பிறந்த நாளும் மண நாளும் (11-11 02017 )
--------------------------------------------------------------
வணக்கத்துடன் பதிவு தொடங்குகிறது மயிலைப் பாருங்கள் வரவேற்கிறது
பிறந்த நாளும் மணநாளும்
ஆண்டொன்று போக அகவை
ஒன்று கூட
இன்றுறங்கி நாளை எழுவேனா என்றறியாமலேயே
சேர்த்துவிட்டேன் ஏழு பத்துகளுடன் ஒன்பதாண்டுகள்
ஆசை எனும் அரவமே அனைத்து வினைகளுக்கும்
ஆதி காரணம் என்றறிந்தும் பாசவலையில் கட்டுண்டு
காலம் கழிந்து விட்டது.. அன்பால் கட்டுவதும்
அன்பினால் கட்டப் படுவதும் இன்பம்தான்
மறுப்பதற்கில்லை, மறப்பதற்கில்லை. .புவியில்
வந்துதித்த நாளே இல்லத் துணையுடன் சேர
தேர்ந்தெடுத்த நாளும் எனும்போது கூடுகிறது
மகிழ்ச்சி குறையில்லாப்
பொலிவுடன்
அல்லல்கள் பலவற்றோடு அனுபவங்கள்
கற்றுத் தந்த பாடங்கள் அசைபோட்டு உணரும்போது
இன்னுமொரு வாழ்வு அமையுமானால் , கேள்வி எழுகிறது,
இதையே தேர்ந்தெடுப்பேனா என்று. .நிச்சயமாய் இதையே
தேர்ந்தெடுப்பேன், என்னில் இருந்த சில குறைகள் நீக்க
எனக்கொரு வாய்ப்பு அது நல்குமல்லவா.?
குறைவற்ற வாழ்வுதனை நிறைவாக வாழ்ந்து விட்டேன்.
இனி எனக்கொரு குறையிலை நான் தயார் யாரும்
அறியாத அண்டப் பேரண்ட வெளிக்குள் ஒளியிலோ இருளிலோ
நான் நுழைய, இருப்பினும் அனுபவங்கள் பகிர எனக்கங்கொரு
வலைத்தளம் இருக்குமா, தெரியவில்லையே..!
 |
தந்தை |
 |
தாய் |
 |
நான் |
 |
மனைவி |
 |
எங்கள் திருமணத்தின் போது (1964) |
 |
சஷ்டியப்த பூர்த்தியில் (1998) |
எங்கள் மண நாளில் அவளுக்கும் வாழ்த்து சொல்வது கடமையல்லவா
ஏதுமறியாப் பாவையாய் இளங்கன்னியாய்
என் கைப்பிடித்தவளைக் காணும்போதெல்லாம்
என் மனம் ஏனோ அல்லல் படுகிறது
வெறும் களிமண்ணாய் வந்தவளை நன்கு பினைந்து
குயவன் கைப் பானையாய் வளைத்துச் செதுக்கினேன்
எனப் பெருமைப் படுவாள் பாவம்
அவள் அறிய மாட்டாள் ஐம்பத்திமூன்று ஆண்டுகள்
என்னுடன் இருந்தது எத்தனை அரிய செயல் என்று
இன்று ஓர்க்கிறேன் தாயில்லா என்னைத் சேய் போல் கவனித்தாள்
தாரமும் ஒரு தாய்தானே
அன்னையவளைத் தேடி நான் அலைந்தபோது,
சுந்தரி இவளைக் கண்டேன் என் சிந்தையுள்ளே -,
நிறுத்தினேன் இவளை என் அகத்தினுள்ளே.,
தொலைந்ததே என் துயரங்கள் என்னை விட்டே.
யாதுமாகி நின்றாள்.. தாய்தன்னைக் காணாதவன்
தாரமாக வந்தவளை நெஞ்சமெலாம்
நிரப்பி , சஞ்சலங்கள் நீக்கிய சேயானேன்.
.
பிள்ளையாய்ப் பிறந்து ,பாலனாய் வளர்ந்து,
காளையாய்க் காமுற்று, எனதவளைக் கைப்பிடித்து,
இளமை ஒழிந்து மூப்புறும் நிலையில்
எல்லாம் செத்து, நாளை எண்ணுகையில்
எனக்கு நானே அழாதிருக்க,
காக்கின்ற கண்களால் கருணை வெள்ளம்
கரைபுரள, பூக்கின்ற புன்னகையால் ,
ஆறாத மனப் புண்ணின் அசைவலைகள்
அடங்கவே அளித்தருளி அன்னையாய்
,என்னை ஆட்கொள்ள வந்தவளே எனக்கு நீ
யாதுமாகி நிற்கின்றாய் வாழி வாழியவே
பிறந்த நாள் வாழ்த்து
 |
வாரிசுகளுடன் |
 |
மகன்களுடன் |
இப்போதெல்லாம் கேக் வெட்டாமல் பிறந்த நாள் இல்லையே
 |
பிறந்த நாள் கேக்
பதிவின் முலமும் முகநூல் மூலமும் அஞ்சல் மூலமும் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள் |