என் மனைவிதான் .... இருந்தாலும்...
------------------------------------------------
பொழுது விடிந்துவிட்டதா.?
தெரியலியே...பொழுது விடிவதை சேவல் கூவக் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்பார்கள்.
நகரங்களில் சேவலாவது கூவுவதாவது. சில நாட்கள் முன்பு வரை அதிகாலையில் வீட்டின்
பின்புற மரத்திலிருந்து குயில் கூவும். ஆனால் குயில் கூவுவதைக் கேட்டு
விடிந்துவிட்டதா என்று தீர்மானிக்க முடிவதில்லை. அவை சில அகால நேரங்களிலும்
கூவுகின்றன. அவள் புரண்டு படுத்தாள்.
உடம்பு ஒரு கடிகாரம் மாதிரி. பழக்கப் பட்ட காரியங்களுக்குக் கட்டுப் படும்
பொதுவாக விழிப்பு வந்தாலேயே
பொழுது விடிந்து விட்டது என்று அர்த்தம். சாலையில் நடமாட்டங்கள் அதிகரிக்கத்
தொடங்கும். ஐடி கம்பனிகளில் வேலை பார்ப்போரைக் கூட்டிப் போக வரும் கார்களின்
சத்தம் கேட்கத் துவங்கும். அடுத்து இருக்கும் பால் வினியோகக் கடைக்குப் பால் வண்டி
வந்த சப்தம் கேட்கிறது. பக்கத்துவீட்டு நாய் தன் எஜமானைக் கூப்பிடக் குரைக்கும்
வித்தியாசமான சப்தம் கேட்கிறது. பாவம் அது. வாயில்லா ஜீவன். அதற்கும்
காலைக்கடன்கள் இருக்கிறதே. அதன் எஜமானர் அதட்டிய படியே அதன் சங்கிலியை
கட்டியிருந்த தூணிலிருந்து அவிழ்க்கும் சத்தம் கேட்கிறது. நிச்சயம் விடிந்து
விட்டது என்று நினைத்த அவள் மீண்டும்
ஒருக்களித்துப் படுத்துக் கொண்டாள் .மங்கிய வெளிச்சத்தில் அருகில் படுத்திருக்கும்
கணவனைப் பார்க்கிறாள். இந்த அதிகாலைச்
சப்தங்கள் அநேகமாக அவர் கேட்டே இருக்க மாட்டார்..பாவம் இந்த அதிகாலைத் தூக்கம்தான்
அவருக்குத் தெம்பு கொடுக்கும்.
அவள் கட்டிலை விட்டு இறங்கினாள்.
அவிழ்ந்திருந்த முடியைப்பின் தலையில் அழுத்திக்கட்டினாள். இன்றைக்குச் செய்ய
வேண்டிய அலுவல்களை ஒருதரம்மனதில் ஓட்டிப் பார்த்தாள். என்ன ஸ்பெஷல் அலுவல்
இருக்கப் போகிறது. காலைக்கடன்களை முடித்து பக்கத்தில் இருக்கும் பால் வினியோகக்
கடைக்குச் சென்று பால் வாங்க வேண்டும். அடுப்பை பற்ற வைத்து நீரைக் கொதிக்க வைத்து
காஃபி டிகாக்ஷன் இறக்க வேண்டும் அவள் கணவனுக்குக் காஃபி திக்காக சுவையாக ஃப்ரெஷாக இருக்கவேண்டும் கீசரை
ஆன் செய்து காலையில் குளித்து முடித்தவுடன் அணிய வேண்டிய உடுப்புகளை பாத் ரூமில்
வைத்தாள். குளிக்கப் போகுமுன் ஸ்தோத்திரப் பெட்டியை ஆன் செய்து அதிலிருந்து வரும்
பாட்டுக்களைக்கேட்டுக்கொண்டே குளிப்பதுடன் கூடவே வாய் தலைக்குத் தண்ணீர்
ஊற்றும்போது
“ அதிக்ரூர மஹாகாய
கல்பாந்த தஹனோபம்
பைரவாய நமஸ்துப்யம் அனுஜ்ஞாம்
தாதுமர்ஹஸி
கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலேஸ்மின் ஸன்னிதிம்குரு”
முணுமுணுக்கும்.. அவளது கணவன் ”பொருள்
தெரியாமல் வாய் ஏதேதோ முணுமுணுப்பதால் என்ன லாபம்?அர்த்தம் தெரியாத வேண்டுதலில்
அர்த்தம் கிடையாது”’ என்று சீண்டுவான்.அவளும் “ என்ன அர்தமாயிருந்தால்
என்ன.?தலைக்குத் தண்ணீர் ஊற்றும்போது இந்தப் புண்ணிய நதிகளின் நீர் என் தலையில்
விழுவதாக நான் கற்பிதம் செய்கிறேன்” என்பாள், அவர்கள் வீடு கட்ட
முனைந்தபோதுநீர்நிலை ப்லாட்டின் எந்த பகுதியில் இருக்கும் என்று தெரியாமல்
தவித்தனர். வாட்டர் டிவைனரைக் கூப்பிடலாம் என்று சிலர் கூறினர். அவள்தான் அந்த
யோசனையை நிராகரித்து விட்டாள். ப்லாட்டின் நடுவில் நீர்நிலை இருக்கிறது என்று
சொல்லிவிட்டால் அங்கு போர்(bore) போட முடியுமா.?”இடத்தின் ஒரு
ஒதுக்குப் புறத்தில் bore போடுவோம்.குளிக்கும்போது
நான் வேண்டும் அந்தப் புண்ணிய நதிகள் போரிலிருந்து நீராய்ப் பிரவகிக்கும்” என்று
தீர்மானமாய்க் கூறினாள், bore தோண்டி இனிப்பான தெள்ளிய நீர்
ஊற்றிலிருந்து வெளிவந்து கொட்டியபோது அவளது கணவனும் வாயடைத்து விட்டான். ஆனால்
பதினைந்து வருடங்களுக்குப் பிறகு போரிலிருந்து நீர் வராதபோது புண்ணிய நதிகள் வற்றிவிட்டனவா என்று மீண்டும்
கேலி பேசத் தொடங்கினான். அவளும் சும்மா இருக்கவில்லை. “போரிலிருந்து நீர்
வராவிட்டாலும் குழாய் மூலம் இப்போது காவேரி தானே வருகிறாள்”என்று
வாதாடுவாள்
இவள் ஒரு சராசரி நடுத்தர வர்க்கத்துப் பெண்/ அறிவு ஜீவி
என்று சொல்ல முடியாவிட்டாலும் புத்திசாலி வட்டத்துக்குள் வருபவள். இவளது வாழ்வே
கணவன் பெற்ற குழந்தைகள் உறவினர்கள் போன்றோரோடு பின்னிப் பிணைந்தது. இவளைப்
பொறுத்தவரை எல்லோருமே நல்லவர்கள். , அழகானவர்கள். பொதுவாக எல்லோரும் நல் வாழ்வு
வாழ வேண்டும் என்று எண்ணம் கொண்டவள்.
இள வயதில் குடும்பத்துக்கு உழைத்தே ஓடானவள். இப்படியெல்லாம்
இருப்பவளுக்கும் சில தனிப்பட்ட ஆசைகளோ கருத்துக்களோ இருக்க வேண்டும் அல்லவா. எந்த
வேலையாய் இருந்தாலும் காலையில் அருகில் இருக்கும் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.
அங்கு சென்று என்னதான் பிரார்த்திப்பாளோ அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.செல்லும் பல கோயில்களில் கருவறையில் எண்ணை விளக்கில் கடவுளின் திரு உருவம் தெரிவதில்லை என்றால் நீங்கள் ஊனக் கண்ணால் பார்க்கிறீர்கள். மனக் கண்ணில் உருவம் ஜகத் ஜ்யோதியாய்த் தெரிகிறது என்பாள்.
சிறுவயதிலிருந்தே கோயில்களுக்குச் சென்று வழிபடுவதில்
இவளுக்குத் தனி சுகம். எப்போதும் மனதில் ஏதாவது ஸ்லோகம் ஓடிக்கொண்டே இருக்கும்.
தவறிப் போயும் அந்த சுலோகங்களுக்கு அர்த்தம் கேட்கக் கூடாது, அவளாக ஒரு அர்த்தம்
புரிந்து கொண்டு சொல்லிக் கொண்டிருப்பாள். வாயில் நுழையாத வடமொழி சுலோகங்களை
அவளுக்குத் தெரிந்தபடி உச்சரிப்பாள். வடமொழி மட்டுமல்ல. தமிழிலும் சொல்வது
எல்லாவற்றுக்கும் பொருள் தெரியும் என்று சொல்ல முடியாது. வாழ்வில் இவளுக்கு
லட்சியம்தான் என்ன. ? எப்போதாவது கேட்டால் “எல்லோரும் இன்புற்றிருக்க
நினைப்பதல்லாமல் வேறொன்றும் இல்லை.” என்பாள். நம்ப முடியவில்லை. ஆனால் நம்பிக்கையே
ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறாள்.
நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஒரு சக்தி நம்மை
இயக்குகிறது. வாழ்வில் நிகழும் அனைத்துச் செயல்களுக்கும் நம்மை இயக்கும் அந்த
சக்தியே காரணம்என்ற நம்பிக்கை மட்டும் இல்லாவிட்டால் பலரும் பைத்தியம் பிடித்து தலையைப்
பிய்த்துக் கொண்டிருப்பார்கள். எல்லாவற்றுக்கும் நீயே காரணம் நீயே தீர்த்து வைக்க
வேண்டும் என்று சரணடைந்து விட்டால் மனப் பாரம் குறையும் என்று சொல்லுமளவுக்குத்
தெளிவு பெற்றவள். நாளுக்கு நாள் கோயில்களில் கூட்டம் கூடுவதே கடவுள் நம்பிக்கை
உடையவர்கள் அதிகரித்து வருகிறார்கள் என்றுதானே அர்த்தம் காலங்காலமாக நம்
முன்னோர்கள் சொல்லிச் சென்றதெல்லாம் தவறா என்றும் கேட்பாள்..மாறுபட்ட
சிந்தனைகளையும் செவி மடுத்துக் கேட்பாள். அதிலிருக்கும் நிதர்சன உண்மைகளையும்
உணர்ந்து கொள்வாள். இருந்தாலும் இந்த நிலைதான் சௌகரியமாக இருக்கிறது என்று சொல்லாமல்
சொல்லிச் செல்வாள். . .