Thursday, January 31, 2013

பெண்களே என்ன நினைக்கிறீர்கள்?


                           பெண்களே என்ன நினைக்கிறீர்கள்?
                           ---------------------------------------------------



2011-ம் வருடம் மார்ச் மாதம் “அன்புடன் மலிக்காவின் விருப்பத்திற்கிணங்க “பெண் எழுத்து “ என்னும் தலைப்பில் ஒரு பதிவு எழுதி இருந்தேன். .எழுத்தில் ஆண் எழுத்து பெண் எழுத்து என்று ஏதாவது உண்டா என்றும் எழுதி இருந்தேன். பெரும்பாலும் பெண்கள்.கோயில்கள் , இறைவன், சமையல் , என்றும் யாருடைய எண்ணத்துக்கும் பங்கம் வராத முறையில் கவிதைகளும் , சுற்றுலா விஷயங்களுமே எழுதுகிறார்களோ என்ற கேள்வியையும் கேட்டிருந்தேன். .எதை எழுதினாலும் யார் மனதும் புண்படாத விதத்தில் யார் எழுதுவதானாலும் இருக்க வேண்டும் என்றும் எழுதி இருந்தேன்.




கடந்த மாதம் தலைநகரில் ஒரு இளம்பெண் சீரழிக்கப்பட . நாடே அல்லோல கல்லோலப் பட்டிருக்க, இங்கே நம் பெண் பதிவர்கள் அவர்களிடைய எண்ணங்களைப் பதிவுசெய்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஒரு வலைப் பயணம் மேற் கொண்டேன். வலையுலகில் பெண்பதிவாளர்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. அவர்களுக்கு இருக்கும் வாய்ப்பில் ஒரு பொதுக் கருத்துருவாக்கம் செய்ய முயற்சித்திருக்கலாம். ஆனால், நான் படித்தவரை அவர்களுடையது என்னும் அபிப்பிராயங்கள் எங்கும் பதிவு செய்யக் காணோம்.(மறுபடியும் சொல்கிறேன். நான் படித்தவரை )




பெண்கள் அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?எப்போதுமே ஒரு ஆணைச் சார்ந்திருக்க வேண்டியவள் , அவளுக்கென்று தனிப்பட்ட அபிப்பிராயமோ கருத்தொ கிடையாது என்று எண்ணுகிறார்களா.?பெண் சுதந்திரம், பெண் விடுதலை என்றெல்லாம் அறிஞர்கள் சொன்னது அவர்களுக்குப் பொருந்தாது என்று எண்ணுகிறார்களா.? இந்த மாதிரி சீர்கேடான சம்பவங்களுக்குக் காரணம் என்ன என்று அவர்கள் நினைக்கிறார்கள்.?மனிதனாகப் பிறந்தால் வளர்ந்ததும் மணம் முடிப்பதும் சந்ததி வளர்ப்பதும் இருக்கத்தான் செய்யும். ஆனால் பெண் ஒரு போகப் பொருளாக சித்தரிப்பதில் அவர்களுக்கு எந்த அளவு உடன்பாடு. ஒவ்வொருவருக்கும் குடும்பம் வாழ்க்கை எல்லாம் இருக்கிறது. இதில் யார் பங்கு எவ்வளவு என்று எந்த முடிவில் பெண்கள் இருக்கிறார்கள். பெண்களின் நடை உடை பாவனையெல்லாம் அவர்கள் இப்பேர்ப்பட்டவர் என்று அனுமானிக்கும் வகையில் இருக்கிறதா.?




சந்தர்ப்பம் கிடைக்காதவரை எல்லா ஆண்மகன்களும் நல்லவரே.
சந்தர்ப்பம் கிடைக்கும் போது ஒவ்வொரு ஆண்மகனும் விலங்காகி விடுகிறான் என்ற கருத்தில் ஒருவரது( பிரபல எழுத்தாளரின்) எழுத்தைப் படித்தேன். அதில் பெண்களுக்கு உடன்பாடா.?தவறு செய்யும் ஒவ்வொரு ஆண்மகனும் அவனை இழந்த நிலையில் போதையில் இருக்கும்போதே தவறு செய்கிறான் என்பது சரியா.?பச்சிளஞ்சிறார்களை சிதைப்பவர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?அந்தப் பிரபல எழுத்தாளர் தவறு செய்தவர்களின் சார்பில் மன்னிப்பு கேட்பதாக எழுதி இருந்தார். இதில் பெண்களுக்கு உடன்பாடா, திருப்தி அடைந்து விடுவார்களா.?

கணவனுக்கு மனைவியின் மீது இருக்கும் உரிமையில் அவள் விரும்பாத போது புணர்ச்சியில் ஈடுபடுவது கற்பழிப்பு என்று எண்ணுகிறார்களா?.அப்படி நினைப்பதாயிருந்தால் அவ்வாறு நிகழும்போது புகார் செய்து தண்டனை பெற்றுத் தருவார்களா.?.
ஆனந்த விகடனில் பொக்கிஷம் பகுதியில் சுஜாதா எழுதி இருந்த “முதல் மனைவிஎன்ற கதை படித்தேன். அதில் வரும் கணவனும் மனைவியும் போல்தான் பலரும் இருக்கிறார்களா.?(அந்தக் கதையை எல்லோரும் படிக்க வேண்டும் என்றுதான் கதையை எழுத வில்லை)




எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் , பெண்கள் மனதில் பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும்( பாரத நாரி.?) என்ற பலமான கருத்தின் வெளிப்பாடே. அவர்கள் எந்தக் கருத்தும் வெளிப்படுத்தாமல் இருக்கச் செய்கிறதோ என்னவோ.?பெண்களே உங்களுக்காக நீங்களே தளைகளைப் போட்டுக் கொள்ளாதீர்கள். வாழ்வில் ஆணும் பெண்ணும் சமம். ஏதோ ஒரு காரணத்துக்காக,ஏதோ காரணம் என்ன? PROCREATION-க்காக மட்டுமே வித்தியாசமாய் படைக்கப் பட்டிருக்கிறார்கள்.உண்மையைச் சொல்லப் போனால் ஆண்களைவிடப் பெண்களே சிறந்தவர்கள் என்னும் என் கருத்தையும் இங்கே பதிவிடுகிறேன்.




தவறுகள் நடக்கும் போது தட்டிக் கேட்க வேண்டியதும் போராட வேண்டியதும் பெண்கள் உணர்ந்தது டெல்லி சம்பவங்கள் எடுத்துக்காட்டின. என் ஆதங்கமே வலைப்பூக்களில் எழுதுவதன் மூலம் மற்றபடி போராட முடியாதவர்கள் வெளிப்படுத்தவில்லையே என்பதுதான். பெண்களின் உலகம் கடவுள் கோயில் சமையல் இவற்றையும் மீறி வியாபித்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதும் அவசியம்.



கேள்வி:- அது சரி. இந்தமாதிரி நிகழ்வுகளுக்குக் காரணம் என்னவென்று நீ நினைக்கிறாய்.?
பதில்:- ஒன்றா இரண்டா, சொல்லிக் கொண்டே போகலாமே. இருந்தாலும் முக்கியமாக நான் கருதுவதைச் சொல்கிறேன். முதலாவதாக நம் கலாச்சாரம். நம் மூதாதையர்கள் உடன் இருப்பவர்களை வர்ணாசிரம தர்மத்தின் மூலம் மட்டும் அடக்கி வைக்கவில்லை. பெண்களுக்கு சம உரிமை கொடுக்காததன் மூலமும் அடக்கி வைத்திருந்தனர். ஆனால் மேலோட்டமாகப் பார்க்கும்போது பெண்களுக்கு ஒரு பெரிய ஸ்தானம் தந்ததுபோல் தோன்றும். எந்த செயலிலும் பெண்ணுக்குப் பங்கு இருப்பது போல் காண்பித்து உண்மையில் அவர்களுக்கு இரண்டாம் பங்குதான் கொடுத்திருக்கிறார்கள். நம் கதைகளிலும் புராணங்களிலும் பெண்கள் ஆண்களின் உடமைப் பொருளென்றும் (பாஞ்சாலியைப் பணையம் வைத்தது), ஒரு பெண் ஆணைச் சார்ந்து இருப்பதுதான் ( ராமர் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி) தர்மம் என்றும் போதிக்கப் பட்டு அந்த போதனையே இரத்தத்தில் ஊறி அதுவே பாரத நாரியின் குணமாக ஏற்றுக் கொள்ளப் பட்டுவிட்டது.ஆணுக்கு பெண் ஒரு போகப் பொருள் என்பது கலாச்சார உணர்வாகவே மாறிவிட்டது. அவற்றை மீறி ஒரு பெண் வெளியில் வருவது ஆணுக்குச் சமம் என்று நிலை நாட்டுவது பொதுவாக ஆண் வர்க்கத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அதன் பிரதிபலிப்பே பெண்களைப் பற்றிய அண்மையில் சில பிரபலங்கள் வெளியிட்டக் கருத்துக்கள். நம்முடைய patriarchial சொசைட்டியில்  பெண்கள் உரிமை கொண்டாடுவது முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை.



இதையெல்லாம் மீறித் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பும் பெண்களும் தங்கள் சுயம் அறிந்து நடக்க வேண்டும். தங்களை போகப் பொருளாகக் கருதும் ஆண்களின் கவனத்தை சுண்டி இழுக்கும் வகையில் நடை உடை பாவனைளால் கவர்வது பாதுகாப்பல்ல என்ற உணர்வு அவர்களுக்கு வேண்டும். வண்ணம் நிறைந்த மலரை அதன் தேனைப் புசிக்க வண்டுகள் வருவது இயல்புதானே. ஆண்கள் வண்டுகள் போல் மொய்ப்பதில் பெண்கள் மனம் மகிழ்வடைவதும் இல்லையென்று சொல்ல முடியாது.




என்னவெல்லாமோ எழுதினாலும் என்னால் புரிந்து கொள்ள முடியாதது பச்சிளங்குழந்தைகளை பாலியல் கொடுமைக்கு எப்படி உட்படுத்துகிறார்கள் என்பதுதான். அதில் என்ன இன்பம் கிடைக்கப் போகிறது. வெறும் வக்கிர புத்தியின் வெளிப்பாடல்லவா.?நான் ஒரு பதிவு எழுதி இருந்தேன். அது ஒரு உண்மைக்கதை. பிறகு அந்தக் கதையை எழுதி இருக்க வேண்டாமோ என்று தோன்ற பரிகாரம் என்று இன்னொரு பதிவும் எழுதினேன்.




ஆண்களின் பாலியல் கொடுமைகளின் கீழ் கணவன் மனைவியை அவள் விரும்பாத நேரத்தில் புணர்வது கொண்டு வருவதானால் , எனக்குத் தோன்றுகிறது, பெரும்பாலான ஆண்கள் தண்டிக்கப் பட வேண்டியவர்கள் ஆவார்கள்.ஒருவரது அடிப்படைக் குணங்கள் அவரது மிகச் சிறிய பிராயத்திலேயே உருவாக்கப் படுகிறது என்கிறார்கள். ஆகவே நம் குழந்தைகள் நல்லவர்களாக வளருவதில் நம் கடமை நம் பங்கு மிகப் பெரிய அளவை வகிக்கிறது என்னதான் சட்டங்கள் கொண்டு வந்தாலும் குற்றங்களை குறைக்க முடியலாம். ஒழிக்க முடியுமா. ?  

எழுத எழுத மனம் குமைகிறது. தலைநகரில் நடந்த ஆர்பாட்டங்கள் பலரது குமுறலின் வெளிப்பாடே. ?நல்லதொரு சமுதாயத்தை உருவாக்குவதே நம் கடமை என்று கூறத்தானே முடியும் என் போன்றவர்களால். வலையில் எழுதுவதன் மூலமாக நாட்டு நடப்புகள் நம்மையும் பாதிக்கின்றன என்று தெரிவிக்கலாமே என்னும் ஆதங்கமே இப்பதிவு. 
--------------------------------------------------------        


 

 


 

 

 

 

 

 

 

13 comments:

  1. படித்தேன், என் கையாலாகத்தனத்திற்கு வருந்தினேன்.

    ReplyDelete
  2. இவ்வளவுக்கும் தமிழக முதல்வரும், மத்திய அரசைக் கட்டுப்படுத்துபவரும் பெண்களாயிருந்தும் பெருசா ஒரு சட்டமும் நிறைவேத்த முடியல,இதுக்கு என்ன சொல்வதென்றும் தெரியவில்லை !

    ReplyDelete
  3. http://kural--sakthi.blogspot.in/2013/01/blog-post.html

    http://sivamgss.blogspot.in/2012/12/blog-post_29.html

    என் கண்ணில் பட்ட சில பதிவுகள்

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. ஒருவரது அடிப்படைக் குணங்கள் அவரது மிகச் சிறிய பிராயத்திலேயே உருவாக்கப் படுகிறது என்கிறார்கள். ஆகவே நம் குழந்தைகள் நல்லவர்களாக வளருவதில் நம் கடமை நம் பங்கு மிகப் பெரிய அளவை வகிக்கிறது என்னதான் சட்டங்கள் கொண்டு வந்தாலும் குற்றங்களை குறைக்க முடியலாம். ஒழிக்க முடியுமா. ?//

    எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் அன்னை வளர்க்கையிலே என்கிறார்கள். ஆனால் சமுதாயமும் இதில் பங்கு பெறுகிறது. சுற்று சூழல், சமுதாயம் வீடு எல்லாம் சேர்ந்து தான் ஒரு குழந்தையை வளர்க்கிறது. தனி மனிதன் ஒழுக்கம் சீர் படும் போது தான் இந்த மாதிரி தப்புகள் தொடராது. இது ஆண் , பெண் இருவருக்கும் பொருந்தும்.
    ஒவ்வொருவரும் தன் கடமை உணர்ந்து கட்டுப்பாடுடன் நடந்து கொண்டால் கண்ணியம் காக்கப்படும்.வீடு நலம் பெற்றால் நாடு நலம் பெறும், நாடு நலம் பெற்றால் வியன் உலகம் நலம் பெறும். நல்லதையே பேசி வந்தால் அல்லவை தானாக மறையும்.

    ReplyDelete
  6. இதைக் குறித்து நான் நிறையவே எழுதி உள்ளேன். தாங்கள் கொஞ்சம் பின்னால் சென்று பார்க்க வேண்டும். அவ்வளவு கஷ்டப்பட வேண்டாம் எனில் தமிழ் ஹிந்துவின் ஆசிரியர்கள் பட்டியலில் என் பெயரில் க்ளிக் செய்து பார்க்கவும். முழுக்க முழுக்கப் பெண்கள் குறித்தே எழுதி இருப்பேன். ஒரு கால கட்டத்தில் என்ன எழுதி என்ன பலன் எனத் தோன்றவே நிறுத்தி விட்டேன். என் பதிவுகளின் சுட்டியை இயன்றால் இங்கே தருகிறேன். டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவியைப் பலாத்காரம் செய்த உடனேயே எதிர்ப்புத் தெரிவித்து எழுதி இருக்கிறேன். ஆனால் அதோடு பல்வேறு விஷயங்களையும் எழுதியதால் முக்கியத்துவம் பெறவில்லை. :(

    ReplyDelete
  7. http://sivamgss.blogspot.in/2009/07/blog-post_3755.html

    2009ஆம் வருடம், தமிழ்மணம் நக்ஷத்திரமாக ஒரு வாரம் இருந்த சமயம் எழுதின பதிவுகளில் ஒன்றின் சுட்டியைக் கொடுத்துள்ளேன். இது தொடர்ந்து நான்கு, ஐந்து பதிவுகள் வந்திருக்கும். 2009-ஆம் வருடம் ஜூலை மாதம் தேர்ந்தெடுத்துப் படித்துப் பாருங்கள். அதற்கு முன்னாலும் எழுதி இருக்கேன். இன்னும் பல பெண்கள் பெண்களின் பிரச்னைகள் குறித்து என்னை விடவும் அழகாகவும், அழுத்தமாகவும் எழுதி வருகின்றனர்.

    ReplyDelete

  8. @ டாக்டர் கந்தசாமி
    @ உமேஷ் ஸ்ரீநிவாசன்
    @ நிலா மகள்
    @ கோமதி அரசு,
    @ கீதா சாம்பசிவம்
    என் அனுமானங்கள் சரியென்றே தோன்றுகிறது. நடந்த அராஜகத்தால் நாடே கொந்தளித்துக் கொண்டிருந்தபோது வலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆங்கிலத்தில் சொல்லப் படும் whimper கூட எழவில்லை. நான் அவர்களை உசுப்பியும் பார்த்துவிட்டேன்.எதிர்பார்த்த பலன் இல்லை.என்ன எழுதி என்ன பயன் என்று மனம் தளரக் கூடிய விஷயமல்ல இது. முதலில் பெண்களுக்கு விழிப்புணர்ச்சி வர வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றி.

    ReplyDelete
  9. பெண்கள் பலர் கவிதை , குடும்பத்தில் உள்ள நிகழ்வுகளை மட்டும் எழுதி வருகிறார்கள் அதற்கு பல லைக் கிட்டியதும் சந்தோஷம் அடைகிறார்கள் சமுகப் பிரச்சனைகளில் அவர்கள் தங்கள் கருத்துக்களை பதிய பயங்கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை

    நானும் உங்களை மாதிரிதான் நினைத்தேன் சில பெண் பதிவர்களைத்தவிர யாரும் அந்த டில்லி பலத்காரம் பற்றிய பதிவிடாமல் பலகாரம் செய்வது எப்படி என்பது மாதியான பதிவுகளை இட்டுதான் வருகிறார்கள்.

    ReplyDelete
  10. very interesting thoughts.
    பதிவுகள் வந்தனவா என்று கவனிக்கவேயில்லை.

    வக்கிரத்துக்கும் ஆதிக்கத்துக்கும் தொடர்பு உண்டா என்று அடிக்கடி நினைப்பதுண்டு. டெல்லிக் கொடூரம் எதன் வெளிப்பாடு? வக்கிர புத்தியா ஆதிக்க எண்ணமா? ஒன்றிலிருந்து ஒன்று உருவாகிறதா?

    ReplyDelete
  11. டெல்லிக் கொடூரம் கோர்ட் கேஸ் என்று பிசுபிசுக்கிறதே?
    மகளிர் எழுச்சியெல்லாம் என்ன ஆனது?
    மகளிர் தானே என்று கைவிட்டோம் - இது தான் நடப்பு. குற்றவாளிகளுக்கு உடனையாக தூக்குத்தண்டனை வழங்க ஒரு போராட்டமோ உண்ணாவிரதமோ நடக்கும் என்று நினைத்தேன்.

    ReplyDelete
  12. மதிப்பிற்குரிய ஜி.எம்.பி அய்யா உங்கள் வருகைக்கும் அதற்குத் தூண்டிய நிலாமகள்
    தோழிக்கும் நன்றி
    http://kural--sakthi.blogspot.com/2013/01/blog-post.html
    http://kural-sakthi.blogspot.com/2012/12/blog-post_25.html
    http://kural-sakthi.blogspot.com/2012/12/blog-post_29.html
    http://kural-sakthi.blogspot.com/2012/12/blog-post_30.html
    அய்யா இவை எனது சில பதிவுகள் தவிரவும் முகநூலில் இதுகுறித்த தீவிர கருத்துப் பரிமாற்றங்களைப் பெண்கள் ஆர்வமுடன் செய்து வந்தனர்.பல தோழர்களும்
    தங்களைப் போல் புரிதலுடன் கருத்துகளைப் பகிர்ந்தனர்

    ReplyDelete
  13. அருமையாக சொல்லி இருக்கிறீர்கள், சார். மரபிலேயே ஒரு சில தவிர்க்க இயலாத விஷயங்கள் இந்திய ஆண்களுக்கு வந்து விடுகின்றன. அதை புராணங்களும் ஊட்டி வளர்க்கின்றன.

    ஆண்கள் பெண்களை சக மனுஷியாகவும், பெண்கள் பெண்களை மரியாதையுடனும் நடத்தினால் மட்டுமே இந்த நிலை மாறும்.

    ReplyDelete