Thursday, October 27, 2016

கௌரவ ஆணவக் கொலைகளின் வேர்கள் எங்கே ?


                      கௌரவ ஆணவக் கொலைகளின் வேர்கள் எங்கே?
                      ---------------------------------------------------------------------


முதலில் ஒரு சில (கொலைகளை) கதைகளைப் பார்ப்போம்

பாம்பு கடித்து இறந்த ஒரு பிராமணப்பெண்ணுக்கு  தன்  மந்திர சக்தியால் உயிர் கொடுத்து உயிர்ப்பிக்கிறார் தாழ்த்தப்பட்ட சாதிக்காரரான சிதம்பரம்   அந்தப் பெண்விரும்பியதால் அவளையே திருமணம் செய்து கொள்கிறார் இது ஊருக்குள் தெரிய வருகிறது அவர் கொல்லப்படுகிறார் ஊர் நிர்வாகிகளுக்கு இதில் பங்குண்டு

குறுநிலத்தலைவனான சின்னான் ஒரு பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் மாபெரும் வீரர். உறவினர்கள் இவருக்கு பருவமடையாத உறவுக்காரப் பெண்ணை மணம் செய்து வைக்கின்றனர்  இவர் மறுத்தபோது இந்தப்பெண் பருவமடையும்  வரை ஒரு பெண்ணை வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளலாம் இழிகுலம் ஆனாலும் பரவாயில்லை. அதுதான் வழக்கம் என்கின்றனர் சின்னான்  ஒடுக்கப் பட்ட பெண் ஒருத்தியுடன்   தொடர்பு வைத்துக் கொள்கிறார் மனைவி பருவமடைந்த செய்தி வருகிறதுஆனால் வைப்பாட்டியே தன் மனைவி என்னும்  சின்னானை ஊர் கூடிகொல்லத்திட்டமிடுகிறது அரசரும் அனுமதி அளிக்கிறார்உறவினர் உதவியுடன்  சின்னான் கொல்லப்படுகிறார்

முத்துப்பட்டன் ஒரு அந்தணர் ஒடுக்கப்பட்ட பகடை குலப் பெண்ணை மணக்கிறார் தன்  சகோதரர்களிடம் கூறிய போது இவரை பாதாளச்  சிறையில் அடைக்கின்றனர். அங்கிருந்து தப்பிய பட்டன் அந்தப்பெண்ணின் தந்தையிடம் விஷயத்தைச் சொல்ல அவர் அந்தண சாதி அடையாளங்களை ஒதுக்கி விட்டு  பெண்ணின் சாதிக்கு மாறச் சொல்கிறார் சாதியைத்துறந்து அப்பெண்ணை மணந்த முத்துபட்டன் கொல்லப்படுகிறார் முற்படுத்தப்பட்ட சாதியிலிருந்து கிடைக்கும்  சலுகைக்காக சாதி மாறுதல் அன்றே நடந்திருக்கிறது

காத்தவராயன் கதை இதற்கு மாறானது. தாழ்த்தப்பட்ட சாதிக்காரரான் காத்தவராயன் அந்தணக் குலப் பெண்ணான ஆர்யமாலாவைக் காதலிக்கிறார் அதற்காகக் கழுவிலேற்றப்படுகிறார்

 இது போன்றகதைகள் விரவிகிடக்கின்றன கௌரவக் கொலைகள் அண்மைக்காலத்திய நிகழ்வுகள் அல்ல  இவற்றின்  வேர் நூறாண்டுகளுக்கும் முன்பானது
தென்  மாவட்டங்களில் நடக்கும் கணியன் கூத்து  வில்லுப்பாட்டு போன்ற நிகழ்வுகளில் இவை கதையாகசொல்லப்படுகிறதாம் டாக்டர் ஏ. கே பெருமாள் இம்மாதிரிக்  கதைகள் பலவற்றைச் சேகரித்திருக்கிறார்
 இவற்றுள் முக்கியமானவை சிதம்பர நாடார் கதை, தோட்டுக்காரி அம்மன்  கதை, பூலங்கொண்டாளம்மன்  கதை , காத்தவராயன் கதை மதுரை வீரன்  கதை, ஐவர் ராசாக்கள் கதை அனந்தாயி  கதை போன்றவை அச்சிலும்  வந்திருக்கிறதாம்இவற்றுக்கெல்லாம் ஒரே ஒற்றுமை திருமண மறுப்பால் நிகழ்த்தப்பட்ட கொலைகள் என்பதே
எல்லாக்கதைகளிலும் ஒரு பொதுத் தன்மை என்னவென்றால் சாதி மாறித் திருமணம்  செய்தவர்கள் எல்லாம் கொல்லப்பட்டு கயிலாயம்  செல்கின்றனர் சிவனிடம் வரம் வாங்குகின்றனர் பிறகு தன்னைக் கொன்றவர்களை பழி வாங்குகின்றனர் கொலை செய்த சாதியினர் தங்களால் கொல்லப்பட்டவரையே வழிபடுகின்றனர் என்பதும் ஒன்றாகும் கொல்பவர்களைத் தண்டிக்க சிவனே வரம் தருவதாக இருக்கிறது கயிலைச் சிவன்  இடத்தில் இப்போது நீதியும்  காவல்துறையும்  இருக்கின்றன கதைதான் இன்னும் முடிவுக்கு வரவில்லை

 இம்மாதிரிக் கொலை செய்வதை தீட்டுச் சடங்குக் கொலை என்றனர்  இதற்கு அனுமதியுமிருந்திருக்கிறது

இதை எல்லாம் படிக்கும்போது என்னால் நான்  முன்பு படித்திருந்த சில செய்திகளோடு முடிச்சுப் போடாமல் இருக்க முடியவில்லை
வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்  சில நாட்கள் முன்பு வர்ணாசிரம தர்மம்  என்னும்  பதிவை தெய்வத்தின் குரலிலிருந்து எடுத்தாண்ட விஷயங்கள் வைத்து எழுதி இருந்தேன்

”ஆண்டளிக்க முடியாத சமுதாயத்தை யார், எப்படிக் கட்டுப் பாட்டில் வைத்து நிர்வகிப்பது? இதற்காகத்தான் ஒவ்வொரு தொழிலைச் செய்யப் பரம்பரையாக ஒரு ஜாதி என்று பிரித்து தனித் தனிக் கட்டுகளாக வைத்தார்கள். இதிலிருக்கிற கட்டுக் கோப்பை யாரும் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு வர்ணத்தினரும் சிறு கட்டுகளாக - ஜாதிகளாக - பிரிந்தார்கள். அவரவருக்கும் "ஜாதி நாட்டாண்மை" என்று ஒன்று இருந்தது. அந்தந்த நாட்டாண்மைக்காரக்கள் தங்கள் தங்கள் சமூகத்தினர் ஒழுங்கு தப்பினால் அவர்களைத் தண்டித்தார்கள். இப்போது சர்க்கார்கூடத்தான் ஜெயிலில் போட்டு சிக்ஷிக்கிறது. ஆனால் இது ஒன்றும் குற்றவாளிகள் நெஞ்சில் உறைப்பதில்லை. அதனால் குற்றங்கள் பாட்டுக்கு வளர்ந்துகொண்டேத்தான் இருக்கின்றன. நாட்டாண்மையில் கொடுத்த தண்டனையோ சுரீலென்று உறைத்ததால் ஜனங்கள் தப்புத் தண்டாவில் இறங்காமல், இந்த நூற்றாண்டின் ஆரம்பம் வரையில் கூடிய மட்டும் யோக்கியர்களாகவே இருந்து வந்தார்கள். அதுவரை போலீசுக்கும், மாஜிஸ்டிரேட் கோர்ட்டுக்கும் வேலை ரொம்பக் குறைச்சலாகவே இருந்தது.
 அதென்ன அப்படிப்பட்ட தண்டனையை நாட்டாண்மைக்காரர்கள் கொடுத்தார்கள் என்றால், ஜாதி ப்ரஷ்டம் என்பதுதான் அது. ஒரு சக்கிலியாக இருக்கட்டும், பரியாரி (நாவிதன்)யாக இருக்கட்டும் - எவராகத்தான் இருக்கட்டும் - இப்போது பிற்பட்ட (Backward) தாழ்த்தப்பட்ட (depressed) என்றெல்லாம் சொல்கிற எந்த ஜாதியினவராக இருந்தாலும் கூடத்தான் அவரவருக்கும் தன் ஜாதியை விட்டுத் தள்ளிவிடுவார்கள் என்றால், அதுவே சுரீலென்று மனதில் தைத்தது. அது தாங்க முடியாத பெரிய தண்டனை, மகத்தான அவமானம் என்று தோன்றியது. இதிலிருந்து என்ன தெரிகிறது? எந்த ஜாதியாரும் எந்த ஜாதியினரையும் மட்டம் தட்டி வைக்கவில்லை. அந்தந்த ஜாதியாரும் தங்கள் விவகாரங்களைப் பொருத்த மட்டில் தாங்களே ராஜா என்கிற பூரண திருப்தியோடு இருந்திருக்கிறார்கள் என்றுதானே தெரிகிறது? உசத்தி தாழ்த்தி அபிப்ராயங்கள் இருந்திருந்தால், தானாகவே பலவிதமான தாழ்வு மனப்பான்மைகள் (inferiority complex) உண்டாகித்தான் இருக்கும்”

ஜாதிப்ப்ரஷ்டத்தின் எக்ஸ்டென்ஷன் கொலைதானோ  அதுதான் சாதிகளைக் கட்டுக் கோப்பு குலையாமல் வைத்திருந்ததோ


 கௌரவக் கொலைகள் அல்லது ஆணவக் கொலைகள் என்பதன்  வேர் எங்கே என்று தேடும் போது மேலே குறிப்பிட்டிருந்ததுதான் நினைவுக்கு வந்தது

(த ஹிந்து பெங்களூர் ஆங்கிலப்பதிப்பில் திரு கே கோலப்பன் அவர்கள் எழுதி இருந்த கட்டுரையை வாசித்துத் தேடியபோது  கிடைத்த செய்திகளை வைத்து எழுதியது) 







 

14 comments:

  1. நல்ல தகவல் திரட்டு. சாதி மனிதனின் ரத்தத்தில் ஊறியிருக்கிறது.

    ReplyDelete
  2. நல்ல தகவல்கள்.

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா
    தாங்கள் சொல்வது போல இந்தக் கௌரவக் கொலைகள் வேர் விட்டு பல மாமாங்கம் ஆகிவிட்டது உண்மையே... நல்லதொரு அலசல் பதிவு.

    ReplyDelete
  4. நுணுக்கமாகப் படித்து அலசியுள்ள விதம் அருமை ஐயா.

    ReplyDelete
  5. //ஜாதிப்ப்ரஷ்டத்தின் எக்ஸ்டென்ஷன் கொலைதானோ அதுதான் சாதிகளைக் கட்டுக் கோப்பு குலையாமல் வைத்திருந்ததோ//

    அப்படி தோன்றவில்லை ஐயா. சாதியைவிட்டு விலக்கி வைக்கும்போது யாருடைய உயிரையும் பறித்ததில்லை. ஆனால் இப்போதோ உடனே கோலி செய்துவிடுகிறார்கள். இப்படி நடத்தப்படும் சாதி கொலைகள் கோணல் புத்தி (Perverts) உள்ளவார்களால் நடத்தப்படுகிறது என நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete
  7. >>> எந்த ஜாதியினவராக இருந்தாலும் அவரவருக்கும் தன் ஜாதியை விட்டுத் தள்ளி வைத்து விடுவார்கள் என்றால், அதுவே சுரீலென்று மனதில் தைத்தது. அது தாங்க முடியாத பெரிய தண்டனை.,<<<

    கிராமப்புறங்களில் ஊரை விட்டுத் தள்ளி வைத்து விடுவோம் என்ற பேச்சும் அதற்கு பயந்து கொண்டு நல்ல நடத்தையும் இருந்தது..

    நாகரிகம் வளர வளர - நகரம் கிராமம் என எல்லா பகுதிகளிலும்
    மக்களின் போக்கு பலவகையிலும் கீழாகப் போனது..

    ReplyDelete

  8. @ ஸ்ரீராம்
    சாதி மனிதனின் ரத்தத்தில் ஊறி இருக்கிறது/ இதையே நான் ஏற்றப்பட்டிருக்கிறது என்கிறேன் வருகைக்கு நன்றி ஸ்ரீ இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் (சற்றே தாமதமான)

    ReplyDelete

  9. @ கீதா சாம்பசிவம்
    நல்ல தகவல்களா ? வருகைக்கு நன்றி மேம் சற்றே தாமதமான தீபாவளி நல் வாழ்த்துகள்.

    ReplyDelete

  10. @ கில்லர்ஜி
    ஆமாம் அப்படித்தான் தெரிகிறது வருகைக்கு நன்றி ஜி. தீபாவளி நல் வாழ்த்துகள்( சற்றே தாமதமான)

    ReplyDelete

  11. @டாக்டர் ஜம்புலிங்கம்
    பாராட்டுக்கு நன்றி ஐயா சற்று தாமதமான தீபாவளி நல் வாழ்த்துகள்

    ReplyDelete

  12. @ வே நடனசபாபதி
    சாதியை விட்டு விலக்கி வைத்தாலும் யாரும் கண்டுகொள்வதில்லையாதலால்தான் அதன் எக்ஸ்டென்ஷனோ என்றேன் வருகைக்கு நன்றி. தீபாவளி நல் வாழ்த்துகள்

    ReplyDelete

  13. @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜ லிங்கம்
    உங்களுக்கும் என் மனமுவந்த தீபாவளி நல் வாழ்த்துகள்

    ReplyDelete

  14. @ துரை செல்வராஜு
    இம்மாதிரி செயல்களுக்கு நம் மதம் சார்ந்த அனுஷ்டானங்களே காரணம் என்று தோன்றியது வருகைக்கு நன்றி ஐயா. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் சார்

    ReplyDelete