Saturday, June 6, 2015

என்றாவது ஒரு நாள் ---என் கருத்துரை


                     என்றாவது ஒரு நாள்.......என் கருத்துரை

                  -------------------------------------------------------------



என்றாவது ஒரு நாள்  சிறுகதைத் தொகுப்பு. 
இதுவரை எந்த நூலுக்கும் கருத்துரையோ விமரிசனமோ எழுதி இராத எனக்கு
ஆஸ்திரேலியாவில் வாசம் செய்யும் “ விமர்சன வித்தகி கீதா மதிவாணனின் மொழிபெயர்ப்புச் சிறு கதைத் தொகுப்புக்கு கருத்துரை வழங்குவது முள்ளின் மேல் நடப்பது போன்றது. சிறுகதைகளின் நீள அகல ஆழங்களில் கைதேர்ந்தவரின் நூலுக்கு சற்று கவனத்துடனேயே கருத்துரை எழுதுகிறேன் பிரபல ஆஸ்திரேலிய எழுத்தாளரின் கதைகளை திருமதி கீதா மதிவாணன் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். மொழிபெயர்ப்பு செய்யும் போது சாதகங்களும் இருக்கிறது பாதகங்களும் இருக்கிறது.கதைகளின் கருப்பொருளுக்கு  இவர் பொறுப்பல்ல.சொல்லப்படும்விதத்துக்குமிவர் பொறுப்பல்ல ஆனால் பலதரப்பட்டவிதத்தில் எழுதப்பட்ட உபயோகிக்கப்பட்ட  மொழியை ஆங்கிலம்தானென்றாலும்  உள்வாங்கி அதை மொழிமாற்றம் செய்வது கடினமான காரியமே, அதை திருமதி கீதா மதிவாணன் செவ்வனே செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும் ஏனென்றால் கதைகளைப் படித்துச் செல்லும் போது கொடுக்கப்பட்ட விவரணைகளிலும் கதையின் கருத்தோடு ஒன்றும் போதும்  கவனங்கள் சிதறுகிறது. அந்த விவரிப்புகளை உள்வாங்கும்போது இடம் பொருள் ஏவல் பற்றிய சிந்தனைகளில்கற்பனை செய்யும் மனம் அலை பாய்கிறது.அதையும் மீறி ரசிக்க ஒன்றுக்கு இருமுறை வாசிக்க வேண்டி உள்ளது.அதறகு கீதா மதிவாணன் எப்படி பொறுப்பாவார் .?
 இங்கிலாந்திலிருந்து குடி பெயர்க்கப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை ஆதாரங்களையும் வாழ்வு முறைகளையும் மனித சுபாவங்களையும் சொல்லிப் போகின்றன கதைகள், ஆசாபாசங்கள் மனிதருக்கு எங்கிருந்தாலும் ஒருபோல்தான் என்று தெளிவாக்கிச் செல்கின்றன இக்கதைகள் மேற்கத்தியவரின் வாழ்க்கை முறையை கற்றுத் தெரிந்து கொண்ட நமக்கு பல கதை மாந்தர்கள் நம்மில் சிலரைப் போல் இருப்பது புதிதாய் இருக்கிறது
முதல் சிறுகதை மந்தையோட்டியின் மனைவி என்னும் சிறு கதையைப் படிக்கும் போது நான் என் பதிவில் என் அனுபவங்களை ஓ பாம்பு என்னும் பதிவாக எழுதி இருந்தது நினைவிலாடியது.அதில் என் வீட்டில் பாம்பென்று நினைத்து இரவெல்லாம் கண்விழித்து காலையில் வெளியே தலை காட்டிய ஜந்துவை நாங்கள் அடித்துக் கொன்று விட்டோம் . பிறகு பார்த்தால் அது ஒரு அரணை ..!  மரக் கம்பங்களாலும் பலகையாலும் கட்டப் பட்டிருந்த வீட்டுக்குள் பாம்பு ஒன்று நுழைய  அதை அடித்துக் கொல்வதுதான் கதை என்றாலும் கூடவே அவர்களது வாழ்க்கை முறைகளையும் சொல்லிச் சென்றது சிறப்பு
மந்தை ஓட்டிச் சென்ற கணவன் இல்லாத நேரத்தில்குழந்தைகளுடன் இருக்கும் ஒரு தாயின் பரிதவிப்பு நன்றாகவே சொல்லப் பட்டிருக்கிறது
அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய்தான் இருளில் தனியே செல்லும் போது பின்புறமிருந்து எழும் ஒலி காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்ட ஒரு சீனத்தவனின் ஆவி என்று பயந்து நடுங்கியதும் காலையில் தன் தொப்பியிலிருந்து  கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த நாடாக்கள் காற்றில் அசையும் போது எழுப்பிய ஒலி என்று தெரிந்து கொள்வதும் அசல் திகில்தான் என்னவோ தெரியவில்லை. இந்தக் கதையும் நான் எழுதி இருந்த அரண்டவன் கண்ணுக்கு  என்னும் பதிவை நினைவு படுத்தியதைக் கூறாமல் இருக்க முடியவில்லை.
பணியிலிருந்து களைத்து வரும் கணவன் எப்போதும் தொண தொணக்கும்மனைவி, அனுசரணை உள்ள குழந்தைகள் ஒவ்வொருவர் மனநிலை. ஏனோ நம் கிராமத்துக் கதை ஒன்றுபோல் தோன்றுகிறதுஒற்றைச் சக்கர வண்டிநம்பிக்கையோடு அடுத்த ஆண்டின் துவக்கம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்
எந்தக் குழுவிலும் ஒரு அசட்டு மனிதன் இருக்கலாம் அவனைப் பலரும் கலாய்க்கலாம் அவனுக்கும் ஆசாபாசம் பந்தம் எல்லாம் உண்டு என்று சொல்லிப்போகும் கதை மலாக்கி.அவன் இறக்கும் நிலையில்தான் அவன் தாய் பற்றியும் கண்தெரியாத தம்பி பற்றியும் தெரிகிறது மனதை கனக்க வைத்தகதை.
ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம் ஒருதலைக்காதல் வீண்வம்புக்கு அலையும் மனிதர்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம் எல்லாக் கதைகள் பற்றிச் சொல்லி விட்டால் வாசிக்கும் போது புதுமையான உணர்வு கிடைக்காது சிறுகதைத் தொகுப்பின் பெயர் தாங்கி வரும் என்றாவது ஒரு நாள் சிறுகதைப் பற்றியும் சொல்ல வேண்டும். ஒரு அழகில்லாத ஆண்மகன் தாழ்வுமனப்பான்மையால் தான் காதலிக்கும் பெண்ணின் மனம் தெரியாமல் வெளியூர் போகும் சமயம் தன்னை வழி அனுப்ப வந்தவளுக்குத் தன் மேல் காதல் இருப்பது தெரிந்தும் வெளியூர் செல்வதைத் தடுக்க முடியாமல் என்றாவது ஒரு நாள் ஒன்று சேரலாம் என்னும் நம்பிக்கையே வாழ்வாகக் கதை போகிறது
நிறைகளை மட்டுமே சொன்னால் விமரிசனம் ஆகாது. இம்மாதிரிக் கதைகளை மொழி மாற்றம் செய்வதால் படிக்கும் நமக்கு ஏதோஅந்நியத்தனம் தெரிகிறது. அவை அந்நியக் கதைகள்தானே. இருந்தாலும் கதையின்கருத்தை உள்வாங்கி தமிழில் மொழி பெயர்க்காமல் மொழியாக்கம் செய்திருந்தால் ஒரு நேடிவிடியும் இருந்திருக்கும் என்பது என் கருத்து. புத்தகத்தின் பின் அட்டையின் நிறமும்  எழுத்துக்களும் படிக்க மிகவும் சிரமம் தருகிறது. என்ன செய்ய முடியும்.?அந்நிய மண்ணில் இருந்து கொண்டு பதிப்புகளை செக் செய்து குறை நிறைகளை கண்டறிவதும் சிரமம்தான்   .   



            
.
    


.  



27 comments:

  1. தங்களது நூல் விமர்சனத்தைக் கண்டேன். இயல்பான பதிவாக உள்ளது. பாத்திரங்களின் அறிமுகம், கதையின் போக்கு என்ற நிலையில் நூலைப்படிப்பதைப் போல உள்ளது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நல்ல விமர்சனம்.

    இந்த படைப்புகளை அவர் தளத்தில் வாசித்திருக்கிறேன்.

    ReplyDelete
  3. நல்ல விமர்சனம்.

    இந்த படைப்புகளை அவர் தளத்தில் வாசித்திருக்கிறேன்.

    ReplyDelete
  4. கீதா மதிவாணனின் மொழிபெயர்ப்புக் கதைகளை வாசித்தது இல்லை. என்றாலும் முதலில் சொல்லப்பட்ட மந்தைக் கதையை ஆங்கிலத்தில் எப்போதோ படித்த நினைவு இருக்கிறது. கடைசியில் சொல்லப்பட்ட அழகற்ற ஆணின் கதை தான், "பேரழகன்" (?) என்னும் பெயரோடு சூர்யா நடித்துத் திரைப்படமாக வந்தது என எண்ணுகிறேன். திரைப்படத்தை எடுக்கும்போது நம்மவர்கள் தான் காப்பி அடிப்பதில் தேர்ந்தவர்களாயிற்றே! :))))))

    ReplyDelete

  5. அருமையானதொரு விமர்சனம் ஐயா நகர்த்திய விதம் அழகு.

    ReplyDelete
  6. விமர்சனம் இயற்கையாக இருக்கிறது.

    ஒரு கருத்து. பத்தி பிரிக்கும்போது இன்னும் ஒரு வரி இடைவெளி விட்டால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  7. இதுவரை எந்த நூலுக்கும் கருத்துரையோ விமர்சனமோ எழுதியிராத தாங்கள் என்னுடைய இந்த என்றாவது ஒருநாள் என்னும் மொழிபெயர்ப்பு நூலுக்கு கருத்துரை எழுதியிருப்பது மிகவும் மகிச்சி தருகிறது. கண்ணில் சிலகாலமாய் பிரச்சனை ஏற்பட்டு வாசிக்க சிரமப்படும் நிலையிலும் புத்தகத்தை முழுமையாய் வாசித்து உடனடியாக கருத்துரையும் எழுதியிருப்பதை என் பாக்கியமாகவே கருதுகிறேன்.

    சிறுகதைகளின் நீள அகல ஆழங்களில் கைதேர்ந்தவர் என்று தாங்கள் என்னைக் குறிப்பிட்டிருப்பது கொஞ்சமல்ல.. மிகையான மிகை எனினும் தங்கள் பெருந்தன்மையான கருத்துக்கும் கணிப்புக்கும் மனம் நிறைந்த நன்றி.

    இந்தக் கதைகளை மொழிபெயர்க்குமுன் அந்தக் காலகட்டத்திய வாழ்க்கை பற்றி நிறைய புரிதல் தேவைப்பட்டது. பல கதைகள் மற்றும் கட்டுரைகள் மூலம் அப்புரிதல் ஓரளவு சாத்தியமானது. ஆனால் களம் பற்றிய புரிதல் இல்லாத வாசகர்களுக்கு இக்கதைகளைப் புரிந்துகொள்வது கடினம்தான். சரியான புரிதல் உண்டாக நேரடி மொழிபெயர்ப்பை விடவும் கதைக்கருவை உள்வாங்கி என்னுடைய பாணியில் தமிழாக்கம் செய்திருந்தால் எளிதாக இருந்திருக்கும் என்ற தங்கள் கருத்து ஏற்புடையது. ஆனால் மூல ஆசிரியரின் எழுத்தாற்றல் என்னை வியப்பில் ஆழ்த்தியதால் அந்த எழுத்தை அப்படியே தமிழுக்கு இடமாற்றம் செய்வதே மூல ஆசிரியருக்கு செய்யும் மரியாதை என்று நினைத்ததால் நேரடி மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுத்தேன்.

    மொழிபெயர்ப்பின் நோக்கம் மூல ஆசிரியர் மீதான என் அபிமானத்தைப் பறைச்சாற்றலும், முற்றிலும் காதுகேளாத, வாழ்க்கையில் தொடர்ச்சியாய்ப் பல தோல்விகளையும் துயரங்களையும் சந்தித்த ஒரு மனிதரின் படைப்புகள் எனக்குள் ஏற்படுத்திய அதிர்வுகளை வாசகர்க்கு உணர்த்துவதும், ஆஸ்திரேலிய மண்ணில் ஆரம்பகால வந்தேறிகளின் வாழ்க்கைமுறையையும் அம்மாந்தர்தம் குணாதிசயங்களையும் அழகாகவும் நேர்த்தியாகவும் அவர் புனைந்திருக்கும் விதம் பற்றிய என் ஆச்சர்யத்தை அனைவருடனும் பகிர்ந்துகொள்வதுமாகும். அந்த வகையில் தங்களுடைய இக்கருத்துரை (அ) விமர்சனம் எனக்குப் பெருநிறைவு தருவதாய் அமைந்துள்ளது. மிகவும் நன்றி ஐயா.

    ReplyDelete
  8. Dr B Jambulingam ஐயா, ஸ்ரீராம், கீதா மேடம், கில்லர்ஜி, பழனி.கந்தசாமி ஐயா கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
    @ கீதா மேடம்.. இந்தக் கதை பேரழகனிடமிருந்து சற்று மாறுபட்டது. வாழ்க்கைப் போராட்டம் கடைசிவரை தொடரும் துர்பாக்கியசாலி பற்றியது. தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete

  9. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    @ ஸ்ரீராம்
    @ கீதா சாம்பசிவம்
    @ கில்லர்ஜி
    @ டாக்டர் கந்தசாமி
    இவர்களுக்கு பதிவர் என்னும் முறையில் நான் நன்றி கூறுகிறேன் திருமதி கீதா மதிவாணனுக்கு என் உள்ளார்ந்த கருத்தைத் தெரியப் படுத்தவே மொழிபெயர்ப்பு பற்றி எழுதி இருந்தேன்

    ReplyDelete

  10. @ கீத மஞ்சரி
    என் கருத்துக்களை மிகவும் ஸ்போர்டிங் ஆக எடுத்துக் கொண்டு உங்கள் எண்ணங்களையும் தெரியப் படுத்தியதற்கு நன்றி பல சிறுகதைகள் அடங்கிய தொகுப்பில் எந்தக் கதைப்பற்றி எழுத எதை விட என்னும்போராட்டத்துக்குப் பின் மனதில் தோன்றியபடி எழுதினேன். வார்த்தை ஜாலங்கள் எல்லாம் செய்யத் தெரியவில்லை. எழுதத் தெரியாதவன் எழுதுகோல் எடுத்துவிட்டால் அவன் குறைகளும் பொருட்படுத்தப் படக் கூடாது நன்றி மேடம்

    ReplyDelete
  11. திருமதி கீதா மதிவாணன் அவர்களின் மொழி பெயர்ப்பு நூலை அருமையாய் திறனாய்வு செய்திருக்கிறீர்கள். அதை படிக்கும் ஆவலை தூண்டியிருக்கிறீர்கள் என்பது நிஜம்.

    ReplyDelete
  12. 'என்றாவது ஒரு நாள்' என்ற நூல் என் கைவசம் இருப்பினும், நேரமின்மையால், மொழிபெயர்ப்பாளர் குறிப்பு + நன்றி அறிவிப்பு என, முதல் 14 பக்கங்களையும் மட்டுமே இதுவரை என்னால் ரஸித்து ருசித்துப் படிக்க முடிந்துள்ளது.

    எதையுமே நான் முற்றிலுமாக மனதில் வாங்கிக்கொண்டு, முழுவதுமாகப் படித்து, அது என் மனதில் ஏறினால் மட்டுமே, அடுத்த பக்கத்தினை புரட்டும் பழக்கமுள்ள ஆசாமி நான். அதனால் மட்டுமே படிக்க தாமதமாகிறது. அதிலுள்ள கதைகள் எதையும் இன்னும் நான் படிக்கவே ஆரம்பிக்கவில்லை.

    தங்களின் நூல் விமர்சனத்தை இங்கு கண்டதும் ‘என்றாவது ஒரு நாள்’ முழுவதுமாக இதற்கெனவே ஒதுக்கி ‘என்றாவது ஒரு நாள்’ நூலினில் உள்ள கதைகள் அனைத்தையும் படிக்க ஆரம்பித்து விடவேண்டும் என ஓர் எழுச்சி ஏற்பட்டுள்ளது.

    பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
  13. நல்ல விமர்சனம்.

    ReplyDelete

  14. @ வே.நடனசபாபதி
    திறனாய்வு செய்யத் திறமை வேண்டும். நான் செய்தது படித்தபின் எனக்குள் உதித்த எண்ணங்களைப்பதிவு செய்ததே. வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  15. @ கோபு சார்
    கீதா மதிவாணன் நூல் கருத்துரை வெகு நாட்களுக்குப் பின் உங்களை என் பதிவுப் பக்கம் இழுத்து வந்தது மகிழ்ச்சி தருகிறது. விமரிசனம் எழுதுவதில் துறை போனவர் அவர், விமரிசனங்களையே விமரிசிக்க வைக்கும் திறனாளர் நீங்கள். இரட்டை மகிழ்ச்சி எனக்கு. நன்றி கோபு சார்,

    ReplyDelete

  16. @ எம்.கே.முருகாநந்தம்
    உங்கள்முதல் (?) வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  17. வெகு இயல்பான
    யதார்த்தமான விமர்சனம் ஐயா
    நன்றி

    ReplyDelete
  18. இதுவரை எந்த நூலுக்கும் கருத்துரையோ, விமர்சனம் எழுதியிராத தாங்கள் என்றாவது ஒரு நாள் மொழிபெயர்ப்பு நூலுக்கு எழுதியிருப்பதே ஆசிரியர் கீதா மதிவாணனுக்குப் பெருமை சேர்க்கும் விஷயம் தான். இத்தொகுப்பில் எனக்குப் பிடித்த கதைகளையே நீங்களும் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறீர்கள். சிறப்பான கருத்துரை!

    ReplyDelete

  19. @ கரந்தை ஜெயக்குமார்
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  20. @ கலையரசி ஜி.
    இதுவரை என் பதிவுகள் எதற்கும் வருகை தந்து கருத்திடாத உங்களைஇதற்கு பின்னூட்டமிட வைத்த கீதா மதிவாணனின் என்றாவது ஒரு நாளுக்கு நன்றி.

    ReplyDelete
  21. ஒளிவு மறைவு இல்லாத விமர்சனம் ஐயா...

    ReplyDelete

  22. @ திண்டுக்கல் தனபாலன்
    தவறாகப் புரிந்து கொள்ளாமல் இருந்தால்சரிதான் டிடி. வருகைக்கு நன்றி

    ReplyDelete

  23. @ புதுவை வேலு
    என் பதிவைப் படித்துக் கருத்திட்டபின் உங்கள் பதிவுக்கு அழைத்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது

    ReplyDelete
  24. கீதாவின் மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் பலவற்றை வாசித்திருக்கிறேன். வாசிக்கும் ஆவலைத் தருகிறது தங்கள் மதிப்புரை. நன்றி.

    ReplyDelete
  25. இங்கு விமர்சனத்தை வாசித்து ஊக்கம் தரும் கருத்துகளையும் வாழ்த்துகளையும் வழங்கிய நட்புகள் அனைவருக்கும் அன்பான நன்றி.

    ReplyDelete
  26. உங்கள் விமர்சனம்ன், திருமதி கீதாமதிவாணன் அவர்களின் பின்னூட்டமும் அந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்ற ஒரு ஆவலை ஏற்படுத்தி உள்ளது. ஓரிருமுறைதான் அவர்களின் தளம் சென்றதுண்டுன். நேரம் தான் பிரச்சனையாக உள்ளது. இனியேனும் அவரது தளத்திற்குச் செல்ல வேண்டும். நல்ல தளங்களை விட்டுவிடக் கூடாது என்பதால்...மிக்க நன்றி!

    ReplyDelete

  27. @ துளசிதரன் தில்லையகத்து
    எனக்கு என்னவோ நான் எழுதிய மதிப்புரை இன்னும் பாசிடிவ் ஆக இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. என்னை ஓரளவு நன்கு அறிந்த நண்பர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன் கீதா மதிவாணன் ஒரு அருமையான எழுத்தாளர். அவர் சொந்தக் கற்பனை இன்னும் வலு சேர்த்திருக்கும் என்று தோன்றியதே காரணம் அவரது தளத்துக்குச் செல்லுங்கள் ஏமாற்ற மாட்டார். வருகைக்கு நன்றி.

    ReplyDelete