Tuesday, October 9, 2012

எண்ணச் சிதறல்கள்.


                                       எண்ணச் சிதறல்கள்.
                                      -------------------------------


அன்றொரு நாள் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் என்று எழுதினேன். அதில் உயிர் மூச்சுக்காற்றை ஜீவாதமாவுக்கு ஒப்பிட்டு, எழுதி இருந்தேன். அந்த உயிர் மூச்சுக்காற்று உணரக் கூடியது.அளக்கக் கூடியது. அது இருக்கும்வரை உயிர் இருப்பதாகச் சொல்லப் படுகிறது. அதன் மூலம் எங்கிருந்து வந்தது, ,எங்கு போகிறது என்பதெல்லாம் அறியாத விஷயங்கள்..இப்படி அறியாத விஷயங்களில் ஒன்றுதான் மனம் என்பதும். மனிதனின் எல்லாச் செயல்களுக்கும் இந்த மனம்தான் காரணம்..இந்த மனதின் குடியிருப்பு எது.?மனதை எண்ணம் என்று சொல்லலாமா.?இந்த எண்ணங்கள் எங்கிருந்து உற்பத்தி யாகின்றன.. உயிரும் உடலும் சேர்ந்து இயங்கும்போதுதான் மனம் என்பதும், எண்ணம் என்பதும் விளக்கமக இயக்கமாக நடைபெறுகிறது.. அதுவே குணமாகப் பரிமளிக்கிறது.. மனதின் தன்மையே மனிதனின் குணத்தை நிர்ணயிக்கிறது

நாம் பிறந்ததிலிருந்து இன்றுவரை என்னென்ன நினைத்தோமோ, செய்தோமோஅவை எல்லாம் நினைவடுக்குகளில் பதிவாகி இருக்கும். அதற்கும் முன்னதாக இந்த மனதிற்கு இன்னொரு பதிவும் இருக்கிறது.. அது பெற்றோர்களை அடிப்படையாகக் கொண்டு பார்ப்பது. ( genes ) இந்தப் பதிவுகளின் தடத்தில் பின்னோக்கிச் சென்றால் பாட்டன், முப்பாட்டன் என்று தொடராகத் தேடக்கூடியது.

இப்பேர்ப்பட்ட எண்ண அலைகளை அடக்க நினைத்தால் அலையும்,அதை அறிய நினைத்தால் ஒரு வேளை அடங்கலாம்..இப்படி அலை பாயும் மனத்தை அறிந்து அடக்க வழியும் இருக்க வேண்டும் அல்லவா. மனதின் இயக்கத்தை நிறுத்த முயல்வது அறியாமை. அதைவிட அதை நன்கு இயங்க வைக்கப் பழக்கலாம். மனம் அமைதியாக நிலைத்து நிற்கப் பழக்கlலாம். நிறுத்திவிட அல்ல. மனதை அமைதிப் படுத்த என்னென்னவோ வழிமுறைகள் சொல்லி இருக்கிறார்கள். இதை எழுத முனைந்தபோது என்றைக்கோ குறித்து வைத்திருந்த பாடல் வரிகளை இங்கே நினைவு கூர்கிறேன்.

எண்ணத்தை எண்ணத்தால் எண்ணி எண்ணி
  எண்ணத்தின் இருப்பிடமும் இயல்பும் கண்டு
எண்ணத்தை எண்ணத்தில் நிலைக்கச் செய்தால்
  எண்ணமே பழக்கத்தால் தெளிந்து போகும்
எண்ணமது எழும்போதே இது ஏன் என்று
  எண்ணத்தால் ஆராய்ந்தால், சுலபமாக
எண்ணத்தின் காரணமும் விளைவும் காணும்
   எழும் எண்ணம் யாவும் நற்பயனாய் மாறும்

எத்தனையோ வருஷங்களுக்கு முன்னால் ஔவவையாரால் எழுதப் பட்ட விநாயகர் அகவலில் கீழ்  வரும் இந்த வரிகள் பொருள் தெரிந்து சிந்திக்கத் தகுந்தது. முதலில் விநாயகப் பெருமானை வர்ணித்துப் பிறகு வேண்டுதல்களை வைக்கிறார்.

“........................................................................................................................
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி,
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக்கருளி
கருவிகள் ஒடுக்கும் கருத்தறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து....

படிக்கும்போதே ஓரளவுக்குப் புரிகிறது.  இனி அவர் கேட்பது தெரிந்து கொள்வதே கடினம். அவரது ஒரு வார்த்தை புரிய என்னென்னவோ தெளிய வைக்கிறார்.

”......தலமொரு நான்குந் தந்தெனக் கருளி 

நல்வினை தீவினை அதனால் ஏற்படும் மாய இருளை நீக்கி
சாலோகம்  சாயுஜ்யம் சாமீபம் சாரூபம்  என்னும் நான்கு தலங்களையும் எனக்குத் தந்து.....( இவையெல்லாம் எங்கிருக்கின்றன,அதன் நலங்கள் என்ன 
என்று இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன் )

மலமொரு மூன்றின் மயக்கமறுத்தே.

ஆணவம் கன்மம் மாயை எனும் மூன்று மலங்களினால் ஏற்படும் மயக்கத்தை இறுத்து

ஒன்பது வாசல் ஒரு மந்திரத்தால்
 ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
 ஆறாதாரத்து அங்குச நிலையும்
 பேரா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே.

உடலில் இருக்கும் ஒன்பது துவாரங்களையும் ஐந்து புலன்களையும் ஒரே மந்திரத்தால் அடைக்கும் வழியினைக் காட்டி மூலாதாரம் , சுவாதிட்டானம், மணி பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்று ஆறு ஆதாரங்களில் நிறுத்தி
அதன் பயனாய் பேச்சிலா மோன நிலை அருளி ( குறிப்பிட்ட ஆறு ஆதாரங்களும் உடலின் பல்வேறு பாகங்களைக் குறிப்பது என்று எண்ணுகிறேன் )

இடை பிங்கலையின் எழுத்தறிவித்து
கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவிலுணர்த்தி
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்த்றிவித்து
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையுங் கூறி 

இடகலை பிங்கலைஎனப்படும் இடது, வலது பக்க நாடிகளின் மூலம் உள்ளிழுக்கப்படும் காற்றானது நடு நாடியான சுழுமுனை வழியே கபாலத்தையடையும் மந்திர மார்க்கத்தைக் காட்டி, 1) அக்னி 2) சூரியன் 3)
சந்திரன் ஆகிய மூன்று மண்டலங்களின் தூண் போன்ற சுழுமுனையின் மூலம் நான்றெழு பாம்பான குண்டலனி சக்தியை எழுப்பி, அதனில் ஒலிக்கும் பேசா மந்திரமான அசபை மந்திரத்தை வெளிப்படையாகச் சொல்லி, மூலாதாரத்தில் மூண்டு எழுக்கூடிய அக்னியை மூச்சுக்காற்றினால் எழுப்பும் முறையை தெரிவித்து, குண்டலினி சக்தி உச்சியிலுள்ள சகஸ்ரதள சக்கரத்தை அடையும் போது உருவாகும் அமிர்தத்தின் நிலையையும் சூரிய நாடி, சந்திர நாடி ஆகியவற்றின் இயக்கத்தையும், குணத்தையும் கூறி,

இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக்கரத்தின் உறுப்பையுங் காட்டி
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
என் முகமாக இனிதெனக் கருளி
புரியட்ட காயம் புலப்படஎனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி
கருத்தினிற் கபால வாயில் காட்டி,
இருத்திமுத்தி இனிதெனக் கருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கிய எந்தன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டுக்கும் என்றிடமென்ன
அருள்தரும் ஆனந்தத் தழுத்தி என் செவியில்
எல்லையில்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்து அருள்வழி காட்டி,
சத்ததினுள்ளே சதாசிவம் காட்டி,
சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி,
அணுவிற்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி,
வேடமும் நீறும் விளங்க நிறுத்தி,
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி,
அஞ்சக் கருத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்து
தத்துவ நிலையைத் தந்தெனையாண்ட
வித்தக விநாயக விரை கழல் சரணே.

இடையிலிருக்கும்  சக்கரத்தின் பதினாறு நிலையையும் உடலின் எல்லா சக்கரங்களின் அமைப்புகளையும் காட்டி உருவமான தூலமும் ,அருவமான சூட்சுகமும் எனக்கு எளிதில் புரியும்படி விளக்கி, மூலாதாரம் முதல் சகஸ்ர தளம் வரையிலான எட்டு நிலைகளையும் எனக்கு தெரிசனப்படுத்திதன்மூலம் உடலின் எட்டு தன்மைகளையும் புலப்படுத்தி,கபால வாயிலை எனக்குக் காட்டித்தந்து, சித்தி முத்திகளை இனிதாக எனக்கருளி, நான் யார் என்பதை எனக்குத் தெளிவித்து,பூர்வ ஜன்ம வினையை நீக்கி, சொல்லும் மனமும் இல்லாத பக்குவத்தை எனக்கருளி, அதன் மூலம் எண்ணங்களை தெளிவாக்கி ,இருள் ஒளி இரண்டுக்கும் அடிப்படை ஒன்றே என்பதை உணர்த்தி
அருள் நிறைந்த ஆனந்தத்தை என் காதுகளில் அழுத்தமாகக் கூறி, அளவில்லாத ஆனந்தம் தந்து துன்பங்கள் அகற்றி அருள்வழி எது எனக்காட்டி, உள்ளும் புறமும் சிவனைக்காட்டி, சிறியவற்றுக்கு சிறியது பெரியவற்றில் பெரியது எதுவோ அதை கணு முற்றி உள்ள கரும்பு போல எனக்குள் காட்டி , உண்மையான தொண்டர்களுடன் என்னைச் சேர்த்து ,அஞ்சக் கரத்தினுள்ள உண்மையான பொருளை என் மனதில் நிலை நிறுத்தி எனை ஆட்கொண்ட விநாயகப் பெருமானே உன் பாதார விந்தங்கள் சரணம்

அது சரி முதலில் நான் எழுதத் துவங்கியதற்கும் ஔவையின் அகவலுக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றலாம். எண்ணங்களை அடக்க வேண்டும் . எண்ணங்களே எல்லாவற்றுக்கும் காரணம் .எண்ணங்களை நிறுத்த முடியாது. ஆனால் அடக்க முயலலாம். மூலாதாரத்து மூண்டெழு கனலை ( அதுதான் குண்டலினி சக்தியோ ?)ஆறு ஆதாரங்களின் வழியே கொண்டுவந்து கபால வாயிலில் நிறுத்தி..... அப்பப்பா. எண்ணங்களை கட்டுக்குள் வைக்க என்னென்னவோ சொல்லிச் சென்றிருக்கிறாள் ஔவைப் பாட்டி. இதனை சுருக்கமாக தியானம் என்று சொல்லலாம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. உடற்கூறு பற்றி ஒரு பெரிய பாடமே அகவலில் இருக்கிறது. .

தலமொரு நான்கு, , மலமொரு மூன்று, ஆறாதாரம் , இட பிங்கலை, கழுமுனை , மூன்று மண்டலம், நான்றெழு பாம்பு,,குண்டலிதனிற் கூடிய அசபை, உடற்சக்கரம், சண்முக தூலம் சதுர்முக சூக்கம் .....இன்னபிற வார்த்தைகளுக்கு பொருள் முழுவதும் தெரிந்தது என்று சொல்ல முடியவில்லை. பல நூறாண்டுகளுக்கு முன்பே இதை எழுதி இருந்தார் என்றால் , எல்லாம் அனுபவித்து அறிந்ததன் பயனாய்த் தான் இருக்கும்.


எண்ணங்களை அடக்க வேண்டும் என்பதில் துவங்கி, அடக்க என்ன செய்ய வேண்டும் என்று ஆராய்ச்சி, ஔவையின் பாடலில் கொண்டு நிறுத்தி , எனக்குத் தெரிந்தது கடுகளவு தெரியாதது உலகளவு என்னும் முத்தாய்ப் புடன் முடிக்க வைக்கிறது. பதிவுலகின் ஜாம்பவான்கள், தமிழறிஞ்ர்கள்,பாடலின் கடின ( நமக்குத் தெரியாத ) பதங்களை விளக்கினால் பலரும் பயனடையலாம்.    
    
  





    ......
....






10 comments:

  1. விளக்கங்களை அறிந்து கொண்டேன் ஐயா...

    /// ஆறு ஆதாரங்களின் வழியே கொண்டுவந்து கபால வாயிலில் நிறுத்தி..... அப்பப்பா. எண்ணங்களை கட்டுக்குள் வைக்க என்னென்னவோ சொல்லிச் சென்றிருக்கிறாள் ஔவைப் பாட்டி. இதனை சுருக்கமாக தியானம் என்று சொல்லலாம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. உடற்கூறு பற்றி ஒரு பெரிய பாடமே அகவலில் இருக்கிறது... ///

    நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் அறிந்த தெரிந்த (புரியாமல்...) ஒருவர், வேறு ஒரு தவறான வழியைக் கையாண்டார்... இப்போது அவர் இல்லை...

    /// அடக்க என்ன செய்ய வேண்டும்...? ///

    எதுவுமே செய்யக்கூடாது... செய்ய முடியாது... (அது தான் நீங்கள் நினைப்பது எல்லாம்...)

    இப்போது மின்சாரம் போய் விட்டது... பிறகு பேசலாம்...

    இங்கு மின்சாரம் ஆறு அல்லது எழு மணி நேரம் மட்டுமே...

    மிக்க நன்றி...

    ReplyDelete
  2. அருமையான அனைவரும் அவசியம்
    அறிந்து கொள்ளவேண்டிய பாடல்களை
    அருமையான விளக்கத்துடன் பதிவு
    செய்து கொடுத்தமைக்கு மனமார்ந்த நன்றி
    கனமான பதிவாயினும் பயனுள்ள பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. எண்ணத்தை எண்ணத்தால் எண்ணி எண்ணி எண்ணச்சிதறல்களான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பாடல்களை விளக்கத்துடன் வழங்கியமைக்கு நன்றி

    ReplyDelete
  5. நிதானமாய்ப் படிக்கணும், இங்கே இன்னிக்கு மின்சாரம் போயிட்டுப் போயிட்டு வருது. தொடர்ந்து படிக்க முடியலை. :( பின்னர் வரேன்.

    ReplyDelete
  6. படிச்சேன், இது குறித்து எங்கள் மானசீக குருவான திரு காழியூரர் எழுதி உள்ளதை என் பதிவில் பகிர்ந்துள்ளேன். அதன் சுட்டியைத் தேடி உங்களுக்கு அளிக்கிறேன். நான் எனக்குப் புரியாத ஒன்றை புரிந்தாற்போல் சொல்வதை விடவும் அவர் சொல்வது நன்கு புரிந்து கொள்ள இயலும். :)))))

    ReplyDelete
  7. மன்னிக்கணும்; தப்பாய்ச் சொல்லி இருக்கேன். அவர் கைத்தல நிறைகனி பற்றித்தான் சொல்லி இருந்தார்னு நினைக்கிறேன். விநாயகர் அகவல் குறித்து அவர் எழுதியது கிடைக்கவில்லை. :(((மற்றபடி குண்டலினியை மேலே ஏற்றுவது குறித்துப் புரிந்து கொண்டாலும் எளிதில் விளக்க இயலவில்லை. :(((

    ReplyDelete
  8. எண்ணங்களைப் பற்றி எழுதத் தொடங்கிய நீங்கள் எங்கெங்கோ சென்று எதையெல்லாமோ தொட்டு ஒரு நல்ல எண்ணப் பகிறல் செய்து என்னையும் மகிழ்த்தியிருக்கிறீர்கள்.

    எண்ணங்களைப் பற்றி நான் என்ன சொல்வதற்கு இருக்கிறது?

    அவை இல்லாத நேரமே கிடையாது! அடக்க நினைத்தால் அடங்காமல் திமிறும். அதன்வழியே போனால் அல்லல்கள் நேரும்.

    இதமான தென்றல் வீசும்போது இன்னும் கொஞ்ச நேரம் தலையை நீட்டி அதை அனுபவிக்கிறோம். அதுவே உஷ்ணக் காற்று வீசினால், உடனே குளிர்சாதன வசதி தேடி ஓடுகிறோம். இந்த உதாரணத்தையே, எண்ணங்கள் நிகழும்போது பயன்படுத்தினால் உபயோகமாக இருக்கும் என்பது என் அனுபவம்.

    இதில் நல்லது, கெட்டது என எப்படிப் பிரிப்பது என ஒரு கேள்வி எழும்!

    அவரவர் மனசாட்சியே இதற்கு உரைகல்!
    [மனம் எனச் சொல்லவில்லை. மனசாட்சி என்பதைக் கவனிக்கவும்~!]

    மனத்தையும் தாண்டிய ஒரு பொருள் எப்போதும் எமக்கு நல்லாலோசனை வழங்கிக்கொண்டே இருக்கும். கேட்பதும், விடுவதும் அவரவர் விருப்பம். எண்ணங்கள் வருவதுபோலவே, இந்த மனசாட்சியின் கூக்குரலும் எப்போதும் இருக்கும்.

    இந்தக் குரலுக்குச் செவிமடுக்க அருளுமாறு அந்தத் 'தத்துவநிலையைத் தந்தெனையாண்ட வித்தக விநாயகன் சரண்' பற்றி அவனை வேண்டுவோம்!

    கணபதி எல்லாம் தருவான்!

    முருகனருள் முன்னிற்கும்!

    ReplyDelete
  9. எண்ணங்களை மட்டும் அடக்க முடிந்தால்..

    ReplyDelete