Saturday, September 5, 2015

கிருஷ்ணாயணம் மற்றும் கேசாதி பாதம்


         கிருஷ்ணாயணம்  மற்றும் கேசாதிபாதம்
          -----------------------------------------------------------
இன்று ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி. அதை முன்னிட்டுக் கண்ணன் கதை.






பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன்
நிலமடந்தைத் துயர் துடைக்க வேண்டி
தேவர் புடை சூழ வந்த பிரம்மனிடம்
வல் அரக்கர் உயிர் எடுத்துக் குறை போக்க
யாதவ குலத்துதித்து ஆவன செய்ய
உறுதியளிக்கச் சென்றவர் மனம் தெளிந்து நின்றனர்.

     சூரசேனன் மகன் வசுதேவனுக்குத் தன் சகோதரி
     தேவகியை மணம் முடித்த மதுரா மன்னன் கம்சன்
     அவர்களைத் தேரிலேற்றிச் செல்கையில்,
     அவர்களுக்குப் பிறக்கும் எட்டாம் குழந்தை அவனைக்
     கொல்லும் என்ற அசரீரி சொல் கேட்டு ஆத்திரமடைந்து
     சகோதரியைக் கொல்லத் துணிந்தவனை,வசுதேவன்
     பெற்றெடுத்த குழந்தையைப் பெற்றவுடன் தர வாக்களிக்க
     அவர்களைக் காராக்கிரக சிறையில் அடைத்தான்.


எட்டாம் குழந்தையாய் வந்துதித்த திருமால்
கிரீடம் ,கைவளை, முத்துமாலையுடன் சங்கு சக்கர
கதாயுத பாணியாய்,தாமரை மலருடன் நீல நிற மேனியனாய்,
பெற்றோருக்குக் காட்சி தந்து ,கோகுலத்தில் நந்தகோபன்
மகளாய்ப் பிறந்திருக்கும் மாயையுடன் தன்னை இடமாற்றம்
செய்யக் கூறிப் பின் மானுடக் குழந்தையாய் மாறினான்.

     மாலவன் உதித்ததும்,காவலரும் மற்றவரும் கண்ணயர,
     பூட்டிய கதவு தானாய்த் திறக்க,வசுதேவன் தன்மகனைத்
     தலையிலேந்திக் கோகுலம் செல்ல ,ஆதிசேஷன் குடை
     விரிக்க, யமுனா நதி வழி விட்டு விலக ,நந்தகோபன்
     இல்லம் சென்றடைந்த வசுதேவன் ,அங்கிருந்த மாயையைக்
      கையிலெடுத்து, தன் மகன் மாதவனை விட்டு வந்தான்.

மாலவன் இடத்திற்கு மாயை வந்தவுடன்,
காவலர் கண்விழித்து கம்சனுக்குச் சேதி சொல்ல,
முன் பிறந்த குழந்தைகளை கொன்றவன்,பின்
பிறந்த குழவி பெண்ணென்றும் பாராமல், உயிரெடுக்க
மேல் வீசி வாள் வீச, உயரே சென்ற மாயாதேவி
தன் உருக்காட்டி எச்சரித்தாள் அவனைக் கொல்ல
இருப்பவன் இருக்குமிடம் வேறு என்று.


       தன் உயிர் எடுக்க வந்தவன் உயிர் குடிக்க
       பிரலம்பன்,பகன்,பூதனை போன்றோரை ஏவிய
       கம்சன் ஆணையை நிறைவேற்றக் கண்ணில் கண்ட
       குழந்தைகளைக் கொன்று குவித்த கொடியோரில் பூதனை
       அழகுருக்கொண்டு, இடைச்சிகளை ஏய்த்து மார்கொடுத்து
       விஷப்பால் கொடுத்துக் கொல்லவர,குழந்தைத் திருமால்
       மார் உறிஞ்சி அவள் உயிரெடுக்க வெட்டுப்பட்ட
       மரம்போல், வீழ்ந்து பட்டாள் அக்கொடிய அரக்கி.

அன்றொரு நாள்,அன்னை யசோதா சிறார்கள் மத்தியில்
அவனைக் கிடத்தி உள்ளே செல்ல, அருகிருந்த வண்டி
தானே நகர்ந்து மீதேறவர, கால் தூக்கி எட்டி விட
விழுந்த சகடாசுரன்(சகடம்=வண்டி)உடல் கண்டு
அனைவரும் திகைத்ததும், பிறிதொரு நாள் உடல் பாரம்
தாங்காது கீழே கிடத்தப்பட்ட பரம்பொருளை சுழல் காற்றின்
வடிவினனான திருணாவர்த்தன், புழுதிப் படலத்தால்
கண்மறைத்து மேலே தூக்கிச் செல்லப் பின் முடியாது
கீழேவிட முயல,அதுவும் முடியாமல் , பாரம் தாங்காது
பாறை மீது தான் விழுந்து உயிர் துறந்ததும் குட்டிக்
கண்ணனின் திரு விளையாடல்களில் சிலவே.

      யதுகுல ஆசிரியன்,கர்க்கமுனிவன்,ஜோதிடத்தில் வல்லவன்
      அளவிலடங்கா ஆயிரம் நாமங்கள் கொண்டவனுக்கு
      அழைக்க ஓர் நாமம்”கிருஷ்ணா”என்றே ஓதி, அது ”ஸத்”
      மற்றும் “ஆனந்தம்”ஆகியவை,உருவங்களுடன் கூடியும்,
      உலகப் பாவங்களை போக்கும் தன்மையையும்
      உரைப்பது என்றும் விளக்கம் கூறினான்.



பிள்ளைப் பிராயத்தில் மண் உண்ட கண்ணன் வாயில்
சிறிதே மண் காண எண்ணிய தாய் யசோதா,விண்ணுடன்
நீரும் நிலமும்,அண்ட அகிலமும் கண்டே மயங்கியதும்
மீண்டும் பின் மாயையால் கட்டுண்டு,வெண்ணெய் திருடிய
முகுந்தனை உரலில் கட்ட, அன்புக்குக் கட்டுப்பட்டவன் ,
கட்டிய உரலுடன் நகர்ந்து, நாரதன் சபிக்க மருத மரங்களாய்
நின்றிருந்த குபேர புதல்வர்”நளகூபரன்”  “,மணிக்கிரிவன் “
இடைபுகுந்து, சாபவிமோசனம் அளித்ததும் திரு விளையாடலே

      நிமித்தங்கள் சரியில்லை யெனக் கருதி கோகுலம் விட்டு
      இடையர்கள் புடைசூழ, பிருந்தாவனம் ஏகிக் குழலூதிக்
      கன்று மேய்த்திருந்த கண்ணனை, அதனுருவில் கொல்லவந்த
      வத்ஸாசுரனை வதைத்ததும், மலையனைய இறக்கைவிரித்து
      வந்த பகாசுரனைஅவன் அலகு பிளந்து கொன்றதும், மலைப்
      பாம்பொன்றுஏதும் அறியா இடைச்சிறாரை விழுங்க, அகாசுரன்
      அவன் என்றறிந்து அவனுள்ளே ஹரியும் போய் மேனி
      பெரிதாக்கி, அவனைப் பிளந்து அனைவரையும் காத்ததும்
      கமலக் கண்ணனின் லீலைகளன்றோ.


மாயையைப் பயன்படுத்திஆயர்குலச் சிறார்களையும்
கன்றுகளையும் காணாமல் போக்கியது, பிரம்மதேவன்
செயலென்றறிந்து,பரம்பொருளே இடைச் சிறுவராய்
கன்றுகளாய் உருவெடுத்து எங்கும் நீக்கமற நிறைந்து நிற்க,
மறைந்ததே யாரும் அறியாமல் காலமும் செல்ல
நான்முகன் மாயையை விலக்க, மறந்தது எது வந்தது எது
எனப் பிரித்தறிய முடியாமல் மயங்கி நிற்க, ,கணக்கிலா
நாராயண வடிவங்கள் கண்டு அவனே மாயையில் மூழ்கி
அறிவினை இழக்க, கண்ணன் மட்டும் அவனாகவே வந்த
போது, செருக்கொழிந்து பிரமன் துதித்து நின்றான்.

      தேனுவைக் (பசுக்களை) காப்பவன் தேனாசுரனைக் கொல்வது
      முறையாகாது என்றெண்ணி,அண்ணன் பலராமன் மூலம்
      கழுதை உருவிலிருந்த தேனாசுரனைக் கொல்வித்து,அவன்
      உடன் வந்த நரிக்(ஜம்புக)கூட்டத்தை அழிக்கத் துவங்க,
      அதையறிந்த வருணன் தானும் கலங்கி,தன் பெயர் (ஜம்புகன்)
      வேதத்தில் மட்டும் ஒலிக்கக் கேட்குமாறு செய்தானாம்.!

சௌபரி முனிவன் யமுனையில் பேணிக்காத்த மீன்களை
உண்டதால் சாபம் பெற்ற கருடன் வர இயலாத நதியில்
பாம்பரசன் காளியன் குடியிருந்து நீரை நஞ்சாக்க ,
நீருண்ட இடையரும் கோக்கூட்டமும் உயிர் துறக்க,
அவர்களை உயிர்ப்பித்து,காளியனை அவன் தலைமேல்
நடனமாடி வென்று, பின் கொன்று அருள் செய்து
திரும்புகையில் ,கானகத் தீயைப் பருகி மஞசள் மேனியனாய்
ஒளிர்ந்ததும், பிரலம்பாசுரனை தன்னுடன் விளையாட்டில்
பங்கேற்க வைத்துப் பின் பலராமனால் அவனைக்
கொல்வித்ததும் அவதார லீலைகளில் சிலவாம்.



      கோவிந்தன் குழல் கேட்டு மெய்மறந்த கோபியர்கள்
      அவன்பால் மையலுற்றனரா,தன்வசம் இழந்தனரா,அவனுடன்
       இணைய விரும்பினரா,அடிமையாயினரா,எதுவாயிருப்பினும்
      அவன் முன்னே,அவனைக் கண்டே,காலங்கழிக்க நினைத்தவர்
      ஆற்றங்கரையில் குளித்திருந்தோர் ஆடையெடுத்து அவனும்
      அலைக்கழிக்க, தம்மை மறந்து கை குவித்து வேண்டியவருக்கு
      அருள் புரிந்து ஆட்கொண்டவனும் கிருஷ்ணனே.

மழை கொடுக்கும் இந்திரனுக்கு வேள்வி ஏன்,
மரம் நிறைந்த மலைக்கன்றோ பலி கொடுக்க வேண்டும்
எனக் கூறிய கோபாலன்பால் கோபமுற்ற இந்திரன்,
பெருமழையுடன் இடியும் கூட்டிஇ டர் கொடுக்கக் கோவர்தன
 மலையைத் தூக்கி இடையரின் இடர் துடைத்துக் காத்த
 கண்ணன் முன் செறுக்கழிந்து நின்றான் தேவர்கோன்.

        கோகுலத்தில் கண்ணன் எனவே நாரதன் கூறக்
        கேட்ட கம்சன் வில்வேள்விகளில் பங்கு பெற
        கோவிந்தனை அழைத்துவர அக்ரூரனையனுப்ப அவனும்
        பரம்பொருளிடம் பக்தியால் கட்டுண்டு சேதி சொன்னான்.


அண்ணனுடன் கண்ணனும் மதுராபுரி சென்று
கோட்டை வாயிலில் தனை எதிர்த்த கரியின்
தந்தமதனை அடியுடன் பிடுங்கி,அதன் உயிரெடுத்துப்பின்
மற்போரில் சாணூரனுக்கும் முடிவெடுத்து மோட்சமளிக்க
நாளும் அனவரதமும் அவனையே அசரீரி சொல் கேட்ட
நாள்முதல் நினைத்திருந்த கம்சன் கோபமுற்று வாள்வீச
அசரீரி சொல்லை மெய்ப்பித்தான் கிருஷ்ணன்.

      கம்சனைக் கொன்ற கண்ணன் துவாரகையில் ஆண்டது
      ருக்குமணியைக் கவர்ந்து மணந்தது,பாரதப் போரில்
      பாண்டவருக்கு உதவியது, கீதோபதேசம் செய்தது என்றும்,
      அவதார நோக்கின்படிவதம் செய்த அரக்கர் பட்டியல்
      அவன் மணம்புரிந்தோர் கதைகளும் நிறையவே இருப்பினும்
      பிறக்கும்போதே தான் ஒரு அவதாரபுருஷன் என்றறிந்த
      கிருஷ்ணாயணத்தில் சொல்லியது குறைவு, சொல்ல
      ஏலாதது ஏராளம் இருந்தும் இத்துடன் நிறைவு செய்கிறேன்.


கேட்ட கதைகளைப் பல சமயம் படித்துமகிழ்கிறோம் அல்லவா. அதேபோல் கண்ணன் கதை திகட்டாதது. அவன் கதை எழுதினால் போதுமா. அவனைக் கேசாதி பாதம் கண்டு மகிழ வேண்டாமா. ஆகவே


கேசாதிபாதம் 


கண்டேன் நான் கண்ணனை

கார்மேக வண்ணனைக்
குருவாயூர் கோவில் நடையில்
 

கருநிறம் சுருட்டைமுடி
ரத்தினம் பதித்த தலையணி
மயில் பீலி செருக
வெண்ணிறப் பிறை நெற்றி ,
மேல்நோக்கி இடப் பெற்ற
குறியுடன் முடியும்
நெற்றியும் கண்ணாரக்
( கண்டேன் நான் கண்ணனை )
விபுவே.!அசைகின்ற புருவங்கள்
அடியில் அருள்தரும் உன் கண்கள்
ஒளிவீசி என் அகம் குளிர்விக்கக்
( கண்டேன் நான் கண்ணனை )
எடுப்பான நாசி கண்ணாடிக் கன்னங்கள்
சுடரிடும் மகர குண்டலங்கள்  அசைந்தாட,
ஒளிவீசும் முத்துப் பற்கள் செவ்விதழ்களின்
நடுவே பளீரிடப் புன்னகைக்கும் உன் முகம்
( கண்டேன் நான் கண்ணனை )
இரத்தினம் பதித்தக் கை வளைக் குலுங்க
செந்தளிர் விரல்கள் மீட்ட
வேணுகானம் காற்றில் தவழ
நாத கீதந்தனில் எனை மறந்து
( கண்டேன் நான் கண்ணனை )
மென் கழுத்தில் மணிமாலைகள்
மலர்மாலைகள் தொங்க
நிற மாலைகளில் வண்டினம் வந்தாடக்
( கண்டேன் நான் கண்ணனை )

சந்தண மணம் பரப்பும் உன்
திருமேனியில் உலகமே  ஒன்றியிருந்தும்
மெல்லிடையோய் பொன்னிறப் பட்டாடையுடன்
கதிர் பரப்பும் மணி அரைஞாணின்
சலங்கைகள் சல சலக்கக் கண்டு
நீலவண்ணக் கண்ணா எனை மறந்து
( கண்டேன் நான் கண்ணனை )

அழகு தொடை இரண்டும் பருத்தவை
அழகுடன் உறுதியும் கலந்தவை
மனம் மயக்கும் கலங்கடிக்கும்
எனவே பட்டாடை மறைத்தனவோ
காணும் கணுக்கால்பிடித்து வணங்கக்
( கண்டேன் நான் கண்ணனை )
உன் கழலடி தொழலே இன்பம்
அறியாமையில் மூழ்கியவர்களை
மந்தார மலையை உயர்த்தும் ஆமைக்கு
ஒப்பாக உள்ளது உன் நுனிக்கால்
அடைக்கல மடைந்த  என் அறியாமை
துன்பங்கள் களைய வேண்டியே
( கண்டேன் நான் கண்ணனை )
குருவாயூரின் தலைவனே அருட்கடலே
கிருஷ்ணா.! உன் உறுப்புகளில் திருவடிகளே
சிறந்தவை மோட்சம் தருபவை தலைவைத்து
பற்றவே வந்த எனைக் காத்தருளக்
( கண்டேன் நான் கண்ணனை.)
 
 

28 comments:

  1. பெருமுயற்சி. அருமை.

    ReplyDelete
  2. கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. உங்கள் பதிவைப் படிக்கும்போது கிருஷ்ண பரமாத்மா எங்கள் இல்லம் வந்ததுபோன்ற உணர்வு. மிக அருமை.

    ReplyDelete

  4. அருமை ஐயா பதிவு பிரமாண்டமாகவும் இருந்தது தங்களுக்கு கோகுல லட்சுமி தின வாழ்த்துகள் மற்றும் ஆசிரியர் தின வாழ்த்துகள்

    ReplyDelete
  5. கண்ணனோடு ஐக்கியம் ஆகி இருக்கீங்க. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

  6. @ ஸ்ரீ ராம்
    சிறு வயதில் இருந்தே எனக்குக் கதை கேட்கப் பிடிக்கும் எழுத ஆரம்பித்தபோது இருக்கும் கதைகளைக் கோர்வைப் படுத்தி என் பாணியில் சொல்லலாம் என்பதன் முயற்சியே சாதாரணன் ராமாயணமும் கிருஷ்ணாயணமும். கதை யாருடையதானாலும் இது என் முயற்சி. பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete

  7. @ இராஜராஜேஸ்வரி
    வாழ்த்துக்கு நன்றி மேம்

    ReplyDelete

  8. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    எழுதும் போது எனக்கு அந்த உணர்வு வரவில்லை. கதையாகத்தான் எண்ணுகிறேன் அணுகினேன் . வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  9. @ கில்லர்ஜி
    ஆங்கிலத்தில் தீசிஸ் ரைட்டிங் என்பார்கள். இருப்பதைக் குறுக்கி எழுதுவது. இதை விட குறுக்க என்னால் முடியவில்லை. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  10. @ கீதா சாம்பசிவம்
    எனக்குக் கதைகள் பிடிக்கும் நம் முன்னோர்களின் கற்பனைத்திறன் கண்டு வியப்பதுண்டு. கேட்டகதையை சுருக்கி எழுதி இருக்கிறேன் எழுதும் எழுத்தில் ஐக்கியமானால்தானே எழுத்து சுவைக்கும் . வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete
  11. கண்ணன் கதை... வாசிக்கத் தந்தமைக்கு நன்றி ஐயா...
    இனிய கிருஷ்ண ஜெயந்தி, ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete

  12. கண்ணனின் திருவிளையாடல்களை கோகுலாஷ்டமியன்று கோர்வையாக கதை போல் சொல்லியிருப்பது அருமை. வாழ்த்துக்கள்!
    கேசாதிபாதம் மூலம் நானும் ‘கண்டேன் கண்ணனை”

    ReplyDelete
  13. அன்பும் ஆற்றலும் எங்கும் பொங்கிப் பெருகுவதாக..
    ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி நல்வாழ்த்துகள்..

    ReplyDelete

  14. @ பரிவை.சே குமார்
    கண்ணன் கதையில் பல சம்பவங்கள் அதிகம் பேசப்படாமலேயே போகிறது. முடிந்தவரை சம்பவங்களைக் கோர்த்து எழுதி இருக்கிறேன் வருகைக்கு நன்றி சார்/

    ReplyDelete

  15. @ வே நடன சபாபதி.
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா

    ReplyDelete

  16. @ துரை செல்வராஜு
    அன்பும் ஆற்றலும் அவரவரிடம்வாழ்த்துக்களுக்கு நன்றி சார்.

    ReplyDelete

  17. @ கரந்தை ஜெயக்குமார்
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  18. //கண்டேன் நான் கண்ணனை... //

    இறைவழிப்பாடு உள்ளத்தில் கோலோச்ச சகல வழிகளிலும் நம் முன்னோர்கள் முயற்சித்திருப்பதை நினைக்கப் பெருமையாக இருக்கிறது. அந்த சகல வழிகளில் ஒன்றும் காட்சியாய் கண்முன் தெரியும் உணர்வை ஏற்படுத்துவதுமான ஒன்று உருவ வழிபாடு கண்ணனின் கேசாதிபாத வர்ணிப்பில் உருவ வழிபாட்டின் உன்னதம் தெரிந்தது. 'கண்டேன் நான் கண்ணனை' என்ற அறுதியிட்டுச் சொல்லும் முதல்வரியே கண்ணனைக் காண வைத்த அற்புதத்தை எடுத்தோதுகிறது. 'எனைக் காத்தருள்க' என்னும் முடிப்பும் நெகிழ்ச்சியில் நனைகிறது.

    உங்கள் ஆற்றலுடனான முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

  19. @ ஜீவி
    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. வசிஷ்டர் வாயால்......என்பதுபோல் இருக்கிறது உங்கள் பின்னூட்டம் . மீண்டும் நன்றி.

    ReplyDelete

  20. @ ஜீவி
    இந்தப் பதிவு என்னைக் காதலியின் கேசாதிபாதம் எழுதுவதற்கும் உறுதுணையாய் இருந்திருக்கிறது என்றும் சொல்லக் கடமைப் பட்டுள்ளேன் சுட்டி தருகிறேன் படித்துப் பாருங்களேன்
    http://gmbat1649.blogspot.in/2013/05/blog-post_23.html

    ReplyDelete
  21. கிருஷ்ணன் கதையை வித்தியாசமான முறையில் சொன்ன விதம் அருமை கேசாதி பாத வர்ணனைக் கவிதை நல்ல படைப்பு ரசித்து படித்தேன்

    ReplyDelete
  22. கண்ணனின் கதை சம்பவங்களை ஒரு பூமாலை போல் நெருக்கமாய்த் தொடுத்திருக்கிறீர்கள். படிக்கபடிக்க மனக்காட்சிகளில் கதை விரிவடைந்து பூரணமான லயிப்பில் என்னை ஆழ்த்தி விட்டீர்கள் . அந்தப்பாடலும் கதையாடலுக்கு சுவை கூட்டிவிட்டது. மீண்டும் அசைபோட சேமித்துக் கொண்டேன்.

    இதில் வரும் சம்பவங்களை. சிறுசிறு பதிவுகளில், ஒரு பாடலும் நல்ல படத்தையும் சேர்த்து நீங்கள் பதிவிட்டால் உங்கள் பேர்சொல்லிக் கொண்டு கிடக்கும்.

    இந்த பொழுதுக்கு வளம்சேர்த்த உங்களுக்கு என்அன்பும் வணக்கமும் GMB சார்!

    ReplyDelete

  23. @ டி.என். முரளிதரன்
    வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார். சில நேரங்களில் இம்மாதிரி அமைவதுண்டு. பாராட்டுக்கு மீண்டும் நன்றி.

    ReplyDelete

  24. @ மோகன் ஜி
    அப்பாடா,,, மோகன் ஜியை என் பதிவுப் பக்கம் வரச் செய்து விட்டேன். கண்ணனின் கதைச் சம்பவங்களைக் கோர்க்க சிறிது சிரமப்பட்டேன் PRECIS WRITING என்று சொல்லலாமா. இதேபோல் ராமாயண ஆறு காண்டங்களை ஒரே வாக்கியத்தில் எழுதி இருக்கிறேன் சுட்டி தருகிறேன் ரசிப்பீர்கள் என்று நினைக்கிறேன்
    http://gmbat1649.blogspot.in/2011/06/blog-post_11.html
    வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  25. அணுவினுள் அண்டம் புகுத்த முயற்சிப்பது மாதிரிதான் ஒரு பதிவி கிருஷ்ணரை பற்றி சொல்வது...

    ReplyDelete
    Replies
    1. அவரவர் மனதுக்குப்பிடித்தமாதிரி கூறலாம் அணுவும் இல்லை அண்டமும் இல்லை எல்லாமே கற்பனைதான்

      Delete
  26. மீண்டும் படித்து ரசித்தேன் ஐயா.

    ReplyDelete