Tuesday, August 13, 2013

வேதாளமும் நானும்


                                                             


வேதாள்மும் நானும்
-------------------


“ நீ விக்கிரமாதித்யன் கதைகள் படித்திருக்கிறாயா.? அதில் வரும் வேதாளம் தெரியுமா உனக்கு.?உன் கண்ணால் காணமுடியாது, ஆனால் உன்னால் உணர முடிகிறது .இல்லையா.

அதிகாலையில் எழுந்திருக்கும்போதே என் முதுகில் ஏதோ கனமாக உணர்ந்தேன், இது ஏதடா புதிய வலி என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதுதான், காதருகே கேட்டது குரல்
.
ஆஹா..இது என்ன புதிய அனுபவம்.?பதில் கூற வேண்டுமென்றாலும் யாரிடம் கூறுவது. நான் நினைப்பதைப் புரிந்து கொண்டு மீண்டும் அந்தக் குரல்

அதே வேதாளம்தான் . நான் உனக்கு ஒரு கதை சொல்கிறேன். முடிவில் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்

“ பதில் தெரியாமல் , சொல்லாவிட்டால்...?

“ அதை அப்போது பார்ப்போம். ஆனால் பதில் தெரிந்து சொல்லாமல் மட்டும் இருக்கக் கூடாது. பின் விளைவுகள் விபரீதமாயிருக்கும்

“ விளைவுகள் உன் கதையையும் கேள்வியையும் பொறுத்தது.என்றேன்

வேதாளம் கதை சொல்ல ஆரம்பித்தது.
“ஒரு ஊரில் ஒருவன் இருந்தான்

“ ஊரில் ஒருவன் மட்டும்தானா இருந்தான்.?
குறுக்கே பேசக் கூடாது

“ அது எப்படி.? நீதான் கடைசியில் கேள்வி கேட்பாயே. சரியாக விளங்கிக்கொள்ள வேண்டாமா.?என்றேன்
.
“அதி புத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைத்துக் கொள்ளாமல் சொல்வதைக் கேள் “ என்று சொல்லித் தொடர்ந்தது வேதாள்ம்.

“ஒரு ஊரில் ஒருவன் இருந்தானாம்.... அவனுக்குக் காது கொஞ்சம் மந்தம். சிறுவயதிலேயே அவனது குறை அறிந்து அவனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அந்த மருத்துவர் காது மூக்கு, தொண்டை நிபுணரிடம் அழைத்துச் செல்லுங்கள் என்றார். அவனது பெற்றோரும் அவனை நிபுணரிடம் அழைத்துச் சென்றனர்.அவர் ஒரு கருவியை சிறிது தட்டி அவன் காதருகே வைத்து சப்தம் கேட்கிறதா என்று கேட்டார். இவன் சற்று நேரம் யோசித்துவிட்டு  சப்தம் அடுத்த காதில் கேட்கிறது என்றான் டாக்டர் அதே கருவியைத் தட்டி மறு காதருகே வைத்து ‘சப்தம் கேட்கிறதாஎன்றார். இவனோ மறு காதில் கேட்கிறதுஎன்றான். டாக்டருக்குக் குழப்பமாகிவிட்டது. அவர் அதே பரிசோதனையை மீண்டும் மீண்டும் செய்ய , இவனும் கருவி இருக்கும் காதுக்கு மறு பக்கம் உள்ள காதில் கேட்கிறது என்றே சொல்லிக் கொண்டு வந்தான். டாக்டருக்கு கோபம் வந்து விட்டது. இவனது பெற்றோர்களிடம் ‘இவனை முதலில் ஒரு மனோ வைத்தியரிடம் அழைத்துச் செல்லுங்கள்என்றார்.இவனிடம் இந்தக் காதில் ஒலிக்கும் ஒலி எப்படி மறுகாதில் கேட்கிறது என்றாய் என்று கேட்டபோது அது அப்படித்தானே. இந்தக் காதில் வைத்தால் அதே காதில் எப்படி ஒலிக்கும் ‘என்று தர்க்கம்செய்தானாம்

இப்படியாக இவன் காதின் குறைபாடு குறையாமலேயே வளர்ந்து வந்தான். பள்ளியில் படிக்கப் போனால் அங்கு ஆசிரியர் சொல்வது ஏதும் கேட்காது. கண் இமைக்காமல் அவரது உதடுகளையே பார்த்துக் கொண்டிருப்பான். அவர் இன்னதுதான் சொல்லி இருப்பார் என்று இவனாகவே கற்பனை செய்து கொள்வான். தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்களையே பெற்று வந்து பெற்றோரிடம் அடி வாங்குவான்..புத்தி வளரவில்லை என்றாலும் உடல் வளர்ந்தது.பதினைந்து பதினாறு வயதிலேயே நன்றாக வளர்ந்திருந்தான். ஒரு முறை கட்டிடம் கட்டும் இடத்தில் சித்தாள்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான் என்ற புகார் வந்தது. இவனை அவர்களிடம் அடி வாங்காமல் மீட்டு வருவதற்குள் போடும் போதும் என்றாகி விட்டது

மாற்றுத் திறனாளி ( handicapped)  என்ற தகுதியில் ITI  பயிற்சி பெற்றான். சில நாட்களில் எப்படியோ அரசின் கழிவு நீர் வாரியத்தில் ஒரு வேலையும் கிடைத்தது. பிறகென்ன. ? திருமணமும் நடந்தது. பெண்ணும் ஏதோ கார்மெண்ட் தொழிற்சாலையில் வேலைக்குச் சென்றாள். நல்ல வேளை. இவனுக்குக் குழந்தைகள் ஏதும் பிறக்கவில்லை. இவனுக்கு யாரைப் பார்த்தாலும் அவர்கள் தன்னைப் பற்றியே பேசுகிறார்கள் என்னும் நினைப்பு வரும். இது இப்படியே தொடர்ந்து இவனுக்கு வயது 50-ம் நிறைந்து விட்டது.
இவனுடைய எண்ணங்கள் யாருடனும் பகிர முடியாது. ஒரு வித தனி உலகில் வாழ ஆரம்பித்தான். வேலைக்குச் செல்லவும் பிடிக்கவில்லை. இருந்தாலும் பணத்தேவையால் போகாமலும் இருக்க முடியவில்லை. திடீரென்று ஒரு ஞானோதயம் இவனுக்கா இல்லை இவன் மனைவிக்கா தெரியவில்லை. வேலைக்கே போகாமல் பாதி சம்பளம் கிடைக்கும் வழி கண்டு பிடித்தார்கள்.. இவன் வேலைக்குப் போவதுபோல் போய் கையெழுத்துப் போட்டு வருவான். இவனது வேலைகளை இன்னொருவன் செய்து முடிப்பான். அவனுக்கு இவன் பாதி சம்பளம் கொடுப்பான். இன்னும் வயதான பிறகு பென்ஷன் முழுவதும் இவனுக்குத்தானே.

இப்போது கதையின் முக்கிய பகுதிக்கு வருகிறேன். இவன் மனசில் என்ன என்னவோ எண்ணங்கள் ஓடும். அழகான பெண்களைப் பார்த்தால் மனம் தறிகெட்டு ஓடும் ஆனல் எதையும் செய்ய பயம் இடம் கொடுக்காது. வக்கிர எண்ணங்களுக்கு வடிகால் தேட ஒரு வழி கண்டு பிடித்தான். நெருங்கிய
உறவில் இருந்த ஒரு பெண்ணின் தொலைபேசி எண் கிடைத்தது. பப்ளிக் டெலிபோன் பூத்திலிருந்து அவள் எண்ணுக்கு ஃபோன் செய்வான். எடுத்ததும் கீழ்த்தரமான கொச்சை ஆசைகளை வெளிப்படுத்துவான், பாவம் அந்தப் பெண்பரிதவித்துப் போகும்மெல்லவும் முடியாமல் சொல்லவும் கூச்சப் பட்டு உழன்றது அந்தப் பெண். பொது தொலை பேசி இடங்களில் இருந்தௌ கால் வந்ததால் ஆளைப் பிடிப்பது கஷ்டமாயிருந்தது. ஒருமுறை இந்த மாதிரி தொடர்பு வந்தபோது அவள் போனை அருகில் இருந்த அவள் உறவினரிடம் கொடுத்தாள். நாராசமான கொச்சை வார்த்தைகளின் ஊடே அவனது குரல் மூலம் இன்னாரோ என்ற சந்தேகம் வந்தது.. காவல் துறைக்குச் சொல்லி அசிங்கப்படுவதை விட இதை வேறு மாதிரி கையாளலாம் என்று எண்ணினர். சந்தேகம் ஏற்பட்ட பிறகு ஓரிரு முறை டெலிபோன் வந்ததும் மாறி மாறி உறவினர்கள் கேட்டு குரலை ஊர்ஜிதம் செய்து கொண்டனர்.

இவன் வீட்டுக்கு ஒரு நண்பனை மஃப்டி போலிஸ் என்று சொல்லச் சொல்லி அனுப்பினர். போனவன் ஆஜானுபாகு. போலீசை விட போலீஸ் மாதிரி நடித்து  அவன் வீட்டுக்குச் சென்று “ இந்த மாதிரி செய்வது நீதான் என்று காவல் துறைக்குப் புகார் வந்திருக்கிறது. உன்னை கட்டி இழுத்துப் போய் முட்டிக்கு முட்டி தட்டவா?என்று பயமுறுத்தவே அவன் மிரண்டு போய்  தவறை ஒப்புக் கொண்டான். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் உத்தரவாதம் அளித்ததன் பேரில் அவனை தற்சமயம் மன்னிப்பதாகக் கூறி இனி இது தொடர்ந்தால் காவல்தான் தண்டனைதான் என்று மிரட்டி விட்டு வந்தார்.

சரி. கதையை நன்றாகக் கேட்டாயா.? இதோ என் கேள்வி.இவன் இம்மாதிரி நடந்து கொள்ளக் காரணங்கள் என்ன.?பதில் தெரிந்தும் சொல்லாமல் இருந்தால் ......

விளைவு என்ன. ? என்று கேட்டு . “ எதையும் யூகிக்க விரும்பவில்லை. என் பதிவில் எழுதுகிறேன். வாசிப்பவர்கள் என்னைவிட புத்திசாலிகள். அவர்களிடமிருந்து சரியான பதில்கள் வரும். அதுவரைப் பொறுத்துக்கொள் “ என்றேன்.

வேதாளம் எனக்கு இரண்டு நாள் சிறிது அவகாசம் கொடுத்திருக்கிறது. உங்கள் பதில் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.பதில் சொல்லாவிட்டால்...........? வேதாளம் என் முதுகில் இருந்து இறங்க பதில் சொல்லுங்களேன் ......! எனக்குக் கஷ்டம் என்றால் நீங்கள் தாங்கிக் கொள்வீர்களா.?.
---------------------------------------------------------     
 


15 comments:

  1. உங்களுக்கு உதவத்தான் நினைக்கிறேன். ஆனால் பதில் சரியாக இருக்குமா என்று தெரியவில்லையே...

    வெளியில் நல்லவர்களாய் வேடமிடும் பல மனிதர்களுக்குள்ளும் சில வக்கிர எண்ணங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. சில வெளியில் தெரியவரும்போது அதிர்ச்சி நம்மை ஆட்கொள்கிறது.

    இங்கே குறிப்பிடப்பட்டவர் ஒரு மாற்றுத்திறனாளி. அவருடைய குறை என்னவென்று அவருக்கு ஆரம்பத்திலிருந்தே சரிவரத் தெரியவில்லை. அது சரியான முறையில் உணர்த்தப்படவும் இல்லை. தன் எண்ணங்களை வெளியிட அவருக்கு முறையான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. மேலும் தவறான புரிதல்களுக்கும் வழிவகுத்திருக்கிறது. அதனால் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை அவரிடம் அதிகமாய் உண்டாகியிருக்கவேண்டும். அதன் வெளிப்பாடே பாதி சம்பளத்துக்கு இன்னொருவரை வேலைக்கு அமர்த்துவது முதல் உறவுப்பெண்ணிடம் தொலைபேசியில் தகாத வார்த்தைகளைப் பேசுவது வரை வளர்ந்திருக்கிறது.

    காது கேளாதநிலையில் தொலைபேசியில் அடுத்தப்பக்கத்தில் இருப்பவர் என்ன பேசினாலும் இவருக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் தன் பேச்சிலேயே அவர் சுகம் காண்கிறார். இதுவும் ஒருவகையான மனநோய் என்றே நினைக்கிறேன். ஆரம்பத்திலேயே அவருக்கு சரியான செவித்திறன் பரிசோதனை செய்து ஏதுவான கருவிகள் பொருத்தி ஒரு சராசரி வாழ்க்கையை வாழ வழிவகுத்திருந்தால் இன்று இந்த அளவுக்கு போயிருந்திருக்கமாட்டார் என்று நினைக்கிறேன்.

    மற்றொன்று, இவர் மட்டுமில்லை, நான் முன்பே சொன்னது போல் எந்தக்குறையும் இல்லாத சிலர் கூட இதுபோன்ற அநாகரிகச் செயல்களில் இன்பம் காண்கின்றனரே... அவர்களை என்னவென்று சொல்வது?

    ReplyDelete
  2. தாழ்வு மனப்பான்மையும் வக்ரகுணமும்
    சராசரி வாழ்வுக்குத்தடைகள்..

    தன் உடற் குறைபாட்டினால் மாட்டிக்கொண்டார்..1

    ReplyDelete
  3. //எனக்குக் கஷ்டம் என்றால் நீங்கள் தாங்கிக் கொள்வீர்களா.?.//

    உங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் நாங்கள் துடிதுடித்துப் போய்விடுவோம்.

    ReplyDelete
  4. ஐயா, வேதாளம் உங்களுக்கு இரண்டு நாள் அவகாசம் கொடுத்திருக்கின்றது. நீங்கள் பதிலை எங்களுக்கு எப்போது சொல்வீர்கள் என்று காத்திருக்கின்றோம்

    ReplyDelete
  5. வேதாளத்திடம் கேட்ட சொல்லுங்கள் எனக்கும் தெரியவில்லை.
    வக்கிரகுணம் தான் காரணமோ!

    ReplyDelete
  6. எந்தக் காது கேட்காது என்று தெரிய வில்லை.தன்னைத் தானே தாழ்த்திக் கொள்வதில் மகிழ்ச்சி அடைந்து அதுவே வாடிக்கையாகி இருக்கக் கூடும். இது இரத்தத்திலேயே ஊறி விட்ட வக்ரம். அவருடைய மனம் இடம் கொடுக்காதவரை யாரும் சிகிச்சை அளிக்க முடியாது!..

    ReplyDelete
  7. இதே காதில் எப்படி ஒலிக்கும் மறு காதில்தானே ஒலிக்கும்?

    இந்த வாக்கியத்தில்தான் பதில் இருக்கிறது என நினைக்கிறேன். சரியா?

    ReplyDelete
  8. பயங்கரமான ஆளா இருக்காரே....

    ReplyDelete
  9. யோசித்து யோசித்து
    மண்டை காய்ந்து போனதுதான் மிச்சம்
    உங்களுக்கு பதில் தெரிந்திருக்கிறது என
    எனக்குத் தெரிந்ததால் ஆவலுடன் அடுத்த
    பதிவுக்குக் காத்திருக்கிறேன்

    ReplyDelete
  10. போலிப் போலீஸ் சொன்னது மட்டும் எப்படி காதில் விழுந்தது என்று கேட்கத் தோன்றினாலும் இந்த ஆள் ஏன் அப்படி நடந்து கொண்டான் என்பதற்கு சரியான காரணம் எதுவும் தோன்றவில்லையே..

    ReplyDelete
  11. இது போன்ற தரம் தாழ்ந்து நடந்து கொள்வதற்கு காரணம் மனம் விகாரம் அடைந்து இருப்பது தான். மற்றவ்ர்கள் போல் தன்னால் இருக்க முடியவில்லை என்ற இயலாமை கோபமாய் மாறி அது மனநோயாக வெடித்து இப்படி பட்ட கீழான செயலை செய்ய சொல்கிறது.

    ReplyDelete
  12. பொதுவாக காதுகேட்காதவர்களால் பேசமுடியாது மற்றவர்கள் பேசுவதும் இவர்காதில் கேட்கப்போவதில்லை.

    ReplyDelete

  13. @ கீதமஞ்சரி
    @ இராஜராஜேஸ்வரி
    @ டாக்டர் கந்தசாமி.
    @ கரந்தை ஜெயக்குமார்
    @ ராஜலக்ஷ்மி பரம்சிவம்
    @ துரை செல்வராஜ்
    @ டிபிஆர். ஜோசப்
    @ வெங்கட் நாகராஜ்
    @ ரமணி
    @ அப்பாதுரை
    @ கோமதி அரசு
    @ மாதேவி
    சரியான பதில் ஏதும் இருக்குமா தெரியவில்லை. இந்த மாதிரியான குண வெளிப்பாடுகளுக்கு அவனது தாழ்வு மனப் பான்மை காரணமாயிருக்கலாம். அதற்கு அவனது காது கேளாமை காரணமாயிருக்கலாம். இந்த மாதிரி பல இருக்கலாம்கள் இருக்கலாம். அதுதான் சரியென்று சொல்லி வேதாளம் பயமுறுத்திய விளைவுகளை சந்திக்க அஞ்சியே பதிவில் பதில் கேட்டு இருந்தேன். உதவ முயன்றதற்கு நன்றி.
    அப்பாதுரை-- அவனுக்கு காது மந்தம் தான் டமாரச் செவிடு அல்ல.
    மாதேவி-- காது குறைபாடுள்ளவர்கள் பேச்சிலும் flow இருக்காது.
    ரமணி. -இதேமாதிரி அறுதியிட்டுப் பதில் சொல்ல முடியாத கேள்விகளையே வேதாளம் கேட்கிறது. நிச்சயம் இதுதான் பதில் என்று தெரிந்து சொல்லும் வரை எப்பொழுது அது என் முதுகின் மீது ஏறுவதை நிறுத்தும் என்று சொல்ல முடியவில்லை. அதனால் தெரியாததை தெரியாது என்றுதான் கூறப்போகிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  14. புதுமையான கதை. ஆனாலும் நடக்கிற ஒன்று. இதற்கு அவன் தாழ்வு மனப்பான்மையும் அதை ஆரம்பத்திலேயே கண்டு பிடித்துச் சரி செய்யாத பெற்றோர்களுமே காரணம்.

    ReplyDelete
  15. என்னங்க இது! கடைசியில இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம்னு நான் எழுதுற கதையாட்டம் முடிச்சிட்டீங்க? வேதாளம் சும்மா விடுமா?

    ReplyDelete