Thursday, July 25, 2013

கதையாகவும் கொள்ளலாம்


                                      கதையாகவும் கொள்ளலாம்.....
                                      -----------------------------------------



திருச்சியிலிருந்து கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் போக ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்திருந்தார்கள்.  போகும் வழியில் சில்வெர் காஸ்கேட், பின் கொடை சேர்ந்ததும் குழுக்களாகப் பிரிந்து அப்செர்வேடரி, மற்றும் பெய்ர்பெற்ற நடைபாதை( கோக்கர்ஸ் வாக்.? பெயர் நினைவுக்கு வரவில்லை.) தற்கொலை முனை என்று எங்கெல்லாமோ சுற்றி விட்டு ஏரிக்கரையோரம் வந்தோம். படகு சவாரி. அப்போதைய பிரபல ஹிந்தி நட்சத்திரம் வஹிதா ரஹ்மானும் அங்கிருந்தார். சிலர் அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கினார்கள். இரண்டு மூன்று குடும்பங்கள் படகில் ஏறினோம். சிறிது தூரம் செல்வதற்குள் நண்பர் ஒருவர் திடீரெனப் படகை கரைக்குத் திருப்பச் சொன்னார். அவர் முகம் பயத்தால் வெளிறி இருந்தது. உல்லாசமாக படகு சவாரிக்கு கிளம்பின நாங்கள் அவரை கரையில் இறக்கி விட்டு சவாரியை மகிழ்ச்சியுடனும் கும்மாளத்துடனும்  தொடர்ந்தோம்.


எல்லாம் முடிந்து நாங்கள் திரும்பி வந்ததும் நண்பரிடம் அவர் ஏன் படகு சவாரியைத் தொடரவில்லை என்று காரணம் கேட்டோம். அவருக்கு கல்லணையில் நீரில் மூழ்கி இறந்து போன நண்பர் ஒருவரின் நினைவு திடீரென வந்து ஏதேதோ எண்ணங்களை வரவழைத்து விட்டதாம். அந்த சோக முடிவு எங்கள் எல்லோரையும் வெகுவாக பாதித்திருந்தாலும் அவருக்கு அது அந்நேரத்தில் நினைவுக்கு வந்து அவருடைய மகிழ்ச்சியையே பாதித்து விட்டது. சில அசந்தர்ப்பமான நினைவுகள் வந்தால் ..... நாங்கள் ஐந்து பேர் ஒரு பூசாரி, மற்றும் துடுப்பு தள்ளும் படகோட்டி கங்கையில் பயணித்தபோது ...... நல்ல வேளை வேண்டாத எண்ணங்கள் ஏதும் வந்து எங்களை பயமுறுத்தவில்லை. ஆனால் இப்போது நினைத்துப் பார்க்கும்போது .....பயமாக இருக்கிறது. 


அப்போதுதான் புதிதாய்த் திருமணம் ஆனவர். புது மனைவியுடன் சந்தோஷமாகப் பொழுதைக் கழிக்க இன்னொரு ஜோடியுடன் கல்லணைக்குச் சென்றார் கல்லணையில் நீர் அதிகம் இல்லை. நிறையவே மணல் திட்டுக்கள். மனைவியர் இருவர் கரையில் இருக்க கணவன்மார் இருவரும் நீரில் இறங்கினர். நீர் கணுக்காலுக்கும் சற்றே அதிகமாகத்தான் இருந்தது. ஒருவர் திரும்பிப் பார்த்து பெண்களிடம் சத்தமாக ஏதோ கேட்டுக் கொண்டிருக்க. மற்றவரின் மனைவி திடீரெனக் கூவ ஆரம்பித்தார். என்ன ஏது என்று தெரியாமலேயே திரும்பிய நண்பர் அருகில் நின்று கொண்டிருந்தவரை காணாமல் தேடவும் அவரது மனைவி அதற்குள் அருகே ஓடிவந்து கணவர் நீரில் மூழ்கி விட்டார் என்று கதறவும் அப்போதுதான் நிலைமை எல்லோருக்கும் விளங்க ஆரம்பித்தது. முழங்காலுக்கும் குறைவாகவே நீர் இருந்த இடத்தில் ஒருவர் எப்படி மூழ்கி இருக்க முடியும்..? அருகில் எங்கும் காணாதவரைக் கண்டு பிடிக்க கரைக்குவந்து அழுதார்கள். பலரும் அங்கு வந்து தேடியும் எந்தப் பிரயோசனமும் இருக்கவில்லை. அநேகமாகப் புதை மணலில் மூழ்கி இருக்க வேண்டும் என்றே எல்லோரும் சொல்ல நீரில் இறங்கவே பலரும் பயந்தார்கள். என்ன சொல்லி என்ன. .. அவரிடைய உடல் கிடைக்கவே இரண்டு நாளாயிற்று.



கொடைக்கானல் ஏரியில் நண்பருக்கு நீரைக் கண்டதும் கல்லணை நண்பரின் நினைவு வந்து விட்டது. ஒரு மொட்டு மலரும் முன்பே கருகி விட்டது. தகப்பன் உண்ணும்போது இறந்து விட்டான் என்று மகன் உண்ணாமலேயே இறந்தானாம் என்றொரு கதை உண்டு. முடிவு எப்போது எந்த ரூபத்தில் வரும் என்று நிர்ணயிக்கவே முடியாத வாழ்க்கை. சாலையில் நடக்கும்போதோ, பஸ்ஸில் பயணிக்கும்போதோ, ரயிலில் போகும்போதோ விமானத்தில் பறக்கும்போதோ எப்போது வேண்டுமானாலும் மரணம் நேரலாம்.இருந்தும் எல்லோரும் நம்பிக்கையுடனே வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்   


 



 


 



 



15 comments:

  1. கல்லணை சம்பவம் வேதனை...

    முடிவில் உண்மையான நம்பிக்கை...!

    ReplyDelete
  2. மிகவும் சோகமான கதைகள்.

    அனுபவித்தவர்களுக்குத்தான் அதைப்பற்றி அதிகம் சிந்திக்கத்தோன்றும்.

    புதை மணல் என்பது மிகவும் பயங்கரமானது.

    ஆறு குளங்களில் நாம் புதிதாகக் குளிக்கச்செல்லும் போது, அந்த ஊர் மக்கள் குளிக்கும் பகுதியிலேயே நாமும் இறங்கிக்குளிக்க வேண்டும்.

    புதிதாக நாம் ஓர் இடத்திற்குச் சென்று குளிப்பது மிகவும் ஆபத்தானது.

    ReplyDelete
  3. நீங்கள் சொன்ன உண்மையான சம்பவங்கள் படிக்கும் போது மிகவும் வருத்தம் ஏற்படுகிறது.

    யாருக்கு எப்போது என்ன நிகழும் என்பது தெரிவது இல்லைதான்.
    நம்பிக்கையில் தான் நாள் ஓடிக் கொண்டு இருக்கிறது.

    ReplyDelete
  4. நித்ய கண்டம் என்பது போல் தான் இருக்கிறோம். கல்லணை சம்பவம் மிகவும் வேதனைக்குரியது.

    ReplyDelete
  5. திகிலான அனுபவம் தான் ...

    காலடி - ஆதிசங்கரர் பிற்ந்த இடத்தில் குளித்துக்கொண்டிருந்தவர் மனைவியின் கண் எத்ரிலேயே நீரில் மூழ்கி இறந்தார் .. இரட்டைக்குழந்தைகள் ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக பிறந்து ஒருவருடம் கூட முடியாத நிலையில் ...

    நினைத்தாலே நடுங்குகிறது ..!

    ReplyDelete
  6. என்ன சோதனை? படிக்கும்போதே இப்படியென்றால் சம்பவத்தை நேரில் பார்த்த உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்? நானும் ஒரு முறை கேரளத்தில் படகில் சென்றபோது என்னுடன் வந்த நண்பர் ஒருவர் எத்தனை வற்புறுத்தியும் வர மறுத்துவிட்டார். பிறகுதான் தெரிந்தது அவருக்கும் உங்களை மாதிரியே ஒரு நண்பர் மூழ்கி இறந்ததை நேரில் பார்த்த அனுபவம் இருந்ததை.

    ReplyDelete
  7. /எப்போது வேண்டுமானாலும் மரணம் நேரலாம். இருந்தும் எல்லோரும் நம்பிக்கையுடனே வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்/

    நல்ல சிந்தனை வரிகள். எனக்கும் சிறு வயதிலிருந்தே தண்ணீர் என்றால் பயம். .

    ReplyDelete

  8. @ திண்டுக்கல் தனபாலன்
    @ டாக்டர் கந்தசாமி
    @ கோபு சார்
    @ கோமதி அரசு
    @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    @ இராஜராஜேஸ்வரி
    @ டிபிஆர். ஜோசப்
    @ தி.தமிழ். இளங்கோ
    வாழ்க்கையில் சில சம்பவங்கள் மறக்க முடியாதவை. வாழ்வின் நிலையாத் தன்மையை நமக்கு உணர்த்துபவை. இன்றைக்கு ஒருவரை ஒருவர் சந்திக்கும் அந்த நிமிஷமே நிஜம். அடுத்து அவரைக் காண முடியுமா என்னும் நிலையில் யாரும் யாரையும் புண்படுத்தாமல் அன்பு செலுத்துவதே நலம். கதையில் இறந்தவர் என்னுடன் பணியில் இருந்தவர். சம்பவத்ட்தைக் கண்டவர் மூவர் மட்டுமே.நான் நேரில் பார்க்கவில்லை ஜோசப் சார். வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  9. சில துர்சம்பவங்களை நாம் எவ்வளவு மறக்க நினைத்தாலும் நினைவுக்கு வந்து படுத்திக்கொண்டே இருக்கும். சிலரால்தான் இறந்தகாலத்தைப் புறந்தள்ளி நிகழ்காலத்தின் இனிமையை அனுபவிக்க இயலும். அந்தவகையான மனப்பாங்கு அமைந்தவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். அனுபவப்பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  10. எல்லோரும் நம்பிக்கையுடனே வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்//உண்மைதான்

    ReplyDelete
  11. சோகம் தந்த சம்பவம்.....

    கடைசியில் நம்பிக்கை தரும் வார்த்தைகள்....

    ReplyDelete
  12. சோகம் தரும் சம்பவங்கள்

    ReplyDelete
  13. சோகம் தான். கல்லணையில் இப்படிப் புதைமணல் உண்டுங்கற விஷயமே இப்போத் தான் தெரியும். அந்த வழியாப் போயிருக்கோம். கல்லணையைப் பார்க்கவெனப் போனதில்லை. அதை அணை என்றும் சொல்ல முடியாது. ரெகுலேட்டர் தான் என்பார்கள்.

    ReplyDelete
  14. ஓ.. ரொம்ப சுமையான சம்பவங்கள்..

    ReplyDelete