Wednesday, February 9, 2011

பூர்வ ஜென்ம கடன்....

பூர்வ  ஜென்ம  கடன்
------------------------------
             பெங்களூரின்  ஏழு  அதிசயங்களை தேர்ந்தெடுக்க  ஓட்டுப்  போடவேண்டி பத்திரிகையில்  செய்தி  படித்தேன். பெங்களூரின்  அதிசயங்களில் ஒன்றாக ,எல்லோரும்  கட்டாயம் பார்க்க  வேண்டிய  ஒன்றாக, நிச்சயம்  இடம் பெரும்  இடம் கர்நாடக  அரசின்  தலைமை செயலகமும் சட்டசபை  கூட்டத்  தொடர்  நடைபெறும்  இடமுமான  விதான   சௌதா ஆகும். பிரம்மாண்டமான  கருங்கல்  கட்டிடம்  பார்க்கும்  போதெல்லாம், நானும்  இந்த  பிரம்மாண்டத்தை  கட்டியவர்களில்  பங்கு உள்ளவன் என்ற  எண்ணம் ஒரு  பெரு  மூச்சுடன்  வரும்.

            1951-ல் தொடங்கி  1956-ல்  முடிவடைந்த  இந்த  கட்டிடம்  அப்போதைய  முதலமைச்சர்  கெங்கல்  ஹனுமந்தையாவின்  முயற்சியின்  விளைவு. 1954-ல்  பள்ளியிறுதி  பரீட்சை  எழுதி  உயர்கல்வி  படிக்க  முடியாத  நிலையில்   பெங்களூரில்   என்  தாய் வழி தாத்தா பாட்டி  வீட்டிற்கு  வந்திருந்தேன் .அரை நிஜார்   போட்டு     கொண்டிருந்த    காலம். எதிகாலம்  பற்றிய  ஆயிரம்  கனவுகள்  ஓட  ஓட  விரட்டிய  நேரம். மனம்  விரும்பிய  அளவு  உடல்  வளர்ந்திருக்கவில்லை.  ஐந்தடி  உயரம்  கூட  வளர்ந்திராத  உடல். பதினாறு  பிராயமே  கடந்திராத  காலம். எனக்கு  ஏதாவது  வேலை  தேடி  சம்பாதித்து  என் தந்தையின்  சுமையைக்  குறைக்க  வேண்டும்  என்ற எண்ணம்  பிரவாகமாக  ஓடிக் கொண்டிருந்த  நேரம். ஆனால் எனக்கு  யார்  வேலை  தருவார்கள்.? என்  தமக்கையின்  மாமனார்  அந்தப்  பொறுப்பை  ஏற்றுக்  கொண்டார். என்னை  அவருடைய  நண்பர்,விதான  சவ்தாவை  கட்டும்  ஒப்பந்ததாரர்களுள்  ஒருவரிடம்  அழைத்துச்  சென்றார். அவர் கட்டிடம்  கட்டத் தேவையான  கருங் கற்களை  செதுக்கி  சீராக்கி  உருவம்  கொடுத்து  தூண்களாகவும்  விதானங்களாகவும் செய்யும்  பணிகளில்  ஒரு  பகுதியை  ஒப்பந்தத்துக்கு  எடுத்துக்கொண்டிருந்தார். அந்தக்  கற்களை  செதுக்கும்  தொழிலாளிகளுக்கு  கொடௌனில் இருந்து  கற்களை  வாங்கிக்  கொடுக்க  ஏற்பாடு  செய்து, அவர்கள்  செதுக்கும்  பணியைக்  கண்காணிப்பதும்  எனக்கு  வேலையாகக்  கொடுக்கப்பட்டது.  காலை  எட்டு  மணி  முதல்  மாலை  ஆறு  மணி  வரை வேலை.  வெயிலில் நின்று  வேலை  செய்பவர்களை  கண்காணிக்க  வேண்டும். யார்  என்ன  வேலை, எவ்வளவு  செய்தார்  என்று  கணக்கு  வைத்துகொண்டு  மாலை  வீடு  திரும்புமுன்  ஒப்பந்த தாரரிடம்  தெரிவிக்க  வேண்டும். இதுதான் என் வேலை. வாழ்வில்  என் முதல்  வேலை. நான் சம்பாதிக்கப்  போவதற்கு  பிள்ளையார்  சுழி  போட்ட  வேலை. வெயிலின்  கடுமையைக்  குறைக்க  என் தமக்கையின்  மாமனார்  எனக்கு  ஒரு HAT வாங்கிக்  கொடுத்தார். ( அதை  அணிந்துகொண்டு  முதன் முதலில்  என் தமக்கை  வீட்டுக்குச்  சென்றபோது, அவர்கள் வீட்டின் அருகில் இருந்த  நாய்  ஒன்று  என்னைக்  கடித்து  நான் கஷ்டப்பட்டது  ஒரு  தனிக்கதை )நானும்  கொடுக்கப்பட்ட  வேலையை  உண்மையாக, திறமையாகச்  செய்து  கொண்டிருந்தேன். ஒரு  மாதம்  கழித்து  முதல்  மாசச் சம்பளத்தை  ஆர்வமுடன்  எதிர்பார்த்துக்  காத்திருக்கையில், எனக்கு  தரப்பட்ட  சம்பளம்  பார்த்து  மிகுந்த  ஏமாற்றமடைந்தேன். ஒரு  மாதம்  வெயிலில்  நின்று  வேலை  செய்த  எனக்கு தரப்பட்ட  சம்பளம்  ரூபாய்  இருபது. நான் அது  மிகவும்  குறைவு ,இன்னும்  கூடத்தரவேண்டும்  என்று கேட்டேன். வேண்டும்  என்றால்  வாங்கிக்  கொள் . இல்லாவிட்டால்  இதுவும்  கிடையாது  என்று அவர்  கூறினார்.  நான்  என்  தமக்கையின்  மாமனாரிடம்  முறையிட்டேன். "நீ  அதை  வாங்காதே. நான்  அவனிடம் பேசி  அதிக சம்பளம்  பெற்றுத்  தருகிறேன்." என்று கூறினார். அந்த  ஒப்பந்ததாரரிடம்  அவர் சென்று  கேட்க, அவன்  மறுக்க, அவர்கள்  நட்பு  முறிந்தது. "உன்னைக்  கோர்ட்டில் நிறுத்துவேன் " என்று மிரட்டிப்  பார்த்திருக்கிறார். ஆனால் அவனோ அதற்கும்  அவரிடம் "பெப்பே" கூறிவிட்டான்.
               என் தாய்மாமா  ஒருவர்  வழக்கறிஞ்சராக  பணியாற்றிக்  கொண்டிருந்தார். அவர் மூலம்  வக்கீல்  நோட்டிசும்  அனுப்பப்பட்டது. ஆனால் அது  வாங்கப்படாமலேயே  திரும்பி   வந்தது. பின் என்ன.? நான் ஒரு மாதம் பணி செய்ததுதான்  மிச்சம். அந்த ரூபாய்  இருபது   கூட  இல்லாமல் இலவச  உழைப்பாகி  விட்டது. என் பூர்வ  ஜென்ம  கடனோ என்னவோ...?  இப்போதும்  விதான    சவ்தா  வழியாகச்  செல்லும்போது ,ஒரு  பெருமூச்சு  என்னையறியாமல்  வெளிவரும்.
------------------------------------------------------------------------                   


19 comments:

  1. நெகிழ்ச்சியாக இருந்தது பாலு சார்.

    விதான் சௌதாவில் உங்களின் நேர்மையான ஒரு மாத உழைப்பும் உங்களின் துயர்மிக்க ஏமாற்றமும் மறைந்திருக்கிறது.

    இது போலவே பெரிய பெரிய வரலாற்றுச் சின்னங்களைப் பார்க்கும்போதும் அதை உருவாக்கியவனின் பின்னே இது போல் எத்தனை சொல்லப்படாத துயர்கள் மறைந்திருக்கிறதோ என் நினைத்துக்கொள்வேன்.

    ReplyDelete
  2. Touching, sir! i've been to b'lore just once in my life. Not been around the city much. I ve not seen vidhaan chowda.
    but the incident you have presented here, for some reason reminds me of something else i happened to see in discovery network.
    there was a show that covered different aspects of India- and that week, it was Tanjore temple. Raja Raja had inscribed the names of all the people who were the part of the temple on its walls along with their addresses. the discovery team, found out a name/address of one of the temple dancers and went to the modern day address of the original address mentioned. there- we see a temple for Lord Ganesh, and its priest claims that the tiny temple had been there for 1000 years! the narrator says- "if only he knew this place belonged to a dancer..."

    most places-- buildings, fields, etc. hold memories. They have stood and witnessed numerous events, happy or sad. the radiation, those memories emit from those places is what is making the place all the more special to our eyes!

    really good post, sir!

    ReplyDelete
  3. விதான சௌதாவில் நீங்கள் பணிசெய்த
    காலத்திற்கான ஊதியம் கொடுக்கப்பட்டிருந்தால்
    உங்களுக்கும் அதற்குமான தொடர்பு
    அத்தோடு முடிந்து போயிருக்கும்
    இப்போது இருக்கிற நெருக்கம் இருக்காது என
    நினைக்கிறேன் சரியா ?
    நல்ல பதிவு.தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ஊதியம் கொடுக்காத பழி அவர்களுக்கு என்றால் ,அந்தக் கட்டிடம் எழுவதற்கு உங்கள் இருபது ரூபாயும் ஒரு நன்கொடையாகச் சேர்ந்திருக்கிறது.

    ReplyDelete
  5. ரொம்பவும் நெகிழ்வான அனுபவமாக இருக்கிறது பாலுசார், நான் நிறைய தடவை விதானசௌதாவுக்குள் போயிருக்கிறேன். ஆரம்ப காலத்தில் சின்னப்பையனாக என்னுடைய தந்தையாருடன் பென்ஷன் வாங்க. அதன்பிறகு பத்திரிகைகளுக்காக முதல்வர்களையும் மற்ற அமைச்சர்களையும் பேட்டி காண...பிறகு அங்குள்ள பாங்க்வெட் ஹாலில் நடக்கும் அரசாங்க விழாக்களில் கலந்துகொள்ள...என்று.இப்போது நீங்கள் சொல்லியிருக்கும் இந்த சம்பவத்திற்குப்பின்னர் அந்தப் பக்கம் போகும்போதெல்லாம் உங்கள் ஞாபகம்தான் வரப்போகிறது.என்ன ஆச்சரியம் என்றால் அத்தனை வருடங்களுக்கு முன்னாலேயே ஏமாற்றும் குணமெல்லாம் மனிதர்களுக்கு வந்துவிட்டிருக்கிறதே என்பதுதான். உங்கள் அனுபவங்களை நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete
  6. இலவச உழைப்பு...... ம்ம்ம்ம்... இப்படி செய்து விட்டார்களே.

    ReplyDelete
  7. நெகிழ்வாக உணர்கிறேன்...
    உங்களின் எல்லா பதிவுகளும் எதோ ஒரு விதத்தில் மனதைத் தொட்டு விடுகின்றன..

    ReplyDelete
  8. Expectations belied,deep down with in your heart,how much you would have feltwith pangs of pain.A very first maiden venture in order to support your family had been in vain..
    vidhana sowdha has brought back those unfoegettable bitter experience..heart rending indeed..

    ReplyDelete
  9. உணர்வு பூர்வமாய் ஒரு பகிர்வு
    ஏக்கங்களும்
    ஏமாற்றங்களும்
    அவளோ எளிதில் மறைவது இல்லை ஐயா

    ReplyDelete
  10. மிகவும் நெகிழ்ச்சியான பகிர்வு.

    ReplyDelete
  11. என் வலைக்கு விஜயம் செய்து, என் எழுத்துகளை படித்து ஆதரவு தரும் அன்பு நெஞ்சங்கள் சுந்தர்ஜி, மாதங்கி, ரமணி சித்ரா,காளிதாஸ், கௌரிப்ரியா, குறிஞ்சி.மற்றும் முதல் வருகை தரும் அமுதவன், வல்லிஸிம்ஹன்,சிவாவுக்கும் தொடர்ந்து வருகை வேண்டி நன்றி தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  12. வணக்கம் ஐயா, உங்கள் வலைத்தளத்தை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் நன்றி!

    ReplyDelete
  13. அன்புள்ள ஐயா..

    தொடர்ந்து பயணங்களில் இருக்கிறேன். எனவே வலைக்குள் வர இயலவில்லை. இருப்பினும் எதேச்சையாய் உங்கள் வலைக்கு வந்ததும் இதைப் படித்தேன். கண்கள் கசிந்துவிட்டன. ஆனாலும் உங்களின் மேல் இன்னும் கூடுதல் மரியாதை எழுகிறது மனசுக்குள். திரு ரமணி அவர்கள் சொன்னதுபோல் இருபது ரூபாய் வாங்கியிருந்தால் அது முறிந்துபோயிருக்கும். விதான் சௌதாவைப் பார்த்து பிரமித்து 1982 இல் கவிதை எழுதியவன். இப்போது அதில் உங்களின் பங்கும் அணில் ராமருக்கு உதவியதுபோல என்று எண்ணும்போது மகிழ்ச்சியாயிருக்கிறது. இனி விதான் சௌதா இருக்கும்வரையில் உங்களின் உழைப்பின் துளி அங்கே இருக்கும். இது கடவுளின் எண்ணம் என நினைக்கிறேன். நெகிழ்ச்சியான பதிவு. பயணங்களை முடித்துவிட்டு விரைவில் வருவேன். சுந்தர்ஜியின் பல பதிவுகளை விட்டுவிட்டு அலைவதிலான வருத்தமுடன்.

    ReplyDelete
  14. Experience Speaks...
    Share more of your experiences which will be a lesson for us sir...
    Also it helps the younger generation to know more about the happenings of 50's and 60's

    ReplyDelete
  15. சொந்த அநுபவங்களை வலையில் எழுதுவதா, என்ற நீண்ட சிந்தனைக்குப் பிறகு எழுதியது.உண்மை சம்பவங்கள் ஈர்க்கும் சக்தி படைத்தது என அறிய உதவியது.கருத்துகள் வெளியிட்ட அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  16. //சொந்த அநுபவங்களை வலையில் எழுதுவதா,...//

    அனுபவங்களை, அதுவும் ‘அந்தக் காலத்து’ அனுபவங்களை எழுதுவது காலச்சக்கரத்தின் சுழற்சியைச் சொல்வது போலிருக்கும். அதை நிறைய எழுதுங்களேன்.

    ReplyDelete
  17. விதான் சௌதா கட்டுமானத்தின் போது (தமிழில் ‘ன்’ போட்டுத்தான் பெரும்பாலும் சொல்லுகிறார்கள்; எழுதுகிறார்கள்) செய்த வேலைக்கு சம்பளம் கொடுக்காமல் விட்டாலும் உங்களுக்கும் அதில் ஒரு சிறு பங்கு உண்டு என்பது ஒரு பெருமிதமான விஷயம்தான்.

    ReplyDelete
  18. விதான் சௌதா கட்டடத்திற்காக உங்களின் 1 மாத உழைப்பு மட்டுமல்ல உங்களுடைய நேர்மையையும் கொடுத்துள்ளீர்கள் என்பதனை இங்கு கவனிக்கவும்.>> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete
  19. என் முதல் மாத உழைப்பு வீணாயிற்று சம்பளமில்லாத உழைப்பு

    ReplyDelete