Friday, June 10, 2016

சுவடுகளைத் தேடி

                                                    சுவடுகளைத் தேட
                                 சிந்தனையைக் கிளரும் புகைப்படங்கள்
                                 --------------------------------------------------------------
சிம்ஸ் பார்க் முகௌப்பு 

13 சர்க்கிள் குவார்டெர்ஸ் 





படம் -4 மைசூர் லாட்ஜ் அனெக்ஸ் சிதிலம் 
வீட்டின் முன் இருந்த சாம்பிராணி மரமும்  முனீஸ்வரனும்






படம் நம் 1-- அப்பர் கூனூரில் இருக்கும் சிம்ஸ் பார்க்கின் முகப்பு

 நாங்கள் 1952- ம் ஆண்டு முதல் 1956-ம்  ஆண்டு வரை நீலகிரியில்  அப்பர் கூனூர் மற்றும்  வெல்லிங்டன் பாரக்ஸ்  அருகே இருந்த  சர்க்கிள் குவார்ட்டர்ஸிலும்   வசித்தோம்
1998-ம் ஆண்டு என் மகன் கோவையில் இருந்தபோது  என் தம்பியுடன் நாங்கள் வசித்த இடங்களையும்  பள்ளியையும் நான் முதலில் வேலை பார்த்த மைசூர் லாட்ஜ் அனெக்ஸையும்  பார்க்க நினைத்தோம்  அந்த நாள் நினைவுகளைத் தாங்கிக் கொண்டு பயணித்தோம்  அந்த நாள் கோவையில் குண்டு வெடிப்பு நிகழ்வதற்கு முந்தைய நாள் அப்பர் கூனூரில் நாங்கள் வசித்த வீட்டை காணச் சென்றோம் சிம்ஸ் பார்க் அருகே பாஸ்டியர்  இன்ஸ்டி ட்யூடுக்குக் கீழே ஒரு பேரிக்காய்த் தோப்பு இருந்தது. அதன்  நடுவே நாங்கள் குடி இருந்த வீடு அந்த அடையாளங்களுடன்  தேடிப்போனோம்  ஆனால் பேரிக்காய்த் தோப்பு இருந்த சுவடே இருக்க வில்லைஅது பற்றி விசாரித்தால் எங்களை மேலும் கீழும் பார்த்தார்கள்  42 ஆண்டு இடைவெளியில் வீடு தோப்பு எதுவுமே காணவில்லை.  இது இப்படி இருக்கும்  போது  ஆண்டுகளுக்கு முந்தைய சரித்திர நிகழ்வுகளை இருக்கும் மிச்சங்கள் கொண்டு அறிவது முக்காலும் கற்பனையாய் இருக்க வாய்ப்புண்டு. வீட்டின்  முன் இருந்த மலை முகடு நன்றாய் நினைவுக்கு வந்தது ஏமாற்றத்துடன் மீண்டும் சிம்ஸ் பார்க் அருகே வந்தோம்  அங்கிருந்து புனித அந்தோனியார் உயர் நிலைப் பள்ளிக்கு  வந்தோம் பள்ளி இன்னும் அதிகப் பொலிவுடன் இருக்கிறது.  தலைமை ஆசிரியரைச் சந்தித்து அவருடன் புகைப்படமெடுக்க வேண்டி காமிராவை என் தம்பியிடம் கொடுத்தேன் அவனுக்கு படம் எடுத்துப் பழக்கம் இல்லாததால் எங்களைத் தவிர்த்து அனைத்தையும் படம் பிடித்தான் டிஜிடல் காமிரா அல்லாததால் தவறு உடன் தெரியவில்லை. தேர்வு நாட்களில் இடை வேளையின் போது அருகில் இருந்த சிம்ஸ் பார்க் வந்து ஏதாவது மரக்கிளையில் ஏறி அமர்ந்து தொந்தரவு இல்லாமல் படித்தது நினைவில் ஓடியது
அங்கிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரமிருந்த நாங்கள் முன்பு குடியிருந்த சர்க்கிள் குவார்ட்டர்ஸுக்குப் போக விரும்பினோம்  முன்பெல்லாம் நடந்தே கடந்த தூரத்தை ஆட்டோவில் போய்க் கடந்தோம்

படம்  2-எங்கள் வீடு
---------------------------------

 பாரக்ஸிலிருந்து ஒரு பள்ளம் இறங்கி பின்  மேடு ஏறினால் குவார்டர்ஸ் வரும் மேடு ஏறியதும் பாபு வில்லேஜ் வரும் அங்கிருக்கும்  குரிசடியிலிருந்து எங்கள் வீடு அருகாமையில் இருக்கும்  எங்கள் வீட்டிலிருந்து நேர் மேல் சர்க்கிள் குவார்டர்ஸ் . அது ராணுவ பயிற்சி அதிகாரிகளுக்கு ஒதுக்கப் பட்டது  அதை ஒட்டியே இருந்ததால் எங்கள்  வீடும் 13 சர்க்கிள் குவார்டர்ஸ் என்றே  அறியப் பட்டது.
அலுவலக ரெகார்ட் படி அது ஒரு குதிரை லாயம் எனப் பெயரில் இருந்தது ஒரு பெரிய வீடும்(மூன்று பெரிய அறைகளும் மூன்று சிறிய அறைகளும்  ) அதைச் சுற்றி இருந்த இடமும்  எங்கள் உபயோகத்தில் இருந்தது.அதற்காக எங்கள் அப்பாவின் சம்பளத்தில் இருந்து ரூபாய் மூன்றரை வாடகையாகப் பிடிக்கப்படும்  சுற்றி இருந்த இடத்தைக் குத்தகைக்கு எடுத்து உருளைக் கிழங்கும் காபேஜும் அங்கிருந்த படகர்கள் பயிரிடுவார்கள் எங்கள் வீட்டின் ஒரு அறையில் உருளைகிழங்குகள் குவிக்கப் பட்டிருக்கும்

படம் -3 சாம்பிராணி மரமும்  முனீஸ்வரனும்
-----------------------------------------------------------------------
 வீட்டின் முன்னால் ஒரு சாம்பிராணி மரம்  அதன் அடியில் முனீஸ்வரன் பிரதிஷ்டைஆகியிருக்கும் . தினம் விளக்கு வைக்கும் நேரம் முனீஸ்வரனுக்கும்  விளக்கேற்ற வேண்டும்  எனக்கு இருட்டினால் அந்த மரம் அருகே போக பயம்  ஆதலால் முக்காலும்  என் தம்பியே விளக்கேற்றுவான்

படம் -4  மைசூர் லாட்ஜ் சிதிலம்
-------------------------------------------------
 நான் பள்ளி இறுதி படிப்பு முடித்தபோது சிறிது காலத்துக்கு  மைசூர்லாட்ஜ் அனெக்ஸில்  பொறுப்பாளனாக இருந்தேன்  அந்த இடம் கூனூர் ரயில்வே  நிலையத்துக்கு மேல் இருந்த மேட்டில் இருந்தது  நாங்கள் போய்ப் பார்த்தபோது அந்தக் கட்டிடமே  சிதிலமடைந்து ஓட்டல் இருந்த அடையாளமே இல்லாமல் இருந்தது என்  பணிக்கால அனுபவங்கள் குறித்து முன்பே பதிவிட்டிருக்கிறேன் பார்க்க வேலை தேடும் படலம் 

இதே இடங்களை 2011-ல்  என்னுடைய இன்னொரு தம்பியின் குடும்பத்துடன் சென்று பார்த்தபோது  நாங்கள் குடியிருந்த வீடு உண்மையிலேயே குதிரை லாயமாக மாற்றப்பட்டு இருந்தது  மைசூர் லாட்ஜ் இருந்த இடத்தில் ஒரு ஒரு கோர்ட் வந்திருக்கிறது  அதன் படங்களும் கீழே
மைசூர் லாட்ஜ் இருந்த இடத்திலிருந்து கூனூர் ரயில் நிலையம் 

மைசூர் லாட்ஜ் இருந்த இடத்தில்  நீதி வளாகம் 

நாங்கள் இருந்த வீட்டின் அருகே

குதிரைலாயத்துக்குப் போகும்  பாதை


எல்லா இடங்களையும் பார்த்துத் திரும்பும்போது மனதில் ஒரு வெறுமை இருந்ததென்னவோ உண்மை














30 comments:

  1. பழைய இடங்களை மீண்டும் பார்க்கும்போது
    ஒரு வெறுமை தோன்றுவதை நானும் உணர்ந்திருக்கிறேன் ஐயா

    ReplyDelete
  2. இதைப் பார்த்ததும் எனக்கும் அரவங்காட்டில் நாங்கள் இருந்த குடியிருப்பைப் போய்ப் பார்க்கும் ஆவல் தோன்றி விட்டது. ஆனால் எளிதில் முடியாது! :) நாங்கள் இருந்தது 2000 ஆம் ஆண்டிலிருந்து 2002 ஆம் ஆண்டு வரை!

    ReplyDelete
  3. நம் நினைவில் இருக்கும் பழைய இடங்களைத் திரும்பப்போய் பார்க்காமல் இருப்பதே நல்லதுன்ற முடிவுக்கு நான் எப்பவோ வந்தாச்சு. அடையாளமே தெரியாமல் சுத்துனதெல்லாம் தனிக்கதை.

    மனசுக்குள் இருக்கும் படம் அழியாமல் இருந்தால் போதுமுன்னு இப்பெல்லாம் நினைக்கிறேன்.

    காலஓட்டத்தில் எல்லாமே மாறித்தான் கிடக்கு :-(

    ReplyDelete
  4. பழமையான நினைவுகளை தேடிப்போவது சுவாரஸ்யம்தான்!

    ReplyDelete
  5. பழைய நினைவுகள் எல்லாமே சுவாரஸ்யம்தான். வசித்த இடங்கள் இளமை நினைவை இசைக்கும்.

    ReplyDelete
  6. பசுமை நிறைந்த நினைவுகளே என்று பாடத் தோன்றிற்று. இனிமேல் அந்த இளமை ... அந்த இளமையான துடிப்பான அனுபவங்கள் ... இனி வரவே வராது.

    ReplyDelete
  7. பழைய நினைவுகளை மீட்டு கோர்வையாகத்தரும் உங்களது பாணி அருமை ஐயா. சாம்பிராணி மரத்தைப் பற்றி தற்போதுதான் அறிந்தேன். நன்றி.

    ReplyDelete

  8. @ கரந்தை ஜெயக்குமார்
    வெறுமை உணர்ச்சி அந்த இடம் நாம் இருந்தபோது இருந்த மாதிரி இல்லாததாலோ வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  9. @ கீதா சாம்பசிவம்
    1950களில் வசித்த இடம் போய்ப் பார்த்தோம் அரசாங்கக் குடி இருப்பில்அரவங்காட்டில் 14 வருடங்களில் பெரிய மாற்றம் இருக்காது என்றே தோன்றுகிறது வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  10. @ துளசி கோபால்
    காலத்தின் கோலத்தை நாமே உணர ஒரு வாய்ப்புதானே இது. வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  11. @ டாக்டர் கந்தசாமி
    2011ல் போய் வரும் வழியில்தான் உங்களை உங்கள் வீட்டில் சந்தித்தேன் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  12. @ தளிர் சுரேஷ்
    இப்போதும் அந்த நினைவுகள் நினைக்கும்போது சுவாரசியம்தான் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  13. @ ஸ்ரீ ராம்
    ஆனால் அந்த இடங்கள் பெரிய மாற்றத்துக்கு உட்பட்டு இருக்கும் போது ஒரு வெறுமையும் கூடவே வருகிறது வருகைக்கு நன்றி ஸ்ரீ

    ReplyDelete

  14. @ தி தமிழ் இளங்கோ
    எனக்கு அந்த நினைவுகளுடன் காலம் செய்யும் மாற்றமும் என்ன என்னவோ எண்ணங்களை எழுப்புகிறதுவருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  15. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்

    ReplyDelete
  16. எல்லா மனிதர்களுக்குமே இவ்வகை பழைய நினைவுகள் மனதை உலுக்கி விடுவது இயல்பு ஐயா நானும் இன்றுவரை பழைய இடங்களுக்கு சென்று வருவதை பழக்கமாக வைத்துள்ளேன் நல்லதொரு பகிர்வுக்கு நன்றி
    (நேற்றே படித்து விட்டேன் கருத்துரை இடமுடியவில்லை)

    ReplyDelete

  17. @ கில்லர்ஜி
    நாம் வாழ்ந்த இடங்கள் அடையாளத்தைத் தொலைத்திருப்பதே வருத்தம் தருகிறதுவருகைக்கு நன்றி ஜி

    ReplyDelete
  18. பழகிய, வாழ்ந்த, பழைய இடங்களைப் பார்க்கும்போது மகிழ்ச்சியும், திரும்ப அந்த இடங்களில் வாழும் சந்தர்ப்பம் கிடைக்காதே என்ற வருத்தமும் எழுவது இயல்பே. ஆனாலும் அங்கு போய் வந்தவுடன் உங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி கிட்டியிருக்குமே! அதற்காகவாவது போய்வரலாம்.
    வேளாண் அறிவியல் படிக்கும்போது, கல்விப் பயணம் மேற்கொண்டபோது சிம்ஸ் பூங்கா சென்றிருந்தோம். எனக்கும் சிம்ஸ் பூங்கா படத்தைப் பார்த்ததும் பழைய நினைவுகள் மனதில் நிழலாடின. பதிவை இரசித்தேன்.

    ReplyDelete
  19. இளமைக்கால வாழ்விடங்கள், தொடர்பான நினைவுகள் மனதை அள்ளுகின்றன.உண்மைதான்.அந்த இடங்களுக்கு மனைவியுடன் மீண்டும் சென்று உங்களைப் புதுப்பித்துக்கொண்டீர்கள் என நினைக்கிறேன். படங்கள் நேர்த்தியாக, சுற்றுப்புறத்தை ரம்யமாகக் காட்டுகின்றன.

    ReplyDelete

  20. @ வே.நடனசபாபதிநாங்கள் அப்பர் கூனூரில் வசித்த இடங்கள் முற்றிலும் மாறி இருந்தது. அடையாளமான பேரிக்காய்த் தோப்பே காணாமல் போய் விட்டதுசில லாண்ட்மார்க் இடங்களின் நினைவோடுதான் போய் வந்தோம் சிறு வ்வயது நினைவுகள் வந்தது நிஜம் ஆனால் என் கூட வந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்கவில்லை. வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  21. @ ஏகாந்தன் .
    நாங்கள் 1998ல் போனபோது என்னிடம் டிஜிடல் காமிரா இல்லை. ப்ரிண்ட் போட்ட படங்களிலிருந்தே மீண்டும் எடுத்து டிஜிடைஸ் செய்தேன் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  22. பழைய நினைவுகள், முன்பு இருந்த இடங்கள் எல்லாம் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.

    நானும் நினைப்பேன் என் அப்பாவுடன் ஒவ்வொரு ஊராக சென்று குடி இருந்த இடங்களை பார்க்க வேண்டும் என்று.

    காலம் எல்லாவற்றையும் புரட்டி போட்டு இருக்கும் எந்த இடமும் முன்பு போல் இருக்காது என்றாலும் இங்குதான் எங்கள் வீடு இருந்தது இங்குதான் என் தோழியுடன் விளையாடினேன் , இந்த பள்ளியில் தான் படித்தேன் என்று நினைவலைகளை மீட்டலாம் அல்லவா?

    ReplyDelete

  23. @ கோமதி அரசு
    இந்த மாதிரி நினைவுகள் 13 சர்க்கிள் குவார்டெஸைப் பார்க்கும் போது வந்தது/ ஆனால் மேல் கூனூரில் இருந்த இடமே காணாமல் போனதைப் பார்த்து வெறுமைதான் மிஞ்சியது வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete
  24. நல்ல கோர்வையான நினைவு கூறல்,மனதில் நெசவு கொண்ட நினைவுகளை இது போல்தான் மீட்டெடுக்க வெண்டியதிருக்கிறது,வாழ்த்துக்கள்/

    ReplyDelete
  25. பழைய நினைவுகள் வாய்க்கப்பெற்ற வரமே,,,/

    ReplyDelete
  26. நாம் வசித்த இடங்களுக்குச் சென்று பார்க்க விருப்பம் இருந்தாலும், சென்று பார்த்து திரும்பும் போது மனதில் ஒரு வலி.... இரண்டொரு முறை அனுபவித்து இருக்கிறேன் அந்த வலியை..... குறிப்பாக நெய்வேலி சென்று திரும்பும்போது.

    ReplyDelete

  27. @ விமலன் பேராளி
    பழைய புகைப்படங்களைப் பார்க்கும் போது எழும் எண்ணமே பதிவில்வருகைக்கு நன்றி உங்கள் பெயரை தமிழில் சரியாக எழுதி இருக்கிறேனா

    ReplyDelete

  28. @ விமலன் பேராளி
    நினைவுகளே வாழ்க்கையாகி விட்டபோது அது என்ன வரமா கருத்துக்கு நன்றி சார்

    ReplyDelete

  29. @ வெங்கட் நாகராஜ்
    வசித்த இடங்களைச் சென்று பார்த்ததனால் வந்த வெறுமை அல்ல. இருந்த இடங்கள் சுவடே காணாமலிருப்பதே வலிக்கிறது வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்

    ReplyDelete