Wednesday, February 16, 2011

இனி நீயெல்லாம் உன் நினைவுதான்.

இனி நீயெல்லாம் உன் நினைவுதான்.
-------------------------------------------------------
         இன்று நீ நிறுவியுள்ள இந்தத் தொண்டு நிறுவனத்தின் ஆண்டு விழா. எங்கு   பார்த்தாலும் உன் பேச்சு; எங்கு பார்த்தாலும் உன் சாதனைகள்; எங்கு பார்த்தாலும் உன் நினைவுகள். பின் எப்படித்தான் இருக்க முடியும்.? நீதான்  நீயாக இல்லாமல் உன் நினைவாக  மாறிவிட்டாயே.
         நண்பா, சிந்திக்க வேண்டும், ஆழ்ந்து  சிந்திக்க வேண்டும்  என்று அடிக்கடி  சொல்வாயே. நீ சிந்திக்கவில்லையா.? இல்லை சிந்தித்ததைசாதிக்கவேண்டும்,   இதற்கு  மேல் சிந்தித்தால் சாதிக்க முடியாது என்று நினைத்துப்  போய்விட்டாயா.? நீ சிந்தித்து  சாதித்ததை தொடரவும், சாதிக்கமுடியாமல் விட்டதை  சாதித்துக்காட்டவும்  நாங்கள் இல்லையா.? இந்த  வாழ்க்கைப் போதுமா உனக்கு ?. உன் நினைவு  எங்களை  வாட்டுகிறது. எண்ண எண்ண சித்தம் கலங்குகிறது.
       அதெப்படி நண்பா உன்னால் மட்டும் அப்படி தீர்க்கமாக எண்ணமுடிந்தது.? நடக்கும் செயல்களுக்கு காரண காரியங்களைக் கண்டறிந்து, தவறுகள் திருத்தி சீராக்கி வழிகாட்டிவாழ்ந்தாயே.."சொல்வதை செய் செய்வதை சொல்"  என்ற  தாரக  மந்திரம்தானே உனக்கு வழி காட்டி.?
       அனாதைகளாகஇருக்கவும்ஆதரவு அற்றவர்களாக  இருக்கவும் குழந்தைகள் என்ன பாவம் செய்தன.?பிறக்கும்போதே  ஏற்ற தாழ்வுகளுடனே ஏன் பிறக்க  வேண்டும் என்று கேட்டுக்கலங்குவாயேநினைவிருக்கிறதா.அதெப்படிஇருக்கும் .நீதான் நீயாக இல்லாமல் நினைவாக மாறிவிட்டாயே.
      காரணங்கள் இல்லாத காரியங்களே கிடையாது.ஆனால் காரணம கண்டு பிடிக்க முயலுவது  சிக்கலுள்ள நூல் கண்டின் முனை கண்டு சிக்கல் நீக்குவது  போலாகும .சில சமயம் முடியலாம்.சில நேரங்களில் முடியாமல் போகலாம்  என்றெல்லாம்  கூறுவாயே  சிக்கல் உள்ள நூல் கண்டு ஒன்றின் முனையாக நீ கண்டது  கல்வி  அறிவு  இல்லாமை என்று வாதாடுவாயே. யார் கல்வி கற்க வேண்டாம் என்று தடுக்கிறார்கள்  ? அறியாமையின் விளைவு என்று சொன்னால் அறியாமையின காரணம் தேட வேண்டும்   என்பாயே. பலரும் அறியாமை இருளில் மூழ்கி கிடப்பதே சில சாராருக்கு நன்றாக  இருந்தது அறியாமையில் கிடந்தால தானே அடக்கியாள முடியும்.அடக்கி ஆளவும்  ஆதிக்கம் செலுத்தவும் ஏதுவாக மதம் என்றும் சாதி என்றும் கூறி,மக்கள் மாக்களாக  இருப்பதே நன்று என்று இருந்தோரும் உண்டு என்றெல்லாம் நீ கூறியது  நினைவுக்கு  வருகிறது. உனக்கு வராது. நீதான் நீயாக இல்லாமல் நினைவாக மாறிவிட்டாயே
        வாழ்வியலில் சவுகரியத்துக்காகவும் பொறுப்புகள் பகிர்ந்து கொள்ள வேண்டியும் வகுக்கப்பட்ட வர்ணாசிரம தருமங்களைத் தவறாகப் புரிந்து கொண்டு ,அதையே ஆயுதமாக்கி ஆண்டை என்றும்  அடிமை என்றும் காலங் காலமாக அடக்கியாண்டு அதையே நீதி என்றும் சாத்திரம் என்றும் சாற்றி, கேள்வி கேட்டால் முகம் திரிந்து நோக்குவதோடு அல்லாமல்,நாத்திகன் என்ற பட்டமும் கொடுத்து, வேறுபடுத்தும் வாழ்வியல் முறையே அறியாமையின் அஸ்திவாரம் என்று முழங்குவாயே உனக்கு நினைவு வராது.ஏனென்றால் நீதான் நீயாக இல்லாமல் நினைவாக மாறிவிட்டாயே.
        இன்று கல்விக்கண் கொடுத்து அறியாமை இருள் அகல்விக்க எல்லோருக்கும் சம வாய்ப்பு என்பதோடு நில்லாமல் நேற்றுவரை அடக்கப் பட்டவனை கொஞ்சம் தூக்கிவிட சில சலுகைகள் கொடுக்கப் படும்போது முகச்சுளிப்புகளும், மனக்கசப்புகளும் காணும்போது  நம் பாட்டனுக்குப் பாட்டன் ,அவனுக்கும் பாட்டன் முதல் நம் முன்னோர்கள்  செய்த பிழைகள் அவர்களது சந்ததிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது ஒன்றும்  நீதிக்கு மாறானதில்லையே,ஆச்சரியமில்லையே என்று நியாயப் படுத்துவாயே
      வசதிகள் பல பெற்று, வாழ்க்கையின் முன்படியில் இருப்பவன், வசதி அற்றவனுக்கு கை கொடுத்து படி ஏற்றுவதுதான் நியாயம் என்றெல்லாம் வாதாடுவாயே.அப்படி படியேறி வந்தவர்களில் சிலர் இப்போது முறையற்ற வழிகளில் முன்னேறி, கடந்து வந்த பாதைகள் மறந்து போய ,ஆடும் ஆட்டம் காணும்போது மனம் நோகுதே என்று விகசிப்பாயே, நண்பா.
      சில நூல் கண்டுகளின் முனையறிந்து காரணம் கண்டாலும், அறியாத காரணங்கள் ஆயிரம் உண்டு.அதனை அறியும் முயற்சிதான் இக்குழந்தைகள் காப்பகம் மூலம் நான் செய்யும் மானுடத்தொண்டு, என்றும், என்னையே நானறியவும் பிறப்பின் காரணம் அறியவும் நான் செய்யும் முயற்சி என்று நீ கூறித் துவங்கிய இந்தக் காப்பகம் நீயின்றித் தவிக்கும் என்றாலும், கிளை பரப்பி நிழல் தரும் அளவுக்கு வளர்த்தி நீ விட்டுச் சென்றிருக்கிறாய்  இது மேலும் தழைக்கவும் மேன்மேலும் வளரவும் அறியாமை இருள் நீக்க நாங்கள் பாடுபடுவோம். சிக்கல் உள்ள நூல் கண்டுகள் பல உண்டு, அவற்றில் இது ஒன்று, இன்னும் பலவற்றின் முனை கண்டு சிக்கல் அவிழ்க்க நாங்கள் முயலுவோம். இதுவே நீயாக இல்லாமல் உன் நினைவாக மாறிவிட்ட உனக்கு நாங்கள் செய்யும் இறுதிக்  கடனும் அஞ்சலியுமாகும்.
===================================   
 


.        .  
                                                                                                                                                                                 .
 



6 comments:

  1. வாழ்வியலில் சவுகரியத்துக்காகவும் பொறுப்புகள் பகிர்ந்து கொள்ள வேண்டியும் வகுக்கப்பட்ட வர்ணாசிரம தருமங்களைத் தவறாகப் புரிந்து கொண்டு ,அதையே ஆயுதமாக்கி ஆண்டை என்றும் அடிமை என்றும் காலங் காலமாக அடக்கியாண்டு அதையே நீதி என்றும் சாத்திரம் என்றும் சாற்றி, கேள்வி கேட்டால் முகம் திரிந்து நோக்குவதோடு அல்லாமல்,நாத்திகன் என்ற பட்டமும் கொடுத்து, வேறுபடுத்தும் வாழ்வியல் முறையே அறியாமையின் அஸ்திவாரம் என்று முழங்குவாயே உனக்கு நினைவு வராது.ஏனென்றால் நீதான் நீயாக இல்லாமல் நினைவாக மாறிவிட்டாயே.


    ......ஆழமான வரிகள்..... வித்தியாசமான முறையில் எழுதப்பட்ட பதிவு.

    ReplyDelete
  2. Not even the Avatar has fulfilled their birth. If so we might not have had this unjust even NOW after all his NINE avatars.
    Haves and have-nots always exist in this wonder world. Some body like your friends will light this dark world like star and dissolve. We appreciate their gesture and praise them.

    ReplyDelete
  3. உள்ளும் புறமும் அறிந்த ஓர் நண்பனுக்கு இதைவிடச் சிறப்பாக ஒரு நினைவுகூறல் வாய்க்காது பாலு சார்.

    ReplyDelete
  4. நல்லவர்களை
    அவர்தம் நற்செயல்களை
    நினைவு கூறல் கூட
    நம்மை நல்வழிப்படுத்தும்
    நல்லவைகளைச் செய்ய
    நம்மை உறுதியாக ஊக்குவிக்கும்
    எங்களுடன் தங்கள் நல்ல நினைவுகளைப்
    பகிர்ந்துகொண்டமைக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  5. உங்கள் நண்பருக்கு என் அஞ்சலிகளும்.
    அவர் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொண்டிருக்கலாமே .

    ReplyDelete
  6. என் நெஞ்சில் ஆழ்ந்திருந்த எண்ணங்களைக் கடத்த என் புத்தியில் உதித்த புனைவே இந்த நண்பனும் என் அஞ்சலிகளும். கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட சித்ரா, வாசன், சுந்தர்ஜி, ரமணி,சிவகுமாரன் அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete