Monday, April 4, 2011

திமுக ஆட்சி. முதல் நூறு நாட்கள்

திமுக  ஆட்சி............. முதல் நூறு நாட்கள். 
---------------------------------------------------------
           திமுக ஆட்சி வெற்றியா அல்லவா என்பதை ஆட்சி
பீடத்தில் அமர்த்திய முதல் நூறு நாட்களில் ஆராய்வதே சரியா 
தவறா என்பது முதலில் சிந்திக்கப்பட வேண்டிய விஷயம். 
இருப்பினும் முதல் நூறு நாட்களில் வெற்றி பெறுவதற்கான 
வழிமுறைகளை வகுக்கிறார்களா,கையாளுகிறார்களா என்பதை 
சிந்தித்து நோக்கி விளக்கம் காண முயலுகையில் பெரும் 
ஏமாற்றமே ஏற்படுகிறது. இவர்கள் பெரியதாக சாதித்து 
விடுவார்கள் என்று நம்பி, அது பலனடையாமல் போவதை 
கண்ணாரக் காண்பதால், ஏற்பட்டதல்ல ஏமாற்றம்; ஏழைப் பாமர 
மக்களை அடுக்குமொழி அலங்கார வாய் சொற்களை வீசி மயக்கி 
பதவியில் அமர்ந்ததனாலும் ,நடுத்தர மக்களை அவர்களை வாட்டி
கொண்டிருந்த பசி போக்கும் அரிசியின் விலை ஏற்றத்தைக் காட்டி 
ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுவோம், என்று பசப்பு மொழி 
கூறி, அரசியலை அரிசி இயலாக்கி காண்பதாலும், இள 
வயதினரின் தமிழ் பற்றை மொழி வெறியாக மாற்றி, அதன் மூலம் 
ஆட்சியை அடைந்தவர்களின் சாதனையைக் காண்பதனாலும்
ஏற்படும் வருத்தம் , இவர்களது நடைமுறைக் கொள்கைகளையும் 
வழிமுறைகளையும் அறியும்போது ஐயகோ இந்த அவல 
நிலைக்கு ஆளாகிறோமே என்ற ஏக்கப் பெருமூச்சுதான் ஏமாற்ற 
மாகப் பிரதிபலிக்கிறது.

     அனைத்திந்தியாவிலும் யாரும் எண்ணியும் பார்க்க முடியாத 
விஷயம் ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்பது. மற்றவர்களுக்குத் 
தெரியாத மாய மந்திரங்களும் இந்திர ஜாலங்களும் இவர்களுக்குத் 
தெரியுமோ என்னவோ; இல்லை, நாங்கள் அரிசி போடுகிறோம் 
ஆனால் மத்திய அரசு குறுக்கே நிற்கிறது என்று சொல்ல மற்றவர் 
களுக்குத்தான் தெரியவில்லையோ.!ஏழைப் பாட்டாளியை 
ஏமாற்றுவதில் கைதேர்ந்த வாய்ச்சொல் வீரர்கள் இன்னொன்றும் 
கூறுகிறார்கள். ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்று ஆரம்பிக்கிறோம் 
ஆனால் அதற்கு பொறுப்பு மத்திய அரசு ஏற்கவேண்டும். காஷ்மீர் 
மக்களுக்கு மட்டும் கோதுமை எப்படி குறைந்த விலைக்கு கொடுக் 
கிறார்கள் ? காஷ்மீரில் இருக்கும் அபாயம் தமிழகத்தில் இருக்கக் 
கூடாதா.?இவர்களுடைய சாயம் வெளுக்க வில்லையா.பயம் 
காட்டப் பார்க்கிறார்கள். நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு குழி 
வெட்டப் பார்க்கிறார்கள். இதே கதியில் ஒவ்வொரு மாநில அரசும் 
கூற முடியாதா.?கூறினால் ஏற்படும் பலன் அறிய முடியாததா ? 
இவர்களுக்கு ஒட்டுக் கொடுத்து ஆட்சி பீடத்தில் ஏற்றிய மக்கள் 
நெஞ்சு கொதிக்காதா? 

      மேலும் அரிசியிலும் ஏழை அரிசி, பணக்காரன் அரிசி, ரேஷன் 
அரிசி,கடைஅரிசி என்று என்னவெல்லாமோ கூறுகிறார்கள் ஐயா, 
ஏழை அரிசிதான் ரூபாய்க்கு ஒரு படி தருகிறேன் என்கிறாயே,
அதை ஏன் எல்லா மாவட்டங்களுக்கும் பொதுவாக்கக்  கூடாது.
நான் அடிக்கிறார் போல் அடிக்கிறேன் நீ அழுகிறாற்போல் அழு 
என்று சொல்வார்களாம். அதுபோல இவர்கள் ரூபாய்க்கு ஒரு படி 
போடுகிறார்போல் போடுகிறார்களாம் நாம் பெறுகிற மாதிரி 
பெற வேண்டுமாம். என்னே இவர்களது புத்திசாலித்தனம் !
தேர்தல் வாக்குமூலத்தை நிறைவேற்றுகிறாற்போல் நடிப்பு, 
அதுதான் அவர்களுக்கு கைவந்த வித்தை ஆயிற்றே. 

    ஆட்சி மொழியை எடுத்துக்கொள்வோம் .தமிழை பாதுகாப்பதாக
கூறுகிறார்கள். எப்படி.? பலகை எழுதுவதன் மூலமும், சினிமா
மூலமுமா.?ஒன்று மட்டும் கூறுகிறேன். தமிழனுக்கு மொழி பற்று 
உண்டு.ஆனால் அதையே ஊதி வீசி வெறியாக்க முனைகிறார்கள் 
திமுகவினர். இவர்களின் அடுக்குமொழி வாதங்களைக் கேட்டு 
இவர்கள்தான் தமிழை தோற்றுவித்து ,பேணிக் கட்டிக் 
காக்கிறார்கள் என்று எண்ணும் இளைஞர்கள இன்று இல்லா 
விட்டாலும் என்றாவது ஒருநாள் விழிக்கப் போகிறார்கள், பின் 
மனம் நொந்து கொதிக்கப் போகிறார்கள்.ஆனால் அதற்கு  முன்பே 
போட்டி மிகுந்த இந்த சமுதாயத்தில் அவர்கள் பின் தங்கி விடக் 
கூடாதே என்பதுதான் என் வருத்தம். இப்போது பள்ளிகளில் 
தமிழும் ஒழுங்காயில்லை, ஆங்கிலமும் சரியில்லை, இந்தியோ 
இல்லவே இல்லை. திணிக்கப்படும் இந்தியை எதிர்த்து நிற்கட்டும் 
கூடவே விரும்பிப் படிப்பவருக்கு சந்தர்ப்பம் கொடுக்கலாமே. 
ஆங்கிலம் போதிக்கப்படும் தரத்தை உயர்த்தலாமே. ஆக்க 
வேலையில் ஈடுபடுபவனுக்கு ஊக்கம் கொடுக்கலாமே. 
      மதுவிலக்கு திட்டம் பொறுத்தவரை திமுகவின் கொள்கைகள் 
மதில்மேல் பூனைக்கு ஒப்பிட முடியும். என்ன செய்வதென்று 
புரியாமல் மக்களின் தீர்ப்புக்கு விடுகிறோம் என்று சப்பை கட்டு 
கட்டுகிறார்கள். இவர்களுடைய முடிவினால் ஏற்படும் 
விளைவுகளின் பொறுப்புக்கு ஆளாக மறுக்கிறார்கள். இவர்களே 
இவர்களின் நிலை புரிந்து கொள்ளாத பரிதாப நிலை. !குதிரைப் 
பந்தயங்களை ஒழிப்போம் என்கிறார்கள். இப்போது காசு 
வைக்காமல் ஆடும்  பந்தயங்கள் பரவாயில்லை என்கிறார்கள் 
இந்த மாதிரி விஷயங்களில் இவர்கள் இன்னும் ஒரு முடிவுக்கு 
வராததைக் காணும்போது, இன்னும் ஒன்றும் கேட்டுப் போக 
வில்லை என்ற மன ஆறுதல் ஓரளவுக்கு ஏற்படுகிறது. 
      இன்னும் என்னென்ன வேடிக்கைகள். தொண்டர் படை 
அமைக்கப் போகிறார்களாம். எதற்கென்று கேட்கிறோம். சீனச் 
செங்காவலர் படையினை முன்னோடியாகக் கொள்ளும் 
திமுகவினரின் தொண்டர் படை, அண்ணாவின் எண்ணங்களை 
மக்கள் மீது திணிக்கவா.?கிடைத்த ஆட்சிக்கு வன்முறை  நீர் 
ஊற்றி வேரூன்றப் பார்க்கிறார்களா.? செயலால் ஏற்படுத்த 
முடியாத வெற்றிக்கு "தம்பிகளின்" ஆர்வ வெறியால் அஸ்தி
வாரமிடப் பார்க்கிறார்களா.?
      கலப்பு மணம் செய்பவருக்கு தங்கப் பதக்கமாம்..!கண்டதும் 
காதல் என்ற மோகம் அலைக்கழிக்க பால் உணர்ச்சிக்குப் பலி 
யாகி, வெறியைத் தணிக்க சற்றே வளைந்து கொடுத்து, சுய 
மரியாதைத் திருமணம் செய்து கொள்பவர்களின் வாழ்க்கை 
எவ்வளவு தூரம் வெற்றி பெறுகிறது என்பதன் புள்ளி விவரங்கள் 
இவர்களுக்குத் தெரியுமா.? திருமணம் என்பது ஆயிரம் காலப் 
பயிர். ஆணும் பெண்ணும் உள்ளங்க்கலந்து ஒருமித்துச் செயல் 
படவே என்றிருக்கும் வாழ்க்கைத் தோணி. இதில் தூண்டுதல் 
என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆசை வார்த்தைகளுக்கும் தங்க 
பதக்கங்களுக்கும்  அர்த்தமே இல்லை. கலப்புத் திருமணங்கள் 
நடந்து வெற்றி பெற தங்கப் பதக்கங்கள் உதவாது. ஒரு சமயம் 
அடகு வைக்க உதவலாம், அதுவும் நல்ல தங்க மானால்.!

     திமுகவினர் தங்களது குறைபாட்டுகளுக்கெல்லாம்  காரணம் 
மத்திய அரசுதான் என்கிறார்கள். இந்திய சட்ட அமைப்புப்படி 
ஏற்படுத்தப்பட்ட மாநிலங்களின் உரிமைகளைக் கொண்டு 
இவர்களால் இதற்குமேல் சாதிக்க முடியுமா என்பதே கேள்வி. 
சாதிக்கிறோம் என்று விசுவாசப் பிரமாணம் எடுத்துக்கொண்டு. 
ஆட்சியில் இருக்கிறார்கள்.முடியாத போது  சட்ட அமைப்புதான்
காரணம் என்று கூறி தப்பிக்க முயல்வது, ஏமாற்று வித்தை.
முடிவாக நூறு நாட்களில் இவர்கள் சாதித்ததைக் கண்டும்,
சாதிக்கப்போவதாக கூறி எடுத்து நடத்தும் வழிமுறைகளை
காணும்போதும், வருத்தமும் ஏமாற்றமுமே மிஞ்சி நிற்கும்.
தமிழக மக்கள் இவர்களது ஆட்சியை வெற்றி என்று எப்படி
கூறுவர்.? ஏமாற்றிப் பதவியில் அமர்ந்ததே திமுகவின் வெற்றியே
தவிர, இவர்களின் ஆட்சிப் போக்கு வெற்றியே அல்ல

=================================================
திரு வாசன்  அவர்கள் என் உத்தயோக காலத்தில் அரசு 
நடவடிக்கைகளை ,செயல்பாட்டை எப்படி பொறுத்துக் 
கொண்டேன் என்று வினவி இருந்தார். அந்த காலத்திய 
எண்ணங்களுக்கு வடிகாலாய் நான் நான் எழுதி வைத்திருந்தது 
இப்போது இங்கு பதிவாகிறது. நன்றி வாசன்.
                            +++++++++++++++++++





 





       

7 comments:

  1. இப்போது பள்ளிகளில்
    தமிழும் ஒழுங்காயில்லை, ஆங்கிலமும் சரியில்லை, இந்தியோ
    இல்லவே இல்லை. திணிக்கப்படும் இந்தியை எதிர்த்து நிற்கட்டும்
    கூடவே விரும்பிப் படிப்பவருக்கு சந்தர்ப்பம் கொடுக்கலாமே.
    ஆங்கிலம் போதிக்கப்படும் தரத்தை உயர்த்தலாமே. ஆக்க
    வேலையில் ஈடுபடுபவனுக்கு ஊக்கம் கொடுக்கலாமே.


    ......சிந்திக்க வைக்கும் வரிகள். ம்ம்ம்ம்......

    ReplyDelete
  2. சிந்தித்து சிந்தித்து வோட்டை யாருக்கு போடுவது என்ற குழப்பதிலும் அவசரத்திலுமே முடிந்துவிடுகிறது படித்தவர்களின் வாக்குகள்.

    புதிதாய் ராமராஜ்ஜியம் அமையா இன்னொரு கட்சி வந்தால் கூட நம்பிக்கை கடந்து விட்ட மனநிலையில் மக்கள்.

    ReplyDelete
  3. அன்றைய நிலையை இன்று யோசித்து எழுதுவதைவிட
    அன்றைக்கே எழுதிவைத்ததை இன்றுபடிக்கையில்
    வித்தியாசமாக உள்ளது
    நல்ல பதிவு இதுபோல் இன்னமும்
    நிறையஇருக்கும் என நினைக்கிறேன்
    தொடர வேண்டுகிறேன்����

    ReplyDelete
  4. தமிழக மக்களை தம் பிடியில் வைத்திருக்கும் விஷயங்கள், சினிமா,டிவி,இலவசங்கள் மற்றும் பத்திரிகைகள்.டிவியும் பத்திரிகைகளும் சினிமா மற்றும் பெரிய வியாபார நிருவனங்கள் கையில். யதார்த்த மக்கள் சிந்திக்க விரும்பாதவர்கள், சுயநலவாதிகள் கண்மூடித்தனமான பற்று கொண்டவர்கள், போகவாழ்வை விரும்புபவர்கள்.
    (I am ok you are not ok????)

    காதன்மை கந்தா அறிவு அறியார்த் தேறுதல்
    பேதமை எல்லாம் தரும்.

    காதல் மற்றும் கடும் பற்று காரணமாக நிர்வாக அறிவு அறியாதவர்களை தேர்ந்து எடுப்பது எல்லாவகையான பேதமையும் தரும்.

    குறளின் பொருளை நிதர்சனமாக உணர்கின்றோம், அன்று முதல் இன்றுவரை.
    (I am ok you are ok.)

    ReplyDelete
  5. எந்தக் காலத்துக்கும் பொருத்தமானதாய் இருக்குமோ இந்தக் கயவர்களின் அரசியலும் நிர்வாகமும்?

    ReplyDelete
  6. இன்றைய நிலைமையை அன்றைக்கே எழுதினாலும், நாளைய நிலைமையை இன்றைக்கே எழுதினாலும்,உடனடியாக எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எனக்குத்தோன்றவில்லை.

    100 நாட்களென்ன 1000 நாட்களென்ன, 10000 நாட்களுக்குப்பிறகாவது, தற்கால இளைஞர்களின் விழிப்புணர்வுச் செயல்களால், அதிரடி நடவடிக்கைகளால், நல்லவழி பிறக்கலாம் என்ற நம்பிக்கை நெஞ்சினில் ஒரு ஓரமாகப் பூத்துள்ளது. அவ்வளவு தான்.

    ReplyDelete
  7. என் பதிவுக்கு வந்து கருத்துகளை பகிர்ந்து கொண்ட, சித்ரா, ஷக்திப்ரபா, வெங்கட், சுந்தர்ஜி, விஜீகே,மற்றும் ரமணி அவர்களுக்கும் நன்றி. காலஙகள் மாறினாலும் காட்சிகள் மாறக்காணோம். மாறிய சில காட்சிகளும் ஏமாற்றங்களையே தந்துள்ளது. நம்பிக்கையோடு நாளையை எதிர்கொள்வோம்.

    ReplyDelete