Saturday, March 19, 2022

கர் நாடக இசையும் நானும்

 


                                       கர்நாடக இசையும் என் கனவும்....
                                           -------------------------------------

இசையைப் பற்றிப் பலரும் பதிவிடுகிறார்கள். அதன் சில நுணுக்கங்களையும் அதனை அவர்கள் ரசிப்பதையும் பதிவுகளில் காணும்போது எனக்குள் நான் எதையோ இழந்தது போல் இருக்கும். எங்கள் குடும்பத்தில் சாஸ்திரீய சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவர் யாரும் இல்லை. எனக்கு அது ஒரு குறையாகவே இருந்தது. எப்போதும் அதைக் குறையாகவே இருக்க விடலாமா சினிமாப் பாடல்கள் கேட்டு ரசித்ததுண்டு.( அந்தக் காலத்தது.) இந்தக் காலத்துப் பாட்டுக்களை என்னால் ரசிக்க முடியவில்லை. பெரும்பாலும் ஒரே இரைச்சலாகவே தோன்றுகிறது. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்று சிலர் முணுமுணுப்பது காதில் விழுகிறது. I KNOW I AM DIGRESSING



கர்னாடக இசையை முறையாகப் பயிலலாம் என்றால் என் பணி நேரம் அதற்கு இடங்கொடுக்கவில்லை. மேலும் என் குரல் வளத்தில் எனக்கு அவ்வளவு நம்பிக்கை கிடையாது. என் மனைவிக்கு கர்நாடக சங்கீதம் கற்றுக் கொடுத்து அவளை ஒரு விதூஷிகியாக்க வேண்டும் என்ற எண்ணத்தைச் செயல் படுத்த முயன்றேன். என் வீட்டில் நான் என் மனைவி, இரு குழந்தைகள், அவள் தம்பி என, எல்லோர் தேவைகளையும் பூர்த்திசெய்ய வேண்டியவள் மேல் இன்னொரு பாரமும் ஏற்றப் பட்டது. பாட்டுக் கற்றுக் கொள்வது பாரமா எனக் கேட்பவர்கள் அந்த சூழ்நிலை உணர்ந்தால் அப்படிக் கேட்க மாட்டார்கள், சரி தீர்மானம் எடுத்தாய்விட்டது. யாரிடம் பாட்டு கற்றுக் கொள்வது?. எங்கள் நல்ல காலம் திருச்சி ஆண்டாள் தெருவிலிருந்து ஒருவர் பீ.எச்.இ.எல்  டௌன்ஷிப்புக்கு வந்து சிலருக்கு பாட்டு கற்றுக் கொடுக்கிறார் என்று கேள்விப் பட்டோம். மதியம் வேலை எல்லாம் முடிந்து சற்று அக்கடா என்று என் மனைவி இருக்கும் நேரமே பாட்டு கற்க உகந்த சமயம் என்று முடிவாயிற்று.

வைத்தியநாத பாகவதர் என்பது பாட்டு வாத்தியார் பெயர். 45-/வயதிருக்கலாம் சுமாரான உயரம். சற்றே மெலிந்த தேகம். பார்த்த உடனே சொல்லி விடலாம்

தேவைகளைப் பூர்த்திசெய்ய அல்லாடுபவர் என்று. காலையில் திருச்சியிலிருந்து டௌன்ஷிப்புக்கு வந்தார் என்றால் ஒவ்வொரு வீட்டிலும் பாட்டு சொல்லிக் கொடுத்துவிட்டு அவர் வீடு திரும்ப மாலை விளக்கு வைக்கும் நேரமாகி விடும்..வாரம் இரண்டு நாள் பயிற்சி. சும்மா சொல்லக் கூடாது . அபார ஞானம் உள்ளவர். எந்த ஸ்தாயியிலும் அசாதாரணமாகப் பாடுவார். அவரை ட்யூஷன் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்யுமுன் அவரிடம் ஒரு பாட்டு பாடச் சொல்லிக் கேட்டேன். இன்றும் அவர் பாடிய அந்தப் பாட்டு என் காதுகளில் ரீங்கரிக்கிறது. “பஞ்சாட்சத்  பீட ரூபிணி ,மாம்பாஹி. ஸ்ரீராஜராஜேஸ்வரி “என்று உச்சஸ்தாயியில் ஆபேரி ( ? ) ராகத்தில் பாடக் கேட்டதும் , இவர்தான் என் மனைவிக்கு பாட்டு சொல்லிக் கொடுக்கப் போகும் குரு என்று தீர்மானித்து விட்டோம்..அவர் பெங்களூரைச் சேர்ந்தவர் என்றும், அலசூரில் இருந்தவர் என்பதும், சற்றுக் காலங்கடந்து மணம் முடித்தவர் என்பதும், இரண்டு குழந்தைகள் இருக்கின்றன என்றும் அவர் கூறத் தெரிந்து கொண்டோம். எங்கள் ஒரு வீட்டுக்காக வர வேண்டியவருக்கு எங்கள் எதிர் வீட்டு நண்பரின் மனைவியும் பாட்டுக் கற்றுக் கொள்வதன் மூலம் இன்னொரு பயிற்சியாளராகச் சேர, j அதிக வருவாய்க்கு வழி கிடைத்தது. அப்பொழுது ட்யூஷன் ஃபீஸாக மாதம் 20-/ ரூபாய் கொடுத்த நினைவு. ஒரு ஹார்மோனியப் பெட்டி மாத்திரம் வாங்கிக் கொள்ளச் சொன்னார். அவருக்கு நூற்றுக் கணக்கான கிருதிகள் மனப் பாடமாகத் தெரியும். ஸ்வரம் ,எழுதி, சாஹித்தியமும் எழுதிக் கொடுப்பார்

.

எந்தப் புத்தகமும் பார்க்க மாட்டார். சுமார் இரண்டு ஆண்டு காலம் என் மனைவி அவரிடம் பாட்டுக் கற்றுக் கொண்டார். என் மனைவியின் ஆர்வம் அதிகரித்ததுபோல் எதிர்வீட்டு நண்பரின் மனைவியின் ஆர்வம் குறைந்து அவர் விலகிக் கொண்டார். எங்கள் துர திர்ஷ்டம் எனக்கு விஜயவாடாவுக்கு மாற்றல் ஆகி என் மனைவியின் பாட்டு கற்கும் படலம் முற்றுப் புள்ளி பெற்றது. அதற்குள் ஒரு நாள் டௌன்ஷிப் கோயிலில் பக்க வாத்தியங்களுடன் இரண்டு மூன்று பாட்டுகள் என் மனைவியை பாட வைத்தார். அப்போது என் மனைவி பாடிய “நகுமோமு கனலேனி  நாஜாலி தெலிசி “என்ற பாட்டு நல்ல வரவேற்பு பெற்ற்து.

என்ன சொல்லி என்ன பயன்.?என் மனைவி பாட்டில் விதூஷிகியாகக் கொடுத்து வைக்கவில்லை. சும்மாவா சொல்லிப் போனார்கள் பாடப் பாட ராகம், மூட மூட ரோகம் என்று. விஜயவாடா சென்றதும் தோதாக வாத்தியார் கிடைக்காததால் மேலும் கற்கவோ அபிவிருத்தி செய்யவோ முடியாமல் போயிற்று. சொல்லப் போனால் என்னுள் அவளை பெரிய பாட்டுக்காரியாக்க வேண்டும் என்ற நெருப்பும் அணைந்து விட்டது. அவள் பாட்டுக் கற்றதும், பாடியதும் எல்லாம் வெறும் நினைவாகி விட்டது.

நான்கு ஆண்டுகள் கழிந்து மீண்டும் திருச்சிக்கே மாற்றலாகி வந்தபிறகு பல நாட்கள் கழித்து வைத்தியநாத பாகவதரைச் சந்தித்தோம். அவர் மிகுந்த சிரம தசையில் இருந்தார். உடல் நலமும் சீராக இருக்கவில்லை. மறுபடியும் அவரை ட்யூஷனுக்காகக் கூப்பிட்டோம். சில நாட்கள் வருவார். பல நாட்கள் வர மாட்டார். அவர் குரலும் அதிலிருந்த கம்பீரமும் காணாமல் போயிருந்தது. அதற்குள் டௌன்ஷிப்பிலேயே ஒரு பாட்டு ஸ்கூல் ஆரம்பித்திருந்தார்கள். ஒரு கட்டான அமைப்புடன் போட்டி போட முடியாமல் வைத்தியநாத பாகவதர் காணாமல் போய்விட்டார்.

என் பிள்ளைகளும் சற்று வளர்ந்து விட்டார்கள். அவர்களது நாட்டம் மெல்லிசையின்பால் சென்றது. டௌன்ஷிப்பில் ஒரு ஆர்க்கெஸ்ட்ரா குழு அமைத்து எல்லா நிகழ்ச்சிகளிலும் என் மூத்த மகன் பாட, இளையவன் ட்ரம்ஸ் வாசிப்பது வாடிக்கையாகி விட்டது. நானும் என் பங்குக்கு வீட்டில் ஏதாவது பாட்டுப் பாடினால் அவர்களின் எதிர்ப்பு இருந்தது. என் சாரீரம் ( ? )
கன கம்பீரமாக இருக்கும். டீக்கடையில் பாட்டு போட்டது போல் இருக்கிறது, என்றும் என் குரல் தொலைதூரம் வரைக் கேட்கிறது என்றும் கூறி கண்டித்து என் வாயை அடைப்பார்கள். பாட்டுக் கேட்பது மட்டும்தான் எனக்குக் கொடுத்து வைத்தது. 

வெகு நாளைக்குப் பிறகு மீண்டும் என் வீட்டில் ஒரு பாடகரை உருவாக்கும் ஆசை எழுந்தது. என் மூத்த மருமகளைப் பிடித்தேன். ஆரம்ப பாடங்களை என் மனைவி கற்பிக்க தயாராயிருந்தாள். ஒரு நல்ல நாள் பார்த்து குரு தட்சணை எல்லாம் கொடுத்து பாடம் கற்கத் தயாரானாள் என் மருமகள். சரளிவரிசை, ஜண்டை வரிசை என கம்பீரமாக என் மனைவி பாட்டுச் சொல்லிக் கொடுக்கத் துவங்கினாள். என் மருமகளுக்கோ நேராக கீர்த்தனங்களும் ராகங்களும் கற்க ஆசை. அது முடியாதென்று தெரிந்ததும் அவளுடைய ஆர்வமும் நீரூற்றிய நெருப்புபோல் பிசு பிசுத்து விட்டது.அத்துடன் ஒரு சங்கீத கலாநிதியை உருவாக்கும் என் கனவும் காணாமல் போயிற்று.

 

அந்தக் காலத்தில் என் மனைவி கர்நாடக சங்கீதம் கற்கத் துவங்கி இருந்த போது பாடிய ஒரு பாடலை டேப்பில் பதிவு செய்திருந்தேன் 1970களின் ஆரம்பம். அந்தப் பாடலை இப்போது போட்டுக் கேட்டபோது இதைக் கணினியில் ஏற்ற வழி கேட்டேன் என் பேரனிடம் . அவன் என்னென்னவோ செய்து வலையில் ஏற்றத் தக்கதாக மாற்றிக் கொடுத்திருக்கிறான். டேப்பிலிருந்து மறுபடியும் ஒலிப்பதிவு செய்தபோது பாட்டின் மெருகு சற்றுக் குறைந்து விட்டதோ என்று தோன்றுகிறது. இருந்தாலும் பகிர்கிறேன்



              


-------









16 comments:

  1. நீங்கள் சொல்லி இருக்கும் இரண்டு பாடல்களுமே எனக்கு மிகவும் பிடித்தது. எனக்கும் பாடகனாக ஆசைதான். என் குரல்வளம் தெரியும் என்பதால் அந்த ஆசையை மனதில் வைத்துக்கொண்டு ரசிப்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. எனக்கும்ப்ல பாடல்கள் பிடிக்கும்ஆனால் ராகம் தெரியாது

      Delete
    2. எனக்கும்பல பாடல்கள் பிடிக்கும் ஆனால் ராகம் தெரியாது
      =

      Delete
    3. எனக்கும்பல பாடல்கள் பீக்கும் ஆனால் ராகம் தெரியாது

      Delete
  2. டேப்பிலிருந்து எடுத்து பகிர்ந்திருப்பதால் சற்று மெதுவாய் கேட்கிறது.  பத்திரமா ய் டேப் இன்னமும் வைத்திருக்கிறீர்கள் என்பது பேரிக்காய் விஷயம்.  அம்மா நல்லா பாடியிருக்காங்க.  ஹிந்தோளம் என்று தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. டேப்புகள் எல்லாம் எங்கோ

      Delete
    2. // டேப் இன்னமும் வைத்திருக்கிறீர்கள் என்பது பேரிக்காய் விஷயம் //

      மன்னிக்கவும். பெரிய விஷயம் என்று வந்திருக்க வேண்டும். இப்போதுதான் மறுபடி பார்க்கிறேன்.

      Delete
  3. சார் என் மனதிலிருந்து வரும் உண்மையான வார்த்தைகள்! உங்களுக்கு எவ்வளவு பாராட்டுப் பத்திரங்கள் கொடுத்தாலும் தீராது. பொதுவாக எல்லாக் கணவன் மார்களும் மனைவியைப் பாடகியாக்கவோ அவரது திறமையை வளர்க்கவோ அத்தனை எளிதாக முன்வரமாட்டார்கள்.

    அடுத்த வகை ஃப்ரீடம் கொடுப்பது வேறு, ஆனால் கூடவே ஊக்குவித்து முன்னுக்குக் கொண்டுவருவது...அது உங்கள் மருமகள் வரைக்கும் சென்றது பாராட்டுகள் சார்.

    ரசித்து வாசித்தேன் சார். உங்களை மெச்சிக் கொண்டே. ஆனால் உங்கள் கனவு நிறைவேறாதது கொஞ்சம் கஷ்டம்தான் இப்போது பாடச் சொல்லிக் கேளுங்கள் சார். அம்மா பாடுவாங்களே

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றிஇப்போதெல்லாம் பாடுவதில்லை

      Delete
    2. முதலில் நன்றி இப்போதெல்லாம் பாடுவதில்லை

      Delete
  4. சார் அம்மாவின் குரல் நன்றாக சூப்பராக இருக்கிறது ஆனால் டேப்பிலிருந்து பகிர்ந்திருப்பதால் இடையிடையே குரல் சரியாகக் கேட்கவில்லை. ஹிந்தோளம் ராகம்? பாடல் என்ன என்று தெரியவில்லை. அருமையான குரல்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அலள்குரல் வளம்நன்றுஆனால் பாடுவதில்லை

      Delete
  5. பஞ்சாட்ச பீட ரூபிணி, நகுமொ இரண்டுமெ பிடித்த கிருதிகள்

    பஞ்சாட்ச எம் எல் வி பாடியதும் சிறப்பாக இருக்கும்.

    அம்மாவை பக்க வாத்தியங்களுடன் பாட வைத்தது எல்லாம் ஆஹா சார் உங்களை ரொம்ப ரொம்பப் பாராட்டுகிறேன். என் வணக்கங்களும்!

    கீதா

    ReplyDelete
  6. என் மருமகளுக்கோ நேராக கீர்த்தனங்களும் ராகங்களும் கற்க ஆசை.//

    ஹாஹாஹா சார் நானும் அப்படித்தான்....நான் கற்றது ஒரு சில மாதங்களே. ஆனால் எனக்குச் சிறு வயதிலிருந்தே பாடல்களை நேராகக் கேட்டு கேட்டுப் பாடப் பிடிக்கும். அது போல ராகம் ஆலாபனை, ஸ்வரப்பிரஸ்தாரம் இப்படித்தான் ஆரம்பப்பாடங்கள் கற்க என்னவோ ஒரு சுணக்கம். அதனாலேயே என் மாமா மனைவி மாமியிடமே அவ்வப்போது ஏதாவது தமிழ்க்கீர்த்தனை கற்றுக் கொள்வதுண்டு. அவர் விதூஷி. ஆனால் என்னாலும் பாட்டு முழுமையாகக்கற்றுக் கொள்ள முடியவில்லை இப்போது பாடவும் முடிவதில்லை.

    பாடப் பாட ராகம்மூட முட ரோகம் - அதேதான் சார்.

    கீதா

    ReplyDelete