Wednesday, November 20, 2013

பயண அனுபவங்களும் சில சந்திப்புகளும்-1


 பயண அனுபவங்களும்  சில சந்திப்புகளும்--1
-----------------------------------------------------------------



திட்டமிட்டுச் செய்; திட்டமிட்டதைச் செய். இது நான் கற்றபாடம். எனக்கு மிகவும் வேண்டியவர்களுக்கும் கூறும் அறிவுரை.சில நேரங்களில் திட்டமிடும்போது சிலவிஷயங்கள் சரியாக கணிக்கப் படாததால் திட்டமிட்டுச் செய்த வேலைகளும் எதிர்பார்க்கும் விளைவுகளைத் தருவதில்லை சென்னைக்கு நான் சென்று வருவதே அரிதாகிக் கொண்டிருக்கும்போது திட்டங்களில் சில குறைபாடுகள் (?) இருந்ததால் விளைவுகள் சரியாக அறுவடையாகவில்லை
.
12-ம் தேதி  பெங்களூரில் இருந்து டபிள் டெக்கர் தொடர்வண்டியில் பயணப் பட்டு இரவு எட்டே முக்கால் மணிக்கு சென்னை வந்தடைந்தோம். குளிரூட்டப்பட்ட ட்ரெயினில் பயணம் செய்யும்போது பயணத்தின் அனுபவங்கள் பலவற்றை இழக்க நேரிடுகிறது. தொடர் வண்டியின் ‘கட, கடாசப்தமும் பிரயாணிகளின் பேச்சுச் சப்தமும் கேட்க வழியின்றி ஏதோ கூண்டுக்குள் அடைத்து வைத்தது போன்ற உணர்வு. நாங்கள் நலமாகப் பயணப்பட வேண்டும் என்ற அதீத அன்பின் விளைவாக குளிரூட்டப்பட்ட வண்டிப் பயணம். சென்னையில் என் மைத்துனன் ஸ்டேஷனுக்கு வந்து எங்களை அழைத்துச் சென்றான்.
அடுத்த நாள் 13-ம் தேதி ஊரப்பாக்கத்தில் வசிக்கும் தஞ்சாவூர்க் கவிராயரைப் பார்த்து பிறகு காஞ்சீவரம் கோவில்களுக்குச் செல்ல முதலில் திட்டமிட்டபடி வாடகைக் காரை என் மகன் ஏற்பாடு செய்திருந்தான். காலை ஒன்பது மணி சுமாருக்குப் புறப்படலாமென்று திட்டம் அதன்படி.முதலில் ஊரப்பாக்கம் சென்று அங்கிருந்து கவிராயரைச் சந்தித்துவிட்டுக் கோவில்களுக்குச் செல்லலாம் என்றால் , நாங்கள் காஞ்சீவரம் செல்வதற்குள் கோவில்கள் நடை சாத்திவிடுவார்கள் என்னும் ஞானோதயம் அப்போது ஏற்பட்டு முதலில் கோவில் தரிசனம் பிறகு கவிராயர் சந்திப்பு என்று நிகழ்ச்சி நிரலில் மாற்றம் செய்யப் பட்டுகாலை ஒன்பது மணி அளவில் காஞ்சீவரம் பயணப் பட்டோம்.இந்த ஞானோதயம் முன்பே ஏற்பட்டிருந்தால் இன்னும் முன்பே கிளம்பி, எல்லாக் கோவில்களுக்கும் சென்று இருக்க முடியும்

சென்னையில் இருந்து செல்லும்போது முதலில் எதிர்படும் ஸ்ரீவரதராஜஸ்வாமி கோவிலுக்குச் சென்றோம். சுமார் இரண்டு மணி நேரம் கழித்துக் கோவிலை அடைந்தோம். முதலில் பெருந்தேவியார்  பிறகு ஸ்வாமி தரிசனம் அதன் பிறகு வெளியில் இருக்கும் நூற்றுக்கால் மண்டபத்தில் இருக்கும் சிற்ப தரிசனம் என்று திட்டப்படி போனோம். நாங்கள் இதற்கு முன்பே காஞ்சீவரம் மூன்று நான்கு முறை போயிருக்கிறோம் என்றாலும் எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்துவது என்பது இயலாததாகி விடுகிறது. கோவிலில் அநேக ஓவியங்கள் உருக்குலைந்து போய் இருப்பதைப் பார்க்கும் போது மனம் கனமாகிறது மக்களுக்கு சிரத்தை இல்லையா, பராமரிப்பு போதாதா என்னும் கேள்விகள் மனசைக் குடைகிறது. ஸ்வாமியைத் தரிசிக்கப் போகும் படிகளில் உலோகப் பதிப்பு கால்களுக்கு அக்யுப்ரெஷர் தரும் வகையில் இருக்கிறது. இப்போதெல்லாம் கைப் பிடிப்பு இல்லாமல் படிகள் ஏறுவது சிரமமாயிருக்கிறது. நல்ல வேளை அங்கு ரெயிலிங் இருந்தது. ஆண்டவன் தரிசனம் கட்டணம் கொடுக்காமல் கிடைத்தாலும் தங்கப் பல்லி தரிசனம் செய்யக் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. பல்லியை ஏற்கனவே கண்டிருப்பதால் நாங்கள் போக வில்லை. எனக்குப் பழைய கோவில்களைக் காணும்போது என்னை அறியாமல் காலச் சக்கரம் ஏறி பின்னோக்கிப் பயணித்து அந்தக் கால சூழ் நிலையை கற்பனை செய்வது பழக்கமாகப் போய் விட்டது. மின்சாரம் இல்லாத அந்தக் காலங்களில் இம்மாதிரிக் கோவில்களில் வெளிச்சம் ஏற்படுத்த தீபங்கள் ஏற்ற வேண்டி அதற்காக பொது மக்கள் எண்ணை 


கொடுக்கும் முறை இருந்திருக்க வேண்டும். ஆனால் இன்றைக்கும் பல கோவில்களில் ஆண்டவன் கருவறையை இருட்டில் வைத்திருக்கும் நிலையை சீரணிக்க முடியவில்லை. தீப ஆராதனையின் போது அந்த சிறு ஒளியில் தரிசனம் செய்வது சிலாக்கியமாகக் கருதப் படுகிறது.ஆனால் இந்தக் கோவில்கள் பண்டையக் கலாச்சாரத்தின் மிச்சங்களை பறை சாற்றுகிறது என்பது மறுக்க முடியாதது.

கோவிலில் பிரசாதம் என்று விற்பனையாகும்  புளியோதரை , பொங்கல் என்று வாங்கி உண்டு பசியை அடைத்தோம்

வெளியில் இருக்கும் நூற்றுக் கால் மண்டபம் அழகான சிற்ப கூடமாக இருக்கிறது.முன்பு வந்தபோதும் கூட வந்தவர்களுக்கு அதில் நாட்டமில்லாததால் கவனம் செலுத்த முடியவில்லை.இந்த முறை ஓரளவு நிதானமாக ( still running against time) பார்வையிட்டேன். சில புகைப் படங்களும் எடுத்தோம்.
DSC02083.JPG
ஸ்ரீவரதராஜஸ்வாமி கோவில் கோபுரம் விஷ்ணு காஞ்சி
  
ஸ்ரீவரதராஜஸ்வாமி கோவில் நூற்றுக்கால் மண்டபம்

நூற்றுக்கால் மண்டபத்துள்


நூற்றுக்கால் மண்டபத்துள்

ஸ்ரீகாமாட்சியம்மன் கோவில் முன்

ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோவில் முன்

ஸ்ரீஏகாமபரேஸ்வரர் கோவிலில் ஓவியம்

கைலாசநாதர் கோவில் சுற்றில்
கைலாசநாதர் கோவில் சுற்றில்

கைலாசநாதர் கோவில் சுற்றில்

கைலாசநாதர்கோவில் சுற்றில் கிளி ( தபஸ்/.?)






அங்கிருந்து ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலுக்குச் சென்றோம்.நேரம் பனிரெண்டு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. உள்ளே போனால் அன்னைக்குப் பூஜை நடந்து கொண்டிருக்க பெரிய வரிசையின் பின்னால் நின்று கொண்டோம்.அப்போது பார்த்து ஏன்தான் சில தவிர்க்க வேண்டிய நினைவுகள் வந்ததோ? தினசரியில் 27-ம் தேதி காஞ்சி ஸ்ரீஜெயேந்திரர் வழக்கில் தீர்ப்பு சொல்லப்படும் என்று படித்தது என்னென்னவோ எண்ணங்களைக் கிளறிவிட்டது .மஹாப் பெரியவர் இருந்த இடத்தில் இருப்பவர் சந்தேகங்களுக்கு அப்பால் அல்லவா இருக்க வேண்டும். “ஹூம்”என்று பெருமூச்சுதான் வந்தது.

முன்பே இங்கு வந்து போனபோது அம்மன் சந்நதிக்கு நேர் எதிரே இருந்த மண்டபத்தில் நின்று தரிசிக்க முடியும் என்று தெரிந்ததால் அங்கு போய் காத்திருந்தோம். என் மனைவிக்கு இந்த நேரம் சுலோகங்கள் சொல்ல ஏதுவாயிருந்தது. அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்த என் கண்ணில் சன்னதி வாசலின் மேலே எழுதி இருந்த பாடல் கவனத்தை ஈர்த்தது. சும்மா இருந்த வேளையில் அந்தப் பாடலை எழுதி எடுத்துக் கொண்டேன் அதனைக் கீழே காணலாம்.

பத்துவிரல் மோதிரம் எத்தனைப் பிரகாசமது,
பாடகம் தண்டை கொலுசும் பச்சை வைடூரியம்
இச்சையா யிழைத்திட்ட  பாத சிலம்பின் ஒலியும்
முத்து மூக்குத்தியும் இரத்தினப் பதக்கமும் மோகன மாலையழகும்
முழுதும் வைடூரியம் புஷ்பராகத்தினால் முடிந்திட்ட தாலி அழகும்
சுத்தமாயிருக்கின்ற காதினிற் கம்மலும் செங்கையின் பொன் கங்கணமும்
ஜெகமெலாம் விலை பெற்ற முகமெலாம் ஒளியுற்ற சிறு காது கொப்பின் அழகும்
அத்திவரதன் தன் தங்கை சக்தி சிவ ரூபத்தை அடியனால் சொல்லத் திறமோ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே. ! 

அன்னையின்  தரிசனம் முடிந்து வெளியில் வரும்போது மணி ஒன்றைத் தாண்டி இருந்தது. ஏகாம்பரேஸ்வரர் கோவில் மூடியிருக்க  எல்லாக் கோவில்களும் திறக்க நான்கு மணிக்கு மேலாகும் என்று தெரிந்ததும் நேராகக் கைலாச நாதர் கோவில் சென்றோம். எனக்கு கோவிலில் இருந்த சிற்பங்களைக் காணக் கிடைத்த இன்னொரு வாய்ப்பு அது. முன்பு கோவிலுக்குச் சென்றபோது நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வர அதனை என் மைத்துனனிடம் பகிர்ந்துகொண்டேன்.

கைலாசநாதர் கர்ப்பக் கிருகத்தைச் சுற்றி ஒரு குகை மாதிரியான பாதை உண்டு. சந்நதியின் வலப் புறம் இரண்டுக்கு இரண்டு அடியில் ஒரு திறப்பு உண்டு. தரையிலிருந்து சுமார் மூன்றடி உயரத்தில் இந்தத் திறப்பு இருக்கும் . அதன் வழியே உள்ளே நுழைந்துசுற்றிலும் இருக்கும் பாதையில் ஏறத்தாழ தவழ்ந்து வந்தால் சந்நதியிம் இடது பக்கம் இருக்கும் துவாரம் வழியே வெளியே வரலாம். அப்படி வந்தால் மறு பிறவி இல்லை என்று ஒரு ஐதீகம். சென்றமுறை நாங்கள் போனபோது நான் முதலில் கால்களை துவாரத்தில் இறக்கி பின் அங்கிருந்து மூன்றடி கீழே தரையில் கால் வைத்து அந்தக் குறுக்குப் பாதையைச் சுற்றி வலப் புறமாக வந்து எனக்கு மறு பிறவி இல்லை என்று உறுதி செய்து கொண்டேன். எங்களுடன் வந்திருந்த என் சகலை முதலில் காலை விட்டு  கீழே இறங்கத் தெரியாமல் துவாரத்தில் இறங்கவும் முடியாமல் வெளியே வரவும் முடியாமல் தவித்தது , பிறகு எல்லோரையும் சாடியது எல்லாம் நினைவிலாடியது கோவில் சந்நதி மூடி இருந்ததால்  என் மைத்துனனுக்கு அதைக் காட்ட முடியாமல் போயிற்று.

கைலாச நாதர் கோவிலைக் காணும்போது எனக்கு பூசலார் அடிகள் இறைவனுக்கு தன் உள்ளத்தில் அஸ்திவாரம் முதல் ஒவ்வொரு கல்லாக எழுப்பிக் கோவில் கட்டி கும்பாபிஷேகத்துக்கு ஒரு நாளும் குறித்து இறைவனைக் குடியேற வேண்டியதும் , அதே நேரத்தில் பல்லவ அரசன் கலை நுணுக்கங்களுடன் ஒரு கற்கோவில் எழுப்பி கும்பாபிஷேகத்துக்கு நாள் குறித்ததும் , இறைவன் அரசன் கனவில் வந்து தான் பூசலாரின் கோவிலுக்கே முன்னுரிமை அளிப்பதாகக் கூறியதும் , அரசன் திருநின்றவூர் வந்து பூசலாரைக் கண்டு அவர் எழுப்பிய கோவில் பற்றிக் கேட்டதும் . பூசலார் தம் மனக் கோவில் பற்றிக் கூறியதும் அரசன் அவர் கால்களில் விழுந்த வணங்கியதாகவும் கூறப் படும் கதை நினைவுக்கு வந்தது. அந்த அரசன் கட்டிய கோவில் இந்தக் கைலாச நாதர் கோவிலா என்பது சரியா என்று தெரிய வில்லை. எப்படி இருந்தாலும் ஒரு இறைக்கதை பகிர்ந்து கொள்ள இது உதவுகிறது.

இந்தக் கோவில் இந்தியத் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களால் பராமரிக்கப் படுகிறது. கைலாச நாதர் கோவிலைச் சுற்றிலும் நிறைய சிறிய கோவில்கள் காணப் படுகின்றன. இவை எல்லாம் ஸாண்ட் ஸ்டோன் எனும் மணல் கல்லால் ஆனது. காஞ்சிவரத்திலேயே இதுதான் மிகவும் தொன்மையான கோவில் என்கிறார்கள்.
கைலாச நாதர் கோவிலைப் பார்த்துவிட்டு நாங்கள் கிளம்பும்போது மணி மூன்றரை ஆகியிருந்தது. அங்கே மதிய உணவு முடித்துவிட்டு ஊரப் பாக்கம் செல்லத் துவங்கினோம் தஞ்சைக் கவிராயரை தொலை பேசியில் அழைத்து எங்கள் வருகையைத் தெரிவித்தோம். அவர் வீட்டைச் சென்றடைந்தபோது மாலை நான்கு மணிக்கும் மேலாகி இருந்தது. அவரைச் சந்தித்தது பற்றி அடுத்த பதிவில்.
                       ==========================
       


.......
            

    
 

18 comments:

  1. படங்கள் (எனக்கு) வரவில்லை ஐயா... சரி பார்க்கவும்...

    browser : Chrome

    ReplyDelete
  2. //கைலாசநாதர் கர்ப்பக் கிருகத்தைச் சுற்றி ஒரு குகை மாதிரியான பாதை உண்டு. சந்நதியின் வலப் புறம் இரண்டுக்கு இரண்டு அடியில் ஒரு திறப்பு உண்டு. தரையிலிருந்து சுமார் மூன்றடி உயரத்தில் இந்தத் திறப்பு இருக்கும் . அதன் வழியே உள்ளே நுழைந்துசுற்றிலும் இருக்கும் பாதையில் ஏறத்தாழ தவழ்ந்து வந்தால் சந்நதியிம் இடது பக்கம் இருக்கும் துவாரம் வழியே வெளியே வரலாம். அப்படி வந்தால் மறு பிறவி இல்லை என்று ஒரு ஐதீகம்.//

    நானும் என் தாயாரும், என் அண்ணா ஒருவரும் இதில் ஊர்ந்து போய் பிரதக்ஷணம் செய்து, திரும்ப மீண்டும் ஊர்ந்து வெளியே வந்துள்ளோம்.அப்போது எனக்கு வயது 30 இருக்கும்.

    இப்போது அதை நினைத்தே பார்க்க முடியாது.

    >>>>>

    ReplyDelete
  3. எனக்கும் படங்கள் ஏதும் திறக்கப்படவில்லை.

    எனினும் நான் காஞ்சீபுரத்தில் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் பலமுறை சென்று வந்துள்ளேன்.

    அதனால் படங்கள் திறக்கப்படாததில் அதிக வருத்தம் இல்லை.

    >>>>>

    ReplyDelete
  4. //பத்துவிரல் மோதிரம் எத்தனைப் பிரகாசமது
    .....................
    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே. ! //

    பாடலையும் கொடுத்துள்ளது மனதுக்கு நிறைவாக உள்ளது.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. உங்களுடன் சேர்ந்து நானும் ப்யணித்தேன் . நன்றிங்க ..

    ReplyDelete

  6. @ திண்டுக்கல் தனபாலன்.
    நான் மோஜில்லா ஃபைர்ஃபாக்ஸ் உபயோகிக்கிறேன் படங்கள் திறக்க சற்று நேரம் ஆகிறது.
    @ கோபு சார்
    இந்தப் புகைப் படங்களுக்காகவே பதிவு வெளியிட தாமதப் பட்டது. எனக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. சற்று தாமதம் ஆகிறது.அவ்வளவுதான்
    கைலாசநாதர் கோவில் சுரங்க(?) பாதையில் நான் சென்றது ஓரிரு வருடங்களுக்குள்தான் இருக்கும்
    @ டி.பி.ஆர். ஜோசப் கூடப் பயணித்ததற்கு நன்றி சார்.

    ReplyDelete
  7. குளிரூட்டப்பட்ட ட்ரெயினில் பயணம் செய்யும்போது பயணத்தின் அனுபவங்கள் பலவற்றை இழக்க நேரிடுகிறது. தொடர் வண்டியின் ‘கட, கடா’ சப்தமும் பிரயாணிகளின் பேச்சுச் சப்தமும் கேட்க வழியின்றி ஏதோ கூண்டுக்குள் அடைத்து வைத்தது போன்ற உணர்வு.

    உண்மைதான் .. தண்டனை போல் அமைகிறது பயணநேரங்கள்..!

    ReplyDelete
  8. பத்துவிரல் மோதிரம் எத்தனைப் பிரகாசமது,

    காமாட்சி அம்மனின் விருத்தம் அழகு..

    விருத்தம்பாட வருத்தங்கள் மறையும்.!

    ReplyDelete
  9. // திட்டமிட்டுச் செய்; திட்டமிட்டதைச் செய். இது நான் கற்றபாடம். எனக்கு மிகவும் வேண்டியவர்களுக்கும் கூறும் அறிவுரை.சில நேரங்களில் திட்டமிடும்போது சிலவிஷயங்கள் சரியாக கணிக்கப் படாததால் திட்டமிட்டுச் செய்த வேலைகளும் எதிர்பார்க்கும் விளைவுகளைத் தருவதில்லை //

    நல்ல அறிவுரை. ஆனாலும் நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கிறது.

    காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில், கைலாச நாதர் கோயில் அனுபவங்கள் படிக்க சுவாரஸ்யம். நீங்கள் இந்த பதிவில் இணைத்த எந்த படமும் தெரியவில்லை. கவனிக்கவும்.

    ReplyDelete
  10. ரசித்தேன். படங்கள் வரவில்லை. காலையில் பார்க்கிறேன்.

    ReplyDelete

  11. @ இராஜராஜேஸ்வரி
    @ தி. தமிழ் இளங்கோ
    @ டாக்டர் கந்தசாமி
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி. நான் என் பதிவை கூகிள் க்ரோம், மூலமும், ஃபைர் ஃபாக்ஸ் மூலமும் பார்த்தேன். படங்கள் வருகின்றன. ஆனால் சற்று அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது

    ReplyDelete
  12. அன்புடையீர்.. தங்களுடன் சேர்ந்து காஞ்சியில் சுற்றுலா வந்தது போல் இருக்கின்றது. ஆலய தரிசனம் ஆனந்தமாக இருக்கின்றது. அடுத்த பதிவினை ஆவலுடன் எதிர் பார்க்கின்றேன்.

    ReplyDelete

  13. @ துரை செல்வராஜு
    சரியாக திட்டமிடாததால் அநேக ஆலயங்களைக் காண முடியாமல் போயிற்று.பதிவினை எதிர் நோக்கும் உங்கள் ஆர்வத்துக்கு தலை வணங்குகிறேன். வருகைக்கு நன்றி பலருக்குப் படங்கள் தெரிவதில்லை என்பது வருத்தமாக இருக்கிறது.

    ReplyDelete
  14. நானும் இரண்டு வருடம்
    முன்பு போன அனுபவம் நினைவுக்கு வந்தது.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete

  15. @ காஞ்சிக்குப் போனபோது தறியில் பட்டு நெய்வதை பார்த்திருக்கிறீர்களா.?நான் இப்பதிவில் எழுதியது இப்போது பயணப்பட்ட போது ஏற்பட்ட அனுபவங்கள் மட்டுமே.சங்கர மடத்தில் மடாதிபதிகள் மூவரையும் ஒருங்கே தரிசித்த அனுபவம் சுமார் 40- வருடங்களுக்கு முந்தையது.உங்கள் பின்னூட்டம் என் நினைவுகளையும் கிளறிவிட்டது.

    ReplyDelete
  16. முதல் படம் தவிர எல்லாமே இப்போது காண முடிகிறது, ஐயா. மிக்க நன்றி/

    ReplyDelete
  17. திரு வை கோபாலகிருஷ்ணன் அவ்ர்கள் சொன்னது போல “ முதல் படம் தவிர எல்லாமே இப்போது காண முடிகிறது “ - மாயமே நானறியேன்!

    ReplyDelete
  18. படங்கள் அழகு.... காஞ்சி ஒரிரு முறை சென்றதுண்டு - அலுவலக வேலையாக. கோவில்களை பார்ப்பதற்கென்றே ஒரு முறை செல்ல வேண்டுமென்ற எண்னம் உண்டு..... பார்க்கலா எப்போது அழைப்பு வருகிறதென.....

    ReplyDelete