Friday, August 29, 2014

வினை தீர்க்கும் விநாயகன் கதை


                         வினைதீர்க்கும் விநாயகன் கதை
                         --------------------------------------------
இன்று(28-08-2014) விநாயகச் சதுர்த்தி பற்றிப் பல பதிவுகள் வரும் என் பங்குக்கு இது.இன்றைய பதிவுகள் ஏறக்குறைய எல்லாமே விநாயகர் வழிபாடு பற்றியும் அதனால் விளையும் பலன்கள் குறித்தும் இருக்கும். பிள்ளையார் கோயில்களைப் பற்றியும் அவரது ரூப விளக்கங்கள் குறித்தும் அழகான படங்களுடன் இருக்கும். என் பங்குக்கு நான் ஒரு , அதிகம் பேசப் படாத ஒரு கதையுடன் என் சில எண்ணங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்
விநாயகப் பெருமான் ஒரு முறை தன் மூஞ்சூறு வாகனத்தில் ஏறி இந்திரன் சபைக்குப் போய்க் கொண்டிருந்தாராம். இவர் உடல் எடை தாங்காமல் மூஞ்சுறு தடுமாற  இவர் கீழே விழுந்து விட்டாராம். அதைப் பார்த்து சந்திரன் சிரிக்க இவர் கோபமடைந்து தன்னுடைய தந்தங்களில் ஒன்றைப் பிய்த்து சந்திரனைத் தாக்கினாராம். அதனால்தான் இவருக்கு ஏக தந்தன் என்னும் பெயர் வந்ததாம்.
விநாயகர் தோற்றம் பற்றியும் பல கதைகள் உண்டு பரமேஸ்வரனும் பார்வதியும் கைலையில் மகிழ்ந்திருந்த காலத்தில் தேவர்கள் தாங்கள் தொடங்கும் எல்லாக் காரியங்களும் தடை பட்டுப் போகின்றன என்று கூறி வருந்தினர். சிவபெருமான் ஆவன செய்வதாகக் கூறினார். பின் பார்வதியும் பரமனும் யானை உருத் தாங்கி காடுகளில் மகிழ்ந்திருந்தனர். அதன் பலனாக அவர்களுக்கு மனித உடலுடனும் யானைத் தலையுடனும் ஒரு குழந்தை பிறந்தது அதுவே தேவர்களின் எல்லாச் செயல்களுக்கும் விக்னம் வராது காத்தது என்பது ஒரு கதை
ஒரு சமயம் பார்வதிதேவி குளிக்கச் செல்லும்போது தன் உடலிலிருந்து ஒரு அழுக்கை உருட்டி உருக் கொடுத்து அதைக் காவலுக்கு நிற்கச் சொன்னார். பரமசிவனுக்கும் வழி கொடுக்காத அந்த உருவத்தின் தலையை ஈசன் கொய்தார்.பிறகு தன் தவறு தெரிந்து தன் பூதகணங்களிடம் முதலில் எதிர்ப்படும் எந்த ஜீவராசியின் தலையாவது கொண்டுவரப் பணித்தார். அவர்கள் கொண்டு வந்த யானைத் தலையைப் பொருத்தி உயிர் கொடுத்தார். பிறகு குளித்து வெளியில் வந்த பார்வதி ‘இந்தப் பிள்ளை யார் ‘ என்று கேட்டாராம். அது முதல் இவருக்குப் பிள்ளையார் என்று பெயர் வந்ததாம். சிவனுடைய பூத கணங்களுக்குத் தலைவனாக நியமிக்கப் பட்டார்/ அதனால் கணபதி ( கணங்களுக்கு அதிபதி) என்று பெயர் வந்தது.
விநாயகரைத் தென்னாட்டில் திருமணம் ஆகாத பிரம்மசாரி என்று கூறுவர். கார்த்திகேயனை வள்ளி தேவானை மணாளன் என்பர். ஆனால் வட நாட்டில் கணேசருக்கு இரு மனைவி. முருகன் பிரம்மசாரி.
ஓம் என்னும் எழுத்துப்போல் இருப்பதால் ஓங்காரஸ்வரூபன் என்றும் பெயர்.
கதைகள் எப்படி இருந்தால் என்ன. ?மனித நம்பிக்கையே முக்கியம். கதைகளுள் இருக்கும் சாரத்தை மட்டும் கவனிப்போம்.. ஏழை எளியவரும் நினைத்த மாத்திரமே அருள் பாலிக்கும் கடவுள் என்பது நம்பிக்கை
தென் நாட்டில் விநாயகர் வழிபாடு அவரவர் வீட்டில் அவரவர் சக்திக்கேற்றபடி நடந்து வந்தது. மஹாராஷ்ட்ராவிலும் கர்நாடகாவிலும் கணபதி வழிபாடு பிரசித்தம். கடவுள் நம்பிக்கையைப் பயன் படுத்தி மக்களை ஒன்று திரட்டி , அவர்களுக்குள் சுதந்திர எண்ணங்களை எழுப்பியவர் லோகமான்ய பால கங்காதரத் திலகர். கூட்டுப் பிரார்த்தனை என்று கூறி மக்களை ஓரிடத்தில் கூட்டி சுதந்திர உணர்வை indoctrinate  செய்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் துவங்கிய இந்த வழிபாட்டு முறை வளர்ந்து கூட்டு கணேச வழிபாட்டுக்கு ஒரு புதிய அங்கீகாரத்தைக் கொடுத்து விட்டது. தற்காலத்தில் அது தமிழ் நாட்டிலும் புகுந்து விட்டது. இதில் ஒரு சிந்திக்க வைக்கும் விஷயம் என்ன என்றால் பெரும்பாலான கூட்டு வழிபாடுகளை முன் நின்று நடத்துபவர்கள் ஹிந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்களாயிருப்பது தெரிகிறது.
மஹாராஷ்டிரத்தில் சுதந்திர உணர்வினை ஊட்டத் துவங்கிய இந்தக் கம்யூனிடி வழிபாடுகள் மத ஆதிக்கத்தை தூண்ட உபயோகப் படுத்தப் படுமோ என்னும் அச்சம் எழுகிறது.
ஆண்டவனிடம் அடைக்கலம் அடைந்தவன் அவனுக்கு எல்லாம் தெரியும் என்று நம்பவேண்டும். எல்லாம் அறிந்தவன் நாம் கேட்டுத்தான் கொடுக்க வேண்டுமா. மனம்சஞ்சலப் படும்போது அதிலிருந்து மீள சக்தி கொடு என்றால் ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது 

“ பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலுங்கலந்துனக்கு நான் தருவேன்; கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே சங்கத் தமிழ் மூன்றும் தா.இது கடவுளிடம் பேரம் பேசுவது போலல்லவா இருக்கிறது. நாம் உண்ண விரும்பியதைக் கடவுளுக்கு என்று படைத்து நாமே உண்பதும், நமக்கு வேண்டியது நடந்தால் காணிக்கை என்று உண்டியலில் பொன்னும் பண்மும் போடுவதும் கடவுளைக் குறித்த பக்குவப் பட்ட மனம் இல்லாதிருப்பதையே காட்டவில்லையா.?பண்டிகைகளும் விழாக்களும் உற்றமும் சுற்றமும் கூடி மகிழ என்பதால் உண்டு களிப்பதில் தவறிருக்காது. ஆனால் அதே சமயம் இல்லாதவருடன் பகிர்ந்து கொள்வது அதைவிடச் சிறந்ததல்லவா.?.
( இது நான் ஏற்கனவே பகிர்ந்த பதிவு ஒன்றின் ஒரு பகுதி. அதில் ஔவை அருளிய விநாயகர் அகவலின் பொருளை விளக்கி எழுதி இருந்தேன் .பிரார்த்தனை செய்யும் போது பொருள் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்து வெளிபாடு வந்தது. சரி கதைமாத்திரம் போதுமென்று அதைக்கத்தரித்து இது மட்டும் ) 
நான் வரைந்த விநாயகர்(அவர் முறைப்பதாக என் பேத்தி சொல்வாள்)




 













12 comments:

  1. தாங்கள் வரைந்த படம் அருமை..

    இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.!

    ReplyDelete
  2. விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. தமிழ்நாட்டிலும் விநாயகருக்கு மனைவி உண்டே...! வல்லபை!

    நீங்கள் வரைந்துள்ள விநாயகர் கூர்ந்து கவனிக்கிறார்.

    சுவாரஸ்யமான விவரங்கள்.

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா!

    ஓங்கார ரூபனின் உன்னத ஓவியம்!
    தேங்காது வல்வினை சேர்ந்து!

    ஓவியம் கண்டு பிரமித்துப் போனேன் ஐயா!
    எத்தனை திறமை உங்களிடம்! அற்புதம்!
    ஐங்கரன் பெருமை கூறும் பதிவும் அருமை!

    விநாயகன் அருள் எல்லோர்க்கும் கிட்டட்டும்!
    வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete

  5. @ இராஜராஜேஸ்வரி
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேடம்

    ReplyDelete

  6. @ கரந்தை ஜெயக்குமார்
    வருகைக்கும் வாழ்த்ஹுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  7. @ ஸ்ரீராம்
    மனைவி உண்டா இல்லையா என்பதைவிட கதைகள் பல என்பதே நான் சொல்ல வந்தது. சித்தி புத்தி தமிழ் நாட்டில் விநாயகர் மனைவிகள் அல்லவா..!நான் ஓவியம் பயிலத் தொடங்கிய காலத்தில் வரைந்தது.வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும்நன்றி ஸ்ரீ.

    ReplyDelete

  8. @ இளமதி
    பாராட்டு ஓக்கே. ஆனால் இப்படியா..!நானே இத்தனை புகழ்ச்சிக்கு ஏற்றவனில்லை என்று நினைக்கிறேன். வருகைக்கு நன்றி மேடம்

    ReplyDelete
  9. பகிர்வு அருமை. ஓவியம் அழகு. தங்களுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்!

    ReplyDelete
  10. விநாயகர் குறித்த தொடர் கிட்டத்தட்ட 2,3 வருடங்கள் மழலைகள்.காமில் எழுதினேன். அதைத் தான் என்னோட வலைப்பக்கத்தில் போடலமா என ஒரு யோசனை.!:) மற்றபடி பிரசாதம் பண்ணினாலே விநியோகம் இல்லாமல் நாம் மட்டுமே சாப்பிடுவது என்பது கிடையாது. அக்கம்பக்கத்தினருடன் பகிர்ந்தே சாப்பிடுவோம்.:))))

    ReplyDelete
  11. அருமையான ஓவியம் வரைந்த உங்களுக்குப் பாராட்டுகள்.

    எத்தனை எத்தனை கதைகள்.....

    ReplyDelete
  12. பிள்ளையார் பற்றிய கதைகளில் ஒன்றைத்தவிர மற்றவை நான் அறிந்திராதவை. மூன்று தமிழையும் பெற கடவுளானாலும் பேரம் பேசலாம் என்று எடுத்துக்கொள்ளாலாமே! விநாயகர் படம் அருமை.

    பி.கு. விநாயகர் சதுர்த்திக்காக நான்கு நாட்கள் எனது கிராமத்திற்கு சென்றுவிட்டதால் வலைப்பக்கமே வர இயலவில்லை.

    ReplyDelete