Tuesday, March 13, 2012

ஜாக்கி மணியும் பந்தயக் குதிரையும்.


                              ஜாக்கி மணியும் பந்தயக் குதிரையும்
                             ---------------------------------------------------
                               ( நிஜமான கதை கற்பனை கலந்து.)
.
          தலைப்பைப் பார்த்துவிட்டு இது ஒரு நகைச்சுவைக் கதை என்று யாராவது நினைத்தால் அதற்கு இவன் பொறுப்பல்ல. இவர்களைப் பார்த்ததனால் வந்த ஒரு திடீர் உந்துதலே இதற்குக் காரணம். எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கிறார்களே இவர்கள் வாழும் வாழ்க்கையா இது.? எப்படி முடியும்.? முடிகிறதே. .என்ன ரகசியம்..?

     மணிக்கு ஜாக்கி மணி என்று பெயர் கொடுத்தபோது, அவரது குடும்பப் பின்புலம்
தெரியாது. குதிரைப் பந்தயத்தில் குதிரை மீதமர்ந்து விரட்டும் ஜாக்கிகளைப் பார்த்தீர்களானால் ஒரு ஒற்றுமை புலப்படும்.அநேகமாக அனைவரும் குள்ளமாக இருப்பார்கள். மெலிந்திருப்பார்கள். அவர்களது எடை குதிரையின் வேகத்தைக் குறைக்கக் கூடாது என்ற அக்கறையே அம்மாதிரியான ஆட்களைக் பந்தயத்தில் குதிரை ஓட்டிகளாக பங்கேற்க வைக்கக் காரணம். ஆனால் ஜாக்கி மணி குதிரை ஓட்டுபவரல்ல. இவனோடு சேர்ந்து பணியாற்றியவர்.எப்பொழுதும் (புன்)நகை முகம். வாழ்க்கையை முழுதும் அனுபவிப்பவர் போல ஒரு தோற்றம். இவன் வீட்டுக்கு வருவார். நன்றாகப் பேசுவார். கலகலப்பாக இருப்பார். ஆனால் மறந்தும் கூட அவரது சொந்த வாழ்க்கையைப் பற்றிப் பேச மாட்டார். ஒரு நாள் இவன் கேட்டே விட்டான்.

      என்ன மணி, ஒரு முறை என்னை உன் வீட்டுக்குக் கூப்பிட்டு ஒரு வாய் காப்பி தர மாட்டாயா.?

      “ தந்தால் போச்சு.ஒரு முறை கூப்பிட்டால் மறு முறை கூப்பிடுவதையோ, வருவதையோ எதிர் பார்க்க மாட்டாயே என்றுதான் யோசிக்கிறேன்.”-மணி பேசும்போது சற்றே கண் கலங்கின மாதிரி இருந்தது. இவனுக்கு மணியைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம். “ ஒரு முறைக் கூப்பிட்டால் மறுமுறை கூப்பிடாமலேயே வருவேனாக்கும்.என்றான்.

        ஒன்றிரண்டு முறை இவன் வற்புறுத்தல் தாங்காமல் மணி இவனை வீட்டுக்கு அழைத்தார்.மணி, நான் இதுவரை உன் பர்சனல் லைஃப் பற்றிக் கேட்டதுமில்லை. நீயும் சொன்னதும் இல்லை. இன்று கேட்கிறேன். சொல்லேன். “

       “ நீதான் வந்து பார்க்கப் போகிறாயே.எல்லாம் ஒரு சர்ப்ரைஸாக இருக்கட்டுமேஎன்று சிரித்துக் கொண்டே சொன்னார் மணி.

      அலுவல் முடிந்ததும் ஒரு நாள் இவன் மணியுடன் அவர் வீட்டுக்குச் சென்றான். வெளியில் இருந்து பார்க்க சுமாராக இருந்தது வீடு. வீட்டில் போனதும் ஒரு வெராந்தா. தாண்டி நுழைந்தால் ஓரளவு பெரிய ஹால். ஹாலின் இரண்டு பக்கத்திலும் அறைகள்.. ஹாலை ஒட்டி உட்புறம் நடைவழியின் ஒரு புறம் சமையல் அறையும் மறுபுறம் குளியல் , டாய்லெட் அறை. ஹாலில் ஒரு திவான் இருந்தது. படுக்கையாகவும் உபயோகிப்பது போலிருந்தது. மற்றபடி மினிமம் தேவையான மேசை நாற்காலி இத்தியாதிப் பொருட்கள் தென்பட்டன. இவன் வீட்டுக்குள் நுழைந்ததும் இவனை எதிர்கொண்ட மாது, மணியின் மனைவி போல் தோன்றவில்லை. எதிர் பாராத ஒரு புது முகம் கண்ட திகைப்பு முகத்தில் தெரிந்தது.

      “ என் நண்பன். ஒரு காப்பி போட்டுத் தர முடியுமா.?என்று பவ்யமாகக் கேட்டார் மணி. கொஞ்சம் இருப்பா. எல்லோரையும் அறிமுகப் படுத்துகிறேன் “ என்றார்.

      சற்று நேரத்தில் காப்பி வந்தது. குடித்து முடிக்கும் வரை ஒன்றுமே பேசாமல் மௌனம் காத்த மணி, முடித்தவுடன் ஒரு FLOURISH-உடன், வேகத்துடன்.ப்ளீஸ் மீட் மை ப்ரின்ஸ் சார்மிங் நம்பர் ஒன்.என்று கூறி இடப்புறம் இருந்த அறைக் கதவைத் திறந்து, இவனை அழைத்தார். இவன் அங்கே கண்ட காட்சி இவனை விக்கித்து விட்டது.படுக்க வைத்த நெடுமரம் போல் ஒரு வாலிபன்,விழித்துக் கொண்டு படுத்துக் கிடந்தான். எந்தக் குறையும் காண முடியாத உடல் ஆரோக்கியம். ஆனால் உணர்ச்சியற்ற முகத்தில் கண்கள் மட்டும் இமைத்துக் கொண்டு இருந்தது. தவிர வேறு எந்த சலனமுமில்லை.

      இவன் கையைப் பிடித்துக்கொண்டு, வலப் புற அறைக்குக் கூட்டிச் சென்ற மணி,
“ஹியர் ஈஸ் மை ப்ரின்ஸ் சார்மிங் நம்பர் டூஎன்று காட்டினார். இவனுக்குக் கண்கள் குளமாகி விட்டது. அந்த அறையிலும் இன்னொரு வாலிபன் முன்னவனைப் போலவே படுத்துக் கிடந்தான். இவனுக்கு வார்த்தைகள் வரவில்லை.என்ன மணி.? எப்படி இது.? உன்னால் எப்படி இப்படி இருக்க முடிகிறது.?என்றெல்லாம் கேட்கத் தோன்றி, ஒன்றுமே கேட்க முடியாமல் வாயடைத்து நின்றான்.

    ” மை டியர் ஃப்ரெண்ட், இவர்கள் இரண்டு பேரும், ஆண்டவன் எனக்குக் கொடுத்த சொத்து. இரட்டையர்கள். ஒரேபோல் தோற்றம் மட்டுமல்ல, குறைபாடுகளும் ஒரே மாதிரிதான். இருபத்திரண்டு வயதாகிறது. இவர்களை ஐந்து வருடங்கள் வரை வளர்த்த என் மனைவி துக்கம் தாங்காமல் போய்விட்டாள். வீட்டோடு இருக்கும் இந்த அம்மாதான் ஒத்தாசையாய் இருக்கிறார். வேளா வேளைக்கு இவர்களுக்கு சமைத்து உணவு கொடுப்பது, இவரது வேலை. மற்ற தேவைகளை நான் காலையிலும், மாலையிலும் வந்து கவனித்துக் கொள்வேன். நீ எதற்கு கலங்குகிறாய்.? எனக்கு இது பழகி விட்டது. தெரிந்தோ தெரியாமலோ, இரண்டு உயிர்களுக்கு நான் பொறுப்பு. வாழ்க்கை எனக்குக் கற்றுக் கொடுத்த பாடம் தவிர்க்கப் பட முடியாதவை அனுபவிக்கப் பட்டே ஆகவேண்டும் “


     அன்றைக்கு ஜாக்கி மணியால் ஏற்பட்ட தாக்கம்,  மறுபடியும் நினைவுக்கு வந்து இவனை கலங்க வைக்கிறது. காரணம் நேரில் இவன் கண்ட இன்னொரு அனுபவம். ஆனால் இப்போது காண்பது ஒரு பெண். ஜாக்கி மணிக்கு ஒரு பெயர் காரணம் இருந்ததுபோல் இந்தப் பெண்ணை கண்டதும் , இவன் வழக்கம்போல் ஒரு பெயர் சூட்டிவிட்டான். =பார்ப்பதற்கு மதமதவென்று இருந்தவளைக் கண்டதும் நினைவுக்கு வந்தது பந்தயக் குதிரையே. அதையே அடையாளப் பெயராகச் சூட்டிவிட்டான்.ஆனால் பின்னர் அறிமுகமாகி,அவள் கதையைக் கேட்டதும்,இவன் வாய்க் கொழுப்பிற்காக இவனையே கடிந்து கொண்டான்.பெயர் சூட்டுவதில் எந்த OFFENCE-ம் இருக்கவில்லை.சட்டென்று மனதில் தோன்றுவதுதான். இதில் இன்னொரு அட்வாண்டேஜ். இவர்களது உண்மை ஐடெண்டிடி காக்கப் படும். ஆனாலும் அப்படியே அழைப்பதற்கு மனம் இடங்கொடுக்காததால்,இனி அவளைப் பெண் என்றே இவன் குறிப்பிட முடிவெடுத்து விட்டான்.

      முதன் முதலில் காணும் யாரும் அந்தப் பெண்ணின் பின்னணியில் அப்படி ஒரு சோகம் இருக்கும் என்று நம்ப முடியாது. எப்போதும் சிரித்த முகம். எங்கு போவதானாலும் கூடவே ஒரு பையனும். அவள்து மகன்தான். அவனுக்கு இருபதிலிருந்து இருபத்திரண்டு வயதிருக்கும். பார்த்த உடனே தெரிந்து கொள்ளலாம், ஏதோ ஒரு குறை இருக்கிறதென்று.. பேச்சு வராது. கண் பார்வை தீர்க்கமாய்த் தெரியாது. அவ்வப்போது வலிப்பு வந்து விடுமாம். தாயைப் பிரிந்து இருக்க மாட்டானாம். இவனுக்கு ஒரு அண்ணன். அவனும் குறைபாடு உள்ளவன்.பார்த்தால் எந்தக் குறையும் இருப்பது தெரியாது. அவனுக்கும் பேச்சு வராது. தம்பியைப் போல் நடக்கவும் முடியாது. சுற்றி நடப்பதைப் புரிந்து கொள்வானாம். இருவரும் ஒரு வித அமானுஷ்யக் குரல் எழுப்புவார்கள்.அந்தப் பெண்ணின் கணவர், வாரத்தில் ஒரு முறை வீட்டுக்கு வருவார்.ஞாயிறு காலை வந்தால், மாலையில் திரும்பி விடுவார். வீட்டில் தங்குவதே கிடையாதாம். ஏதோ பிசினஸ் செய்கிறார். பணி செய்யும் இடத்திலேயே இருந்து விடுவாராம். அந்தப் பெண்தான் வீடு குறித்த எல்லா வேலைகளுக்கும் பொறுப்பு. உடல் வளர்ச்சி உள்ள, ஆனால் மனம் வளராத, பேச முடியாத , நடக்க முடியாத பிள்ளைகள்.

      கணவனும் மனைவியும் சேர்ந்திருந்தால், இன்னும் இது மாதிரிக் குழந்தைகள் பிறந்து விடுமோ என்ற பயத்தில்,நெடுங்காலமாகப் பிரிந்து வாழும் தம்பதிகள்.சொந்தத் தாய் மாமனையே மணந்து கொண்ட அந்தப் பெண், கூடவே தன் பாட்டியும், மாமியாருமான மூதாட்டியையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

       எப்போதும் சிரித்து மகிழ்ச்சியாகக் காணும் அந்தப் பெண், ஒரு நாள் கண்ணீருடன் நின்றாள். விசாரித்தால், கணவனுக்கு ஒரு புறம் வசமில்லையாம். ஸ்ட்ரோக் என்று சொல்கிறார்களாம். இதைத்தான் பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்கிறார்களோ. ! வாழ்க்கை உறங்கிக் கனாக் காணும்போது, இன்ப மயமாகத் தெரிகிறது. விழித்து உணர்ந்தால் கடமைக் கடலாகத் தோன்றுகிறது.. இவனுக்கு அண்மையில் இதற்கான காரணங்களைக் கண்டு பிடிக்க முடியுமா என்ற அறியாமையில் பிறந்த ஆர்வமும் அச்சமும் எழுகிறது. யாரைக் குறை கூற முடியும். பதில் அறிய முடியாத கேள்விகள். இம்மாதிரி நிகழ்வுகளுக்கு உறவில் மணமுடிப்பது ஒரு காரணம் என்று கூறப் படுகிறது. ஆனால் நம் சமூகத்தில் காலங்காலமாக நடந்து வருவதுதானே இது..எல்லோரும் குறைபாட்டுடனா பிறக்கிறார்கள்.?

அன்று ஜாக்கி மணி கூறியது இவனுக்கு மீண்டும் நினைவுக்கு வருகிறது. தவிர்க்கப் பட முடியாதவைகள் ,அனுபவிக்கப்பட்டே தீர வேண்டும். இருந்தாலும் கூடவே ஒரு சமாதானம். இதுவும் கடந்து போகும். எதுவும் கடந்து போகும். நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையே வாழ்வின் ஆதாரம்.
-----------------------------------------------------------------------------
(நெருடலான நிகழ்ச்சிகளை கூறியதால்,மனம் வாடுபவர்கள் சற்றே மகிழ )

   . 
.





    

     


-

7 comments:

  1. கலங்கிய மனங்களின் கவலை போக்க அழகிய சிறகுகளால் விசிற முயன்றிருக்கிறீர்கள். நன்றி ஐயா.

    தாங்கள் குறிப்பிட்ட இரு மனிதர்களுமே தன்னம்பிக்கையின் முன்னுதாரணங்கள். வாழ்க்கையில் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய பாடம் இருக்கிறது. சிறு பிரச்சனைகளுக்கும் முகம் சோர்ந்து, புலம்பி, தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களின் இன்பத்தில் பொறாமை கொண்டு வாழும் மனிதர்களுக்கு மத்தியில் இப்படிப்பட்ட உன்னதமானமான மனிதர்களும் வாழ்கிறார்கள் என்று எங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  2. விசித்திரமான வாழ்க்கையில் மனிதர்களின் அணுகுமுறையை விவரித்திருக்கும் நல்லதொரு நிஜம் கலந்த கதை. கற்பனைகள் நிஜத்தின் வடிவங்கள் என்றே சொல்லலாம். எனது மனைவி நேற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் இடத்திற்கு சென்றுவிட்டு அங்கு நடந்த விசயங்களை விவரித்தபோது இந்த உலகம் இவ்வளவுதானோ என எண்ண வைக்கிறது.

    வாடும் உள்ளங்களுக்கு சிறகுகள் வீசியே மகிழ்ந்திருப்போம். நன்றி ஐயா.

    ReplyDelete
  3. இது போன்ற உள்ளங்கள் எண்ணற்றவர்கள் இந்த உலகில் திரிந்து கொண்டு இருக்கிறார்கள்... எதற்கும் காரணம் இருக்கிறது... இதற்கும் இருக்கும்.. ஆனால் அது தெரியாமல் இருக்கும் வரை சிலர் பை நிரம்பிக் கொண்டே இருக்கும்... இந்த நாடகத்தின் திரை மறைவில் இருப்பவர்கள் மீது நாம் கோபப் படுவதில்லை மாறாக நாடகத்தின் சோகத்தில் அமர்ந்து விடுகிறோம்... அயர்ந்து போகிறோம்... வாழ்வதற்காக போராடும் அந்த உள்ளங்களுக்கு நாம் செய்ய வேண்டியது அவர்களை போல் பிறர் அவதிப் படாமல் காப்பதே... விடியலை கொண்டு வருவோம்...

    ReplyDelete
  4. வாழ்க்கை உறங்கிக் கனாக் காணும்போது, இன்ப மயமாகத் தெரிகிறது. விழித்து உணர்ந்தால் கடமைக் கடலாகத் தோன்றுகிறது..

    இறகுகளால் இதமான வருட்ல்..
    துன்பச்சுமை சற்றே ஆறுதலுக்கோ.....

    ReplyDelete
  5. அனைத்தையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் வாய்ந்த மனிதர்கள். இவர்கள் சாமானியர்கள் அல்ல.

    ReplyDelete
  6. கலங்க வைத்த பகிர்வு. ஜாக்கி மணியும் மற்ற பெண்மணியும் மனதைத் தொட்டார்கள்.....

    சுட்டி தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  7. @ வெங்கட் நாகராஜ்
    வாழ்க்கையின் பல பரிமாணங்களையும் தெரிந்து கொள்கிறோம் வாசித்துக் கருத்திட்டதற்கு நன்றி சார்

    ReplyDelete