Saturday, July 14, 2012

ஆலயதரிசனம்..அனுபவங்கள்---3


                              ஆலய தரிசனம்... அனுபவங்கள்--3
                              ------------------------------------------------


ஒரு இடத்தில் தங்கி அங்கிருந்து அடுத்து இருக்கும் கோயில்களுக்குச் சென்று வருவதே சிறந்தது. ஆனால் தூரம் அதிகமானால் பயணம் சோர்வடையச் செய்து விடுகிறது .( வயதாவதின் தாக்கம்.) நாம் செல்லும் நேரம் கோயில் நடை திறந்திருக்க வேண்டும், தரிசனம் கிடைக்க வேண்டும்.ஆகவே நாங்கள் தங்குமிடத்தை மாற்றிக் கொள்வதுண்டு. கும்பகோணத்திலிருந்து முதலில், வைத்தீஸ்வரன் கோயில் தரிசனம் பூஜை, பிறகு அங்கிருந்து சிதம்பரம். இரண்டு கோயில்களிலும் அவரவர் நட்சத்திரத்தன்று மாதமொரு முறை பூஜை செய்த பிரசாதம் பெறுவது பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. நாங்கள் வருவதை எங்களுக்காக பூஜை செய்யும் குருக்களுக்கு முன்பே தொலை பேசியில் தெரிவித்து விடுவோம். இந்த முறை உறவினர்கள் பலரும் அவர்களுக்காக பூஜை செய்து பிரசாதம் கொண்டு வரும்படிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். வைத்தீஸ்வரன் கோயிலில் உப்பு மிளகிடுவதும் நீரில் வெல்லம் கரைப்பதும் வேண்டுவார்கள். இப்போதெல்லாம் குளத்தில் வெல்லம் கரைக்க அனுமதிப்பதில்லை. அதற்கான இடத்தில் வைத்து விட வேண்டும். அன்னை தையல்நாயகி. குழந்தை முத்துக்குமாரசாமி, அங்காரகன் மற்றுமுள்ள தெய்வங்கள். நவகிரக தலத்தில் அங்காரகனுக்கான க்ஷேத்திரம் இது. நாளுக்கு நாள் இந்த நாடி சோதிட தரகர்கள் தொந்தரவு அதிகரிக்கிறது. கோயிலுக்கல்லாமல் நாடி சோதிடத்துக்கும் பெயர் பெற்ற இடம் வைத்தீஸ்வரன் கோயில்.

அங்கிருந்து சுமார் பதினோரு மணி அளவில் சிதம்பரம் சென்றோம். கோடையின் கடுமை கொஞ்சமும் குறைய வில்லை. சிதம்பரம்  தீட்சிதர் மாலை ஆறரை மணிக்கு மேல் கோயிலுக்கு வரச் சொன்னார். அதற்கு முன் சுற்று பிராகாரத்தில் கால் வைக்க முடியாத அளவு சூடு. மாலை ஐந்து மணிக்கு தில்லை காளி கோயிலுக்குச் சென்று தரிசனம் முடிந்து நிதானமாகக் கோயிலுக்குச் சென்றோம். ஒரு முறை கோயில் பிராகாரத்தை வலம் வந்தால் ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் நடந்திருப்போம். பிரம்மாண்டமான பெரிய கோயில். பரத நாட்டிய சாஸ்திரத்தில் கூறியுள்ள 108 கரண சிற்பங்கள் அங்கே நான்கு கோபுர வாசல்களிலும் காணலாம் கோயிலைப் பற்றி நான் அதிகம் கூறப் போவதில்லை. பலரும் எழுதி இருக்கிறார்கள் வலையில் நிறையவே எழுதப் பட்டிருக்கிறது. இருந்தாலும் ஒன்று விளங்க வில்லை, தெற்கு வாசல் வழியே உள்ளே நுழைந்தால் இடப் புறம் முக்குருணி வினாயகர். ஒரு பெரிய நந்தி சிலை. சிறைபட்டிருப்பதுபோல் காட்சி அளிக்கிறது. அத்ற்கு நேர் சற்று வலப்பக்கம் இருந்த ஒரு வழி  சுவரால் மூடப் பட்டிருக்கிறது. நந்தனார் கோயிலுக்குள் நுழைந்த வழி மூடப் பட்டுள்ளது என்று ஒரு சேதி. மற்றொரு விஷயம். கோயிலின் மதிலை ஒட்டி எல்லாப் பக்கங்களிலும் தூண்கள் நிரம்பிய இடம். ( எனக்கு அது குதிரை லாயத்தை நினைவு படுத்துகிறது. அந்த இடம் புழக்கத்தில் இல்லை. அதேபோல் அன்னை சிவகாம சுந்தரி ஆலயத்தை அடுத்த இடமும் உபயோகத்தில் இல்லாமல் தெரிகிறது. இதையெல்லாம் பராமரிக்காமல் இருப்பதன் காரணம் தெரியவில்லை. எங்கள் பூஜையைச் செய்து வரும் தீட்சிதருக்கும் சரியாகப் பதில் தெரியவில்லை. மேலும் மேலும் துருவிக் கேட்டால் அது விரும்பப் படாதது என்பதால் விட்டு விட்டேன். அங்கேயே சில காலம் தங்கி பலரையும் கேட்டு ஆராய்ந்தால் ஒரு சமயம் தெளிவு கிடைக்கலாம். வாதப் பிரதி வாதங்களுடனான பதிவுகள் வலையில் பல உள்ளன.ஆனால் இதைப் பற்றிய சேதி எனக்குக் கிடைக்கவில்லை.. முன்பொரு பதிவில் குழந்தைகள் மணச்சட்டம் தில்லை வாழ் அந்தணர்களிடையே மீறுவதில்தான் இருக்கிறது என்று எழுதி இருந்தேன். அவர்களின் பெண் குழந்தைகளும் படிக்கத் துவங்கி விட்டார்கள். மணமானவருக்குத்தான் கருவறையில் பூஜை செய்யும் உரிமையும் , அதை ஒட்டிக் கிடைக்கும் சலுகைகளும் என்பதால் அவர்களுக்குள்ளேயே இளவயது மணம் சாதாரணமாகக் கருதப் படுகிறது. ஆனித் திரு மஞ்சன விழாவின் போது சின்னச் சின்னக் குழந்தைகள் திருமணமான
அடையாளமாக மடிசார் புடவை உடுத்தி உலவும் போது மனம் கனக்கத்தான் செய்கிறது. தில்லை வாழ் அந்தணர்கள் விடாப்பிடியாக சில கொள்கைகளை கடைப் பிடிக்கிறார்கள். கோயிலில் இல்லாதிருந்த உண்டிகள் இப்போது காணப் படுகின்றன. கோயில் மூலவரே உற்சவராக வீதி உலா வரும் வழக்கம் முதல் பல பூஜை முறைகளும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் வித்தியாசமாக உள்ளது. இந்து அற நிலையத்துக்கும்  தீட்சிதர்களுக்குமான வழக்கு நிலுவையில் இருக்கிறது. எல்லாம் நல்ல முறையில் முடிய அந்த ஆடல்வல்லானே அருள் புரியட்டும்.

இன்னுமொரு சந்தேகம். தெரிந்தவர்கள் விளக்காலாம். போனமுறை திருமஞ்சனத்துக்கு வந்திருந்தபோது இரவு உற்சவர்களை எல்லாம் வீதி உலா எடுத்துச் செல்வதைக் கண்டேன். அதில் ஒன்று .கைலாச பர்வதம் என்று சொன்னதாக நினைவு. அதில் ராவணன் கைலாயத்தை தூக்க இருப்பதுபோலவும் அதன் மேல் உற்சவரை வீதி உலா கொண்டு சென்றார்கள். ராவணனுக்கு ஒன்பது தலைகளே இருந்தது.. அப்போது அந்த நேரத்தில் சந்தேகம் கேட்கக் கூடாது என்று எண்ணி வாளாயிருந்து விட்டேன். இந்த முறை அது பற்றி எங்கள் தீட்சிதரைக் கேட்டேன். ஒரு வேளை நாந்தான் தவறுதலாக ஒன்பது தலைகள் என்று எண்ணினேனோ என்று கேட்டேன். அவர் ஒன்பது தலைகள் சரியே என்றும் ராவணனின் யாழை பத்தாவது தலையாகக் கருதுவது ஐதீகம் என்றும் சொன்னார். இது சரியா. ? யாராவது தெளிவிக்கலாமே.


மறுநாள் காலை மீண்டும் தரிசனம் முடிந்து அங்கேயே உணவருந்தி மீண்டும் கும்பகோணம்  வந்தடைந்தோம். நான்கு நாட்கள் பயண அலைச்சல். உடல் அசதியாக இருக்கவே, அன்று பூராவும் ஓய்வு எடுத்துக் கொண்டோம்.மறு நாள் காலை கோயில்கள் நிரம்பி இருக்கும் கும்பகோணாத்தில் எந்த கோயிலுக்குப் போவது என்று சிறிது நேரம் தடுமாறினோம். ஏறக்குறைய எல்லாக் கோயில்களுக்கும் சென்றிருக்கிறோம். ஆகவே கும்பேசுவரரையும் . சாரங்கபாணியையும் தரிசிக்க முடிவு செய்தோம். முன்பே இரு கோயில்களிலும் திருவெழுக்கூற்றிருக்கை சுவரில் எழுதி இருந்தது பற்றி எழுதி இருந்தேன். மறுபடியும் அவற்றைப் படிக்கும்போது எப்பாடு பட்டாவது அது மாதிரி எழுத முயற்சிக்க வேண்டும் என்று தோன்றியது. எனக்கிருக்கும் தமிழ் அறிவு கொண்டு அப்படி நினைப்பதே முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல் இருக்கும். எழுதியவற்றையே படித்துப் பொருள் புரிந்து கொள்ள முடியவில்லை. அதை எழுதும் விதிகள் என்ன என்றும் தெரியாது. தெரிந்தவர் கூறி உதவினால் மகிழ்வேன். வலையில் எழுதும் விதிகள் குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்குமா தெரியவில்லை. என்னதான் முடிகிறது... பார்ப்போம்
( ஆலய தரிசன அனுபவங்கள் நிறைவடைகிறது.) 
------------------------------------------------      
      .           

     
  .






10 comments:

  1. அன்புள்ள ஐயா..

    ஏறகெனவே உங்களுக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன். விரைவில் திருவெழுக்கூற்றிருக்கை பற்றி எழுதுகிறேன். நான் படிக்கும்போது கற்றுக்கொண்டது என்னுடைய பேராசிரியரிடம் மறுமுறை நினைவுகூர்ந்துவிட்டு எழுதுகிறேன்.

    ReplyDelete
  2. //ஒன்பது தலைகள் சரியே என்றும் ராவணனின் யாழை பத்தாவது தலையாகக் கருதுவது ஐதீகம் என்றும் சொன்னார். இது சரியா. ? யாராவது தெளிவிக்கலாமே.//

    ராவணனுக்கு வேண்டிய வரங்கள் கொடுத்தது சிவபெருமான்தான். அதனால் ராவணனுக்கு கர்வம் தலைக்கேறி சிவனையே அசைத்துப் பார்க்கத் துணிந்தான். கைலாச பர்வதத்தைத் தன் இரு கைகளினால் தூக்க முயற்சிக்கு கைலாச பர்வதம் ஆடிற்று. பயந்து போன பார்வதி சிவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள்.

    சிவன் தன் கால் பெருவிரலால் மலையை அழுத்த ராவணன் கைகளுடன் மலையின் அடியில் சிக்கிக்கொண்டான். சிவன் சாமகானப்பிரியன். ராவணன் கானவல்லுனன். தன் தலைகளில் ஒன்றைப் பிய்த்து தன் கை நரம்புகளைச் சேர்த்து ஒரு யாழ் செய்து அதனுடன் சேர்ந்து இசைக்க, சிவன் அந்த கானத்தில் மயங்கி தன் கால் பெருவிரலை சற்றே தளர்த்த ராவணன் தப்பித்து ஓடி வந்து விட்டான்.

    இந்தக்கதை மிகவும் பிரபலமானது.

    ReplyDelete
  3. சிவகாம சுந்தரி ஆலயத்தை அடுத்த இடமும் உபயோகத்தில் இல்லாமல் தெரிகிறது. இதையெல்லாம் பராமரிக்காமல் இருப்பதன் காரணம் தெரியவில்லை. எங்கள் பூஜையைச் செய்து வரும் தீட்சிதருக்கும் சரியாகப் பதில் தெரியவில்லை. மேலும் மேலும் துருவிக் கேட்டால் அது விரும்பப் படாதது என்பதால் விட்டு விட்டேன்.//

    நானும் என் கணவரிடம் கேட்டு இருக்கிறேன். அதற்கு ’அது தான் சிதம்பர ரகசியம்’ என்று கேலி செய்வார்கள்.
    நாடி ஜோதிடம் பார்க்க கூப்பிடுபவர்கள், எங்கள் கடையில் அர்ச்சனைக்கு சாமான் வாங்குங்கள், செருப்பை எங்கள் கடையில் இலவசமாய் விட்டு செல்லலாம் என்று அழைப்பவர்கள் தொந்திரவும் அதிகம் தான்.
    என்ன செய்வது அவர்கள் அதை நம்பிதானே வாழ்கிறார்கள்.

    உங்கள் பயண அனுபவம் சிறப்பாய் இருக்கிறது.

    ReplyDelete
  4. @ ஹரணி,உரிமை எடுத்துக் கொண்டு கூறுகிறேன். கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றல்ல. இரண்டு. என்னால் புரிந்து கொள்ள முடிகிறது ஐயா. கவலையோ ,செய்யவில்லையே என்ற குற்ற உணர்ச்சியோ வேண்டாம்.என் பதிவுகளைப் படிக்கிறீர்கள் என்பதே எனக்கு மகிழ்ச்சி.

    ReplyDelete
  5. @ டாக்டர் கந்தசாமிக்கு, விரிவான விளக்கத்துக்கும் தெளிய வைத்தமைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  6. @ எம்.எஸ். ரஜனிப்ரதாப் சிங்,
    @ கோமதி அரசு.
    உற்சாகப் பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  7. உங்கள் தமிழுக்கு என்ன குறை, நல்லாதானே போய்க்கிட்டிருக்கு....

    ReplyDelete
  8. இத்தனை நாள் தெரியாத கதை.
    சுட்ட்க்கு நன்றி ஜிஎம்பி சார்.

    நிறக, எப்படியெல்லாம் கிளப்பி விடுகிறார்கள்! மலைக்கடியில் கை சிக்கிக்கொண்டால், தலையை எப்படிப் பிய்த்தான் ராவணன் என்று கேட்டால் அடிக்க வருவார்களா? ஒரு வேளை காலால் பிய்த்தானோ? அல்லது இன்னொரு தலையின் பற்களால் கடித்துப்.. எதுக்கு வம்பு.

    ReplyDelete

  9. @ அப்பாதுரை உங்களுக்குத் தெரியாததல்ல. கதைகளை கதைகளாகவே பாவிக்க வேண்டும். !

    ReplyDelete