Tuesday, March 26, 2013

கடவுள்--அறிவா உணர்வா.?


                                 கடவுள் ---அறிவா....உணர்வா.?
                                 ----------------------------------------



ஆண்டவன் திருமுன் நின்று
குறைகள் சொல்லி அழலாம்
என்றே ஆலயம் சென்றேன்.

எங்கும் நிறைந்தவனிடம்
குறைகளைச் சொல்லி அழ
ஆலயங்கள் ஏனைய்யா.?
அபிஷேகங்கள் ஏனைய்யா.?
கோலங்கொடிகள் ஏனைய்யா.?
கொட்டு முழக்கம் ஏனைய்யா.?
பாலும் ப்ழமும் வைத்து நிதம்
பணிந்து நிற்பதேனைய்யா ?
சீலம் பேணும் உள்ளத்தை
தெய்வம் தேடி வாராதோ.?
எனவே குரல் கொடுத்தது
என்னுள் உறையும் பகுத்தறிவு.


எங்கெங்கும் வியாபித்து நிற்கும்
உருவமென ஒன்றில்லாதது
அதனிடம் வெட்ட வெளியில்
குறைகள் சொல்லப் போனால்
பித்துப் பிடித்தவன் என்பர்
கண்ணால் காணாதது ஆனால்
உண்டென்று எண்ணும் உள்ளம்
முன் நிறுத்தவும் முறையிடவும்
கண்ணன் என்றும் கந்தன் என்றும்
ஆயிரம் நாமங்களுடன் அவரவர்
விரும்பும் வண்ணம் அழைக்கலாம்
குறைகள் கூறி முறையிடலாம்
நம்பினால் என்றும் நலம் பயக்கும்
என்றே உணர்வு சொல்ல வழக்கம்
போல் அறிவும் அதன் பின் செல்ல
அபயமளிக்கும் குமரன் முன் நின்றேன்
குறைகள் சொல்லப் படும்போதே
பதில்களும் அகக்கண்முன்னே
பளீரிட பகிர்கிறேன் பதிவில் நானும்.
வேண்டுதல்களையும்  தீர்வுகளையும்

என் குறைகளை நீக்கக் கேட்டேன்.
என்னால் நீக்கப்படுவதற்கு அல்ல.
அவை உன்னால் களையப் பட
வேண்டியவை என்றான் கந்தன்.

உடல் உபாதைகள் தருகிறதே என்றேன்.
உடலே தற்காலிகமானது தானே என்றான்

பொறுமையினை அருளக் கேட்டேன்
துயரங்களின் உப பொருள் அது.
கற்கப் பட வேண்டுவது என்றான்

மகிழ்ச்சியினைத் தரக்கேட்டேன்
அவரவரைப் பொருத்தது அது என்றான்

வேதனைகளிலிருந்து விடுதலை கேட்டேன்.
தாமரையிலைத் தண்ணீராய் இரு என்றான்

ஆன்ம வளர்ச்சி கேட்டேன். உன்னை
நீயே வளர்த்தினால் பலன் கிடைக்கும் என்றான்.

வாழ்க்கையை விரும்பக் கேட்டேன்.
வாழ்க்கை இருக்கிறது. அனுபவிப்பது
உன் விருப்பம் என்றான்.

அனைவரையும் நேசிக்கஅருளக் கேட்டேன்..
அவன் சத்தமாகச் சிரித்து , வாழ்வின்
ஆதாரப் புள்ளிக்கு வந்து விட்டாய் என்றான். 


சிறிது நேரம் கழிந்தது.
கந்தன் என்ன சொன்னான்?
எங்கும் நிறைந்தவன் என்னிலும்தானே
நானும் அவனே அவனும் நானே
இந்தப் பதில்கள் என்னுள்ளே
இருந்ததுதானே. என்னை நானே
அறிய அவன் ஒரு கருவியோ?     

   
 

 
 

28 comments:

  1. என்னை நானே
    அறிய அவன் ஒரு கருவியோ? //


    உணர்வுடையோர்
    மதிக்கும் மாணிக்கம் ..!

    ReplyDelete
  2. அவரவர் மனதைப் பொறுத்து உணர்வு தான் ஐயா...

    ReplyDelete
  3. நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?..

    ReplyDelete
  4. நம்மை நாமே அறிய கடவுள் ஒரு கருவியோ?

    அப்படித்தான் நானும் நினைக்கிறேன்.

    ReplyDelete

  5. @ இராஜராஜேஸ்வரி
    @ திண்டுக்கல் தனபாலன்
    @ ஜீவி
    @ ராஜலக்ஷ்மி பரமசிவம்.
    வரவுக்கும் கருத்துப் பதிவுக்கும் என் நன்றிகள்.நான் பலமுறை எழுதி இருக்கிறேன். உணர்வுக்கும் அறிவுக்கும் நடக்கும் போட்டியில், அறிவே சிறந்ததாயிருந்தாலும், முடிவில் வெல்வது என்னவோ உணர்வுதான்.

    ReplyDelete
  6. உணர்வறிவு என்றால் என்ன?

    ReplyDelete

  7. @ ஜீவி எனக்கு வார்த்தைகளை வைத்து விளையாடத் தெரியாது. என் மனதில் தோன்றியதை தோன்றியபடியே எளிய தமிழில் எழுதி இருக்கிறேன்,அனைவரையும் நேசிப்பது வாழ்வின் ஆதாரப் புள்ளி என்று தோன்றுகிறது, அறிவு நிறையக் கேள்விகள் கேட்கிறது. உணர்வு நம்பினால் நலம் பயக்கும் என்கிறதுஅறிந்துணர்ந்தது எழுதப் பட்டது.எல்லோருக்கும் உடன்பாடு இருக்கும் என்று தோன்றாவிட்டாலும் எழுதப் பட்டது. நீங்கள் நினைப்பதைப் பகிரலாமே.கடைசி வரிகள் முத்தாய்ப்பாக அமைவதாக எண்ணுகிறேன்.

    ReplyDelete
  8. மிக மிக அருமை
    முத்தாய்ப்பாகச் சொல்லிச் செல்லும் வரிகள்
    தங்கள் அதீதத் சிந்தனையை படிப்பவர்கள் மனதில்
    பதியவைத்துப் போகிறது.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. இது வார்த்தைகளை வைத்து விளையாடுவது பற்றி இல்லை. கருத்து பற்றித்தான்.

    தலைப்பைப் பார்த்தும் உணர்வு வேறு, அறிவு வேறு என்று இரண்டும் தனித்தனியானவை என்கிற அர்த்தம் தொனிக்கிற மாதிரி இருந்ததால் அதன் தொடர்ச்சியாக சிந்திக்கலாமே என்பதற்காகக் கேட்டேன்.

    ReplyDelete
  10. உணர்வு இல்லை, உடான்சு.

    ReplyDelete
  11. அருமை அய்யா. கண்ணதாசன் பாடல் வரிகள் நினைவிற்கு வருகின்றன. கடவுளிடம் வாழ்க்கை என்றால் என்னவென்று கேட்டேன், வாழ்ந்து பார் என்று கடவுள் கூறினார் என்று எழுதுவார்.
    மனமே கோயில்

    ReplyDelete

  12. @ ஜீவி
    உணர்வு வேறு ,அறிவு வேறு என்னும் பொருளில்தான் பதிவு எழுதப் பட்டது.தலைப்பில் உள்ளது பதிவில் தெரிவிக்கவும் முயன்றிருக்கிறேன். உங்கள் சிந்தனனைகளை தாராளமாகப் பகிர்ந்து கொள்ள வரவேற்கிறேன். நன்றி.

    ReplyDelete

  13. @ ரமணி
    முத்தாய்ப்பாகச் சொல்லும் வரிகள் அதீத சிந்தனையல்ல. வாழ்வில் பட்டெழுந்ததில் கற்றதன் விளைவு.உற்சாகமூட்டும் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete

  14. @ கரந்தை ஜெயக் குமார்.
    உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete

  15. @ அப்பாதுரை
    நீங்கள் வேறு விதமாய்க் கருத்து தெரிவித்திருந்தால்தான் ஆச்சரியமாய் இருந்திருக்கும் பல்வேறு கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன். வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  16. உணர்ச்சிகளை அருமையாய் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  17. புத்தி தான் நீங்கள் சொல்லும் அறிவு எனக் கொண்டால் மனம் தான் உணர்கிறது. ஆக இங்கே மனதுக்கும், புத்திக்கும் தான் சண்டை! இல்லையா? :)))))

    எப்போவுமே புத்தி மறுக்கத் தான் செய்யும், ஆராய்ந்து பார்க்கும், விடைகளைக் கண்டுபிடிக்கும். இந்த மனம் என்பது எப்போதுமே இருக்குமா? அது இல்லை எனில் நாமும் இல்லையா? இதான் கேள்வி இல்லையா?

    பரமாசாரியார் அழகாய்க் கூறி இருக்கார். மனஸ் இல்லை என்றாலும் நீ இருக்கத்தான் இருந்தாய். அனுபவங்களே மனஸ் மூலம் ஏற்படுகின்றன. உங்கள் புத்தி மூலம் சிந்திக்கச் செய்வதுமே மனம் என்றே தோன்றுகிறது. மனம் ஒத்துக்கொள்ளக் கூடிய பதில் கிடைத்தால் அமைதி அடைகிறோம். இல்லையா? :))))))

    ReplyDelete
  18. அப்பாதுரை, உணர்வுகள் உடான்சு எனில் கோபம், தாபம், மோகம், ஆர்வம், பசி, தூக்கம் போன்றவற்றிற்கு என்ன சொல்வீங்க? :))))))

    ReplyDelete
  19. குரலொலி தெறிக்கக் குமரன்வந்து சொல்லிடவில்லை
    கரவொலி எழுப்பிக் கலகலநகைத்துக் கூறிடவில்லை

    மனதொலி கிளம்பி உணர்வொலி யெழுப்பிட‌
    தனதெனும் அறிவொலி வழியே சொன்னான்

    மனதும் அறிவும் உணர்வும் புத்தியும்
    வினவிடும் எவர்க்கும் வந்திடும் தொல்லையே

    அனைத்தும் விடுத்து அகத்துள் நிறைந்து
    வினைப்பயன் அறுக்கும் வழியினைத் தெரிந்து

    சொல்லும் செயலும் எல்லாம் அறுத்து
    சும்மா இருப்பதே சுகமிங் கெனக்கு!

    முருக‌ன‌ருள் முன்னிற்கும்!

    ReplyDelete
  20. மிகவும் ஆழமான உணர்வை அழகான கவிதையாக்கி உணரவைத்துவிட்டீர்கள். இந்தக் கவிதையின் கருப்பொருள் பற்றி என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் நானும் இதுபோன்று அறிவுக்கும் உணர்வுக்கும் இடையிலான நிலையில்தான் திருமணவாழ்க்கையின் ஆரம்பகாலத்தில் அகப்பட்டிருந்தேன். என் பிறந்தவீடோ பக்தி நிறைந்தது. என் கணவரது குடும்பமோ பகுத்தறிவுப் பாசறை. கணவர், மாமனார், மாமியார், நாத்தனார்கள், கொழுந்தனார்கள் அனைவருமே கடவுள் நம்பிக்கை அற்றவர்கள். ஆனாலும் இருபது வருடங்களுக்கும் மேலாக அக்குடும்பத்தில் நான் மகிழ்வோடும் மனநிறைவோடும் வாழ்ந்துவருகிறேன். காரணம் என்ன என்பதை அறியமுடிகிறதா? அவர்கள் நாத்திகர் என்றபெயரில் ஒருநாளும் பிறர் மனத்தை நோகடித்ததில்லை. மாறாக மனிதம் போற்றுகிறார்கள். எந்த வீட்டிலும் இல்லாத அளவுக்கு எங்கள் நாத்தனார்கள், தம்பி மனைவியர்களிடம் அன்பைப் பொழிகிறார்கள். இங்கே கந்தன் சொல்லியுள்ள கருத்துக்களைத்தான் எங்கள் மாமனார் எங்களுக்குச் சொல்கிறார்.

    \\என்னை நானே
    அறிய அவன் ஒரு கருவியோ? \\
    என்கிறீர்கள் நீங்கள்.

    எங்களை நாங்களே அறிய ஒரு கருவியாய் எங்கள் மாமனார் செயல்படுகிறார் என்கிறேன் நான். அதனால்தான் ஆரம்பகாலத் தள்ளாட்டத்திலிருந்து என்னால் எளிதாக வெளிவர இயன்றது. தெளிவான சிந்தனையை ஏற்கவும் முடிந்தது.

    ReplyDelete

  21. Any belief sustained over a fairly long period of one's life when integrated into one's intellect, is known as faith.

    As my good web friend Dindugal Dhanabalan rightly hints, one experiences (becomes )what one believes.

    U Become what U believe.

    Other than this, honestly,
    verbal permutations or combinations take us nowhere, I must confess.

    subbu thatha.
    my tamil font software is not opening up. hence English text. Sorry for the inconvenience.

    ReplyDelete
  22. மதிப்பிற்குரிய ஜீ.ஏம்.பி அவர்களே! கடவுள்-அறிவா? உணர்வா?என்ற கெள்வியையே கெள்விக்கு உட்படுத்துகிறேன்!" கடவுளே இல்லை! அது ஒரு concept " என்பவருக்கு இந்த கேள்வி தேவையில்லை! கடவுள் என்பதுகருத்தியல்! கருத்து உங்கள் நினப்பு ! இவை மூளையின் நடவடிக்கை ! function of brain ! a few micro miilli of protein,nuron,electric charge etc ! pure matter ! matter is primary ! பொருள் முதல் வாதம் ! பொருள் இல்லையேல் எதுவும் இல்லை ! கடவுள் உண்டு,இல்லை என்று நினைப்பதற்கு மனிதன் வேண்டுமே ! அறிவு உணர்வு என்பதெல்லாம் அதன் பிறகு தானே !உணர்வு உடான்ஸ் என்று எழுதிய அப்பாதுரை சரி என்றே கருதுகீறேன் ! ஏங்ஜெல்ஸ் எழுதிய "இயற்கையின் தர்கவியல்" என்ற நூலில் விரிவாக உள்ளது! அப்பாதுரை எங்ஜெல்ஸை ஏற்கமாட்டர் ! விஷயம் அவர் ஏற்பதோடு நிற்பதில்லையே ! மிகவும் ஆழமான இடத்தை தொட்டிருக்கிறீர்கள ! விவவதிக்க வேண்டியது ,விளக்க வேண்டியது நிறைய உள்ளது ! கடவுளை ஏற்றுக் கொண்டவருக்கு உங்கள் கருத்து intelectual level ல் தடவிக் கொடுக்கலாம்! அறீவியலில் உரசிப்பார்க்கும் போது கொஞ்சம் சிரமப்படும் ! உங்கள்கருத்தை பலமாக ,எதிர்க்கிறொனோஎன்று தோன்றுகிறது ! மன்னித்து அருளுங்கள்! ---காஸ்யபன்!

    ReplyDelete

  23. @ டாக்டர் கந்தசாமி
    @ கீதா சாம்பசிவம்
    @ vsk
    @ கீதமஞ்சரி
    @ சூரி சிவா
    @ காஸ்யபன்.
    என் மனதில் தோன்றிய எண்ணங்களுக்கு வரிவடிவம் கொடுத்தேன். இதில் என் எழுத்துக்களுக்குக் காரணம் கடவுள் பற்றிய என் அறிவா இல்லை உணர்வா என்னும் கேள்வியும் எழுந்தது. நான் சிலர் படித்து அவர்கள் கருத்துக்களை வெளியிட வேண்டும் என்று விரும்பி பதிவை அனுப்பினேன். ’சொல்லும் செயலும் எல்லாம் விடுத்து சும்மா இருப்பதே சுகமிங்கெனக்கு’ என்கிறார் vsk. verbal permutations and combinations lead us nowhere என்கிறார் சுப்பு தாத்தா.மனம் அறிவு இரண்டுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடில் உணர்வு அல்லது மனம் வெல்லும் என்று உடன்படுகின்றனர் பலர். கடவுள் என்பதே ஒரு CONCEPT. ஆகவே இந்தக் கேள்விக்கே அர்த்தம் இல்லை என்பதுபோல் கூறுகிறார் காஸ்யபன்.அப்பாதுரை உணர்வே உடான்ஸ் என்கிறார்.பலவிதக் கருத்துரையாடல்களுக்கு இதன் மூலம் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  24. கீத மஞ்சரி அவர்களின் புகுந்த வீட்டு மக்களுக்கு என் வணக்கமும், பாராட்டும்.

    மனித நேயம் தாண்டி என்னங்க இருக்கு ...?

    ReplyDelete
  25. எல்லாருக்கும் ஒரு எண்ணம், கடவுள் நம்பிக்கை இருந்தால் அங்கே மனித நேயம் இருக்காது என! :))))) எந்தக் கடவுள் சொல்லி இருக்கார்? தெரியலை எனக்கு! நாம் செய்யும் தவறுகளுக்குக் கடவுளைச் சுட்டிக்காட்டும் நாத்திகவாதிகள் மறைமுகமாகக் கடவுளை நம்புவதையே தெளிவாக எடுத்துக் காட்டுகிறது அல்லவோ? நமக்குக் கடவுள் கொடுத்த கொடைகளில் நாம் எதைப் பொறுக்குகிறோம், எதைத் தள்ளுகிறோம் என்பது நம் சொந்தப் பொறுப்பு. கடவுளுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை. :(

    சர்வே ஜனோ சுகினோ பவந்து! என்பதே சநாதன தர்மத்தின் கொள்கை. சொல்லப் போனால் தனக்கு மட்டும்னு கேட்டுக்காமல், உலகத்து மக்களின் சுபிக்ஷத்துக்காகப் பிரார்த்திப்பதே சநாதன தர்மத்தின் வாழ்க்கை முறையும் கூட. ஆனால் இப்போதைய அவசர உலகில் அது சூரியனை மறைக்கும் மேகம் போல அதுவும் கருமேகம் போல மறைந்து தான் இருக்கு. மனித நேயத்துக்கும், இறை நம்பிக்கைக்கும் சம்பந்தம் என்பதே இல்லை. துரதிர்ஷ்டவசமாகச் சிலரின் பக்தி வேஷத்தால் இப்படியானதொரு கருத்து உருவாகி விட்டது.

    எத்தனையோ ஆன்மிகப் பெரியோர் வீடுகளில் அன்பைப் பொழியும் மாமியார், மாமனார், நாத்தனார், மச்சினர்மார்கள் இருக்கின்றனர். தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமலேயே! அதற்கான தேவை இருப்பதாகக் கருதவில்லை. :))))

    ReplyDelete
  26. // எங்கும் நிறைந்தவனிடம்
    குறைகளைச் சொல்லி அழ
    ஆலயங்கள் ஏனைய்யா.? //

    // சிறிது நேரம் கழிந்தது.
    கந்தன் என்ன சொன்னான்?
    எங்கும் நிறைந்தவன் என்னிலும்தானே
    நானும் அவனே அவனும் நானே
    இந்தப் பதில்கள் என்னுள்ளே
    இருந்ததுதானே. என்னை நானே
    அறிய அவன் ஒரு கருவியோ? //

    உங்கள் பாடல் வரிகளைப் படித்ததும் அந்த புரட்சிகரமான சித்தர் சிவவாக்கியர் நினைவுக்கு வந்தார்.

    ReplyDelete

  27. அருமை ஐயா ஒவ்வொரு வரிகளும் செதுக்கி இருக்கிறீர்கள் அனைத்தும் உண்மை.

    ReplyDelete