Monday, November 14, 2011

மன(பய) சாட்சி........ நாடகம்

                        மன ( பய ) சாட்சி ( ஒரு நாடகம் )
                         --------------------------------------------
                                     ( ஒரு மாற்றத்துக்கு. )


கதாபாத்திரங்கள்:- கனகசபை--( தந்தை )
                                        வேதா--------( மனைவி )
                                        சபாபதி-------( மகன் )
                                        குடுகுடுப்பைக்காரன். 


காட்சி--1.     இடம்-- கனகசபை வீடு.
    ( திரை உயரும்போது வீட்டு ஹாலில் சோபாவில் ஒரு
ஓரமாக ஒடுங்கி கனகசபை உட்கார்ந்திருக்கிறார்.அவர்
மனைவி வேதா வருகிறார்.)

வேதா:-  என்னாச்சு உங்களுக்கு.?நானும் பார்க்கறேன் கொஞ்ச
                 நேரமா ஏதோ பித்து பிடிச்சாப்போல உக்காந்திருக்கிங்க.
                 ஒடம்புக்கு ஒன்னும் இல்லியே.?

கனக:-  ஒடம்புக்கு என்ன கேடு. அது எங்கெ போனாலும் கூடவே
                வருது கழுதை...மனசுதான் படபடப்பா இருக்கு...

வேதா:-மனசு படபடப்பா...உங்களுக்கு மனசுன்னு ஒண்ணு
                இருக்கா என்ன.? தலைக்கு மேலே ஆயிரம் வேலை
                இருக்கு. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு
                ஒரு பிள்ளை. அவனுக்கு காலா காலத்துலெ ஒரு
                கலியாணம் பண்ணி வைக்கணும்னு தோணலியா.?

கனக:-  அட ..யார்ரா இவ...மனசு கெடந்து படபடக்குதுன்னு
                சொல்றேன்...கழுதைக்கு கலியாணமொண்ணுதான்
                பாக்கி.

வேதா:-எதுக்கு படபடப்பா இருக்குன்னு சொல்லித் தொலைக்க
                வேண்டியதுதானே. இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி
                மூஞ்சிய வெச்சுக்கிட்டு சோபா மேல உக்காந்திருக்கறதப்
                பாத்தா ஏதாவது தெரியுமா.?

கனக:- அத எங்க சொல்லவிட்டெ நீ. ! நம்ம ஃப்ரெண்ட் பரமசிவம்
               தெரியுமில்லையா...அவன் போலீஸுலெ கம்ப்லைண்ட்
               கொடுத்திருக்கானாம்.

வேதா:-யாரு...? அந்த பட்டாசுக் கடை பரமசிவமா....அவன்
                கடையே கதின்னு இருந்தீங்களே..எதுக்கு போலீசாம்..?

கனக:- அவன் கடைல பட்டாசு திருட்டுப் போயிடுத்தாம்.பிராது
               கொடுத்திருக்கான்..எல்லாம் என் தலைவலி...

வேதா:-அவன் ப்ராது குடுத்தா உங்களுக்கு ஏங்க தலைவலி..?

கனக:-நான் அவன் கடைக்கு அடிக்கடி போவேனா..அதான்....
              பயம்மா இருக்கு...

வேதா:-நீங்க எதுக்கு பயப்படணும் ?நீங்க என்ன..பட்டாசு
                திருடினீங்களா.?

கனக:- ஐயோ வேதா சத்தமா பேசாதே யாருக்காவது கேக்கப்
               போவுது.( அப்போது நாயொன்று குரைக்கும் சப்தம்
               கேட்கிறது. கனகசபை இன்னும் பயந்து )பொலீஸ்ல
               இருந்து நாயெல்லாம் வருமா... அந்தக் கதவைச்
               சாத்தேன். ( வேதா தலையிலடித்துக்கொண்டு கதவை
               சாத்தப் போகிறாள் )
                                                 (திரை)

காட்சி:-2        இடம்.:- கனகசபை வீடு.
                           பாத்திரங்கள்:-கனகசபை, சபாபதி, குடுகுடுப்பை

              ( திரை உயரும்போது நாய் குரைக்கும் சத்தம் கேட்டு
                 கனகசபை சோபாவில் இன்னும் ஒடுங்கிக் கொள்ள
                வெளியே குடுகுடுப்பைக்காரன் )

குடுகுடு:- நல்லகாலம் பொறக்குது..நல்லகாலம் பொறக்குது.
                   ஜக்கம்மா சொல்றா.. மல போல வந்த கஷ்டம் பனி
                   போலப் போயிடும். ஐயாவோட தாராள மனசு ஐயாவ
                   காப்பாத்தும்.  நல்ல காலம் பொறக்குது,நல்லகாலம்
                   பொறக்குது.

கனக:-     டேய்..சபாபதி.அந்த நாயை வெரட்டுடா...சனியன்
                  கொரச்சுக் கொரச்சு உயிரெடுக்குது

சபா :-     ஐயோ...அப்பா...அது குடுகுடுப்பைக்காரனப் பாத்துக்
                 குரைக்குது. நீ ஏன் பயப்படரெ...

கனக:-.  ஆமா...நான் ஏன் பயப்படறேன்னு ஒங்கிட்ட வெலா
                 வாரியா சொல்றேன். சுத்த இவனாயிருக்கியே
                ( கொஞ்சம் யோசிக்கிறார். திடீரென்று அவர் முகம்
                  பிரகாசமடைந்து .அவர் உள்ளே போய் ஒரு வேட்டி,
                  சொக்காய், மேல்துண்டு,எல்லாவற்றையும் எடுத்து
                  வந்து குடுகுடுப்பைக்காரனுக்குக் கொடுக்கிறார்.)

குடுகுடு:-நல்லகாலம்பொறக்குது, ஐயாவுக்கு நல்ல காலம்
                   பொறக்குது.தாராள மனசுக்கு எந்த கொரையும்
                   இருக்காது.தேவி ஜக்கம்மா சொல்றா, நல்லகாலம்
                  பொறக்குது.

சபாபதி:-அப்பா... என்ன பண்றீங்க..இப்பத்தானே வாங்கினெ
                  அந்த வெட்டியும் சொக்காயும்...அதைப் போய் இந்த
                  குடுகுடுப்பைக்காரனுக்குக் கொடுத்திட்டு...அம்மா..
                  இந்த அப்பாவுக்கு என்னாச்சு..?

வேதா:-( வந்துகொண்டே)அதாண்டா எனக்கும் தெரியல..
                  நேத்துலேந்து உங்கப்பா ஒரு மாதிரியா இருக்கார்.
                   இப்பப்பாரு நல்ல துணிகளெ குடுகுடுப்பைக்குக்
                   கொடுத்திட்டு...

கனக:-   ஐயோ வேதா.நான் எது செய்தாலும் ஒரு காரணத்
                 தோடுதான் செய்வேன்.பட்டாசுக்கடை பரமசிவம்
                 போலீசுல பிராது கொடுத்திருக்கான் இல்ல..போலீஸ்
                 ஒருசமயம் நாயோட வந்தா.....

வேதா:- வரட்டுமே..உங்களுக்கென்ன...நீங்க திருடினீங்களா.?

கனக:-  ஐயோ அதுக்கில்ல வேதா...நான் அவன் கடைக்கு
                அடிக்கடி போறவன்.அந்த நாய்க்கு எங்க தெரியப்போகுது.
               அது என்னைக் காட்டிக் கொடுத்திட்டா..அதுதான்
                அன்னக்கி போட்டிருந்த துணிகள குடுகுடுப்பைக்குக்
                கொடுத்திட்டேன். ..இப்ப அந்த நாய் என்ன செய்யும்....?

சபாபதி:-அப்ப உங்க ஜட்டி பனியன் எல்லாம் சேர்த்தில்ல
                கொடுத்திருக்கணும்.

கனக:- இவன் ஒருத்தன்..என்னை ஏண்டா பயமுறுத்தறே...
              ( நாய் குரைக்கும் சத்தம் கேட்டு அலறி உள்ளே ஓடுகிறார்.
                                                             (திரை )

காட்சி-3.        இடம்-கனகசபை வீட்டுப் பின் புறம்
                           பாத்திரங்கள் - கனகசபை, வேதா.

               (திரை உயரும்போது, கனகசபை வீட்டின் பின்புறம்
                ஒரு மரத்தின் மேல் ஏற முயற்சிக்கிறார்.)

வேதா:-என்னாச்சு இந்த மனுஷனுக்கு....இந்த வயசில மரத்தில
                ஏறிண்டு...

கனக:- சபா சொன்னானே, இந்த ஜட்டி பனியன என்ன பண்றது?
              அத மரத்து மேல வச்சிட்டா...நாய்க்கு மரம் ஏற முடியுமா..
              அதான்....

வேதா:-டேய் ..சபா..இங்க வா..நீ போய் அந்த பட்டாசுக்கடை
               பரமசிவத்துக்கிட்ட கேளு..போலீசில என்ன பிராது
               கொடுத்திருக்கார்ன்னு...

கனக:- வேற வெனையே வேண்டாம்..நீயே என்னைக் காட்டிக்
               கொடுத்திடுவ போலிருக்கே...தீபாவளிக்குப் பட்டாசு
               வெடிக்கணும்னு ஆசை. ஆனா அது விக்கிற வெலயில
               வாங்கிக் கட்டுப்படியாகுமா..?அதான் கொஞ்சம்
               அள்ளிட்டு வந்தேன். போதும்டா சாமி...இப்படி பயந்து
                சாகறத விட , அத அவங்கிட்ட அப்படியே கொடுத்திட்டு
                மன்னிப்பும் கேட்டுடறேன். ( அப்போது நாய் குரைக்கும்
                சத்தம் கேட்க )நல்லா கொரை..எனக்கொண்ணும்
                பயமில்லையே..!
                                                 ( திரை )
                                               (முற்றும் )
                ----------------------------------------------------------------------------                      



..
                     
                  

  




   

11 comments:

  1. நாடகம் ஹாஸ்ய்மா சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  2. நல்ல நகைச்சுவையாக இருந்தது.
    பாராட்டுக்கள். vgk

    ReplyDelete
  3. நல்ல நகைச் சுவை நாடகம்
    இயல்பான வசனங்க்ள்
    அருமை ஐயா!

    புலவர் சா இராமாநுசம்
    முதல் ஓட்டு!

    ReplyDelete
  4. நீங்க நாடகமும் எழுதுவீங்களா?

    ReplyDelete
  5. அருமையா இருக்கு
    குற்ற முள்ளவன் நெஞ்சு குறுகுறுக்கும் என்பதை
    மிக அழகாக நகைச்சுவை மிளிர சொல்லிப் போகும் பதிவு
    அருமையிலும் அருமை

    ReplyDelete
  6. "kutramuLLA nenju"

    He could have done this earlier to have atleast retained his new set of dresses....

    kudukuduppakaaran romba lukcy! lol

    ReplyDelete
  7. நகைச்சுவை நாடகம் மிக அருமை.
    அந்தக் காலத்து கல்கி போன்றோரின் எழுத்துக்களில் மிளிரும் ஹாஷ்யம் போன்று உள்ளது.

    ReplyDelete
  8. ஆகா சிறப்பாக எழுதப்பட்ட நகைச்சுவை நாடகம் அருமை!..பாராட்டுக்கள் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு ...........

    ReplyDelete
  9. நாடகம் அமைப்பு நன்றாக இருந்தது.

    ReplyDelete
  10. ஐயா, ஒரு சாதாரண நிகழ்வின் பின்னணியில் மிகுந்த நகைச்சுவை உணர்வோடு அமைந்துள்ள நாடகம். அழகிரிவிசுவநாதன் ஐயாவின் நாடகத்தைப் பகிர்ந்ததன் விளைவாக தங்களின் நாடகத்தைப் (படிக்கும்)பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததறிந்து மகிழ்கின்றேன். நன்றி.

    ReplyDelete