Wednesday, October 31, 2012

முன்னேற விடுவார்களா..?


                                  முன்னேற விடுவார்களா
                                   -----------------------------------


சில நாட்களுக்கு முன் சதிகார உலகம் என்னும் ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதில் சில சக்திகள் தங்களது பலத்தை நிலை நாட்ட கண்ணுக்குத் தெரியாமல் இருந்து செயல் படுவதாகவும், பொதுவாக அவர்கள் இல்லுமினாட்டீஸ் என்று அழைக்கப் படுவதாகவும் கூகிளில் மேய்ந்த தகவல்கள் அடிப்படையில் எழுதி இருந்தேன். .இப்போது இதைப் படியுங்கள்.
ஆதிமனிதன் சக்கரம் கண்டு பிடித்தபிறகு  போக்கு வரத்து எண்ண முடியாத வேகத்திலும் விதத்திலும் வளர்ச்சி அடைந்திருக்கிறது. பெங்களூரில் சிவாஜி நகர் பஸ் ஸ்டேஷன் அருகே ஒரு பெரிய திறந்தவெளி இருந்தது. அங்கே எந்த தடங்கலும் இல்லாமல் சைக்கிள் ஒட்டக் கற்றுக் கொண்டேன் நான். அந்த திறந்த வெளியில் சுவாமி சின்மயாநந்தா பகவத் கீதையின்  18 அத்தியாயங்களையும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்த திறந்த வெளியில் வித்தை காட்டுபவர்கள் ஒரு மனிதனைப் படுக்க வைத்து எந்த சப்போர்ட்டும் இல்லாமல் 8 அடி உயரத்தில் மிதக்க வைப்பதை கண்டிருக்கிறேன்.இதெல்லாம் 1955-56 களில் சாத்தியமாயிருந்தது. ஆனால் இப்போது அங்கு ஒருவர் மீது ஒருவர் இடிக்காமல் நடப்பதே அரிது.பேரூந்து நிலையம் வந்து நூற்றுக்கணக்கான பஸ்களும் கார்களும் ஸ்கூட்டர் , மோட்டார் சைக்கிள்களும்  சேர்ந்து அந்த இடமே புகையும் தூசியும் நிறைந்து ...அப்பப்பா.. நடப்பதே வெகு சிரமம். இன்னுமொரு செய்தி. இப்போது பெங்களூரில் நூற்றுக்கு முப்பது நாற்பது பேர் ஆஸ்த்மாவினாலும்  அலர்ஜியாலும் அவதிப் படுகிறார்கள். போக்குவரத்து சாதனங்கள் அதிகமாகி விட்டதால் இந்த வாகனங்கள் வெளியேற்றும் கரியமில வாயு சுற்றுப் புறத்தை வெகுவாக மாசுபடுத்தி வருகிறது. அன்றிருந்த இரண்டு அணா பஸ் கட்டணம் இப்போது பதினைந்து ரூபாய்க்கும் மேலாகி விட்டது. பெட்ரோல் டீசல் விலை கட்டுக்கடங்காமல் ஏறுகிறது. இதனால்
 எண்ணை உற்பத்தி செய்யும் நாடுகள் பலம் பெறுகின்றன. எண்ணை வளமில்லாத நாடுகள் அந்த வளமிருக்கும் நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க விரும்புகின்றன.
இதற்கு தீர்வுதான் என்ன. ? எண்ணை குடிக்கும் வாகன உற்பத்தி குறைந்து , அது சார்ந்த உபயோகங்கள் குறைய வேண்டும். சக்கரம் கண்டு பிடித்து இவ்வளவு தூரம் முன்னேறிய மனிதன் இதற்கு ஒரு தீர்வு இல்லாமல் இருப்பானா என்ன. ?இனியும்  படியுங்கள்.
1996-ம் ஆண்டு கலிபோர்னியாவில் ஜெனரல் மோட்டாஸ் கம்பனி மின்சார ஊர்திகளை உற்பத்தி செய்து புழக்கத்துக்கொண்டு வந்தது. ஒன்பது செகண்டுகளில் சப்தமில்லாமல் 0 விலிருந்து 100 கிலோ மீட்டர் வேகம் எடுக்கக் கூடியவை. சுற்றுப் புறத்தை மாசு ஏற்படுத்தாத இவற்றில் டெயில் பைப்பே இருக்கவில்லை.! இந்த கார்களை விலைக்கு வாங்க முடியாது. அவை லீசுக்கு மட்டுமே விடப் பட்டது. 10- வருடங்களில் லீசுக்கு விட்டிருந்த எல்லா கார்களும் திரும்பப் பெற்று நாசமாக்கப் பட்டன. 1997-ல் டோக்கியோவில் நிஸ்ஸான் கம்பனி சிறிய மின்சாரக் கார்களை உற்பத்தி செய்து லீசுக்கு விட்டது. அந்த வகை கார்களுக்கு ஏகப்பட்ட டிமாண்ட் இருந்தும் நிஸ்ஸான் கம்பனி அவற்றை திரும்பப் பெற்று 2006-ல் நாசமாக்கிற்று
1997-ல் டோயோட்டொ கம்பனி வெளியிட்ட மின்சாரக் கார்களை லீஸ் முடிந்ததும் திரும்பப் பெற்று 2005-.ல் நாசப் படுத்தியது.
சில அமெரிக்கக் குடிமக்கள் DON’T CRUSH  என்னும் இயக்கத்தை ஆரம்பித்து லீசுக்கு எடுத்த வாகனங்களுக்கு உரிமை பெற்றனர், இதனிடையில்  CHEVRON- TEXACO உரிமையாளர்கள்வாகனங்களில் உபயோகப் படுத்திய BATTERY பேட்டெண்ட்-ஐ வாங்கி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு மூடு விழா நடத்தினர்.
எண்ணைக் கம்பனிகளால் ஆதாயம் பெறுபவர்கள் மின்சாரக் கார் உற்பத்தியை சிதைக்கின்றனர். எண்ணை வளத்திற்காக போர்கள் நடக்கின்றன. சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தும் எண்ணைக்காக ஆயிரக் கணக்கில் மக்கள் கொல்லப் படுகின்றனர்.
மின்சாரக் கார்கள் மட்டுமல்ல. ஹைட்ரஜன் மற்றும் நீராவியால் இயங்கும் வாகனக்களும் வெள்ளோட்ட மிடப் படுகின்றன. முந்தைய கலிபோர்னியா கவர்னர் ARNOLD SHWARZENEGGER
ஹைட்ரஜனால் இயங்கும்  ஹம்மர் எனும் காரை உபயோகப் படுத்துவதாகக் கூறப் படுகிறது. சென்ற ஆண்டு GENEPAX எனும் கார் நீராவியால் இயக்கப் படுவதாக அறிமுகப் படுத்தப் பட்டது.
எண்ணையின் தேவை DEMAND  குறையாமல் இருப்பதிலும் மற்ற மாற்று வாகனங்கள் வராமலிருப்பதிலும் அக்கறை கொண்டிருப்பதாகச் சொல்லப் படுபவர்கள் புஷ் ராக்பெல்லர் ரோத்ஸ்சைல்ட். மற்றும் பிரிட்டீஷ் அரச குடும்பத்தினரும் என்று கூறப் படுகிறது.
இல்லுமினாட்டிகள் என்று அடையாளப்படுத்தப் படுபவர்கள் யார் யாரோ. ?(எனக்கு வந்த மின் அஞ்சலின் அடிப்படையில் எழுதப் பட்டது.)

-----------------------------------------------------------------------------.

  

Monday, October 29, 2012

எல்லாமே மாயைதான்.


                                    எல்லாமே மாயைதான்..
                                         ---------------------



பிள்ளைப் பிராயத்தில் மண் உண்ட கண்ணன் வாயில்
சிறிதே மண் காண எண்ணிய தாய் யசோதை
மண்ணுடன் விண்ணும் நீரும் நிலமும் அண்ட அகிலமும்
கண்டே மயங்கியது மாயையின் மயக்கத்தால் அன்றோ.

மாயை தயை கொண்டு ஆயர் குலச் சிறார்களையும்
கன்றுகளையும் காணாமல் போக்கினான் நான்முகன் பிரமன்
பரம்பொருளே இடைச் சிறுவராய் கன்றுகளாய் உருவெடுத்து
எங்கும் நீக்கமற நிறைந்து நின்றதும் மாயையின் செயலன்றோ.

முன்னவன் தன் மாயையை விலக்க, மறைத்த தனைத்தும்
மறையாமல் நிற்க , பிரமனே நாரணனின் கணக்கிலா
உருவம் கண்டு அவனும் மாயையில் மூழ்கி
விளக்கம் பெற்றதும் மாயையின் செயலன்றோ

செருக்களத்தில் பார்த்தனுக்குச் சாரதியாய் சக்கரம்
கொண்டு ஆதவனை மறைத்து பூவுலகினை இருட்டாக்க
தலை தப்பியது என எண்ணி ஜயத்ரதன் தலை காட்ட
சக்கரம் மீட்டு இருள் விலக்கி அவன் தலை கொய்ய
கண்ணன் நிகழ்த்தியதும் மாயையின் செயலன்றோ/.

இல்லாதது இருப்பதுபோல் தோன்றுவதும் இருப்பது
இல்லாதது எனத் தோன்றுவதும் மாயையின்
விளைவு எனப் பொருள் புரிதல் தவறாமோ.
உலகே மாயம் வாழ்வே மாயம் என்பதும் சரிதானோ
நிரந்தரம் என்பது ஏதுமில்லை,நிகழ்வுகளில் நிச்சயமில்லை.
கருத்துப் பிழைகளும் காட்சிப் பிழைகளும் நிறைந்ததே வாழ்க்கை
மாயையின் பிடியில் மயங்கி இருப்பதே வாழ்க்கையின் நிதர்சனம்

மனத்தின்  மயக்கமே  மாயை என்றறிவோம்

உண்டு உறங்கி எழுவது நிச்சயமில்லை போகுமிடம்

தெரியாமல் போகாத ஊருக்குப் பொருள் ஈட்டி யாருக்கென்ன லாபம்

பேதம் பாராமல் பகிர்ந்துண்டு  வாழ்தல்  பெருமை தரும் 

ஈதலின் இன்பம் கொடுத்தனுபவித்தால் புரியும்

 ஏற்றமும் தாழ்வும் நிரந்தரமல்ல யாரும் யாராகவும் ஆகலாம்
உணர்ந்து கொண்டால் வாழ்வில் நிம்மதி நிச்சயம். 
--------------------------------------------------------------------------------------------.






Saturday, October 27, 2012

ஒரு ரூபாய்க்கு சாப்பாடு.


                                     ஒரு ரூபாய்க்கு சாப்பாடு.
                                     ----------------------------------

            ( எனக்கு மின் அஞ்சலில் வந்த தைப் பகிர்கிறேன்.)


>
>மதிய உணவு வேளை
>
>ஈரோடு, பவர்ஹவுஸ் ரோடு, அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள ஏ.எம்.வி உணவு விடுதி அருகில், காலில் செருப்பு கூட இல்லாதவர்கள், உடம்பில் சட்டை போடாமல் துண்டு மட்டும் கொண்டு இருப்பவர்கள், ஒரு காலத்தில் வெள்ளையாக இருந்த வேட்டியை அணிந்தவர்கள், நைந்து போன புடவையுடன் காணப்பட்டவர்கள் என சுமார் இருபது பேர் அந்த உணவு விடுதி அருகே, கண்களில் கவலையையும், கையில் ஒரு பையையும்
வைத்துக்கொண்டு நின்றார்கள்.
>
>சிறிது நேரத்தில் உணவு விடுதியில் இருந்து அழைப்பு வந்ததும் கையில் இருந்த ஒரு டோக்கனையும், ஒரு ரூபாயையும் கொடுத்துவிட்டு ஒரு பார்சல் சாப்பாட்டை வாங்கிக்கொண்டு திரும்பினர்.
>
>பார்த்த நமக்கு ஆச்சர்யம், இந்த காலத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடா என்று!
>
>உள்ளே வாங்க விவரமா சொல்றேன் என்று மெஸ் உரிமையாளர் வெங்கட்ராமன் அழைத்துச் சென்றார், முதல்ல சாப்பிடுங்க என்று சூடான சாப்பாடை சாம்பார், ரசம், மோர் கூட்டு பொரியல், அப்பளத்துடன் வழங்கினார் சுவையாகவும், திருப்தியாகவும் இருந்தது.
>
>நீங்க சாப்பிட்ட சாப்பாட்டின் விலை இருபத்தைந்து ரூபாய், இந்த சாப்பாட்டைதான் இப்போது வந்தவர்கள் ஒரு ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்றார்கள், அவர்களுக்கு மட்டும்தான் ஒரு ரூபாய். அது ஏன் அவர்களுக்கு மட்டும் ஒரு ரூபாய் என்ற உங்கள் சந்தேகத்தை விளக்கிவிடுகிறேன்.
>
>எங்க ஒட்டலுக்கு எதிரே உள்ள அரசு ஆஸ்பத்திரியில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் சுற்றுப்பக்கம் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மக்கள்தான். நோயாளிகளுக்கு மதிய உணவு ஆஸ்பத்திரியில் வழங்கப்பட்டுவிடும், ஆனால் கூட இருக்கும் உறவினர்களுக்கு ஆஸ்பத்திரி நிர்வாகப்படி உணவு வழங்கமுடியாது, அவர்கள் வெளியில்தான் சாப்பிட்டுக்கொள்ள முடியும்,
அவசரமாக வந்தாலும், நிதானமாக வந்தாலும் அவர்கள் கையில் காசு இருக்காது.

>ஆகவே அவர்களைச் சார்ந்த உறவினர்கள், நண்பர்கள் பலர் பல நாள் ஒட்டலுக்கு வந்து சாப்பாடு என்ன விலை என்று கேட்பதும் கையில் உள்ள காசை திரும்ப, திரும்ப எண்ணிப்பார்ப்பதும், பிறகு அரைச்சாப்பாடு என்ன விலை என்று கேட்டு அதையும் வாங்காமல் கடைசியில் ஒரு டீயும் வடையும் சாப்பிட்டு போவார்கள் சில நேரம் வெறும் டீயுடன் வயிற்றைக்காயப் போட்டுக்கொண்டு போவார்கள்.
>
>தினமும் ஒரே மாதிரி மனிதர்கள் வருவதில்லை ஆனால் அன்றாடம் வரக்கூடிய இருபதுக்கும் குறையாத மனிதர்கள் பலரும் நான் மேலே சொன்னது போல ஒரே மாதிரிதான் நடந்து கொள்வார்கள்

>பசியாற சாப்பாடு போட கடை நடத்தும் எனக்கு இதை பார்தது மனசு பகீர் என்றது. சரி தினமும் இருபது பேருக்கு ஒரு வேளையாவது உணவு தானம் செய்தது போல இருக்கட்டும் என்று எண்ணி இருபது சாப்பாடை பார்சல் கட்டி
வைத்துவிடுவேன், ஆனால் இலவசமாக கொடுத்தால் அவர்களது தன்மானம் தடுக்கும்,
ஆகவே பெயருக்கு ஒரு ரூபாய் வாங்கிக்கொள்கிறேன். மேலும் இந்த இருபது பேரை
அடையாளம் காட்டுவதற்காக ஆஸ்பத்திரியில் உள்ள உள்நோயாளிகளை
கவனித்துக்கொள்ளும் வார்டு பொறுப்பாளரிடம் இருந்து டோக்கன்
வாங்கிவரவேண்டும்.
>
>இதுதான் சார் விஷயம். இது இல்லாம எங்க ஒட்டலில் சாப்பிடும் உடல் ஊனமுற்றவர்களுக்கு 10சதவீதமும், கண் பார்வையற்றவர்களுக்கு இருபது சதவீதமும் எப்போதுமே தள்ளுபடி உண்டு. பொருளாதார நிலமை கூடிவந்தால் மூன்று வேளை கூட கொடுக்க எண்ணியுள்ளேன்.
>
>இந்த விஷயத்துல நாங்களும் கொஞ்சம் புண்ணியம் தேடிக்கிறோம் என்று என்னை தெரிந்தவர்கள் வந்து இருபது சாப்பாட்டிற்கான முழுத்தொகையை (ஐநூறு ரூபாய்)கொடுத்துவிட்டுப் போவார்கள், நான் அவர்கள் பெயரை போர்டில் எழுதிப்போட்டு நன்றி தெரிவித்துவிடுவேன் என்ற வெங்கட்ராமன், நமக்கு விடை கொடுக்கும் போது சொன்னது இதுதான்...

>"எப்படியோ வர்ற  ஏழை,எளியவர்களுக்கு வயிறு நிறையுது, எங்களுக்கு மனசு நிறையுது'' என்கிறார்
>
>ஒட்டல் நடத்தும் வெங்கட்ராமன்
---------------------------------------------------------
>


Wednesday, October 24, 2012

க்ண் அறுவைச் சிகிச்சை.


                                     கண் அறுவைச் சிகிச்சை
                                   ------------------------------------
 புலன்கள் என்னும் என் பதிவுக்குப்பின் கண்ணில் பிறை வளர்ந்ததால் அதை எடுக்க என்னை சிகிச்சைக்கு உட்படுத்திக் கொண்டேன். இடது கண் செப்டம்பர் 7-ம் நாளும் வலது கண் அக்டோபர் 220ம் நாளும் அறுவை சிகிச்சை நடந்தது. பெங்களூரில் நாராயணா நேத்ராலையாவில் சிகிச்சை நடந்து இப்போது நலம். இந்தப் பதிவு எழுதுவதன் நோக்கமே  என்னைப் போல் சிலர் இந்த பிறை நீக்கம் குறித்து தவறான கணிப்பில் இருக்கலாம். நான் முதலில் பிறை ( புரை?) நீக்குதல் என்றாலேதோ கண்ணில் வளர்ந்த மெல்லிய சவ்வு போன்றதை நீக்குவது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். தற்போதைய மாடர்ன் சிகிச்சையில் கண்ணில் இருக்கும் லென்ஸ் மாற்றம் செய்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். அறுவை சிகிச்சையின் போது லோகல் அனஸ் தீஷியா மூலம் நம் கண்ணில் ஏதேதோ செய்கிறார்கள் என்று தெரிகிறது. கண்ணை திறக்க வைத்துக் கண்ணில் சில்லென்ற திரவம் பீய்சுகிறார்கள். பிரகாசமான ஒளி தெரிகிறது பத்து பனிரெண்டு நிமிடங்களுக்குள்  அனுப்பி விடுகிறார்கள். சிகிச்சை பெற்ற கண் இரண்டு மூன்று மணி நேரம் மங்களாகத் தெரிகிறது. புரை இருந்ததனால் இருந்த அசௌகரியம் போச்... போயே போச்.. கிட்டப் பார்வைக்கென கண்ணாடி அணிந்திருந்த நான் இப்போது கண்ணாடி இல்லாமலேயே நன்கு பார்க்க முடிகிறது. என்ன ஒரு பிரச்சனை என்றால் சிறிய எழுத்து , செய்தித்தாள்வாசிக்கக் கண்ணாடி வேண்டும். அதற்கு ஆறு வாரம் காத்திருக்க வேண்டுமாம்.

என்னதான் நான் விளக்க மாக எழுத முற்பட்டாலும் முழுமை அடைவதில்லை. அதனால் எனக்கு நடந்த அறுவை சிகிச்சை  எந்த மாதிரியானது என்று விளக்க ஒரு காணொளி இணைக்க விரும்பினேன். அதை இத்துடன் இணைக்கத் தெரியாததால் தனியாக ஒரு பதிவாகவே இடுகிறேன். என் உடல் நலம் வேண்டி பிரார்த்தித்த அனைவருக்கும் என் நன்றி.    . 

Modern Cataract Surgery

Sunday, October 21, 2012

உன்னைவணங்குகிறேன்


iஇது நாள் வரை ஒவ்வோர் ஆண்டும் நவராத்திரி சமயம் ஏதோ சிறிய அளவிலாவது கொலு வைப்பது வழக்கம். இந்த வருடம் முறைப்படி கொலு வைக்க இயலவில்லை. படத்தில் காண்பது சென்ற ஆண்டு வைத்த கொலு. இம்முறை வைக்க வாங்கிய கண்ணனின் விக்ரகம் பூஜைக்கு வைக்கப் பட்டுள்ளது. என் பங்குக்கு நானும்  ஒரு துதிப் பாடல் ( முதன் முறையாக )
எழுதி உள்ளேன். அது கீழே.


ணு அண்டம் பேரண்டம் அனைத்தையும்
இயக்கும் சக்தியே உன்னை நான் வணங்குகிறேன்.
உருவமும் பெயரும் ஏதுமில்லா உன்னை என்ன சொல்லி
போற்றுவேன் .மலையத் துவசன் பெற்ற பெரு வாழ்வென்பேனா-
புவி மடந்தை- நாமருவிய கலை மடந்தை- ஜெய மடந்தை என்பேனா-
சர்வசக்தி பொருந்திய  சர்வாங்க சுந்தரி என்பேனா--நான்
அவலத்தில் அழுந்தும்போது என் நாவினில் வந்தமரும்
முருகனும் நீயே,- கண்ணனும் நீயே- ஏனையோர் துதிக்கும்
எல்லா நாமங்களும் கொண்டவளும் நீயல்லவா- நீ என்
அப்பனல்லவா, அம்மையல்லவா, கண் துஞ்சாது எனைக்
காக்கும் தாரமல்லவா.- யாதுமாகி நிற்கும் தேவியே
கலை மகளே, அலை மகளே, மலைமகளே
உயிருள்ள,உயிரற்ற, அனைத்திலும் இருப்பவளே,
எனை ஈன்ற தாயின் தாயே- எல்லாம் நீயே
உனை நான் வணங்குகிறேன் காத்தருள்வாய் சக்தியே.! 

( இன்னொரு கண் அறுவைச் சிகிச்சை காரணம் நான் வலைப் பூவிலிருந்து சிறிது காலம் விடுமுறையில் இருப்பேன். )

Friday, October 19, 2012

மாத்தாடு மாத்தாடு மல்லிகே


                               மாத்தாடு மாத்தாடு மல்லிகே ( தமிழில் )

நான் இந்த கன்னட கிராமீயப் பாடலை முதன் முதலில் 1961-1962 வாக்கில் கேட்டேன். அதன் பிறகு தமிழில் ஒரு திரைப்படத்தில் இதன் முதல் வரி எடுத்தாளப் பட்டிருந்தது. முழுப்பாடலும் நினைவில் வரவில்லை. ஒரு நண்பனின் உதவியோடு இப்போது முழுப் பாடலும் கை வரப் பெற்றேன். அதை என்னால் முடிந்த அளவு தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறேன். படித்துப் பாருங்கள் பாடிப் பாருங்கள்.

( முதலில் தமிழ் எழுத்தில் கன்னடப் பாட்டு.)

மாத்தாடு மாத்தாடு மல்லிகே பாடியது:- ஜீ.வி. அத்ரி,மஞ்சுளா குருராஜ்.


ஆண்,:- மாத்தாடு மாத்தாடு மல்லிகே
        செம்பக செவந்திகெ....
       கும்பினல்லி மாத்தாடு மாத்தாடு மல்லிகே.

பெண்:- ஒப்பன்னெ கட்டித்தெ
        ஒப்பன்னெ பிட்டித்தெ
        ஒப்பன்னெ கரக் கோண்டொளொகோகிதே  கெளையா

ஆண்:- யாரென்னக் கட்டித்தெ, யாரென்ன பிட்டித்தெ
       யாரென்ன கரக்கோண்டொளகோகிதெ மல்லிகே
      

பெண்:-ஹசுவன்னக் கட்டித்தெ , கருவன்ன பிட்டித்தெ
       ஹாலுன்னு கரக்கோண்டொளகோகிதே  சலுவா

ஆண்:-மாத்தாடு மாத்தாடு மல்லிகே
       செம்பகெ செவந்திகெ
       மாத்தாடு மாத்தாடு மல்லிகே

பெண்:- ஒப்பன்ன தள்ளித்தெ, ஒப்பன்ன நுக்கித்தெ
       ஒப்பன்ன ஜதையல்லி திருகி பந்தெ கெளையா

ஆண்.:-யாரன்னு தள்ளித்தெ, யாரன்னு நுக்கித்தெ
      யாரன்னு ஜதையல்லி திருகி பந்தெ மல்லிகே

பெண்;-கதவன்னு தள்ளித்தெ அதகள நுக்கித்தெ
      தீபத ஜதையல்லி திருகி பந்தெ கெளையா

ஆண்:-மாத்தாடு மாத்தாடு மல்லிகே
       செம்பகெ செவந்திகெ
       மாத்தாடு மாத்தாடு மல்லிகே

பெண்:-ஒப்பன்ன ஆசித்தெ ஒப்பன்ன ஹோதித்தெ
      ஒப்பன்னு இளக்கோண்டு மலகிதெ கெளையா

ஆண்:- ஏனென்ன ஆசித்தெ, ஏனென்ன ஹோத்திதெ
      யாரன்ன இளக்கோண்டு மலகிதெ மல்லிகே

பெண்:-ஹாசிகே ஆசித்தெ,கம்பளிய ஹோத்திதெ
       தலதிம்பு இளக்கோண்டு மலகிதெ கெளையா

ஆண்:-மாத்தாடு மாத்தாடு மல்லிகே
      செம்பகெ செவந்திகெ
      மாத்தாடு மாத்தாடு மல்லிகே 

பெண்:-ஒப்பக்கெ கால் கொட்டெ, ஒப்பக்கெ கை கொட்டெ
       ஒப்பக்கெ சீரையன்ன எளக் கொட்டெ கெளையா

ஆண்:- யாரெக்கெ கால் கொட்டெ யாரெக்கெ கை கொட்டெ
       யாரெக்கெ சீரையென்ன எளக்கொட்டெ மல்லிகே
      
பெண்:-கந்துகாருகெ கால் கொட்டெ, பளேகருகெ கை கொட்டெ
      மடிவாளகெ சீரையென்ன எளக் கொட்டெ கெளையா

ஆண்:- மாத்தாடு மாத்தாடு மல்லிகே...........

இனி தமிழாக்கம்.
ஆண்:- சொல்லு நீ சொல்லடி மல்லிகே
        செண்பகமே சாமந்தியே
        குழுவில் கூடி சொல்லு நீ சொல்லடி மல்லிகே
பெண்:_ ஒண்ணே நான் கட்டினேன்
        ஒண்ணெ நான் விட்டுட்டேன்
        ஒண்ணெ நான் எடுத்திட்டு போனேன், நீ கேளைய்யா.!
ஆண்:- யாரை நீ கட்டினே யாரை நீ விட்டுட்டே
        யாரைதான் எடுத்திட்டு போனே நீ மல்லிகே
பெண்:_பசுவை நான் கட்டினேன்
       கன்றை நான் விட்டிட்டேன்
      பாலைத்தான் எடுத்திட்டு போனேன்,நீ கேளைய்யா.!


ஆண்.;-சொல்லு நீ சொல்லடி மல்லிகே

       செண்பகமே சாமந்தியே
       குழுவில்கூடி சொல்லு நீ சொல்லடி மல்லிகே.!
பெண்.:_ஒண்ணை நான் தள்ளிட்டேன்
       ஒண்ணை நான் போட்டுட்டேன்
       ஒண்ணை நான் கையிலே,தாங்கி வந்தேன் நீ கேளைய்யா.!
ஆண் .:-யாரை நீ தள்ளினே
        யாரை நீ போட்டுட்டெ
        யாரை நீ கையிலே, தாங்கி வந்தே மல்லிகே
பெண்.;- கதவ நான் தள்ளினென்
        தாப்பாளப் போட்டுட்டென்
        வெளக்கை நான், கையில் தாங்கி,வந்தேனெ மச்சானே
ஆண்.;-  சொல்லு நீ சொல்லடி மல்லிகே
        செண்பகமே சாமந்தியே
        குழுவில் கூடி சொல்லு நீ சொல்லடி மல்லிகே
பெண்.;- ஒண்ணை நான் ஆசைப் பட்டேன்
        ஒண்ணை நான் போத்திக்கிட்டேன்
        ஒண்ணை நான் கட்டிக்கிட்டு படுத்திட்டேன் நீ கேளைய்யா.!
ஆண்.:-  யாரை நீ ஆசைப்பட்டே
         யாரை நீ போத்திக்கிட்டே
         யாரை நி கட்டிட்டுப் படுத்திட்டெ மல்லிகெ
பெண்.:- படுக்கைக்கு ஆசைப்பட்டேன்
        கம்பளியப் போத்திக்கிட்டேன்
        தலையணையக் கட்டிட்டுப் படுத்திட்டேன் மச்சானே.!
ஆண்.:- சொல்லு நீ சொல்லடி மல்லிகே
        செண்பகமே சாமந்தியே
        குழுவில் கூடி சொல்லு நீ சொல்லடி மல்லிகெ.
பெண்.:- ஒருத்தனுக்கு கால் கொடுத்தேன்
       ஒருத்தனுக்குக் கை கொடுத்தேன்
       ஒருத்தனுக்கு சேலை தூக்கிக் கொடுத்தேன் நீ கேளைய்யா
ஆண்.:-யாருக்குக் கால் கொடுத்தெ
       யாருக்குக் கை கொடுத்தெ
       யாருக்கு சேலை தூக்கிக் கொடுத்தெ நீ மல்லிகெ
பெண்.-தட்டானுக்குக் கால் கொடுத்தேன்
       வளைக் காரனுக்குக் கை கொடுத்தேன்
       வண்ணானுக்கு சேலை தூக்கிகொடுதேன் நான் மச்சானே
ஆண்.:- சொல்லு நீ சொல்லடி மல்லிகெ..........

( சில கன்னட வார்த்தைகளுக்கு மாற்று வார்த்தைகள் எழுதி உள்ளேன். உ-ம் கன்னடத்தில் கெளையா என்னும் சொல் இளைஞன் என்று பொருள்படும். அதற்கு மாற்றாக நீ கேளைய்யா என்றும் கும்பினல்லி  என்பதைக் குழுவில் கூடி என்றும் எழுதி உள்ளேன்.).                      





















  

Wednesday, October 17, 2012

இப்படியும் ஒரு கதை......


                              இப்படியும் ஒரு கதை.
                              ------------------------------


பல்த்மநாபா.... பல்த்மநாபா...விளிச்சால் கேக்குனில்லே. ?

“ இதா வந்நு திருமேனி. “

இல்லத்தின் திண்ணையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு ஆட்டிப் படைக்கிறார் தாசன் நம்பூதிரி.. பத்மநாபன் அவருடைய காரியஸ்தர். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர வேண்டும்.

கூப்பிட்டீர்களா ...என்ன வேணும்.?

வெற்றில அடக்கை தீர்ந்து போச்சு. எடுத்துவாரும்.“

திருமேனியின் தேவைகள் எல்லாம் பார்த்துப் பார்த்து செய்ய வேண்டும்.,திருமேனி என்று மரியாதையுடன் அழைக்கப் படும் தாசன் நம்பூதிரிக்கு வயசு சுமார் நாற்பது இருக்கலாம். காரியஸ்தர் பத்மனாபன் அவர் பிறந்தது முதல் அந்தக் குடும்பத்துக்காக உழைப்பவர். மிகவும் விசுவாசமான ஊழியர். தாசன் நம்பூதிரி திருமணம் ஆகாதவர். அதாவது பொறுப்புடன் ஒரு மனைவி குழந்தைகள் என்ற கட்டுப்பாடு இல்லாதவர். அவரது மூத்த சகோதரர் திருமணம் செய்து கொண்டார். நூறு பரை நெல் பயிரிடும் அளவுக்கு இருக்கும் கிருஷிக்குச் சொந்தக்காரர். திருமணம் செய்து கொண்டால் சொத்து பிரிக்கப்பட்டு  அனுபோக பாத்தியதை குறைந்து விடும் என்னும் காரணத்துக்காக மூத்தவர் மட்டும் திருமணம் செய்வது வழக்கத்தில் இருந்ததுதான். மற்றவர்கள் திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும் பிரம்மசாரிகள் அல்ல. அவர்களுக்கு அடுத்த நிலையிலுள்ள நாயர் மேனோன் குடும்பங்களில் சம்பந்தம் ( தொடுப்பு ) வைத்துக் கொள்வார்கள். அது அனுமதிக்கப் பட்ட ஒரு வழக்கம். அப்படி தொடுப்பு கிடைப்பதே ஒரு அங்கீகாரம், மரியாதை என்ற எண்ணம் நிலவி வந்தது.

“ பத்மநாபா, இன்றைக்கு நேரம் காலம் எல்லாம் கணிக்கும்போது , என் உறவில் ஒரு சந்தான பாக்கியம் கிடைக்க யாருக்கோ கொடுத்து வைத்திருக்கிறது.அது யார் என்று தெரிய வேண்டுமே.

தேவை தெரிவிக்கப் பட்டாயிற்று. திருமேனியின் விருப்பம் பூர்த்தி செய்யப் பட வேண்டும் “ யார் அந்த அதிர்ஷ்டசாலி ?

பத்மநாபனுக்கு இரண்டு சகோதரிகள். முறையாகப் புடவை கொடுக்கப் பட்டு வாழ்க்கைப் பட்டவர்கள். இருவருக்கும் சந்தானபாக்கியத்துக்கு குறைச்சலில்லை. ஒவ்வொருவருக்கும் மூன்று பெண்கள் ஒரு மகன். ஆனால் கட்டியவர்களுக்கு எந்த பொறுப்பும் கிடையாது. அவர்களை வளர்த்திப் பெரியவர்கள் ஆக்குவது மாமா பத்மநாபனின் பொறுப்பு. இல்லத்தில் காரியஸ்தராக இருந்ததால் வயிற்றுப் பாட்டுக்குக் குறை விருக்கவில்லை. குடிக்கக்கஞ்சியும் உடுத்த முண்டும் கிடைத்தது, யாருக்கும் எந்த குறையும் தெரியவில்லை. பத்மநாபனின் சொத்துபத்து எல்லாம் அவரது சகோதரிகளுக்குச் சேரும் இருந்த சொத்து என்று சொல்ல ஒரு வீடும் அதைச் சுற்றி இருந்த தோட்டத்தில் இருந்த சில  தென்னை மரங்களும் ஓரிரண்டு பலா மரங்களும்தான். சகோதரிகளின் பிள்ளைகளில்  ஒருவனான கோவிந்தனுக்கு  அங்கே இருந்த நிலவரங்கள் எதுவும் பிடிக்கவில்லை. இல்லத்து ஜமீனுக்காகப் பாடுபடுபவர்கள் அனுபவிப்பது என்னவோ மிகவும் குறைவான வசதிகள்தான். இல்லத்து ஜமீனில் பாடுபட வேண்டும் , மாடு கன்றுகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும் மெள்ள மெள்ள அவர்களது சிந்தனைகள் மாறுபடத் தொடங்கின. செய்யும் பணிக்கு ஏற்ற ஊதியம் கிடைக்க வில்லை எனும் எண்ணம் விருட்சமாய் வளரத்தொடங்கிற்று.

எந்த ராஜாவோ எதற்காகவோ கொடுத்த ஏகப்பட்ட நிலபுலன்களில் வேலை செய்பவர்கள் தாழ்த்தப் பட்ட மக்களாக , அடிமைகள் போல் நடத்தப் பட்டது கொஞ்சம் கொஞ்சமாக உரைக்கத்தொடங்கிற்று. ஏன் இப்படி என்ற கேள்வி எழத்தொடங்கிற்று. அப்போதிருந்த நிலைமையில் பத்மநாபனின் சொத்து சகோதரிகள் இருவருக்கும் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் என பத்து பங்காகப் பிரிக்கப் பட்டால் புறங்கையை நக்கக் கூடப் போதாது. ஆனால் சகோதரிகளின் பெண்களுடைய குடும்பத்தைப் பராமரிக்கும் பொறுப்பு அந்த இரண்டு ஆண்வாரிசுகளை சாரும்.

காலங்காலமாக அடிமைத்தளையில் இருந்த மக்கள் மெதுவாக சிந்திக்கத்தொடங்கினர். அந்தக் கூட்டத்துக்கு முன் நின்று இந்தப் பழக்க வழக்கங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று முழங்கத் துவங்கியவர்களுள் கோவிந்தன் முக்கியமானவனாகக் கருதப் பட்டான்.

“ கர்ஷகர்களே ஒன்னு சேரின்.பணி செய்யுன்னோருக்கே பூமி சொந்தம் “என்று தொழிலாளிகள் திரளத் தொடங்கினர்.

இந்த நிலையில் தான் தாசன் நம்பூதிரி பத்மநாபனிடம் அவருக்கிருந்த சந்தான யோகம் பற்றிக் கூறினார். தாசர்களாகவே இருந்து பரம்பரை பரம்பரையாக ஆண்டைகளை ஆண்டவனாகவே நினைத்துப் பழகிப் போன பதமநாபனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. திருமேனி ஆக்ஞை இட்டு விட்டார். அதை எப்படியாவது நிறை வேற்ற வேண்டும். திருமேனியின் பீஜம் நம் குடும்பத்தில் இருப்பது நல்லதுதானே. சகோதரிகளின் பெண் ஒருத்தி பருவமடைந்து அன்று பூத்த மலர்போல இருக்கிறாள். திருமேனி மூலம் அவளுக்கு ஒரு குழந்தை கிடைக்கவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்

பத்மநாபன் தன் சகோதரியிடம் பேசி அவளை இந்த ஏற்பாட்டுக்கு இணங்க வைத்தார். வீட்டின் கார்னவர் , பெரியவர் கூறினால் முறையீடு ஏது.?கோவிந்தன் பகலெல்லாம் எங்கெங்கோ திரிந்து மாலை வீடு திரும்பியவன் நம்பூதிரியை வரவேற்க நடந்து கொண்டிருந்த  முஸ்தீபுகளைப் பார்த்து துணுக்கிட்டான்.,

“ மாமா , என்ன நடக்கிறது இங்கே.?
“ இல்லத்துத் திருமேனி தாசன் நம்பூதிரி நம் வீட்டுக்கு , உன் தங்கைக்குப் புடவை கொடுக்க வருகிறார்.

“ விருந்துக்கு ஏற்பாடு செய்து விட்டீர்களா.?

“ ஏஎய்ய்ய். அவர்கள் நம் வீட்டில் உணவருந்த மாட்டார்கள். பாலும் பழமும் , வெற்றிலை அடக்கையும் மட்டும்தான் எடுப்பார்கள். “

புடவை கொடுப்பவர் என் தங்கையை அவர் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போவாரா>?

ஏஏஏய்ய்ய், அதெல்லாம் பதுவில்லை( வழக்கமில்லை ) அவர் நம் வீட்டில் சம்மந்தம் வைப்பதே பெருமை அல்லவா.

“ அவர் மூலம் பிறக்கப் போகும் குழந்தைக்கு அவர் பொறுப்பாவாரா.

“ இது என்ன அதிகப் பிரசங்கித்தனமான கேள்வி. உனக்கும் உன் சகோதரிகளுக்கும் உன் அச்சன் பொறுப்பா இருக்காரா.,? எப்படி உன் அம்மா சின்னம்மா குடும்பமான உங்களுக்கு நான் பொறுப்போ , அதுபோல, உன் கூடப்பிறந்ததுகளுக்கு நீதான் பொறுப்பு “ என்று  மாமா பத்ட்மநாபன் கூறியதை கோவிந்தனால் ஜீரணிக்க முடியவில்லை.

அன்றிரவு தாசன் நம்பூதிரி பத்மநாபன் மருமகள் சங்கமம் இனிதே நடந்தது.
அதற்குப்பின் பல நாட்கள் நம்பூதிரி இரவில் வருவார். விடியலில் காணாமல் போய்விடுவார். ஆணும் பெண்ணும் இணைந்தால் என்ன நடக்குமோ அது நடந்தது

 நடைமுறை சம்பிரதாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்த கோவிந்தனுக்கு தன் வீட்டிலேயே நடப்பதை தவிர்க்க முடியாத்து வேதனைக் குள்ளாக்கியது. நம்பூதிரியின் வரவு சிறிது சிறிதாகக் குறைந்து முற்றிலும் நின்று விட்டது. தகப்பன் இருந்தும் இன்னார் மகன் என்று சொல்லும் உரிமை இழந்து வீட்டின் பெயரையும் இன்னாரின் மருமகன் என்று சொல்வதுமே பெருமைக்குரியதா,? தனக்குப் பிறக்கும் குழந்தைகளை வளர்த்துப் பரிபாலிக்கும் கடமையை நாம் செய்ய வேண்டும்.ஒரு முறை இல்லத்துக்குச் சென்று தாசன் நம்பூதிரியுடன் பேச வேண்டும் எப்படியும் தன் சகோதரியை அவன் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இவளை இப்படியே விட்டால் இவ்ளும் என்ன செய்வாள். இளமைக்காலத்தை தனியே கழிக்க வேண்டி இருக்குமே. இல்லையென்றால்,, இல்லையென்றால்  இவள் தவறான வாழ்க்கை முறையை எடுத்துக் கொள்ள வழி செய்வது போல் இருக்குமே.

என்னவெல்லாமோ சிந்தனையால் அலைக்கழிக்கப் பட்டவன் அடுத்த நாள் நம்பூதிரியின் இல்லத்துக்குச் சென்றான்.

“ வந்நிருக்கின்னது ஆரா ?”  என்ற நம்பூதிரியின் வரவேற்பு கோவிந்தனின் ரத்தத்தை கொதிக்கச் செய்தது.

:ஞான் நிங்களிடே அளியனாண.  தெரிய வில்லையா .?

“ இந்த உறவெல்லாம் சொல்லிட்டு வரக் கூடாது. உனக்கு என்ன வேண்டும்.?

“ எண்டெ பெங்கள் இவிட தாமசிக்கணம். இல்லெங்கில் திருமேனி ஞங்கள்டே வீட்டில் தாமசிக்கணம். “ உள்ளத்தில் இருந்த கோபாக்கினியை அடக்கி நிதானமாகக் கூறினான். கோவிந்தன்.

“ தனிக்கி எந்தா வட்டோ.?  போடோ இவடிருந்நு... “ என்று கூறி அவனை விரட்டினார். என்னவெல்லாமோ நினைத்து வந்த கோவிந்தன் ஒரு வினாடி அவனையே இழந்தான்.அவன் கண்களும் மனமும் அலைபாய அங்கிருந்த தேங்காய் சீவும் அரிவாளை எடுத்து ஒரே வெட்டு. நம்பூதிரியின் தலையைச் சீவி எடுத்தான். அறுபட்ட தலையுடன் ஆவேசமாக நடந்து வந்தவனைக் காண்கையில் அந்த ருத்ரனே வருவதுபோல் நினைத்த ஊரார் அவன் பின்னே செல்ல காவல் நிலையத்தில் சரணடைந்தான்.            




.