Tuesday, February 26, 2013

யாரிடம் எதைச் சொல்ல.....


                                யாரிடம் எதைச் சொல்ல.....
                               -----------------------------------------



நான் என்னபதிவு எழுதலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, அக்கம் பக்கத்தில் நடக்கும் அநியாய நிகழ்வுகள் என்னைப் பற்றி எழுது என்று முன் வந்தது. உன்னைப் பற்றி எழுதுவதால் என்ன லாபம் என்று கேட்டால், நீ எழுதுவதால் என்ன லாபம் காண்கிறாய் என்று பதில் வரும். என் ஆதங்கங்களை எழுதுகிறேன். மனபாரத்தை இறக்கி வைக்கிறேன். அது இப்போதும் நடக்கட்டுமே.




பெங்களூரில் நான் இருக்கும் பகுதி ஓரளவுக்கு வசதிகள் நிறைந்தது. சாலை வசதிகள், போக்குவரத்துவசதிகள், பள்ளி மருத்துவ மனை வசதிகள் எல்லாம் மிகவும் குறைபட்டுக்கொள்ளும்படி இல்லை. குடி நீரும் கழிவு நீர் கடத்த சாக்கடைகளும் அநேகமாக எல்லா இடங்களிலும் இருக்கிறது. பிரச்சனை என்னவென்றால் இருக்கும் கழிவு நீர் சாக்கடைகளை மீண்டும் இடுகின்றனர். எல்லா வீதிகளிலும் இருக்கும் சாக்கடை வசதிகளை மீண்டும் சாலைகளை பள்ளம் நோண்டி, இருக்கும் சாலைகளை உடைத்து. மீண்டும் குழாய்கள் பொருத்துகின்றனர். இல்லாத வசதியை செய்து தர மக்களின் வரிப்பணத்தை செலவு செய்தால் அர்த்தமுண்டு. இருக்கிற வசதியை இல்லாது செய்து, மீண்டும் அதைச் செய்வதில் யாருக்கோ லாபம் இருக்கிறது. இது ஃபெப்ருவரி மாதம். அடுத்த மாதத்துடன் இந்த நிதியாண்டு முடிந்துவிடும். ஊரக வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட பணம் அதற்காக செலவு செய்யாவிட்டால் அந்த நிதியின் உபயோகம் காலாவதியாகும். ஒதுக்கப்பட்ட பணம் செலவு செய்ததுபோல் இருக்கவேண்டும். பலரது பைகளும் நிரம்ப வேண்டும். நான் பலரிடம் பேசிப்பார்த்ததில் இருக்கும் வசதிகளை மேம்படுத்தவே செய்யப் படுவதாகக் கூறப் படுகிறது. இப்படி இவர்கள் வீதிகளைத் தோண்டும்போது நீர் வரத்துக்காக போடப்பட்ட குழாய்கள் சேதமடைகிறது. இவற்றை மீண்டும் சரிசெய்வது குடி இருப்பரின் தலைவலியாகும். ஏற்கனவே பொருளாதாரம் விலை வாசி உயர்வால்( எல்லாமட்டங்களிலும் )பரிதவிக்கும் சாதாரணமானவன் இந்த எதிர்பார்க்காத உபரி செலவால் மீண்டும் வேதனைக்குள்ளாகிறான். வீதிகளில் வாகனங்கள் ஓடமுடியாது. சாலைகள் சீராக இன்னும் செலவு செய்து. இன்னும் பலரது பைகள் நிரம்ப வழிவகுக்க எவ்வளவு நாளாகுமோ. அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். இதைப் பற்றி உரியவர்களிடம் புகார் செய்யலாம் என்றால் யாரும் முன் வருவதில்லை. ஒன்றும் செய்ய முடியாது என்றே நம்புகின்றனர். நானும் பதிவு எழுதி அங்கலாய்த்துக் கொள்கிறேன்.

கழிவு நீர் வெளியேற நம் வீட்டிலிருந்து பாதாள சாக்கடைக்கு இணைப்பு கொடுக்க அனுமதி வேண்டி, அதனைப் பெறவும் இணைக்கவும் ரூ. 4000/-வரை ஏற்கனவே செலவு செய்தாகி விட்ட நிலையில், இப்போது இருக்கும் சாக்கடையை மீண்டும் உடைத்துப் பொருத்தும்போது, நாம்கொடுத்த இணைப்புகளும் உடைந்து விடும். மீண்டும் இணைக்க மேலூம் செலவு. இதில் என்ன பரிதாபம் என்றால் கழிவு சாக்கடையில் மலம் உட்பட்ட கழிவுகள் ஓடிக்கொண்டிருக்க அவற்றை எடுத்து மீண்டும் வேறு குழாய்களைப் பொருத்துபவர்கள் அந்தக் கழிவுகளையே அகற்றும் செயலைப் பார்க்கும்போது இது manual scavenging தானே இன்னும் ஒழிக்கப்படவில்லையே என்று தோன்றுகிறது.



 

11 comments:

  1. வெவரம் தெரியாத சாமியாய்ப் போய்டீங்களே?

    ReplyDelete
  2. உங்கள் ஊர் பரவாயில்லை, தமிழ்நாட்டின் தலைநகரில் நிலைமை இன்னும் மோசம் ஐயா......

    ReplyDelete
  3. நீங்கள் சொன்ன மாதிரி ஆதங்கங்களை எழுதி, மனபாரத்தை இறக்கி வைத்துகொள்ள வேண்டியது தான் வேறு என்ன செய்யமுடியும்!

    ReplyDelete
  4. இங்கு அதை விட ரொம்ப மோசம்...!!!

    ReplyDelete
  5. அங்கலாய்த்துக் கொள்வதால் ப்யன் விளைந்தால் சரி ..

    ReplyDelete
  6. அங்கலாய்பது மன உளைச்சலையாவது குறைத்தால் தேவலை.
    பங்களூர் அழகு நகரம் என்று பெயர் வைத்துக் கொண்டு இப்படிச் செய்கிறார்களே.

    ReplyDelete
  7. சென்னை ட்ராபிக்கே தேவலாம் போல இருக்கு பெங்களூர் ரொம்ப மோசம்

    ReplyDelete
  8. சென்னை போலவே இருக்கிறதே?

    ReplyDelete
  9. உங்கள் ஊரிலும் இதே நிலைதானா? வாழ்க பாரதம்

    ReplyDelete
  10. மார்ச் மாதம் பிறந்து விட்டாலே அரசாங்க அலுவலகங்கள் அனைத்திலும் மார்ச் மீது பழி போட ஆரம்பித்து விடுவார்கள்.

    ReplyDelete
  11. குழிய வெட்டு. வெட்டுன மண்ணை கொட்ட இன்னொரு குழி தோண்டு.

    சந்தோசப் பட்டுக்கங்க சார். இதாவது நடக்குதே அங்கே.

    ReplyDelete