதிவர்களின் ஒரு பதிவில், கதைகளின் கருத்தை மறந்து,
கருத்து சொல்பவர்களைப் பற்றிய கருத்துகளையே  உலாவ
விடுகிறார்கள் என்று படித்த நினைவு.
              என்னுடைய எண்ணங்களும், கேள்விகளும், ஏற்ற
தாழ்வில்லா சமுதாயம் மலர்ந்து, அதற்கான விளக்கங்களும்
காரணங்களும் கிடைக்கப் பெறும்போதுதான் முற்றுப்பெறும்
என்று நம்புகிறேன். இந்த நம்பிக்கை அபத்தமானதுஎன்பதும்
எனக்குத் தெரியும். ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவிடை
இ ல்லாமல் மயக்கத்தில் இருக்கும் வாழ்க்கை நியதிகளுக்கு
விடை காண இயலுமா. ? “ பரித்ராணாய  ஸாதூனாம்
விநாசாய  ச துஷ்க்ருதாம்.....தர்ம-ஸம்ஸ்தாபனார்த்தாய
சம்பவாமி யுகே யுகே “ சாதுக்களை காத்தற்கும் துஷ்டர்களை
அழித்தற்கும் தருமத்தை நிலை நாட்டுத ற்கும் யுகந்தோறும்
வந்துதிப்பேன்” என்று மக்களுக்கு நம்பிக்கை நிலைநாட்ட
பகவான் கூறியது  உண்மையாக்க அந்த ஆண்டவனுக்கு
நேரம் இன்னும் வரவில்லையா.?இந்த யுகம் முடியும்
தருவாயில் கல்கி அவதாரமாக வந்து காத்தருள்வார்  என்று

நம்பிக்கையோடு காத்திருக்க  வேண்டுமா.?

            எப்போதும்போல் என் சந்தேகங்கள் சில. 1). விலங்கு
களிலும், பறவைகளிலும் ஏழை பணக்காரன், படித்தவன்
படிக்காதவன், சாதி வேறு பாடுகள் இல்லையே.மனிதனுக்குள்
ஏன்.? 2).மனிதனுக்கு மட்டும்தான் பூர்வ ஜென்ம பலா பலனா.?

            தலைவிதி , பூர்வ ஜென்ம  பலன் இன்ன பிற போன்ற
விஷயங்கள் தலையைப் பிய்க்கின்றன. மறுபடியும்
தோன்றுகிறது.அறியாமை இருளில் இருப்பதே சுகமோ.?
================================================                                                                                                                                                              







    .



 


 





சில குறைபாடுகள்....

சில குறைபாடுகள்
---------------------------
            எழுதுபவனுக்குத் தன் எழுத்தை மற்றவர்கள் படிக்கிறார்கள்,
என்று அறிந்தால் மகிழ்ச்சி. எழுதியவற்றை எவ்வாறு ஏற்றுக்கொள்
கிறார்கள் என்று அறிந்தால் அதைவிட மகிழ்ச்சி. இவன் எழுதுவதை 
யார் யார்  தொடர்கிறார்கள் என்று அறிந்தால் அதைவிட மகிழ்ச்சி. 
இவற்றுக்கு வாய்ப்பில்லாமல் கணினி கோளாறினாலோ, சேவை 
குறைபாடுகளாலோ, க்ருத்துரை இட முடியாத, பெறமுடியாத ஒரு 
சூழ்நிலை,பல பதிவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. எனக்கும் ஏற்பட்டு
இருந்தது.அதில் என் வலைத்தளத்தில் கருத்துரை பெட்டி திறக்கா
ததால், பின்னூட்டங்கள் பெற முடியாதபடி இருந்தது.அது இப்போது 
சரியாகிவிட்டது. இதற்காக நான் வை. கோபாலகிருஷ்ணனுக்கும், 
திரு. எல். கே. அவர்களுக்கும் கடமைப் பட்டிருக்கிறேன்.


           என் பதிவுகளை தொடர்ந்து ,படிக்க சில வாசகர்கள் பதிவு செய்து
இருப்பதை அறிகிறேன்.ஆனால் அவர்களை பற்றிய த்கவல்களை 
கணினி காட்டுவதில்லை.இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கூற, கணினி 
துறையில் வித்தகர்கள் மனமுவந்து உதவினால் நன்றியோடிருப்பேன்.

Saturday, May 28, 2011

இப்பூவுலகே எனக்கன்றோ....

இப்பூவுலகே எனக்கன்றோ
------------------------------------

               பேரூந்து ஒன்றில் பயணம் செய்தேன். 
               பேரழகி ஒருத்தியைப் பக்கத்தில் பார்த்தேன்.
               என்ன  அழகு இவள்,நானேன் இல்லை அவள் போல், 
               எண்ணி மருகிய என் கவனம் சிதறியது.
               நிறுத்தத்தில் அவள் இறங்க எழுந்தவள்
               தடுமாறி கீழே விழப் போனவளைக் 
               கை தூக்கிப்பிடித்து நிறுத்தினேன்.
               புன்னகைத்து நன்றி சொன்னவள் செல்கையில் 
               கவனித்தேன் அவளுக்குக் கால் ஒன்று கட்டை என்று.
ஆண்டவனே, நான் குறைப் படுகையில் 
என்னை மன்னித்து விடு. 
எனக்கிருக்கிறது நல்ல இரு கால்கள். 

              மென்று சுவைக்க மிட்டாய் வாங்க 
              பெட்டிக்கடைப் பக்கம் சென்றேன்.
              மலர்ந்து சிரித்த சிறுவனுடன் சிறிது நேரம்,
              பேசிச்செல்ல மனம் மிக  விழைந்தது.
              தாமதமானாலும் பாதகமில்லை, பேச்சுக்கொடுத்தேன்.
              காசு கொடுத்துப் போகையிலே, அதனைத் 
              தடவிப் பார்த்த பையன் நன்றி சொன்னான்; 
              கண்ணில்லா அவனிடம் அன்பாய்ப் பேசியதற்கு.
ஆண்டவனே நான் குறைப்படுகையிலே
என்னை மன்னித்து விடு. 
எனக்கிருக்கிறது காண நல்ல இரு கண்கள்.

             தெரு ஓரத்தில் ஆடிக்கொண்டிருந்த
             சிறுவர்கள் மத்தியில் ,பார்த்துப் பரவசமாகி
             நிற்கும் நானறிந்த சிறுவனிடம்  அவன் ஏன் 
            ஆடப் போகவில்லை என்றே கேட்டேன்
            மலங்க விழித்த அவனுக்கு, காதிரண்டும்
            கேளாது என்பதனை  மறந்து விட்ட நான். 
ஆண்டவனே நான் குறைப்படுகையிலே
என்னை மன்னித்துவிடு.
எனக்கிருக்கிறது நல்ல இரு கேட்கும் காதுகள். 



            எ ங்கும்  என்னை நடத்திச் செல்ல நல்ல 

            இரு கால்களும்,
           அழகான அஸ்தமனத்தில் ஆதவனை ரசிக்க
            இரு கண்களும்,
            என்னைச் சுற்றி நடப்பதைக் கிரகிக்க நல்ல 
            இரு காதுகளும்
            இருக்கையிலே குறைப்படுதல் தவறன்றோ...
            இந்த உலகையே ரசிக்க வைக்க, 
           எல்லாப் புலன்களும் எனக்கிருக்க 
            இந்தப் பூவுலகே எனக்கன்றோ.!
============================================
 


    

           
 




 




      

Thursday, May 26, 2011

அவதாரக் கதை...பாகம் 4----நரசிம்மமாக.....

அவதாரக் கதை ...பாகம் 4..நரசிம்மமாக.
-------------------------------------------------------
(இந்த முறை அவதாரக் கதை சொல்லும் பாணியை மாற்றி
எழுதுகிறேன். சிறுவர், சிறுமிகளுக்கு கதை சொல்லும்போது
அவர்கள் அதில் ஒன்றிப் போய் லயிக்க வேண்டும். அதற்கு 
நான் கதை சொல்லும்போது,அவர்களையே கதாபாத்திரங்களாக
நினைத்துக்கொள்ளச் சொல்லி, நடித்துக்காட்டியும், நடிக்க வைத்தும்
கதை சொல்லுவேன். எழுதும்போது நடித்துக்காட்ட முடியாது. ஆகவே
முடிந்தவரை எந்த இடங்களில் நடிக்கலாம்  நடிக்க வைக்கலாம் 
என்று முடிந்தவரை சுட்டிக் காட்டுகிறேன்.அதன் பின் அவரவர் 
சாமர்த்தியம்.)


               அந்தக் காலத்தில் இரணியகசிபு -ன்னு ஒரு ராஜா இருந்தானாம்.
அவன் ரொம்ப புத்திசாலி, பலசாலி. அவருக்கு ஒரு ஆசை. தனக்கு சாவே
வரக்கூடாதுன்னு. அதுக்கு வேண்டி அவர் ரொம்ப சிரத்தையோட தபசு 
செய்தார்.எப்படின்னா, நேரா ஒரு கால்ல நின்னு,ரெண்டு கையையும் 
மேலே தூக்கிகை கூப்பி கண்ணு ரெண்டையும் மூடி, “ஓம் நமசிவாய நமஹ
ஓம் நமசிவாய நமஹ”-ன்னுஜெபித்துக் கொண்டே இருந்தார்.(நடித்துக்
காட்டலாம், நடிக்க வைக்கலாம்)


                சோறு தண்ணி இல்லாம தபசு செய்யறதப் பார்த்த சிவபெருமான்
திடீர்ன்னு அவர் முன்னே வந்து ,”பக்தா உன் பக்திக்கு மெச்சினேன். 
உனக்கு என்ன வரம் வேண்டும்-ன்னு கேட்டார்.( சிவபெருமானாக நடித்துக் 
காட்டலாம், நடிக்க வைக்கலாம். ) 


               “ஆண்டவனே,எனக்கு சாவே வரக்கூடாது-ங்ர வரம் வேண்டும “ன்ன
இரணியகசிபு கேட்டார்
சிவபெருமான் “அது முடியாது பிறப்புன்னு இருந்தா இறப்பும் இருக்கும் 
வேறு வரம் கேள் “என்றார்.இரண்யகசிபு புத்திசாலி அல்லவா.சாகாத வரம்
எப்படியாவது வாங்கிடணும்னு யோசிச்சு ஒரு வரம் கேட்டான். அதன்படி 
அவனுக்கு காலையிலோ, மாலையிலோ, இரவிலோ சாவு வரக்கூடாது.
மனுஷனாலயோ,தேவர்களாலயோ, விலங்குகளாலோ, பறவைகளாலோ
சாவு வரக்கூடாது, கத்தி ,அம்பு,கதை போன்ற எந்த ஆயுதத்தாலயும் சாவு கூடாது, வீட்டுக்கு உள்ளேயோ, வீட்டுக்கு வெளியேயோ,சாவு வரக்கூடாது,
தண்ணிலயும், நிலத்துலயும் ,வானத்துலயும் சாவு வரக்கூடாதுன்னு ஒரு
பட்டியலே போட்டு வரம் கேட்டான். 

           “நீ கேட்ட மாதிரி வரம் தந்தேன்” னு சிவபெருமான் சொல்லிட்டு 
மறஞ்சார்.சிவனையே ஏமாற்றி வரம் வாங்கிட்டோம்னு அவனுக்கு ஒரே 
குஷி. எப்படியும் தனக்கு சாவு இல்லைன்னு நெனச்சு அவனுக்கு ஆணவம்
அதிகரிச்சது. அவனுடய சக்திய வெளிப்படுத்த எல்லோரையும் துன்புறுத்த 
தொடங்கினான். அவனுக்கு அவனே கடவுள், எல்லோரும் அவனையே 
தொழணும் ன்னுஅகங்காரம் வந்தது. அதன்பிறகு எல்லோரும் தொழும்
போது “ஓம் இரணியகசிபு நமஹ”என்றேசொல்லணும்; மீறினா கடுந் தண்டனைன்னு அறிவிச்சான். எல்லோரும் அப்படியே செய்யத் தொடங்கினார்கள்.

        இந்த சமயத்துல இரணியகசிபுவின் ராணி லீலாவதி கர்ப்பமாயிருந்தாள்.
“ஓம் நமோநாராயணாய நமஹ, ஓம் நமோ நாராயணாயநமஹ” ன்னு
சொல்லிக் கொண்டே வந்த நாரதர் ராணிகிட்ட திருமாலின் பெருமை 
எல்லாம் சொல்லிக் கொடுத்தார். இது இரணிய கசிபுவுக்குத் தெரியாது. 
நாரதர் சொன்னத எல்லாம் கருவிலிருந்த குழந்தை கேட்டு  கிரகித்துக் 
கொண்டது.

         ஒரு நாள் ராணி லீலாவதிக்கும் இரணியகசிபுவுக்கும் ஒரு அழகான 
ஆண் குழந்தை பிறந்தது( இந்த சமயத்தில் கதை கேட்பது ஆண் குழந்தை
யாக இருந்தால், நான் அவனை மாதிரி அழகான, சமத்தான குழந்தை என்று
சொல்லிக் குஷிப்படுத்துவேன்.)குழந்தைக்கு அஞ்சு வயசாகும்போது  குரு
சுக்கிராச்சாரியாரிடம் பாடம் படிக்க அனுப்பினர். பிரகலாதன் னு பேர்வெச்ச 
அந்தக் குழந்தைக்கு மொதல்ல “ ஓம் இரணியகசிபு நமஹ”னுபாடம்      
சொல்லி சுக்கிராச்சாரியார் தொடங்கினார்.ஆனா பிரஹலாதனோ “ஓம் 
நமோ நாராயணாய நமஹ”ன்னுசொன்னான். ( இந்த இடத்தில் குழந்தைகள்
புரிந்து கொள்ள சுக்கிராச்சாரியாரை  ஹெட் மாஸ்டராக்கி, வேறு இரண்டு
ஆசிரியர்களை உருவாக்கி, அவர்கள் சொல்லச்சொல்ல எப்படி பிரஹலாதன் 
மறுபடியும்  மறுபடியும் “ ஓம் நமோ நாராயணாய நமஹ”ன்னுசொல்வதை 
வேடிக்கையாக நடித்துக்காட்டி நடிக்க வைத்து குழந்தகள் அநுபவித்து 
மகிழ்வது கண்டு நாமும் மகிழலாம்)

         வேற வழியில்லாம இரணியகசிபுவிடம் பிரஹலாதன் சொன்ன பேச்ச 
கேக்கிறதில்லைன்னு புகார் பண்ணினார்கள்  ராஜாவும் பிரகலாதன்கிட்ட 
“ஓம் இரணியகசிபு நமஹ” ன்னு சொல்லச்சொன்னார்.பிரஹலாதனோ 
“ஓம் நமோ நாராயணாய நமஹ” என்றே சொன்னான். ராஜாவுக்குக் கோபம் வந்தது. ( ராஜா கொடுக்கும் பல தண்டனைகளை சுவாரசியமாகக் கூறி, 
எப்படி ஒவ்வொரு முறையும், எந்தப் பிரச்சினையும் இல்லாமல் குழந்தை
தப்பித்து வந்தான் என்று கூறலாம்)
“யாரங்கே, இவன் ஓம் இரணியகசிபு நமஹ என்று சொல்லாவிட்டால் 
சவுக்கால் அடியுங்கள்” (சவுக்கடி கொடுத்தவர்களுக்கே அடி விழுந்தது
என்றும்) “ மலை மேலிருந்து உருட்டி விடுங்கள் “ (உருட்டிய பின்னும் 
எந்த காயமும் இல்லாமல் வந்தான் என்றும்)”கடலின் நடுவே தள்ளுங்கள்”
(நீரில் மூழ்காமல் நடந்து வந்தான் என்றும்)”பட்டத்து யானையின் காலால்
இரட விடுங்கள்” (யானை கடைசி நேரத்தில் அவனுக்கு மாலை இட்டு 
மரியாதை செய்தது என்றும்) தாய் லீலாவதியைக் கட்டாயப் படுத்தி 
அவனுக்கு நஞ்சு கொடுத்தும், ஏதுமாகாமல் பிரஹலாதன்   மறுபடியும்
மறுபடியும்  ஓம் நமோ நாராயணாய நமஹ, என்றே கூறியதையும் 
சுவாரசியமாக நடித்துக் காட்டியும், நடிக்க வைத்தும்  குழந்தைகளை 
கதையில் ஒன்ற வைக்கலாம்.

“டேய், பிரஹலாதா, உனக்கு உதவி செய்யும் அந்த நாராயணன் எங்கே
இருக்கிறான் .?”

“அப்பா அங்கே இங்கே என்றில்லாமல் எங்கேயும் இருப்பார்  நாராயணன்”

“இந்தத் தூணில் இருக்கானா.?”

“இந்தத் தூணிலும் இருப்பார் எந்தத் துரும்பிலும் இருப்பார்.”

இரணியகசிபுவுக்குக் கோபம் வந்து தன் காலால் அந்தத் தூணை எட்டி 
உதைத்தான்.”டமால்” ன்னு வெடிசத்தத்தோட அந்தத் தூண் பிளந்து அங்க
பார்த்தாகோரமான, கோபமான சிங்க முகத்தோட மனுஷ உடம்போட 
பயங்கரமான ஒரு உருவம் , ஆக்ரோஷமா வாய் பிளந்து சத்தம் போட்டு 
இரணியகசிபுவை  வாரித் தூக்கி வாசப்படில , மடில வெச்சு, கை நகத்தால் 
வயித்தக் கீறி வந்த ரத்தத்த குடிச்சு, அப்புறம் என்னாச்சு.? இரணியகசிபு 
செத்துப்போனான்..

       அவனுக்கு கெடச்ச வரமும் பொய்யாகலை.  வீட்டிலும் வெளியிலும் 
இல்லாம வாசப்படிலும், தண்ணிலயும் இல்லை வானத்திலும் இல்லை;
நரசிம்மத்தோட மடிலயும்,தேவர்களோ, மனுஷாளோ, மிருகமோ, பறவையோ இல்லாம, சிங்கமுகங்கொண்ட மனுஷ உடம்போட உள்ளதாலும், 
ஆயுதங்களில்லாம கை நகங்களாலயும், பகலோ இரவோ இல்லாத 
சந்தியா காலத்தில் இரணியகசிபு  மாண்டான். 

        பின்ன என்ன? நரசிம்ம அவதாரம் எடுத்த திருமால் ,பிரஹலாதனுக்கு
ஆசிர்வாதம் செய்து வைகுண்டம் போனார்.
 =================================================


      (இந்தக் கதையை பலமுறை சொல்லக் கேட்டு மகிழ்வார்கள் எங்கள்
வீட்டுக் குழந்தைகள். ஒரு முறை உறவுக்கார சிறுவன் லீவு நாட்களில் 
நாக்பூர் சென்றிருக்கிறான். அங்கிருந்த அவனிலும் ஆறேழு வயது 
மூத்த சிறுவனிடம் இந்தக் கதையை சொல்லி இருக்கிறான். அந்த 
சிறுவனுக்கு இரணிய கசிபுவின் பெயரை இரண்ய காஷ்யப் என்று 
சொல்லிக் கொடுத்திருப்பார்கள் போல.  என் தாத்தா இரணியகசிபு 
என்றுதான்  சொல்லுவார் அதுதான் சரி என்று சண்டைக்கே போய் 
விட்டானாம்.! இன்னுமொரு குறிப்பு. குழந்தைகளுக்குக் கதை சொல்லும்
போது எப்போதும் ஒரே மாதிரியாய்த்தான் சொல்ல வேண்டும்.எந்த
சந்தேகமும் வராமல் இருக்க நான் டேப் எடுத்து சொன்னமாதிரியே 
சப்தங்களும் ஏற்ற  இறக்கங்களும்  இருக்கும்.)
 


 



    
 




 







 

Wednesday, May 25, 2011

பரிகாரம்

பரிகாரம்.
------------
                 சில நேரங்களில்  ஆர்வக்கோளாரால் எதை எதையோ
எழுதி விடுகிறோம்(றேன்) பிறகு ஆர அமர ஆலோசித்தால்
அதை எழுதி இருக்கவேண்டாமோ என்று தோன்றுகிறது.
“இப்படியுமா” என்ற பதிவைத்தான் கூறுகிறேன். இதனால்
யாருக்கு என்ன லாபம். வக்கிரங்களை வெளிச்சம் போட்டுக்
காட்டியதால் என்ன பிரயோசனம்.? எழுதும் முன்பே என்
மனம் அலைக்கழிந்தது என் பதிவைப் பார்த்தாலேயே தெரியும்.
மேலும் டாக்டர் கந்தசாமியின் பதிவு படித்த பிறகு  என் தவறு
மிகவும் உறைக்க ஆரம்பித்தது. அந்த பதிவினைப் படித்தவர்கள்
அதிகம். கருத்து பகிர்ந்தவர் வெகு குறைவு. இதிலிருந்து நான் கற்றுக்கொண்டது  இனிமேல் இந்த மாதிரியான சென்சேஷனல்
பதிவுகள் எனக்கு உகந்ததல்ல என்பதுதான். அவசரப்பட்டு பதிவு
போட்டதற்கு வருந்துகிறேன். அதற்கு பரிகாரம் இந்தப் பதிவு.

Monday, May 23, 2011

இப்படியுமா.....? கதை அல்ல நிஜம்.

இப்படியுமா.....?  கதை அல்ல நிஜம்..
================================

       உறவுகள் பற்றியும், அதன் திரிபுகள்  பற்றியும் ,
       யார் யாரோ, என்னவெல்லாமோ எழுதி விட்டார்கள்.
       நானும் எழுதி இருக்கிறேன்.
 
உணர்வுகள் திரிந்து ஏற்படும் உறவுகள் -மனசாட்சி
துணையுடன் நியாயப்படுத்தப்படும் செயல்கள்,
நிகழ்வுகளைத் தடுக்க இயலாத ,காரணகாரியங்களை
அலசி ஆராயும் மனோபாவங்கள் எல்லாம் மீற

        எண்ணத்தறியில்  ஏதேதோ எண்ணங்கள் 
       முன்னுக்குப்பின் முரணாய்  முற்றும்  கற்பனையாய் 
       சில சமயம் பாழாய் பழம் பொய்யாய்,பகற்கனவாய், 
       சிலநேரம் எதிர்கொள்ள வொண்ணா சீற்றத்துடன் 
       நம்பவே முடியாத நிகழ்வுகள் கண் முன்னே விரிகிறது.

        உள்ளத்து உணர்ச்சிகளுக்கு, வார்த்தைகளில்
       உயிரூட்டினால் உண்மையில் ஜொலிக்கும்
       நிஜங்களில் கற்பனை கலந்தால்  வீரியம் குறைந்து,
       உண்மை நிலை மங்கிப் போகாதோ.

இதுவும் அயல்தேசத்தில் நடந்த இந்தியக் கதை அல்ல,
நிஜம்.உணரப்பட வேண்டிய உண்மைகள் இருப்பதால்
பகிர்ந்து  கொள்கிறேன்.

       மணம் முடித்து மனைவி குழந்தையுடன்
       வசிக்கும் தன் மகனைப் பார்க்கச் சென்ற
       பெரியவர் அவனைச் சிறையில் சந்தித்தார்.
       மாமனாரைப் பார்க்க மருமகள் விரும்பவில்லை.
       எங்களுக்குள் சிறு பிணக்கம், பெரிது படுத்த
       வேண்டாம், வெளியில் வருவேன் சடுதியில்
       கவலை வேண்டாம் என்று உறுதி அளித்த
       மகன் சொல் கேட்டு ஊர் திரும்பி வீடு
       சேரும் முன் வந்தது மகன் தன்னைத்தானே
       தூக்கிலிட்டு  மாய்த்துக் கொண்டான் என்ற
       பேரிடிச் செய்திஒன்று.

மறுபடியும் பறந்து சென்று, விசாரித்து அறிந்தால்
கிடைத்தது அதனினும் பெரிய பேரிடிச் செய்தி.

        பெற்ற மகளிடம் வன்புணர்ச்சி கொண்டான் கணவன்
        என்ற மனைவியின் வாக்குமூலம் பெற்றுத்தர
        இருக்கும் தண்டனையிலிருந்து தப்பிக்க அவன்
        தேர்ந்தெடுத்த வழியே தற்கொலை.
-----------------------------------------------------------------------
      

           ( வக்கிர உணர்வுகளின் எல்லை மீறிய வெளிப்பாடு 
                இப்படியுமா.. என்ற ஆதங்கத்தில் பகிர்ந்தது. )






..



,
      .


 
 





      


Sunday, May 22, 2011

அவதாரக் கதை...பாகம் 3 .......பன்றியாக..

அவதாரக் கதை--பாகம் 3...பனறியாக......
...........................................................................

ஜயன், விஜயன்  என்றிருவர் வைகுண்டக் காவலாளிகள
கடமை தவறாது பணி புரிந்தவருக்கு ஆணவம் அதிகரிக்க,
ஒரு நாள் திருமகளுக்கும் அனுமதி தர மறுத்தவர்,
மாலே போற்றும் சனகாதி முனிவரையும் தடுத்ததில்
சினந்தறியாத  முனிவரும் சினம் கொண்டு "பாமரருக்கு
ஏற்படும் ஆணவம் கொண்ட நீங்கள் பூமியில் பிறக்கக்
கடவீர்,"  என்றே சாபமிட்டார்.


திருமகளையும் முனிவரையும் அனுமதியாத காவலர்
பூமியில் பிறப்பதே நன்று என்று திருமாலும் எண்ணினார்.


அகந்தை அகன்று ஆழ்ந்த வருத்தத்தில் சாபவிமோசனம்
வேண்டியவருக்கு ,கருணாமூர்த்தி முனிவர்கள் ஒப்புதலுடன்
பக்தி பூண்டு நூறு பிறவி எடுத்து மீளவா இல்லை விரோதியாக
எதிர்த்து, மூன்று பிறவி எடுத்து மீளவா என்று வினவினார்.

நூறு பிறவி எடுத்து மீள நாட்படும் என்பதால்
மூன்றே பிறவியில் எதிரியாக பிறக்கவே விருப்பம்
தெரிவித்தவர் வேண்டுதல் ஒன்றைக் கூடவே வைத்தனர்.
எதிரியாக பிறப்பெடுத்தாலும் பரந்தாமன் கையால்தான்
மரணம் என்ற வரத்தைப் பெற்றனர்.

சாபம் அனுபவிக்க ,காஷ்யப முனிவருக்கு இரணியாட்சகன்
இரணியன் என்று இரட்டைப் பிறவிகளாக பூமியில் பிறந்தனர்.

மனிதராலும் தேவராலும் அழியக்கூடாத வரத்தை
நீண்டகால தவப்பயனாகப் பெற்றான் இரணியாட்சகன் .
பெற்ற வரம் கொண்டு பூவுலகை வென்றான், தேவலோகம்
வெல்ல வந்தவனைக் கண்டஞ்சி கடலடியில் மறைந்தான்
இந்திரன். தேவருக்கு நன்மை தரும் பூமிப் பந்தை
கடலுக்குள் அமிழ்த்தி அடியில் மறைத்து விட்டான்.

உலகம் மறைந்தது கண்டு மயங்கிய தேவர்களுடன்
நான்முகனும் படைப்புத் தொழில் செய்ய உலகமில்லையே
என்று திருமாலிடம் முறையிட, "அஞ்சேல் " என்று அபயம்
அளித்து பின் விட்ட மூச்சுக் காற்றிலிருந்து வெளிப்பட்ட
பன்றி ஒன்று சில கணத்தில் பெருங்கரியை விட வளர்ச்சி பெற்றது.

கடலுக்கடியில் சென்ற பன்றி பூமிப் பந்தை தன கோரைப்
பற்களில் தூக்கி வரக் கண்ட இரணியாட்சகன்  கோபமுற்று
தன கதாயுதத்தால் பன்றி மீது வீச ஓங்க , அதனை தன முன்
காலால் உதைத்த பன்றியினை, தன கைகளால் பிடித்துக்
கொல்ல வந்தவனை தன கோரைப் பற்களால் கடித்துக்
குதறிக் கொன்றது.

பன்றி வடிவெடுத்த பரந்தாமன் உலகை மீட்டுக் கொடுக்க
தேவர்களும் மகிழ்ந்து துதி பாடி வணங்கினர்.
----------------------------------------------------------------------------
              ( அடுத்த அவதாரக் கதை சற்று வித்தியாசமாகக் 
                     கூறப்படும்  )        
           












Tuesday, May 17, 2011

பெண்கள் முன்னேற்றம்.....கதையல்ல...நிஜம்.

பெண்கள்  முன்னேற்றம்...கதையல்ல..நிஜம்.
--------------------------------------------------------------
இவனும் அவனும் பால்ய கால நண்பர்கள் 
பள்ளியில் ஒன்றாய் படித்து வந்தவர். 
சந்தித்துக் கொண்டனர் அயல்தேச அமெரிக்காவில்.
நலம் விசாரித்து நன்றாக அளவளாவினர். 
இவன் தகவல் நுட்பம் படித்துத் தேறி நல்லதொரு 
வேலையில் நாலு காசு நலமாக சம்பாதிக்கிறான். 
அவன் பொறியியல் பட்டதாரி, ஒரு தொழிற்கூடத்தில் 
பார்ப்பவர் பொறாமைப்படும் மேலாளர் பதவி. 

         பேச்சு வளர்ந்து, திசை மாறி குடும்பம் பற்றிய 
         தகவல்கள் அறிய அவன் ஆவல் கொண்டான்.

இவனுக்கோ  தன கதையை  சொல்ல முதலில் தயக்கம். 
சில பல உந்துதல் பிறகு எடுத்துரைத்தான். 
பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணை இவன் 
பார்த்து வந்ததும், அவளுக்கும் விருப்பம் என அறிந்து 
மகிழ்ந்ததும் ,பின்னர் மணமுடிக்கப் போன நாளில் ,
நடந்த அவமானமும், அவலமும் நிறைந்த நிகழ்வை 
தட்டுத்  தடுமாறி , திக்கித் திணறி எடுத்துரைத்தான். 

         விடிந்தால் திருமணம் என்ற நிலையில் 
         மணமகள் எவனுடனோ ஓடிப்போய்விட்டாள்.

இவன் சொல்லி முடித்ததும் அவன் வாய் விட்டுச் 
சிரித்தான் .சிரித்து முடித்துப் பின்னர் கூறினான்.

          இவனுக்கு நேர்ந்தது அவமானமல்ல. அதில் 
         அகப்படாமல் தப்பித்த கதைதான் என்றான்.

அவன் கதையை அவன் கூறக் கேட்டான் இவன். 
அவன் மணமுடித்துக் கூட வந்தவள் உறவு, 
அமெரிக்க மண்ணில் கால் பாதிக்கும் வரைதான் .
கூட்டிச் சென்று அவளுடன் குடும்பம் நடத்த
விமான நிலையத்தில்  அவள் காதலன்  காத்திருந்தான்.

          பின் ஏன் அவள் மணமுடித்தாள்  என்றிவன் கேட்க
          அவன்  சொன்னான்; அவனை மணந்தது மூலம்
          கிடைத்த "விசா" தான் ,அமெரிக்க மண்ணில் கால்
          வைக்க அவளுக்குத் தேவை .புது வாழ்வு நடத்த
           பழைய காதலன் காத்திருந்தான்.

இருவர் கதைகளிலும் கண்ட பெண்கள் பற்றி
அறிந்த பின்னர் , யார் சொல்ல முடியும்  இந்தியப்
பெண்கள் முன்னேற வில்லை என்று .
---------------------------------------------------------------------









 

Wednesday, May 11, 2011

அனுபவங்கள் ---அரக்கோண நாட்கள்

அனுபவங்கள் --அரக்கோண நாட்கள்.  
----------------------------------------------------


             (நினைவலைகள் ....அனுபவங்கள்    என்ற தலைப்பில் நான் 
                    எழுதி வரும் என் சுய சரிதையிலிருந்து சில பக்கங்கள்.)

                    (சிறுகதை போல் படிக்கலாம் என்பதால் பதிவாக இடுகிறேன்.
                             புனைவேதும் இல்லை. )



   அரக்கோணத்துக்கு நாங்கள் வந்தபோது, எனக்கு வயது ஆறாக இருக்க வேண்டும்       . அரக்கோணத்தில் நாங்கள் நான்கு வருடங்கள் இருந்தோம். மொத்தமாக மூன்று வீடுகளில் இருந்திருக்கிறோம். தருமராஜா கோவில் அருகே ஒரு வீடு. எங்கள் வீட்டிற்கு அருகே ஒரு டூரிங் கொட்டகை இருந்தது. வீட்டில் இருந்து கொண்டே சினிமா வசனங்களையும் பாடல்களையும் கேட்கலாம். எங்கள் வீட்டருகிலேயே டவுன் ஹால் பள்ளியின் தலைமை ஆசிரியர் வீடும் இருந்ததாக நினைவு. இரவு நேரங்களில் அவர் வீட்டிலிருந்து அவர் குடித்து விட்டு வந்து போடும் சப்தங்கள் கேட்கும். எங்கள் தந்தையிடம் அவருக்கு மிகவும் மரியாதை கலந்த பயம் உண்டு.  .

       ட்வுன் ஹால் பள்ளியிலேதான் நான் முதன் முதலில் மூன்றாவது வகுப்பில் சேர்ந்திருக்கவேண்டும். எனக்கு முதல் இரண்டு வகுப்புகள் படிக்க பள்ளிக்கு சென்றதே நினைவில்லை. ஆறாம் வகுப்பில் படிக்கும்போது  எனக்கும் ராஜிக்கும் டைஃபாய்ட் வந்து  சென்னை ராயப்பேட்டா  ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்தார்கள். ஏற்கெனவே என் தாயாருக்கு டைஃபாய்ட் வந்து குணமாகிற நிலையில் எங்களுக்கும்  வந்ததால், நாங்கள் அங்கேயே இருந்தால் அவர்களுக்கு மறுபடியும் வர வாய்ப்பு இருந்ததால், அப்படி வந்தால் அது மிகவும் கவலைக்கிடம் தரும் என்பதால், எங்களை சென்னையில்  சேர்த்தார்கள். குணமாகி வந்த நிலையில், எங்கள் தந்தைக்கு அலுவலகத்தில் , பூனாவுக்கு  மாற்றினார்கள் .எங்கள் படிப்பு பாதிக்கப்பட்டு, நாங்கள் பாலக்காட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டோம். இடைப்பட்ட இந்த நான்கு ஆண்டுகளின்  என் பிள்ளைப்பிராய  நினைவுகள் எல்லாம்  நினைவிலாடுகின்றன.

       நான் ஏற்கெனவே சொன்னபடி, வீட்டின் அருகே இருந்த டூரிங் கொட்டகையின் பின் புறம் அமர்ந்து, நிழலாகப் படங்களைப் பார்ப்போம். நன்றாகக் கேட்போம். அந்த கொட்டகையைச் சுற்றி காவலர்கள் நடந்து கொண்டிருப்பார்கள். யாரும் அத்து மீறி, டிக்கட் இல்லாமல், நுழையக்கூடாது என்பதற்காக. ஒரு நாள் என் தம்பி சோமா காவலாட்களுக்கு “டிமிக்கி”  கொடுத்து, உள்ளே நுழைந்து விட்டான். இரவு வீட்டில் அவனைத் தேட, அவன் டூரிங் கொட்டகைக்குள் நுழைந்திருக்கலாம் என்று தோன்றியது. படம் முடியாமல் வெளியே வர முடியாது. அவன் அங்குதான் இருக்கிறான் என்று நிச்சயமுமில்லை. அப்போது ஆச்சு அண்ணா உள்ளே போய்ப் பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லிக் கிளம்பினான். அவனும் கொட்டகைக்குள் புகுந்து படம் பார்க்க முயற்சி செய்வதாகக் கூறி அவனை உள்ளே அநுமதிக்க மறுத்துவிட்டார்கள் அப்போது அவனும் சிறிய பையன் தானே. ஆச்சு அண்ணா தன் தம்பியைத் தேடித்தான் போவதாகவும்  படம் பார்க்க அல்ல என்றும் வாதாடினார். அவர்கள் அப்போதும் விடவில்லை. அப்போது ஆச்சு அண்ணா தன் சட்டையைக் கழற்றிக் கொடுத்து, பணயமாக வைத்துக் கொள்ளுமாறு  கூறி, உள்ளே சென்று  சோமாவுடன்  திரும்பி வந்து தன் சட்டையைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். அது அப்போது எனக்கு பெரிய  வீரச்செயலாகப்பட்டது. .       

       அருகே இருக்கும் தர்மராஜா கோயிலில் ஒவ்வொரு வருஷமும் திருவிழா நடக்கும். பத்து நாட்கள் மஹாபாரதக்கதை தெருக்கூத்து முறையில் நடத்தப்படும். கடைசி நாளன்று துரியோதனனை பீமன் கொல்வது நடத்திக்காட்டப்படும்.. துரியோதனனின் உருவம் மண்ணால் சிலைபோல் தரையில் வடிவமைக் கப்பட்டிருக்கும். அதன் தொடையினுள்ளே ஒரு மண் குடத்தில், சென்னீர் வைத்து மூடப்பட்டிருக்கும்.. பீமன் வேடமணிந்தவன், வசனம் பேசிப், பாடிக்கொண்டே வந்து iகிருஷ்ணனின் சைகைக்குப் பிறகு, தன்னுடைய கதையால் துரியோதனனின் தொடையில் அடிக்க, ரத்தம் பீறிடுவது  போலவும், திரௌபதி அதனை எடுத்துத் தன் கூந்தலில் தடவி, தன் தலை முடியைக் கட்டுவது  காணும்போது, பிரமிப்பாக இருக்கும்.. நம்முடைய பாரம்பரிய தெருக்கூத்துகளை கண்டு களித்த அநுபவம், நினைவுகளை அசை போடும்போது நிறைவைத் தருகிறது.

       அதன் பிற்கு தீ மிதி நடைபெறும். நிறைய கரி விறகுகள் முதலியவற்றால் சுமார் நாற்பது, ஐம்பது அடி நீளமும், இருபது முப்பது அடி அகலமுமாக உள்ள பெரிய நெருப்புப் படுக்கை உருவாக்கப்படும். அதைச் சுற்றி சவுக்குமரக் கட்டைகளைக் கொண்டு வேலி அமைக்கப்படும். தீ மிதி நேரத்தில் எல்லோரும் சுற்றியிருந்து  பார்ப்பதற்காகவும் விபத்து நேராமல் இருக்கவும் இந்த ஏற்பாடு. ஒரு சிறிய பையனாக இதனைக் காணும் ஆர்வத்தில், அந்த சவுக்கு வேலிக்கு  அருகிலேயே இடம் பிடித்து  காத்திருப்போம். ஒரு முறை கூட்டம் நெருக்கியடித்து, முன் தள்ளி, சவுக்குக் கட்டையின் ஒரு கூரான பகுதி என் தொடையின் பின் புறத்தில் நன்றாகக் குத்தி விட காயம் அதிகமாகி ரத்தம் பீரிட்டது. வீட்டில் சொன்னால் திட்டுவார்கள் , அடியும் கிடைக்கலாம். ஆழமான காயத்துக்குள் தெருவில் இருந்த சில காகிதங்களைக் கிழித்து, எச்சிலால் ஈரப்படுத்தி, அதற்குள் அமுக்கி விட்டேன். வலி அதிகமாக இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் யாருக்கும் தெரியாமல் இரண்டு நாள் கழித்து விட்டேன். மூன்றாம் நாள் என்னைக் குளிப்பாட்ட வந்த என் தாய்க்குத் தெரிந்து திட்டு வாங்கியது எல்லாம் பசுமையான நினைவுகள். அந்தக் காயத்தின் வடுதான், என் பள்ளி இறுதிச் சான்றிதழில் என்னுடைய அடையாளங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.               ..   
             இப்போதைய என் சம வயதுக்காரர்களில் மஹாத்மா காந்தியடிகளை நேரில்  பார்த்தவர்கள் நான் அறிந்த வரையில் சொற்பமே. எனக்கு அந்த பாக்கியம் கிடைத்தது. மெட்ராசுக்கு மஹாத்மா காந்தி வருகை தருவது தெரிந்ததும் அப்பாவுக்கு அவரைப் பார்க்க ஆவல். அதற்காகவே அரக்கோணத்திலிருந்து மெட்ராஸ் சென்றார். அப்போது அவர் என்னையும் கூட்டிக் கொண்டு செல்ல வாழ்க்கையின் ஒரு அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மஹாத்மாவை சுமார் இருபது முப்பது அடி தூரத்தில் இருந்து தரிசித்தோம். அவரிடம் கூட்டத்தில் இருந்த யாரோ என்னவோ கேட்க, “சும்மா உக்காரப்பாஎன்று காந்திஜி தமிழில் கூறியது நன்றாக நினைவில் உள்ளது. இப்போதும் அந்த நிகழ்ச்சியை விபு, டாலியிடம் கூறிப் பெருமையடைவதுண்டு.

      மஹாத்மா காந்தியின் நினைவு வரும்போது, அவர் சுட்டுக் கொல்லப்பட்ட நாள் நன்றாக நினைவுக்கு வருகிறது.நாங்கள் மாலையில் தெருவில் “பேந்தாஎன்ற விளையாட்டு ஆடிக்கொண்டிருந்தோம். அப்போது தாசில்தார் தெருவில் இருந்த ஒரு வீட்டில் வசித்து வந்தோம். இரண்டு வீடுகள் தள்ளி இருந்த வீடு ஒரு சினிமா கொட்டகைக் காரருடையது. அவர் வீட்டில் இருந்த ரேடியோவிலிருந்து வந்த செய்தி சிறு பிள்ளைகளான எங்களுக்கு திடுக்கிடலாகக் கேட்டது. காந்தி இறந்த செய்தியை தெரு முழுக்கக் கூவித் தெரியப்படுத்தினோம். அன்று இரவு எங்கள் வீட்டிலேயே சாவு விழுந்த மாதிரியான ஒரு சூழ்நிலை நிலவியது. அப்பா அழுததும்,வீட்டில் அம்மாவின் சித்தி “மேமை”,(வீட்டில் உதவியாக இருந்தவர்) மாடியில் சென்று தேம்பித் தேம்பி அழுததும் இப்போது நினைக்கும்போது, காந்தியின் செல்வாக்கும் பேரும் பெருமையும் எப்படி மிகச்சாதாரணமான மக்களையும் வெகுவாக பாதித்தது என்பது புரிகிறது. காந்திஜியின் வாழ்க்கையின் பாதிப்பு அந்தக் காலத்தில் இல்லாதவர்கள் இருந்திருப்பது  மிகவும் குறைவாக இருக்கும்.

      அடுத்த வீட்டு டூரிங் டாக்கீஸ்காரர் ஒரு முறை எங்களைப் படம் பார்க்கக் கூப்பிட்டு (சிறுவர்களை) அனுப்பினார். எங்களுக்கு சேரில்  இருக்க அநுமதி இருந்தாலும் நாங்கள் தரையில் அமர்ந்து பார்த்ததாகத்தான் நினைவு. அப்போதே எது நமக்கு நிலையாகக் கிடைக்குமோ அதுவே போதும் என்ற எண்ணம் வந்திருக்குமோ என்னவோ..!அவர் வீட்டுக்கு காந்தி குல்லாய் அணிந்தவர்கள் நிறைய பேர் வருவார்கள் அவர்களில் பிற்பாடு பிரபலமாக அறியப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணனும் ஒருவர், என்று என் மனதில் எங்கோ தோன்றுகிறது.

     அரக்கோணத்தில் இருந்தபோது பள்ளிக்குப் புத்தகம் இல்லாமல் போய் வகுப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டதும், அங்குள்ள ஆசிரிய ஆசிரியர்கள் “துரை வீட்டுப் பிள்ளைகளே “ இப்படிச் செய்யலாமா, என்று குறை கூறியதும் நினைவை விட்டு நீங்கவில்லை. அப்பா அலுவலகத்தில் படிப்படியாக முன்னேறி லோயர் டிவிஷன் கிளார்க், அப்பர் டிவிஷன் கிளார்க், ஹெட் கிளார்க், சப் டிவிஷனல் ஆஃபீசர் என்று பொறுப்பாக இருந்திருக்கிறார். அந்த காலத்தில் இருந்த நிலையில் அவருடைய பதவிகள் அவரை “ துரைகளுக்கு “ சமமாக மதிக்க வைத்தது. அப்படி இருந்தவர், சப் டிவிஷன் ஆஃபீசரிலிருந்து, லோயர் டிவிஷன் கிளார்க்காக பதவி இறக்கப்பட்டு, தண்டிக்கப்பட்டது அவரை மிகவும் பாதித்து விட்டது. 

  அம்மாவின் ஒரு ஒன்ருவிட்ட மாமன் சேது என்று பெயர்.அப்பாவின் 
சிபாரிசால் அப்பாவின் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தவர்.அவர் மேல
ஏதோ பழி ஏற்படுத்தப்பட்டு அவருக்கு உதவியாக மனு எழுதுவதிலும் ,மேல் 
முறையீடு செய்வதிலும் அப்பா உதவி இருக்கிறார்.அது அப்பாவின் மேல்
அதிகாரிக்கு பாதிப்பாக முடியலாம் என்ற நிலையில் ,அவர் சேதுவின் மேல்
இருந்த பழியில் அப்பாவுக்கும் பங்குண்டு என்று நடவடிக்கை எடுத்ததால் 
வேலையில் பதவி இறக்கம் அடைந்தார். தகாத நடவடிக்கைகளில் அவர் 
சம்பாதிக்கவில்லை என்று எங்களுக்குத் தெரியும். ஏனென்றால் அப்படி 
இருந்திருந்தால் எங்கள் வாழ்க்கையின் நிலைமை அவ்வளவு சரிந்திருக்கத் 
தேவையில்லை. ஒரு முறை நான் பிற்காலத்தில் அவரிடம் கேட்டபோது 
அவர் மேல் எந்தக் குறையும் இல்லை என்று சொன்னார். எனக்கு நன்றாக 
விவரம் தெரிந்து நிலைமையை முழுவதுமாகப் புரிந்துகொள்ளும் முன் 
அவர் அவர் போய்ச்சேர்ந்து விட்டார். அவர் மீது பழி இல்லை என்றும் 
குற்றமற்றவர் என்றும் வாதாடி நிரூபிக்க போதிய பணமில்லாமையேஅவர்
குற்றமற்றவர் என்று எங்களுக்குப் புரிய வைத்தது. இருந்தாலும் ஆறாத 
மனப்புண்ணும் வீண் பழியும் சேர்ந்து அவருடைய வாழ்வுக்கே ஊறு 
விளைந்தது அரக்கோண வாழ்க்கையில்தான். 

    அரக்கோணத்தில் இருந்தபோது,அப்பாவின் தம்பி ராமச்சந்திரன் வேலை 
தேடி அங்கு வந்தார். அவருக்குக் கண் பார்வை குறைவாக இருந்ததால் 
பெரிய தடிமனான கண்ணாடி அணிந்திருப்பார். லிப்டன் டீ கம்பனியில் டீ 
போட்டுக் காண்பிக்கும் டெமான்ஸ்ட்ரேட்டர் ஆக தெருத்தெருவாய்ப்  போய் 
வீடுகளில் டீ போடும் முறையை விளக்கிக் காண்பிக்கவேண்டும்.ஒருஸ்டவ் 
கெட்டில் போன்றசாதனங்களுடன் திரிய வேண்டும் பாவம், கண் பார்வை 
சரியாக இல்லாததால் ஒரு முறை கையில் சுடுநீர் பட்டு வெந்து வேதனைப் 
பட்டார்.அத்துடன் அந்த வேலையையும் விட்டார். பிற்காலத்தில் ஒரு 
மருந்துக் கம்பனி ஏஜென்ஸி எடுத்து நிறைய சம்பாதித்து நல்ல நிலையில் 
வாழ்ந்தார். அவரை என் பேரன் விபுவுடைய சோறூட்டுக்கு குருவாயூர்
சென்றபோது அவர் வீட்டில் சந்தித்தோம். கண்பார்வை முழுவதுமாக 
இழந்திருந்தார். அவர் சொன்ன ஒரு வார்த்தை என் மனசை நெகிழச்செய்தது. 
கண்பார்வை முற்றிலும் போன பிறகு திருமகளின் கடாட்சம் அவர் மீது 
பட்டதாகக் கூறினார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு முறை அவரை 
பெங்களூரில் என் அத்தை மகளின் பெண் கலியாணத்தில் பார்த்தேன். 
உறவுகளை அடிக்கடி சந்திக்கவோ, பேசி மகிழவோ முடியாத ஒரு சூழ்லில் 
வாழ்ந்துவிட்டோம். அரக்கோண நினைவுக்ள் தடம்புரண்டு வேறெங்கோ 
கொண்டு வந்து விட்டது. 

    அரக்கோணத்தில் இருந்தபோது, அம்மாவின் சித்தி எங்களுடன்
இருந்தார். கூடவே வேலைக்கு ஒரு பெண்ணும் இருந்தாள்.மேமைக்கு 
சோமாவின்மேல் பிரியம் அதிகம்.அவனும் அவர்களை நேசித்தான். 
அவர்கள்தான் எங்களுக்கு நம்முடைய இதிகாசங்களை அறிமுகம் 
செய்தவர். அவர் சொல்லக்கேட்டுதான் ராமாயணம் மஹாபாரதம் 
போன்ற கதைகளின் சாரம் புரிய ஆரம்பித்தது. 

அந்த மேமையை அம்மா எங்கள் வீட்டில் வேலை செய்பவர் என்று 
எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி இருந்தார் நாயராகப் பிறந்த அவர் 
ஒரு பிராமணனுக்கு வாழ்க்கைப்பட்டு, பிராமணப்பெண் போலவே 
அடையாளப் படுத்திக்கொண்டு வாழ்ந்தார். அவர்கள் தாய் மொழி 
மலயாளம். எங்கள் வீட்டில் தமிழில்தான் பேசுவோம். அம்மா 
உலகிற்கு தன்னை ஒரு பிராமணப் பெண்ணாகவே காட்டிக்கொண்டார். 
அப்பாவும் அவரை ராஜம் என்று பெயரிட்டுக் கூப்பிடுவார். என்ன 
இருந்தாலும் இப்போது நினைக்கும்போது அம்மா நடந்து கொண்ட 
முறை,தன் சொந்த சித்தியை வேலைக்காரி என்று அறிமுகப்படுத்தி 
வாழ்ந்தது நிரடுகிறது.இடம் பொருள் அந்தஸ்து மக்களை எந்த 
அளவுக்கு மாற்றும் என்பதை பிற்காலத்தில் உணர வைத்த அநுபவங்கள் 
அவை.அப்பா இறந்தபோது மறுபடியும் அதே சித்தியுடன் அவர்கள் 
நிழலில் வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.மேலும் அம்மாவுக்கு 
உறவு என்று சொல்லிக் கொள்ளவோ, சென்று வரவோ வேறு போக்கிடமே 
இல்லை என்பதும் நிதர்சனம். அந்தக் கால சூழலில் அப்பாவின் மறுமணம் 
அவர்களை அப்படி வாழ வைத்ததோ தெரியவில்லை. 

அரக்கோணத்தில் நாங்கள் இருந்தது சுமார் நான்கு வருடங்கள்.வாழ்வின் 
சுமைகளோ அர்த்தங்களோ தெரியாமல் வாழ்ந்த வாழ்க்கை.ஆனால் 
அந்த நாட்களை நான் உலகத்தை மெள்ள கற்க ஆரம்பித்த காலமாகவே 
கருதுகிறேன்.சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பும் சுதந்திரம் கிடைதத பிறகும்
ஆன காலமது.கடைக்குப் போவது, பள்ளிக்குப் போவது விளையாடுவது 
என்றே கழிந்த காலம். சுதந்திர உணர்வோடு, பள்ளிகளில் காந்தியின் நூல் 
நூற்பு, மற்றும் சிறிய கைத்தொழில் செய்ய முனைப்பு போன்ற திட்டங்கள் 
அமலில் இருந்தன. தக்ளியில் நூல் நூற்கும் வகுப்பு இருந்தது.பனைஓலை 
கொண்டு பாய் முடைதல் கற்றுக்கொடுக்கப்பட்டது. என் தாயாரின் ஒரு 
பிரசவத்தின்போது அவர்கள் அங்கு வலியில் இருக்க நான் வீட்டில் பாய் 
முடைவதில் இருந்தபோது கண்டிக்கப் பட்டிருக்கிறேன். சாயங்காலம் 
முழுவதும் விளையாட்டுதான்.சடுகுடு விளையாட்டு நினைவாகவே 
உறங்குவேன். யாராவது எழுப்பினால் “பலீஞ்சடுகுடு” என்று விளையாட 
ஆரம்பித்து விடுவேன். இதன் கூடவே கோலி, பம்பரம் பேந்தா, போன்ற
விளையாட்டுகளும் உண்டு,அரக்கோணம் ரெயில்வே தொழிற்சாலையில் 
பணியில் இருந்த ஒருவர், தொழிற்சாலையில் இருந்து நல்ல மரத்தில் 
பம்பரம் கடைந்து தருவார். தாசில்தார் தெருவில் இருந்தபோது, அருகே 
ரயில் தண்டவாளங்கள் இருக்கும். அதன்மெல் ரயில் வரும் முன் சோடா 
மூடியை வைத்து தட்டையாக்கி, அதில் இரு துளைகள் செய்து, நூல் 
கோர்த்து இழுத்துப்பிடித்து சுற்றி விஷ்ணுவின் சக்கரம் என்று நினைத்து 
விளையாடுவோம். காற்றாடி செய்வதும் விடுவதும் கற்றோம். ஆனால் 
மாஞசா தேய்க்க மட்டும் பயம் .இவற்றையெல்லாம் நினைவு கூறும்போது,
தற்காலக் குழந்தைகள் இந்த நாட்டு விளையாட்டுகளைக் கற்கவோ,
அனுபவிக்கவோ முடியாமல் இருக்கிறார்களே என்ற ஆதங்கமும் 
கூடுகிறது. கில்லி தாண்டு, பச்சைக் குதிரை ஏற்றம்,கிளிதட்டு, அப்பப்பா..
அந்தகால விளையாட்டுகளே சுவாரசியம். முக்கியமாக ஒரு செலவும் 
இல்லாத ஆரோக்கியமான விளையாட்டுகள். 

  உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு வந்துஎல்லாப் பொருட்களையும் 
ரேஷனில்தான் வாங்க வேண்டிய கட்டாயம் இருந்தது. விலைவாசி 
ஒரேயடியாக திடீரென்று அதிகரித்தது. அரிசி ஒரு படி ஒரு ரூபாய் என்று 
(ஒரு படி சுமார் இரண்டு கிலோ இருக்கலாம்.)விற்றபோது எல்லோரும் 
கவலைப்பட்டு விவாதித்துக்கொண்டது நினைவுக்கு வருகிறது. சினிமாப் 
படங்கள் வர ஆரம்பித்து பெரிய பொழுது போக்காக மாற அர்ம்பித்திருந்தது.
சிவகவி,காத்தவராயன்,ஆர்யமாலா, ஸ்ரீவள்ளி,நாம் இருவர்,ஹரிதாஸ்,போன்ற
ஏராளமான படங்கள்பார்த்திருக்கிறோம்,கேட்டிருக்கிறோம்.தியாகராஜ பாகவதர், 
ஹொன்னப்பா பாகவதர், பி.யு.சின்னப்பா, என்.எஸ் கிருஷ்ணன்.டி.ஏ.மதுரம். 
டி.ஆர்.மஹாலிங்கம்.போன்றோர், எங்கள் சிறுவயதிலேயே,பிரபலமானவர்கள். 
தியாகராஜ பாகவதரும், என்.எஸ். கிருஷ்ணனும், லக்‌ஷ்மிகாந்தன் கொலை 
வழக்கில் சிக்கிக் கொள்ள அந்த வழக்கு விசாரணையை பார்ப்பதற்கு, ஒரு 
முறை அப்பா, அரக்கோணத்திலிருந்து மெட்ராஸுக்கு சென்றதும் நினைவில் 
வருகிறது. அப்பாவுடைய ஆசைகள், எண்ணங்கள்என்னவெல்லாம் 
இருந்திருக்கும், என்று இப்போது யூகிக்க முடிவதில்லை. ஒரு கதாநாயகனாக, 
வில்லனாக, வெறும் சாதாரணமனிதனாக என்று பல முகங்கள் இருந்தருக்க
வேண்டும். பலப்பல நிகழ்ச்சிகள்,பலப்பல விதமாக அவரை சித்தரிககின்றன.
அரக்கோணத்தில் ஒரு வீட்டில் முருங்கை மரம் இருந்தது. அதில் காய்கள் 
காய்த்துத் தொங்கும். ஒரு முறை அதன் காய்களைப் பறிக்க ஒருவன் 
முயன்றிருக்கிறான். அப்பா அவனைத் தடுத்திருக்கிறார். அவன் வீட்டு உரிமை
யாளரின் உறவுக்காரன் என்று சொல்லி, விடாமுயற்சியாக காய்களைப் 
பறிக்க முயல, அப்பாவுக்கும் அவனுக்கும் கைகலப்பு முற்றி அவனை கீழே
தள்ளி ஓடவைத்தாஎ. அப்பா எனக்கு ,ஒரு சிறுவனுக்கு , ஒரு கதாநாயகன் 
போல் காட்சி அளித்தார். உறவுகளை எதிர்த்து மறுமணம் புரிந்த அவர் என் 
தாய்க்கு, ஹீரோவாகவும், உறவுகளுக்கு வில்லனாகவும் தோன்றி இருக்கலாம்.
நான் சற்றே வளரும் நிலையில் எனக்கு ஒரு நண்பன் போல் தோன்றத்,
துவங்கிய நாட்கள் அதிகமில்லாமல். அவர் அகால மரணமடந்தது, அவரை 
பற்றி பூர்ணமாக அறியும் சந்தர்ப்பங்களை இழக்க வைத்தது. ஒருசாதாரண
மனிதனின் வாழ்க்கையில் சுகம் துக்கம் என்று மாறி மாறி வருவது இயற்கை.
ஆனால் எனக்குத் தெரிந்தவரை, அவர் வாழ்க்கையில் சந்தோஷ்மாக இருந்த
நாட்கள் மிகவும் குறைவாகவே இருந்திருக்கும்.

அவர் பிறந்து வளர்ந்த சூழ்நிலைகள் குறித்த நிகழ்வுகளெங்கள் வாழ்க்கையில் 
அவரால் பதிவு செய்யப்பட இல்லை..அவர் முதலில் மணந்த என் தாயுடனான 
வாழ்க்கை பற்றி என் தாய் மாமன் பிற்காலத்தில் சில நிகழ்ச்சிகளைக் 
கூறுவார். அவை அனைத்தும் அவரை ஒரு அசடனாகவே பிரதி பலிக்கும். 
முதல் மணவாழ்க்கையில் ஆறு பேரை பெற்றெடுத்த என் தாயுடன் வாழ்ந்த 
வாழ்க்கையில் அவர் என் தாய் வழி உறவினர்களால் என்றைக்கும் உதவப் 
பட்டு வந்தவர் என்றும்,தன்னால் எதுவும் சாதிக்கத் தெரியாதவர் என்றும் 
சித்தரிக்கப்பட்டு இருந்தார். எது எப்படி இருந்தாலும், தான் எண்ணியதை 
நடத்திக் காட்டும் திறமைசாலி என்பது அவர் என் அத்தையை என் மாமனுக்கு 
மணமுடித்ததிலும், என் அம்மாவை (சித்தி) மாமனார் மாமியார் மற்றும்
உள்ளவர் எண்ணங்களுக்குத் துணை போகாமல், மணந்ததிலும் காட்டி 
இருக்கிறார். 

     அரக்கோணத்தில் ஒரு நாள் அவருடைய நண்பர் ஒருவரை எங்கள்
வீட்டிற்கு வரவழைத்து, அவரைப் பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்தார். அந்த 
நண்பர் பாடிய அந்தப் பாட்டு “தாயே யசோதா “ என்பது இப்போதும் எனக்குப்
பசுமையாக நினைவில் வருகிறது. என். எஸ் கிருஷ்ணன் மேல் அவருக்கு 
தனி அபிமானம். யார் என்ன சொன்னாலும் ஜோக் ஆகாது. ஆனால் என். எஸ் 
கிருஷ்ண்ன் பேசினாலேயே ஜோக் தான் என்று சொல்லி மகிழ்வார். என்.எஸ்.கே
மேலிருந்த அபிமானம்தான் அவரை அரக்கோணத்திலிருந்து மெட்ராஸுக்குச் 
சென்று லக்‌ஷ்மி காந்தன் கொலை வழக்கை நேரில் காணுமளவுக்குத் தூண்டி 
இருக்கவேண்டும். 

        அரக்கோணத்தில் எனக்கு ஒரு கதாநாயகனாக காட்சி அளித்தவர் 
ஆச்சு அண்ணா வீட்டிற்கு வேண்டிய எல்லா வேலைகளையும் ஒரு பெரிய 
மனுஷ்னாக இருந்து கவனமுடன் செய்வார். அப்போது ரேஷன் முறை 
அமலில்இருந்தத.வேண்டிய பொருட்களை ரேஷனில்தான் வாஙக வேண்டும்
அரிசிக்குப் பதில் கோதுமை மக்காசோளம் உபயோகிக்க துவங்கிய காலம்அது.
\சோளத்தைஉடைத்து அரைத்து உப்புமா செய்வார்கள் நாங்கள்மாமி என்று
கூப்பிடும் மேமை. விரும்பி உண்ணுவோம். என்னைவிட ஐந்து வயது 
மூத்தவரான ஆச்சுஅண்ணா,சாமான் வாங்கி வருவார், என் தம்பி நடராஜனை
சுமந்து கொண்டுஆசுபத்ரிக்க செலவார். என் தாய்க்கு மிகவும் உதவியாக 
இருப்பார்.அவர் பேசும்போதும் சொல்லும் எல்லாமே நூறு சதவீதம் நம்பும்
படியாகக் கூறுவார்.அது அவருக்கு கை வந்தகலை.எல்லோரையும் வசிய
மாக்கும் குணம்.எது எப்படி இருந்தாலும் எல்லோரையும்நேசிக்கும் அன்பு                       குறிப்பாக குழந்தைகளிடம் காட்டும் அன்பு, சேட்டைஎல்லாம் எனக்கு 
அவரிடம் ஒரு மரியாதையை  கொடுக்கிறது.                      

அரக்கோணத்தில் என் தாய்க்கு டைபாய்ட் வந்து குணமாகும் நிலையில்
எனக்கும் ராஜிக்கும் டைபாய்ட் வந்தது. டாக்டரின் ஆலோசனை பேரில் 
நாங்கள் மெட்ராசில் ராயப்பேட்டா ஆசுபத்திரியில்அனுமதிக்கப் பட்டோம்.
அம்மாவின்பாரா டைபாய்ட் பக்கா டைபாய்ட் ஆக மாறினால் உயிருக்கே 
ஆபத்தாக முடியும் என்பதால் இந்த ஏற்பாடு.சுமார் இரண்டு வார காலம் 
நாங்கள் ஆசுபத்திரியில் தனியாக இருந்தோம். எங்களைக் காணவரும் 
உறவினர் எங்களின் நிலைக்குப் பரிதாபப்பட்டு, எங்கள் தாய்தந்தையை 
குறை கூறி சென்றனர்.அந்த வயதில் மற்றவர் நம்மிடம் காட்டும் 
பரிவும் மொழிகளும் நம்மையும் அறியாமல் நம்மிடம் பாதிப்பை 
ஏற்படுத்தி, நம் சிந்தனைகள் பகுத்தறிந்து பார்க்க விடாது செய்து விடும். 
பிற்காலத்தில் எங்களிடம் எங்கள் தாயார் பாரபட்சமாக நடந்ததற்கு
இந்த சம்பவம் மேற்கோளாகக் காட்டப்பட்டது. எது எப்படி இருந்தாலும் 
ஆசுபத்திரி வாழ்க்கை நன்றாகவே இருந்தது. தினமும் நர்ஸ் வந்து 
எங்களிடம் “உறங்கினீர்களா, கொல்லைக்குப் போச்சுதா” என்று கேட்பதும் 
அவர்கள் சென்றபிறகு நானும் ராஜியும் அதே மாதிரி பேசி மகிழ்ந்ததும் 
பசுமையாக நினைவில் வருகிறது. விரிப்பை மடிமேல் வைத்து சீப்பால் 
தலை வாரினால், நிறையப் பேன்கள் வந்து விழும். அவைகளை நசுக்கி 
கொல்வதிலும் ஆனந்தம் 

     அப்போது ஐந்தாம் வகுப்பு முடிந்து ஆறாம் வகுப்பு (ஃபர்ஸ்ட் ஃபாம்)
போயிருந்த நேரம். உடல் நலக் குறைவால் பள்ளிக்குச் செல்லவில்லை. 
இதனிடைய்ல் அப்பாவுக்கு பூனாவுக்கு மாற்றல் உத்தரவும் வந்தது. என் 
தாய் அவள் குழந்தைகளையும் மேமை வீட்டிற்கும், ராஜி  ஆச்சு அண்ணா
பெஙகளூரில் என் தாய் வழி பாட்டி வீட்டிற்கும், நான், சோமா என் தந்தை 
வழி பாட்டி வீட்டிற்கு  பாலக்காடு  கோவிந்தராஜபுரத்துக்கும்  சென்றோம். 
சுமார் ஓராண்டு காலம் படிப்பில்லாமல் பள்ளி செல்லாமல்  கவலை 
இல்லாமல் திரிந்து காலங் கடத்தினோம். 
------------------------------------------------------------------------------------------------------------------










   

Tuesday, May 10, 2011

அவதாரக்கதைகள்--பாகம் 2 --ஆமையாக...........

அவதாரக் கதைகள் --பாகம்  2--ஆமையாக ....
-----------------------------------------------------------

தவ வலிமை மிகுந்த துருவாச முனிவர் ,
திருமகளை வணங்கிவர ,மகிழ்ந்த மகாலட்சுமி ,
அவருக் களித்த ஒரு பூ மாலையை.,எதிரே 
வந்த தேவ ராஜனுக்கு சிறப்பு செய்வதாக 
எண்ணிக் கொடுத்தார். 
தன வல்லமைச் சிறப்பால் செருக்குடனிருந்த
இந்திரன் மாலையைத் தான் அணியாமல், யானையின் 
மத்தகத்தில் வைத்தான். யானை அதனை தன துதிக்கையால் 
எடுத்து காலில் போட்டு மிதித்துவிட ,சினம் கொண்ட 
துருவாசர் தேவேந்திரனை அவன் வலிமை, செல்வம் ,
சிறப்பனைத்தையும் இழக்கக் கடவது, என சாபம் இட்டார்.

வல்லமை  மிகுந்த முனிவரின் வாக்கு பலிக்க 
பொலிவிழந்த இந்திரன் அனைத்தையும் இழக்க, 
அவனுடன் தேவர்களின் நிலையும்  தாழ்ந்தது. 
என்ன செய்ய என்று கூடி ஆய்ந்தவர்கள் 
நான்முகனிடம் குறை கூறிச் சென்றனர். 
பாம்பணைப் பரந்தாமனே சரணம் எனச் 
செல்வதே சிறந்த வழி என்றவன் சொல் கேட்டு 
அனைவரும் திருப்பாற்கடல் சென்று முகுந்தனிடம் 
மன்னித்தருளவும் மறுபடி ஏற்றம் வேண்டியும் யாசித்தனர்.

திருமாலும் திருவாய் மலர்ந்து திருப்பார்க்கடலில்
அமிழ்ந்து  கிடக்கும் செல்வச்சிறப்புகளை 
வெளியே கொண்டுவர ,கடலைக் கடைய கிடைக்கும் 
அமிழ்தம் உண்டால்  அடைவீர் பழைய நிலை ,
பெறுவீர் புதுப்பொலிவும் என்றே அருளி ,தனித்து செய்தல்
இயலாது,கூடவே அசுரர் துணை நாடுங்கள் 
என்று அறிவுரையும் நல்கினார்.

 தேவர்கள் முயன்று பெற்ற நட்பில் அசுரரும் சேர கிடைக்கும் 
பலன்களில்  பாதி பாதிப் பங்கு என்றும் முடிவெடுத்தனர். 

ஒருசேர சிந்தித்து எடுத்த முடிவின்படி, 
மந்தார மலையை மத்தாக்கி, வாசுகிப் பாம்பை 
கயிறாக்கி, பாம்பின் தலையை அசுரர் பிடிக்க 
வால் பாகம் தேவர்களின் பிடிக்குள் சிக்க 
திருப்பார்க்கடல்  கடையப் பட்டது. 
அசுரர்  பிடி இறுக,வலி தாங்காத பாம்பு 
ஆலகால விஷத்தைக்  கக்கியது. 

கொடிய  நெஞ்சின் வேகம் தாங்காத தேவரும் 
அசுரரும் பிடி நழுவ விட கடைதல் நிறுத்தப்பட்டதும் 
மந்தார மலை நிலை பிறழ, கதறி அழைத்தனர்,
காத்தருள வேண்டி நின்றனர். 
ஆமை வடிவெடுத்து, மகாவிஷ்ணு மந்தாரமலை
நிலை சமன் செய்ய தன முதுகில் தாங்கினார். 
காக்கும் கடவுளின் பரிந்துரையில் 
ஆலகால விஷத்தை அரனும்  எடுத்துண்டு, 
நஞ்சின் கொடுமையைத் தானேற்றார்

மீண்டும்  கடைதல் துவங்க பாற்கடலில் 
பல பொருட்கள் தோன்றின..திருமகளும் 
தோன்றித் திருமாலைத  தானடைந்தார். 
வாருணி என்றொரு மாது, மயக்கும்  மது அளிப்பவள், 
அரக்கர் பக்கம் அழைத்துச் செல்லப்பட்டாள்
வாருணிக்குப்பின் தோன்றிய தன்வந்திரி  கையில் 
அமிர்த கலசம் காணப்பெற அசுரர் அதைப் பற்றினர். 
தேவர் துயர் துடைக்க திருமாலும் அருள் புரிய, 
மயக்கும் மோகினி  வேடமேடுத்தார். 
ஒப்பந்தப்படி அமுதத்தைப் பிரித்துக் கொடுக்க 
தேவாசுரர்  அனைவரும்  வேண்டி நின்றனர். 

அசுரரும் தேவரும் இரு வரிசையில்கண் பொத்தி நிற்க
பங்கீடு துவங்கியது. தேவர்களுக்கு ஒரு முறை 
வழங்கப்பட்ட அமிர்தம் அசுரருக்கு ஈயப்படாமல் 
மறுமுறையும் தேவர்களுக்கே கொடுக்கப்பட, 
கண் விழித்துக் கண்ட அசுரர் ராகுவும் கேதுவும் 
சினமடைந்து , தேவர்களாக உருமாறி, நின்று 
அமுதம் உண்டனர். அருகில் இருந்து உணர்ந்த 
சந்திர  சூரியர்  மோகினியிடம் முறையிட, 
அவரும் உருமாறிய அரக்கர் தலையில்  கரண்டியால் 
ஓங்கி அடிக்க அமுதம் உண்ட அரக்கர் உயிரிழக்க வில்லை. 

காட்டிக் கொடுத்த  சந்திர சூரியரை பகை கொண்டு 
கிரகண காலத்தில் தீண்டி வருவதாகக் கூறுவர்

கற்றறிந்ததை  உணர்ந்தபடி எழுதினேன். 
அவதாரக் கதைகளில் கிளைகள் பல உண்டு, 
சில சமயம் அவையே முதன்மை பெறுவதும் உண்டு.
=============================================. .

















 

Friday, May 6, 2011

அன்பெனப்படுவது.......................

அனபெனப்படுவது..............
---------------------------
            அன்பெனப்படுவது யாதெனில் என்று
             எழுதத் துவங்கும் முன்பே ,முன்னே வந்து 
             நிற்கின்றன அனேக கேள்விகள் , சந்தேகங்கள்.
            அன்பே சிவம்,அன்பே  கடவுள் , அன்பே  எல்லாம்
             என்றெல்லாம்  கூறக் கேட்டாலும், அடிப்படையில்
             அன்பு  என்பதுதான்  என்ன.? 

அன்பு மனைவியிடம் அவளது எண்ணம் கேட்டேன்.
உடலில்,உணர்வில் ஏற்படும்  ரசாயன  மாற்றமே
உணர்ச்சிகளின்  வெளிப்பாடு, அதில்  அன்பெனப்படுவது 
உதிரம்  சம்பந்தப்படுகையில்  உயர்வாகிறது, 
அதுவே என் நிலைப்பாடும்  என்றாள். 
             உள்ளம்  சார்ந்த  பதில்  ஒன்றைக்  கூறிவிட்டாள். 
             அறிவு  சார்ந்த  பதிலை  நாடுதல்  தவறோ.?
தொப்புள்  கொடி  உறவு  உதிரம்  சார்ந்தது. 
ஆதலால்  ஒப்புக்  கொள்ளத்  தோன்றுகிறது. 
அந்த  உறவின்  உணர்வும்  அன்பும்  அறியப்படாமல் 
போய்  விட்டதால்  எழுகிறதோ  என் கேள்விகள்.?
            உணர்வுகள் புரிதலை  (EMPATHY)  அன்பெனக்கொள்ளலாமா?
            சார்ந்திருப்பதன்  சாராம்சமே அன்பின் விளைவா.? 
           சேய்  தாயை சார்ந்திருப்பதால் அவளிடம் அன்பா.?
           பெற்ற சேயிடம்  தாய்க்கு என்ன எதிர்பார்ப்பு.? 
          ஆரம்பத்தில்  இல்லாதது நாள்படத் தோன்றுமோ. ?
          தாய் தந்தை மகன் மகள் கணவன் மனைவி 
          என்று எல்லோரிடமும் உணர்வுகளில் உறங்கிக்கிடக்கும் 
          எதிர்பார்ப்புகளின் மறு பெயர்தான் அன்போ.?
          எதிர்பார்ப்பில்லாத அன்பென ஒன்று உண்டா என்ன.?

கட்டிய மனைவியும்,பெற்ற  பிள்ளைகளும் 
கதறி அழும்போது வந்து விழும் வார்த்தைகள் 
எதிர்பார்ப்புகள் ஏமாற்ற மாவதைக்  காட்டுகிறதா.?
அன்பின் பிரிவால் ஏற்படும் அழுகையா, ?
அவலங்களை எதிர்நோக்கும் எண்ணங்கள் அழ வைக்கிறதா.?

           பாடுபட்டுக் கோடி பல விட்டுச் சென்றால் 
           பெருமையுடன் நினைப்பார்களோ.? உலகில் 
           பாடுபட விட்டுச் சென்றால் பழியெற்று செல்ல வேண்டுமோ.?
           அன்புக்கும் ஒரு விலை உண்டு என்பதுதான்  உண்மையோ.?

அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ் ......
எண்ணிப்பார்த்தால் உண்டென்றே  தோன்றுகிறது. 

          எதிர்மறைக் கருத்துகள் இருக்கலாம் என்று 
          எண்ணும் இடமெல்லாம் கேள்விகளாக்கி  விட்டேன். 
          ஆன்றோரே சான்றோரே, உங்கள் கருத்துகள் 
          அறியக் காத்திருக்கிறேன்.. எது எப்படியாயினும் 
          முத்தாய்ப்பாக  நான் எண்ணுவது 

உழைத்துக் களைத்து உடலம் கிடத்தி உறங்கி எழுந்தால், 
மறு நாளும்  உண்டு வாழ்வு, தொடரலாம் பணிகள். 
உறக்கத்தில் மூச்சு விட மறந்து எழாமல் போனால் 
என்னாகும்.?ஒன்றுமாகாது. பேரினை நீக்கி பிணமென்று கூறி, 
பாடையில் கிடத்தி கொண்டு போவார்கள் புதைக்கவோ எரிக்கவோ.

          இருந்தபோது  செய்ததன் விளைவு 
          பெற்றுத்தரும் விழி நீரோ, உமிழ் நீரோ. 
         
இல்லாமையின் வெறுமை உணரப்படலாம் சில நாட்கள். 
விட்ட குறை தொட்டகுறை எனப் பணிகள் 
விடுபட்டுப் போயிருந்தால். பல நாட்களாக அது மாறலாம். 
காலம் கடந்தபின் மிஞ்சுவதெல்லாம் சில நினைவுகள் மட்டுமே.