Saturday, April 28, 2012

காட்சிப் பிழையும் கருத்துப் பிழையும்


                     காட்சிப் பிழையும் கருத்துப் பிழையும்
                   ---------------------------------------------------


தாயைக் காட்டுகிறேன், தந்தையைக் காட்டுகிறேன்,
தட்டானே கல்லைத்தூக்கு என்றே வாலில் நூல்கட்டிய
தும்பியும் பிடிமானம் கிடைக்கக் கல்தூக்க தன் சொல் கேட்டு
அது பணிவதாக எண்ணும் பாலகன் அறிவானா
அது ஒரு கருத்துப் பிழை என்று.?

நீண்டிருக்கும் தார்ச் சாலையில் வழுக்கி ஓடும்
பேரூந்தில் ஒரு மதிய நேரம் பயணிக்கும்போது,
சற்றுத் தொலைவில் சாலையில் தேங்கி நிற்பது நீரோ
அல்லது மழையின் சுவடோ என எண்ணி அருகில்
காணும்போது நீரேதுமின்றி கண்டது கானலெ
அன்றி காட்சிப் பிழை என்றும் அறிவோமன்றோ.?

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று
ஆன்றோர் கூறினர் அன்று;அகத்தின் அழுக்குப்
பற்றிக் கூற மறந்தனரோ, இல்லை கூற இயலாது
என்றே விட்டனரோ.? அழகான முகங்கள் எல்லாம்
அகத்தில் அழகானதா, புற அழகற்ற  முகங்கள்
அகத்தில் அழகாய் இருக்கக் கூடாதா.?

உள்ளொன்று வைத்துப் புறமொன்று கூறுவோர்
உறவு கலவாமை வேண்டும் என்று எளிதே கூறினர்.
முன் பல்லெல்லாம் தெரியக் காட்டி,
முகமெல்லாம் மகிழ்ச்சி கூட்டி
கடைவாய்ப் பல்லால் கடித்துக் குதறி
வன்மம் காட்டும் மனிதரும்  காட்சிப் பிழையில்
கண்டறியாது போதல் சாத்தியமன்றோ.?

கண்ணால் காண்பதும் பொய்யாகலாம்,
காதால் கேட்பதும் பொய்யாகலாம்
காட்சிப் பிழையும், கருத்துப் பிழையும்
பிழையாகவே என்றும் இருக்கட்டும்..
ஆண்டவன் நம்மை ரட்சிக்கட்டும்.!
-------------------------------






   

11 comments:

  1. கண்ணால் காண்பதும் பொய்யாகலாம்,
    காதால் கேட்பதும் பொய்யாகலாம்
    காட்சிப் பிழையும், கருத்துப் பிழையும்
    பிழையாகவே என்றும் இருக்கட்டும்..
    ஆண்டவன் நம்மை ரட்சிக்கட்டும்.!
    -------------------------------

    ரசித்த அருமையான வரிகள்.

    ReplyDelete
  2. அழுக்கும் அழகு தானே?

    ReplyDelete
  3. கவிதை நன்றாக இருக்கிறது. ரசித்தேன்.

    ReplyDelete
  4. கவிதையோ எனப் பார்த்தேன்;
    காட்சிப் பிழையெனத் தெரிந்தது.

    ReplyDelete
  5. கண்ணால் காண்பதும் பொய்யாகலாம்,
    காதால் கேட்பதும் பொய்யாகலாம்
    காட்சிப் பிழையும், கருத்துப் பிழையும்
    பிழையாகவே என்றும் இருக்கட்டும்..
    ஆண்டவன் நம்மை ரட்சிக்கட்டும்.!//

    காட்சிப் பிழையை பற்றிய
    கவிதை நன்றாக இருக்கிறது.

    கடைசி வரி அற்புதம்

    ReplyDelete
  6. @ லக்ஷ்மி.
    @ அப்பாதுரை,
    @ டாக்டர் கந்தசாமி,
    @ கோபு சார்,
    @ ஜீவி,
    @ கோமதி அரசு
    தங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி.
    ஜீவி “ கவிதையோ எனப் பார்த்தேன்.காட்சிப் பிழை எனத் தெரிந்தது “ உங்கள் சந்தேகம் நியாயமானதுதான்.எனக்கே அந்த எண்ணம் இருந்ததால்தான் லேபலில் “எண்ணங்கள் -கவிதை.?” என்று கேள்விக்குறி போட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  7. வணக்கம்! தங்கள் அனுபவத்தை வார்த்தைகளால் வடித்து இருக்கிறீர்கள்!

    ”கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
    நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
    சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்
    எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே!“
    - பட்டினத்தார்

    ReplyDelete
  8. காட்சிப் பிழையும், கருத்துப் பிழையும்
    பிழையாகவே என்றும் இருக்கட்டும்..
    ஆண்டவன் நம்மை ரட்சிக்கட்டும்.!

    பிழைகள் இன்றி வாழ கற்போம்..

    ReplyDelete
  9. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //அழகான முகங்கள் எல்லாம்
    அகத்தில் அழகானதா,

    புற அழகற்ற முகங்கள்
    அகத்தில் அழகாய் இருக்கக் கூடாதா.?
    //

    அருமையான வரிகள்.

    புற அழகைக்கண்டு ஏமாறுகிறோம்.

    அக அழகை, பழகிப்பார்த்து புரிந்து கொண்டவர்களால் மட்டுமே தான் உணர முடிகிறது.

    அதற்குள் காலம் கடந்து, கை நழுவிப் போய் விடுகிறது.

    அதுதான் விதியின் கொடுமை.

    நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  10. காட்சிப் பிழையையும் கருத்துப் பிழையையும் கண்டுணரும், உணர்த்தும் அலசல் அபாரம். கவிதையும் கருவும் வெகு நன்று ஐயா.

    ReplyDelete