Monday, December 1, 2014

பெண்கள் ஒரு கண்ணோட்டம்


                                    பெண்கள் ஒரு கண்ணோட்டம்
                                     ------------------------------------------


 மீண்டும் பெண்கள். இது சுட்ட பதிவு அல்ல பெண்களைக் குறித்த ஒரு பார்வை. பார்வையில் காட்சிப் பிழையும் இருக்கலாம் கருத்துப் பிழையும் இருக்கலாம் இருந்தாலும் இது ஒரு கண்ணோட்டமே ( பெண்கள் மன்னிக்கவும்)

பெண்கள் குறித்து பதிவுகள் பல எழுதி இருந்தாலும், முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியாத புதிராகத்தான் தெரிகிறார்கள்.நிறைய எழுதியும் எனக்கே அவர்கள் மேல் ஒரு BIASED எண்ணம் வந்துவிடுகிறதோ என்று சந்தேகம் வருகிறது. இருந்தாலும் ஒன்று மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. மனதில் படுவதை எழுத்தில் வடிக்கிறேன். உண்மை சுட்டால் நான் என்ன செய்வது.?


 அழுகை என்பது ஒரு இழப்பின் வெளிப்பாடு;
கண்ணீர் என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாடு.,
ஆனந்தத்திலும் வரலாம், துக்கத்திலும் வரலாம்.
எந்த நேரத்திலும் எப்படியாகிலும் பிரவாகிக்கும்
பிரயோகப்படுத்தப்படும் கண்ணீரின் பொருள்
தெரியாது அல்லல்படும் ஆண்களே பாவப்பட்டவர்கள்
பெண்களின் கண்ணீருடன் கம்பலையும் சேரும்போது,
ஆண்களுக்குப் போக்கிடம் ஏதுமில்லை.
அறிந்து கொள்ளுங்கள் ,பொதுவாகப் புரிந்து கொள்ளப்
படுவதெல்லாம் உண்மைக்குப் புறம்பானது..
திருமண பந்தத்தில் ஆண் இழப்பது அப்பட்ட சுதந்திரம்..
மீறி நிலை நிறுத்த முயன்றால் முன் வருவது
பெண்களின் கண்ணீர்ப் பிரளயம்.. அதற்காகப்
போக்கிடம் ஏதுமின்றி டாஸ்மாக்கில் தண்ணீரில் மிதக்க வேண்டாம்.
ஆண்களே குனிந்து சென்று விடுங்கள்..வாழ்வில்
தேவை நிம்மதி.- சுதந்திரம்,ஆண்மை எல்லாம்
அப்பட்டப் பொய்.. பெண்ணடிமைத்தனம்,ஆணாதிக்கம்
எல்லாம் கானல் தோற்றமே;கருத்துப் பிழையும்
காட்சிப் பிழையுமே..உண்மையில் ஆணே அடிமை
அறியாமல் பெண்ணே ஆதிக்கம் செலுத்துகிறாள்.

ஆணின் சுதந்திரம் திருமணம் வரையில்-அதன்பின்
அவனது பலவீனம் பெண்ணின் பலமாக மாறும்.
கன்னியவள் கண்ணசைவிலே விண்ணையும் சாடுவான்.
அதுவே இன்பம் இன்பம் என்று மாய்ந்து மருளுவான்.
அது தவறு என்று உணரும்பொது காலம் கடந்து விடுகிறது
உடல் வேட்கை இருபாலருக்கும் பொது.
ஆணுக்கு அது பெரிய பலவீனம்;-ஆனால்
பெண்ணுக்கோ அதுவே பெரும்பலம்.
ஆணின் ஆளுமை எல்லாம் ஆதவன் இருக்கும் வரை;
இரவு துவங்க இருவரும் இணைய இன்பம் பொதுவென்றாலும்
பெண்ணுக்கு அது ஆயுதப் பிரயோகம் செய்யும் நேரம்.
தற்காலப் பெண்களுக்கு கூடுதல் ஆயுதம் அவர்கள்
படிப்பும் பொருளீட்டும் திறனும். அழகென்பது
இன்னுமொரு ஆயுதம். மணவினைச் சிறையில்
எப்போதாவது ஆணுக்குக் கிடைக்கலாம் பரோல்.

அதென்ன  மணவினைச் சிறையில் ‘பரோல்’? மணவினைச் சிறைவாசமென்னும் பதிவு ஒன்று எழுதி இருந்தேன் அது உங்கள்பார்வைக்கு மீண்டும்பதிவாக்குகிறேன் படிக்க “ இங்கே “ சொடுக்கவும்


                                 :      .               .                                  .                                    
  
.
.

. 




















26 comments:


  1. பெண்களது பலமே கண்ணீர்தானே ஐயா எந்த இடத்திலும் ஒரு பெண் அழுது விடுவாள் ஆனால் ? ஆண்களால் அப்படி முடியாதே...
    கணவனிடம் காரியம் சாதிக்க பெண் அழுகிறாள், அதே கணவன் மனைவிடம் சாதிக்க அழுவதில்லையே ? அழுகவும் முடியாது.
    நல்லதொரு கருத்துப்பதிவு
    ஐயா மணவினைச் சிறையில் படித்தேன் அருமை.
    த.ம. 1

    ReplyDelete
  2. To Kiilergee

    ,அழவும்> என்று இருந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  3. GMB
    வலைச்சரத்தில் ஒரு சிக்கல். அதை முடித்து விட்டு உங்கள் பதிவைப் படிக்கிறேன்.

    ReplyDelete
  4. பெண்களின் கண்ணீருக்கு எல்லா ஆடவரும் பயப்படுகிறார்களா? அப்படி இருந்தால் டாஸ்மாக்கை வென்று விடலாமே! :))))))))

    ReplyDelete
  5. தங்களது கருத்துக்களிலிருந்து நான் சில இடங்களில் வேறுபடுகிறேன். இருந்தாலும் மனம் திறந்த தங்களது பகிர்வுக்குப் பாராட்டுகிறேன்.

    ReplyDelete

  6. @ ஸ்ரீ ராம்
    பெண்களின் கண்ணீருக்கு ஆண்கள் பயப் படுகிறார்கள் என்று நான் சொல்லவில்லையே வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஸ்ரீ

    ReplyDelete

  7. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    மாறுபடும் இடங்களை தெரிவித்திருந்தால் எல்லோருக்கும் உபயோகமாய் இர்ந்திருக்குமே. வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  8. @ கில்லர்ஜி
    பெண்களின் கண்ணீர் அவர்களது பலம் மட்டுமல்ல . அதுவே ஆண்களின் பலவீனத்துக்கும் காரணம் வருகைக்கு நன்றி ஜி.

    ReplyDelete

  9. To பழனி கந்தசாமி

    ஐயா மன்னிக்க 'அழவும்' என்பது தவறாக
    'அழுகவும்' என்று வந்து விட்டது.

    ReplyDelete
  10. மண பந்தத்தில் இணையும் போது பலப்பரிட்சை பார்க்கும் முடிவில் இணைவதில்லை. மேலும் இணைகள் இணைவதின் நோக்கம் வெறும் வேட்கை தணிப்பும் இல்லை. இதனை புதுமணத்தம்பதிகள் அவ்வப்போது மறந்துவிடுவர் என்பதாலேயே fire service போல குடும்பத்தில் மூத்தோர் சமயத்தில் தம் கடமையைச் செய்ய இருக்கின்றனர்.ஆனாலும் இவையத்தனையும் அவரவர்களது அனுபவங்களைப் பொறுத்ததுதான்.

    அது சரி.."சுட்ட" பதத்தை அடிக்கடி பதிவில் உபயோகப் படுத்தியிருக்கிரீர்களே அய்யா சுட்டது ரொம்பச் சுட்டுவிட்டதோ..

    நான் கூட சுட்ட பழம் என ஒரு பதிவெழுத இருக்கிறேன்.

    வாழ்த்துக்கள்.

    God bless you

    ReplyDelete
  11. "பெண்கள் ஒரு கண்ணோட்டம்"
    இது ஒரு சிறப்புக் கண்ணோட்டம்
    மங்கையரை குறித்த வேரோட்டம்
    மங்காத புகழுக்குரிய தங்களது எண்ண ஓட்டம்!
    குறிப்பாக...
    ஆணின் ஆளுமை எல்லாம் ஆதவன் இருக்கும் வரை;

    சித்தர்கள் சிந்தாத சிந்தனை வரிகள்!
    ஆஹா! அருமை அய்யா! உண்மையும் அதுவே!
    புதுவை வேலு

    ReplyDelete
  12. முற்றிலும் மாறுபடுகிறேன். வெறும் உடல்வேட்கைக்காக மட்டுமே திருமணம் புரிந்து கொள்வதில்லை. :)))) இதை ஒரு வரியில் சொல்லவும் முடியாது.

    ReplyDelete
  13. தாய் - சகோதரி - துணைவி - மகள் : சக்தி மாறுபடும்... நாம் எடுத்துக் கொள்வதைப் பொறுத்து...

    ReplyDelete

  14. @ வெட்டிப் பேச்சு
    மணப்ந்தத்தில் இணையும் போது பலப்பரீட்சை பார்க்கும் முடிவில் இணைவதில்லை. அப்படி என்று நானும் எங்கும் சொல்லவில்லை.கூறி இருக்கும் கருத்துக்களுக்கு ஒரு முன்னுரை மாதிரியும் கொடுத்திருக்கிறேனே.
    சுட்ட பதத்தை அடிக்கடி பதிவில் உபயோகிக்கிறேன் என்றால் அது அண்மையில் பதிவுலகில் அதிகமாகப் பேசப்பட்டு எழுதப் பட்டு வந்ததால்தான் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete

  15. @ யாதவன் நம்பி
    நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டு கருத்திட்டதற்கு நன்றி

    ReplyDelete

  16. @ கீதா சாம்பசிவம்
    எனக்கு ஒன்று தோன்றுகிறது. என் பதிவில் நான் கூறாத கருத்துக்களுக்கு பின்னூட்டம் இடுகிறீர்களோ என்று. பதிவின் முன்னுரையாக சில வரிகள் எழுதி இருக்கிறேன். படித்துப் பார்க்கவில்லையா. மணவினை சிறைவாசம் என்று அனுபவிக்கும் பலரையும் பார்த்திருக்கிறேன். அதுதான் பதிவில். வேண்டுமானால் எக்செப்ஷனல் கேஸ் என்று எடுத்துக் கொள்ளலாம் வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  17. @ திண்டுக்கல் தனபாலன்
    பதிவு பொதுவாகப் பெண்களைப் பற்றிய ஒரு கண்ணோட்டமே.தாயும் சகோதரியும் மகளும் மனைவியாகும்போது என்று எடுத்துக் கொண்டால் சரியாயிருக்கும் என்று நினைக்கிறேன் பதிவை அணுகிய கண்ணோட்டமே என்னிலிருந்து நீங்கள் மாறுபட்டதைக் காட்டுகிறது. வருகைக்கு நன்றி டிடி.

    ReplyDelete

  18. @ வே. நடனசபாபதி
    இந்தக் கருத்துக்களுக்கு மறுமொழி எழுதத் துவங்கும் போது உங்கள் பின்னூட்டம் ஒன்று கண்டேன் உங்களுக்கு மறு மொழி எழுதத்தொடங்குபோது பார்த்தால் அது ‘காக்கா ஊச்’ என்று போய்விட்டது. ஆனால் நீங்கள் அடுத்தபதிவு ஆண்களும் கணவர்களுமா என்று கேட்டிருந்தது படித்த நினைவு. பார்க்கலாம் ஐயா. பெண்களைப் பற்றிய பதிவுகளின் ஸ்டாக்கே இன்னும் இருக்கிறதே. வருகைக்கு..? நன்றி

    ReplyDelete
  19. உண்மை உண்மை உண்மை! உண்மை சுடும். க்சக்கும். மிகவும் சரிதான் சார். எந்த நாட்டு படை பலம், ஆயுதம் கூட பெண்களின் ஆயுதம், கண்ணீர் ஆயுத்த்திற்கு ஈடாகாது. தோற்றுப் போய்விடும். எங்களில் இருவர் ஒரு ஆண், ஒரு பெண். ஆணும் சரியென்று சொல்லுகின்றார். பெண்ணும் நீங்கள் சொல்லுவதை சரியென்று சொல்கின்றார். பிற ஆண்களைக் கண்டு அதிசயித்து, இப்படியும் ஆண்கள் இருக்க முடியுமா என்று வியந்து, நீங்கள் சொல்லுவது சரியென்று. ஏன் அதிசயம்? இப்பெண்ணின் வாழ்க்கை அப்படி. இந்தப் பெண்ணின் வீட்டில் ஆண் தான் அங்கு. அதற்காகப் பல விட்டுக் கொடுத்தல்கள் பெண்ணின் தரப்பிலிருந்து. அமைதி வேண்டும் என்பதற்காக அந்த விட்டுக் கொடுத்தல். அப்படிப் பெரும்பான்மையாக விட்டுக் கொடுப்பதால் அந்த ஆணும் ஒரு சில விஷயங்களில் பெண்ணின் விருப்பங்களுக்கு ஓகே சொல்லுகின்றார். இது போன்றவை ஒரு சிலவே. தப்பித் தவறி வந்து விடுவது. ஆனால், பொதுவாகப் பெரும்பான்மையானவை நீங்கள் சொல்லியதே! யதார்த்தமும் அதுதான்.

    ReplyDelete
  20. பெண் எந்த ரூபத்தில் அதாவது எந்த உறவில் இருக்கின்றாள் என்பதை பொருத்தும் ஒரு ஆணின் செயல்பாடுகள் அமைகின்றது. ஒரு ஆணின் வாழ்க்கையில் பெண் என்பவள் பல உறவுகளில் இருக்கத்தானே செய்கின்றாள். மனவி என்று வரும் போது உலகியல் வாழ்க்கைக்குத் தேவை என்று சொல்லப்படும் அர்த்தநாரீஸ்வரர் தத்துவமே பொய்யாகிவிடுவது போல்தான் உள்ளது. மனைவி என்ற பெண் உறவு வரும் போது, தாய் என்ற பெண்ணும், சகோதரி என்ற பெண்ணும் கூட பல சமயங்களில் புறம்தள்ளப் படுகின்றனர். மகள் என்ற உறவு பல சமயங்களில், பல வீடுகளில் மனைவி என்ற பெண்ணையும் விஞ்சி விடுகின்றது.

    ReplyDelete

  21. @ துளசிதரன் தில்லையகத்து. வாழ்க்கை வண்டியில் ஆணும் பெண்ணும் அதை இழுக்கும் மாடுகள். வண்டி சீராக ஓட வேண்டுமென்றால் ஒற்றுமையுடன் இழுக்க வேண்டும். இல்லை என்றால் வண்டி சீராக ஓடாது. பின் ஏன் இந்த மாதிரிப் பெண்களை வித்தியாசமாகக் காட்டும் பதிவு? விட்டுக் கொடுத்து வாழ்வதையே வலியுறுத்தி இருக்கிறேன் (என் பாணியில் ) வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்/மேடம்

    ReplyDelete

  22. @ துளசிதரன் தில்லையகத்து.
    ஏழு நிமிட இடைவெளியில் இரண்டு பின்னூட்டங்கள். இதில் இருந்து என் பதிவு உங்களை பல கோணங்களில் நினைக்க வைக்கிறது தெரிகிறது. . நான் சொல்லி இருந்தது போல் எனக்கு எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை. மீண்டும் நன்றி

    ReplyDelete
  23. //வாழ்க்கை வண்டியில் ஆணும் பெண்ணும் அதை இழுக்கும் மாடுகள். வண்டி சீராக ஓட வேண்டுமென்றால் ஒற்றுமையுடன் இழுக்க வேண்டும். இல்லை என்றால் வண்டி சீராக ஓடாது. //

    யார் சொன்ன கருத்தோ?.. :))

    சிறப்பான கருத்து.

    ReplyDelete

  24. @ ஜீவி
    / யார் சொன்ன கருத்தோ?/ கேள்வியின் தொனி சரியில்லையே.தெரிந்து கொண்டுதான் ஆகவேண்டும் என்றால் வெற்றிகரமாக மணவாழ்வில் பொன்விழாக் கொண்டாடிய அடியேனின் அனுபவக் கருத்து.

    ReplyDelete
  25. பெண்கள் குறித்து பதிவுகள் பல எழுதி இருந்தாலும், முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியாத புதிராகத்தான் தெரிகிறார்கள்//

    காலம் காலமாய் இதையே சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
    ஆண் மனதை புரிந்து நடந்து கொள்கிறாள் பெண். ஆண்களும் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

    ReplyDelete

  26. @ கோமதி அரசு
    என்ன செய்வது மேடம். முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறேன்புரிந்து கொண்டது எழுத்தில் வருகிறது/ஆண்மனதைப் பெண் புரிந்து கொண்டு நடக்கிறாள்/ I beg to differ your, honour,வருகைக்கும் கருத்து பதிவுக்கும் நன்றி.

    ReplyDelete