Saturday, March 14, 2015

பூனை நக்கிக் குடித்தது


                                 பூனை நக்கிக் குடித்தது
                             ---------------------------------------


இரண்டு மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து பதிவுகள் ஏதும் வெளியிடாவிட்டால் பதிவுலகம் நம்மை மறந்து விடும். தொடர்ச்சியாக எழுத கற்பனைகை கொடுக்காதபோது என் பழைய பதிவுகளைப் பார்ப்பது வழக்கம் அண்மையில்திரு ஜோசப் விஜு அவர்களது “ஊமைக்கனவுகள்என்னும் தளத்தில் சங்ககாலக் கவிதைகள் பற்றி எழுதி வருகிறார். என் மர மண்டைக்குப் பலவும் புரிவதில்லை. இந்தக் கேள்வி எனக்கு என்ன புரியும் என்று நான் என்னையே கேட்டுக் கொண்டு பதிவாக்கியதையும் பார்க்க நேர்ந்தது. அது மீள் பதிவாக்கினாலும் பழையதாய்த் தெரியாது என்று தோன்றியதால் மீண்டும் அப்பதிவு. இதை ஏற்கனவே படித்திருந்தாலும் அநேகமாக நினைவுக்கு வராத ஒரு பகிர்வுதான்

கேள்வி:- உனக்கு எத்த்னை மொழிகள் தெரியும்.?
பதில்:-   எனக்கு எழுத படிக்க பேச தமிழும் ஆங்கிலமும் தெரியும். சுமாராகப் பேச , பேசினால் புரிந்து கொள்ள மலையாள்மும் , கன்னடமும்தெரியும். பேசினால் ஓரளவு புரிந்து கொள்ளும் அளவுக்கு தெலுங்கு தெரியும். கஷ்டப்பட்டு எழுத படிக்க பேச இந்தியும் தெரியும்
.
கேள்வி:- தமிழ் ஆங்கிலம் போன்ற மொழிகளில் புலமை இருக்கிறதா.?
பதில் :-  புலமை என்றால்.... குழப்பமாக இருக்கிறது. அண்மையில் கன்னட ஆசிரியர்களுள் சிறந்தவர் என்று கருதப் பட்ட டி.பி. கைலாஸ் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய DRONA என்னும் கவிதையை தமிழில் மொழி பெயர்க்க முடியாமல் தமிழாக்கம் செய்து என் ஆங்கில அறிவை வெளிப்படுத்திக் கொண்டேன்...! தமிழாக்கம் செய்ய அருகில் ஆங்கில அகராதியை வைத்துக் கொண்டு வார்த்தைகளுக்கு பொருள் தேடி  புரிந்து கொண்டேன் ஆக ஆங்கிலத்தில் புலமை என்று சொல்வதை விட WORKING KNOWLEDGE இருக்கிறது என்று சொல்வதே சரியாயிருக்கும்.

கேள்வி அப்படியானால் தமிழில் நல்ல புலமை இருக்கிறதாக எண்ணலாமா.?
பதில்:- தமிழில் எதை வைத்து புலமையை எடை போடுவது
.
கேள்வி: - தமிழில் நிறையப் படித்திருக்கிறாயா.?
பதில்:- பள்ளியில் படித்ததைவிட படிக்காததே அதிகம். பள்ளியில் கற்றிருக்க வேண்டிய இலக்கண இலக்கிய தெளிவுகள் கற்காமல் விட்டதாலும் என் ஞானம் பற்றி எனக்கே சந்தேகம் வருவதாலும் இக்கேள்விக்கு பதிலை கேள்விகள் கேட்டு தெரிந்து கொள்ளும்படி வேண்டிக்கொள்கிறேன்.

கேள்வி:- சரி. அப்படியே செய்யலாம். இந்திய இதிகாச நூல்களைப் படிதிருக்கிறாயா.?
பதில்:- ஓ..! படித்திருக்கிறேனே.

கேள்வி:- கேள்வியை சரியாகப் புரிந்து கொள். தெரியுமா என்று கேட்கவில்லை. படித்திருக்கிறாயா என்பதுதான் கேள்வி.
பதில்.:- தெரியும் என்பதற்கும் படித்திருக்கிறேன் என்பதற்கும் அவ்வளவு வித்தியாசமா.?

கேள்வி:- ஆம். இது உன் மொழி அறிவை சோதிக்க கேட்ட கேள்வி.
பதில்:- கம்ப ராமாயணம் படித்திருக்கிறேன். பாரதியின் பாஞ்சாலி சபதம் படித்திருக்கிறேன்..ஏன்... சாதாரணன்ராமாயணம் என்று  ஒரு கவிதை ஒரே வாக்கியத்தில்  நானே எழுதி இருக்கிறேன்.(சுட்டியைத் தட்டிப் படிக்கலாம்)

கேள்வி:- கவிதையா .? யாப்பிலக்கணத்தில் எதனைச் சார்ந்தது அது...?
பதில்: -யாப்பிலக்கணமா.. ? அது புதுக் கவிதை. எந்தக் கட்டுப்பாட்டுக்குள்ளும் வராது.வார்த்தைகளை மடக்கிப் போட்டு வரிவடிவம் கொடுத்து எழுதுவது அது

கேள்வி:-மொழியும் தெரிய வேண்டாம் இலக்கணமும் தெரிய வேண்டாம்  என்பவர்களே புதுக் கவிதைக்கும் வசன கவிதைக்கும் வக்காலத்து வாங்குபவர்கள்.. போகட்டும். வால்மீகி ராமாயணத்தை கம்பர் தமிழில் எழுதியபோது  இராம காதை என்னும் தலைப்பில் எழுதினார் என்பதாவது தெரியுமா,?ஆறு காண்டங்களுடன் 118 படலங்களுடன் பன்னீராயிரத்துக்கும் அதிகமான விருத்தப் பாடல்கள் கொண்டது கம்ப ராமாயணம் எனப் படும் இராமகாதை. அங்கும் இங்கும் சில பாடல்களைப் படித்துவிட்டு கம்பராமாயணம் படித்திருக்கிறேன் என்று கூறுவது சரியா. ,செவி வழிக் கேட்டு கதை தெரிந்து கொள்வது வேறு, பொருள் தெரிந்து படித்தறிவது என்பது வேறு. மகாபாரதத்தை தமிழில் எழுதியவர் யார் என்றாவது தெரியுமா.?
பதில்.:-தெரியும் வில்லிபுத்தூரார் எழுதிய வில்லி பாரதம்.படித்ததில்லை. ஆனால் இதில் வியாசரால் எழுதப் பட்ட மகாபாரதத்தின் முக்கிய பகுத்யான பகவத் கீதை பற்றி எழுதப்படவில்லையாம்.. மேலும் இவரால் விடப் பட்ட சில பகுதிகளை அரங்கநாதர் பாரதம் என்ற பெயரில் எழுதினாலும் அதை வில்லிபாரதத்தின் துணை நூலாகவே கருதுகின்றனர். பாரதத்தின் ஒரு பகுதியை பாஞ்சாலி சபதம் என்ற தலைப்பில் பாரதியார் பாடியிருக்கிறார்.

கேள்வி.:- ஐம்பெருங்காப்பியங்கள் என்னவென்று தெரியுமா. ?
பதில்.:- சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி. இவை அணிகலன்களின் பெயரால் அறியப் படுபவை. இவற்றில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப் படுகின்றன. சிலப்பதிகாரத்தை குடிமகன் காப்பியம் என்று கூறுவார்கள். கடவுளையோ அரசனையோ பாட்டுடைத் தலைவனாக்காமல் கோவலன் எனும் ஒரு குடிமகனின் கதையைக் காப்பியமாக்கி இருக்கிறார் இளங்கோவடிகள்.  இதெல்லாம் படித்துத் தெரிந்தது. ஆனால் சிலப்பதிகாரத்தை அவர் இயற்றிய வடிவில் படித்ததில்லை. அதேபோல்தான் மணிமேகலை எனும் காப்பியமும். வளையாபதி குண்டலகேசி ... மூச். ஒன்றுமே தெரியாது. ஆனால் இந்த சீவகசிந்தாமணி கதையை மூன்றாம் சுழியில் அப்பாதுரை எழுதியது படித்தது மூலம் தெரிந்து கொண்டேன்.

கேள்வி.:- ஐஞ்சிறு காப்பியங்கள் பெயராவது தெரியுமா. ?
பதில்.:- அப்படியும் காப்பியங்கள் இருக்கின்றனவா..தெரியாதே
.
கேள்வி..:- இப்போதாவது தெரிந்து கொள். அவை, நீலகேசி,யசோதரகாவியம், நாககுமாரகாவியம்,உதயண குமார காவியம், சூளாமணி.
பதில்.: -கடைசியாகச் சொன்ன தலைப்பில் அப்பாதுரை எழுதத் துவங்கி நிறுத்தி விட்டாரே அதுவா.?

கேள்வி .:- அது சூடாமுடி. பெயரைக்கூட சரியாக வாசிக்காமல் .....உனக்கு எவ்வளவு மலர்களின் பெயர்கள் தெரியும்.?
பதில்.:- ஏதோ நான்கைந்து . இல்லை ஏழெட்டு மலர்களின் பெயர்கள் தெரியும். சில நாட்களுக்கு முன் பதிவர் ஒருவர் ( சசிகலா என்று நினைக்கிறேன்) பல மலர்களின் படங்களுடன் பெயர்களையும் குறிப் பிட்டிருந்தார். நடிகர் சிவ குமார் அவ்வப்போது நூறு மலர்களின் பெயர்களை மூச்சு விடாமல் கூறி அசத்துவார்

கேள்வி.:- அவை குறிஞ்சிப் பாடலில் கபிலர் எழுதியவை ஆகியிருக்கும். மணிமேகலையில் சாத்தனார் பல மலர்களின் பெயரைக் கூறுகிறார்.
குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும்
திலகமும் வகுளமும் செங்கால் வெட்சியும்
நரந்தமும் நாகமும் பரந்தலர் புன்னையும்
பிடவமும் தளவமும் முடமுள் தாழையும்
குடசமும் வெதிரமும் கொழுங்கால் அசோகமும்
செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண் பகமும்
எரிமலர் இலவமும் விரிமலர் பரப்பி
ஏதாவது தெரிகிறதா. ?

பதில் :- கேள்வி கேட்பது எளிது. உண்மையில் எத்தனை பேருக்கு இந்தப் பூக்களை அடையாளம் காட்ட முடியும். சரி. நான் ஒரு பாடல் கூறுகிறேன். யார் இயற்றியது என்று ஊகிக்க முடிகிறதா பாருங்கள்.
வடவரையை மத்து ஆக்கி வாசுகியை நாண்ஆக்கிக்
கடல்வண்ணன் பண்டு ஒருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையர் கடை கயிற்றால் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே

கேள்வி.:- நான்தான் கேள்வி கேட்பேன். இருந்தாலும் பாடலைப் படிக்கும்போது ஆழ்வார்களில் யாராவது எழுதி இருக்கக் கூடும். என்பதே என் ஊகம்.

பதில்.:- அதுதான் இல்லை. நாலாயிரப் பிரபந்தப் பாடல்களின் மொழிபோல் இருந்தாலும்  இதைப் பாடியது இளங்கோ அடிகள் என்ற சமண முனிவர்..!

கேள்வி.:- குறவஞ்சி பாடல்களில் , மலர்களின் பெயர்களைப்போல், சுமார் 80 பறவைகளின் பெயர்களும் காணக் கிடைக்கும். தேடிப் படித்துப் பார். இப்போது கூறு.  உனக்குத் தமிழ் மொழி தெரியுமா.?

பதில்.:-கம்ப ராமாயணத்தில் இராமாவதாரத்தில் பாயுரச் செய்யுளாகக் கம்பனே

ஓசை பெற்று உயர் பார்கடல் உற்று ஒரு
பூசை, முற்றவும் நக்குபு  புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன், மற்று, இக்
-
காசில் கொற்றத்து இராமன் கதை அரோ

என்று. கூறுவான். தமிழ் ர்ன்னும் கடலை நக்கிக் குடிக்க நினைக்கும் பூனையா நான்.
தமிழ் கற்றேன் என்னும் அகந்தை சிறிதும் இல்லை.கற்றது கைம்மண் அளவு என்பார்கள். நானோ கடுகளவு என்பேன் உபரியாக... .சமீபத்திய தமிழ்க் காவியமாக இராவணன் காவியம் எழுதப் பட்டு வெளியிட்டிருக்கிறார்களாமே. 

( ஒரு திரைப்படத்தில் வடிவேலு, தன் வலக்கையை . ஆள்காட்டி விரல் அவரது கண்ணை நோக்கியவாறு வைத்து ஏதோ கூறுவார்.. அதுபோல் நான் என்னை நோக்கிக் கூறுவது : உனக்கு இது தேவையா.? உன் பவிசு எல்லோருக்கும் தெரிய வேண்டுமா..?)     




 



41 comments:

  1. தாங்கள் தமிழ் அறிந்தவர்தான் ஐயா
    நன்றி

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா
    இதை விட வேறு என்னதான் சொல்ல வேண்டும் எல்லாம் அறிந்தனிங்கள் ஐயா
    த.ம 1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. உங்களுக்கு என்னவெல்லாம் தெரியுமோ தெரியாதோ.... எனக்கென்ன அதப் பத்தி. ஆனா ஒண்ணு புரிஞ்சி போச்சு. எனக்கு ‘எதுவும், எந்த மொழியும் தெரியாது’.

    என்னய்யா ... இப்படி பண்ணிட்டேங்களே அய்யா .... :(

    ReplyDelete
  4. கேள்விகளும் அதற்கான பதில்களும் அருமை!.. ஆளுமை!..

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா கேள்வியும் நானே , பதிலும் நானே அருமை நிறைய விடயங்களை உள்ளடக்கிய பதிவு நன்றி

    சாதாரணன் இராமாயணம், பதிவும் படித்தேன்.

    ReplyDelete
  6. பாடல்களாக, பாடங்களாகப் படிப்பதை இப்படி கேள்வி பதில் ரூபத்தில் படிப்பது எளிதாகவும் இருக்கிறது, இனிதாகவும் இருக்கிறது. குறிப்பாக மலர்களின் பெயர்கள், மற்றும் ஐஞ்சிறுங் காப்பியங்கள்.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. பாடல்களாக, பாடங்களாகப் படிப்பதை இப்படி கேள்வி பதில் ரூபத்தில் படிப்பது எளிதாகவும் இருக்கிறது, இனிதாகவும் இருக்கிறது. குறிப்பாக மலர்களின் பெயர்கள், மற்றும் ஐஞ்சிறுங் காப்பியங்கள்.

    ReplyDelete
  9. உங்க பதிவைப் படித்த பின் தெரிந்தது ,நான் தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்குங்கிறதைதான் :)

    ReplyDelete
  10. பகவான்ஜியோட நானும் ஒத்துப்போறேன். உங்க பதிவ படிச்ச பின்னாலதான் எனக்கு எதுவுமே தெரியல என்ற உண்மை புரிஞ்சது.

    ReplyDelete
  11. இன்று காலைதான் உங்களது இந்த பதிவினை (இருமுறை) ஆழ்ந்து படித்தேன். கேள்வி – பதில் பாணியில் அருமையான தன்னிலை விளக்கம். வலைப்பதிவினில் எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை; நமக்குத் தெரிந்ததை நன்றாக எழுதினால் போதும் என்பதனை, தங்களது அனுபவ மொழிகள் வாயிலாக சொல்லி இருக்கிறீர்கள். தங்களது இந்த பதிவினை படித்து முடித்ததும் நினைவுக்கு வந்த அவ்வையார் பாடல் –

    வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
    தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் – யாம்பெரிதும்
    வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
    எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.

    (இதன் பொருள்: தூக்கணாங்குருவிக் கூடு, கறையான் புற்று, சிலந்திவலை, ஆகியவற்றை எல்லாராலும் செய்யமுடியாது. எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது. எனவே நானே வல்லவன் என்று யாரும் தம்பட்டம் அடித்துக்கொள்ளக் கூடாது.)

    ReplyDelete
  12. //இரண்டு மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து பதிவுகள் ஏதும் வெளியிடாவிட்டால் பதிவுலகம் நம்மை மறந்து விடும்//

    அப்படி மறந்து விட்டால் என்ன ஆகும்?

    ஒரு பதிவு போடுங்களேன்.

    ReplyDelete
  13. நல்ல பதிவு. எனக்கும் தமிழை ஒரு மொழியாகத் தான் தெரியும். இலக்கண, இலக்கியங்கள் தெரியாது. ராவணன் காவியம் என்று ஒரு நூல் வந்திருப்பதையும் இப்போது தான் அறிந்தேன். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  14. இது தான் ஐயா தன்னடக்கம் என்பது...

    ReplyDelete
  15. தெரியவில்லை, தெரியவில்லை என்று கூறிக்கொண்டே பலவற்றைத் தெரிந்து வைத்துள்ளதோடு எங்களோடு பகிர்ந்த விதம் நன்று. உங்களின் எழுத்தில் நிதானமும், பொறுமையும், அருமையான தன்னிலை விளக்கமும் பொதிந்துள்ளது.

    ReplyDelete
  16. அய்யா வணக்கம்.
    நீங்கள் இங்கு என்னைக் குறிப்பிட்டுள்ளதைக் காணும் போது
    மீண்டும் என் பள்ளிக்கால நினைவுதான்.
    பள்ளியில் என்னை ஆகப்பயங்கொள்ளச் செய்தவை, திருக்குறளும் யாப்பும்தான்.
    “கிட்டாதாயின் வெட்டென மற “ என அவற்றை விட்டுவிட முடியாமல் உட்புகுந்ததால் சில நுட்பங்கள் தெரிந்தன. அவை சில நேரங்களில் தவறாகவும் இருந்திருக்கின்றன. தவறென்று தெரிந்து கொள்வதே அறிவுதானே?

    சங்க இலக்கியங்களை வாசிப்பது என்பதன் நிச்சயமாய்ச் சுகமான அனுபவமாக இல்லை.

    பாரதிதாசனின் பாட்டொன்று வருமே..

    “தொடங்கையில் வருந்தும்படி
    இருப்பினும் ஊன்றிப்படி
    அடங்கா இன்பம் மறுபடி
    ஆகுமென்ற ஆன்றோர் சொற்படி “

    என்றபடி நம் தமிழ்தானே? அது எப்படி நமக்குப் புரியாமல் போகலாம் என்ற எண்ணத்தில் படித்ததுதான்.
    என் பதிவில் நீங்கள் வந்து கேட்கும் கேள்விகளைப் பார்த்தாலே உங்களுக்கு உள்ள அதன் பரிச்சயம் பற்றித் தெரியுமே..!

    சிறு வயதில் இருந்தே புத்தகங்கள் அன்றி எனக்கு வேறு துணையில்லை.

    கிள்ளித்தண்டிலும், பம்பரத்திலும், திருடன்போலீசிலும் சொக்கிக் கிடந்த என் சக வயதினரை விடுத்து வீடன்றி வெளியே செல்லாமல் புத்தகமும் கையுமாகத்தான் கழிந்தது என் பால்யம்.

    இன்று நினைக்கும் போதும் எனக்கு அவையெல்லாம் மீட்டெடுக்க முடியாத பேரிழப்புகள்தான்.

    உங்களுடைய கேள்வி-பதில் நீங்கள் யார் என்பதைச் சொல்கிறது.

    “ தோன்றாத் தோற்றித் துறைபல முடிப்பினும்
    தான்தற் புகழ்தல் தகுதி யின்றே “

    என்று இலக்கணம் சொன்ன மரபை உங்கள் கேள்வி பதில்களால் மீண்டும் எடுத்துக் காட்டி இருக்கிறீர்கள்.

    தங்கள் பதிவில் என்னை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.

    தங்களைத் தொடர்கிறேன்.

    நன்றி

    ReplyDelete

  17. @ கரந்தைஜெயக்குமார்
    ஐயா வருகைக்கு நன்றி. என் தன்னடக்கத்தால் விளைந்த பதிவல்ல இது. உண்மையிலேயே எனக்குத் தெரிந்தது மிகக் குறைவே.

    ReplyDelete

  18. @ டாக்டர் கந்தசாமி
    கருத்துக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  19. @ ரூபன்
    எல்லாம் அறிந்தவன் என்னும் நினைப்பிருந்தால் இப்பதிவை எழுதி இருக்கமாட்டேன்வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  20. @ தருமி
    என் இந்தப் பதிவு உங்களையும் சிந்திக்க வைத்ததில் மகிழ்ச்சியே வருகைக்கு நன்றி சாம்.

    ReplyDelete

  21. @ துரை செல்வராஜு
    நினைப்பதைத் தெளிவாகச் சொல்ல முடிகிற அளவுக்குத் தெரிகிறது அவ்வளவே வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  22. @ கில்லர்ஜி
    கேள்வி பதிலாக அவ்வப்போது பதிவு எழுதுகிறேன். சில விஷயங்களைச்சொல்ல எளிதாய் இருக்கிறது. வருகைகு நன்றி ஜி. சாதாரணன் ராமாயணம் நன்றாக இருந்ததா. ?

    ReplyDelete

  23. @ ஸ்ரீராம்
    இம்மாதிரி கேள்வி பதிலாக சில சீரியஸ் பதிவுகள் எழுதி இருக்கிறேன் வரவேற்புக்கு நன்றி ஸ்ரீ.

    ReplyDelete

  24. @ பரிவை சே குமார்
    நன்றாக இருப்பதாகக் கூறியதற்கு நன்றி குமார்.

    ReplyDelete

  25. @ பகவான் ஜி
    நாம் அனைவரும் தெரிந்து கொள்ள நிறைய இருக்கிறது ஜி. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  26. @ செந்தில் குமார்
    எதுவுமே தெரியவில்லை என்பது சரியாகாது. இன்னும் தெரிய வேண்டியது உண்டு என்பதே நிஜம் வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  27. @ தமிழ் இளங்கோ
    எல்லாம் தெரியும் என்ற தலைக்கனம் கூடாது என்பதற்காகவே இந்த introspection. வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  28. @ டாக்டர் கந்தசாமி
    /

    //இரண்டு மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து பதிவுகள் ஏதும் வெளியிடாவிட்டால் பதிவுலகம் நம்மை மறந்து விடும்//

    அப்படி மறந்து விட்டால் என்ன ஆகும்?

    ஒரு பதிவு போடுங்களேன்.
    போட்டால் போயிற்று. பதிவு எழுத ஒரு விஷயதானம் செய்ததற்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  29. @ கீதா சாம்பசிவம்
    வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி மேம்

    ReplyDelete

  30. @ திண்டுக்கல் தனபாலன்
    இது தன்னடக்கம் அல்ல டிடி. உண்மையை உரக்க உரைத்தேன் அவ்வளவே வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  31. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    தெரியாததன் பட்டியல் நீண்டு கொண்டே போகும் . தெரிந்ததைச் சொல்லிவிடலாம் போலிருக்கிறது. வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  32. @ ஊமைக் கனவுகள்
    நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி வருகை தந்ததற்கும் கருத்துப் பதிவுக்கும் மிக்க நன்றி. நான் என் பதிவில்குறிப்பிட்டது உண்மை. உங்கள் எழுத்துக்களின் ஆழ அகலங்களைப்பார்க்கும் போது என் மொழியில் எனக்கு என்ன தெரியும் என்று சிந்தித்ததன் பயனே இந்த மீள்பதிவு. சென்ற ஒரு பதிவில்( “எண்ணங்கள் எனதுமட்டுமல்ல “) தமிழ் மொழியைப் பேசக் கூட தெரியாத நிலை பற்றி யோசிக்கும் போது ஒரு பக்கம் தமிழின் பண்டைய பெருமைகளையும் நுட்பங்களையும் நீங்கள் பதிவிடுகிறீர்கள் இதுவே எனக்கு ironical ஆகத் தெரிந்தது.ஒரு வேளை இது பற்றியும் நீங்கள் எழுத வேண்டும் என்னும் எனது அவாவோ தெரியவில்லை. தொடர்ந்து வாருங்கள். நன்றி.

    ReplyDelete
  33. அடிக்கடி இம்மாதிரி ஆழமான பதிவுகளைப் போட்டு எங்களையெல்லாம் ஒண்ணும் தெரியாதவர்களாக்கிவிடுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே!

    ReplyDelete

  34. @ செல்லப்பா யக்ஞசாமி
    இந்தப்பதிவு எனக்கு நானே செய்துகொண்ட ஒரு இண்ட்ரொஸ்பெக்‌ஷன் , அவ்வளவுதான் ஐயா. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  35. நிறைய தெரிந்தும் மிக தன்னடக்கமாய் இருக்கும் நிறை மனிதர் நீங்கள். அருமையான பதிவு.

    ReplyDelete

  36. @ கோமதி அரசு
    பாராட்டுக்கு நன்றி மேம்

    ReplyDelete
  37. இந்தக் கேள்வி பதில்களில் உங்கள் நுண்ணறிவு வெளிப்படுகிறது ஐயா.
    சிறிது நாட்கள் எழுதாமல் இருந்தால் மறந்து விடுவார்கள் என்பது உண்மை.

    இராவண காவியம் புலவர் குழந்தை எழுதினார் என்று நினைக்கிறேன். அவரது சில பாடல்கள் பாடப் புத்தகங்களில் படித்ததாக நினைவு.

    வடவரையை மத்தாக்கி இளங்கோ அடிகள் எழுதினார் என்பதை ஊகிப்பது கடினம்தான்

    ReplyDelete

  38. @ டி. என் முரளிதரன்
    இந்தக் கேள்வி பதில்களின் மூலம் என்னை ஒரு திறந்த புத்தகமாய் காட்டுகிறேன். சில நாட்கள் பதிவெதுவும் எழுதாவிட்டால் நான் இருக்கிறேனா என்பதே ஐயபாடாய் இருக்கும் எழுதியவை பலதும் அங்கிங்கு படித்துத் திரட்டியதே. வருகைக்கு நன்றி முரளி.

    ReplyDelete
  39. எப்படி இந்தப் பதிவு விட்டுப் போனது என்ரு தெரியவில்லை சார். தங்களது பதிவுகள் வெளியாகும் போது எங்களுக்கு எங்கள் ஐடியில் வரும்...இது என்னாயிற்று என்று தெரியவில்லை...அதனால் தாமதமாகிவிட்டது..மட்டுமல்ல தேர்வு சமயம்...

    என்ன சார்? தங்களையா இப்படிச்சொல்லிக் கொள்கின்றீர்கள்?! தாங்கள் தங்களது கேள்வி பதில்களிலேயே உங்களது விசய ஞானம் ஒளிர்கின்றதே!! ஒரு வேளை தன்னடக்கம்?!! நாங்கள் அறிந்திராத பல தகவல்களைத் தந்துள்ளீர்கள் சார்! உங்களுக்கே தெரியவில்லை என்று சொன்னீர்கள் என்றால்...நாங்கள் எல்லாம் எங்கே சார்?!!! ஒன்றுமே தெரியாதவர்கள்...சீரோ என்று சொல்லுவதை விட, மைனஸில் இருக்கின்றோம் என்றும் சொல்லலாம்...

    உங்கள் கேள்விகளே அறிவு மிக்கவையாக இருக்கின்றன. சுய பரீசீலனை போல. இது எத்தனை பேரால் செய்ய முடியும்?

    நீங்கள் சொல்லி இருக்கும் தகவல்களை எளிதாகப் படிக்கும், புரிந்து கொள்ளும் அளவு சொல்லி இருக்கின்றீர்கள் சார். அதாவது சாமான்யனும் (எங்களைப் போன்றவர்கள்) புரிந்து கொள்ளும் அளவு...கற்றள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு எளிமையாகக் கற்பித்தல்...மிக மிக முக்கியம் சார். தங்களது அனுபவப் பதிவுகளே இதற்கு சான்று. மிக அருமை...

    சார் நீங்கள் பதிவுகள் எழுதவில்லை என்றால் உங்களை எல்லாம் மறக்க மாட்ட்டோம் சார்.
    நிறைய தெரிந்து கொண்டோம். கற்றும் கொண்டோம் சார்.. நன்றி!

    ReplyDelete

  40. @ துளசிதரன்
    நீண்ட பின்னூட்டத்துக்கு நன்றி. நான் முக்கியமாய்க் கருதும் வாசகர்களுக்கு என் பதிவுகளை அஞ்சலில் அனுப்புகிறேன் நீங்கள் சொல்லி இருப்பது போல் இது ஒரு சுய பரிசீலனையே. என்னை மறக்காமல் இருக்கும் அளவுக்கு நான் முக்கியமானவன் அல்லவே. என் பதிவுகளைத் தொடர்ந்து பலரும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சாமானியன் நான்

    ReplyDelete