Friday, November 2, 2018

எண்ணங்கள் இனிதானால்



எண்ணங்கள் இனிதானால்
  நான் சும்மா இருக்கும்போது- நான் எப்போது சும்மா இருக்கிறேன்.? எதையாவது சிந்தித்துக் கொண்டிருப்பது சும்மா இருப்பதாகுமா.?இப்போது நான் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்?சும்மா இருக்கும் போது ( மீண்டும் சும்மா) எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் சிலரது முகங்கள் கண்முன்னே ( மனக் கண்ணில் ) காட்சி அளிக்கின்றன. அப்போது அவரைப் பற்றிய சில நினைவுகள் முட்டி மோதுகின்றன. பொதுவாகவே நான் யாரையும் குறிப்பிட்டு எழுதுவதில்லை. என்றாலும் அம்மாதிரி பாத்திரங்கள் பல சமயங்களில் என் எழுத்துக்களில் புகுந்து விடுவது உண்டு. நானும் அந்த மாதிரி எழுதும்போது யார் மனதும் புண்படாதபடி எழுதுவதில் கவனமாய் இருப்பேன். இப்போது ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறேன். அந்த நண்பர் என் வீட்டுக்கு வந்திருந்தார். எனக்கு ஒரு பழக்கம். நான் எதையும் துருவித் துருவி கேட்பதில்லை. . இந்த நண்பர் என் வீட்டுக்கு வந்திருந்தபோது எதையோ என்னிடம் சொல்லத் துடிக்கிறார் என்று தெரிந்தது. முகம் மிகவும் வாடி இருந்தது. பொதுவாக அனைவரும் நலமா என்று கேட்டேன்.அனைவர் என்ன....? இருப்பது நானும் என் மனைவியும் மட்டும்தான்” என்று சலித்துக் கொண்டார். குழந்தைகள் பற்றிக் கேட்டேன். ஐந்து முறை கர்ப்பம் தரித்தும் அனைத்துமே குறைப் பிரசவமாகி விட்டது என்று கூறி கண்கலங்கினார்.இந்த முறை ஆறாவது கர்ப்பம் ஆறு மாதமாகிறது கவலையாய் இருக்கிறது என்றார். நான் அவரைத் தேற்றும் விதத்தில் “ இந்த முறை கவலைப் படாமல் இரு. உன் மனைவி நிச்சயமாய் ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுப்பாள் என்று கூறினேன். பிறகு அவர் மனம் உற்சாகப் படும் விதத்தில் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அவர் போன பிறகும் அவரது நிலை குறித்த எங்கள் கவலை தொடர்ந்தது. 
இது நடந்து சிலகாலம் வரை அந்த நண்பர் என் வீட்டுக்கு வரவில்லை. திடீரென்று ஒரு நாள் முகமெல்லாம் பூரிப்புடன் வந்து எங்களுக்கு இனிப்பு கொடுத்தார். அவரது மனைவி ஒரு பெண்மகவை நலமாக ஈன்றெடுத்திருக்கிறாள் என்று சொன்னார். அத்துடன் விடவில்லை “ உங்கள் வாய் முகூர்த்தமும் ஆசியுமே எனக்குப் பெண்ணாய் பிறந்திருக்கிறது. நாங்கள் முருகனை சேவிப்பவர்கள். நீங்கள் முருகக் கடவுள் சம்பந்தப் பட்ட ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொடுங்கள் அந்தப் பெயரையே வைக்கிறோம்” என்றார். இந்த எதிர்பாராத வேண்டுதலைத் தட்ட முடியவில்லை. பிறந்தது பெண்குழந்தை ஆதலால் “ கிருத்திகா அல்லது கார்த்திகா” என்று பெயர் சூட்டுங்கள் என்றேன் அவர் முகமும் அந்த நிகழ்வும் எந்த முகாந்திரமும் இல்லாமல் நினைவுக்கு வந்து எழுதிவிட்டேன்.இப்போது அவரும் அவரது மகளும்  எங்கோ நலமாயிருக்க வேண்டுகிறேன்  

30 comments:

  1. உண்மைதான் ஐயா
    முற்றிலும் மறந்துபோன சம்பவங்கள் கூட திடீரென்று நினைவில் தோன்றி நம்மையே ஆச்சரியப்படுத்தத்தான் செய்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. சிலநிகழ்வுகள் நினைவில் இருப்பதுபோல் சில நபர்களின்பெயர்கள் நினைவிலிருப்பதில்லை

      Delete
  2. நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்!

    ReplyDelete
    Replies
    1. தலைப்பிலேயே உணர்த்த முயன்றிருக்கிறேன்

      Delete
  3. நினைவோட்டங்களை (சும்மா இருக்கும்போது) சுழல விடுங்கள் ஐயா எங்களுக்கும் இப்படி சம்பவங்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டும்.

    ReplyDelete
    Replies
    1. பெரும்பாலான என் பதிவுகளே நினைவுகளின் சுழற்சிதானே

      Delete
  4. சும்மா இருப்பதே சுகம். ஆனால் அந்த சும்மா சும்மா கிடைத்து விடாது.ஏனெனில் மனம் ஒரு குரங்கு. மனமும் சும்மா இருந்தால் அது தியானம்.

    ReplyDelete
    Replies
    1. தியானம் என்பதே அரிதானதுதானோ

      Delete
  5. ரசித்த நிகழ்வு. அப்புறம் அவர்களைச் சந்திக்கவேயில்லையா

    ReplyDelete
    Replies
    1. சந்திக்க வில்லை அதைவிட வருத்தம் தருவது அவரின் பெயர் கூட நினைவுக்கு வராததுதான்

      Delete
  6. நன்று. நேர்மறை எண்ணங்களால் வாழ்வு மேம்படும்.

    நிச்சயம் அவரது குடும்பம் நலமாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. பிரர்தனை நிறைவேறும்

      Delete
  7. சார் இந்த மாதிரி எனக்கும் சிலரது நினைவுகள் வரும். உடனே தொடர்பு கொள்ள நினைத்து தொடர்பு கொள்வேன். சிலர் தொடர்பு கொள்ள முடியாமல் போனதும் உண்டு.

    அழகான நிகழ்வு சார். முடிந்தால் தொடர்பு கொள்ளப் பாருங்களேன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அவர் அரக்கோந்த்தை சேர்ந்தவர் என்பதும் நல்ல நண்பர் என்பதும் நினைவுக்கு வருகிறதுநான் பணியிலிருந்துஓய்வுபெற்றே 27 அண்டுகள் ஆகி விட்டது பெயரும் நினைவுக்குவருவதில்லை எப்படித் தொடர்புகொள்ள முடியும் வருகைக்கு நன்றி கீதா

      Delete
  8. நம் நல்லெண்ணங்களும் செயல்களும் நற்செயல்களுக்கு வித்தாக அமையும் என்பதற்கு இது ஓர் உதாரணம் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சார் அதனால்தான் பதிவின் தலைப்பு அப்படி

      Delete
  9. எண்ணங்கள் இனிதானால்?!

    எல்லாமே இனிதாகும்ப்பா

    ReplyDelete
  10. சொல்முகூர்தம் பலிக்கும் என்பார்கள். அதனால்தான் சில சமயம் அபசகுன வார்த்தைகளைப் பேசக்கூடாது என்பார்கள். பலித்துவிடும் என்பார்கள். பகுத்தறிவில் நம்பிக்கை வாய்ந்த கே ஆர் ராமசாமி கடைசியாய்ப் (அது கடைசி என்று அப்போது அவர் உணர்ந்திருக்கவில்லை) ​ பாடிய பாடல்வரிகள் அப்படி அபசகுனமாய்த்தான் அமைந்திருந்தன என்று வாலி புத்தகத்தில் படித்திருக்கிறேன். சில வார்த்தைகள் வெல்லும். சில வார்த்தைகள் கொல்லும்.

    ReplyDelete
    Replies
    1. இந்தப் பின்னூட்டம் எனக்குஒரு நிகழ்வை நினைவூட்டுகிறது என் மகன் சரியாகப் படிக்க வில்லை என்றுஅவனைக் கடிந்து கொள்ளும்போது உருப்படமாட்டாய் என்று ஏதோ சொன்னேன் அதுஅவன் மனதில்நன்கு பதிந்துவிட்டது என் சொல்லைப் பொய்யாக்கவே அவன் மிகவும் உழைத்து முன்னுக்கு வந்தான் என்கசப்பான வார்தைகளே அவனை உழைக்கத் தூண்டியது என்று இன்றும் கூறுவான் கனி இருக்கக் காய்கவர்தல் சரி இல்லைதான்

      Delete
    2. எனக்கும் உங்கள் மகன் போலவே நிரூபித்துக்காட்டும் குணம் உண்டு.

      Delete
    3. எனக்கு நெகடிவ் ஆகவோ இல்லை விளையாட்டுக்கு அறச் சொல் சொல்றவங்கள் பக்கத்திலேயே நெருங்கமாட்டேன். இப்போ சமீபத்தில் என் உறவினர், நான் ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டு (நல்ல டீசண்ட் டிரவுசர்தான்) படுக்கச் சென்றபோது, வேஷ்டி கட்டிக்கொண்டுதானே இருக்கவேண்டும், குலப் பெருமைலாம் நாசமாகப் போகிறதே என்று சொன்னார். நான் வேஷ்டிக்கு உடனே மாறிவிட்டாலும் அவர் உபயோகப்படுத்திய வார்த்தை மிகவும் தைத்தது. என்ன செய்ய... நல்ல சொற்களையே உபயோகப்படுத்த வேண்டும்.

      Delete
    4. சார் உங்கள் மகனைப் போலவும், ஸ்ரீராம்..சொல்லியிருப்பது போலவும்.அதே அதே...எனக்கும் அக்குணம் உண்டு சமீபத்தில் கூட என் வீட்டில் நிறைய நெகட்டிவ் வார்த்தைகள் ஆனால் அதைப் பொய்யாக்க வேண்டும் என்ற ஒரு வைராக்கியம்....பிரார்த்தனை...மனதில் எழுந்து....நல்லது நடந்தது....அதே போல என் மகன் விஷயத்திலும்...அவன் குறைபாட்டை மனதில் கொள்ளாமல் அவனை நீ அங்கு சேர்க்கவில்லை இங்கு சேர்க்கவில்லை, ஸ்லோகம் சொல்லப் பழக்கவில்லை, பல க்ளாஸ்கள் போக வைக்கவில்லை நீ பொஸஸிவ் என்றெல்லாம் வார்த்தைகள் விழுந்தன....என்னைச் சுற்றி..முதலில் வருத்தம் வந்தது.... நான் அவர்களைத் தவறாகவும் நினைக்கவில்லை...ஆனால் அவர்கள் வார்த்தைகளை வைத்தே அதையே என்னை ஊக்குவித்துக் கொள்ள பாசிட்டிவாக மாற்றிக் கொண்டு.....மகனையும் ஊக்குவித்து....என்று தொடர்ந்தது...

      கீதா

      Delete
  11. நல்ல குணம்தானே பாராட்டுகள்

    ReplyDelete
  12. நல்ல விஷயம். எண்ணங்கள் இனிதானால்... நல்ல தலைப்பு.

    ReplyDelete
  13. தலைப்பைப் பாராட்டியதற்கு நன்றி சார்

    ReplyDelete
  14. ஸ்ரீராம் சொன்னது போல அபசகுண வார்த்தைகளை பேசாமல் இருப்பது நல்லது. உயர் அலுவலர் ஒருவர் கீழ்நிலை அலுவலர்களை சஸ்பெண்ட் செயது விடுவேன் என்று மிரட்டுவார். ஆனால் அப்படி செய்பவர் அல்ல. நல்லவர் நேர்மையானவர். ஆனால் அவரே சஸ்பெண்ட் ஆக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
    வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
    தீமை இலாத சொலல்.

    ReplyDelete
    Replies
    1. எந்த சூழ்நிலை யாரால் சொல்லபடுகிறது என்பதும்யோசிக்க வேண்டியது கூடியவரை பிறர் மனம்புண்படாதபடி பேசுதல் நல்லது

      Delete