Saturday, June 25, 2011

..கதை...கட்டுரை.---பாகம் 1.

 கதை...கட்டுரை  (  சிறு  கதை. )        

           ஆங்கில எழுத்துக்களில் எழுதப் பட்ட மலையாள கடிதத்தின்
ஆரம்பம். சுமார் ஐம்பது  வருடங்களுக்கு முன்பு எழுதப் பட்டது. 

           பழைய கடிதங்களைப் பாதுகாத்து ,அதைப்படித்து, அந்தக் 
கடிதங்களின் பின்னணியை நினைத்து , அந்தப் பழைய வாழ்க்கையில்.
சில மணி நேரம்  வாழ்வது, வாசுவின் பொழுதுபோக்கு. இந்தக் கடிதம் 
எழுதிய தேவனைப் பார்க்க வேண்டும் போல் தோன்றியது வாசுவுக்கு. 
தேவனும் வாசுவும் பழகிய நாட்கள் என்னவோ கொஞ்சம்தான். இரண்டு 
மாதத்துக்கும் சற்று ஏறத்  தாழத்தான் இருக்கும். இருந்தாலும் அந்த 
நாட்கள் .....ஐம்பது வருடங்களுக்குப் பிறகு, இரண்டு மூன்று மாத நட்பை 
ஞாபக  படுத்திப் பார்க்க முடியுமா,? ஏன் முடியாமல்....?பழைய  கடிதங்களை 
பாதுகாத்து  வைத்திருக்கிறானே,...ஆனால் தேவனோ ....?


           பெங்களூரில் வேலைக்கு சேர்ந்த அந்த காலத்தில் தங்க நேர்ந்த அந்த 
லாட்ஜில்  த்ரீ  மஸ்கிடீர்ஸ்  என்று தங்களைத் தாங்களே கூறிக்கொண்டனர் 
வாசுவும் தேவனும் சந்துருவும்..இதில் சந்துரு எல்லோரையும் விட
மூத்தவன். ஏதோ கம்பனியில் குமாஸ்தாவாக இருந்தான். தேவன் வேலை தேடி கேரளத்திலிருந்து வந்தவன். வாசு அப்போதுதான் ஒரு தொழிலகத்தில் 
பயிற்சியில் சேர்ந்திருந்தான். மற்றவரைவிட  இளையவன்.

        "  இப்போது தேவன் என்ன செய்து கொண்டிருப்பான்..?எப்படி இருப்பான்.?
பார்க்க வேண்டும்போல்  தோன்றுகிறதே...." எண்ணியதை சொல்லில் கூறி 
செயலில் காட்டாவிட்டால் , வாசுவுக்கு தலை வெடித்து விடும் போல் 
தோன்றியது. 

          " இந்தப் பழைய குப்பைகளை எல்லாம் மாய்ந்து  மாய்ந்து  படிப்பதில் 
அப்படி என்ன சுகமோ.. " வாசுவின் மனைவி தங்கம் அவன் நினைவுகளைக் 
கலைத்தாள்

           " இந்தக் கடிதத்தைப் படித்துப் பாரேன் ,தங்கம். முடிகிறதா...புரிகிறதா .சொல் ".

          " உங்களுக்குத்தான்  வேறு வேலை இல்லையென்றால் .....சரி..சரி..
காட்டுங்கள். VINGHIP  POTTIYA....ஐயே   என்ன இது.  இங்கிலீஷில்  ஆனால் 
இங்கிலீஷுமல்லாமல் ...எனக்கு முடியவில்லையப்பா. ".

          "இங்கே  கொண்டா, நான் படித்துக் காட்டுகிறேன். . விங்கிப  பொட்டிய 
ஹிருதயமுமாய்  நிங்களை விட்டுப்  போரேண்டி வன்னதில் எனிக்கி 
கூடுதல்  விஷமிச்சு. ....தேவனுக்குத் தமிழ்  தெரியாது. ஆங்கிலத்தில் எழுத 
திறமை  இல்லை. எனக்கு மலையாளம்  கொறச்சு அறியும் .அதனால்தான் 
இந்த முறை.  தேவனைப் பார்க்க வேண்டும். போல் தோன்றுகிறது.தங்கம். 
அவன் இந்த விலாசத்தில் இருப்பானா..போய்ப் பார்க்கலாம் . நீயும் வாயேன்" 

        "அவ்வளவு தூரம் பணம் செலவு செய்து போய் அவர் அங்கே இல்லா 
விட்டால், எல்லாம் விரயமாகும். "

          " ஏன் விரயமாக வேண்டும்.?நமக்கும் பொழுது சற்று மாறுதலாகப் 
போகும். ஏற்பாடு செய்கிறேன் . ரெடியாக இரு."
  
          பெருங்கோட்டுக்கா  வழி திருச்சூர்  என்று விலாசமிருக்கிறது. 
எப்படியும் திருச்சூர் போய்  அங்கிருந்து விசாரித்துப் போய்க் கொள்ளலாம். .
திருச்சூருக்கு டிக்கட்  புக் செய்யவேண்டும், என்று எண்ணியவாரே  வாசு 
ரெயில்வே ஸ்டேஷனுக்குப் புறப்பட்டுச் சென்றார்..

        " நீளமாய கழுத்துள்ள  பெண்கள் சந்தமாண ,அறியோ வாசு "-தேவனின் 
குரல் இப்போதும் கேட்கிறது. 

        " வேலை தேடி  ஊர் விட்டு ஊர் வந்து, பெண்களோட கழுத்தைபற்றி 
ஆராய்ச்சி செய்யாதே. முதலில் வேலை."

        " ஆமாம், இவன் பேசற பாஷை யாருக்கும் புரியாது.இவனுக்கெல்லாம் 
எவன் வேலை கொடுப்பான்.?" சந்துருவுக்கு தேவன் சொல்லுவது புரியாத 
தால் வரும் கோபத்தில் சபிப்பான். 

         " அது எந்தா ,ஆரும பணி தரில்லே..? இன்னால் வேண்டா. சந்துரு 
எனிக்கி வேண்டி ஒன்னும் செய்யண்டா. ..ஞான்  எங்கனே யானங்கிலும் 
ஜீவிக்கும்."
            எப்படியாவது பிழைத்துக் கொள்வேன்  என்று சொன்ன தேவனுக்கு, 
அதை நிரூபிக்க வேண்டிய  நிர்பந்தம்  கூடிய சீக்கிரத்திலேயே ஏற்பட்டது. 
ஊரிலிருந்து செலவுக்குப் பணம் வரவில்லை. லாட்ஜில் நெருக்கினார்கள். 
இல்லையென்றால் காலி செய்யச் சொன்னார்கள். 
       
           தேவனும் வேறு வழியில்லாமல் அவனுடைய பெட்டியை வாசுவிடம் 
கொடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ளும் படியும் பணம் கிடைத்ததும் 
அதை திரும்பப் பெற்றுக்கொண்டு போவதாகவும் கூறினான்.

          " தேவா,உனக்கு நன்றாகத் தெரியும் எங்கள் நிலை. சந்துருவின் பின் 
அவன்  சம்பாதிப்பதைக் கொண்டு வாழ ஒரு பட்டாளமே இருக்கிறது. 
எனக்கோ பயிற்சி நேரத்தில் கிடைப்பது என் ஒருவனுக்கே போதாது. 
இப்படி இருக்க நாங்கள் என்னதான் செய்ய முடியும்.?"


            "  ஏய் ய ..வாசு விஷமிக்கண்ட. எனிக்கி அறியும். எண்டே சமயம் 
இங்கனே  உண்டு. எந்து செய்யாம்.?"
           
             அடுத்த  நாளே தேவனின் பெட்டியை பறிமுதல் செய்ய ,லாட்ஜ் 
முதலாளி முயன்றதும், வாசு அதைக் கொடுக்காமல் தகராறு  எழுந்து 
போலீஸ்  ஸ்டேஷன் வரை விவகாரம் போனதும் வேறு கதை. 

             ரயிலில் இடம் பிடித்து அமர்ந்து பயணம் செய்யும்போது ,அந்த 
வாலிப நாட்களே  வந்தது போலவும் , நிகழ்ச்சிகள் எல்லாம் நேற்று 
நடந்தது போலவும் வாசுவுக்குத் தோன்றியது. 

            "தங்கம், உன்னைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்ளும் 
முன்பே, எனக்கு ஒரு காதலி இருந்தாள் தெரியுமா. உனக்கு.?:"

          "  நீங்கள் ஆயிரம் பெண்களைப் பார்த்திருப்பீர்கள். எல்லோரையும் 
மனசால் காதலிக்கவும் செய்திருப்பீர்கள். ஆனால்  யாராவது உங்களைக் 
காதலித்திருக்கிறார்களா.?".

            "என்னைக் காதலிக்க எந்த பெண்ணுக்குத்தான் கசக்கும். ஆனால் 
நான் சொல்லும் இந்தக் காதல் தேவனால் தடம் புரண்டு  விட்டது.
   
              நாங்கள் தங்கி இருந்த லாட்ஜுக்கு அருகே ஒரு பால் கடை 
இருந்தது. அங்கு பால் வாங்க ஒரு பெண் தினமும் வருவாள். நாங்கள் 
இரவு உண்ட பிறகு சில நாட்களில் பால் அருந்த அங்கு செல்வோம். 
அவளை அங்கு அடிக்கடி பார்ப்போம். ஹூம்.!பார்த்தால் எனக்கு 
உடம்பெல்லாம் ஒரு மாதிரி படபடக்கும்., நாக்கு வரண்டு விடும், பேச்சு 
சரியாக வராது. இதெல்லாம் காதலின் வெளிப்பாடுகள்  என்று தேவன் 
விளக்கம் சொல்லுவான். நானும் அதையே நம்ப ஆரம்பித்தேன். ஆனால் 
அவளிடம் எப்படி பேசுவது.,எங்கு பேசுவது, அவள் பேசுவாளா ஒன்றும் 
புரியவில்லை. தேவன் இதற்கு ஒரு வழி செய்வதாகக் கூறி அபயம் 
அளித்தான். --" வாசு கதைபோல விவரிக்க தங்கத்துக்கும் சற்றே உற்சாகம் 
பற்றிக் கொண்டது. 

            " ஆமாம், அப்போது உங்களுக்கு என்ன வயசிருக்கும்.?"
            " பதினேழு, பதினெட்டு  இருக்கலாம்."
            " அடப் பாவி  பிஞ்சிலே  பழுத்த கேசா.?"
            " இல்லை  தங்கம். உலகத்தையே புதுசாப் பார்க்கும் வயசு. எதையும் 
சோதனை செய்து பார்க்கும் வயசு.. யாரையும் உடனே நம்பும் வயசு. .யார் 
கண்டது, சந்தர்ப்பங்கள் சரியாக அமைந்திருந்தால் ஒருசமயம் பிஞ்சிலே
பழுத்திருக்கலாம். "

            " அதுசரி.அந்தப் பெண்ணிற்கு எவ்வளவு வயசிருக்கும்.?என்ன  பேர் , 
ஏதாவது தெரியுமா..?"

            " அவளுக்கு பதினெட்டு  இருபது  வயசிருக்கலாம். பெயர் தெரியாது. 
ஆனால் என் மனசுக்குள் நான் அவளுக்கு வைத்த பெயர்  அகிலா. எனக்கு 
எல்லாமே, இந்த அகிலமே அவள்தான் என்று தோன்றும். "

            "ச்சீ .! நீங்கள் இப்படிப்பட்டவர்  என்று தெரிந்திருந்தால் ...."

            " ஏன் , என்னைக் காதலித்து இருக்க மாட்டாயா. ..கலியாணம் 
செய்திருக்க  மாட்டாயா..."

            "இப்போது  அதைப் பற்றி நினைப்பது.  டூ  லேட். நீங்கள் சொல்வது 
போல ,தவிர்க்க முடியாததை அனுபவிக்கத்தானே வேண்டும்.
இருந்தாலும் இப்போது நோ  ரிக்ரேட்ஸ்..வருத்தம் ஏதுமில்லை. "

            " எனக்கு அதுவும் தெரியும். தேவனைப் பற்றி சொல்லிக கொண்டிருந்தேன் .எப்படியாவது அந்தப் பெண்ணைப் பற்றிய  சேதிகளை 
சேகரிக்கப் போவதாகக் கூறினான். வேலை இல்லாதவனுக்கு நல்ல 
வேலை என்று சந்துரு  கிண்டல் பேசினான். அடுத்த நாள் பயிற்சி முடிந்து 
அறைக்குத்  திரும்பும்போது, தேவன் அங்கு பொறுமை இல்லாமல் 
எனக்காக காத்திருப்பது  தெரிந்தது.. வாசு, அப்பெண்ணிண்டே ஸ்தலம் 
அறிஞ்சு ..என்று  கூவினான். பிறகு அந்த வீட்டையும்  காட்டினான்.வீடு 
தெரிந்தவுடன் , அந்தப் பெண்ணை பார்க்கா விட்டால் தலை வெடித்து
விடும்போல்  தோன்றும். அந்த வீட்டின் முன்பாக அங்கும் இங்குமாக் 
அடிக்கடி நடப்பேன். வீட்டு முனனால் ஷூவுக்கு லேஸ்  கட்டும் சாக்கில் 
உள்ளே ஆராய்ந்து பார்ப்பேன். ஆனால் என் கண்ணில் மட்டும் அவள் 
தென்படமாட்டாள். தேவன் என்னைக் கிண்டல் செய்கிறான் என்று 
அவனிடம் கோபித்துக் கொண்டேன். நான் அங்கு போகும் சமயம் அவள் 
எங்கோ தட்டெழுத்து  பயில செல்கிறாளோ என்னவோ, என்று தேவன் சொன்னான். அதன் பிறகு அடுத்துள்ள தட்டெழுத்துப் பயில்விக்கும் 
நிலையங்களுக்கு முன் நின்று நோட்டம் விட ஆரம்பித்தேன். அவள் என் 
கண்களில் படவே இல்லை. பிறகுதான் அது நடந்தது. "-என்று ஒரு  சஸ்பென்ஸ கொடுத்து நிறுத்தினான் வாசு.
          " என்ன பெரிய சஸ்பென்ஸ். ...ஒரு நாள் அவளைப் பார்த்தீர்கள்...ஈ 
என்று பல்லிளித்தீர்கள்..அவள் உங்களைக் கண்டு கொள்ளவே இல்லை. 
பிறகு, சேச்சே ..இந்தப் பழம் புளிக்கும் என்று வந்து விட்டீர்கள் ....
அவ்வளவுதானே. .- "என்று கிண்டல் செய்தாள் தங்கம். 
         " அதுதான் இல்லை. அவளுடைய பெயரை அறிந்து வருகிறேன் என்று சொன்ன தேவன் அவர்கள் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 
ஒரு சிறுவனைக்  கூப்பிட்டு, நிறைய மிட்டாய்கள் கொடுத்து, ..- அந்த 
சேச்சியின் பெயரை  கேட்டு வா..- என்று அனுப்பி இருக்கிறான். அந்தப் 
பையன் வீட்டுக்குள் சென்ற சற்று நேரத்தில் அந்தப் பெண் வெளியே 
வந்திருக்கிறாள். அந்த பையன் தூரத்தில் இருந்த தேவனைக் காட்டி, ஏதோ 
சொல்ல, அந்தப் பெண் உள்ளே சென்று, மறுபடியும் வெளியே வந்தபோது 
பெரிய மீசை வைத்த இரண்டு ஆட்களும்  கூட இருந்தனர்.தூரத்தில் 
இருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவன் மெல்ல நழுவப் பார்க்க , ஓடிவந்து 
அவனாப் பிடித்து நன்றாக தர்ம அடி கொடுத்து  அனுப்பியிருக்கிறார்கள் .
பாவம் ,தேவன் முகமெல்லாம் வீங்கி, உதடு காயப் பட்டு  ரத்தம் தெரிய வந்ததை நிறைய பேர் பார்த்திருக்கிறார்கள். அவமானமாக இருந்தது 
என்று சொல்லிச் சொல்லி மாய்ந்தான். பாவம் என் காதலுக்காக அடி 
வாங்கினான்."என்று பெருமூச்சுடன் நிறுத்தினான் வாசு. 

             " அவன் உங்களைக் காட்டிக் கொடுத்து, உங்களையும் அவர்கள் 
புடைக்க வில்லையா ..?"

             " அந்த மட்டில் தேவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.:ஆனால் 
அந்த சம்பவம் அவன் வாழ்க்கை  முறையையே  மாற்றி விட்டது. 
பெண்கள் மேல் அவனுக்கு வெறுப்பே வரக் காரணமாகவும் இருந்தது. 
பிறகு அவன் தன்னுடைய விமானப் பிரிவில் இருந்த ஒரு நண்பனுடன் 
தங்க ஆரம்பித்தான். ஒரு சந்தர்ப்பத்தில் அவனை பார்க்க நேரிட்டபோது,
"வாசு  சந்தொஷிச்சு இருக்கான் ஞான்  வழி கண்டு. ஒரு பெண்ணு 
காரணம் தல்லு வாங்கியதில் வளரே அவமானிச்சு. இப்பொழ  கொரே
பெண்ணுங்களே அவமாநிக்கான் படிச்சு ஞான். அன்னு வாசு ச்நேகிச்ச 
பெண்ணின் சேர்க்கான் சாதிச்சில்லா. இன்னு வாசு இஷ்டப்படும்  
பெண்ணினே தெரன்செடுக்காம். என்னோடு வன்னால்அசலாயிட்ட 
சரக்குகளே  காணிககாம் "-என்றான். எனக்கு பயம் அதிகமாகி இருந்ததால் 
அவனை பார்ப்பதை தவிர்த்து வந்தேன். 

           " இப்போது அதற்கு வருத்தப் படுகிறீர்களா என்ன. ?"

           " சேச்சே. ..அதெல்லாமில்லை. நான் வளர்ந்த விதமும், குடும்ப 
பாரமான சூழ் நிலையும் எனக்கு வேலி மாதிரி இருந்திருக்க  வேண்டும்.
பிறகு நான் எப்போதாவது அவனைப் பார்த்தால் , உலகத்தில்  உள்ள 
சந்தோஷங்களை அனுபவிக்கத் தெரியாதவன் என்று கேலி செய்வான். 
பிறகுதான் கொஞ்ச நாள் கழித்து இந்தக் கடிதம் வந்தது. நானும் அவனை மறந்து  விட்டேன். இப்போது பார்க்க வேண்டும் காலம்  என்னென்ன 
மாற்றங்களை  யார் யாருக்கு எப்படியெப்படி செய்திருக்கிறது  என்று 
தெரிந்து கொள்ள வேண்டும்.  அதற்குத்தான் இந்த பயணம். " என்று 
கூறி நிறுத்தினான் .

                  ( நீளம்  கருதி  மீதி  அடுத்த பகுதியில்.).
              ---------------------------------------------------------------------------  .






.                         
 






   


            
. .
 


          
 


7 comments:

  1. கதை நல்லாருக்கு சார் ...

    ReplyDelete
  2. பதிமன் வயதின் குணங்களை குறைகளை
    சொல்லியவிதமும் , இடமும்,நடையும் அற்புதம் ஐயா
    அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்

    ReplyDelete
  3. தேவ ரகசியத்தை அறிய ஆவல் கூடுகிறது.

    ReplyDelete
  4. கதையும் சொல்லிப்போகும் விதமும்
    சொக்க வைக்கிறது
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..

    ReplyDelete
  5. எத்தனையோ எழுதியான பின்பும் எழுதுவதற்கும் படிப்பதற்கும் விஷயங்கள் இருக்கின்றன என்பதுதானே பெரிய ஆச்சர்யம். அதை மறுபடியும் நிரூபிக்கிறது ஸ்வாரஸ்யமான உங்கள் கதை.

    ReplyDelete
  6. இதைப் படிச்ச நினைவு இருக்கு.

    ReplyDelete
  7. யதார்த்தமான நடை....

    ReplyDelete