Monday, November 3, 2014

கீதைப் பதிவு-14



                                              கீதைப் பதிவு-14
                                              ----------------------


 அத்தியாயம் 14
----------------------
(ஒரு இடைவெளிக்குப் பின்  மீண்டும் கீதைப் பதிவு)


குணத்ரய விபாக யோகம்
ஸ்ரீபகவான் சொன்னது
முனிவர்கள் எல்லோரும் எதை அறிந்து இவ்வுலக வாழ்க்கைக்குப் பின் மேலாம் சித்தியை அடைந்தார்களோ, ஞானங்களுள் சிறந்ததும் பரம் பொருளைப் பற்றியதுமான  அந்த ஞானத்தை மீண்டும் உரைப்பேன். (1)
இந்த ஞானத்தை அனுஷ்டித்து என் சொரூபத்தை அடைந்தவர்கள் சிருஷ்டியில் தோன்றுவதில்லை, பிரளயத்தில் துன்புறுவதில்லை(2)
பாரதா, பெரிய பிரகிருதி எனது கர்ப்பாசயம்.அதில் நான் கர்ப்பத்தை வைக்கிறேன். அதினின்று உயிர்களெல்லாம் உற்பத்தியாகின்றன.(3)
குந்தி புத்ரா, கர்ப்பாசயங்கள் எல்லாவற்றிலும் பிறக்கின்ற வடிவங்களுக்குப் பெரிய பிரகிருதி தாயாகிறாள்.கர்ப்பாதானம் செய்யும் தந்தை நான்.(4)
பெருந்தோளோய், பிரகிருதியிலிருந்து உண்டான சத்வம், ரஜஸ், தாமசம் என்னும் குணங்கள் அழிவற்ற தேகியை  தேகத்தில் பிணிக்கின்றன(5)
பாபமற்றவனே, அவற்றுள் சத்துவம் அழுக்கின்மையால் ஒளி பொருந்தியது, இடர்படுத்தாதது, சுகப் பற்றுதலாலும் ஞானப் பற்றுதலாலும் அது பிணைக்கிறது(6)

குந்தி மகனே, ரஜோகுணத்தை ஆசை வடிவுடையதென்றும், வேட்கையையும் பற்றுதலையும் உண்டு பண்ணுவதென்றும் அறி. வினைப்பற்றால் அது தேகியைத் தளைக்கிறது(7)
பாரதா, தமோகுணமோ அக்ஞானத்தில் பிறந்தது என்றும் உயிர்களை எல்லாம் மயக்குவது என்றும் அறி. அது அசட்டை, சோம்பல், உறக்கம் இவற்றால் கட்டுகிறது.(8)
சத்துவ குணம் சுகத்தில் சேர்க்கிறது, ரஜோ குணம் கர்மத்தில், தமோ குணமோ, பாரதா, ஞானத்தை மறைத்துக் கவனமின்மையில் இணைக்கிறது(9)
சத்வம் ரஜஸையும் தமசையும் அடக்கி மேலெழுகிறது, ரஜஸ் சத்துவத்தையும் தமசையும் ஆளுகிறது.அங்ஙனம் தமஸ் சத்துவத்தையும் ரஜசையும் அடக்குகிறது அர்ஜுனா.(10)
இத்தேகத்தின் பொறிவாயில் அனைத்திலும் எப்பொழுது ஞானஒளி வீசுகிறதோ அப்பொழுதே சத்துவம் ஓங்கி உள்ளதென்று அறிதல் வேண்டும்(11)

பரத சிரேஷ்டா, பேராசை, பிரவிருத்தி, வினைப்பெருக்கு, அமைதி இன்மை, வினையில் விருப்பம் இவைகள் ரஜோ குணம் மேலெழும்பும்போது உண்டாகின்றன.(12)
குருவம்சத்து வீரா, விவேகமின்மை, முயற்சியின்மை, தவறுதல், மதிமயக்கம்-ஆகிய இவைகளே தமோ குணத் தலையெடுப்பால் விளைகின்றன(13)
தேகம் எடுத்துள்ளவன் சத்துவ குணம் ஓங்கி இருக்கும்போது மரணம் அடைவானாயின் ஞானவான்களுடைய நல்லுலகங்களை அடைவான்(14)
ரஜோகுணத்தில் காலமாகின்றவன் கர்மப் பற்றுடையவர்களுக்கு இடையிலே பிறக்கிறான்.அவ்வாறே தமஸில் சாகின்றவன் அறிவிலிகள் கர்ப்பத்தில் பிறக்கிறான் (15)
நற்செய்கையின் பயன் சாத்விகமும் தூய்மையும் என்பர்.ரஜோ குணத்தின் பயனோ துன்பம். தமோகுணத்தின் விளைவு அறிவின்மை.(16)
சத்துவத்திலிருந்து ஞானம் உதிக்கிறது, ரஜஸிலிருந்து பேராசையும், தமசிலிருந்து அக்ஞானமும் கவனமின்மையும், மதி மயக்கமுமெ உண்டாகின்றன.(17)
சத்துவ குணத்தில் உள்ளோர் மேலேறுகின்றனர்.ரஜோ குணத்தில் உள்ளோர் இடையில் நிற்கின்றனர்.கடையான குணமாகிய தமோகுணத்தில் இருப்போர் கீழிறங்கு கின்றனர்(18)

ஜீவன் எப்பொழுது குணங்களுக்கு வேறான கர்த்தாவைக் காண்பதில்லையோ, குணங்களுக்கு மேலாகப் பரம்பொருளைக் காண்கிறானோ, அப்பொழுது அவன் பிரம்ம சொரூபத்தை அடைகிறான்.(19)
உடம்பை உண்டாக்கும் இம் முக்குணங்களையும் கடந்து, பிறப்பு இறப்பு ,மூப்பு, துன்பத்தினின்று விடுபட  ஜீவன் மரணமிலாப் பெரு வாழ்வு பெறுகிறான்.(20)
அர்ஜுனன் சொன்னது
இறைவா, எந்த அடையாளங்களால் (ஜீவன்) இந்த மூன்று குணங்களையும் கடந்து நிற்பவன் ஆகின்றான்? அவனது நடத்தை யாது.? எங்ஙனம் இம் முக்குணங்களைக் கடக்கிறான்.?(21)
ஸ்ரீபகவான் சொன்னது
பாண்டவா, (சத்துவத்தின் காரியம்) ஒளி, (ரஜஸின் காரியம்) செயல், (தமஸின் காரியம்) மயக்கம்-இவை வாய்த்த விடத்து அவன் வெறுக்கிறதில்லை, ஒழிந்தவிடத்து வேட்கை யுறுகிறதில்லை(22)

வெறும் சாக்ஷியாய் இருந்துகொண்டு யார் குணங்களால் அசைக்கப் படுவதில்லையோ, குணங்களே தொழில் புரிகின்றன என்று ஆத்மாவில் அசையாது இருக்கிறானோ;(23)
துன்பத்தையும் இன்பத்தையும் சமமாகக் கொண்டவன்,ஆத்மாவில் நிலைத்தவன், மண், கல். பொன்னை நிகராகக் காண்பவன் இனியதையும் இன்னாததையும் ஒன்றாக ஓர்ப்பவன், பேரறிஞன், இகழ்ச்சி புகழ்ச்சியை ஒரே பாங்குடன் பார்ப்பவன்(24)
மான அவமானத்தை நிகராக நினைப்பவன், நண்பனிடத்தும் பகைவனிடத்தும் ஒரே பாங்குடையவன், தனக்கெனத் தொழில் செய்யாதவன் யரோ, அவன் குணாதீதன் எனப்படுகிறான்.(25)
மாறாத பக்தி யோகத்தால் என்னை யார் உபாசிக்கிறானோ, அவன் இக்குணங்களை முற்றும்  கடந்து, பிரம்மம் ஆவதற்குத் தகுதி உடையவனாகிறான்.(26)
அழியாத மோக்ஷ நிலையாகிய பிரம்மத்துக்கும் சாசுவதமான தர்மத்துக்கும்  ஒப்பற்ற சுகத்துக்கும் நானே இருப்பிடம். (27)
                குணத்ரய விபாக யோகம் நிறைவு.         
 
















13 comments:

  1. //சத்துவ குணத்தில் உள்ளோர் மேலேறுகின்றனர்.

    ரஜோ குணத்தில் உள்ளோர் இடையில் நிற்கின்றனர்.

    தமோ குணத்தில் இருப்போர் கீழிறங்குகின்றனர்..//

    தொடர்கின்றேன் ஐயா!..

    ReplyDelete
  2. தொடர்கிறேன் ஸார்.

    ReplyDelete
  3. மாறாத பக்தி யோகத்தால் என்னை யார் உபாசிக்கிறானோ, அவன் இக்குணங்களை முற்றும் கடந்து, பிரம்மம் ஆவதற்குத் தகுதி உடையவனாகிறான்

    சிறப்பான பகிர்வுகல்.பாராட்டுக்கள்.!

    ReplyDelete
  4. குணத்ரய விபாக யோகம் விளக்கம் அருமை.
    இறைவன் மேல் பக்திக் கொண்டு வாழ்வோம்.

    ReplyDelete

  5. @ கரந்தை ஜெயக்குமார்
    தொடர் வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  6. @ துரை செல்வராஜு
    கீதையில் பல இடங்களிலும் சத்துவ ரஜோ, தமசு குணங்கள் பற்றிய சுலோகங்களே அதிகம் காணப்படுகிறது. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  7. @ ஸ்ரீராம்
    தொடர் வருகைக்கு நன்றி ஸ்ரீ.

    ReplyDelete

  8. @ இராஜராஜேஸ்வரி
    ரசித்ததைக் குறிப்பிட்டுப் பின்னூட்டம் இடுவதற்கு நன்றி மேடம்.

    ReplyDelete

  9. @ வே நடனசபாபதி
    தொடர்வதற்கு நன்றி சார்

    ReplyDelete

  10. @ கோமதி அரசு
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி மேடம்.

    ReplyDelete
  11. ///வெறும் சாக்ஷியாய் இருந்துகொண்டு யார் குணங்களால் அசைக்கப் படுவதில்லையோ, குணங்களே தொழில் புரிகின்றன என்று ஆத்மாவில் அசையாது இருக்கிறானோ;(23)//

    பக்தியை மிஞ்சின இந்த நிலை எல்லோருக்கும் வாய்த்தால்????? எங்கே! என் போன்றவர்களுக்கு பக்தி செய்வதே பெரிய விஷயம்!

    ReplyDelete