Sunday, August 28, 2016

LIVE TOGETHER AND LEAVE TOGETHER


                                LIVE TOGETHER  AND LEAVE TOGETHER
                                ---------------------------------------------------


அன்புள்ள காதலிக்கு, இந்தக் கடிதம் படிக்கத் துவங்கும் போது உன் முகம் சிவப்பது உணருகிறேன். இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று  வெட்கத்தால் ஏற்படுவது அடுத்தது கோபத்தால் ஏற்படுவது. வெட்கம் புரிந்து கொள்ளக் கூடியது. கோபம்....? பொத்தாம் பொதுவாகக் காதலிக்கு என்று எழுதினால் கோபம் வராதா என்ன...? இதையும் சேர்த்துப் படித்துப்பார்
     நிலவைப் பழிக்கும் முகம்
     நினைவைப் பதிக்கும் கண்கள்
     நிலமடந்தை நாணும் எழில்-முத்துச்
     சரம் விரித்த முல்லைச் சிரிப்பு-சிந்தக்
     கமலமலர் செவ்விதழ் விரிப்பு-கொண்டு
     படர்கொடிவெல்லும் துடியிடை- என்
     இடர் சேர்க்க இடையிடையாட மென்னடை
     நடந்தென் முன் நின்றாள்-இன்பக்
     கனவினை நனவாக்க எண்ணி-வந்த
     கற்பனைக் கண் கண்ட கன்னி.
என்கற்பனைகண்கண்ட கன்னி உன்னைத்தவிர வேறு யார் இருக்கமுடியும் என் மனத்திரையிலிருந்து என்றுமே அழிக்க இயலாத சித்திரம் அல்லவா  நீ.இதை நீ அறிவாய் என்று எனக்கும்  தெரியும்  ஏன் என்றால் இதை நான்  எழுதி இருப்பதே உன் புகைப்படத்தின் பின்புறம்தானே எத்தனை கடிதங்கள் எழுதினாலும் பார்த்துக் கொண்டாலும்  சந்திப்பது போல் ஆகுமா? நாம் ஒரு முறை சந்திக்க முடிந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் வருகிற ஞாயிற்றுக் கிழமை  டபிள் ரோடில் சுமார் நான்கு மி அ;ளில் சந்திக்க வேண்டுகிறேன்

       ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்றரை மணிக்கே பாபு டபிள் ரோடில் காத்துக் கொண்டிருந்தான் சியாமளாவின் வருகைக்காக.வருகிற பஸ் ஒவ்வொன்றிலும் ஏறித் தேடாத குறைதான். அவள் வருவாளா, வர மாட்டாளா என்ற சந்தேகம் வேறு அடிக்கடி எழ ஆரம்பித்தது. அவள் வரக் கூடாது, வருவது தவறு என்றுதான் அவள் எண்ணுவாள்,;இருந்தாலும் என்மீது அவளுக்கு அன்பிருக்குமானால் என்னை ஏமாற்ற மாட்டாள், தவறு என்று சுட்டிக் காட்டும் மனதையும் மீறி வருவாள். வராவிட்டால்......? அவளுக்கு என்மீது அன்பில்லை என்று நினைக்கலாமா.?சேச்சே... அதெப்படி.?அவளுடைய நிலையையும்தான் யோசிக்க வெண்டுமே. ! அவளோ பாவம் பெண்..! எதற்காக இப்படி மனதைக் குழப்பிக் கொள்ள வேண்டும். இன்னும் அரை மணியில் தெரிந்துவிடும். ---என்றெல்லாம் எண்ணிக் கொண்டும், தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்டும், விடையளித்துக் கொண்டும் அரை மணி நேரத்தைப் போக்கி இருப்பான். இதன் கூடவே அவனுக்கு இன்னொரு சங்கடமும் ஏற்பட்டது.” வரச் சொல்லிக் கேட்டுக் கொண்டாயிற்று. வந்தால் என்ன பேசுவது.? வந்தவுடன் “ நான் உன்னை மனதாரக் காதலிக்கிறேன்.நீயும் என்னை நேசிக்கிறாயா.?என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாகக் கேட்கலாமா? அப்படி ஒரேயடியாக விஷயத்துக்கு வர முடியுமா.?அப்படியே கேட்டால் அவள் என்னைப் பற்றி ஒரு சமயம் தவறாக எடை போட்டு விட்டால்... எண்ண எண்ண குழப்பம்தான் அதிகரிக்கிறது.வரும்போது வரட்டும் பேசுவது பற்றி பிற்கு யோசிக்கலாம். நான் காத்திருப்பதே அவளுக்குத் தெரியாமல் இருக்க இந்த காஃபி பார் உள்ளிருப்பது. வந்து அவள் என்னைத் தேடட்டும். என்னைக் காணாமல் அவள் சந்தோஷப் பட்டால், அவளைப் பார்க்காமலேயே திரும்பிப் போய் விடுவது. ஏமாற்றமடைந்து வருத்தப் படுவதுபோல் தோன்றினால் அவளைப் போய்ப் பார்ப்பது”. இந்த முடிவுக்கு வந்ததும் அதை செயல் படுத்த அருகில் இருந்த காஃபி பாருக்குள் பாபு நுழைந்தான். தன் உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்திக் கொள்ள ஒரு காஃபியும் வாங்கி அருந்தினான். பத்து நிமிடங்கள் கழிந்து விட்டன. இரண்டு பஸ்களும் வ்ந்து போய் விட்டது. சியாமளா வரவில்லை. பாபுவுக்குக் கோபம் பற்றிக் கொண்டு வந்தது. அவனை அறியாமலேயே அடுத்திருந்த கடைக்குள் நுழைந்தான்.உயர்ரக சாக்லெட்டுகளும் மிட்டாய்களுமாக கொஞ்சம் வாங்கிக் கொண்டான். ஒரு சிகரெட்டை வாங்கிப் பற்ற வைத்துக் கொண்டான். இரண்டு முறை புகையை இழுத்துவிட்டிருப்பான். பிறகுதான் அவனுக்கு திடீரென்று நினைவுக்கு வந்தது. சிகரெட் புகைப்பதில்லை என்ற தன்னுடைய தீர்மானம் தன்னை அறியாமலேயே மறந்து சிகரெட் புகைத்து விட்டோம் என்ற எண்ணம் வந்ததும் அதை நசுக்கி எறிந்தான். 16-ம் நம்பர் பஸ் வந்தது. சியாமளா அதிலும் இருக்க மாட்டாள் என்று நினைத்தான் என்றாலும் கண்கள் அதிலிருந்து இறங்குபவர்களைக் காணத் துடித்தது. இம்முறையும் ஏமாற்றம்தான் என்று நினைக்கும்போது பாபுவுக்கு தன் நெஞ்சே வாய்க்குள் வந்து விட்டது.போன்ற எண்ணம். கைகால்கள் சற்றே நிதானமிழந்து வெட வெடக்க ஆரம்பித்தது. காரணம் அவனுக்குப் புரியவில்லை. ஆயிரக் கணக்கானவர்கள் முன்பு நிதானம் தவறாமல் நினைவு சிதறாமல் எண்ணிய வற்றை ஒழுங்காக,அழகாக, கோர்வையாக எடுத்தியம்பும் திறன் பெற்ற பாபு, சியாமளா பஸ்ஸிலிருந்து இறங்கியதும் ,அவளைக் கண்டதும் தன் நாக்கு உலர்ந்து மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டு விட்டதைப் போன்ற உணர்ச்சி யடையப் பெற்றதும் ,நினைவு கூர்ந்தது, அவன் எங்கோ எப்போதோ படித்த ஒவ்வொரு காதலனும் தன் காதலியைக் காணும்போதெல்லாம் முகம் வெளிறி நிற்பான்என்ற வரிகள்தான். எனக்கே இப்படி என்றால் அவளுக்கு.......என்ற எண்ணம் வந்ததும் அவன் அவனைச் சுதாரித்துக் கொண்டான்.மீண்டும் ஒரு சிகரெட் வாங்க கடைக்குத் திரும்பினான்.

    பஸ்ஸிலிருந்து இறங்கிய சியாமளா சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துக் கொண்டாள். பாபுவைக் காணவில்லை. அவளுக்குத் தன் மேலேயே கோபம் வந்தது. ஒரு சமயம் நான் எப்பேற்பட்டவள் என்று சோதிக்க வேண்டி இங்கு வரச் சொல்லி இருப்பாரோ.? நான் வந்ததால் ஒரு சமயம் என்னைப் பற்றித் தவறாகப் புரிந்து கொண்டால்......சே.! நான் வந்திருக்கவே கூடாது. என்று எண்ணிக் கொண்டு திரும்பிப் போக பஸ் வருகிறதா என்று நோட்ட மிட்டவளின் கண்களுக்கு பாபு தென் பட்டான். இருந்தாலும் தான் அவனைக் கண்டு விட்டதாகக் காட்டிக் கொள்ளாமலிருக்க வேறு திசையை நோக்கினாள். தன்னைப் பார்த்துப்பேச தன்னிடம் தேடி வரட்டும் என்று எண்ணினாள்

               பாபுவும் சியாமளாவைக் கண்டதும அவளே அவனை நோக்கி வருவாள் என்று எண்ணிக் கொண்டு அங்கேயே நின்றான்.ஒருவர் அருகே ஒருவர் செல்லாததால் இருவருக்குமே கொஞ்சம் கோபமேற்பட்டது. ஒருவரை ஒருவர் நோக்கினார்கள். பாபு அவனை மறந்து சியாமளாவின் அருகே போய்க் கொண்டிருந்தான். அருகே சென்றவன் ஏதும் பேசவில்லை. பஸ்ஸுக்குக் காத்திருப்பது போல் அவனும் நின்றான். உண்மையில் அவன் அப்போது பஸ்ஸைவிட ஆட்டோ ரிக்‌ஷாவையே எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவனும் அவளும் அருகிலிருக்கும் லால்பாக் போய் அங்கே ஆற அமரப் பேசிக் கொள்ளலாம் என திடீர் திட்டம் வகுத்து விட்டான். அதை நிறைவேற்ற ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவைக் கூப்பிட்டான். சியாமளா இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை. பாபுவுடன் ஆட்டோவில் செல்வதைக் கூட அவளால் நினைக்க முடியவில்லை. ஆட்டோ வந்ததும் வேண்டாம் பஸ்ஸிலேயே போகிறோம் என்று பாபுவுக்கும் ட்ரைவருக்கும் பொதுவாகவே சொன்னாள். ஆட்டோ ட்ரைவர் ஏதோ முணு முணுத்துக் கொண்டே சென்று விட்டான்.
  ”என்ன சியாமளா.. அவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்.? நாமிருக்கும் நிலையும் பழகும் விதமும் ,எல்லோருக்கும் நம் மீது சந்தேகப் படத் தூண்டும். சகஜமாக இருந்தால் யாரும் தவறாக நினைக்க மாட்டார்கள்பேசப் பேச அது போகும் விதம் திருப்தி அளிப்பதாகத் தோன்றவே தனக்குத்தானே ஒரு ஷொட்டுப் போட்டுக் கொண்டான். மனதிற்குள்ளாக அந்த சந்தோஷத்தில் ஒரு வசீகரமான புன்னகையும் வெளிப்பட்டது.

    பாபுவையே பார்த்துக் கொண்டிருந்த சியாமளா அவனுடைய அந்த தன்னம்பிக்கை நிறைந்த புன்சிரிப்பில் மயங்கினாள். ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ள விருப்பம் இல்லாதவள் போல் அதை மறைக்கவே “ எதற்காக என்னை இங்கு வரச் சொன்னீர்கள்? வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் வந்திருக்கிறேன். நேரமானால் தேடுவார்கள்.என்றாள்.

   “ ஆஹா..! வந்ததும் வராததுமாக விஷயத்தைப் புட்டு வைடா என்கிறாய். சியாமளா உன்னிடம் எனக்கு நிறையப் பேசவேண்டும். இங்கேயே நின்று பேசுவதென்றால் முடியாத காரியம். லால் பாக் வரை போய் விஷயத்தை நன்றாகப் பேசுவோம். ஆட்டோவைக் கூப்பிடட்டுமா.?

      வேண்டாம் ,வேண்டாம், பஸ்ஸிலேயே போகலாம் அங்குபோய்ப் பேசவேண்டியதைப் பேசலாம்  சொல்லிக் கொண்டிருந்தவள் அப்போது ஒரு பஸ் வர அதில் ஏறியும் விட்டாள்
. பெண்கள் இருக்கையில் ஜன்னலோர சீட் கிடைத்தது. இருக்கை  காலியாக இருந்தது. அதில் உட்கார்ந்தும் விட்டாள் அவள் அருகில் சீட் காலியாக இருந்தது அங்கு உட்கார்ந்தால்  நடத்துனர் எழுந்திருக்கச் சொல்லலாம். அவளுக்கு நேர் எதிர்பக்கம் ஆண்கள் இருக்கையில்பாபு  அமர்ந்தான். அடிக்கடி அவளைப் பார்ப்பதும், புன்னகைப்பதுமாக ஓரிரு நிறுத்தங்கள் கடந்தன. திடீரென்று நாலைந்து வாலிபர்கள் சிரிப்பும் கும்மாளமுமாக பஸ்ஸில் ஏறினார்கள். அவர்களில் ஒருவன் அடுத்தவனிடம் சியாமளாவைப் பார்த்தபடி, “ சோக்ரி அச்சி ஹைஎன்று சொல்லிக் கொண்டே சியாமளஈவின்  பக்கத்தில் அமர்ந்தான்.
பாபுவின்  உடலில் திடீரென்று உஷ்ணம் பாய்ந்தது, காலியாயிருக்கும் பெண்கள் இருக்கையில் அமர்வது அநாகரிகம் என்றுதானே இவன் அவளை விட்டு வேறு இருக்கையில் அமர்ந்தான். அப்படி இருக்க வேறொருவன் தன்  காதலியின்  பக்கத்தில் உட்காருவதை பாபுவால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
மிஸ்டர், அது பெண்கள் சீட். அங்கே உட்காராதீர்கள்.”
இவங்களே ஏதும் பேசாமல் இருக்க , இவரப் பாருடா.”.என்று ஒருவன் சொல்ல எல்லோரும் சிரிக்க பாபுவுக்கு  அவமானமாய்ப் போய்விட்டது.
“ ஏய்,மிஸ்டர் உனக்கு உட்கார இடம் வேண்டும்  அவ்வளவுதானே. இங்கே என் இருக்கையில் உட்கார். அந்த இடத்தைக் காலி செய்

“ நான் இங்க உட்கார்ந்தா உனக்கென்ன போச்சு. உன் வேலையைப் பார்ப்பியா....
“ எனக்கென்ன போச்சா... அவள் என் வுட்பீ டா. கண்டவனெல்லாம் அவள் பக்கத்தில் உட்கார சம்மதிக்க மாட்டேன்என்று கூறி அவனைப் பிடித்திழுத்து அந்த இடத்தில் இவன் அமர்ந்து கொண்டான். இவன் இழுத்ததனால் கோபம் கொண்ட அவனும் அவன் நண்பர்களும் பாபு மேல் பாய ஒரு சிறிய கைகலப்பு நடந்தது. நல்ல வேளை பஸ்ஸில் இருந்தவர்கள் தடுத்து,சண்டை இட்டவர்களைப் பிரித்து விட்டார்கள்.
“ அந்தப் பெண்ணுக்கே அப்ஜெக்‌ஷன் இல்லாதவரை இவனுக்கு என்னாயிற்றுஎன்று அவர்கள் பேசிக் கொண்டதைக் கேட்டதும் பாபுவுக்கு கோபம் சியாமளாமேல் பாய்ந்தது.
“ உன் வாயில என்ன கொழுக்கட்டையா....பக்கத்தில் வேறொருவன் உட்காரும்போதே எழுந்திருக்கச் சொல்லி இருக்க வேண்டாம்...?என்று அவளைக் கடிந்து கொண்டான். அவள் கண்களில் நீர் துளித்தது. குளிரில் நடுங்கும் கோழி போல் பயத்தில் உறைந்திருந்தாள். சந்தோஷமாய்ப் பொழுதை கழிக்க திட்டமிட்டவர்களுக்கு இந்த நிகழ்வுகள் சிறிது சலனத்தை ஏற்படுத்தி விட்டது.

இது பரவாயில்லை. நான் கூட இருந்தேன்.நீ தனியாக எங்காவது போகும்போது இம்மாதிரி நடந்தாலென்ன செய்வாய்...?”
அவன் அருகில் உட்காருவதில் எனக்கு என்ன நஷ்டம்... என் அண்ணன் என்றோ தம்பி என்றோ நினைத்துப் போவேன்
அடிப்பாவி....நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் என்று பாரதி பாடிய பெண்மாதிரி இருப்பாய் என்றால் ஒரேயடியாக சாத்வீகப் பறவையாக இருக்கிறாயே ....ரௌத்திரம் பழக வேண்டும்..நீ.....”
அதுவே நானில்லாமல் வேறொரு பெண்ணாக இருந்திருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் ....?”
என்ன செய்திருப்பேன்..?தெரியலியே ஹூம்..! பேசாமல் இருந்திருப்பேன். எல்லோரும் என்காதலிகளா என்ன...?YOU ARE MINE. I HAVE TO TAKE CARE OF YOU.”

இருந்தாலும் நீங்க ரொம்பப் பொசசிவ்.. அப்பா... என்ன கோபம் .அவர்கள் எல்லோரும் சேர்ந்து அடித்து விடுவார்களோ என்று பயந்தே போனேன். “
அட அசடே...!இந்த மாதிரிப் பொது இடத்தில் அதையெல்லாம் தடுத்து விடுவார்கள். நீ என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் எனும்போதே எனக்கு அசுர பலம் வந்து விடும். “

பஸ்ஸை விட்டு இறங்கி இருவரும் லால்பாக் நோக்கி நடக்கத் துவங்கினார்கள்.. நல்ல காற்று வாங்கவும் பொழுது போகவும் வேடிக்கைப் பார்க்கவும், காசு பணம் அதிகம் செலவு செய்யாமல்ஒருவரை ஒருவர்  பார்த்துக் கொண்டே கடலை போட லால்பாக் பூங்காவைவிட பெங்களூரில்  சிறந்த இடம் ஏதுமில்லை. தென்றல்  வந்து தழுவிச் செல்ல மௌனமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே  இருக்க பெங்களூரில் லால்பாக் சிறந்த இடம்தான்
என்னதான் தென்றலில்  மகிழ்ந்தாலும்  ” பஸ்ஸில் பயணித்ததால் உடம்பு கசகச வென்று இருந்தது   ஒருவரை ஒருவர் தொட்டாலும் ஒட்டும் ஐ மீன் நாம் ஒருவரை ஒருவர் தொட்டாலும்  ஒட்டும் மணமானபின்னால் என்றால் பரவாயில்லை .

 ச்சீ  போ. “

இத இதத்தான் எதிர்பார்த்தேன். எங்கே இன்னொரு முறை சொல்லு. ‘ச்சீ போஎன்று நீ சொல்லும்போது உன் கண்களையும் வாயையும் பார்த்துக் கொண்டிருக்கும்போது உடம்பெல்லாம் சிலிர்க்கு.......தடி
 சியாமளாபாபுவைப் பார்த்து முறைப்பதுபோல் பாவனை செய்தாள்
.” கடலை போட்டது போதும் வாங்க உட்கார்ந்து ஏதோ பேசவேண்டும் என்றீர்களே”
என்னத்தப் பேச.. ...உன்னைப் பார்த்துக்கொண்டே இருக்கணும் போல இருக்கு.”
ச் சீ. போ. “

     நடந்து கொண்டு பேசும்போது பேசுவதில் கோர்வை இருக்காது. மனசும் செல்லாது. எங்காவது ஓரிடத்தில் இருந்துதான் பேச முடியும்.

       “ அப்படியானால் இங்கேயே இப்படியே நின்று சொல்லுங்கள் “

       “இங்கேயேவா.? ப்ரைவஸி கொஞ்சம் கூட இல்லையே ஹூம்.! சரி நடந்து கொண்டே பேசலாம். முக்கிய விஷயம் பேசும்போது அங்கேயே நின்று விடுவேன். சரிதானே?

       “ எனக்கு சரிதான், பேசுங்கள்..கேட்கிறேன். “

       என்ன பேசுவது ,எப்படிப் பேசுவது என்றே மறந்துபோச்சு சியாமளா.உன்னிடம் ஆயிரமாயிரம் பேச வேண்டும் என்று மனசு துடிக்குது. கண் உன்னையே பார்த்துக் கொண்டு இருப்பேன் என்கிறது. வாய் சத்தியாக்கிரகம் செய்கிறது. “

       “ சத்தியாக்கிரகத்திலும் சண்டித்தனமான சத்தியாக்கிரகம் போலிருக்கு. “
சியாமளாவுக்கும் பாபுவுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பேசுவதற்கு தைரியம் வந்தது. பேச்சும் வளர்ந்தது.

       “ என்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய், சியாமளா..?

       என்ன நினைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை நினைக் கிறேன்.
விளையாட்டுக்குச் சொல்ல வில்லையே. ?
      
       இல்லை.

       நிச்சயமாக...? :

       நிச்சயமாக.

       “ சியாமளா, எனக்குத் தாயாக, தாதியாக, துணையாக,நண்பனாக, சேயாக எல்லாம் நீ இருக்க வேண்டும் என்று நான் மனதார ஆசைப் படுகிறேன். சுருங்கச் சொன்னால், என்னில் உன்னையும் , உன்னில் என்னையும் காணத் துடிக்கிறேன். அந்த எண்ணம் உனக்குண்டா, சியாமளா.?
       பேசிக் கொண்டே நடந்து சென்றவன் உணர்ச்சிவசப்பட்டு நின்று விட்டான். அவன் கண்களில் நீர் பனித்திருந்தது.
      சியாமளா பதில் பேசவில்லை.அவளால் முடியவில்லை.. பாபு தன்னை அழைத்ததன் காரணம். அவள் ஓரளவுக்கு யூகித்திருந்தாலும் உணர்ந்து கொள்ள முடியாத ஒரு சஞ்சலம் இருந்தது. உணர்த்தப் பட்ட பின்போ, அதன் இன்பச் சுமையில் இயந்திரியங்கள் எல்லாமே செயலிழந்து நின்றன.

     பூங்காவில் சென்று கொண்டிருந்த சிலர் இவர்களை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டுப் போவதைக் கவனித்த பாபு,உடனே தன்னிலை வரப் பெற்றான்.

      “ ஐ ஆம் சாரி, சியாமளா. உன் மனதை என் பேச்சாலும் செய்கையாலும் புண் படுத்தி விட்டேன். உண்மையாகவே நான் வருத்தப் படுகிறேன். என்னை மன்னித்து விடு. சியாமளா. “

      “ஏன் இப்படி என்னென்னவோ மாதிரிப் பேசறீங்க.?நான் என்னதான் அப்படி தவறு செய்தேன். ?

      “ என் பேச்சு உனக்குப் பிடிக்கவில்லை என்று உன் மௌனத்திலேயே தெரிஞ்சு போச்சே.! அதுவே என் தவறுதானே.

      “ மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி என்பார்களே.. அது மாதிரி இருக்கக்கூடாதா.?

      வாட்.? சியாமளா நான் கேட்பது, பொய்யில்லையே “

      எளிதில் உணர்ச்சி வசப் படும் பாபுவுக்கு, அதை எளிதில் அடக்க மட்டும் தெரிய வில்லை. சந்தோஷத்தின் எல்லைக் கோட்டுக்கே சென்றவன் தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து சற்று முன்பு வாங்கிய சாக்கலெட்டுகளை சியாமளாவிடம் அள்ளிக் கொடுத்தான். அவனுடைய செய்கைகளை எல்லாம் அவளால் அனுமானிக்க முடியவில்லை. சில சமயம் குழந்தைத் தனமாகப் பட்டது. சில சமயம் உணர்ச்சி வசப் படுத்தியது

    "உங்கள் மேல் எனக்கு ஒரே கோபம். தாயாக, தாதியாக, துணையாக, நண்பனாக, சேயாக என்றெல்லாம் நினைக்க விரும்பும் நீங்கள் முக்கியமாக ஒரு பெண் விரும்பும் ஸ்தானத்தை எனக்குத் தர விரும்ப வில்லை. உங்களுக்கு மனைவியாக என்று மட்டும் கேட்க வில்லை. அதற்கு எனக்கு அருகதை இல்லை என்று உணர்த்தி விட்டீர்கள். “ சியாமளாவுக்கு சொல்லும்போது அழுகையே வந்து விட்டது.
    “ சியாமளா என்னை நீ தவறாகப் புரிந்து கொண்டாய். உன்னை மனைவியாக அடைய நான் பெரும் பேறு செய்திருக்க வேண்டும். நான் அப்படிக் கேட்க வில்லை என்றால் அது எனக்கே விளங்காத புதிர் போன்ற உணர்ச்சியால்தான் சியாமளா. எல்லாம் நல்ல படியாக ஆண்டவன் அருளால் நடக்கும் என்றால் இன்னும்சில காலம்  கழிந்ததும் உரிமையொடு உன்னைக் கேட்பேன்..நீதான் என் மனைவி என்று பெருமையாகப் பேச அவகாசம் தேவை. அதுவரைக்கும் என்னால் அப்படி நினைத்துப் பார்க்கவே பயமாய் இருக்கிறது.

     உங்களைப் புரிந்து கொள்வதே கஷ்டமாக இருக்கிறது. எதற்கு  அவகாசம் தேவை என்று நான் தெரிந்து கொள்வதில் தவறு இருக்காதே.?

            "வேண்டாம் சியாமளா,இன்பநினைவுகளில் நீந்தும் நான் உன் கேள்விகளுக்கு பதில் சொல்ல நேரிட்டால் அது உனக்கும் சரி எனக்கும் சரி துன்பத்தைத்தான் தரும். தயவு செய்து என்னை வற்புறுத்தாதே.

     முக்கியமாய் கேட்க வேண்டியதை பாபுவால் கேட்க முடிய வில்லை என்றால், அதற்கு முக்கிய காரணம்,பாபுவுக்கு விளங்காத எச்சரிக்கையை அவன் மனம் அவனுக்கு அளித்தது.தான். தான் நீண்ட காலம்  வாழமாட்டோம் ,விரைவிலேயே இறந்து விடுவோம் என்ற இனம் தெரியாத premonition புதிர்தான் சியாமளாவை மனைவியாகும்படி அவனால் கேட்க முடியாமல் செய்தது. நிகழ் காலத்தின் கட்டுப் பாட்டுக்கு அடங்க மறுக்கும் கற்பனையின் வேகம்தான், அவனுடைய உணர்ச்சியின் வேகத்துக்குத் தடை போட்டது. சியாமளாவைப் பொறுத்தவரை புதிர் புதிராகவே நின்றது. அது விடு படாத வரைக்கும் அவளுக்கு மன அமைதி இருக்காது. இருந்தாலும் பாபுவின் வேண்டு கோளுக்கு இணங்கி சிறிு நேரத்ுக்கு  அவள் அதற்கு மேல் ஒன்றும் கேட்க வில்லை. ஒருவரைப் பற்றிய ஒருவர் சிந்தனையில் இருவரும் லயித்தவராக அவர்கள் நடந்து கொண்டே வந்தனர்.. 
பாபு எதையோ மறைக்கிறான் என்று மட்டும்புரிந்தது  அவனுடன்  சேர்ந்து வாழப்போகும் அவள்  அவனது எல்லா எண்ணங்களுக்கும் உரியவள்தானே என்று நினைத்தாள்
”பாபு எதையோ சொல்ல  முடியாமல் நீங்கள் தவிப்பது புரிகிறது அது எதுவானாலும் எனக்கும்  தெரியவேண்டும் என்னும் உரிமை எனக்கு இருக்கிறதுஅல்லவா.  நீங்களே சொன்னபடி தாயாக, துணையாக, நண்பனாக எல்லாமுமாக இருக்க விரும்புகிறேன்  உங்களது தவிப்பை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ளீஸ்’’
பாபு தன்னை ஒரு இருதலைக் கொள்ளி எறும்பாக உணர்ந்தான் சொல்ல முடிந்தால் இது பைத்தியக்கார எண்ணம் என்று சியாமளா கூறலாம் தனக்கே காரணம் தெரியாத  இனம் புரியாத எண்ணம் என்று தெரிகிறதே  ஒரு வேளை சியாமளா லேட்டெரலாக எண்ணி இதற்கு ஒரு உபாயமும் தரலாம்
“ எனக்கே புரியாத  எண்ணம் இது சியாமளா. நான் இன்னும் சில காலத்தில்   இறந்து விடுவேன்  என்று எண்ணம் வலுக்கிறது  இதற்கு காரணம் ஏதுமில்லை. ஒரு ப்ரிமானிஷன் தான்  என்றும் தெரிகிறது அதனால்தான்  அவகாசம் கேட்டேன் . இருந்தாலும் அது உன் வாழ்க்கையை பாதிக்கக் கூடாது அல்லவா.  அதனால்தான் என்னை மணக்கச் சொல்லும்  தைரியம் இப்ப இல்லை “ என்று முடித்தான் பாபு.
“எனக்கும்  ஒரு மாதிரியான ப்ரிமானிஷன்   தோன்றுகிறது.  சேர்ந்து வாழும்  நாம் சேர்ந்தே போவோம்  என்பதுதான் அது பிறப்பு என்றால் இறப்பும் கூடவே இருக்கும் ஆனால் அதையே நினைத்து மருகுவது சரியில்லை. எனக்கு நீங்கள் உங்களுக்கு நான் என்பது நிர்ணயிக்கப் பட்டிருந்தால் WE WILL LIVE  TOGETHER AND LEAVE TOGETHER சேர்ந்தே வாழ்வோம் இறப்பிலும்  சேர்ந்தே போவோம் எனக்குள் தோன்றும்  நீங்கள் சொல்லும் ப்ரிமானிஷன் அது  சீயர் அப் என் கணவா” என்று கூறிச் சிரித்தாள் சியாமளா இனம் தெரியாத காரணத்துக்காக இனிய வாழ்வைத் தொலைக்க இருந்ததை எண்ணி வெட்கினான் பாபு.

 இருந்தாற்போலிருந்து பாபு ,சியாமளா, நீ என்னோடு இருக்கும்போது எனக்கு பாரதியின் காற்றிலேறியவ் விண்ணையும் சாடுவோம் காதற் பெண்கள் கடைக் கண் பார்வையிலேஎன்ற பாடலின் நினைவுதான் வருகிறது. அது எவ்வளவு உண்மை என்று புரிகிறது, “ என்றான். 



21 comments:

  1. திடீரென முடிந்து விட்டதே? அவ்வளவுதானா? தொடருமா?

    ReplyDelete
  2. திடீரென முடிந்து விட்டதே? அவ்வளவுதானா? தொடருமா?

    ReplyDelete
  3. அநியாயத்துக்கு நீளமான கதை! கொஞ்சம் சுருக்கி இருக்கலாம், அல்லது இரு பகுதிகளாக வெளியிட்டிருக்கலாம். :)

    ReplyDelete
  4. நீளம்தி அதிகம்தான்
    ஆனாலும் திடீரென்று முடிந்துவிட்ட உணர்வு

    ReplyDelete

  5. @ ஸ்ரீராம்
    / திடீரென முடிந்து விட்டதே அவ்வளவுதானா.? தொடருமா/முடிவு தெரிகிறதல்லவா இப்படி எழுதுவது ஜீஎம்பியின் டச்.....! வருகைக்கு நன்றி ஸ்ரீ

    ReplyDelete

  6. @ கீதா சாம்பசிவம்
    கதையின் நீளம் பற்றி நினைப்பவர்கள் கதையில் சொல்லப்பட்ட விஷயங்கள் பற்றியும் நினைக்க வேண்டும் இன்னும் சுருக்கினால் சொல்லவருவதைச் சரியாக சொல்ல முடியாது. ஆமாம் சிறு கதைக்கு இவ்வளவு நீளம்தான் இருக்கலாம் என்று இருக்கா என்ன ,வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  7. @ கரந்தௌஇ ஜெயக்குமார்
    கதை எழுதத்துவங்குன்போது நீளம் பற்றி நினைக்கவில்லை. முடிவு திடீரென முடிந்தமாதிரி இருப்பது என் பாணி. இல்லையென்றால் நீளம் இன்னும் அதுஇகமாகி விடும் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  8. ஐயாவின் பாணியே தனி!..

    அருமை..

    ReplyDelete

  9. @ துரை செல்வராஜு
    உயர்வு நவிற்சியணி என்று ஏதோ சொல்வார்களே அது இல்லையே வருகைக்கு நன்றி

    ReplyDelete
  10. அடடா அற்புதம்
    அந்த வயத்துக்கே உரிய
    தேவையற்ற அச்சமும் பயமும்
    விடலைத் தனமும்
    மிகக் குறிப்பாக முடிவெடுக்கும் விதமும்
    மிகவும் ரசித்துப் படித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. உளவியல் சார்ந்த காதல் கதை. அருமை. பாரதியோடு முடித்த விதம் பிடித்திருந்தது.

    ReplyDelete
  12. அன்பின் ஐயா..

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது..
    அன்றைய காலகட்டத்தில் - இப்படியெல்லாம் தோன்றியது தான்..

    ஆனால், மூத்த பிள்ளை.. குடும்பம் காக்க வேண்டுமே..

    தங்கள் பதிவில் உண்மையாகவே மனம் லயித்தது...

    ReplyDelete

  13. @ ரமணி.
    உஷ் ... அப்பாடா...கதையைப் படித்து ரசித்ததற்கு நன்றி ஏற்கனவே வந்திருந்த பின்னூட்டங்கள் எழுதுபவன் மனதைப் புரிந்து கொள்ளப்படாதவையாக இருந்தது

    ReplyDelete

  14. @ சிவகுமாரன்
    சென்ற ஒரு பதிவின் பின்னூட்டத்தில் வாசகர் ஒருவர் காதல் கதை ஒன்று எழுத வேண்டினார் , குறிப்பாக 25 வயதுக்குள்ளானவருக்கு என்று அப்போது தோன்றிய சில கருத்துக்களே கதைக்கு வித்து. சற்றே வித்தியாசமாக அணுக முயன்றேன் கதாபாத்திரங்களின் பின்னணி ஓரளவு விளங்க வேண்டி இருந்தது எனக்கு ஒரு எண்ணம் BOYS ARE IMPULSIVE; GIRLS ARE PRAGMATIC இதைக் கதையீல் கொண்டுவர முயன்றேன் உளவியல் சம்பந்தப்பட்டது என்பது மிகச்சரி வருகைக்கு நன்றி சிவகுமாரா

    ReplyDelete

  15. @ துரை செல்வராஜு.
    மீள்வருகைக்கு நன்றி . எழுதும் கருத்து வாசகருக்குப் போய் சேரவில்லையோ என்னும் எண்ணமே பதிவின் பின்னூட்டங்கள் தெரிவிக்கவே நான் அம்மாதிரி ஒரு மறு மொழி எழுதினேன்

    ReplyDelete
  16. GMB சார் !
    காதல் கதை கேட்ட வாசகன் நான் தான்!
    நன்றாகவே எழுதியிருக்கிறீர்கள்.
    காதலிக்காக காத்திருப்பதும்,பஸ்ஸில் சண்டை போடுவதும், உரையாடல்களின் விறுவிறுப்பும் கதையை சுவாரஸ்யமாக்கியுள்ளன.
    நீளம் கதைக்கு பிரச்னையே அல்ல . அது லகுவாக ஒழுகிச்செல்லும் வரை.
    சொற்ப காலத்தில் ரசிக்கும்படி எழுதி என் நேயர் விருப்பத்தை பூர்த்தி செய்ததிற்கு நன்றி ! வாழ்த்துக்கள் சார்!

    ReplyDelete
  17. சாவிலும் இணை பிரியாத காதல் வாழ்க!

    வாழ்க்கைக்குப் பிறகும் தொடரும்காதல் என்பதால் ,கதையின் நீளம் அதிகம்இருப்பதில் தப்பில்லை :)

    ReplyDelete

  18. @ மோகன் ஜி
    வசிஷ்டர் வாயால் ப்ரம்ம ரிஷி என்று கேட்டதுபோல் இருக்கிறது எங்கேவராமல் இருந்து கருத்து சொல்லாமல் போய் விடுவீர்களோ என்றிருந்தது ரசிக்கும்படி இருந்தது என்பதைக் கேட்க மகிழ்ச்சி ஜி வருகைக்கு நன்றி

    ReplyDelete

  19. @ பகவான் ஜி
    இன்னமாதிரி எழுது என்று சொன்னால் அது கடினம் இருந்தாலும் காதல் உணர்வு வருமாதிரி எழுதி இருக்கிறேன் என்றே தோன்று கிறது வருகைக்கு நன்றி ஜி

    ReplyDelete
  20. arumai. aanaal mudivil innum inimai irunthu irukalam. :) satendru mudinthal pol unarvu. :)

    ReplyDelete
    Replies
    1. அன்பின் தேனம்மைக்கு வாசித்துகருத்திட்ட தற்கு நன்றி இன்னும் தொடருமோ என்ற எண்ணம் வரும்போதே கதையை முடிப்பது என் பாணியாகி விட்டது என் சிறு கதைகளை வாசித்துப்பார்த்தால் புரியு ம் மின்னூலில் என் சிறு கதை தொகுப்பு இருக்கிறது

      Delete