Monday, October 7, 2013

ACTIONS--REACTIONS கேள்விகள் பதில்கள்.


                    ACTIONS--- REACTIONS..கேள்விகள் பதில்கள்.
                    -------------------------------------------------------------



இத்தனை நாட்கள் பதிவு  எழுதி வந்தாலும், பதிவுகள் மூலம் நான் சொல்ல வருவது சிந்தனைகளைக் கிளரச் செய்கிறதா என்பது தெரியாமலேயே இருந்து வந்தது. ஆனால் என் கடந்த பதிவில் எழுதியகருத்துக்களுக்கு சிலர் தொடை தட்டி ஆர்பரிக்காத குறையாகவும், சிலர் என் புரிதல்கள் சரியில்லை என்பதை நாசூக்காகவும், சிலர் பதிவு குறித்த அபிப்பிராயம் ஏதும் கூறாமலென் சொந்த வாழ்வில் நான் எப்படி என்று தெரிந்து கொள்வதில் ஆர்வமாகவும் பின்னூட்டங்கள் எழுதி இருந்தனர். அனைவருக்கும் நான் சொல்லிக் கொள்வது இதுதான். நான் என் கருத்துக்களை சொல்லும்போது அது சிந்தனையைக் கிளர வேண்டும் என்ற எண்ணமே என் கருத்துக்கலையும் என் மனைவியின் குணாதிசயங்களோடு பின்னிப் பிணைத்து எழுதி இருந்தேன். எங்கள் வாழ்வில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டிருப்பது எங்கள் பேறாகும்.. அதையும் குறிப்பிட்டும் ஒரு பின்னூட்டமிருந்தது மகிழ்ச்சியளிக்கிறது.

எனக்கு இறை நம்பிக்கை இல்லாமல் இல்லை.. ஆனால் இறை நம்பிக்கை என்னும் பெயரில் பகுத்தறியும் ஆற்றலை நாம் இழக்கக் கூடாது என்று நினைக்கிறேன்.நாம் நமக்குத் தெரியும் என்று நினைப்பதைவிட ஒரு துளிகூட நமக்குக் கூடுதலாகத் தெரியாது என்றும் பெண்ணின் அறிவை எந்த அளவு கோல் கொண்டு அளக்கிறேன் என்று கேட்டும் வந்துள்ள கேள்விகளுக்கு நான் நிச்சயம் react செய்ய வேண்டும். எனக்கு என்ன தெரியும் என்றே எனக்குத் தெரியாது. ஆனால் தெரியாதது மலையளவு என்று நிச்சயம் தெரியும். இன்னும் தெரிந்துகொள்ள வேண்டும் என்னும் உந்துதல் நிறையவே இருக்கிறது. அதே சமயம் தெரியாததைத் தெரிந்ததாக நினைத்து சில நம்பிக்கைகளுக்கு (அவை மூட நம்பிக்கை என்று எனக்குப் பட்டாலும் அவ்வாறு சொல்வதை , பிறர் மனம் புண்படலாம் என்னும் காரணத்தால், தவிர்க்கிறேன்) என்னால் துணை போக முடியவில்லை.நான் வாழ்க்கையில் கண்டுணர்ந்தபடி , என் சிந்தனைகள் அமைந்திருக்கின்றன. அதை நான் பதிவினில் பகிர்து கொள்கிறேன். என் எண்ணத்தில் கல்மிஷம் இல்லை. அதனால் பகிர்ந்து கொள்வதை , வெகு ஜன எண்ணங்களுக்கு மாறாகத் தோன்றினாலும்  தவிர்ப்பது இல்லை.
அளவுகோல் என்று வரும்போது இது ஒரு ஒப்பீடலே. நான் என் மனைவியுடன் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாகப் பழகி வருகிறேன். அதனால்தான் ஒப்பீட்டுக்கு என் மனைவியின் நம்பிக்கைகளைத் தேர்ந்தெடுத்தேன். அதைப் பதிவிடும் முன்பே அவளிடம் படித்துக்காட்டி ஒப்புதல் பெற்றே எழுதினேன். நான் பார்த்துப் பழகி கண்டு வந்த பெரும்பாலோர் இவள் மாதிர்த்தான் என்று தோன்றியதால்தான்  எழுதினேன்

திரு.அப்பாதுரை அவர்களின் பதிவொன்றைஅண்மையில் படித்தேன். அவர் அதில் அடிமைத்தனம் என்பது என்ன என்று இளைஞர்களிடம் கேள்வி கேட்டு பதில்  பெற்றுத் தருகிறா அதற்குப் பின்னூட்டமாக
/அடிமைத்தனம் என்பது செய்கையா? உணர்வா? பாதிப்பா? பயமா? குணமா?
போதைகளை நாடுவதைப் போலவே கடவுள் நம்பிக்கையும் ஒரு வகை அடிமைத்தன வெளிப்பாடா?/ கேள்விகள்...கேள்விகள்...பள்ளி மா
ண்வரிடையே கேட்ட கேள்விக்கு பதில்கள் பதிவுக்குப் பலம் சேர்க்கிறது.இந்த முறையான வழிமுறைகளுக்குப் பதில்களில் கடவுள் நம்பிக்கையும் அடிமைத்தனத்தின் வெளிப்பாடு என்று வந்திருக்கிறதா.? என்று எழுதி இருந்தேன்
 அடிமைத்தனம் குறித்து அவர் கொடுத்திருந்த பதில்கள் சில சிந்திக்க வைக்கின்றன.அடிமைத்தனம் என்பது"எதையும் ஆராயாமல் கேளாமல் இன்னொருவர் சொற்படி ஏற்று நடப்பதாகும்"/"தன்னிச்சையான எண்ணம் செயல் போன்ற சுதந்திர வெளிப்பாடுகளை இனம்புரியாத காரணங்களுக்காக அடக்கியோ ஒடுக்கியோ வைக்கும் மனநிலை.."/ "மரபு.. வழக்கம் என்ற ஒரு விளங்காத விளக்கமுடியாத முறைக்குட்பட்டு நடப்பது.."/ "அறியாமல் செய்த தவறை, அறிந்தே தொடர்ந்து செய்வது.. செய்யத்தூண்டுவது.."
சிந்தித்துப் பார்த்தால் நாம் செய்யும்பல செயல்களுக்கு இம்மாதிரியான மனப்போக்கே காரணம் என்று விளங்கும்.என்னைப் பொறுத்தவரை கடவுள் நம்பிக்கை வேறு,நம்பிக்கை என்னும் போர்வையில் நாம் செய்யும் சில செயல்கள் வேறு.
கடவுள் என்னும் சக்தி இருக்கிறது என்று அனுமானித்து செயல்படுவது, காரணம் தெரியாத, விளக்க முடியாத செயல்களுக்கு அந்த சக்தி மேல் பழி போட்டு மனப் பாரத்தைக் குறைத்துக் கொள்ளலாம்.

காண முடியாத சக்தியை சிலரால் உணர முடிகிறது என்கிறார்கள். கடவுள் உண்டு என்று கூறுபவர்கள் அனைவரும் அந்த சக்தியை உணருகிறார்களா என்ற கேள்வி   எழுந்தால், 90  விழுக்காட்டுக்கு  மேல்  உணராதவரே  இருப்பார்கள். பின்  கடவுள் நம்பிக்கை என்பதே பிறந்து  வளர்ந்த  சூழல் , வளர்க்கப்பட்ட  முறைகற்றுத்தேரிந்த  விஷயங்கள்  என்பதைச் சார்ந்தே  அமைகிறது.
எங்கும் நிறைந்தவன் கடவுள், அவனன்றி ஓரணுவும் அசையாது; நாம் செய்யும் செயல்களைக் கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்; நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப கடவுள் பரிசோ தண்டனையோ தருவார் என்று நாம் பிறந்தது முதல் தயார்  செய்யப்பட்டு வளர்க்கப்படுகிறோம்.
ஒரு காண முடியாத சக்தியை நம்மில் பலரால் கற்பனை செய்து பார்க்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடுதான் விக்கிரக ஆராதனையின் முக்கிய காரணமாய் இருந்திருக்கவேண்டும். ஆண்டவனுக்கு நம்மில் ஒருவன் போல் உருவம் கற்பித்து அவனுக்கு ஏகப்பட்ட சக்தியையும் கொடுத்து காப்பவனாகக் கருதி  வழிபடும்போது மன அமைதி கிடைக்கிறது. அழிப்பவனாகக் கருதி வழிபடும்போது   தீய செயல் செய்வதை பயத்தால் செய்யாமலிருக்கச் செய்கிறது. கடவுளுக்கு ஏராளமான சக்தி உண்டு என்று நாம் நம்ப, அவனுக்கு பிரம்மா, விஷ்ணுசிவன்  முறையே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று செயல்களின் வெளிப்பாடுகளாக அறிவிக்கப்படுகிறோம். இன்னும் கடவுளை ராமனாகவும் கண்ணனாகவும், முருகனாகவும்  கற்பிதம் செய்து அவர்களின்  சக்திகளில்  நம்பிக்கை  வைத்து  அவர்களை  வழிபாடு செய்தால் நலம்  பெறுவோம் எனும்  நம்பிக்கை  சிறு  வயது  முதலே  வளர்க்கப்படுகிறது. தாயே  மனிதனின்  முதல் தெய்வம்  என்று  கருதப்படும்  நம் நாட்டில், கடவுளை அன்னையின்  வடிவத்திலும்  வழிபடுகிறோம்.  சரஸ்வதியாக , லட்சுமியாக , பார்வதியாகஒவ்வொரு  தெய்வமும்  ஒவ்வொரு  சக்தியின் பிரதிபலிப்பாக  வணங்க  வளர்க்கப்படுகிறோம்.
இந்தக் கடவுள்களின் சக்தியில் நாம் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதற்காகவே  ஆயிரமாயிரம்   கதைகளும்  புனைவுகளும்   ஏற்பட்டிருக்க வேண்டும்.

சூனியமான இருண்ட அண்டத்தில் சூரியனின் ஒளியே வாழ்வின் ஆதாரமாக இருப்பதால் ஆதியில்  சூரிய  வழிபாடும்பிறகு உயிர்  வாழப்  பிரதானமான  ஆகாயம் , காற்று , நீர் , மண்  போன்றவைகளும்  வழிபாட்டுக்கு  உரியனவாயின
என் கடந்த பதிவின் கடைசியில் என் மாறுபட்டக் கருத்துக்களுக்குச் செவிமடுக்கும் அவள் இந்த நிலையே சௌகரியமாக இருக்கிறது என்று சொல்லாமல் சொல்லிச் செல்வாள் என்று எழுதி இருந்தேன்.. அப்படி சிந்தனைகள் ஏதும் இல்லாமல் யாரோ என்னவோ சொல்லிச் சென்றார் அதன்படிதான் நடப்பேன் என்பது சுதந்திர எண்ணமில்லாத அடிமைத்தனத்துக்குச் சமம் இருந்தாலும் எல்லோரையும் நேசிக்கும் குணம் எனக்கு ஏற்புடைத்தே. அதையே நான் கடவுள் என்பது உணர்வா , அறிவா என்று எழுதி இருந்தேன். இங்கே சொடுக்கிப் பார்க்க.
இந்தப் பதிவு என்னென்ன reactions  ஏற்படுத்துமோ பார்க்க வேண்டும்.   .  



     




    
 

12 comments:

  1. என் மாறுபட்டக் கருத்துக்களுக்குச் செவிமடுக்கும் அவள் இந்த நிலையே சௌகரியமாக இருக்கிறது என்று சொல்லாமல் சொல்லிச் செல்வாள்

    உண்மைதான் ..

    மாறுபட்ட கருத்துகள் சூழல்கள் ஏற்படின் அவருக்கு சௌகரியமான நிலைகளையே தேர்ந்தெடுத்தல் வசதியாக இருக்கும் ..!

    அனாவசிய விவாதங்களால் எந்த மாற்றுக் கருத்துகளையும் யாரும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையே

    ReplyDelete
  2. உன் வழி கண்டு நீ போகலாம்,என் வழிகண்டு நான் போகிறேன் என்ற நிலையே என் வீட்டிலும் !

    ReplyDelete
  3. அறியாமல் செய்த தவறை, அறிந்தே தொடர்ந்து செய்வது.. செய்யத்தூண்டுவது அடிமைத்தனம்...
    தெளிவான விளக்கம் ஐயா. நன்றி

    ReplyDelete
  4. உங்கள் சிந்தனைகள் ஏறக்குறைய சிவவாக்கியர் என்ற சித்தரின் கருத்துக்களோடு ஒத்துப் போகின்றன.

    நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே
    சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
    நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
    சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ
    - சிவவாக்கியர்

    ReplyDelete
  5. //திரு.அப்பாதுரை அவர்களின் பதிவொன்றைஅண்மையில் படித்தேன்.//

    இப்போ சமீபத்தில் அப்பாதுரை பதிவு எழுதி இருக்காரா? நான் பார்க்கலையே?

    ReplyDelete
  6. கடவுள் நம்பிக்கை எல்லாம் அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால் அனைத்தையும் மீறிய சக்தி ஒன்று இருப்பதை அதன் உணர்வைப் பல விஞ்ஞானிகள், மருத்துவர்கள் உணர்ந்து சொல்லி இருக்கின்றனர். கடவுள் என்றால் உடனே திரிசூலத்தை ஏந்தி நாக்கை நீட்டியவண்ணம் காளியாகவோ, அல்லது சிம்ஹ வாஹினியாகவோ, குழலூதும் கண்ணனாகவோ, தான் வரணும்னு இல்லை. எப்படி வேண்டுமானாலும் வரலாம். வருவார். :))))

    ReplyDelete

  7. @ இராஜராஜேஸ்வரி
    /அனாவசிய விவாதங்களால் எந்த மாற்றுக் கருத்துகளையும் யாரும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையே/யாரும் ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்று சொல்லவில்லையெ.விருப்பு வெறுப்பில்லாமல் அணுகினால் சொல்லவந்த கருத்தின் உண்மைப் பொருள் தெரியும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    @ bagwanjee
    நாங்கள் விட்டேற்றியாக எண்ணுவதில்லை. ஒருவரின் கருத்துக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கிறோம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    @ கரந்தை ஜெயக்குமார்
    அடிமைத்தனம் குறித்த எல்லா விளக்கங்களும் pregnant with lot of meaning.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
    @ தி. தமிழ் இளங்கோ
    ஐயா , பதிவில் ஒரு சுட்டி கொடுத்திருக்கிறேன். படித்தீர்களா.?இல்லையென்றால் தயவு செய்து பார்க்கவும்கடவுள் அறிவா உணர்வா. வருகைக்கு நன்றி.
    @ கீதா சாம்பசிவம்
    என்னதான் சொன்னாலும் கடவுள் என்று பலரும் நினைக்கும்போது அவரவருக்கு பிரியப்பட்ட உருவத்தில்தான் கடவுளை நினைக்கிறார்கள்.அப்படித்தான் பழக்கப்படுத்தி வளர்க்கப் பட்டிருக்கிறோம். மேலான கருத்துப் பகிர்வுக்கு நன்றி.



    ReplyDelete
  8. கடவுளைப் பற்றிய உங்களுடைய பல வாதங்களும் ஜெயகாந்தனின் வாதங்களை நினைவுபடுத்துகின்றன. அதுபோலவே தாம்பத்தியம், மனைவி, குடும்பம் என்பதைப் பற்றியும் அவர் எழுதிய கருத்துக்களும் ஏறக்குறைய உங்களுடைய கருத்தை ஒட்டியே அமைந்திருந்ததை நினைவு கூர்கிறேன். கடவுள் நம்பிக்கை என்பது மூளைக்கு எட்டாத ஒன்று. ஆனா கடவுள் பெயரால் மக்கள் மத்தியில் அவர்கள் எம்மதத்தினராயினும், இருக்கும் சில நம்பிக்கைகள்தான் கேள்விகளை எழுப்புகின்றன. மேலும் கடவுளை நமக்கு காட்டித்தருகிறேன் என்று சாமியார் வேடம் பூண்டு உலா வரும் சிலரால்தான் - இதிலும் எல்லா மதமும் ஒன்றுதான் - கடவுளைப் பற்றிய சர்ச்சையே எழுகிறது. நான் அயோக்கியன் என்ற முத்திரையுடன் ஒருவன் செய்யும் அதே அக்கிரமங்களை நான் ஆன்மீகவாதி என்று கூறுபவர்களும் செய்வதை பார்க்கும்போதுதான் கடவுள், மதம் ஆகியவற்றின் மீது பலருக்கும் நம்பிக்கை அற்றுப்போகிறது. மதங்களின் பெயரால் மக்கள் கூறுபோடப்படுவதும், அழிக்கப்படுவதும் கூட இத்தகைய நம்பிக்கைகள் தேவைதானா என்ற கேள்வியையும் எழுப்புகிறது. இது ஒரு முடிவில்லா தொடர் குழப்பங்கள் என்றுதான் நினைக்கிறேன். கடவுள் நம்பிக்கைக்கு ஆதரவாக எத்தனை பேர் எழுகிறார்கள் அவர்களுக்கு ஈடாக அதை எதிர்ப்பவர்களும் எழுந்துக்கொண்டேதான் இருப்பார்கள் என்பதும் மறுக்கமுடியாத உண்மை... சில சமயங்களில் இது அர்த்தமற்ற ஒரு விவாதமோ என்று கூட எண்ண தோன்றுகிறது.

    ReplyDelete
  9. என்னைப் பொறுத்தவரையில்
    கடவுள் இருப்பது என்பதோ
    இல்லையென்பதோ பிரச்சனையில்லை
    இருப்பதைச் சாதிக்க இவரும்
    இல்லையென்று ஸ்தாப்பிக்க அவர் முயல்வதினால்
    வருகிற பிரச்சனைகளே பெரும் பிரச்சனையாக இருக்கிறது
    இருக்கிறது என் ஒருவன் நம்பினால் அது நிஜம்
    இல்லையென்று ஒருவன் முழுமையாக நம்பினால்
    அதுவும் நிஜம்தான்
    இருவரும் ஆண்டவனை வைத்து பிழைப்பு
    நடத்தாத வரையில்....

    ReplyDelete

  10. @ டி.பி.ஆர் ஜோசப்
    @ ரமணி
    இது கடவுளைப் பற்றிய சர்ச்சை அல்ல. அணுகு முறையில் உணர்வுக்கும் அறிவுக்கும் இருக்கும் மோதலைத் தவிர்க்க பகுத்தறிவை அடகு வைத்து அடிமைகளாய் உழலுபரை எண்ணிய ஆதங்கத்தின் விளைவே இப்பதிவு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


    !

    ReplyDelete
  11. இங்கே உருளுவதென்ன.. ஆ!

    கடவுள் நம்பிக்கைக்கும் பகுத்தறிவுக்கும் தொடர்பில்லை என்றே நம்புகிறேன். கடவுள் மறுப்பே பகுத்தறிவு என்று கிளம்பியவர்கள் கருஞ்சட்டையை உடலை மறைக்க மட்டும் அணியவில்லை; அறிவை மறைக்கவும் அணிந்தார்கள். அது தான் தமிழக நாத்திகத்தின் அவலம்.

    கடவுள் உண்டென்று சாதிப்பவர்கள் இருப்பதனால் இல்லை என்று சாதிப்பவர்கள் தேவைப்படுகிறார்கள் ரமணி.:) இல்லையெனில் இது அர்த்தமற்ற விவாதம் என்பது உண்மை தான்.

    ReplyDelete

  12. 2 அப்பாதுரை
    கடவுள் நம்பிக்கைக்கும் பகுத்தறிவுக்கும் தொடர்பு இருப்பதாக நானும் சொல்லவில்லை. அதேபோல் கடவுள் மறுப்புதான் பகுத்தறிவு என்று நான் சொல்லவில்லை.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete