Saturday, September 24, 2022

வினாயகர் அகவல் ஒரு அரிய முயற்சி

 எத்தனையோ வருஷங்களுக்கு முன்னால் ஔவையாரால் எழுதப் பட்ட விநாயகர் அகவலில் வரும் இந்த வரிகள் பொருள் தெரிந்து சிந்திக்கத் தகுந்தது. முதலில் விநாயகப் பெருமானை வர்ணித்துப் பிறகு வேண்டுதல்களை வைக்கிறார்.

 

“........................................................................................................................

உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்

தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி,

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருணையின் இனிதெனக்கருளி

கருவிகள் ஒடுக்கும் கருத்தறிவித்து

இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து....

 

படிக்கும்போதே ஓரளவுக்குப் புரிகிறது.  இனி அவர் கேட்பது தெஇந்து கொள்வதே கடினம். அவரது ஒரு வார்த்தை புரிய என்னென்னவோ தெளிய வைக்கிறார்.

”......தலமொரு நான்குந் தந்தெனக் கருளி ...

 

நல்வினை தீவினை அதனால் ஏற்படும் மாய இருளை நீக்கி

சாலோகம்  சாயுஜ்யம் சாமீபம் சாரூபம்  என்னும் நான்கு தலங்களையும் எனக்குத் தந்து.....( இவையெல்லாம் எங்கிருக்கின்றன, அதன் நலங்கள் என்ன 

என்று இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன் )

 

மலமொரு மூன்றின் மயக்கமறுத்தே.

 

ஆணவம் கன்மம் மாயை எனும் மூன்று மலங்களினால் ஏற்படும் மயக்கத்தை இறுத்து

 

ஒன்பது வாசல் ஒரு மந்திரத்தால்

 ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி

 ஆறாதாரத்து அங்குச நிலையும்

 பேரா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே....

 

உடலில் இருக்கும் ஒன்பது துவாரங்களையும் ஐந்து புலன்களையும் ஒரே மந்திரத்தால் அடைக்கும் வழியினைக் காட்டி மூலாதாரம் , சுவாதிட்டானம், மணி பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்று ஆறு ஆதாரங்களில் நிறுத்தி

அதன் பயனாய் பேச்சிலா மோன நிலை அருளி ( குறிப்பிட்ட ஆறு ஆதாரங்களும் உடலின் பல்வேறு பாகங்களைக் குறிப்பது என்று எண்ணுகிறேன் )

 

இடை பிங்கலையின் எழுத்தறிவித்து

கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி

மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவிலுணர்த்தி

குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலாதாரத்து மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்த்றிவித்து

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையுங் கூறி 

 

இடகலை, பிங்கலை எனப்படும் இடது, வலது பக்க நாடிகளின் மூலம் உள்ளிழுக்கப்படும் காற்றானது நடு நாடியான சுழுமுனை வழியே கபாலத்தையடையும் மந்திர மார்க்கத்தைக் காட்டி, 1) அக்னி 2) சூரியன் 3)

சந்திரன் ஆகிய மூன்று மண்டலங்களின் தூண் போன்ற சுழுமுனையின் மூலம் நான்றெழு பாம்பான குண்டலனி சக்தியை எழுப்பி, அதனில் ஒலிக்கும் பேசா மந்திரமான அசபை மந்திரத்தை வெளிப்படையாகச் சொல்லி, மூலாதாரத்தில் மூண்டு எழுக்கூடிய அக்னியை மூச்சுக்காற்றினால் எழுப்பும் முறையை தெரிவித்து, குண்டலினி சக்தி உச்சியிலுள்ள சகஸ்ரதள சக்கரத்தை அடையும் போது உருவாகும் அமிர்தத்தின் நிலையையும் சூரிய நாடி, சந்திர நாடி ஆகியவற்றின் இயக்கத்தையும், குணத்தையும் கூறி,

 

இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடற்சக்கரத்தின் உறுப்பையுங் காட்டி

சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்

என் முகமாக இனிதெனக் கருளி

புரியட்ட காயம் புலப்படஎனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி

கருத்தினிற் கபால வாயில் காட்டி,

இருத்திமுத்தி இனிதெனக் கருளி

என்னை அறிவித்து எனக்கருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கிய எந்தன் சிந்தை தெளிவித்து

இருள்வெளி இரண்டுக்கும் என்றிடமென்ன

அருள்தரும் ஆனந்தத் தழுத்தி என் செவியில்

எல்லையில்லா ஆனந்தம் அளித்து

அல்லல் களைந்து அருள்வழி காட்டி,

சத்ததினுள்ளே சதாசிவம் காட்டி,

சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி,

அணுவிற்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி,

வேடமும் நீறும் விளங்க நிறுத்தி,

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி,

அஞ்சக் கருத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்து

தத்துவ நிலையைத் தந்தெனையாண்ட

வித்தக விநாயக விரை கழல் சரணே.

 

இடையிலிருக்கும் சக்கரத்தின் பதினாறு நிலையையும் உடலின் எல்லா சக்கரங்களின் அமைப்புகளையும் காட்டி உருவமான தூலமும் ,அருவமான சூட்சுகமும் எனக்கு எளிதில் புரியும்படி விளக்கி, மூலாதாரம் முதல் சகஸ்ர தளம் வரையிலான எட்டு நிலைகளையும் எனக்கு தெரிசனப்படுத்தி

எனக்குக் காட்டித்தந்து, சித்தி முத்திகளை இனிதாக எனக்கருளி, நான் யார் என்பதை எனக்குத் தெளிவித்து,பூர்வ ஜன்ம வினையை நீக்கி, சொல்லும் மனமும் இல்லாத பக்குவத்தை எனக்கருளி, அதன் மூலம் எண்ணங்களை தெளிவாக்கி ,இருள் ஒளி இரண்டுக்கும் அடிப்படை ஒன்றே என்பதை உணர்த்தி

அருள் நிறைந்த ஆனந்தத்தை என் காதுகளில் அழுத்தமாகக் கூறி, அளவில்லாத ஆனந்தம் தந்து துன்பங்கள் அகற்றி அருள்வழி எது எனக்காட்டி, உள்ளும் புறமும் சிவனைக்காட்டி, சிறியவற்றுக்கு சிறியது பெரியவற்றில் பெரியது எதுவோ அதை கணு முற்றி உள்ள கரும்பு போல எனக்குள் காட்டி , உண்மையான தொண்டர்களுடன் என்னைச் சேர்த்து ,அஞ்சக் கரத்தினுள்ள உண்மையான பொருளை என் மனதில் நிலை நிறுத்தி எனை ஆட்கொண்ட விநாயகப் பெருமானே உன் பாதார விந்தங்கள் சரணம்

 

அது சரி முதலில் நான் எழுதத் துவங்கியதற்கும் ஔவையின் அகவலுக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றலாம். எண்ணங்களை அடக்க வேண்டும் . எண்ணங்களே எல்லாவற்றுக்கும் காரணம் .எண்ணங்களை நிறுத்த முடியாது. ஆனால் அடக்க முயலலாம். மூலாதாரத்து மூண்டெழு கனலை ( அதுதான் குண்டலினி சக்தியோ ?)ஆறு ஆதாரங்களின் வழியே கொண்டுவந்து கபால வாயிலில் நிறுத்தி..... அப்பப்பா. எண்ணங்களை கட்டுக்குள் வைக்க என்னென்னவோ சொல்லிச் சென்றிருக்கிறாள் ஔவைப் பாட்டி. இதனை சுருக்கமாக தியானம் என்று சொல்லலாம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல.

உடற்கூறு பற்றி ஒரு பெரிய பாடமே அகவலில் இருக்கிறது. .

 

தலமொரு நான்கு, , மலமொரு மூன்று, ஆறாதாரம் , இட பிங்கலை, கழுமுனை , மூன்று மண்டலம், நான்றெழு பாம்பு,,குண்டலிதனிற் கூடிய அசபை, உடற்சக்கரம், சண்முக தூலம் சதுர்முக சூக்கம் .....இன்னபிற வார்த்தைகளுக்கு பொருள் முழுவதும் தெரிந்தது என்று சொல்ல முடியவில்லை. பல நூறாண்டுகளுக்கு முன்பே இதை எழுதி இருந்தார் என்றால் , எல்லாம் அறிந்ததன் பயனாய்த் தான் இருக்கும்.

 

எண்ணங்களை அடக்க வேண்டும் என்பதில் துவங்கி, அடக்க என்ன செய்ய வேண்டும் என்று ஆராய்ச்சி, ஔவையின் பாடலில் கொண்டு நிறுத்தி , எனக்குத் தெரிந்தது கடுகளவு தெரியாதது உலகளவு என்னும் முத்தாய்ப் புடன் முடிக்க வைக்கிறது. பதிவுலகின் ஜாம்பவான்கள், தமிழறிஞ்ர்கள்,பாடலின் கடின ( நமக்குத் தெரியாத ) பதங்களை விளக்கினால் பலரும் பயனடையலாம்.







 

8 comments:

  1. பூநிலாய ஐந்துமாய் புனற் கண் நின்ற நான்குமாய்
    தீநிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
    மீநிலாயது ஒன்றுமாகி வேறு வேறு தன்மையாய்
    நீநிலாய வண்ண நின்னை யார் நினைக்க வல்லரே

    திருச்சந்தவிருத்தத்தில் வரும் பத்துப் பாடல்களுக்குப் பொருள் விரிந்துகொண்டே போகும். தமிழரின் ஞானம் அளப்பரியது.

    ReplyDelete
  2. பொரு விள்ங்க வே ஏழுதியது

    ReplyDelete
  3. ஸ்பாமிற்கு போகும் கருத்துகளை எடுத்து வெளியே விடமாட்டேன் என்கிறீர்கள்...

    ReplyDelete
  4. இதுவா பாருங்கள் இன்னொரு கதையும் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தத் தண்ணீரை அருந்தினால் நீயும் அவனை அடையலாம் என்றதும் மனைவி மறுத்து விட்டாள்

    ReplyDelete
  5. விநாயகர் அகவலில் நீங்கள் சொல்லியிருப்பது போல் எண்ணங்களையும் புலன்களையும் அடக்கும் பயிற்சி என்று சொல்லியிருக்கிறார் ஔவைப்பாட்டி. அது நம்மைப் போன்ற சாதாரண மனிதர்க்கு அத்தனை எளிதல்லதான். மூச்சுப்பயிற்சி மற்றும் தியானம் இவற்றால் இதனை அடையலாம் என்றும் சொல்வதுண்டு. இதில் மூச்சுப்பயிற்சியினால் நன்மை உண்டு என்பது மனம் அமைதியுறும் என்பது உண்மை என்பதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். ஆனால் தொடர்ந்து செய்ய வேண்டுமே அங்குதான் பிரச்சனையே எழுகிறது.

    கீதா

    ReplyDelete