Monday, May 14, 2012

முயற்சி திருவினையாக்கும்...


                                      முயற்சி திருவினையாக்கும்...
                                     ----------------------------------------


வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும், சிறப்பான முறையில் வாழ்வதற்கும் உதவுவது VALUE SYSTEMS என்று சாதாணமாகச் சொன்னால் அது பலன் தருமா என்பது சந்தேகமே..இதை உணர்ந்த நம் முன்னோர்கள் நம் புராணங்களின் மூலமும், இதிகாசங்களின் மூலமும் ( வாழ்வியலைப் பயனுள்ளதாக இருக்கச் செய்ய ) ஏராளமான கதைகளைச் சொல்லிச் சென்றுள்ளார்கள். கதைகளை கதைகள் என்ற மட்டில் அல்லாமல் வாழ்க்கைக்கு வழிகாட்டும் உறுதுணைகள் என்று கொண்டோமானால் பலன் நமக்கே.

முயற்சி திருவினையாக்கும் என்ற படிப்பினையை ஒரு கதை மூலம் விளக்கி இருப்பதை இங்கே காணலாம்.

ஒரு காலத்தில் சகரர் என்ற மன்னர், தன் ஆளுமையயும் பராக்கிரமத்தையும் காண்பிக்க அசுவ மேத யாகம் செய்தார்.யாகம் பூர்த்தியாக அவர் அனுப்பும் குதிரை உலகில் வலம் வரும்போது யாராலும் கட்டப் படாமல் இருக்க வேண்டும். த்ரிடதன்வா என்ற மாவீரனுடன் குதிரை பவனி வர அனுப்புகிறார். அவரிடம் பொறாமை கொண்ட இந்திரன் மாயமாக அந்தக் குதிரையைக் கடத்திச் சென்று கபில வாசுதேவர் எனும் முனிவரின் ஆசிரமத்தில் விட்டு விடுகிறான்.

காணாமல் போன குதிரையைத் தேட சகர மன்னர் தன் 60,000-/புத்திரர்களைப் பணிக்கிறார். அவர்கள் அவர்களது சக்தி மதர்ப்பில் கண்ணில் கண்டவர்களை எல்லாம் துன்புறுத்துகிறார்கள். முனிவர்கள் பிரம்ம தேவனிடம் முறை இடுகிறார்கள்..பிரம்ம தேவன் இந்த சகர புத்திரர்கள் கபில முனிவரின் கோபாக்கினிக்கு இரையாகி சாம்பல் ஆவார்கள். என்று கூறுகிறார். யாக குதிரையைத்தேடி பாதாளம் சென்ற சகர புத்திரர்கள் கபில வாசுதேவ முனிவரின் ஆசிரமத்தில் குதிரையைக் காண்கிறார்கள். கண்டு கபில முனிவரைத் தாக்கத் துவங்குகிறார்கள். அவர் தவ வலிமையால் தன் உக்கிரப் பார்வையாலேயே அவர்களை எரித்துச் சாம்பலாக்குகிறார்.

சகர மன்னர் தன் பேரன் அம்சுமானை யாகக் குதிரையையும் புத்திரர்களையும் தேட அனுப்புகிறார். அம்சுமான் யாகக் குதிரையும் சாம்பல் குவியலையும் கண்டு குதிரையுடன் திரும்பி வர அசுவமேத யாகம் பூர்த்தி செய்யப் படுகிறது
சாம்பலான சகர புத்திரர்களைக் கரையேற்ற கங்கா தீர்த்தத்தால் சம்ஸ்காரம் செய்யப் பட வேண்டும். கங்கையைக் கொண்டு வருவது சாமான்யமா.?அம்சுமானுக்குப் பிறகு அவன் மகன் திலீபன் பின் அவன் மகன் பகீரதன் எனக் காலம் கழிய பித்ரு கடன் நிறைவேறாத நிலையை மாற்ற
பகீரதன் பிரம்மனை வேண்டி பஞ்சாக்கினி தவம் செய்கிறான். ஆகாய கங்கை பூமிக்கு வந்தால் அதன் வேகத்தை கட்டுப் படுத்த முடியாது. அதற்கு சிவ பெருமானின் உதவி வேண்டும் என்று அறிந்து மீண்டும் கடுந்தவம் இயற்றுகிறான்.இறங்கி வரும் கங்கையை தன் ஜடாமுடியில் தாங்குவதாக சிவபெருமான் கூற மஹா கர்வத்துடன் எல்லாவற்றையும் அழிக்கும் நோக்கில் கங்கை பாய , மஹேஸ்வரன் தன் ஜடாமுடியில் கட்டி விடுகிறார். சிவனின் தலையில் கட்டுண்ட கங்கை வராமல் தங்களது பித்ருக்களுக்கு நீர்க்கடன் கழிக்க முடியாமல் மீண்டும் பகீரதன் சிவனை வேண்ட, கங்கையை ஏழு கிளைகளாக  சிவபெருமான் வெளியேற்ற, கிழக்கு நோக்கி ஹலாதினீ,பாவனீ, நளினீ என்றும் மேற்கு நோக்கி சுசக்ஷி,ஸீதா, ஸிந்து என்றும் கங்கை பிரிந்து பாய ஒரு கிளை பகீரதனைத் தொடர்ந்து பாகீரதியாகப் பாய்ந்தது. பிந்துசரசில் பாய்ந்து வந்த கங்கை வரும் வழியில் முனிவர்களின் ஆஸ்ரமங்களை மூழ்கடிக்க ஜஹனு என்னும் முனிவர் கோபம் கொண்டு கங்கையைக் குடித்துவிட  பிறகு அனைவரின் பிரார்த்தனையை ஏற்று  காது வழியே வெளி யேற்றுகிறார். இதனால் கங்கைக்கு ஜாஹன்வீ என்ற பெயரும் உண்டு,.பகீரதனால் மிகுந்த பிரயத்தனத்துக்குப் பிறகு கொண்டு வரப் பட்ட கங்கை சகர புத்திரர்களின் அஸ்தியில் பாய்ந்து முக்தி அளிக்கிறாள். முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு பகீரதப் பிரயத்தனம் ஒரு எடுத்துக் காட்டு.

கொசுறு:-1935-ல் ஜகத் குரு சங்கராச்சாரியார், கபிலாரண்யா என்று புராணங்களில் கூறப்படும் இடம் அமெரிக்காவின் தற்போதைய CALIFORNIA வைக் குறிக்கும் என்றும், சகர புத்திரர்கள் சாம்பலான இடமே ASH ISLANDS என்றும் குறிப்பிட்டிருப்பதாகவும் கூறி இருக்கிறார். கலிஃபோர்னியாவின் அருகே இருக்கும் ஹார்ஸ் ஐலாண்ட்ஸ்-- , பூமிப்பந்தில் இந்தியாவில் இருந்து ஒரு ஊசியை நுழைத்தால் அது நேராகக் கலிஃபோர்னியாவின் வழியாக வெளிவரும், என்றும் , இது சகர புத்திரர்கள் பூமியைத் தோண்டி  பாதாளத்தில் கபிலாரண்யத்தில் யாக குதிரையைக் கண்டனர் என்னும் கதையுடன் ஒத்துப்போவது ஆராய்ச்சிக்கு உரிய விஷயம் அல்லவா.! இக்காலத்தில் சாதுக்களுக்கு கலிஃபோர்னியாவில் மதிப்பு அதிகமாமே...       

  

5 comments:

  1. நான் கபிலாரண்யத்தில் செட்டில் ஆகப்போகிறேன்.

    ReplyDelete
  2. முயற்சி திருவினையாக்கும் என்ற படிப்பினையை அளித்த பகிர்வுக்கு
    நன்றி ஐயா.

    ReplyDelete
  3. நதிநீர் பிரச்னை ஏதோ த‌ற்கால‌த்தில் ம‌ட்டும் தான் என்றெண்ணிருந்தேன்!
    "பகீர‌த‌ முயற்சி" சொல‌வாடையின் அர்த்த‌ம் இப்போது த‌ங்க‌ளால் புரிந்தது.

    ReplyDelete
  4. பகிர்வு அருமை
    குறிப்பாக கொசுறுத் தகவல் புதியதாகவும்
    ஆச்சரியமூட்டுவதாவும் அருமையான தகவலுமாக இருந்தது
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. @ டாக்டர் கந்தசாமி,
    @ இராஜராஜேஸ்வரி,
    @ வாசன்,
    @ ரமணி,
    சில தகவல்கள் தெரிந்து கொள்வதும்
    பகிர்ந்து கொள்வதும் மகிழ்ச்சி அளிக்
    கிறது. உங்கள் மேலான வரவுக்கு
    நன்றி.

    ReplyDelete