Tuesday, February 7, 2012

பணம் என்ன செய்தது.?


                                   பணம் என்ன செய்தது.?
                                   --------------------------------

ஒரு சிற்றூரில் தங்குமிடம் தேடி வந்தான் ஒருவன்.
தங்கும் விடுதி ஒன்றில் ஒரு நூறு ரூபாய் தாளெடுத்து
கல்லாக் காரனிடம் அச்சாரமாய்க் கொடுத்து--இடம்
பார்த்துப் பிடித்தால் தங்குகிறேன் என்றான்.

மேசையில் நோட்டைக் கண்டதும் கல்லாக்காரன்
எடுத்து, அதை அடுத்துள்ள கடையில் பலசரக்குப்
பாக்கிக்கு என கொடுத்து விட்டான்.

பலசரக்குக் காரன் கூட்டுறவுக் கடைக்கு
அதைக் கொண்டு அவன் கடனை அடைத்தான்.

கூட்டுறவுக்காரன் அவன் கூத்தாளுக்கு அதைக்
கொடுத்து அவள் பாக்கியை நீக்கினான்

அவளதை விடுதியின் வாடகை பாக்கியெனக் கொடுத்தாள்.

அங்கிங்கு அலைந்த அந்தப் பணம் மீண்டும்
கல்லாக்காரன் மேசைமேல் வந்தது.

அறை தேடிச் சென்றவன் திரும்பி வந்து
இருக்க இடம் திருப்தி தரவில்லை என்று,
கொடுத்த பணத்தை எடுத்துச் சென்றான்.

கதை படித்த காசினியோரே
கவனமாய் கருத்தில் கொள்ளுங்கள்.
பணம் என்ன செய்தது.?

உற்பத்திக்கு உதவியதா...
யாராவது அதை சம்பாதித்து ஈட்டினரா.......
ஆனால் பலரது கடன் அடை பட்டது
சம்பந்தப் பட்டவர் மகிழ்ச்சி அடைந்தனர்.

இலவசமாய் வந்தடையும் பணமும்
இதைத்தான் செய்கிறதோ..
இப்படித்தான் இல்லாத ஒனறு
ஊக்குவிக்க உதவுகிறதோ.
--------------------------------------------

11 comments:

  1. இப்படித்தான் இல்லாத ஒனறு
    ஊக்குவிக்க உதவுகிறதோ.

    aroumaiyana vakkiyam - nandri

    ReplyDelete
  2. எங்கும் தங்காமல் செல்வதினால்தான் செல்வம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அது அதன் வேலையை செய்கிறது. மனித வாழ்வும் நிறைவுறுகிறது. எக்ஸ்லெண்ட் சார்.

    ReplyDelete
  3. மிகவும் சிந்தனையைத் தூண்டும் கருத்து. இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழிக்கிறேன்.

    ReplyDelete
  4. ஆமாம் ..சில சமயம் 'பணம்' என்பதன் கான்செப்ட் என்னையும்
    குழப்புகிறது.

    ReplyDelete
  5. இப்படித்தான் இல்லாத ஒனறு
    ஊக்குவிக்க உதவுகிறதோ.
    இருக்கலாம் ஆனால் சில சமயம் நம் இருப்பே நமக்கு உதவுவது இல்லையே ,அருமைங்க .

    ReplyDelete
  6. பணத்தின் தன்மையை விளக்கிய அற்புதமான கதை.

    விடுதிக்காரனின் கடன்பாக்கி உட்பட அவனைச் சுற்றியுள்ள பலரின் பாக்கிகளையும் தீர்த்து வைத்தது விடுதிக்காரனின் அன்றைய தினத்துக்கான உறுதிசெய்யப்படாத திரும்பப் பெறப்பட்ட அச்சாரம்தான் எனில் அந்தப் பணம் யாருடையது? என்று யோசிக்க பணத்தின் பொருள் புரியும்.

    சபாஷ் பாலு சார்.

    ReplyDelete
  7. இதைத் தான் ECONOMICS ல் LEGAL TENDER என்பார்கள்!

    ReplyDelete
  8. மிகவும் சிந்திக்கவைத்தக் கதை.
    இல்லாத ஒன்றை ஊக்குவித்ததாகத் தோன்றவில்லை. இருக்கும் சிக்கலை தேவையைத் தீர்த்ததாகத் தான் தோன்றுகிறது. GDP எனும் மாயை நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  9. பணம் என்கிற இடத்தில் அட்டையை வைத்துக் கொள்ளுங்கள். எண்கள் தான் ஒவ்வொரு இடமாக மாறுகின்றது. மதிப்பு என்பது?

    ReplyDelete
  10. பணம் என்பதே இல்லாத ஒன்றா என்று நினைக்கத் தோன்றுகிறது

    ReplyDelete