Sunday, January 22, 2023

காது காத்த பாடல்

 

காது காத்த பாடல்

                     
                                         காது காத்த பாடல்.
                                       ----------------------------


முதலில்அந்தப் பாடலின் பொருள்/ பதவுரை.
==================================
திதத்த ததித்த திதத்த ததித்த எனும் தாள வாக்கியங்களை தன்னுடைய நடனத்தின் மூலம் வெளிப்படுத்துகின்ற உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும்,மறை கிழவோனாகிய பிரம்மனும்,புள்ளிகள் உடைய படம் விளங்கும் பாம்பாகிய ஆதிகேசனின் முதுகாகிய இடத்தையும்,இருந்த இடத்திலேயே நிலைபெற்று அலை வீசுகின்ற,சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் ( தன்னுடைய வாசற்தலமாகக் கொண்டு ) ஆயர்பாடியில் தயிர் மிகவும் இனிப்பாய் இருக்கிறதெ என்று சொல்லிக் கொண்டு,அதை மிகவும் வாங்கி உண்ட ( திருமால் ) போற்றி வணங்குகின்ற பேரின்ப சொரூபியாகிய மூலப் பொருளே தந்தங்களை உடைய யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட ,கிளி போன்ற தேவயானையின் தாசனே பல தீமைகள் நிறைந்ததும், ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பபட்டதும்,மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும் ,பல ஆபத்துகள் நிறைந்ததும் ( ஆகிய ) எலும்பை மூடியிருக்கும் தோல்பை ( இந்த உடம்பு )அக்னியினால் தகிக்கப் படும் அந்த அந்திம நாளில்,உன்னை இவ்வளவு நாட்களாகத் துதித்து வந்த என்னுடைய புத்தி உன்னுடன் ஐக்கிய மாகிவிட வெண்டும்.
சுருக்கமாக “ நடராஜமூர்த்தியாகிய சிவ பெருமானும், பிரம்மனும், இடைச் சோலையில் தயிர் உண்டு, பாற்கடலையும் ஆதிகேசனையும் பாயலாகக் கொண்டு யோக நித்திரை செய்யும் திருமாலும் வணங்குகின்ற ஆநந்த மூலப் பொருளே,தேவயானையின் தாசனே,ஜனன மரணத்துக்கு இடமாய்,சப்த தாதுக்கள் நிறைந்த இந்த பொல்லாத உடம்பை தீயினால் தகிக்கப் படும்போது உன்னை துதித்துவந்த என் சித்தத்தை உன்னுடைய திருவடிக்கு நீ ஆட்படுத்த வேண்டும் “ என்பதே ஆகும்.
சரி. இந்தப் பொருளுடைய பாட்டு எது என்று அனுமானிக்க முடிகிறதா.?தென்னாற்காடு மாவட்டத்தில் சனியூர் என்ற இடத்தில் பிறந்த வில்லிபுத்தூரார் தமிழில் மகா பாரதம் இயற்றினார். வைணவ குலத்தவரான இவரை வக்க பாகை எனும் இடத்தை ஆண்டுவந்த மன்னனான வரபதி ஆட்கொண்டான் என்பவன் ஆதரித்து வந்தான். வில்லிபுத்தூரார் புலவர்களிடையே போட்டி வைத்து வென்றவர் தோற்றவர் காதை அறுக்க வேண்டும் என்ற முடிவுக்கு உட்படுத்தப் பட்டு பலருடைய காதுகளை அறுத்து பிரசித்தி பெற்றிருந்தார்.
இதனைக் கேள்விப்பட்ட அருணகிரிநாதர் இதற்கு முடிவு கட்ட வில்லிபுத்தூராருடன் போட்டியில் கலந்து கொண்டார். ஆரம்பத்திலேயே
“ முத்தை திரு பத்தித் திருநகை “ என்ற பல்லுடைக்கும் பாடலை முருகன் அடியெடுத்துக் கொடுக்கப் பாடியவரிடம்  வில்லிப் புத்தூரார் தோல்வியடைந்தார். அருணகிரிநாதர் வில்லிப் புத்தூராரை மன்னித்து காதறு படலத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
அருணகிரிநாதர் வாதில் வென்ற பாடலின் பொருளும் பதவுரையும் தான் இப்பதிவின் முதலில் கண்டது. போதும் இந்த சஸ்பென்ஸ் . அந்தப் பாடல் இதுதான்.

திதத் தத்தத் தித்தததிதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத் தத்தத் தித்த திதிதித்த தேதுத்து த்திதத்தா
திதத் தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத் தத்தத் தித்தித்தி தீதீ திதி துதி தீ தொத்ததே!
( நன்றி:- விக்கிப் பீடியா. )

4 comments:

  1. அருணகிரியாரின் பலப் பாடல்களும் பல்லை உடைக்கும்படியாகவும் பொருள் விளங்காததாகவும் இருக்கும். 
    விளக்கம் தந்து புரியவைத்தது நன்று.
    Jayakumar

    ReplyDelete
  2. மூன்று எழுத்துகளை மாற்றிப்போட்டால் எத்தனை பொருள்!  பழைய டி எம் எஸ் - பி சுசீலா போட்டிப்  பாடல் ஒன்றும் நினைவுக்கு வருகிறது..

    ReplyDelete
  3. தமிழின் சிறப்புகளில் ஒன்று...

    ReplyDelete
  4. அருணகிரியாரின் பாடல்களே உச்சரிப்பை மிகக் கவனமாகக் கையாள வேண்டிய மிகக் கடினமான பாடல்கள். விளக்கம் நல்லாருக்கு சார்.

    இந்தப் பாடல்ல்ல வார்த்தைகள் ஒரே போன்று பல இடங்களில் இருந்தாலும் என்ன ஆழமான அர்த்தம்!! எவ்வளவு சிறப்பு இல்லையா?

    திதட் தத்தத் பாடலைப் பார்க்கறப்ப எனக்கு டக்கென்று தோன்றுவது இதுதான்....Optical illusion/Brain teaser வருமே ஒரே போன்று எழுத்துகள் நிறைய கொடுத்து இதனுள் இதைக் கண்டுபிடிங்க என்று.

    கீதா

    ReplyDelete