Thursday, July 21, 2022

நான் யார்...4

 

        அரக்கோணத்தில் நாங்கள் இருந்தது சுமார் நான்கு வருடங்கள். வாழ்க்கையின் சுமைகளோ அர்த்தங்களோ தெரியாமல் வாழ்ந்த வாழ்க்கை. ஆனால் அந்த நாட்களை நான் உலகத்தை மெள்ளக் கற்க ஆரம்பித்த காலமாகவே கருதுகிறேன்.சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பும் சுதந்திரம் கிடைத்த பிறகுமாக அந்தக் காலம் இருந்தது. கடைக்குப் போவது பள்ளிக்குப் போவது, விளையாடுவது என்றே கழிந்த காலம். சுதந்திர உணர்வோடு பள்ளிகளில் காந்தியின் நூல் நூற்பு, மற்றும் சிறிய கைத்தொழில் செய்ய முனைப்பு போன்ற திட்டங்கள் அமலில் இருந்தன. தக்ளியில் நூல் நூற்கும் வகுப்பு இருந்தது. பனை ஓலை கொண்டு பாய் முடைவது கற்றுக் கொடுக்கப்பட்டது. என் தாயாரின் ஒரு பிரசவத்தின் போது, அவர்கள் அங்கு வலியில் இருக்க நான் வீட்டில் பாய் முடைவதில் மும்முரமாய் இருந்ததற்கு கண்டிக்கப்பட்டிருக்கிறேன். சாயங்காலம் முழுவதும் விளையாட்டு, விளையாட்டுதான். சடுகுடு விளையாட்டு நினைவாகவே உறங்குவேன். யாராவது எழுப்பினால் “பலீஞ்சடுகுடுஎன்று விளையாட ஆரம்பித்து விடுவேன். இதன் கூடவே கோலி, பம்பரம் ,பேந்தா போன்ற ஆட்டங்களும் உண்டு. அரக்கோணம் ரெயில்வே தொழிற்சாலையில் பணிபுரியும் ஒருவர், எங்கள் வீட்டில் உதவியாளராக இருந்தவர் (பெயர் நினைவில்லை )தொழிற்சாலையில் இருந்து நல்ல மரத்தில் பம்பரம் கடைந்து கொடுப்பார். சுவால்பேட்டை தாசில்தார் தெருவில் இருந்தபோது அருகே ரெயில்வே தண்ட வாளங்கள் இருக்கும். அதன் மேல் ரயில் வருமுன்புசோடா மூடியை வைத்துத் தட்டையாக்கி, அதில் இரு துளைகள் செய்து நூல் கோத்து, இழுத்துப்பிடித்துச் சுற்றி விஷ்ணுவின் சக்கரம் என்று நினைத்து விளையாடுவோம். காற்றாடி செய்வதும் விடுவதும் கற்றோம். ஆனால் மாஞ்சா தேய்க்கமட்டும் பயம். இவற்றை எல்லாம் நினைவு கூறும்போது, தற்காலக் குழந்தைகள் இந்த நாட்டு விளையாட்டுகளைக் கற்கவோ அனுபவிக்கவோ முடியாமல் இருக்கிறார்களே என்ற ஆதங்கமும் கூடுகிறது. கில்லி தாண்டு, பச்சைக் குதிரை ஏற்றம், அப்பப்பா......அந்தக் கால விளையாட்டுகளே சுவாரசியம்.

 

 

                 உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு வந்து எல்லாப் பொருட்களையும் ரேஷனில்தான் வாங்க வேண்டிய கட்டாயம் இருந்தது. விலைவாசி ஒரேயடியாகத் திடீரென்று அதிகரித்தது. அரிசி ஒரு படி ரு ரூபாய் என்று (ஒருபடி சுமார் 2-/கே.ஜி. இருக்கலாம் )விற்ற போது எல்லோரும்கவலைப் பட்டு விவாதித்துக் கொண்டது நினைவுக்கு வருகிறது. சினிமாப் படங்கள் வர ஆரம்பித்து பெரிய பொழுது போக்காக மாற ஆரம்பித்திருந்த காலம்.சிவகவி, காத்தவராயன், ஆர்யமாலா,ஸ்ரீவள்ளி,நாம் இருவர், ஹரிதாஸ் போன்ற ஏராமான படங்களைப் பார்த்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம்.தியாகராஜ பாகவதர், ஹொன்னப்பா பாகவதர், பி.யு. சின்னப்பா, என்.எஸ் கிருஷ்ணன், டி.ஏ. மதுரம், டி.ஆர். மஹாலிங்கம் போன்றவர்கள் எங்களுடைய சிறு வயது காலத்திலேயே பிரபலமானவர்கள். தியாகராஜ பாகவதரும், என்.எஸ்கிருஷ்ணனும் லக்‌ஷ்மி காந்தன் கொலை வழக்கில் சிக்கிக் கொள்ள, அந்த வழக்கு விசாரணையைப் பார்ப்பதற்கு, ஒருமுறை அப்பா அரக்கோணத்திலிருந்து மெட்ராஸுக்குச் சென்றதும் நினைவிலாடுகிறது. அப்பாவின் ஆசைகள் எண்ணங்கள் என்னவெல்லாம் இருந்திருக்கும் என்று இப்போது யூகிக்க முடிவதில்லை. ஒரு கதாநாயகனாக, வில்லனாக, வெறும் சாதாரண மனிதனாக என்று பல முகங்கள் இருந்திருக்க வேண்டும். பலப்பல நிகழ்ச்சிகள் பலப்பல விதமாக அவரை சித்தரிக்கின்றன. அரக்கோணத்தில் ஒரு வீட்டில் ஒரு முருங்கை மரம் இருந்தது, அதில் காய்கள் காய்த்துத் தொங்கும். ஒருமுறை அதன் காய்களைப் பறிக்க ஒருவன் வந்து முயன்றிருக்கிறான். அப்பா அவனைத் தடுத்திருக்கிறார். அவன் வீட்டு உடைமையாளரின் சொந்தக்காரன் என்று சொல்லி விடா முயற்சியாகக் காய்களைப் பறிக்க, அப்பாவுக்கும் அவனுக்கும் கைகலப்புமுற்றி, அவனைக் கீழே தள்ளி ஓட வைத்தார். அப்பொது அப்பா எனக்கு, ஒரு சிறுவனுக்கு ,ஒரு கதாநாயகன் போல் தோற்றமளித்தார்.உறவுகளின் பேச்சை மீறி, தன் வீட்டில் வேலையில் இருந்த பெண்ணிடம் மையல் கொண்டு, எல்லா எதிர்ப்பினூடே, அவளை மணந்தது, என் சிறிய தாய்க்கு அவரை ஒரு கதாநாயகனாகக் காட்டியிருக்கலாம். அதே செய்கை, என் தாய் மாமன், தாய்வழி தாத்தா பாட்டி மற்றுமுள்ளோருக்கு ஒரு வில்லன் போல் தோற்ற மளிக்கச் செய்திருக்கலாம். நான் சற்றே வளரும் நிலையில் எனக்கு ஒரு நண்பன் போல் தோற்றமளிக்கதுவங்கிய நாட்கள் அதிகமில்லாமல், அவர் அகால மரணமடைந்தது, அவரைப் பற்றிப் பூரணமாக அறியும் சந்தர்ப்பங்களை இழக்க வைத்தது. ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் சுகம் துக்கம் என்று மாறி மாறி வருவது இயற்கை. ஆனால் எனக்குத் தெரிந்தவரை, அவர் வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்த நாட்கள் மிகவும்குறைவாகவே இருந்திருக்கும்.பிறந்து வளர்ந்த சூழ்நிலைகள் குறித்த நிகழ்வுகள் எங்கள் வாழ்க்கையில் அவரால் பதிவு செய்யப்படவில்லை. அவர் முதலில் மணந்த என் தாயுடனான வாழ்க்கைப் பற்றி என் தாய் மாமன் டாக்டர் சேஷன் பிற்காலத்தில் சில நிகழ்வுகளைக் கூறுவார். அவை அனைத்தும் அவரை ஒரு அசடனாகவே பிரதிபலிக்கும். முதல் மணவாழ்க்கையில் ஆறு பேரைப் பெற்றெடுத்த என் தாயுடன் வாழ்ந்த வாழ்க்கையில் அவர் என் தாய் வழி உறவினர்களால் என்றைக்கும் உதவப் பட்டு வந்தவர் என்றும். தன்னால் எதுவும் சாதிக்கத் தெரியாதவர் என்றும் சித்தரிக்கப்பட்டிருந்தார்.எது எப்படி இருந்தாலும் தான் எண்ணியதை நடத்திக் காட்டும் திறமை சாலி என்பது, அவர் என் அத்தையை, என் மாமனுக்கு மணமுடித்ததிலும், என் மாற்றாந்தாயை மாமனார் மாமியார் மற்றுமுள்ளோர் எண்ணங்களுக்குத் துணைபோகாமல் மணந்ததிலும் காட்டியிருக்கிறார்.

 

 

      அரக்கோணத்தில் ஒரு நாள் அவருடைய நண்பர் ஒருவரை எங்கள் வீட்டிற்கு வரவழைத்து, உபசரித்து, அவரைப் பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்தார். அந்த நண்பர் பாடிய அந்தப் பாட்டு “ தாயே யசோதா “இப்போதும் எனக்கு பசுமையாக நினைவில் வருகிறது. என்.எஸ். கிருஷ்ணன் மேல் அவருக்குத் தனி அபிமானம். யார் என்ன சொன்னாலும் அது ஜோக் ஆகாது. ஆனால் என்.எஸ்.கிருஷ்ணன் பேசினாலே ஜோக்தான் என்று சொல்லி மகிழ்வார். என்.எஸ். கிருஷ்ணன் மேல் இருந்த அபிமானம்தானவரை அரக்கோணத்திலிருந்து மெட்ராஸுக்குச் சென்று லக்‌ஷ்மி காந்தன் கொலை வழக்கை நேரில் காணுமளவுக்குத் தூண்டியிருக்க வேண்டும்.

 

 

              அரக்கோணத்தில் எனக்கு ஒரு கதாநாயகனாகக் காட்சியளித்தவர் ஆச்சு அண்ணா. வீட்டிற்கு வேண்டிய எல்லா வேலைகளையும் ஒரு பெரிய மனுஷனாக இருந்து கவனமுடன் செய்வார்.அப்போது ரேஷன் முறை அமலில் இருந்தது.வெண்டிய பொருட்களை ரேனில்தான் வாங்க வேண்டும். அரிசிக்குப் பதில் கோதுமை சோளம் உபயோகிக்கத் துவங்கிய காலம்.அது.மக்காச்சோளத்தை உடைத்து அரைத்து ஒரு உப்புமா செய்வார்கள்,மாமி என்று நாங்கள் கூப்பிடும் குஞ்சுக்குட்டி அம்மாள் (மேமை )விரும்பி உண்ணுவோம். என்னைவிட ஐந்து வயது மூத்தவரான ஆச்சு அண்ணாரேஷன் கடைக்குப் போய் சாமான் வாங்கி வருவார்.என் தம்பி நடராஜனை சுமந்து கொண்டு ரெயில்வே ஆஸ்பத்திரிக்குச் செல்வார். என் தாய்க்கு மிகவும் உதவியாக இருப்பார். இப்படிப்பட்டவர் ஒரு முறை ஒரு தவறு செய்து விட்டு அப்பாவிடம் அடி வாங்கியதும் நினைவுக்கு வருகிறது. ஆச்சு அண்ணா ஒரு முறை விட்டிலிருந்து ரூபாய் 10-/( அந்தக்காலத்தில் அது ஒரு பெரிய தொகை )யாருக்கும் தெரியாமல் எடுத்து எங்கள் வீட்டு வேலையாள்முனுசாமியிடம் கொடுத்து வைத்து வேண்டிய போது கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிக் கொள்வாராம். இது தெரிய வந்தபோதுதான் அப்பாவிடம் அவர் அடி வாங்கினார். ஆச்சு அண்ணா அப்படிச் செய்தது யாராலும் நம்ப முடியாததாய் இருந்தது.ஆச்சு அண்ணா பேசும்போதும் சொல்லும்போதும் எல்லாமே நூறு சதவீதம் நம்பும்படியாகக் கூறுவார். அது அவருக்குக் கை வந்த கலை. எல்லோரையும் வசியமாக்கும் குணம். எது எப்படியிருந்தாலும் எல்லோரையும் நேசிக்குமன்பு. குறிப்பாகக் குழந்தைகளிடம் அவர் காட்டும் அன்பு சேட்டை எல்லாம் எனக்கு அவர் மேல் ஒரு மரியாதையைக் கொடுக்கிறது.

 

 

        அரக்கோணத்தில் என் தாய்க்கு டைஃபாய்ட் வந்து குணமாகும் நிலையில், எனக்கும் ராஜிக்கும் டைஃபாய்ட் வந்தது. ரெயில்வே ஆஸ்பதிரியிலிருந்து ஒரு டாக்டர் எங்கள் குடும்ப டாக்டராக வருவார். அவர் ஆலோசனையின்பேரில் நாங்கள் மெட்ராஸில் ராயப்பேட்டா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டோம். பாரா டைஃபாய்ட் பக்கா டைஃபாய்டாக மாறினால் அது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதால், இந்த ஏற்பாடு. சுமார் இரண்டு வார காலம் நாங்கள் ஆஸ்பத்திரியில் தனியாக இருந்தோம். எங்களைக் காண வரும் உறவினர்கள் எங்களின் நிலைக்குப் பரிதாபப் பட்டு எங்கள் தாய் தந்தையரைக் குறை கூறிச் செல்வார்கள்.அந்த வயதில் மற்றவர்கள் நம்மிடம் காட்டும் பரிவும் மொழிகளும் நம்மையறியாமல் நம்மிடம் பாதிப்பை ஏற்படுத்தி நம் சிந்தனைகள் பகுத்தறிந்து பார்க்க விடாது செய்து விடும். பிற்காலத்தில் எங்கள் தாய் எங்களிடம் பாரபட்சமாக நடந்ததற்குஇந்த சம்பவம் மேற்கோளாகக் காட்டப் பட்டது. எது எப்படி இருந்தாலும் தினமும் நர்ஸ் வந்து எங்களிடம் “ உறங்கினீங்களா, கொல்லைக்குப் போச்சுதா “என்று கேட்பதும் அவர்கள் சென்ற பிறகு நானும் ராஜியும் அதே மாதிரிப் பேசி மகிழ்ந்ததும் பசுமையாக நினைவில் வருகிறது.விரிப்பை மடிமேல் வைத்து சீப்பால் தலை வாரினால் நிறைய பேன்கள் வந்து விழும். அவற்றை நசுக்கிக் கொல்வதிலும் ஒரு ஆனந்தம்.

 

 

              அப்போது ஐந்தாம் வகுப்பு முடிந்து ஆறாம் வகுப்புக்குப் போயிருந்த (ஃபர்ஸ்ட் ஃபார்மென்பார்கள்.)நேரம்.உடல் நலக் குறைவால் பள்ளிக்கே செல்லவில்லை. அதற்குள் அப்பாவுக்குப் பேரிடியாக L.D.C. யாக பதவியிற்க்கம் செய்யப்பட்டு பூனாவுக்கு மாற்றல் உத்தரவும் வந்தது. என் தாயையும் குழந்தைகள் நடராஜன் பாபுவையும்குஞ்சுக்குட்டி அம்மாளுடன் ( மாமியுடன் ) பாலக்காட்டில் அவர்கள் வீட்டிலேயும், என்னையும் சோமாவையும் எங்கள் தந்தை வழி பாட்டி வீட்டில் கோவிந்தராஜபுரத்திலேயும்,ஆச்சு அண்ணா ராஜியை பெங்களூரில் எங்கள் தாய் வழிப்பாட்டி வீட்டிலேயும் தங்க வைத்து அவர் பூனாவுக்குச் சென்றார். சுமார் ஓராண்டு காலம் பாலக்காட்டில் தங்கினோம், அங்கு தமிழ் வழிக் கல்வி இல்லாததால் நானும் சோமாவும் ஓராண்டு காலம் வெட்டியாகக் கவலையில்லாமல் திரிந்து காலங் கடத்தினோம்.

 

 

       மேமையுடைய வீடு எங்கே இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது.அவர்களும் அக்கிரகாரத்துக்குள் பாட்டி வீட்டிற்கு வரவில்லையோ, வர முடியவில்லையோ தெரிய வில்லை. பாட்டி வீட்டில் பாட்டியின் கடைசிப் புதல்வர்கள் இருவர், விஸ்வநாதன் எனும் விச்சா, சதாசிவம் எனும் துரைஸ்வாமி (தொச்சாமி )               . யுடன் பெரிய அண்ணா வென்கடாசலம்  ஆகியவருடன் நாங்கள் இருவரும் சேர்ந்து கொண்டோம். பெரிய அண்ணா அங்குதான் படித்து முடித்தான். நாங்கள் அங்கு இருந்தபோது எங்களுடன் அவர் இருந்ததாக நினைவில்லை. எங்கிருந்தார் என்றும் நினைவில்லை. பாட்டிக்கு வரும்படி ஏதும் கிடையாது. பிள்ளைகள் ஏதாவது பணம் அனுப்பினால்தான் வாழ்க்கைச் சக்கரம் ஓடும். அப்பா மாதம் ரூபாய் 40-/ அனுப்புவார். அது தெரியும். பாட்டியுடைய மற்ற பிள்ளைகள் மெட்ராசிலிருந்து சித்தப்பா கிருஷ்ணமூர்த்தியும் ,வரதராஜனும் ( ராசு சித்தப்பா )எவ்வளவு அனுப்புவார்கள்,எப்போது அனுப்புவார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. அதாவது அவர்களிடமிருந்து எவ்வளவு பணம் எப்போது வரும் என்ற நிச்சயமில்லாத்தன்மை நிலவியது. நாங்கள் அங்கிருந்ததால் அப்பா பணம் அனுப்ப வேண்டிய கட்டாயமிருந்தது. பதவியிறக்கத்தால் சம்பளம் குறைவாக்கப்பட்ட நிலையில்,அவர் முன்று இடங்களில் குடும்பத்தைப் பராமரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவருக்குப் பூனாவிலும், அம்மாவுக்கு மேமை வீட்டிலும் எங்களுக்குப் பாட்டியின் வீட்டிலும் பணம் அனுப்ப வேண்டும். அவருக்குக் கிடைத்த சம்பளத்தில் ரூபாய் 40-/ என்பது கடினமான காரியம்தான். அந்தப் பணத்தில் ஆறேழு பேர் வாழ்வது என்பது அதைவிடக் கடினம். அந்தக் காலகட்ட வாழ்க்கையில் எங்களுக்கு எதுவுமே தெரியாது. இப்போது எண்ணிப்பார்த்தால் எல்லோரும் எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார்கள் , எவ்வளவு மன உளைச்சல் இருந்திருக்கும் என்பது புரிகிறது. மாச முதல் வாரத்தில் மணி ஆர்டரை எதிர்பார்க்கத் தொடங்குவார்கள். கால தாமதம் ஆகும் போது என் சித்தப்பாக்கள் எல்லோரையும் சபிப்பார்கள். தொச்சாமி சித்தப்பா அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை “எல்லாம் சவமடி அம்மா, “என்பது இப்போதும் கேட்கிறார்போல் இருக்கிறது. ஆனால் பாட்டி பாவம் பரம சாது. தலை மழித்த விதவைக் கோலத்தில், காலையில் எழுந்து குளித்துஜபங்கள் சொல்லி தன் வேலைகளைத் தானே செய்வார். “ ஐயனே, உம்முடைய அழகான பாதத்தை அர்ச்சித்திருப்பதும் நான் எப்போ.?_என்று பாடுவது என் மனதில் இன்றும் ரீங்கார மிடுகிறது. பாட்டிக்கு உறுதுணையாக எல்லாவற்றிலும் கூட இருந்து ஒத்தாசை செய்தது விச்சா சித்தப்பாதான். கோவிந்தராஜபுரம் கிராமம் அருகே கல்பாத்திப் புழை. (ஆறு )வரதராஜஸ்வாமி கோவில் கிராமத்தின் ஆரம்பத்தில் இருக்கும். அந்த அக்கிரகாரம் அந்தக் காலத்தில் எனக்கு ஏதோ பெரிய இடமாகத் தோன்றும். இந்தக் கால கட்டத்தில் போய்ப் பார்க்கும்போது (சுமார் இருநூறு மீட்டர் நீளம் இருக்கலாம் )எவ்வளவு பெரிய இடமாகத் தோன்றியது எவ்வளவு சிறியது என்று புரிகிறது. பெரியதும் சிறியதும் காலகட்டத்தின் உருவமே. சிறிய வயதுச் சிறுவன் எனக்கு எல்லாமே பெரிதாகத் தோன்றியது. இந்த காலத்துச் சிறுவர்களுக்கு அந்த மாதிரி எண்ணம் தோன்ற வாய்ப்பில்லை. ஏனென்றால் உலகத்தையே தங்களுடைய வரவேற்பறையில் காணும் வசதி பெற்றுள்ளதாக நாடும் விஞ்ஞானமும் வளர்ந்திருக்கிறது. கோவிந்தராஜபுரத்தில் இருந்த போது, நாட்களை வெட்டியாகவே, ஒரு உபயோகமுமில்லாமல் கழித்தது தெரிகிறது. கிராமங்களில் யாராவது ஒருவர் தெருவில் செல்கிறார் என்றால் யார், எதற்காக, எங்கிருந்து வருகிறார் என்றெல்லாம் அவர்களுக்கு அவசியம் தெரிந்தாக வேண்டும்.. இப்போதும் அப்படித்தானா என்று தெரியவில்லை.நாகரிகம் என்று நாம் கருதும் கலாச்சாரம்,மற்றவருடைய வாழ்க்கையில் அக்கரையின்மையைக் குறிக்கும் குறியீடாக மாறி வருகிறது. நகரங்களில் வசிக்கும் பலருக்கு அடுத்த வீட்டில் இருப்பது யாரென்றோ, அவர்களைப் பற்றிய விவரங்களோ தெரிவதில்லை. ஆனால் அந்தக் காலத்தில் கிராமங்களில் எல்லோருடைய ஜாதகங்களும் விரல் நுனியில் வைத்திருந்தனர்..எது சரி எது தவறு என்பது அவரவர் கடந்து வந்த பாதையைப் பொறுத்தது.

 

      கிராமத்தில் எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் இருந்தார். பெயர் தெரியவில்லை. ஆனால் எல்லோரும் அவரை உறுமன் என்றே குறிப்பிடுவார்கள். அவருடைய மனைவியையும் உறுமி என்றே குறிப்பிடுவர். அவர்களுடைய மகன் அவர்களை அடித்து ,உதைத்துப் பூட்டி வைத்திருப்பார்.எல்லோருடைய சொந்த விஷயங்களில் அக்கறை கொள்ளும் கிராம மக்களந்த அநியாயத்தைக் கண்டும் காணாமல் இருந்தது இப்போது எண்ணும்போது நிரடுகிறது. எங்களுடைய எதிர் வீட்டில் அம்பி என்றொருவர் இருந்தார்.அவர் சினிமாவில் நடித்த சில ஃபோட்டோக்களைப்பார்த்திருக்கிறோம். அவர் நடித்த சில படங்களையும் பார்த்த நினைவு. எங்களுடைய வீட்டின் இடப் புறத்தில் அப்பாவின் அத்தை மகனோ ,மகளோ( நினைவில்லை )அக்காளாம் என்பார்கள். கோவிலின் அருகே ரெஜிஸ்திரார் வீடு என்பார்கள். கிராமத்தின் கோடியை தாழத்தெரு என்பார்கள்.அங்கே ஒரு கிணறு தெருவின் நடுவே இருக்கும். அதன் அருகே என் தாய் வழி உறவினர் குடியிருந்தனர். இந்த நினைவெல்லாம் ,நான் இப்போது பாலக்காட்டுக்குப் போகும்போது எண்ணங்களாக மோதும். நான் பத்து வயது முதல்பதினோரு வயது வரை அங்கிருந்திருக்கலாம். ஒரு வருஷத்துக்கும் குறைவாகவே இருந்திருப்போம். கோவில் விசேஷங்களும், ஆற்றில் வெள்ளம் பொங்கி ஓடியதும், எங்கள் கிராமத்துத் தேர், மற்றும் கல்பாத்தித் தேர் போன்றவையும் மறக்க முடியாதவை. கிருஷ்ண ஜெயந்தி அன்று பிள்ளைகள் கிருஷ்ணன் மாதிரி உடையுடுத்தி, எல்லோருடைய வீட்டுக்கும் போய், ஸ்ரீஜெயந்தி பாலம், சிவராத்திரி பாலம் என்ற மாதிரிஏதோ கூறிக்கொண்டு, கையில் ஒரு கோலுடனும் பாத்திரத்துடனும் செல்வார்கள். ஒவ்வொரு வீட்டிலும் சிறிது எண்ணையோ, கோவணமோ கொடுப்பார்கள். இப்போதும் அது மாதிரி நடை பெறுகிறதா தெரிய வில்லை. ஊரில் சில பெரியவர்கள், முக்கியமாகப் பெண்மணிகள் காலையில் ஆற்றில் குளித்துவிட்டு, கோவிலில் கடவுளை வழிபட்டு, வீட்டுக்குத் திரும்புவார்கள். அப்போது “ மடியுடன்இருப்பதாகவும் அவர்களை யாரும் தொடக்கூடாது என்பதிலும் அக்கறையாக இருப்பார்கள். நாங்கள் சிறுவர்கள் வேண்டுமென்றே, தெரியாமல் தொடுவதுபோல், தொட்டுச் சீண்டுவோம். சிலர் எங்களைத் திட்டிக்கொண்டே மறுபடியும் குளிக்கச் செல்வது எங்களுக்கு உற்சாகம் கொடுக்கும். கோவிலுக்குச் சென்று பிரசாதம் வாங்குவதிலும், சிதறுத் தேங்காய் பொறுக்குவதிலும் அலாதி மகிழ்ச்சி.

 

      நாங்கள் கோவிந்தராஜபுரத்தில் இருந்த சமயம் வந்த தீபாவளி நன்றாக நினவுக்கு வருகிறது. அங்கு தீபாவளி அவ்வளவு விசேஷமில்லை. கேரளத்தில் தீபாவளியை விட விஷு அதிக விசேஷம். இருந்தாலும் கிராமத்தில் அக்கிரகாரத்தில் பிராமணர்கள் வசிப்பதாலும் தமிழ் மொழி தாய் மொழியாய் இருப்பவர்கள் தீபாவளி கொண்டாடுவார்கள். எங்கள் வீட்டில் புதுத் துணியோ, பட்டாசுகளோ வாங்க முடியாத நிலைமை. மறு நாள் தீபாவளி .நாங்கள் ஏக்கத்துடன் இருந்தோம். அப்போது எங்கள் தாய் மாமா ஓரிருவர், ( யாரென்று நினைவில்லை )எங்கள் வீட்டுக்கு வந்து எங்கள் நிலையைக் கண்டு பரிதாபப்பட்டு, தீபாவளிப் பட்டாசுக்காக ரூபாய் இரண்டு கொடுத்துச் சென்றனர். எங்களுக்கு அளவுக்கு மீறிய சந்தோஷம். கொஞ்சம் ஓலைப் பட்டாசு வாங்கினோம். கொஞ்சம் கந்தகப் பொடி வாங்கினோம். சிகரெட் பாக்கெட்டில் இருக்கும் ஜிகினாப் பேப்பரைத் தேடிப் பொறுக்கினோம். ஒரு துளையுள்ள சாவியை தேடி எடுத்தோம். பின் என்ன.?நாள் பூராவும் வெடிதான். கந்தகப் பொடியை சிகரெட் பேப்பரில் போட்டு சிறு உருண்டைகள் தயார் செய்து, அவற்றை சாவித்துளையில் போட்டு, அதனுள் ஒரு ஆணியைச் செருகி, ஆணியை அடித்தால் “டமார் “ வெடிதான்.

 

 

      
           அருகில் நூரணி என்ற கிராமத்தில் ஆண்டு தோறும் ஸாஸ்தாப்ப்ரீதி கொண்டாடுவார்கள்.எல்லோருக்கும் இலவச அன்னதானம். ஏழெட்டு வகைப் பாயசங்களுடன்நடக்கும் “ சத்தி “வெகு பிரசித்தம். இப்போதும் நடக்கிறதா தெரியவில்லை. மாதம் ஒரு முறை “ கல்லேக்குளங்கரை “பகவதி கோவிலில், எங்கள் வீட்டிலிருந்து வழிபாடு செய்வார்கள். விச்சா சித்தப்பா வழிபாடு முடிந்து, கொண்டுவரும் பிரசாதப் பாயசம், இப்போதும் இனிக்கிறது. காலையில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் மாடுகளை மேய்ச்சலுக்குக் கூட்டிச் செல்ல ஒருவர் வருவார். மேய்ச்சல் முடிந்து திரும்பவும் கொண்டு விடுவார். எங்கள் வீட்டில் நாங்கள் இருந்தபோது மாடு இருக்கவில்லை. வீட்டின் கடைசிப் பகுதியில் மலங்கழிக்க கக்கூஸ் இருக்கும். இரண்டு தொட்டிகள் வைத்திருப்பார்கள். அதை தினம் அகற்றுவதற்கு ஒருவர் வருவார். அவர் வருவதற்கு வீட்டின் பின் புறம் ஒரு சந்து இருக்கும். அவர் வரும்போது குரல் கொடுத்துக் கொண்டு வருவார்.அப்போது யாரும் இருக்க மாட்டார்கள். மலங்களை தொட்டியிலிருந்து வேறு ஒரு பெரிய தொட்டிக்கு மாற்றி, இந்தத் தொட்டியைக் கழுவி வைத்துச் செல்வார்கள்.மனித மலங்களை மனிதர் அள்ளும் அந்தக் கொடிய பழக்கம் இன்றும் அங்கு நிலவுகிறதா தெரிய வில்லை. தீண்டாமை, சாதிக்கொடுமை போன்றவற்றின் வெளிப்பாடுகள்தான் அவையென்பது இப்போது புரிகிறது.

 

 

      அண்மையில் சில முறை கிராமத்துக்கு சாந்தியுடன் சென்றிருந்தேன். கோவிந்தராஜபுரம் கோவிலருகே கல்பாத்திப்புழை காணச் சென்றிருந்தோம். ஆறு முற்றிலும் மாறியிருக்கிறது. என் சிறிய வயது நினைவுகளில் ஆறும் மணல் படுகையும் அழகாகத் தெரிந்த இடங்கள் இப்போது முற்றிலும் களையிழந்து காணப்படுகிறது. புதர்களும் செடிகளும் மண்டிக்கிடக்கிறது.ஆற்றில் நீர் அழுக்காய் சிறிதே ஓடுகிறது. ஆற்றின் குறுக்கே தடுப்புப்பாலம் போல் ஏதோ கட்டப் பட்டிருக்கிறது. மலம்புழா அணைக்கட்டு வந்த பிறகு ஏற்பட்ட மாற்றம் என்று கூறுகிறார்கள். எனக்கு என்னவோ அந்த இடம் சோபையை இழந்ததுபோல் தோன்றுகிறது.

 

 

       நாங்கள் கோவிந்தராஜபுரத்தில் இருந்தபோது, அருகிலிருந்த மணல் மந்தையில் அம்மாவைக் காணச் சென்றுவிடுவோம். முதலில் அவர்கள் இருந்த இடம் தெரியாமல் இருந்தது. தத்தை என்ற பெண், அரக்கோணத்தில் எங்கள் வீட்டில் வேலையாளாக இருந்த பெண், ஒருமுறை எதேச்சையாக எங்களைப் பார்க்க, நாங்கள் அம்மாவின் வீட்டை அவள் மூலம் தெரிந்து கொண்டு சென்றோம். பாட்டிக்கு நாங்கள் அங்கு போய் வருவது அவ்வளவாகப் பிடிக்காது. எங்களை எங்கள் தாயார் எப்படி நடத்துகிறார்கள்.,சரியாக சாப்பாடு போடுவாளா, எவ்வளவு தோசை சாப்பிடுவோம், என்பன மாதிரியானக் கேள்விகளாகக் கேட்பார்கள்.எங்களுக்கு எந்தக் குறையும் இல்லையென்று தெரிந்து கொள்வார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த பதில் அதுவல்ல என்பது அப்போதே எனக்குப்புரிந்தது.

        கிராமத்து வாழ்க்கையை இவ்வளவு சிறிய சாதாரண நிகழ்ச்சிகளையெல்லாம் நினைவு கூர்ந்து நான் எழுதுவது அவையெல்லாம் எனக்குப் பிற்கால வாழ்க்கையில் எவ்வளவு தூரம் பாதித்திருக்கும் என்பதை அசை போட்டுப் பார்ப்பதற்குத்தான். 1949-1950 காலகட்டத்துக்கும் இன்றைய காலகட்டத்துக்கும்தான் எவ்வளவு மாறுபாடு. நம் வாழ்க்கை முறை இருந்தவிதமும், இப்போது இருக்கும்விதமும், இடைப் பட்ட காலத்தின் மாற்றங்களைக் கண் கூடாகப் பார்த்த அனுபவங்களும் , உண்மையிலேயேஅந்தக் காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும் பாலமாக இருக்கும் பெருமிதமும் அடைகிறேன். எவ்வளவோ சிறிய நிகழ்ச்சிகள் சொல்லப்படாமல் விடுபட்டிருக்கலாம். சொல்லப் பட்டவையும் முக்கியமானதாக அல்லாமலும் இருக்கலாம். இருந்தாலும் அவை என்னை உருவாக்கிய அனுபவங்கள். ஒரு வழியாக கோவிந்தராஜபுர வாழ்க்கை, அப்பாவின் இடமாற்றத்தால் ( கோயமுத்தூருக்கு) முடிவுக்கு வந்தது.எங்களை அழைத்துப்போக மாட்டு வண்டியுடன் அப்பா வந்தார். அந்த வண்டியில் அம்மாவும் நடராஜன், பாபு இருவரும் இருந்தனர். என்னையும் சோமாவையும் ஏற்றிக் கொள்ள வீட்டு வாசலில் வண்டி வந்து நின்றது. தொச்சாமி சித்தப்பாவும் ,விச்சா சித்தப்பாவும் எங்களுடைய சிறிய பைகளை வண்டியில் ஏற்ற உதவிக் கொண்டிருந்தனர். நான் அப்போது தொச்சாமி சித்தப்பாவிடம் ,நாங்கள் போவதில் உங்களுக்கு மிகவும் சந்தோஷம்தானே “ என்று சற்று சத்தமாகவே கேட்டேன். அவர்கள் அப்போது அதனை எப்படி எதிர் கொண்டிருப்பார்கள் என்று இப்போது யோசித்துப் பார்த்தால் என் தவறு புரிகிறது. அதற்குப் பிறகு அவரை நான் ஐம்பது வருடங்களுக்கும் மேற்பட்ட பிறகுதான் பார்த்தேன். அவரும் அவருடைய மனைவியும் மகளும் குஜராத்திலிருந்து பெங்களூர் வந்திருந்தனர். அவரது மகளின் எல். டி. சி. மூலம் அது நிகழ்ந்தது. நானும்சாந்தியும் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்று பார்த்தோம். அவர்களுக்கு நேரமின்மையாலும் சித்திக்கு உடம்பு முடியாமல் இருந்ததாலும் அவர்களால் எங்கள் வீட்டுக்கு வர முடிய வில்லை. அவர்களுடன் புகைபடம் எடுத்துக் கொண்டோம். சிறிது நாள் கழித்து குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டபோது, பதறிப் போய் விசாரித்து, அவர்கள் நலமாக உள்ளனர் என்று தெரிந்து நிம்மதியடைந்தோம்.

 

 

             கோயமுத்தூரில் பழைய சுங்கம் ரெட் ஃபீல்ட்ஸ் அருகே அப்பாவுக்கு அலுவலகக் குடியிருப்பு கிடைத்தது. நாங்கள் வந்த சமயம் பள்ளிகள் எல்லாம் திறந்து ஓரிரு மாதங்கள் ஆகியிருந்தது. எனக்கு ஃபர்ஸ்ட் ஃபார்ம் என்கிற ஆறாம் வகுப்பு அரக்கோணத்தில் முடிக்க முடியாமல் போயிற்று. பாலக்காட்டில் கிட்டத்தட்ட ஒரு வருஷம் பள்ளிக்குப் போகாமலேயே கழிந்தது. நான் தொடர்ந்து படித்திருந்தால் தேர்ட் ஃபார்ம் என்கிற எட்டாம் வகுப்பில் இருந்திருக்க வேண்டும். சோமா ஆறாம் வகுப்பில் இருந்திருக்க வேண்டும். ராமனாதபுரம் முனிசிபல் ஹைஸ்கூலில் சேருவதற்குச் சென்றபோது தேர்வு நடத்தினார்கள்.மிகக்குறைந்த மதிப்பெண்களே வாங்க முடிந்து தோல்வியுற்றோம். எங்களுக்குப் பயில்விக்க ஆச்சு அண்ணா முனைப்புடன் இருந்தார். சி. ஏ. டி. கேட்; ஆர்.ஏ.டி. ரேட் என்கிற அளவில் ஆங்கிலமும், கூட்டல் கழித்தல் என்கிற அளவில் கணிதமும் எங்களுக்குப் பயில்விப்பார். முன்னால் சம்மணம் போட்டு அமர்ந்து கேட்கும் கேள்விகளுக்கு பதில் சரியாக வராவிட்டால், தொடையில் பலமாக அடி விழும். என்ன அடி வாங்கியும் தேர்வில் தேற முடியவில்லை. அப்போது எங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துப் பள்ளியில் சேர்க்கும் பொறுப்பை , ராமனாதபுரம் முனிசிபல் பள்ளியிலேயே ஆசிரியராக இருந்த ஜே.எஸ். வாத்தியாரிடம் அப்பா ஒப்படைத்தார். எங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க மாதம் ரூபாய் 25/-என்று முடிவாயிற்று. அவர் தினமும் வந்து ஒரு மணி நேரம் பாடம் சொல்லிக் கொடுப்பார். கர்ம சிரத்தையுடன் நாங்களும் படித்தோம். ஒரு மாத முடிவில், அவரே எங்களுக்குப் பரீட்சைக்கான கேள்விகளை தயாரித்து, பதிலையும் கொடுத்து, மனப்பாடம்செய்யச் சொல்லி இருந்தார். நாங்களும் தேர்வு எழுதி , தேறி பள்ளியில்     சேர்ந்தும் விட்டோம். அந்தக் காலத்தில் ரூபாய் 25/- என்பது கணிசமான தொகை.

அதைக் கையூட்டாகப் பெறாமல்,பாடம் சொல்லிக் கொடுக்கும் பணியில் எங்களைப் பள்ளியில் சேர்த்ததை இப்போது நினைத்துப் பார்க்கும்போது,கையூட்டுப் பெறுவதிலும் ஒரு கண்ணியம் இருந்ததும்,ஏதோ ஒரு வேலை வாங்கிய சம்பளம் வாங்கிய தோரணையும் தெரிய வருகிறது.ஆனால் இந்தக் காலத்தில் லஞ்சமாகப் பெரிய தொகை பெற்றாலும், அது ஏதோ அவர்களுடைய உரிமை என்பது போல்தோற்றம் தெரிய வருகிறது.அந்த ஆண்டு கால் இறுதியில் சற்றே தேர்வு பெற்று, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகளில் முதன்மை மாணவனாக வந்து தேர்வு பெற்றேன். மூக்கில்லா ராச்சியத்தில் அரை மூக்கன் ராஜா என்ற கதையாகவும் இருந்திருக்கலாம்.

 

 

        பள்ளிப் படிப்பு விஷயங்களை நினைவு கூறும் நேரத்தில் ஆச்சு அண்ணா

கோயமுத்தூர் வந்து சேர்ந்த விதத்தைப் பற்றியும் நினைவு வருகிறது. நாங்கள் பாலக்காட்டில் இருந்தபோது ஆச்சு அண்ணா பெங்களூரில் படித்து வந்தான்.அப்பாவுக்கு கோவைக்கு மாற்றல் ஆனதும் அந்த வருடப் படிப்பை, கோயமுத்தூரில் படிக்க, ஃபிஃப்த் ஃபார்ம் எனும் பத்தாம் வகுப்பில் சேர பெங்களூரில் இருந்து அனுப்பப்பட்டார்.அப்பா அண்ணாவை கோயமுத்தூரில் வழி தெரியாமல் தவித்த நிலையில் கண்டதாகக் கூறக் கேள்வி.ராஜியும் கோயமுத்தூர் வந்து சேர்ந்தாள். இந்தக் கால நினைவுகளில் அப்பா பூனாவுக்கு மாற்றலாகிப் போன நேரத்தில் என்னையும் சோமாவையும் பாலக்காட்டுப் பாட்டியிடம் விட்டதும், அம்மா தம்பிகளை மணல்மந்தையில் விட்டதும் நல்ல நினைவாகத் தெளிவாகத் தெரிகிறது.ஆச்சு அண்ணா, ராஜி, ஏன் வெங்கடாசலம் அண்ணாவும் எங்கு, எப்படி, ஏன் இருந்தார்களென்பதெல்லாம் தெளிவாக நினைவில்லை.ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாக நினைவுகள். எனக்கு ஞாபகம் இருப்பதெல்லாம்,மற்றவர்களுக்குத் தெளிவாகத் தெரிவதில்லை. அவ்வாறே அவர்கள் சம்பந்தப்பட்ட நினைவுகள் அவர்களுக்கு வேறு கோணங்களில் முக்கியமாகத் தெரிகிறது.அவரவருக்கு அவரவர் நினைவுகள். ஒரே காலத்தைப் பற்றிய நினைவுகள் ஒரேயிடத்தில் இருந்தவர்களுக்கே வெவ்வேறு விதமாக சிந்தனைக்கு வருகிறது.நிகழ்ச்சிகளின் விளைவுகள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாகப் பாதிக்கிறது. கூடிய வரையில் என் சம்பந்தப்பட்ட நினைவுகளை என்னுடைய அலை வரிசையிலேயே கூறுகிறேன்.ஏன் இவ்வாறு கூறுகிறேன் என்றால்நிகழ்ச்சிகளின் பாதிப்பு எல்லோரையும் ஒரே வித மாகத் தாக்குவதில்லை.அவரவர் குணாதிசயங்களுக்கு ஏற்ப பாதிப்பு ஏற்படுகிறது. சில சமயங்களில் சில நிகழ்ச்சிகளே சிலருடைய குணாதிசயங்களை உருவாக்கவும் செய்கிறது.

 

 

               கோயமுத்தூர் வாழ்க்கை,அப்பா பதவியிறக்கம் செய்யப்பட்டு மிகவும் நொடித்த நிலையில் ஆரம்பமான ஒன்று. அவருடைய எண்ணங்கள் செயல்கள் எல்லாமேமிகவும் பாதிப்படைந்திருந்த நேரம். நன்றாக வாழ்ந்து பழகிய வாழ்க்கை முறை,முற்றிலும் மாற்றப்பட வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளான நேரம். அப்பாவைப் பற்றிய நினைவுகள், அந்த கால கட்டத்து நினைவுகள் எதுவும் தெளிவாக இல்லை. ஏதோ பள்ளிக்குச் சென்றோம், படித்தோம் ,வாழ்ந்தோம் என்பது தவிர, அவருக்கு நேர்ந்த பாதிப்புகள் பற்றி நாங்கள் அதிகம் தெரிந்து கொண்டதாக நினைவில்லை. சோறும், கஞ்சியும் கருவேப்பிலைத் துவையலும், சுக்கா ரொட்டியும் எந்த மன உளைச்சலும் இல்லாமல் சாப்பிட்டிருக்கிறோம்.எங்களுக்கு வேண்டியது வயிறு நிறைய வேண்டும் என்பது மட்டும்தான். மாமி ( மேமை )எங்களோடு தங்க வில்லை. அவர் பாலக்காட்டிலேயே இருந்து விட்டார். மேலும் ஒரு ஜீவனுக்கு உணவு கொடுக்க தேவையில்லாமல் உதவினார்.

 

 

          கோயமுத்தூரில் பழைய சுங்கம் அருகே, ரெட் ஃபீல்ட்ஸ் அருகே அலுவலகக் குடியிருப்பில் இருந்தோம். அந்த காலகட்டத்தில் கிரிக்கட் விளையாட்டில் ஈடுபாடு ஏற்பட லாயிற்று. வீட்டின் பின் புறம் சாலைக்கு அந்தப் பக்கம் போலீஸ் குடியிருப்புகள் இருந்தன. பள்ளியில் என் வகுப்பு மாணவன் பத்மநாப மேனன் என்ற பையனும், விஜயன் என்ற அவனுடைய தம்பி சோமாவின் வகுப்பு மாணவனாகவும் இருந்தனர். பள்ளிக்கு, ராமனாதபுரம் முனிசிபல் ஹைஸ்கூலுக்கு நடந்து செல்வோம். சுமார் மூன்று கிலோமீட்டருக்கும் மேல் இருக்கும். பள்ளி விட்டுவரும்போது, பழைய சுங்கம் அருகே திறந்தவெளி. ஒரு மதில் சுவருக்கு அடுத்து இருக்கும். அங்கு கிரிக்கட் விளையாடுவோம். P.D.Alfred  என்னும் ஆலியும் ,என் வகுப்புத் தோழன், கூட விளையாட வருவான்.

வீட்டருகே மண்ணை வெட்டி, அங்கு ஹைஜம்ப், லாங் ஜம்ப் என்று ப்ராக்டிஸ் செய்வோம். இந்தியாவுடன் கிரிக்கட் விளையாட MCC  டீம் வரும்போது ரேடியோவில் காமெண்டரி கேட்க ஆலியின் வீட்டுக்குப் போவோம். அவன் வீட்டின் பெயர் BEE COTTAGE.தேனீ வளர்ப்பு தொட்டிகள் வைத்திருந்தனர். பிற்காலத்தில் மனோ கோயமுத்தூரில் வேலைக்குச் சென்றபோது,அந்தக் காலத்திய நினைவுகளுடன் அந்த இடங்களைப் பார்க்கச் சென்றிருந்தேன். எல்லாமே சுத்தமாக அடையாளம் தெரியாமல் மாறியிருந்தது. குடியிருப்புகள் இருந்த இடமெல்லாம் மாறியிருந்தன. ஆலியின் வீட்டைத் தேடிச் சென்றேன். சுமார் ஐம்பது வருடத்துக்கு முந்தைய நினைவுகள் துரத்த, பீ காட்டேஜ், அடையாளம் கண்டு அங்கு ஆலியைப் பற்றி விசாரித்தால், அவன் எங்கிருக்கிறான் என்று அவனுடைய உறவினர்களுக்கே தெரியவில்லை. உயிருடன் இருக்கிறானா என்றும் தெரியவில்லை என்றார்கள். ஐம்பதுவருடத்துக்குப் பிறகு அவனுடைய நண்பன் என்று சொல்லிச் சென்ற என்னை வினோதமாகப் பார்த்தார்கள். ஆலியைப் பற்றி எழுத வேண்டும். அதற்கு இன்னும் சற்று மேலே செல்ல வேண்டும். பள்ளியில் படித்தபோது எனக்கு ஆங்கிலத்தில் முதல் மார்க் வரும். அதனாலேயே என் வகுப்பு ஆசிரியர்களுக்கு என் மேல் தனிப் பிரியம். என்னை வகுப்பு லீடராகத் தேர்வு செய்ய விரும்பினார்.யார் நன்றாகப் படிக்கிறார்களோ, யார் சூட்டிகையாகவும் ,அமைதியாகவும் இருக்கிறார்களோஅவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று வகுப்பு மாணவ மாணவிகளுக்குச் சொல்லியிருந்தார்கள். ஏறக்குறைய எல்லா மாணவிகளும் எனக்கு ஓட்டுப் போட வகுப்பு லீடராகத் தேர்வு செய்யப் பட்டேன் (தொடரும்0) 


 


 

     

    





 

13 comments:

  1. அன்றும் இன்றும் நினைவலைகள் அருமை ஐயா...

    ReplyDelete
    Replies
    1. நினவுகளே வாழ்க்கை எனேறாகி விட்டது

      Delete
  2. அந்தக் கால விளையாட்டுகளை இன்றைய தலைமுறை அறிய மாட்டார்கள், ஏன் காது கொடுத்து கேட்டாலே பெரிய விசயம்...!

    ReplyDelete
  3. இளமைக்கால நினைவுகளை படிக்க படிக்க வியப்பு.
    அப்பாவை பற்றிய சிந்தனைகள் பகிர்வு அருமை.
    //

    தக்ளியில் நூல் நூற்கும் வகுப்பு இருந்தது// ,

    நான்காவது படிக்கும் போது எனக்கும் இருந்தது.
    என் அம்மா நன்றாக நூல் நூற்பார்கள்.

    பள்ளி பருவம், விளையாட்டு, உணவு உண்ட விதம் அதில் ஏற்பட்ட மன நிறைவு என்று பதிவில் நிறைய விஷயங்கள் பகிர்ந்து இருக்கிறீர்கள்.இளமைகால நினைவுகளை உங்கள் பிள்ளைகள், பேரக்குழந்தைகளிடம் பகிர்ந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அதரகுத்தனே எழுதுகிறேன்

      Delete
  4. பழைய நினைவுகள் எழுதும் ஆர்வத்தில் மிக நீளமாக எழுதி இருக்கிறீர்கள். நீங்கள் டைப் செய்கிறீர்களா? யாராவது உதவினார்களா?

    ReplyDelete
    Replies
    1. ஒரு விரல் கொண்டு தட்டச்சு ச்செய்வதுநானாகவெ

      Delete
    2. திரு ஏகாந்தனுக்குமதே பதில்,

      Delete
  5. எல் டி சியாக அனுப்பப்பட்டதற்கு அப்பா எதுவும் எதிர்ப்பு தெரிவித்து வழக்காட முயற்சிக்கவில்லையா?

    ReplyDelete
  6. எதையும் செய்ய பண்ம் வெண்டுமே அதுதான் இல்லாதது

    ReplyDelete
  7. அன்றைய நினைவுகள் அருமை.

    ReplyDelete