Friday, September 30, 2011

வார்த்தை...

வார்த்தை..
-------------

           சில நாட்களுக்கு முன் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி
சானலில்,திரு.கோபினாத் நடத்திய “நீயா, நானா” நிகழ்ச்சி
பார்க்க நேர்ந்தது. பேசுவதற்கு எடுத்துக்கொண்ட தலைப்பு
வார்த்தை. நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது பலரும் பல
விதமாக வார்த்தைகளைப் பற்றிய தங்கள் கருத்துக்களை
தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

          பிடித்த வார்த்தை ,பிடிக்காத வார்த்தை, அடிக்கடி கேட்கும்
வார்த்தை, வெறுக்கும் வார்த்தை பாதிக்கும் வார்த்தை எனறு
பலரும் பலவிதமாகச் சொல்லிக் கொண்டு வந்தனர்.

         வெறும் வார்த்தை என்று நாம் எண்ணும் சில ,உள வெளிப்
பாடுகள் , எவ்வளவு சக்தி வாய்ந்தது என்று புரிய வைத்தது.
இதைப் பற்றிய சிந்தனைகள் நூற்றாண்டுகளுக்கு முன்பே
இருந்திருக்க வேண்டும். “ தீயினால் சுட்ட புண் உள்ளாறும்,
ஆறாதே நாவினால் சுட்ட வடு.” “ இனிட உளவாக இன்னாத
கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.” என்பன போன்றும்,
உதிர்க்கப்பட்ட வார்த்தைகளை அள்ள முடியாது என்பன
போன்றும், சொல்லப்படாத வார்த்தைகளுக்கு நாமே எஜமானர்
என்பன போன்றும் பல எண்ணங்கள் மனசில் வந்து மோதியது.

         சில நேரங்களில் உணர்ச்சிப் பெருக்கால் உமிழப்படும்
வார்த்தைகள் எவ்வளவு தீவிரமாகக் காயப்படுத்துகிறது
என்பதையும் சிந்திக்க வைத்தது.

         நான் என் மகனிடம் சின்ன வயதில் நடந்ததில் அவன்
நினைவுக்கு திடீரென்று வருவது என்ன என்று கேட்டபோது.
அவன் சொன்ன பதில் என்னை ஆட வைத்து விட்டது. எனக்கு
நன்கு படிக்கும் பிள்ளைகள் கணிதத்தில் ஈடுபாடு கொண்டவர்
களாக இருப்பார்கள் என்றும் கணிதத்தில் ஈடுபாடு உள்ளவர்
புத்திசாலிகள் என்றும் எண்ணம் இருந்திருக்கிறது. அதை நான்
நியாயப் படுத்த வில்லை. அவன் கணிதத்தில் குறைவான
மதிப்பெண்கள் எடுக்கும்போது நான் அவனைக் கடிந்து கொண்டு
வாழ்வில் அவன் உருப்படுவது கஷ்டம் என்ற முறையில்
கூறியிருக்கிறேன் சாதாரணமாகப் பெற்றோர்களின் நிலையில்
இருந்து நான் அவனைக் கடிந்து கொண்டது அவனுக்கு மனசில்
ஆழமாக வலி ஏற்படுத்தி இருக்கிறது. என் எண்ணம் தவறு
என்று எனக்குணர்த்த அவன் பின் ரசாயனப் பிரிவில் பட்டப்
படிப்பு முடித்து பிறகு எம். பி. ஏ தேறி இன்று ஒரு உன்னத
நிலையில் இருக்கிறான். அவனை அந்தக் காலத்தில் கடிந்து
கொண்டதால் தான் ஒரு வெறியுடன் முன்னுக்கு வந்ததாய்
என்னை சமாதானப் படுத்துகிறான். இதுவே நேர் மாறான
விளைவுகளை ஏற்படுத்தி இருந்தால் என் ஆயுசுக்கும் நான்
வருத்தப்பட்டுக் கொண்டுதான் இருந்திருப்பேன். என் நண்பன்
ஒருவன் அவனது மகனைக் கணினி கற்றுக்கொள்ள கம்ப்யூட்டர்
பாயிண்ட் என்ற நிறுவனத்தில் விசாரித்திருக்கிறான். அங்கு என்
மகன் பணியாற்றிக் கொண்டிருந்தது தெரியாத அவன் என்னிடம்
அதன் மார்க்கெடிங் அதிகாரி எஸ்கிமோக்களிடமே
ரெஃப்ரிஜிரேட்டர் விற்றுவிடும் திறமை படைத்தவராக
இருக்கிறார் என்று கூறிய போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு
ஈடே இருக்கவில்லை.

         எனக்குத் தெரிந்த ஒருவர் கடற்படையில் பயிற்சியில்
சேர்ந்திருந்த காலம். விடுமுறை முடிந்து பயிற்சிக்குத்
திரும்பியவர், வீட்டு நினைவில் சற்றே கவனக் குறைவாக
இருந்திருக்கிறார். பயிற்சி அளிப்பவர் இந்தியில் அவரை அம்மா
பெயருக்குக் களங்கம் விளைக்கும் ஏதோ ஒரு வார்த்தையை
உபயோகித்திருக்கிறார். ஆத்திரமடைந்த என் நண்பர், கையில்
இருந்த ரைஃபிளால் பயிற்சியாளரை ஓங்கி அடித்திருக்கிறார்.
பிறகு அதன் பலனாக தண்டனையாக மருத்துவமனையில் மன
நோயாளிகள் பிரிவில் சில நாட்கள் காலங் கழிக்க வேண்டி
இருந்தது.

          சில வருடங்களுக்கு முன்னால் இந்திய கிரிக்கட் அணி
ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது நமது ஆட்டக்காரர் ஹர்பஜன்
சிங் இந்தியில் “ மாகி “ என்று ஏதோ சொல்லப்போக அது ஆண்ட்ரூ
சைமண்ட்ஸ் காதில் “மங்கி” என்று கேட்கப்போக அது ஒரு பெரிய
இனப் பிரச்சனையை இரு அணிகளுக்கும் இடையில் தோற்று
வித்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

          சில வார்த்தைகள் உச்சரிக்கப்படும் விதத்திலும்
தொனியிலும் மாத்திரையிலும் வேறு வேறு பொருள் கொடுக்கும் உதாரணத்துக்கு இந்த ஓரெழுத்து வார்த்தை “ ஓ “
என்னவெல்லாம் பொருள் கொடுக்க முடியும் என்று முயற்சித்துப்
பார்த்தால் தெரியும்.

        ஒரு வார்த்தை ஒரு லட்சம் என்னும் நிகழ்ச்சியில் கொடுக்கப்
படும் “ க்ளூக்கள் “ உதவி கொண்டு வார்த்தை கண்டு பிடிக்கப்பட
வேண்டும். சுவாரசியமான விளையாட்டு. விஜய் தொலைக்
காட்சியில் காணலாம்.

        என்னைப் பொறுத்தவரை இரண்டு வார்த்தைகள் என்
வாழ்க்கையின் பெரும்பகுதியை ஆக்ரமித்திருக்கின்றன. ஒன்று
அன்பு, மற்றது ஏமாற்றம். நான் யார் யாரிடம் அன்பு செலுத்தி
மகிழ்ந்தேனோ அவர்களில் பலரும் ,அதில் ஒரு பங்காவது
திருப்பிச் செலுத்தாதது என்னை மிகவும் ஏமாற்றத்துக்கு
உள்ளாக்கியிருக்கிறது.
------------------------------------------------------------------- 

18 comments:

  1. நீங்க சொல்லி இருப்பது உண்மைதான். பேசும் முன்பு கவனம் இருக்கணும்.கொட்டின வார்த்தையை அள்ள முடியாதே.

    ReplyDelete
  2. ஒரு சொல் வெல்லும்
    ஒரு சொல் கொல்லும்.

    அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. அருமையான பதிவு
    இதை நான் சில இழப்புகளுக்குப் பின்னே
    பாடமாகக் கற்றதால் கூடுமானவரையில்
    பிறருடைய மனம் கோணாது பேசமுடியுமா
    என்பதில்தான் அதிகம் கவனம் செலுத்துவேன்
    பதிவுலகில் பின்னூட்டம் இடும்போது கூட
    என்னுடைய கருத்தை வலியுறுத்தாமல்
    அவர்களது கருத்தை அறிய முயன்று
    அதற்குப் பாராட்டி பின்னூட்டமிடுவேன்
    ஒருவேளை அவர்களது கருத்தை எனது மனம்
    ஏற்றுக் கொள்ளாத பதிவெனில்
    பின்னூட்டமிடாமல் கூட தவிர்த்துவிடுவேன்
    தாங்களும் இதை வலியுறுத்தி ஒரு பதிவாகவே
    கொடுத்தது மகிழ்வூட்டுகிறது
    பயனுள்ள பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. பேசுமுன் மிகவும் யோசித்தே பேச வேண்டியுள்ளது. நாம் சாதாரணமாகப் பேசுவது கூட பிறரால் தவறாக எடுத்துக் கொள்ளப்படும் அபாயமும் உள்ளது.

    சொந்த மகன்களுக்குக்கூட நம் அனுபவத்தால் ஏற்பட்ட அறிவுரைகள், எச்சரிக்கைகள் கூட சமயத்தில் நம் மனம் விட்டு சொல்லமுடியாமல் போய் விடுகிறது.

    திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் கூறியுள்ளது போல

    /ஒரு சொல் வெல்லும்;
    ஒரு சொல் கொல்லும்./

    நாம் சொல்லும் சொல் வெல்லும் சொல்லாக அமைய வேண்டும்.


    நல்ல பதிவுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. நன்றாக உள்ளது, ஆனால் நீங்கள் அன்பு செலுத்தியவர்கள் திரும்பவும் உங்களிடம் அன்பு காட்டவில்லை என்று கூறி இருக்கின்றீர்கள் அன்புக்கு எதிர்பார்ப்பு இருக்க கூடாது, மற்றொன்று சிலர் நம்மீது அன்பு செலுத்துவதை வெளிப்படையாக காண்பிக்க தெரியாதவர்களாகவும் இருப்பதுண்டு.

    ReplyDelete
  6. அன்புள்ள பாலு சார்- சௌக்கியமா? நீண்ட இடைவெளிக்குப் பின் இன்று உங்களை வாசிக்க இயலுகிறது.இழந்தவைகளை விரைவில் சரிக்கட்ட வேண்டும்.

    இதே நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் பார்த்தபோது ஒரு பதிவு எழுதுவதற்கான வாய்ப்புக்களை யோசித்து வைத்திருந்தேன்.நீங்கள் முந்திக் கொண்டு விட்டீர்கள்.

    வார்த்தைகளைக் கடந்த நிலைக்கு ஒருவரால் வர முடிந்தால் அதுதான் தெய்வநிலை.மொழிதான் நம் பலவீனம்.

    குறைவான வார்த்தைகளால் நிறைவான நிலையை அடைய முடியும்.

    இப்படியே என் இடுகைக்கான விதைகளை நான் இறைக்கத் தொடங்கிவிட்டேனோ?

    போகட்டும். இப்போது உங்கள் உடல்நலம் சீராகிவிட்டதுதானே?அடிக்கடி சந்திப்போம்.

    ReplyDelete
  7. யாராவது ஏதாவது சொன்னால் 'நம்பிட்டோம் ' என்று சொன்னால் அதன் அர்த்தமே மாறும் என்பதும் உதாரணம்

    ReplyDelete
  8. இந்த நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். மிக அருமையான தலைப்பு. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கும், கோபிநாத்திற்கும் பாராட்டுக்கள். பல விஷயங்களை யோசிக்க வைத்தது, அந்த நிகழ்ச்சி. எனக்கு பிடித்த வார்த்தை எது என்றும்- ஒரு சில- மறந்து போன கசப்பான சம்பவங்களையும் நினைவு படுத்தி விட்டது அந்த நிகழ்ச்சி.

    How are you now, sir?

    ReplyDelete
  9. கருத்து கூறிய அனைவருக்கும் என் நன் றி. முதல் முறை வருகை தந்துள்ள ரத்னாவுக்கு, அன்புக்கு அன்பு என்று நான் கூறவில்லை. ஆனால் பாழும் மனம் அன்பு செலுத்தியவரிடமிருந்து அன்பு கிடைக்கப் பெறாவிட்டால் ஏமாற்றமடைவதென்னவோ உண்மை. அன்பு காட்டிக்கொள்ளப் படுவதல்ல. அறியப்படுவது, உணரப்படுவது.
    சுந்தர்ஜி வெகு நாளைக்குப் பிறகு உங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சி தருகிறது.
    ரமணி கூறுவதுபோல் பாராட்டிப் பின்னூட்டம் இட்டால் மகிழ்ச்சி யானாலும். மனம் ஒப்பாத எழுத்துக்கு புண்படுத்தாமல் கருத்து தெரிவிப்பதுதான் அக்கரை உள்ளதைத் தெரியப்படுத்தும். , என்பது என் கருத்து. என்னைப் பொறுத்தவரை மாற்றுக் கருத்துக்கள் என்னை பாதிக்காது. சில சமயம் என் குறைகளை திருத்த உதவலாம். என் எழுத்தில் உண்மை இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். எழுத்து பலரது அனுபவங்களை பகிர உதவுகிறது. மீண்டும் அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  10. கொட்டி விட்டால் அள்ள முடியாதது வார்த்தைகள். உபயோகிக்கும் விதத்தில் தட்டியும் கேட்கும். தடவியும் கொடுக்கும்.
    எனக்கொரு எஸ் எம் எஸ் வந்தது. "நான் சொன்னதற்குதான் நான் பொறுப்பு... நீ எடுத்துக் கொள்ளும் அர்த்தத்துக்கு நான் பொறுப்பல்ல..." சமாளிஃபிகேஷன் போலத் தோன்றினாலும் பெருமளவு உண்மையும் இருக்கிறது இதில்.

    ReplyDelete
  11. 'வார்த்தை' என்பது மிகவும் பலம் வாய்ந்த ஆயுதம். அது கோணலாகிப் போயின் ஆயிரம் அனர்த்தங்களை விளைவிக்கும். கையாளுவதில் மிகுந்த கவனம் தேவை. எண்ணம் தான் வார்த்தையாக வெளிப்படுகிறது; அல்லது எழுதப்படுகிறது. உணர்வு களில் ஆட்பட்டிருக்கும் பொழுது கண்ணாடிப் பாத்திரம் போல மிக ஜாக்கிரதையாக அதைக் கையாள வேண்டும். சில பேரைப் பார்த்திருக் கிறேன். இன்னொருவர் சொல்வதை கவனமுடனான புன்முறுவலுடன் நிறையக் கேட்டுக் கொள்வார்கள்; தாங்கள் பதிலிருக்கும் சமயங்களில் ஓரிரு வார்த்தைகளே அவர்களிடமிரு ந்து வெளிப்படும். அவ்வளவு அதி புத்திசாலிகள்; எமகாதகர்களும் கூட. அந்த நிதானம் நமக்கு வராதா என்று மனத்தில் பலதடவைகள் யாசித்திருக்கிறேன்.

    பேசுவதில் மட்டுமில்லை, எழுதுவதிலும் இந்த வார்த்தைகளை உபயோகிப்பதில் மிக மிக கவனம் தேவை. எல்லோரையும் கவர்ந்து, யார் மனத்தையும் புண்படுத்தாதவாறு எழுதுதலும், பேசுதலும் ஒரு கலை. எல்லா வெற்றிகளையும் போலவே, இந்த வெற்றிக்கும் பயிற்சி மிகத் தேவை.

    'தாழ்பூங் கோதை தன்கால் சிலம்பு
    கன்றிய கள்வன் கைய தாகில்
    கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கென
    காவலன் ஏவக் ....'

    -- என்று சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்ட கொலைக்களக் காதையில் வரும்.

    அரச மாதேவியின் சிலம்பு, இந்த பொற்கொல்லன் கூறிய கள்வன் கையில் இருக்குமானால், (அவனைக் கொல்வதற்கு அச்சிலம்புடன் இங்கு கொண்டு வ்அருக என்று சொல்ல நினைத்தவன் அவ்வாறு கூறாமல்)
    அவனைக் கொன்று இச்சிலம்பை இங்கு கொண்டு வருக!' என்று மன்னன் காவலர்க்குக் கட்டளையிடு கிறான்.

    மன்னனின் வார்த்தை தவறியதில், கோவலன் கொலைக்களப்படுகிறான்.
    கோப்பெருந்தேவியுடான ஊடலைத் தவிர்க்க அவசரமாக அந்தப்புரம் விரைந்து கொண்டிருந்த மன்னனின் ஆராயாத வார்த்தைத் தவறல் இது.

    வார்த்தை தவறுதல்களை நினைக்கும் பொழுதெல்லாம், என் நினைவுக்கு வரும் நிகழ்ச்சி இது. சொன்ன வார்த்தை தவறுதல் இன்னொன்று. 'வருவேன் என்று சொன்ன வார்த்தை தவறி கண்ணம்மா வாராமல் போனதால்' பாரதியின் மார்பு துடித்த கதை நம் எல்லோருக்குமே தெரியும்.

    ReplyDelete
  12. உடம்பு தேறிவிட்டது நன்கு தெரிகிறது.
    அன்பு செலுத்துவது ஒருவருடைய சுய திருப்திக்குத்தானே தவிர திரும்பப் பெறுவதற்காக அல்ல என்ற ஞானம் உதித்தால் இந்த ஏக்கம் வராது.

    ReplyDelete
  13. அருமையான ஆக்கம். மனிதவாழ்க்கை இதுதான் என்று புரிந்து கொண்டால் யாதொன்றுக்கும் கவலை கொள்ளத் தேவையில்லை. தவறுகள் சுட்டிக்காட்டப்படல் சிந்தனையை மேலும் தூண்டச் செய்யும் என்றே நான் கருதுகின்றேன். எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வரவேணடும். எல்லோரும் எமது நண்பர்கள் உறவினர்கள் என்று எண்ணும்போது தவறுகள் பெரிதாகத் தெரியாது. உங்கள் கருத்துக்கள் அத்தனையும் முத்துக்கள். என்னை மேலும் சிந்திக்கச் செய்தன. வாழ்க வளமுடன்

    ReplyDelete
  14. மிகவும் நெகிழ்ச்சியான பதிவு. யோசித்து பார்த்தால் விழித்து கொண்டிருக்கும் பொழுதில் பாதி நேரம் இது போன்ற வார்த்தைகளால் நாம் எவ்வளவு பாதிக்கப்படுகிறோம் என்றே தோன்றுகிறது. 'அவன் அப்படி சொன்னான்', 'இவன் இப்படி சொல்லி விட்டான்' என்றே நமது மனதை எண்ணங்கள் வாட்டுகின்றன. வாழ்க்கையின் கடைசி காலத்தில் இவை எல்லாம் தேவையா என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  15. அன்பு செலுத்த மட்டுமே என்று எண்ணுகிறேன்...

    மற்றவை அனைத்தும் எதிர்ப்பார்ப்பே... நன்றி ஐயா...

    ReplyDelete

  16. @ திண்டுக்கல் தனபாலன்
    அன்பை எதிர்பாரா அளவுக்கு ஞானம் இன்னும் வரவில்லை. வருகைக்கு நன்றி டிடி.

    ReplyDelete
  17. நல்லதொரு பதிவு. சாதாரண வார்த்தைகளையே பேசும் விதத்திலும் (Bhaavam) வித்தியாசம் காட்டலாம். நாம் எங்கோ யாரிடமோ பேச, எதிர்ப்படுபவர் தன்னைப் பற்றிச் சொல்வதாய் எடுத்துக்கொண்டு தவறாக நினைத்துக் கொள்வதும் உண்டு.

    முன்னரே ஒரு பின்னூட்டமும் இட்டிருக்கிறேன். முன்பெல்லாம் நீங்கள் என் பின்னூட்டங்களுக்கு பெரும்பாலும் பதில்சொன்னதில்லை! (இதை நான் தவறான அர்த்தத்தில் சொல்லவில்லை. ஜஸ்ட் அ ஸ்டேட்மெண்ட்!)

    ReplyDelete
    Replies
    1. பின்னுட்டங்களுக்கு பதில் என்ன நினைக்கிறார்கள் என்று எண்ணிப்பார்த்ததில்லை என்பின்னூட்டங்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்ப்டுகின்றன என்பதை நானறிய விரும்பியதுண்டு அது போலத்தானேடானே பிறரும் என்ற எண்ணம் வந்த பின் எல்லாப்பின்னூட்டங்களுக்கும் மறு மொழி இடத் தொட்ங்கி விட்டேன் இந்தப்பதிவிலும் ஒட்டுமொத்தமாகவே மறு மொழி எழிதி இருந்தேன் ஒருவருக்கு மட்டும் தனியாக மறு மொழி எழுதி இருந்தேன்

      Delete