Friday, December 21, 2012

இதையும் மறப்போம்....!


                        இதையும் மறப்போம்....!
                        --------------------------------                                    



கன்னிப்பெண் பேரூந்துப் பயணத்தில்
சிதைக்கப் பட்டு சின்னாபின்னம்-தலை
நகரில் அல்லோலகல்லோலம் நாடெங்கிலும்
இதே பேச்சு. இன்னும் சில காலம் மூச்சு விடாமல்
நடக்கும்.-பிறகென்ன. நாடும் மறக்கும்
நாமும் மறப்போம் அதுதானே வழக்கம்.

நிகழ்வின் ஆணிவேர் எங்கிருக்கிறது?
பெண் ஒருத்தி ஆணுக்குச் சமமாகலாமா?
படித்துப் பட்டம் பெற்று பளிச் என்று இருக்கலாமா?
ஆணாதிக்கச் சமூகம் அதனை சும்மா ஏற்குமா?
வெளிச்சத்துக்கு வருவது ஏதோ சில நிகழ்வுகள்.
தினம் தினம் நான்கு சுவற்றுக்குள் நடக்கும்
அக்கிரமங்களும் அராஜகங்களும் யாருக்கும் தெரியாதா?


பெண் எனப் படுபவள் கருவிலேயே தவிர்க்கப் படுபவள்.
மீறி வந்துவிட்டால் வளர்ந்த பிறகு போகப் பொருளே
ஆயிரம் சொன்னாலும் இதுவன்றோ இன்றிருக்கும் நிலை.
இருந்தும் ஆண் பெண் இருவரும் சமம் என்னும்
எண்ணம் நம்மில் இல்லாதவரை பெண் என்றாலே
பலமற்றவள், போகப் பொருள், என்னும் உணர்வு
மரபணுவில் கலந்து விட்டதோ.சந்தேகம் வலுக்கிறது


சட்டம் கொண்டு வரலாம் மனதில் அச்சமேற்படுத்தலாம்

சில நேரங்களில் பெண்களே தவறுகளுக்குக் காரணமாகலாம்

ஆனால் பற்றியெரிகிறது நெஞ்சம், பாவிகள்
பச்சிளங் குழவிகளைப் பாலியல் பலாத்காரம் செய்வது
தினம் ஒரு சேதியாகப் பத்திரிகைகளில்படிக்கையில்.
பாலியல் பலாத்காரம் என்பது மிருகத்தனம் என்பதும் தவறு
மிருகங்களில் இச்சையின்றி இணைதல் இல்லை.
மனிதர்கள் செய்கிறார்கள் என்றால் மனோவியாதியோ?

சட்டத்தை மாற்று; குற்றவாளிகளைத் தூக்கிலிடு
கூக்குரல் எழுப்பலாம். எழுப்பத்தான் வேண்டும்
அச்சத்தை மனதில் விதைக்க வேண்டும் இவையெல்லாம்
வினைகள் முடிந்தபின்தானே நடைமுறையாகும்.
நடக்காது தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
சிறுவயது முதல் நல்லியல்புகள் உணர்வுகளில்
ஊட்டப்பட வேண்டும் நல்லவை அல்லவை 
வேறுபாடுகள் போதனையில் புகுத்தப் பட வேண்டும்
நற்செயல்களில் நம்பிக்கை வைப்போம் பலன் தெரியும்


இல்லாவிட்டால் என்ன. ?   

முன்பே ஒரு முறை எழுதி இருக்கிறேன் நமக்கு
நடந்தால் நினைவில் நீடிக்கும் சில நாள்.
இல்லையென்றால் மறந்து தொலைப்போம்-
இன்னுமொரு நிகழ்வு நடந்து செய்ய வேண்டியது
நிறையவே இருக்கிறது
என்பதை நினைவு படுத்தும்வரை
--------------------------------
(பார்க்க என் பழைய பதிவு “மறதி போற்றுவோம்.”
gmbat1649.blogspot.in/2010/09/marathy-potruvom.html  )
         

 



10 comments:

  1. நடக்காது தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
    சிறுவயது முதல் நல்லியல்புகள் உணர்வுகளில்
    ஊட்டப்பட வேண்டும் நல்லவை அல்லவை
    வேறுபாடுகள் போதனையில் புகுத்தப் பட வேண்டும்
    நற்செயல்களில் நம்பிக்கை வைப்போம் பலன் தெரியும்.
    வரும் சந்ததிகளுக்கு நிச்சயம் உணர்த்த வேண்டிய உண்மை.

    ReplyDelete
  2. அரை குறையாக ஆடை உடுத்தும் பெண்களுக்கு நான் ஆதரித்து பேசவில்லை....ஆனால் 5 மற்றும் 6 வயது குழந்தைகளை கூட இந்த கொடூரமான நாய்கள் விட்டு வைப்பதில்லை.....அவர்களை நம் நாடும் எந்த ஒரு கொடூரமான தண்டனையை இதுவரை கொடுக்கவில்லை....தூக்குதண்டனை எல்லாம் இவர்களுக்கு பத்தவே பத்தாது.....அதை மிக மிக மிக கடினமான தண்டனையை அதுவும் மக்களுக்கு முன் நம் நாடு கொடுத்தால் தான் இந்த தப்புகளை எல்லாம் தடுக்க முடியும்.........

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com/

    ReplyDelete
  3. மிகச் சரியாகச் சொன்னீர்கள்
    ஆணுக்காக படைக்கப்பட்டவள் பெண் என்னும்
    எண்ணம் என்று தொலைகிறதோ
    அன்றுதான் இந்தக் கொடுமைகளும் ஒழியும்
    மறக்க முடியாத படைப்பு
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  4. சிறுவயது முதல் நல்லியல்புகள் உணர்வுகளில்
    ஊட்டப்பட வேண்டும் நல்லவை அல்லவை
    வேறுபாடுகள் போதனையில் புகுத்தப் பட வேண்டும்
    நற்செயல்களில் நம்பிக்கை வைப்போம் பலன் தெரியும்//
    ஆம் நீங்கள் சொல்வது உண்மை.

    பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புக்கள் கட்டாய்ப்படுத்த வேண்டும்.

    வீட்டில் பிள்ளைகளை அன்பாய், அரவணைத்து நல் வழி நடத்த வேண்டும்.
    சிறு வயது முதல் கொண்டே ஒழுக்கம் போதிக்க பட வேண்டும், பழக்கப்படுத்தபடும் போது அதுவே குழந்தைகளுக்கு வழக்கமாய் போய் விடும்.
    தனி மனித ஒழுக்கம் மேம்பட்டால் தான் இந்த மாதிரி சீரழீவுகள் நடை பெறாமல் இருக்கும்.

    ReplyDelete
  5. அன்புள்ள ஐயா...


    வணக்கம். மிகுந்த மன முதிர்வில் தாங்கள் கூறியிருக்கும் கருத்துக்களோடு ஒத்துப்போகிறேன்.

    1. தற்போது பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் இல்லை. ஆசிரியர்கள் ஆசிரியர்களாக இயங்குவது இல்லை. நிர்வாகம் அவர்களை ஆசிரியர்களாக நடத்துவதும் இல்லை.

    2, நாகரிகத்தின் மிகப்பெரும் கண்டுபிடிப்பு,,, பெரும் உதவி என்றெல்லாம் பேசப்படும் கைப்பேசி அறவே மாணவர்களுக்கு வழங்கப்படக்கூடாது என்பது கடுமையாக்கப்படவேண்டும்,

    3, நமது பண்பாடு சார்ந்த உடையமைப்பில் (இதில் வசதி,, எளிது போன்றவற்றை உள்ளடக்கி) மாற்றங்கள் செய்தல் வேண்டும்,

    4, நமது சினிமாக்களின் தரங்கள் இன்னும் கடுமையான சட்ட திட்டங்களுக்கு உட்படுத்தப்படவேண்டும்,

    5, அரசின் நிலைப்பாட்டில் குறைகள் இருக்கலாம், என்றாலும் அரசிற்கு உதவுவதில் நம்முடைய கடமை எது என்பதையும் நாம் தெளிந்து கொள்ளவேண்டும்,

    6. பிள்ளைகள் வளர்ப்பில் சிதைந்துகொண்டிருக்கும் பெற்றோர்களின் கவனம் மறுபடியும் மீட்டெடுக்கப்படவேண்டும்,

    மனது வலிக்கிறது,

    பாதிக்கப்பட்டவர்கள் நிம்மதியும் மன ஆறுதலும் அடையட்டும், இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  6. நடக்காது தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
    சிறுவயது முதல் நல்லியல்புகள் உணர்வுகளில்
    ஊட்டப்பட வேண்டும் நல்லவை அல்லவை
    வேறுபாடுகள் போதனையில் புகுத்தப் பட வேண்டும்
    நற்செயல்களில் நம்பிக்கை வைப்போம் பலன் தெரியும்

    ReplyDelete
  7. இத்த‌கைய‌ குற்ற‌ச் ச‌ம்ப‌வ‌ங்க‌ளில், குற்ற‌வாளிக‌ளில் ப‌ல‌ர்‌ குடிபோதையில் இருந்திருக்கிறார்க‌ள்.
    தில்லி ப‌ஸ்ஸில் இருந்த‌ அனைவ‌ரும் குடிபோதையில் தான் உல்லாச‌ ந‌க‌ர்வ‌ல‌ம் வ‌ந்திருக்கிறார்க‌ள். தூத்துக்குடியில் அந்த‌, 13 வ‌ய‌து ப‌ள்ளி மாண‌வியும் ஒரு குடிகார‌னால் தான்
    கொல்ல‌ப்ப‌ட்டிருக்கிறாள். அர‌சு (குடியை)குடிகார‌ர்க‌ளை
    இருக்கும் ச‌ட்ட‌த்தை வைத்தே ஒழுங்கு ப‌டுத்த‌ முடியும். அரசையும், ச‌ட்ட‌த்தையும், அதிகார‌த்தையும் கையில் வைத்திருப்ப‌வ‌ர்க‌ளின் நேர்மையற்ற‌, முறைய‌ற்ற‌, பொறுப்ப‌ற்ற‌ செய‌ல் தான் இத்த‌கு குற்ற‌ங்க‌ளை க‌ட்டுப்ப‌டுத்த‌த் த‌வ‌றி, குற்ற‌ங்க‌ள் பெருக‌ முக்கிய‌ கார‌ண‌மாகிற‌து.

    ReplyDelete

  8. @ சசிகலா,
    @ தமிழ் காமெடி உலகம்,
    @ ரமணி,
    @ கோமதிஅரசு,
    @ ஹரணி,
    @ காளிதாஸ் முருகையா,
    @ வாசன்
    நலங்கெட்டுக் கிடக்கும் நாட்டின் நிலையில் அக்கறையுடன் கருத்துக்கள் பதிவு செய்த அனைவருக்கும் நன்றி. வெகு நாட்களுக்குப் பின் வாசனும் ஹரணியும் முருகையாவும் வருகை தந்தமைக்கு மீண்டும் நன்றி. குடி குடியைக் கெடுக்கும் என்று கூறிக் கொண்டே குடியை ஊக்குவிக்கும் அரசை வன்மையாய் கண்டிக்க வேண்டும். கஜானா நிரப்ப , கூடவே அவர்கள் பையை நிரப்பக் குடிதானே அவர்களுக்கு ஆதாரம்.?

    ReplyDelete
  9. வணக்கம்

    இன்று உங்களின் பதிவு வலைச்சரம் வலைப்பூவில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் அதாவது உங்களின் உள் அதங்கத்தை இன்றைய காலகட்டத்தில் நடக்கும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வை ஆணித்தரமாக சொல்லி விட்டீர்கள் ஐயா,அருமையான படைப்பு பார்க்கhttp://blogintamil.blogspot.com/

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. வணக்கம்

    இன்று உங்களின் பதிவு வலைச்சரம் வலைப்பூவில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் அதாவது உங்களின் உள் ஆதங்கத்தை இன்றைய காலகட்டத்தில் நடக்கும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வை ஆணித்தரமாக சொல்லி விட்டீர்கள் ஐயா,அருமையான படைப்பு பார்க்http://blogintamil.blogspot.com/க
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete