Sunday, October 4, 2015

யதார்த்த வாழ்வில்


                                                    யதார்த்த வாழ்வில்
                                                      ------------------------------


பல நாட்களுக்கு முன்  ஜாக்கி மணியும் பந்தயக் குதிரையும்என்னும் பதிவு எழுதி இருந்தேன் . அதில் கூறப்பட்டிருந்த விஷயங்கள் உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் எழுதப் பட்டது. அதில் கூறி இருந்த சில பகுதிகளை மீண்டும் பதிவிடுகிறேன்

=பார்ப்பதற்கு மதமதவென்று இருந்தவளைக் கண்டதும் நினைவுக்கு வந்தது பந்தயக் குதிரையே. அதையே அடையாளப் பெயராகச் சூட்டிவிட்டான்.ஆனால் பின்னர் அறிமுகமாகி,அவள் கதையைக் கேட்டதும்,இவன் வாய்க் கொழுப்பிற்காக இவனையே கடிந்து கொண்டான்.பெயர் சூட்டுவதில் எந்த OFFENCE-ம் இருக்கவில்லை.சட்டென்று மனதில் தோன்றுவதுதான். இதில் இன்னொரு அட்வாண்டேஜ். இவர்களது உண்மை ஐடெண்டிடி காக்கப் படும். ஆனாலும் அப்படியே அழைப்பதற்கு மனம் இடங்கொடுக்காததால்,இனி அவளைப் பெண் என்றே இவன் குறிப்பிட முடிவெடுத்து விட்டான்.

      முதன் முதலில் காணும் யாரும் அந்தப் பெண்ணின் பின்னணியில் அப்படி ஒரு சோகம் இருக்கும் என்று நம்ப முடியாது. எப்போதும் சிரித்த முகம். எங்கு போவதானாலும் கூடவே ஒரு பையனும். அவள்து மகன்தான். அவனுக்கு இருபதிலிருந்து இருபத்திரண்டு வயதிருக்கும். பார்த்த உடனே தெரிந்து கொள்ளலாம், ஏதோ ஒரு குறை இருக்கிறதென்று.. பேச்சு வராது. கண் பார்வை தீர்க்கமாய்த் தெரியாது. அவ்வப்போது வலிப்பு வந்து விடுமாம். தாயைப் பிரிந்து இருக்க மாட்டானாம். இவனுக்கு ஒரு அண்ணன். அவனும் குறைபாடு உள்ளவன்.பார்த்தால் எந்தக் குறையும் இருப்பது தெரியாது. அவனுக்கும் பேச்சு வராது. தம்பியைப் போல் நடக்கவும் முடியாது. சுற்றி நடப்பதைப் புரிந்து கொள்வானாம். இருவரும் ஒரு வித அமானுஷ்யக் குரல் எழுப்புவார்கள்.அந்தப் பெண்ணின் கணவர், வாரத்தில் ஒரு முறை வீட்டுக்கு வருவார்.ஞாயிறு காலை வந்தால், மாலையில் திரும்பி விடுவார். வீட்டில் தங்குவதே கிடையாதாம். ஏதோ பிசினஸ் செய்கிறார். பணி செய்யும் இடத்திலேயே இருந்து விடுவாராம். அந்தப் பெண்தான் வீடு குறித்த எல்லா வேலைகளுக்கும் பொறுப்பு. உடல் வளர்ச்சி உள்ள, ஆனால் மனம் வளராத, பேச முடியாத , நடக்க முடியாத பிள்ளைகள்.


      கணவனும் மனைவியும் சேர்ந்திருந்தால், இன்னும் இது மாதிரிக் குழந்தைகள் பிறந்து விடுமோ என்ற பயத்தில்,நெடுங்காலமாகப் பிரிந்து வாழும் தம்பதிகள்.சொந்தத் தாய் மாமனையே மணந்து கொண்ட அந்தப் பெண், கூடவே தன் பாட்டியும், மாமியாருமான மூதாட்டியையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

       எப்போதும் சிரித்து மகிழ்ச்சியாகக் காணும் அந்தப் பெண், ஒரு நாள் கண்ணீருடன் நின்றாள். விசாரித்தால், கணவனுக்கு ஒரு புறம் வசமில்லையாம். ஸ்ட்ரோக் என்று சொல்கிறார்களாம். இதைத்தான் பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்கிறார்களோ. ! வாழ்க்கை உறங்கிக் கனாக் காணும்போது, இன்ப மயமாகத் தெரிகிறது. விழித்து உணர்ந்தால் கடமைக் கடலாகத் தோன்றுகிறது.. இவனுக்கு அண்மையில் இதற்கான காரணங்களைக் கண்டு பிடிக்க முடியுமா என்ற அறியாமையில் பிறந்த ஆர்வமும் அச்சமும் எழுகிறது. யாரைக் குறை கூற முடியும். பதில் அறிய முடியாத கேள்விகள். இம்மாதிரி நிகழ்வுகளுக்கு உறவில் மணமுடிப்பது ஒரு காரணம் என்று கூறப் படுகிறது. ஆனால் நம் சமூகத்தில் காலங்காலமாக நடந்து வருவதுதானே இது..எல்லோரும் குறைபாட்டுடனா பிறக்கிறார்கள்.?

அன்று ஜாக்கி மணி கூறியது இவனுக்கு மீண்டும் நினைவுக்கு வருகிறது. தவிர்க்கப் பட முடியாதவைகள் ,அனுபவிக்கப்பட்டே தீர வேண்டும். இருந்தாலும் கூடவே ஒரு சமாதானம். இதுவும் கடந்து போகும். எதுவும் கடந்து போகும். நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையே வாழ்வின் ஆதாரம்.
இப்போது இந்தக் கதையும் பதிவும் நினைவுக்கு வரக் காரணம் அந்தப் பெண்ணின் கணவன்  இறந்து விட்டார். இறந்து விட்டார் என்று சொல்வதா இன்னும் கஷ்டங்களில் இருந்து பிழைத்துக் கொண்டார் என்று சொல்வதா தெரியவில்லை.எந்த பாதிப்பும் இல்லாமல் சொல்வது என்றால் அந்தப் பெண்மணி ஓரளவு விடுதலை பெற்று விட்டாள் என்றே கூறலாம் ஒரு இழவு வீட்டின் அறிகுறிகளே காணாமல் இருந்தது, அவள் எதையும் எதிர் நோக்கிக் கொண்டிருந்தாள் என்று தானே அர்த்தம்  ஆனால் சில உண்மைகளைப் பேசுவதும் தவறாக எண்ணக் கூடும் என்னதான் இருந்தாலும் இறந்தவர் பற்றிய செய்திகள் உறவினர்களுக்குத் தெரியப் படுத்த வேண்டியதும் அவசியம் தானே. உடலை உடனே ஈமக் கிரியைகளுக்குத் தயார் செய்யவும் இடுகாட்டுக்குக் கொண்டு போகவும் உறவினர்கள் அவசியம்தானே.  அவர்கள் வருமுன்னே எது செய்தாலும் தவறாகக் கணிக்கப் படும்
நான் பார்த்தவரை அந்தவீட்டில் ஒரு இழப்பு நேர்ந்த சுவடே இல்லை. இருந்தாலும் தெரியவில்லை. வீடே களை கட்டிக் கொண்டிருந்தது. ஊரிலிருந்து உறவினர்கள் உள்ளூரிலேயே இருக்கும் உறவுகள் நட்புகள் என்று பலரும்  வருவதும் போவதும் (முகத்தில் மாத்திரம் ஒரு சோக பாவனையுடன்)  ஜே ஜே என்றிருந்தது. என்னதான் இழப்பு என்று நேர்ந்தாலும் அத்தனை பேருக்கும் வயிறு என்ற ஒன்று இருக்கிறதே. ஏற்கனவே இழப்புடனும் மூளை வளர்ச்சி இல்லாத பிள்ளைகளுடனும் அல்லாடும் அந்தப் பெண்மணிதான் வந்திருப்போரின் தேவைகளுக்கும் ஈடு கொடுக்க வேண்டும் .மொத்தத்தில் ஒரு கல்யாண வீட்டுக்குண்டான களையுடனே காணப்பட்டது அந்தவீடு. யதார்த்த உலகின் வீரியம் மனசை உலுக்குகிறது.  என்ன ஆனால் என்ன அவரவர் தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும்  இல்லாவிட்டால் இருக்கும் நெருக்கடி கூடவே ஏச்சும் பேச்சும் இருக்கும்  எல்லாம் ஒரு சில நாட்களுக்குத்தான் அதன் பின் இறந்தவன்  நினைவே இருந்த சுவடே காணாமல் போய்விடும் என்னில் ஒரு குரல் ஒலிக்கிறது. இதுதான் யதார்த்த  வாழ்க்கை.கவலைகள் எல்லாம் வரும் போகும்  எல்லாம் கடந்து போகும்  சகஜ வாழ்க்கை மீண்டும்  தொடரும் நாம் எல்லோரும் நிரந்தரம் என்று எண்ணுவது எல்லாமே தற்காலிகம் தான் . வாழ்க்கையின் தத்துவமே இதுதான்       

 








18 comments:

  1. //கவலைகள் எல்லாம் வரும் போகும் எல்லாம் கடந்து போகும் சகஜ வாழ்க்கை மீண்டும் தொடரும் நாம் எல்லோரும் நிரந்தரம் என்று எண்ணுவது எல்லாமே தற்காலிகம் தான் . வாழ்க்கையின் தத்துவமே இதுதான் //

    ஐயா இதை உணராமல் தான் நாம் தேவையில்லாமல் நம்மில் சிலரோடு பகைமை பாராட்டிக்கொண்டு இருக்கிறோம். பதிவைப் படித்ததும் மனது கனத்தது உண்மை.

    ReplyDelete
  2. மனதை உலுக்கியது.

    ReplyDelete
  3. யதார்த்தம் நீரினில் மூழ்கி நினைப்பொழிவதுதான். முகநூலில் இதை வைத்து கவிதை போல ஒன்று எழுதியிருந்தேன். இங்கு பகிரலாம் என்றால் தேடவும் முடியவில்லை, நினைவிலும் இல்லை.

    ReplyDelete


  4. பதிவு மனம் கணக்க வைத்து விட்டது ஐயா.

    ReplyDelete

  5. @ வே.நடனசபாபதி
    வருகைக்கும் ஆழ்ந்த வாசிப்புக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  6. !@ கீதாசாம்பசிவம்
    சில நிகழ்வுகள் மனதை இறுக்கி விடுகின்றன. வருகைக்கு நன்றி மேம்.

    ReplyDelete

  7. @ தளிர் சுரேஷ்
    /கஷ்டம்தான் / எனக்கு அப்படித் தோன்றவில்லை. ஒரு விதத்தில் அது ரிலீஃபே. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  8. @ ஸ்ரீ ராம்
    நமக்குத்தான் மறதி என்னும் வரம் இருக்கிறதே. நீங்கள் எழுதி இருந்ததைத் தேடிப் பாருங்கள். வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  9. @ கில்லர் ஜி
    இதற்கெல்லாம் மனம் கனத்தால் எப்படி.? வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  10. மிகக் கனமான விஷயம்
    எளிமையாய் சொல்லிப் போனவிதத்தால்
    கூடுதல் கனம் பெறுகிறது

    ReplyDelete
  11. ஒரு வழியாய்த் தேடி எடுத்து விட்டேன்! என் பதிவுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கக் கூடாது! :)))


    அழுது கொண்டிருந்த
    அனைவரும்
    ஆற்றங்கரைக்குப்போய்க்
    குளித்து விட்டு
    வந்த பிறகு
    புன்னகைக்கத் தொடங்கினார்கள்...

    அடுக்களையை
    எட்டிப்பார்த்த
    அக்கா சொன்னாள்..

    'எளவு..
    எலையப் போட்டா
    சாப்பிட்டுக் கிளம்பிடலாம்..
    டிரெயினுக்கு நேரமாகுது...'

    ReplyDelete
  12. மனதை கனக்கச்செய்யும் பதிவு ஐயா

    ReplyDelete
  13. மிகவும் வருத்தமாக இருக்கிறது. விதியின் விளையாட்டை யார் புரிந்து கொள்ள முடியும்?

    ReplyDelete

  14. @ ரமணி
    எந்தவிஷயமும் வயது ஏற ஏற எளிமையாத் தென்படுகிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  15. @ ஸ்ரீராம்
    நான் நீட்டி முழக்கிச் சொன்னதை நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் எளிமையாக் கூறி விட்டீர்கள். நான் எழுதியது கண்டது. நீங்கள் எழுதியது அறிந்து உணர்ந்தது. வாழ்த்துகள்

    ReplyDelete

  16. @ கரந்தை ஜெயக்குமார்
    நாம் காணும் , அனுபவிக்கும் பல நிகழ்வுகள் மனம் கனக்கச் செய்பவையே. வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  17. @ டாக்டர் கந்தசாமி
    யதார்த்த வாழ்வில் இவையெல்லாம் சகஜந்தானேசார். வருத்தப்பட என்ன இருக்கிறது. வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete