Monday, August 29, 2011

கவிதைகற்கிறேன்

கவிதை கற்கிறேன்


உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களுக்கு வார்த்தைகளைக்
கோர்வையாகக் கட்டி கவிதை என்று நான் எண்ணி எழுதிக்
கொண்டிருந்தாலும்,என் அடி மனசில் அது திருப்தி தருவதாய்
இருக்கவில்லை. இதையே எது கவிதை என்று ஒரு பதிவு
எழுதினேன். பலரும் பலவிதக் கருத்துக்களைக் கூறி இருந்தனர்
எது எப்படியாயினும், நான் எப்படி எழுதி இருந்தாலும், எனக்கு
மரபு வழிக் கவிதைகளின் விதிகளாவது தெரிந்திருக்க வேண்டும்
என்ற உந்துதலில், கணினியில் பல இடங்களில் தேடினேன்.
அதற்கு முதல் தூண்டுதலாக “ நாட்டாமை “ அவர்களின் பின்னூட்
டத்தில் ,நான் படிக்க ஒரு முகவரி கொடுத்திருந்தார். அதிலும்
இன்னும் பல வலைகளிலும் கொடுக்கப் பட்டிருந்த விபரங்கள்
என் ஆர்வத்தை இன்னும் தூண்டியது. அப்படிப் படித்துக் கொண்டு
வரும்போது ஓரிடத்தில் நான் எழுதிக் கொண்டிருந்ததைப்போல்
எழுதுவதை சாடியிருந்தார்கள். உரைநடை ஆளுமை, 
எழுத்தாண்மை, கருத்தாண்மை ,வசன நடை என்று கூறலாம். 
கவிதை என்று சொல்லாதீர்கள்.அது யாப்பிலக்கணம் படைத்த 
தமிழனுக்கு இழுக்கு என்று சற்று காட்டமாகவே எழுதியிருந்தனர்

தொடர்ந்து படித்துப் புரிந்து கொள்ள முயற்சி செய்வதைப் பார்த்த
என் மனைவி அன்றே அறிந்திருக்க வேண்டியது அல்லவா என்று
பழித்துக் காட்டினார். என்னதான் வலையில் படித்து தெரிந்து
கொண்டாலும் என் தவறுகளைத் திருத்த ஓர் ஆசிரியர் தேவை
என்று உணர்ந்து கொண்டேன். நான் திரு ரஜினி ப்ரதாப் சிங் அவர்
களை நாடினேன். நான் எழுதியவற்றின் குறைகளை சுட்டி காட்டி
என்னால் எழுத முடியும் என்று ஊக்கம் கொடுத்தார். நான் கீழே
எழுதி இருப்பது இன்னும் திருத்தப் படாதது. குறைகளை பதிவின்
பின்னூட்டத்தில் குறிப்பிடக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நான்
அறிந்து கொண்ட சில பாடங்களையும் விதிகளையும் கூடவே
பதிவிடுகிறேன். ஆர்வம் இருப்பவர் அறிந்து கொள்ளலாம். .  

அசைகள் நேரசை, நிரையசை எனப் பிரிக்கப்பட்டுள்ளது


குறில் தனித்தும் (எ.கா.--” க” )
குறில் தனித்தும் ஒற்றடுத்தும் ( எ.கா.--”கல்” )
நெடில் தனித்தும் ( எ.கா,--”நா” )
நெடிலுடன் ஒற்றடுத்தும் ( எ.கா.--” நாள்” )   வருவது 
நேரசையாகும். 


குறிலிணைந்தும்( எ.கா.--”பல” )
குறிலிணைந்தும் ஒற்றடுத்தும் ( எ.கா.--”களம்”)
குறில் நெடில் இணைந்தும் ( எ.கா.--”பலா” )
குறில்நெடில் இணைந்தும் ஒற்றடுத்தும் ( எ.கா.--”விளாம்” )
வருவது நிரையசை ஆகும்

அசை பிரிக்க சில உதாரணங்கள் 


மன்/னன்----- மெய்யெழுத்து வந்தால் ஒரு கோடு.
மா/ னம்------ஒரு நெடில் வந்தால் ஒரு கோடு. 
மரு/ து-------இரண்டு குறில் வந்தால் ஒரு கோடு.
வரா/ மல்----ஒரு குறிலும் அதன் பின் ஒரு நெடிலும்
மருந்/து ------இரு குறிலும் ஒரு மெய்யும்
பராத்/ பர---குறிலுடன் நெடில் பின் மெய்
பிறர்க்/கு--இரு மெய்களுக்குப் பிறகு

தளை தட்டுதல் 


தேமா, புளிமா என வரும் சீர்களை அடுத்து வரும் 
நிரை கொண்டு துவங்க வேண்டும். மற்ற சமயங்களில்
 நேர்கொண்டு துவங்க வேண்டும் 

சீர்கள்
நேர் நேர்---தேமா 
நிரை நேர்---புளிமா
நேர் நிரை ---கூவிளம்
நிரை நிரை ---கருவிளம் 
நேர் நேர் நேர்---தேமாங்காய்
நிரை நேர் நேர்--புளிமாங்காய்
நிரை நிரை நேர்--கருவிளங்காய்
நேர் நிரை நேர்---கூவிளங்காய்
நிரை நிரை நிரை--கருவிளங்கனி
நேர் நிரை நிரை --கூவிளங்கனி
நேர் நேர் நிரை --தேமாங்கனி
நிரை நேர் நிரை --புளிமாங்கனி  


இது தவிர இன்னும் பல விதிகள் சொல்லப் பட்டுள்ளது.
ஏதோ ஆர்வக் கோளாரால் நானும் இவற்றைப் படித்து
புரிந்து எழுத முயற்சி செய்து ஒரு சில தவறுகள் செய்து
திருத்திக் கொண்டுள்ளேன் என நினைத்து எழுதியதைப்
பதிவிடுகிறேன். ஒன்று நன்றாகப் புரிந்து கொண்டேன்.
மரபுக் கவிதையின் விதிகள் தெரிந்திருந்தாலும்
எண்ணங்களைக் கவிதையாய் வடிக்க கூடவே வார்த்தை
களும் எழுத்தும் நம் வசப்பட வேண்டும். அது படைத்தவர்கள்
தமிழன்னையால் அனுக்கிரகிக்கப் பட்டவர்கள்.

                இது என் கவிதை.
             

எதுதான் கவிதை எனநான் எழுதினேன்
ஏதும் சரியே எனவே இயம்பினர்
ஏற்காத உள்ளம் உணர்ந்தது யாப்பியல் 
கற்றுத் தெளிதல் சிறப்பு. 


மரபியலில் பாட்டெழுதக் கற்க அலகிட்டு
சீர்பிரித்தால் மாமுன் நிரையும் விளமுன்நேர்
சீராய் வருதல் தளைதட்டா திருத்தல் 
வேண்டும் புரிந்து கொள் 


எது/தான்--நிரைநேர்---புளிமா--( மாமுன் நிரை )
கவி/தை--நிரைநேர்---புளிமா--( மாமுன் நிரை )
என/நான்-நிரை நேர்--புளிமா---(மாமுன் நிரை )
எழு/தி/னேன்-நிரை நேர் நேர்--புளிமாங்காய்(காய் முன் நேர் )


ஏ/தும்--நேர் நேர்--தேமா--(மாமுன் நிரை )
சரி/யே--நிரை நேர்--புளிமா--( மாமுன் நிரை )
என/வே--நிரை நேர்--புளிமா (மாமுன் நிரை )
இயம்/பி/னர்--நிரைநேர்நேர்- புளிமாங்காய் (காய் முன் நேர் )


ஏற்/கா/த-நேர்நேர்நேர்--தேமாங்காய்--( காய் முன் நேர் )
உள்/ளம்--நேர்நேர்--தேமா--( மாமுன் நிரை )
உணர்ந்/தது-நிரைநிரை--கருவிளம்--( விளமுன் நேர் )
யாப்/பி/யல் நேர்நேர்நேர்--தேமாங்காய் (காய் முன் நேர் )


கற்/றுத் நேர்நேர்--தேமா--( மாமுன் நிரை )
தெளி/தல்--நிரைநேர்--புளிமா (மாமுன் நிரை )
சிறப்பு (ஈற்றடி கடைசி சீர்.)


மர/பிய/லில்-நிரைநிரைநேர்-கருவிளங்காய்(காய் முன் நேர் )
பாட்/டெழு/தக் நேர்நிரைநேர்-கூவிளங்காய் (காய் முன் நேர் )
கற்/க --நேர்நேர்--தேமா--( மாமுன் நிரை )
அல/கிட்/டு-நிரைநேர்நேர்--புளிமாங்காய்--(காய்முன் நேர் )


சீர்/பிரித்/தால்--நேர்நிரைநேர்--கூவிளங்காய்( காய் முன் நேர் )
மா/முன்--நேர்நேர்--தேமா (மாமுன் நிரை )
நிரை/யும்--நிரைநேர்--புளிமா--(மாமுன் நிரை )
விள/முன்/நேர் --நிரைநேர்நேர்--புளிமாங்காய்(காய்முன்நேர் )


சீ/ராய்--நேர்நேர் -தேமா--( மாமுன் நிரை )
வரு/தல்--நிரைநேர்--புளிமா ( மாமுன் நிரை )
தளை/தட்/ டா--நிரைநேர்நேர்-புளிமாங்காய்--( காய் முன் நேர்)
தி/ருத்/தல்-நேர்நேர்நேர்--தேமாங்காய்--( காய் முன் நேர் )


வேண்/டும்--நேர்நேர் --தேமா -( மாமுன் நிரை )
அவ/சியம்-நிரை நிரை --கருவிளம் ( விளம் முன்நேர் )
கல் ( ஈற்றடி கடைசி சீர் )


    ( வலையுலகுக்கு வந்து ஓராண்டு 28-08-2011 -டன் முடிகிறது, 
        ஒரு தேர்வு எழுதியதுபோல் இருக்கிறது. தேறினேனா இல்லையா
        என்பது ஆசிரியர்கள் கையில் )




   



















        

             



-




















18 comments:

  1. மிகவும் பயனுள்ள பதிவு தான். ஆனால் இதையெல்லாம் இந்த வயதில் புரிந்துகொள்ள எனக்குப்பொறுமை இல்லாமல் உள்ளது என்பதையும் ஒத்துக்கொள்கிறேன். vgk

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. சிறப்பான பதிவு சிலர் கவிதை என்ற பெயரில் (நானும்தான் ) எழுதி இடத்தை நிறப்பி விடுவார்கள் அதில் கருத்தும் இருக்காது எந்த சிறப்பான செய்தியும் இருக்காது ஒரு கவிதை எப்படி இர்ருக்க வேண்டும் என விளங்கி கொள்ள நல்ல செய்திகளை பதிவு செய்துள்ளீர் பாராட்டுகள் நன்றி

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. பாதை தெரிந்து விட்டது
    பயணம் போகத் தயங்காதீர்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  6. மாலதி அக்கா என்னைத்தான் சொல்கிறாரோ...:)
    அருமை...ஆனால் நான் வாத்தியார் இல்லையே....

    ReplyDelete
  7. இந்த வயதிலும் உங்கள் முயற்சி பாராட்டத் தக்கது. கீழே கொடுத்துள்ள லின்க்கில் உள்ள வலைப் பக்கத்தை நீங்கள் ரசிக்கலாம். பயனுள்ளது.


    http://venbaaeluthalaamvaanga.blogspot.com/

    ReplyDelete
  8. தனித் தனியாக களிமண் கொண்டு
    பிள்ளையார் செய்வதற்கும்
    மோல்ட் வைத்து பிள்ளையார் செய்வதற்கும்
    உள்ள வித்தியாசம் கவிதை புனைவதிலும்
    இருக்கிறது.முதலில் சைக்கிள் ஓட்டப் பழகுகையில்
    ஹேண்ட் பார்தான் பிரச்சனையாக இருக்கும்
    நன்றாக ஓட்டத் தெரிந்தபின் ஹேண்ட் பாரை
    விட்டுவிட்டுத்தான் சைக்கிள் ஓட்ட முயல்வோம்
    அதைப் போல தங்கள் ஒரு குறிப்பிட்ட சந்த அமைப்பில்
    கவிதை எழுத முயலலாம்.நான் ஒரு சினிமாவில் பாடல்
    எழுதியுள்ள ஒரு நண்பனுக்கு அடிப்படைஇலக்கணம் குறித்து
    சொல்லித் தருகையில் அவருக்காகவே எழுதியதுதான்
    எல்லோரும் கவிஞர்களே என்கிற பாடல்.அதிகமாக
    எளிதாக இருக்கட்டும் என தேமாச் சீரிலேயே எழுதி இருப்பேன்
    நம்முடைய புலவர் ராமானுஜம் அவர்களின் கவிதைகளை
    தொடர்ந்து படித்தாலே உங்களுக்கு மிக எளிதாக
    கவிதை குறித்த அனைத்தும் புரியும் என்பது எனது கருத்து

    ReplyDelete
  9. கவிதைகள் எழுதுவதில், இத்தனை இலக்கணங்கள் அடிப்படையில் இருப்பது தெரிந்து கொண்டேன். பயனுள்ள தொகுப்பு.

    ReplyDelete
  10. //எதுதான் கவிதை எனநான் எழுதினேன்
    ஏதும் சரியே எனவே இயம்பினர்
    ஏற்காத உள்ளம் உணர்ந்தது யாப்பியல்
    கற்றுத் தெளிதல் சிறப்பு. //

    'முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்' என்பது மூதோர் வாக்கு. எதையும் முயன்று பார்த்து உங்களுக்கு ஏற்றவாறு வசப்படுத்தும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..

    சீரும் தளையும் தட்டாதவாறு எழுதுதல் இயல்பாகிப் போகின், எல்லாப் பழக்கங்களைப் போலவே கவிதை எழுதுதலும் பழக்கமாகிப் போகலாம்.

    படிப்பவர்க்கு களிப்பேற்படுத்தும் வண்ணம், இலக்கண வரையறைக்களுக்குள் சிறைப்பட்டுக் கொள்ளாமல், மொழியின் அழகை இயல்பாக இயம்புவதும் கவிதையாகிப் போவது தான் அந்த மொழியின் சிறப்பு.

    "இதுதான் கவிதையோவென ஐயத்தில்
    எது நான் அதன் சாயலில் எழுதினும்
    பழந்தமிழ் பயலறங்கில் பயின்றது
    பாங்காயதை யாப்பது மொழியின் சிறப்பு". --

    என்று ஓரிரு வினாடிகளில் எழுதுவதும் கவிதையாகத் தான் படுகிறது.

    எதைச் செய்யப் புகுந்தாலும், அந்தத் துறையில் ஆழ்ந்த ஈடுபாடு கொள்வது தான் அந்தச் செயலை வசப்படுத்திக் கொள்ள வழிவகுக்கிறது என்பது தான் எப்படிப் பார்த்தாலும் தெரிகிறது.

    ReplyDelete
  11. என் பதிவினைப் படித்து எனக்கு ஊக்கமூட்டும் வகையில் கருத்துக்கள் வெளியிட்ட அனைவருக்கும் என் நன்றி.
    நானும் என்னைப்போல் பலரும் எழுதும் கவிதைகள் சரியல்ல என்பது என் கருத்தே அல்ல.என்னைப் பொறுத்த வரையில் கவிதை எழுதும் எனக்கு கொஞ்சமாவது யாப்பியல் தெரிந்திருக்க வேண்டும் என்று எண்ணினேன்.அதற்காக முயற்சியும் செய்து கற்றதைப் பகிர்ந்து கொள்ளவே இந்த இடுகை. மேலும் நான் உணர்ந்ததை குறிப்பிட்டிருக்கிறேன் . எண்ணமும் எழுத்தும் இலக்கணத்துக்குள் வர நிறையவே சிரமப் பட்டேன். அதனை எளிதாய் வசப்படுத்துபவர்ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்.

    ReplyDelete
  12. யாப்பறிந்தே பாப்புனைதல் வேண்டும் எனில் கவிதைகள் விளைய வாய்ப்பில்லை , யாப்பறியா கவிதைகளில் உயிர் இருப்பதில்லை.. கவித்துவம் யாப்பு வழி அரங்கேறும் போது மணக்கும் . பாப்புனைய விழைவும், யாப்பறிதலும் கவிதை காலம் வென்று நிலைக்க உதவும். யாப்பரிய துணை செய்யும் தங்கள் முயற்சி பயிலத்தக்கது.

    --

    ReplyDelete
  13. ஐயா...

    வணக்கம். உங்களுக்குத் தலைவணங்குகிறேன்.

    மாணவர்களே அலட்சியம் காட்டும் இக்காலச் சூழலில் வெகு எளிமையாக மரபைப் புரிந்துகொண்டு அதனை விளக்கமாகவும் ஒரு கவிதைவழி நல்ல ஆசிரியரைப்போலக் கூறியிருக்கிறீர்கள். மரபு தெரியாவிட்டர்ல் அது தேசக் குற்றமல்ல. மரபுக் கவிதை என்பது ஒரு காலக்கட்டத்தில் இருந்த இலக்கணம். அதனைத் தாண்டித்தான் வேறு புதிய இலக்கிய வடிவையும் தமிழுக்குத் தரவேண்டும். அது உயிர் போன்றது என்பதைப் பாரதி வசன கவிதை மூலம் தொடங்கி வைத்தார். இன்று புதுக்கவிதை மலர்ந்து மணம் பரப்பிக்கொண்டிருக்கிறது. எனவே மரபைத் தெரிந்துகொள்ளுங்கள். ஆனாலும் மனதில் எண்ணங்களை மனம்போல விரிக்க புதுக்கவிதை வடிவங்களையே ஏற்றுக்கொள்ளுங்கள். அது தவறில்லை. எளிமையும் கருத்துப் புலப்பாடும்தான் கவிதைக்கு முக்கியம்.

    எந்த வயதும் தடையில்லை எதனையும் கற்க என்பதைத் தாங்கள் உறுதி செய்திருக்கிறீர்கள். இன்றைக்குத் தமிழ் படிக்கும் மாணவர்கள் உங்களைப் படிக்கவேண்டும்.

    மனமார்ந்த நெஞ்சம்நிறைந்த வாழ்த்துக்கள். அசத்துங்கள் ஐயா.

    ReplyDelete
  14. ஐயா! தங்கள் பதிவின் சிறப்பறிந்து
    தங்கள் பதிவைக் கீழ்வரும் இணைப்பில்
    அறிமுகம் செய்து வைத்துள்ளேன்!

    அசை, சீர், தளைக்கான சுருக்குவழி அறிவோம்!
    http://paapunaya.blogspot.com/2014/11/blog-post_5.html

    ReplyDelete

  15. @ yarlpavanan kasirajalingam
    ஐயா ஏதோ ஒரு ஆர்வத்தில் கற்க முனைந்த நேரத்தில் பதிவிட்டது. அது இப்போது யாருக்காவது உதவுமென்றால் மகிழ்ச்சியே. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  16. அய்யா வணக்கம்.
    மதிப்பிற்குரிய யாழ்ப்பாவாணன் தளத்தில் சுட்டப்பட்டிருந்த இணைப்பு மூலமாகத் தங்கள் தளமறிந்து வருகிறேன்.தங்களைப் போன்றவர் எழுதியிருந்ததைக் கண்டிருந்தால் என் முயற்சியை விட்டிருப்பேன்.
    தற்பொழுதுதான் காண்கிறேன்.
    வியக்கிறேன்.
    என் ஆசிரியர் மனக்கண்முன் வந்து போனார்.
    யாப்புச்சூக்குமம் என்ற பெயரில் எனக்குத் தெரிந்ததை இருபதிவுகளாக விளக்கி உள்ளேன்.
    நேரமிருப்பின் தங்களின் வருகையையும் மேலான கருத்தையும் வேண்டி நிற்கிறேன்.
    நன்றி
    http://oomaikkanavugal.blogspot.com/2014/11/blog-post.html
    http://oomaikkanavugal.blogspot.com/2014/11/ii.html

    ReplyDelete

  17. @ ஊமைக் கனவுகள். என் தளத்துக்குமுதல் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் தள்ம் சென்று விரிவான பின்னூட்டம் எழுதி இருக்கிறேன். நன்றி.

    ReplyDelete

  18. கவிதை கற்கிறேன் என்று கவிதை கற்றுக்கொடுக்கிறீர்கள் ஐயா.

    ReplyDelete